search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • மன அழுத்தத்தைப் போக்கும் அமுக்கரா கிழங்கு தைராய்டு சுரப்பியின் செயல்திறனை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
    • ‘குங்கிலியம்’ எனும் மற்றொரு மூலிகைப்பிசின் தைராய்டு கோளாறுக்கு நல்ல பலன் தருவதாக உள்ளது.

    முதுமையில் ஏற்படும் உடல் உறுப்புக்களின் தேய்மானம் எந்த உறுப்புக்களையும் விட்டு வைப்பதில்லை. அவ்வாறு இருக்கையில் தைராய்டு சுரப்பியும் முதுமையில் எடை குறைந்து, திசு வடுவாக மாறுகிறது. இதனால் அதில் சுரக்கும் ஹார்மோன் அளவும் படிப்படியாக குறைகிறது. மேலும் முதுமையில் உண்டாகும் மன அழுத்தத்தினாலும், சில வகை மருந்துகளாலும் தைராய்டு சுரப்பி தொந்தரவுகள் உண்டாவதாக உள்ளன.

    தைராய்டு எனும் நமது உடலின் கழுத்துப் பகுதியில் உள்ள ஒற்றைச் சுரப்பி ஒட்டுமொத்த உடலின் செயல்பாட்டையும் கட்டுக்குள் வைத்துள்ளது. இதுவே இன்ன பிற சுரப்பிகளில் உற்பத்தியாகும் ஹார்மோன் சுரப்பிகளுக்கும் நெருங்கிய தொடர்புடையது.

    பொதுவாகவே 60 வயதைக் கடக்கும் 20 சதவீதம் பெண்களுக்கும், 8 சதவீதம் ஆண்களுக்கும் 'சப்கிளினிக்கல் ஹைப்போ தைராய்டு' (குறை வீதனம்) எனும் தைராய்டு சுரப்பு குறைவு ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சிகிச்சை அளிக்க தவறினால் ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதுடன், ரத்த குழாய் அடைப்பு, இதயத்தின் செயல்பாடு குறைதல், ரத்த அழுத்தம் அதிகரித்தல் ஆகிய பல்வேறு தொந்தரவுகள் உண்டாகும் அபாயம் உள்ளது.

    சித்த மருத்துவ நோய்க்காரணிகளான வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் 'கபவாதம்' கூட்டணியே ஹைப்போதைராய்டு பிரச்சனைக்கு முதற்காரணமாக உள்ளது. அதாவது தைராய்டு சுரப்பியை கபமும், வாதமும் தாக்குவதால் அதன் செயல்தன்மை குறைந்து உடல் பருமன், தலை முடி உதிரல், உடல் அசதி, சோம்பல், மலச்சிக்கல், குளிர்ச்சி தாங்க முடியாமை, இன்னும் பல்வேறு குறிகுணங்களை உண்டாக்கி முதுமையில் உபாதைகளைத் தரும்.

    அதே போல் உடலில் அதிகரிக்கும் பித்தத்தால் பித்தமும், வாதமும் கூடி தைராய்டு சுரப்பியை பாதிக்குமானால் தைராய்டு செயல்திறன் அதிகரித்து ஹைப்பர்தைராய்டு (அதிவீதன நோய்) எனும் நோய்நிலைக்கு வித்திடும். இதனால் உடல் எடை குறைதல், உடல் அதிக சூடாக இருத்தல், நடுக்கம், மார்பு படபடப்பு, நரம்பு தளர்ச்சி, வெப்பம் தாங்க முடியாமை ஆகிய குறிகுணங்களை உண்டாக்கி முதுமையை மேலும் வருத்தும். ஆகவே முதுமையில் தைராய்டு சுரப்பி எந்த நிலையில் உள்ளது என்பதை மருத்துவர் ஆலோசனைப்படி அவ்வப்போது பரிசோதனை செய்து தெரிந்துகொள்வது நல்லது.

    முதுமையில் 'சப் கிளினிக்கல் ஹைப்போ தைராய்டு' என்று கூறப்படும் ஆரம்ப கட்ட குறை வீதன நோய்நிலையில் கபவாதம் போக்கும் சித்த மருத்துவ மூலிகைகளான அமுக்கரா கிழங்கு, குங்கிலியம், மந்தாரைப் பட்டை, மாவிலங்கப்பட்டை, இஞ்சி, தசமூலம், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு, ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலை சூரணம் ஆகிய மூலிகை மருந்துகள் நற்பலன் தருவதாக உள்ளன. 

    அமுக்கரா கிழங்கு

    அமுக்கரா கிழங்கு

    மன அழுத்தத்தைப் போக்கும் அமுக்கரா கிழங்கு தைராய்டு சுரப்பியின் செயல்திறனை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தினசரி அமுக்கரா சூரணம் என்ற சித்த மருந்தை ஒரு தேக்கரண்டி அளவு தேனில் கலந்து எடுத்துக்கொள்ள கபவாதம் போக்கி தைராய்டு சுரப்பி கோளாறு மட்டுமின்றி, பல்வேறு ஹார்மோன் சுரப்பிகளை சீராக்கும் தன்மை உடையது.

    அமுக்கரா கிழங்கில் உள்ள 'வித்தா பெரின்-எ' என்ற வேதிப்பொருள் தைராய்டு சுரப்பியை தூண்டி இயற்கையாக செயல்பட வைக்கும் தன்மையும் உடையது. அதே போல் மன அழுத்தம் போக்கும் பிரமி கீரை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்க உதவும். இதனை நெய் விட்டு வதக்கி ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள நோயின் ஆரம்ப கட்ட நிலையில் நற்பலன் தரும்.

    அடுத்து அதிக பலனைத் தருவது மந்தாரை பட்டை. "மன்னவனும் தன்வழிப் படுவான்" என்று இதனைப் பற்றி அகத்தியர் குணவாகடம் சிறப்பாக கூறுகின்றது. அதாவது தைராய்டு சுரப்பியில் பாதிப்பை உண்டாக்கும் கபவாதக் குற்றத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.

    மந்தாரை மரத்தின் பட்டையானது தைராய்டு சுரப்பியின் வீக்கத்தை குறைப்பதோடு, தைராய்டு சுரப்பியைத் தூண்டி இயற்கையாக செயல்பட வைக்கும் தன்மை உடையது என்று எலிகளில் ஆய்வு செய்யப்பட்டு உறுதியும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் உள்ள மூன்று முக்கிய பிளவனாய்டு வேதிப்பொருட்கள் மருத்துவ தன்மைக்கு காரணமாகின்றன.

    'குங்கிலியம்' எனும் மற்றொரு மூலிகைப்பிசின் தைராய்டு கோளாறுக்கு நல்ல பலன் தருவதாக உள்ளது. இது தைராய்டு சுரப்பியை இயற்கையாக தூண்டி செயல்பட வைக்கும் என்பதோடு குறை தைராய்டால் அதிகரித்த உடல் பருமனைக் குறைக்கவும் உதவும். இதில் உள்ள 'குகுலுஸ்டீரோன்' எனும் வேதிப்பொருள் அதன் மருத்துவ தன்மைக்கு முக்கிய காரணம் என்கிறது நவீன அறிவியல்.

    அமுக்கரா கிழங்கினைப் போல் முதுமையின் சிறந்த தோழனாக திரிபலா சூரண மருந்தைக் குறிப்பிடலாம். முதுமையில் ஏற்படும் அநேக நோய்நிலைகளில் இது நற்பலன் தருவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை இரவு வேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ளலாம். அதே போல் திரிகடுகு சூரணத்தை தேனில் கலந்து எடுத்துக்கொள்ள நோய்க்கு காரணமாகும் மூன்று குற்றங்களும் சமநிலைப்பட்டு நோயின் ஆதாரத்தை அடியோடு நீக்கி நோயில்லா வாழ்விற்கு அடித்தளமிடும்.

    பத்து வேர்களை உள்ளடக்கிய தசமூலம் சேர்ந்த மருந்தும் கபவாதத்தை சீராக்கி நோயினை நீக்க உதவும். மூலிகை மருந்துகள் மட்டுமின்றி சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள அய செந்தூரம், அன்ன பவள செந்தூரம், சிலாசத்து பற்பம், குங்கிலிய பற்பம், பாஷாண மருந்துகள் பல தைராய்டு சுரப்பியை இயற்கையாக தூண்டி செயல்பட வைப்பதாக உள்ளன.

    பித்தம் அதிகரித்து வாதம் மற்றும் பித்தம் ஒன்று கூடுவதால் உண்டாகும் ஹைப்பர்தைராய்டு நோய்நிலையில் பித்தம் தணிக்கும். சித்த மருத்துவ மூலிகைகளான நெல்லிக்காய், சீந்தில், திராட்சை, மஞ்சிட்டி, மஞ்சள் ஆகிய மூலிகைகள் பலன் தருவதாக உள்ளன. இவை பித்தத்தைக் குறைத்து தைராய்டு சுரப்பியின் அதிக செயல்பாட்டை தடுத்து, இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.

    மேற்கூறிய மூலிகைகள் சேர்ந்த நெல்லிக்காய் நெய், நெல்லிக்காய் லேகியம், சீந்தில் குடிநீர், திராட்சை குடிநீர், மஞ்சிட்டி குடிநீர் ஆகிய சித்த மருந்துகள் ஹைப்பர் தைராய்டு நிலையில் பெரும்பலனைத் தரும். மேலும் சங்கு பற்பம், பவள பற்பம், முத்து பற்பம் ஆகிய மருந்துகளும் அதிக மான தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும்.

    ஹைப்பர்தைராய்டின் ஆரம்ப கட்ட நிலையில் சித்த மருத்துவ மூலிகையான மஞ்சள் பலன் தருவதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இது சித்த மருத்துவத்தில் எளிமையே வலிமை என்பதற்கு சிறந்த உதாரணம். 

    சோ.தில்லைவாணன்

    சோ.தில்லைவாணன்

    உடலில் தானியங்கு நோய்தடுப்பாற்றல் (Auto-immunity) நோய்நிலையிலும் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகள் மாறுவதாக உள்ளன. 'ஹாஷிமோட்டோ (Hashimoto) தைராய்டு வீக்கம்' என்னும் நோய்நிலையில் அதிகம் பேருக்கு ஹைபோதைராய்டு உண்டாவதாக உள்ளது. இந்நிலையில் கருஞ்சீரகம் 8 வாரங்களிலே நல்ல பலன் தருவதாக ஈரான் நாட்டில் நடந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது சிறப்பு. இதில் உள்ள தைமோகுயினோன் (TQ) எனும் வேதிப்பொருள் அதற்கு முக்கிய காரணம் என்கிறது நவீன அறிவியல்.

    சித்த மருந்துகளை கடந்து எண்ணெய் குளியலும் குறிகுணம் குறைக்க உதவும். ஹைப்போதைராய்டு நிலையில் சுக்கு தைலம் தேய்த்து எண்ணெய் முழுக்கு எடுப்பதும், ஹைப்பர் தைராய்டு நிலையில் குமரி தைலம் தேய்த்து எண்ணெய் முழுக்கு எடுப்பதும் கூட நோய்நிலையில் பலன் தரக்கூடும்.

    பித்தம் அதிகரிக்கும் அசைவ உணவுகள், எண்ணெய் தோய்ந்த பதார்த்தங்கள் ஆகியவற்றை ஹைப்பர் தைராய்டு நிலையில் தவிர்ப்பதும், கபம் அதிகரிக்கும் நீர்ச்சத்துள்ள காய்கறிகள், இனிப்புகள் ஆகிய உணவுகளை ஹைப்போ தைராய்டு நிலையில் தவிர்ப்பதும் நல்லது என்கிறது சித்த மருத்துவம்.

    குறை வீதன (ஹைப்போதைராய்டு) நோய்நிலையில் சர்வாங்காசனம் செய்து வருவது நல்ல பலன் அளிப்பதாக உள்ளதை ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுவதால் அத்தகைய பயிற்சியினை மேற்கொள்வது நல்லது. கூடவே மன அழுத்தம் போக்கும் பயிற்சிகளும், தியான முறைகளும் பழகி வருவது நன்மை பயக்கும்.

    முதுமையில் இதய ரத்தக் குழாய்களில் பாதிப்புள்ளவர்களும், இதய ரத்த குழாய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்களும் தைராய்டு மாத்திரைகளை எச்சரிக்கையுடன் எடுத்துக்கொள்வது நல்லது என்று நவீன அறிவியல் வலியுறுத்துகிறது. ஆகவே இந்நிலைகளில் மூலிகை மருத்துவத்தை நாடுவது சிறந்தது.

    சித்த மருத்துவத்தில் தைராய்டு தொந்தரவுகளுக்கு மருந்துகள் இருக்கிறதா? என்ற ஐயப்பாடு பலருக்கு எழும். ஏனெனில் குறைவீதனம் எனும் ஹைபோ தைராய்டு நோயின் ஆரம்ப கட்ட நிலையிலேயே தைராய்டு ஹார்மோன் மாத்திரைகளை மாற்றாக (Hormone Replacement) எடுத்துக்கொள்வது என்பது தற்காலத்தில் வாடிக்கையாகிவிட்டது.

    உண்மையில் சித்த மருத்துவ மூலிகைகள் தைராய்டு சுரப்பியை தூண்டி, அதன் சுரப்பை இயல்பாக்கி, நிரந்தர தீர்வளிப்பதாக உள்ளன. இது சித்த மருத்துவத்தின் மாபெரும் தனிச்சிறப்பு. அதனை புரிந்து கொண்டு முதுமையில் பாரம்பரிய மருத்துவ முறைகளை நாடுவது நலமான, தரமான வாழ்க்கைக்கு வழிகோலும்.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    8056040768

    • குரு ஒரு சுற்றுக்கு 12 வருடம் எடுத்து கொள்ளும் போது 5 முறை குரு பலம் வருகிறது.
    • குரு பார்த்தால் எத்தகைய தோஷமும் விலகும் என்று அனைவரும் கூறுகிறார்கள்.

    மனிதர்களின் வாழ்வில் சுபிட்சத்தை வாரி வழங்கும் சக்தி படைத்த ஒரே சுப கிரகம் குருபகவான். ஜனன ஜாதக அடிப்படையில் குரு ஜாதகருக்கு ஆதரவானவராகவோ, பாதகராகவோ, அஷ்டமா அதிபதியாகவோ இருந்தால் கூட கோட்சாரத்தில் 2 , 5, 7, 9, 11-ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் போதும் 5, 7, 9 பார்வையால் பார்க்கும் பாவகத்தையும், அந்த பாவகத்தில் உள்ள கிரகத்தின் மூலமும் சுப பலனே கிடைக்கச் செய்வார். பலமிழந்து அமையப் பெற்ற கிரகங்களுக்கு குரு பார்வை இருந்தால், அதில் உள்ள தோஷங்கள் விலகி பலமுள்ளதாக மாறிவிடும்.

    அதாவது திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8 ஆகிய இடங்களுக்கு கோட்சார குருவின் பார்வை கிடைத்தால் திருமணம் நடந்து விடும் என்று நம்பப்படுகிறது.

    2,5,7,9,11 ல் கோட்சார குரு வரும் போது குரு பலம் என கூறுகிறோம். குரு ஒரு சுற்றுக்கு 12 வருடம் எடுத்து கொள்ளும் போது 5 முறை குரு பலம் வருகிறது. அப்படி 12 வருடத்திற்கு 5 முறை குரு பலம் வரும் போது ஏன் பலர் 40 வயதைக் கடந்தும திருமணம் நடைபெறாமல் இருக்கிறார்கள்?

    என்பது யோசிக்க வேண்டிய கேள்வி தானே?

    குரு பலத்தை மூன்று பிரிவாக பிரிக்கலாம்.

    1. திருமணம் தொடர்பான பாவங்களான 1,2,7,8 சுப வலிமை பெற்று தசா - புத்திகள் சாதகமாக இருந்தால் ராசிக்கு 2,5,7,9,11ம் இடங்களுக்கு கோட்சார குருவின் சம்பந்தம் கிடைக்கும் போது திருமணம் எளிதில் நடைபெறும்.

    ஒருவருக்கு எந்த சிரமமும் இன்றி எளிதில் திருமணம் நடைபெற ஜனன கால ஜாதகத்தில் களத்திரக்காரகன் சுக்கிரன் பல முள்ளதாக அமைய வேண்டும்.

    ஏழாம் அதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்து ஜாதகத்தில் வலிமை பெற வேண்டும் ஏழாம் பாவக அதிபதி சுக்கிரனுடன் இணைந்து திரிகோணத்துடன் தொடர்பு பெற வேண்டும்.

    இரண்டில் சுக்ரன் அமர்ந்து செவ்வாயுடன் தொடர்பு பெறுவது. இரண்டு மற்றும் ஏழாம் பாவக அதிபதிகள் பலம் பெற்று திரிகோணாதிகளுடன் தொடர்பு பெறுவது.

    ஏழாம் பாவகாதிபதி இயற்கை சுபராகி ஜாதகத்தில் வலிமை பெறுவது. ஏழாம் பாவகாதிபதி மற்றும் சுக்ரன் லக்னத்திலோ, லக்னாதிபதியுடனோ அல்லது லக்னாதிபதியின் பார்வை பெறுதல் ஏழாம் பாவகாதிபதி நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் வலிமையோடு இருப்பது.

    இரண்டு, ஏழாம் பாவகங்கள் திதி சூன்யம் அடையாமல் இருக்க வேண்டும். ஏழாம் பாவகம் ஏழாம் அதிபதி, சுக்ரன் அமர்ந்த வீடு ஆகிய 3-ம் 30 பரல்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

    மேலே கூறிய விதிகளில் எதேனும் ஒரு சில விதிகள் சுபமாக இருந்தால் கூட குருவின் இரண்டாம் சுற்றில் (12 வயதிற்கு ஒரு சுற்று) 18 முதல் 23 வயதிற்குள் திருமணம் நடந்து விடும். திருமணம் தொடர்பான பாவகங்கள் வலிமையாக இருந்தால் கோட்சார குருவின் சம்பந்தம் இல்லாவிட்டாலும் கோட்சார குருவின் சம்பந்தம் இல்லாவிட்டாலும் திருமணம் நடக்கும்.

    ஒருவருக்கு ஜனன கால ஜாதகத்தில் ஏழாம் பாவக அதிபதி 3, 6, 8, 12-ல் மறைந்து இருந்தாலும் திதி சூன்ய பாதிப்பு இருந்தாலும் 1, 2, 7, 8, பாவகங்களும் அதன் அதிபதிகளும் வலிமை குறைந்து இருந்தாலும் ஏழாம் பாவக அதிபதி 3, 6,8,12-ல் அமர்ந்து இருந்தாலும் ஏழாம் பாவ அதிபதி பகை, நீச, அஸ்தமனம், மற்றும் கிரக யுத்தத்தில் தோற்றாலும் ஏழாம் பாவக அதிபதிகள் வலிமை குறைந்து திரிகோணாதிகள் தொடர்பு இல்லாமல் இருந்தாலும் 7-ம் பாவக அதிபதி நட்சத்திரத்தில் இருக்கும், கிரகம் வலிமையற்று இருந்தாலும் சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் 1, 2, 7, 8 ஆகிய பாவக அங்களை பாதித்து இருந்தாலும் பெண் ஜாதகத்தில் 8-ம் பாவகம் அல்லது 8-ம் பாவகாதிபதி பாதிக்கப்பட்டு இருப்பது தசா - புத்திகள் சாதகமாக இருந்தால் கோட்சார குருவின் சம்பந்தம் இல்லாவிட்டாலும் 24- 36 வயதிற்குள் திருமணம் நடக்கும்.

    தசா -புத்திகள் சாதகமாக இருந்து ராசிக்கு 2, 5, 7, 9,11-ல் கோட்சாரம் வரும் போது திருமணம் தொடர்பான பாவகங்கள் தோஷ நிவர்த்தி பெற்று குருவின் மூன்றாம் சுற்றில் 24-36 வயதிற்குள் திருமணம் நடைபெறும்.

    2. திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8 சுப வலிமை பெற்றாலும் தசா - புத்திகள் சாதகமற்று இருக்கும் போது ராசிக்கு 2,5,7,9,11-ம் இடங்களுக்கு கோட்சார குருவின் சம்பந்தம் கிடைத்தாலும் திருமணம் நடைபெறாது.

    3. திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8 அசுப வலிமை பெற்று தசா புத்திகள் சாதகமற்று இருக்கும் போது எத்தனை குருப் பெயர்ச்சி வந்தாலும் திருமண வாழ்க்கை கேள்வி குறியாகவே இருக்கிறது.

    இங்கே வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வர வேண்டும். குரு பார்த்தால் எத்தகைய தோஷமும் விலகும் என்று அனைவரும் கூறுகிறார்கள். தாங்களும் அதை இந்த கட்டுரையின் முகப்பில் ஒப்புக் கொண்டு இருக்கிறீர்கள். அப்படி இருக்க தோஷம் உள்ள பாவகங்களுக்கு குரு பார்வை கிடைக்கும் போது ஏன் தோஷ நிவர்த்தி கிடைப்பது இல்லை? என்ற சந்தேகம் உங்கள் மனதில் வந்து இருக்குமே? அதாவது ஜனன கால ஜாதகத்தில் கீழ்காணும் தோஷம் இருந்தால் கோட்சார குருவின் சம்பந்தம் திருமணம் தொடர்பான பாவகங்களுக்கு கிடைத்தாலும் திருமணம் நடைபெறும் வாய்ப்பு மிகக் குறைவு.

    கிரகணத்திற்கு ஒரு வாரம் முன்பும் ஒரு வாரம் பின்பும் பூமிக்கு தோஷ காலம். இந்த 15 நாட்களில் பிறக்கும் குழந்தைகள் செவ்வாய் , சனி தொடர்பு பெறுபவர்களுக்கு திருமணம் நடப்பது மிகவும் கடினம் 9-ம் பாவகத்தில் வலிமை இழந்த ராகு/கேது, சனி சம்மந்தம் இருந்தாலும் 2,7-ம் அதிபதிகள் பாவ கிரகத்துடன் சம்மந்தம் அஸ்தமனம், நீசம் பெற்றாலும் 2, 7-ம் அதிபதி 12-ல் மறைந்தாலும் 1, 7-ம் அதிபதிகள் இணைந்தாலும் 6,8,12ல் பலவீனமடைந்தாலும் 5, 6-ம் அதிபதிகள் இணைந்து 7ம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றாலும் 7, 12 ம் அதிபதி சூரியனுடன் 7-ம் பாவகத்தில் இணைந்தாலும் சுக்கிரனுக்கு 1,5,9-ல் வலுவற்ற கிரகங்கள் நின்றாலும் சனி லக்னத்தை, லக்னாதிபதியை, சந்திரனை பார்த்து சுப கிரகங்கள் பார்வை ஜனன குரு தொடர்பு இல்லாமல் இருந்தாலும் திருமணம் நடைபெறுவதுதில்லை.

    ஒரு சிலருக்கு ஜனன கால ஜாதகத்தில் ஏழாமிடத்திற்கு கோட்சார குருவின் சம்மந்தம் கிடைக்கும் காலங்களில் 24 வயதிற்கு மேல் 36 வயதிற்குள் குறைந்தது 3 திருமணம், விவாகரத்து நடக்கும். ஒரு சிலருக்கு அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ளும் விதமான நட்பு மட்டும் கிடைக்கும். என்ன வாசகர்களே திருமணத்திற்கு சுய ஜாதக வலிமை மிக முக்கியம் என்பது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

    மேலும் பலருக்கு கோட்சார குரு சந்திரனை பார்க்கும் போது திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சந்திரன் என்பவர் மனோகாரகன், உடல் காரகன். சூரியன் என்பவர் ஆத்மக் காரகன்.

    ஒரு ஆன்மாவை சுமக்க, இயக்க உடல் தேவை. ஆன்மாவின் இயக்கத்திற்கு உதவும் கருவியான உடல் காரகன் சந்திரனுக்கு கோட்சார குருவின் சம்மந்தம் கிடைக்கும் போது ஆன்மாவும் உடலும் புனிதமடையும்.

    12 வயது வரை தாயின் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தை குருவின் ஒரு சுற்று முடிந்த பிறகு (குரு வட்டம் ) தனித்து சுயமாக சிந்திக்க துவங்கும். பய உணர்வு குறைந்து தைரியம், தெம்பு அதிகரிக்கும். ஒவ்வொரு முறை குருவின் பார்வை ராசிக்கு கிடைக்கும் கால கட்டங்களில் குழந்தை பருவத்திலிருந்து வாலிப பருவத்திற்கு ஏற்ற உடல் வளர்ச்சி ஏற்பட்டு சமுதாயத்தில் தன்னை நிலை நிறுத்த தேவையான ஆத்ம சிந்தனை அதிகரிக்கும். திருமண உறவில் ஈடுபட மனமும் உடம்பும் தயாராகும். உடலில் நோய் தாக்கம் குறையும். தேக அழகு கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

    ஆக கோச்சார குருவின் பார்வை சந்திரனுக்கு கிடைக்கும் காலங்களில் உடலும் உள்ளமும் பரிசுத்தமடையும். வயதிற்கு ஏற்ப உடல் பலமும் மன பலமும் அதிகரிக்கும். திருமண வாய்ப்பு வெகு சிலருக்கே உருவாகும். ஜோதிடத்தில் குருவானவர் தெய்வ அருளை குறிக்கும் கிரகமாகும். எனவே எந்த ஒரு செயலைச் செய்தாலும் அந்த செயலை குரு கோட்சாரத்தில் பலம் வாய்ந்த இடங்களில் சஞ்சரிக்கும்காலங்களில் செய்தால் அந்த செயல் சுபமாக நடக்கும் என்ற அடிப்படையில் தெய்வ அனுக்கிரகத்திற்காக குருபலம் பார்க்க வேண்டும். திருமணத்திற்கு மட்டும் அல்ல வாழ்வில் அனைத்து சுபகாரியம் நடக்கும் போது தெய்வ அனுகிரகம் வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது குரு பலம்.

    ஒருவருக்கு திருமணம் நடக்கும் போது கோட்சார குருவானவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் சஞ்சரித்தால் அந்த நபருக்கு தெய்வ அனுக்கிரகம் கிடைத்து எந்த தடையும் இல்லாமல் திருமணம் நடக்கும் என்ற காரணத்திற்காக முன்னோர்களால் பார்க்கப்பட்டது.

    ஐ.ஆனந்தி

    கோட்சாரமும் குருபலமும்

    2024-ம் ஆண்டின் மே 1 அன்று குருப் பெயர்ச்சியில் ரிஷப ராசியில் நின்று கன்னி, விருச்சிகம், மகர ராசியை பார்க்கும் குரு பகவானால் விலகும் திருமணம் தொடர்பான தோஷங்கள்.

    மாங்கல்ய தோஷம்:-

    எட்டாமிடம் என்பது பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானம் ஆணுக்கு ஆயுள் ஸ்தானம்.

    ஒருவரின் சுய ஜாதகத்தில் 8ம்மிடம் அசுப கிரக தாக்கத்தால் பலம் குறைந்தால் திருமணம் தடைபடலாம். ரிஷப குருவின் பார்வையால் மேஷம், மிதுனம், மீனம் ராசியினருக்கு மாங்கல்ய தோஷம் விலகி திருமணம் நடைபெறும் சாதகம் உள்ளது.

    களத்திர தோஷம்:-

    சுய ஜாதகத்தில் ஏழாமிடம் என்பது களத்திர தோஷம். ஒருவரின் சுய ஜாதகத்தில் 7-ம்மிடம் அசுப கிரக தாக்கத்தால் பலம் குறைந்தால் திருமணம் தடைபடலாம். ரிஷப குருவின் பார்வையால் ரிஷபம், கடகம், கும்பம் ராசியினருக்கு களத்திர தோஷம் விலகி திருமணம் நடைபெறும் வாய்ப்புள்ளது.

    குடும்ப தோஷம்:-

    ஒருவரின் ஜாதகத்தில் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு பாவ கிரக சம்பந்தம் இருந்தால் குடும்பம் அமைய காலதாமதமாகும். ரிஷப ராசியில் நிற்கும் குரு பார்வையால் சிம்மம், துலாம், தனுசு ராசியினரின் குடும்ப ஸ்தானம் பலம் பெற்று திருமணம் கூடி வரும் சாத்தியம் உள்ளது.

    காதல் திருமணம்:

    மணாளனே மங்கையின் பாக்கியம் என பலருக்கு காதல் திருமணத்தில் ஆர்வம் அதிகம். ரிஷப குருவின் பார்வை பலத்தால் ரிஷபம், கடகம், கன்னி ராசியினருக்கு காதல் திருமணம் நடைபெறலாம்.

    பரிகாரம்

    ஜனன ஜாதகத்தாலும் கோச்சாரத்தாலும் குரு பலம் குறைவால் திருமணத் தடையை சந்திபவர்கள் தேய்பிறை அஷ்டமி திதி தினத்தன்று பைரவருக்கு செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடமாலை சாத்தி மேலும் செந்நிற மலர்கள் கொண்டு பூஜைகள் செய்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.

    • பொதுவாக மஞ்சள் நிற பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதில் குரு பகவான் அருள் இருக்கும் என்பார்கள்.
    • ஜாதகத்தில் குரு பகவான் பகை தரும் கிரக சேர்க்கைகளுடன் இருந்தால் குங்கும அர்ச்சனை சிறந்தது.

    குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல இடத்தில் சிறப்பான அம்சத்தில் அமர்ந்து இருந்தால் அவரால் கிடைக்கும் நன்மைகள் அளவிட முடியாத அளவுக்கு இருக்கும். எனவே குரு பகவானின் நகர்வுகள் ஒவ்வொருவருக்கும் மிக மிக முக்கியமானதாகும்.

    குரு பகவான், பிரம்மாவின் மகன்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாதேவிக்கும் பிறந்த குழந்தைகளில் ஒருவர் ஆவார். 7-வது குழந்தையாக குரு பகவான் பிறந்ததாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன. குருவுக்கு 2 மனைவிகள். ஒருவர் பெயர் தாரை. மற்றொருவர் பெயர் சங்கினி.

    இவருக்கு பரத்வாஜர், எமகண்டன், கசன் என்று 3 மகன்கள் பிறந்தனர். சூரியனும், சந்திரனும் இவருக்கு நட்புக்குரியவர்கள். புதனும், சுக்கிரனும் ஆகாதவர்கள் என்று ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.

    பொதுவாக ஜோதிடத்தில் குருவை புத்திரகாரகன் என்று சொல்வார்கள். குரு நன்றாக அமைந்து இருந்தால் நல்ல குழந்தைகள் பிறப்பார்கள் என்பது எழுதப்படாத விதியாகும். குழந்தைகளால் அந்த குடும்பத்துக்கே மேன்மை உண்டாகும்.

    இது மட்டுமல்ல குரு பார்வை சிறப்பாக இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். புகழ், பொருள் சேர்க்கை, நல்ல வீடு, சொகுசான வாகனம், ஒத்துழைக்கும் உறவினர்கள், நம்பிக்கை தரும் நண்பர்கள் ஆகியவற்றையும் குருதான் ஒவ்வொருவருக்கும் தருகிறார். ஆன்மீகத்தில் ஈடுபாட்டை தருவதும் குருபகவான்தான்.

    ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம ராசியில் இருந்து 1, 2, 5, 7, 11 ஆகிய இடங்களுக்கு குரு வந்தால் மிகுந்த நன்மை கிடைக்கும். அதே சமயத்தில் குரு ஒரு ஜாதகத்தில் கெட்டுபோய் இருந்தால் அல்லது நீச்சம் பெற்று இருந்தால் சோதனை மேல் சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக குரு சரியில்லாத ஜாதகக்காரர்கள் தனி நபர் ஒழுக்கத்தில் சிறப்பாக இருக்க மாட்டார்கள்.

    அது மட்டுமல்ல குடும்பத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள். அறிவுரை கேட்பதை கவுரவ குறைச்சலாக நினைப்பார்கள். இதனால் குரு சரியாக இல்லாத ஜாதகக்காரர்கள் எப்போதும் தங்கள் உறவினர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு முகத்தை உம்மென்றே வைத்துக் கொண்டிருப்பார்கள்.

    குரு மிக கடுமையாக கெடுதல் கொடுக்கும் இடங்களில் அமைந்திருந்தால் அந்த ஜாதகக்காரர் தெய்வ நிந்தனை செய்ய தயங்க மாட்டார் என்று ஜோதிடர்கள் சொல்வது உண்டு. குரு பெயர்ச்சிகளில் ஒருவருக்கு சரியில்லாத இடம் அமைந்து விட்டால் அவர் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் அதலபாதாளத்துக்கு வந்து விடுவார்.

    இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் குரு பகவானை வணங்கி அவரை மகிழ்ச்சிப்படுத்தி சரணாகதி அடைவதை தவிர வேறு வழியில்லை. எனவே குரு தோஷத்தில் இருந்து விடுபட அவசியம் அவரவர் தன்மை, இடம் மற்றும் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப பரிகாரம் செய்தே தீர வேண்டும்.

    குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமைகளில் பரிகாரம் செய்வது நல்லது. வியாழக்கிழமை குரு ஓரையில் (காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை) வீட்டில் வடகிழக்கு திசையில் குருவுக்குரிய கோலம் போட்டு அதில் மலர்கள் வைத்து அதன் மீது குரு எந்திரத்தை வைத்து பூஜிக்கலாம். அந்த சமயத்தில் 108 முறை குரு காயத்ரி சொன்னால் எவ்வளவு பெரிய குரு தோஷமாக இருந்தாலும் விலகி சென்று விடும். அது மட்டுமின்றி சுப பலன்களையும் தருவதாக அமையும்.

    வியாழக்கிழமைகளில் வீட்டில் குருவுக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். ஆலயத்துக்கு சென்று வழிபட வேண்டும் என்று விரும்புபவர்கள் வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய வைத்து மஞ்சள் ஆடை கொடுத்து வழிபடலாம். (சென்னை பாடியில் திருவல்லிதாயம் என்றழைக்கப்படும் திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் குருபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்).

    வியாழக்கிழமைகளில் வசதி வாய்ப்பு இருப்பவர்கள் தானம் செய்வது நல்லது. பெண்கள் அன்று விரதம் இருப்பது குரு பகவான் அருளை அதிகமாக பெற்று தரும். குரு பகவானுக்கு பிடித்த மஞ்சள் ஆடை அணிந்தாலும் தோஷத்தை குறைக்க முடியும் என்கிறார்கள்.

    வியாழனுக்குரிய உலோகமாக தங்கம் கருதப்படுகிறது. அதை பூஜையில் வைத்தும் வழிபடலாம். ஒருவரது வீட்டில் வடகிழக்கு எனப்படும் ஈசான்ய திசையே குருபகவானுக்குரிய திசையாக கருதப்படுகிறது. எனவே உங்கள் வீட்டில் ஈசான்ய இடத்தில் எப்போதும் மங்களகரமாக இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டால் குரு பாதிப்பு வராது. மங்கள காரியங்கள் செய்யும்போது அந்த இடத்தில் தொடங்கினால் 100 சதவீத வெற்றி கிடைக்கும்.

    சிலர் ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் சென்னை பாடி திருவல்லிதாயம், திருச்செந்தூர் ஆகிய தலங்களுக்கு சென்று வழிபடலாம்.

    குரு பார்வை இருந்தால்தான் திருமணம் கை கூடும், குழந்தை பாக்கியம் உண்டாகும், செல்வம் சேரும், நல்ல பதவி கிடைக்கும். என்றெல்லாம் ஜோதிடர்கள் சொல்வதை கேட்டு இருப்பீர்கள். இந்த பலன்கள் பெற வேண்டுமானால் குரு பகவான் ஆதிக்கம் நிறைந்த கோவில்களுக்கு சென்று வழிபட்டு வரவேண்டும்.

    கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி கோவிலுக்கு சென்று வழிபடலாம். சென்னை போரூரில் உள்ள ராமநாதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடலாம். திருச்செந்தூர் ஆலயத்தை 3 தடவை வலம் வந்து வணங்கினால் எவ்வளவு பெரிய குரு தோஷமாக இருந்தாலும் நீங்கும் என்பது ஐதீகம். 

    யாக பூஜைகளில் நம்பிக்கை இருப்பவர்கள் குருபகவானுக்கு உகந்த யாகங்களை செய்யலாம். அல்லது யாக பூஜைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். யாகத்தில் பங்கேற்ற பிறகு ஏழை-எளியவர்களுக்கு மஞ்சள் நிறத்தில் உடைகள் கொடுத்து வஸ்திர தானம் செய்யலாம்.

    பொதுவாக மஞ்சள் நிற பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதில் குரு பகவான் அருள் இருக்கும் என்பார்கள். குரு தோஷம் உடையவர்கள் மஞ்சள் நிற பொருட்களை எந்த அளவுக்கு தானம் செய்கிறார்களோ அந்த அளவுக்கு பலன் உண்டாகும்.

    ஓம் குருவே நமக என்ற மூல மந்திரத்தை எப்போது எல்லாம் உச்சரிக்க முடிகிறதோ அப்போது எல்லாம் சொல்லி வருவது நல்லது. குறிப்பாக அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த மூல மந்திரத்தை உச்சரிப்பது மிக மிக நல்லது.

    குரு தோஷம் நீங்குவதோடு குரு பகவானின் பரிபூரணமான ஆசியை பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யலாம். அதை உச்சரிக்க முடியாதவர்கள் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தை கேட்கலாம். இது மேன்மையான பலனை தரும் சக்தி கொண்டது.

    ஜாதகத்தில் குரு பகவான் பகை தரும் கிரக சேர்க்கைகளுடன் இருந்தால் குங்கும அர்ச்சனை சிறந்தது. பெண்கள் மோதிர விரலால் குங்குமத்தை நெற்றியில் பொட்டாக வைத்துக் கொண்டால் குரு தோஷத்தில் இருந்து தப்பிக்கலாம். வாழை மரத்தை வழிபடுவதும் குரு தோஷத்தில் இருந்து விடுபட உதவும்.

    வீட்டிலோ, ஆலயத்திலோ பெரிய அளவில் பணம் செலவழித்து பரிகாரங்கள் செய்ய இயலாது என்ற நிலையில் இருப்பவர்கள் கவலைப்பட தேவையில்லை. அதிகாலை எழுந்து நீராடி விட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி விஷ்ணுவையும், மகாலட்சுமியையும் மனதார வழிபடுங்கள் போதும். தோஷங்கள் விலகி விடும்.

    • பூஜையில் இருந்ததால் மன்னன் முனிவரை அதிக நேரம் காக்க வைத்து விட்டார்.
    • பக்தி மார்க்கத்தில் செல்லும் பொழுது சரணாகதி பக்குவம் ஏற்படும்.

    மோட்சம்- முக்தி என்ற வார்த்தைக்கு பொருள் துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவதாகும். பிறப்பு, இறப்பு என்ற சூழலில் இருந்து விடுதலை பெறுவதனை மோட்சம்- முக்தி என குறிப்பிடுகின்றனர்.

    ஜீவாத்மா ஆகிய பிறப்புகள் பரமாத்மாவுடன் இணைவதே மோட்சம். இதற்கு சரணாகதி அடைதல், இறைவனே, பரம் பொருளே, நீயே கதி என்ற தத்துவம் பெரிதும் போற்றப்படுகின்றது.

    பாகவதத்தில் கூறப்பட்டுள்ள கஜேந்திர மோட்ஷத்தினை பற்றி பார்ப்போம். மிகுந்த வீரம், தோரணை, கம்பீரம் என்ற தோற்றம் கொண்ட யானைகளின் அரசன் தான் கஜேந்திர யானை. இதன் வலிமை காரணமாக சிங்கங்கள் கூட ஓடின. கஜேந்திர யானை தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாய் உலாவி வந்தது.

    அப்போது கஜேந்திரனுக்கு தாமரைப் பூவின் நறுமணம் வந்தது. அதனால் ஈர்க்கப்பட்ட கஜேந்திரன் தன் கூட்டத்துடன் தாமரை பூக்கள் நிறைந்த அந்த பொய்கையினை நோக்கி சென்றது. அனைவரும் அந்த பொய்கை நீரை அருந்தினார்கள். கஜேந்திரன் ஒரு தாமரையினை பறித்து தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்ப்பிக்க விரும்பினான். அந்த நேரம் ஒரு முதலை கஜேந்திரனின் காலை பற்றி தண்ணீருக்குள் இழுத்தது. கஜேந்திரனால் முதலை வாயில் இருந்து தன் காலை எடுக்க முடியவில்லை. உடன் இருந்த யானைகள் கஜேந்திரனை இழுக்க முயன்றன.

    முதலைக்கு எப்பொழுதும் நீரில் பலம் அதிகம். அதனால் கஜேந்திரனின் பலம் குறைந்து கொண்டே வந்தது. கஜேந்திரனுக்கு தான் மரண தருவாயில் இருப்பது புரிந்தது. அந்த இறைவனைத் தவிர தனக்கு இப்பொழுது எந்த பற்றுதலும் இல்லை என்பது தெரிந்தது. முன் ஜென்மத்தில்தான் பெருமாளை பூஜித்தவை ஞாபகத்திற்கு வரவே அவற்றினையே மீண்டும் துதிக்க ஆரம்பித்தான்.

    இறைவனே உன்னை வணங்குகிறேன். உன்னிடம் இருந்து தான் சகலமும் தோன்றின. உன்னாலேயே அண்ட சராசரங்களும் இயங்குகின்றன. உன்னைத் தவிர எனக்கு வேறு எதுவும் இல்லை. ஆக உன்னையே சரணடைகின்றேன்.

    இவ்வாறு கஜேந்திரன் கதறினான். பெருமாள் கருட வாகனத்தில் சுதர்சன சக்கரம் ஏந்தி வந்து முதலையை வதம் செய்து கஜேந்திரனை காப்பாற்றி மோட்சம் அளித்தார். முதலையும் புண்யம் பெற்று இறைவனை வணங்கியது.

    ஏன் முதலை குறி பார்த்து கஜேந்திரன் காலினை பிடித்தது. முற்பிறவியில் யானை பாண்டிய மன்னன் இந்திர துஷ்யனாகப் பிறந்தான். மகா விஷ்ணுவின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். அவன் பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டு இருந்த நேரம் துர்வாச முனிவர் அவனை காண வந்தார்.

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    பூஜையில் இருந்ததால் மன்னன் முனிவரை அதிக நேரம் காக்க வைத்து விட்டார். அதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர் ஒரு மதம் கொண்ட யானையாவாய் என்று சாபம் இட்டார். பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்ட மன்னனோ நான் யானையாக பிறந்தாலும் மகாவிஷ்ணு மீது பக்தி குறையாது இருக்க வேண்டும் என்று முனிவரிடம் வேண்டினார். முனிவரும் மனம் குளிர்ந்து அந்த மகாவிஷ்ணுவாலேயே உனக்கு மோட்சம் கிடைக்கும் என மன்னனை அருளினார்.

    முதலையும் முற்பிறவியில் ஸ்ரீஸ்ரீ என்ற கந்தர்வனாக இருந்தான். பொய்கைக்கு வருபவர்களின் காலை பற்றி இழுத்து பயப்படச் செய்வான். ஒரு முறை தேவலர் என்ற முனிவர் பொய்கையில் கால் கழுவ வந்தார். கந்தர்வனும் அவரது காலை பிடித்து இழுக்க முனிவர் நீ தண்ணீரில் முதலையாக பிறப்பாயாக என சாபம் இட்டார். கந்தர்வன் தன் தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்பு கேட்டார். முனிவரும் மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம் பெற்று உனக்கு சாப விமோசனம் ஏற்படும் என்று அருளினார்.

    பக்தி மார்க்கத்தில் செல்லும் பொழுது சரணாகதி பக்குவம் ஏற்படும். நான். எனது, என் முயற்சி எனும் வரை சரணாகதி பக்குவம் வராது. பரிபூரண சரணாகதி ஏற்பட்டால் இறைவனே எழுந்தோடி வந்து விடுவான் என்பதனை விளக்குவதாகவே இந்த சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எல்லா வைணவ கோவில்களிலும் சித்திரை பவுர்ணமி அன்று கருட சேவையுடன், கஜேந்திர மோட்ச விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

    பூரண சரணாகதி என்பதன் பொருளை உணர்ந்து நாமும் அதனை பின்பற்றலாமே.

    இது நமக்கு மிகவும் தெரிந்தது தான். வெளிநாட்டில் இருப்பவர்கள் கூட தாய்நாடு வந்தவுடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவர். குலதெய்வம் மறந்தவர்கள் கூடதம் முன்னோர்களை கேட்டு அறிந்து வழிபடுகின்றனர்.

    குல தெய்வ வழிபாடு முறையாய் இருந்தாலே வீட்டில் தோஷங்கள் இராது. குலதெய்வ தோஷம் இருந்தால் மற்ற தெய்வ தோஷங்களின் பாதிப்பும் ஏற்படும்.

    பெண்கள் பொதுவில் திருமணத்திற்கு முன் தன் தந்தை வழி குல தெய்வத்தினை வழிபடுவர். மணம் முடிந்த பிறகு தன் கணவன் வீட்டு வழி குல தெய்வத்தினை வழிபடுவர். பல வீடுகளில் கல்யாணத்திற்கு பிறகு பிறந்த வீட்டு வழி குல தெய்வ வழிபாட்டினை மறுப்பர். பெண்கள் பிறந்த வீட்டு குல தெய்வத்தினையும் தரிசிப்பது அம்மா வீட்டிற்கு வந்து செல்வது போல்தான்.

    பங்குனி பவுர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்வது அநேக பிரச்சினைகளை நீக்கும். குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு ஆகும்.

    குலதெய்வ வழிபாடு இல்லற கடமை, குல தெய்வம் என்பதில் ஆண், பெண் தெய்வங்களே உள்ளன. பொதுவில் மகா சிவராத்திரி, மாசி அமாவாசை, பங்குனி உத்திரம் இவை குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்தது. அபிஷேகம், பூஜை, பொங்கல் படைத்தல் இவை குல தெய்வ வழிபாட்டிற்கு உகந்தது. முன்னோர்களும் ஆசிர்வதிப்பர்.

    பலரும் வழிபாடு முடிந்ததும் பந்தி போட்டு ஊருக்கு சாப்பாடு போடுவார். இதனால் குலதெய்வம் மகிழ்ச்சி அடையும் என்பதே ஐதீகம். இதுவரை குல தெய்வ வழிபாடு செய்யாதவர்கள் உடனடியாக ஆரம்பித்து செய்யலாமே!

    • சிலரோ நாடும் மக்களும் பாராட்டும் படியான புகழ்மிக்க மனிதராக உயர வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
    • கடனுக்கே என்று தேநீர் விற்பதும், கடனுக்கே என்று அதனை வாங்கி வயிற்றுக்குள் ஊற்றிவிட்டு நடப்பதும் எந்தப் பயனையும் விளைவிக்காது.

    வாழ்தலை ரசித்து அதில் லயித்திருக்கக் காத்திருக்கும் அன்பின் வாசகர்களே! வணக்கம்.

    வாழ்க்கையில் என்றென்றும் எப்போதும் மகிழ்ச்சியே நிறைந்திருக்க வேண்டும்! என்றும், வாழ்க்கை எந்நேரமும் ரசிக்கும் படியாகவே அமைந்திருக்க வேண்டும்! என்றும் எல்லாரும் விரும்புகிறோம்.

    நமக்கு வாழ்க்கை ரசனை மயமாக அமைந்து, அந்த மகிழ்வில் எந்நேரமும் திளைத்திருக்க வேண்டுமென்றால், நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். பணம் காசு என்பதைவிட நல்ல ஒருமித்த எண்ணங்கள் உடைய நண்பர்கள் சூழ வாழ வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். சிலரோ நாடும் மக்களும் பாராட்டும் படியான புகழ்மிக்க மனிதராக உயர வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் உண்மை என்ன தெரியுமா?

    தேவையான பணம், புடை சூழ்ந்த நண்பர்கள் பட்டாளம், அளவுக்கு அதிகமான பெயர் புகழ் ஆகிய இவற்றையெல்லாம் உடைய பெரும்பான்மை மனிதர்களே மகிழ்ச்சியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். நல்ல ரசனையான மகிழ்வில், தம்மை இழந்து லயித்திருக்க மாட்டோமா? என்று ஏங்கித் தவிப்போர்களிடம் இவை எல்லாமே இருக்கத்தான் செய்கிறது.

    அப்படியானால் ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் மகிழ முடியாமற்போனமைக்கு யாது காரணம்?

    மகிழ்ச்சிக்கான வழிமுறைகளைத் தேடி நாள்தோறும் அலைந்து கொண்டிருக்கிறது மனித இனம். அந்த வழிபாட்டில் கிடைத்து விடாதா? அந்த தியானத்தில் மலர்ந்து விடாதா? இந்த அறிவுரையில் புரிந்து விடாதா? இந்தத் துறவி உணர்த்திவிட மாட்டாரா? அதுவா மகிழ்ச்சி? இதுவா மகிழ்ச்சி? எனத் தேடி அலையும் மனித மனங்களே முதலில் தேடுவதை நிறுத்துங்கள்; தேடுவதை நிறுத்தினால் தெய்விகம் உங்களுக்குள்தான் இருக்கிறது என்பதை உணர்வீர்கள்; ஓடுவதை நிறுத்திய மனமே ஓசையற்ற மௌன அமைதியில் ஆழ்ந்து லயித்திருக்கும்.

    வாழ்க்கையை ரசிக்கவும் வாழ்க்கையில் லயிக்கவும் மகிழ்ச்சியாக இருக்கவும் எத்தனையோ விதிமுறைகள் இருக்கலாம்; ஆனால் எல்லாவற்றையும் பூறந்தள்ளி விடுங்கள்; மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், வாழும் அந்த நொடிகளில் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது வாழ்தலில் ரசிக்கவும் லயிக்கவும் நிறைய இருப்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

    ஒரு தேநீர்க் கடையில் தேநீர் பருகச் செல்கிறோமே! நம்மில் எத்தனை பேர் அந்தத் தேநீர் தயாரிப்பவர், அதனை எத்தனை லாவகமாய்த் தயாரித்து ஆற்றிக், கோப்பைகளில் நிரப்பித் தருகிறார் என்பதை ஆழ்ந்து கவனித்திருப்போம்?.

    ஆழ்ந்து கவனித்தலே ரசனையின் ஆரம்பம். பிறகு அதில் லயிப்பது இரண்டாவது கட்டம். தேநீர்த் தயாரிப்பவர், சுடுதண்ணீரையும், தேயிலைத் தூளையும் பாலையும் சர்க்கரையையும் கலந்து தருவதல்ல தேநீர்த் தயாரிப்பு. அவர் முதலில் அதில் ஆழ்ந்து ஈடுபடுகிறார்; வேகும் தேயிலைத்தூளின் பக்குவம் நிறத்தில், வாசத்தில் வெளிப்படத் தொடங்கியவுடன், பக்குவமாய்க் காய்ச்சிய பாலோடு கலந்து, அளவான சீனியிட்டு, இரு குவளைகள் கொண்டு அவர் ஒன்றை உயர்த்தி, மற்றொன்றைத் தாழ்த்தித் தாங்கி, நுரை கிளப்பி, ஆற்றி,வார்த்துத் தரும் அழகே ஒரு தியானம் போன்றது.

    பிறகு அவர் வார்த்துத் தரும் அந்தக் கண்ணாடி கிளாசை, வலது கையில் வாங்கிப் பிடிக்கும் அழகில் தொடங்கிவிட வேண்டும் நமது தேநீர் பருகும் ரசனை. உதடுகளுக்கிடையில் கண்ணாடி கிளாசின் விளிம்பைப் பட்டும் படாமலும் வைத்து, சுட்டு விடாமல், சொட்டுச் சொட்டாய்த், துளித் துளியாய்ச், சுவைத்துச் சுவைத்துப் பருகும் லயிப்பில், தேநீர் பருகுதலின் முழுப்பயனும் நமது மனத்திலும் உடம்பிலும் பரவிப் புத்துணர்வுப் பிரகாசம் வெளிப்பட்டுவிட வேண்டும்.

    இதைவிடுத்துக் கடனுக்கே என்று தேநீர் விற்பதும், கடனுக்கே என்று அதனை வாங்கி வயிற்றுக்குள் ஊற்றிவிட்டு நடப்பதும் எந்தப் பயனையும் விளைவிக்காது.


    பருகுவது, உண்பது, தின்பது, உறங்குவது, விழிப்பது, கழிப்பது,குளிப்பது, நிற்பது, நடப்பது, உட்கார்ந்திருப்பது, ஆடுவது, பயணிப்பது, வாகனம் ஓட்டுவது, உழைப்பது, எழுதுவது, வாசிப்பது, இசைப்பது, காண்பது, கேட்பது என எதைச் செய்தாலும், அந்த நொடிகளில் அந்தச் செயல்களில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதே உண்மையான மகிழ்ச்சியையும் ரசனையையும் லயிப்பையும் கொண்டு வந்து சேர்க்கும்.

    சிலர் பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணிக்கும்போது பார்த்திருக்கிறேன்; அடித்துப் பிடித்துக்கொண்டு ஏறி சன்னலோர இருக்கையைப் பிடிப்பர்; அமர்ந்த மறுநிமிடமே அயர்ந்து தூங்கி விடுவர். சிலருக்கு நின்று கொள்ள இடம் கிடைத்தாலே போதும்; மேலே கம்பியைப் பிடித்து உறங்கத் தொடங்கி விடுவார்கள். இவர்களுக்குப் பயணத்தின்போது கிடைக்கிற சுகானுபவங்கள் கிடைக்காமலே போய்விடும் அல்லவா?.

    கிராமங்களின் பசுமைச் சூழலும் அமைதியும், நகரங்களின் நெருங்கிய கட்டடங்களும் அவசர வாகன நெருக்கடிகளும் காண மகிழ்ச்சியையும் ரசனையையும் தரும்; அவற்றை உறங்கி வீணாக்கினால் மகிழ்ச்சி எங்கே தங்கும்?; ரசனை எங்கே பொங்கும்?. உறங்கும் நேரத்தில் உறக்கத்திலும், பயணம் செய்யும்போது பயணத்திலும் ஆழ்ந்து ஈடுபட்டாலே போதும்; ரசனைக்கென்று தனிநேரம் தேடி ஓடத் தேவையில்லை.

    நல்ல இசையைக் கேட்க வேண்டுமென்றால், சரியான காதொலிக் கருவி வாயிலாகக் கேட்க வேண்டும். சிலர் வானொலி கேட்டுக்கொண்டே வேறு வேலைகளைச் செய்ய முடியும் என்பார்கள்; அவர்கள் கூற்றில் எனக்கு உடன்பாடு கிடையாது. சில மாணவர்கள் காதொலிக் கருவியில் பாடலைக் கேட்டுக்கொண்டும், தொலைக்காட்சியில் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டும், வீட்டுப் பாடக் கணக்குகளை மேசையில் வைத்துப் போடுவதைப் பார்க்கலாம். அவர்களால் எதிலுமே உருப்படியாகக் கவனம் செலுத்த முடியாது; பாடலும் அரைகுறை; தொலைக்காட்சி ரசனையும் அரைகுறை; கல்விப்பாடமும் அரைகுறை என்று ஆகிப்போனால் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி எங்கே முழுமையாய் வந்து குடியேறும்?

    விருப்பமான பாடலைக் கேட்டால், பாடல் தீரும் வரை ஆழ்ந்து கேட்கவேண்டும். அப்போதுதான் அந்தப் பாடலின் நல்லிசையும் மென்குரலும் இதயம் வரை சென்று மனத்தை ஆசுவாசப் படுத்தும். பாடல் வரிகள், இலக்கிய இன்பமூட்டி மூளை வரை சென்று அறிவைப் புதுமை செய்யும். ஆழ்ந்து கேட்கப்படாத எதுவும் வெற்றோசையாகவே பொருளற்றுப்போய் ஒலிக்குப்பை ஆகிப்போகும்.

    கலந்துரையில் பேச்சைக் கேட்பதாயினும், எதிரே உள்ளவர் பேசிமுடிக்கும் வரை எவ்வித எதிருமின்றி, முழுமையாகக் காதைக் கழற்றிக் கொடுத்துக் கேட்கவேண்டும். அப்போதுதான் பேசுபவர்க்கும் மகிழ்ச்சி; பேச்சைக் கேட்பவர்க்கும் பெரும் பயன் விளையும். எதிரே உள்ளவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, கேட்பவர் சரியாகக் கேட்காமல், தன்னுடைய மனத்திற்குள் எதிர்வாதம் நிகழ்த்திக் கொண்டிருந்தால், புரியாமையே மிஞ்சும்; ரசனையும் லயிப்பும் இல்லாமற் போகும்.

    வாழ்தலில் நமக்கு வழங்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு தருணங்களும் நமக்காகவே வழங்கப்பட்டுள்ளன என்று சொந்தம் கொண்டாடி வாழத் தொடங்கினால் அவை முழுமையும் நம் ரசனைக்கானவையாகவே மாறிப்போகும். காலை எழுவது தொடங்கி இரவு உறங்கப் போகும்வரை நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் நமக்கே நமக்கானவை என எண்ணிச் செயல்பட்டால் எல்லாச் செயலும் இனிமைச் செயல்தான்.

    அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போல்வனவற்றில் நாம் பணியாற்றும்போது, இந்தப்பணியை நாம் நம் முதலாளிக்காகவும் மேலாளருக்காகவும் செய்கிறோம் என்று உழைத்தால் அது ரசனைக்குரிய மகிழ்ச்சிதரும் உழைப்பு கிடையாது. இந்த உழைப்பால் கிடைக்கும் ஊதியத்தால், லாபத்தால் நாமும், நம்மைச் சார்ந்தவர்களும், ஏன் ஒருவகையில் நாம் வாழும் இந்தச் சமூகமும் பயன்பெறுவர் என்று கருதி உழைத்தால் அதைவிட மகிழ்ச்சியான உழைப்பு வேறு கிடையாது.

    எல்லாச் செயல்களுக்கும் ஒரு பலன் இருப்பதாகக் கருதிக்கொண்டு ஈடுபடவேண்டும். காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பும்போதே, எங்கெங்கே பயணம்? என்னென்ன பணிகள்? என்னென்ன பயன்கள்? என்கிற தீர்மானத்தோடு மேற்கொண்டால் நிச்சயம் அப்பணிகளில் வெற்றிமட்டுமே விளைச்சலாக இருக்கும். ஏனெனில் மனதார ஈடுபட்டுச் செயல்படுகிற ஒவ்வொரு நொடியும் இன்ப நொடிகள்தாம்.

    ஒரு நகரத்தில் ஒரு விளையாட்டு மைதானம். அங்கு சமவயதுள்ள மூன்று இளைஞர்கள் சிரித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக ஒரு துறவி வந்து கொண்டிருந்தார். பல்லாண்டு காலம் துறவுவாழ்க்கை வாழ்ந்தவர் என்பதற்கு அடையாளமாக, நீண்டுவளர்ந்திருந்த தலைமுடிகள் சடைப் போட்டு ஜடாமகுடம்போலக் காட்சியளித்தது. மைதானத்தைக் கடக்கும்போது, அந்த மூன்று இளைஞர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் கேட்டு, சற்று ஓரமாக நின்று, அவர்கள் விளையாடுவதைக் கண்டு ரசித்தார். அந்த மூன்று இளைஞர்களையும் அருகே அழைத்து ஆசீர்வாதம் செய்ய வேண்டுமென்றும் விரும்பினார்; அந்த மூன்று இளைஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்தார். துறவியைக்கண்ட இளைஞர்களுக்கு அவரது தோற்றம் வித்தியாசமாகப் பட்டது. "நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் விளையாடு வதைப் பார்க்க எனக்குப் பிடித்திருக்கிறது; உங்கள் பெயர்களைச் சொல்லுங்கள்!" என்று இளைஞர்களைப் பார்த்துக் கேட்டார். இளைஞர் களும் பணிவோடு தங்கள் பெயர்களைச் சொன்னார்கள்.

    முதலாவது இளைஞனைப் பார்த்து, "எதற்காக நீ விளையாடுகிறாய்?" என்று துறவி கேட்டார். " விளையாட்டில் ஈடுபட்டு, தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டால், உடல் பலம் பொருந்தியதாக மாறும். பிற்காலத்தில் யாருக்கும் அஞ்சாமல் பலசாலி ஆவதற்காக விளையாடுகிறேன்" என்றான் இளைஞன். "நல்லது. வருங்காலத்தில் நீ பெரிய பயில்வானாக ஆக எனது நல்லாசிகள்" என்று ஆசி வழங்கினார்.

    இரண்டாவது இளைஞனைப் பார்த்து, "நீ எதற்காக விளையாடுகிறாய்?" என்று துறவி கேட்டார். "நாள் தோறும் இடைவிடாது விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டால், மனமும் உடலும் புத்துணர்வு அடையும். விளையாட்டு மைதானத்தில் பெற்ற புத்துணர்வோடு வீட்டுக்குச் சென்று படித்தால் கல்வி நன்றாக வரும்; அறிவு வளரும்; அதற்காக விளையாடுகிறேன்" என்றான் இரண்டாவது இளைஞன்." நீ எண்ணியவாறே வருங்காலத்தில் நீ பேரறிவாளனாக ஆக எனது ஆசீர்வாதங்கள்!" என்று வாழ்த்தினார் துறவி.

    மூன்றாவது இளைஞனிடம், "நீ எதற்காக விளையாடுகிறாய்?" என்று துறவி கேட்டதும் அவன் வித்தியாசமான ஒரு பதிலை வழங்கினான்." நான் விளையாட வேண்டும் என்பதற்காக விளையாடுகிறேன்!". அந்த இளைஞனின் பதிலைக் கேட்டதும் படக்கென்று அவனது காலில் விழுந்து," இனிமேல் நீ தான் எனது குருநாதன்!" என்று சொல்லிவிட்டார் துறவி.

    வாழ்க்கையை அதற்காக வாழ்கிறேன் இதற்காக வாழ்கிறேன் என்று காரணம் தேடி வாழ வேண்டாம்!.

    வாழ்வதற்காக வாழுங்கள்!

    முழுமையாக ரசித்து லயித்து வாழுங்கள்!

    தொடர்புக்கு - 9443190098

    • கோபத்தின் மூலமாக ஒரு மனிதர் தன்னையே அழித்து கொள்கிறார்.
    • நாம் பார்க்கும் அனைத்தும் இறைவனின் அம்சங்களாகவே தெரியும்.

    அன்பார்ந்த வாசகர்களே, கடந்த பகுதியில் நாம் புற உலக தொடர்பை துண்டித்து அக உலக பிரயாணத்திற்கு வரும் வித்தையை பற்றி பேசினோம். நமது புலன்கள் எப்போதும் புற உலக்தோடு தான் தொடர்பில் இருக்கும். இதை கடந்து அக உலகம் என்ற ஒன்று உள்ளது என்பதை பற்றி நாம் அறிய முயற்சி செய்யவில்லை.

    புற உலக தொடர்பு என்பது நமது புலன்கள் வழியாக நமக்கு இருப்பதால்தான், நமக்கு நான் இருக்கிறேன் என்கின்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அக உலகத்தின் உள்ளே ஒரு நான் இருக்கிறது என்பதை அறியும் / உணரும் பயிற்சி தான் பிராணாயாமம்.

    புற உலகோடு தொடர்பில் உள்ள நான், பொருள் பற்று மற்றும் அதிகார பற்றோடு இணைந்து இருக்கிறது. அதனால் நான் என்கின்ற கர்வம் நமக்குள் ஏற்படுகிறது. இதில் நாம் நினைப்பது மற்றவர்கள் மூலமாக நடக்காவிட்டால் / கிடைக்காவிட்டால் நமக்கு கோபம் ஏற்படுகிறது. அந்த கோபத்தின் மூலமாக ஒரு மனிதர் தன்னையே அழித்து கொள்கிறார். நாம் யாரும், கோபத்தால் ஒரு மனிதர் சாதனையை செய்தார் என்று எங்காவது வரலாறு உள்ளதா என்பதை பற்றி சிந்திப்பது இல்லை. எனவே, கோபம் என்பது தற்கொலைக்கு சமமாகிறது. நம் உடலை நாமே அழித்து கொள்கிறோம்.

    அப்படி என்றால் பிராணாயாமம் பயிற்சி மூலமாக, நாம் அக உலகோடு தொடர்பு கொள்ளும்போது, புற உலக நான் என்பது மறைந்து அக உலகில் உள்ள நான் என்கின்ற ஆத்மாவை உணர முடிகிறது. இந்த நிலைக்கு வாழும் காலத்திலேயே சென்ற மனிதர்களை தான் நாம் மகான்கள் என்கிறோம்.

    காரணம் என்னவென்றால் புற உலக தொடர்பு உள்ள வரை நமக்கு தியானம் என்பது சித்தி ஆகாது. தியானம் என்பது யாரும் நமக்கு சொல்லி கொடுத்து வருவது கிடையாது. அது தானாகவே நமக்கு உள்ளாக நடக்கக் கூடிய ஒரு சுயம்புவான நிகழ்வாகும். அந்த பேரானந்தத்தை அடைவதற்கு, நாம் அக உலகம் உள்ளே செல்ல வேண்டும்.

    அதற்கு நாடி சுத்தி பிராணாயாமம் செய்யும்போது, புற உலகத்தின் தொடர்பானது கொஞ்சம் கொஞ்சமாக துண்டித்து கொண்டு அக உலகத்தின் உள்ளே பிரவேசிக்க முயலும். இதை நாம் தொடர் முயற்சியின் மூலமாகதான் பெற முடியும்.

    சுயம்பு என்பது யாராலும் தோற்றுவிக்கப்பட்டது அல்ல. தானாகவே உருவானது என்று பொருள். அப்படித்தான் தியானம் என்பதும் தானாக உருவாகும். இதற்கு நம்முடைய கர்மவினை பதிவுகள், அவ்வளவு சீக்கரம் நம்மை அடையவிடாது. எனவே நாம் விதி என்கின்ற கர்மாவை மதி என்கின்ற புத்தி மூலமாக தொடர் முயற்சி செய்தால் தானாக உருவாகும்.

    இதற்கு இந்த புலன்களை கடக்க வேண்டும். இந்த புலன்களை கள்ள புலன்கள் என்று கூறுகிறார்கள். காரணம் என்னவென்றால், இது கர்ம வினை பதிவுகள்படி விதியை நிறைவேற்றுவதற்கு, நம் நடைமுறை வாழ்க்கையில் காரண, காரியங்களை உருவாக்கி அதன் கணக்கை முடிக்க முயற்சி செய்யும். அது வெற்றி பெறும்போது, விதிப்படி நடக்கிறது என்று நாம் நம்மை சாமாதானம் செய்து கொள்கிறோம்.

    ஆனால் இந்த நிலையை நாம் கடப்பதற்கு எப்போது அயறாது வழிப்பு நிலையில் இருந்து நம் செயல்களை செய்யும்போது, நடக்கின்ற செயல்கள் அனைத்தும் நான் செய்யவில்லை, இறைவன் செய்கிறான் என்ற மனநிலையில் நாம் இருந்தால், நாம் கர்மாவில் இருந்து தப்பிக்க முடியும் என்று மகான்கள் கூறுகிறார்கள்.

    இந்த நிலை வரவேண்டும் என்றால், மனமானது அகம் நோக்கி பிரயாணம் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும்போது நாம் இது நாள் வரை பார்க்காத ஒன்றை, உணராத ஒன்றை உணர செய்கிறது. இதை தான் ஜீவபிரம்ம ஐக்கிய முக்தி நிலை என்கிறோம்.

    அந்த நிலையில் நாம் உணர்வது மனதின் மூலமான உயிரை உணர்கிறோம். இந்த உயிரை அல்லது பிராணனை நாம் வாழும் காலத்திலே உணர வேண்டுமா அல்லது இறக்கும் காலத்திலே உணர வேண்டுமா என்பதுதான் கேள்வி. ஏனென்றால் இறக்கும் காலத்திலே உயிரை உணரும்போது அது மனம் என்கின்ற நிலையிலே, நிறைவேறாத எண்ணங்கள், செயல்கள் மற்றும் ஆசைகளோடு உயிரை விடும்போது, அந்த ஆத்மா தன் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கு மீண்டும் பிறவி எடுக்கிறது என்று வேதாந்த சித்தாந்தங்கள் கூறுகிறது.

    ஆனால், நாம் உயிருடன் வாழும்போதே, இருக்கின்ற / வாழ்கின்ற காலத்திலே தியானம் மூலமாக உயிரை உணரும்போது, அதன் மூலமான ஆத்மாவை உணர்கிறோம். அப்போது நாம் மரணத்தை வென்று, சாகா கலையை உணர்கிறோம்.

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    மனவளக்கலை பேராசிரியர்கள் கி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்


    எந்த ஒன்றை உணர்ந்தோமோ, அந்த ஒன்றுதான் எங்கும் இருக்கிறது என்கின்ற, மனம் விரிந்த உணர்வு ஏற்படும். இதன் மூலம் மனம் இந்த பிரபஞ்சம் கடந்து விரிய வைக்கிறது. அப்போது நான் என்கின்ற அதிகாரம் மற்றும் பொருள் பற்று நம்மை விட்டு விலகுகிறது.

    இந்த நிலையை நமக்கு வாழும் காலத்திலேயே பக்தி மார்க்கத்திலே நமக்கு கற்று கொடுத்தார்கள். நாம் அனைவரும், சிறு குழந்தைகளாக இருக்கும்போது, உணவு உண்பதற்கு அடம் பிடிப்போம். அப்போது நம் பாட்டியோ, அம்மாவோ, சகோதரியோ நம்மை தன் இடுப்பில் வைத்துக்கொண்டு நிலவைக் காட்டி உணவு ஊட்டினார்கள்.

    அப்போதும் நாம் அடம் பிடிக்கும்போது, நிலவிலே பார், அங்கு ஒரு பாட்டி இருக்கிறார். உனக்கு வடை செய்து கொண்டு இருக்கிறார் என்று நிலவுக்கு உள்ளே உள்ள மாயமான நிழலைக் காட்டி கதை சொன்னார்கள்.

    உடனே நாம் அடம் பிடிப்பதை நிறுத்திவிட்டு, வாயை பிளந்து கதையை கேட்போம். அப்போது நம் வாயில் உண்மை என்கின்ற உணவை ஊட்டினார்கள். கொஞ்சம் பெரியவர்கள் ஆனவுடன் பௌர்ணமி நிலவை பார்த்தால் நல்லது என்று கற்பித்தார்கள். இன்னும் கொஞ்சம் தெளிவு வரும்போது தினமும் சூரியனைப் பார்த்து வணங்க சொன்னார்கள்.

    இதற்கு காரணம் என்னவென்றால், நாம் நிலவை பார்க்கும்போது நமது மனம் ஆனது 2,30,000 மைல் தூரம் விரிகிறது. சூரியனை தினமும் வணங்கும்போது நமது மனம் ஆனது 9 கோடி மைல் தூரம் விரிகிறது. எனவே நம் மனதை இவ்வளவு தூரம் விரிக்கும் ரகசியத்தை கற்றுக் கொடுத்தார்கள்.

    இதையே வேதாந்திரி மகரிஷி அவர்கள் மனம் விரிந்த நிலையில் நல்ல எண்ணங்களும், மனம் குறுகிய நிலையிலே தீய எண்ணங்களும் உருவாகும் என்று குறிப்பிடுகிறார்கள். எனவே, மனம் விரியம்போது தான், குடும்பம், சுற்றம், ஊர், உலகம், பிரபஞ்சம் கடந்து இறைவன் வரை விரிகிறது. அப்போது நாம் பார்க்கும் அனைத்தும் இறைவனின் அம்சங்களாகவே தெரியும்.

    அந்த நிலை எது என்றால், செடி, கொடி, மரம் மற்றும் விலங்குகள், நம் உடன் பழகும் மனிதர்கள் அனைவரும் இறைவனின் மறு பிம்பமாகவே தெரியும். அப்படி தெரியும்போது, சகல ஜீவ ராசிகள் மற்றும் மனிதர்கள் இடத்தில் எந்த விதமான போட்டி, பொறாமை இல்லாமல் நம்மால் வாழ முடியும். அப்படி வாழ்பவர்கள்தான் மகான்கள், ரிஷிகன், முனிவர்கள் என்கிறோம்.

    இந்த நிலைக்கு நாம் செல்வதற்கு நாடி சுத்தி பிராணாயாமமும், தியானமும் உதவி செய்கிறது. இது தான் உடல், மனம், புலன்கள் கடந்து ஒரு பெரிய நிலைக்கு சென்று நம்மை ஆள வைக்கிறது. எனவே நாம் வாழும் காலத்திலேயே உயிரை உணர்ந்தால் மாமனிதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மற்றவர்களை மனிதர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

    மாமனிதர்கள் யார் என்றால், முதல் மூன்று யுகங்களிலே தேவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள், கலியுகத்திலே அவர்களை மாமனிதர்கள் என்று அழைக்கிறார்கள். அப்படி என்றால் இதில் வெற்றி பெறுபவர்கள் கலியுக தேவர்கள் ஆவார்கள். நாம் கலியுக தேவர்களாக மாறுவதற்கு ஒரு குருவை பிடிக்க வேண்டும். ஏனென்றால் விதியை வெல்லும் வழியை கொடுப்பர் தான் குரு ஆவார்.

    இறைவனால் கொடுக்கப்பட்ட கர்மாவை, இறைவனால் திருப்பி எடுக்க முடியாது. ஆனால் அதில் இருந்து தப்பித்து கொள்வதற்கு உண்டான வழியை கொடுப்பவர்தான் குரு ஆவார். குரு நம் அறிவு கண்களை திறக்கிறார். அதை நாம் பிடித்துக் கொண்டால் அந்த அறிவே தெய்வமாக நமக்குள்ளாக உள்ளது என்பதை நாம் உணர்நது கொள்ள முடியும்.

    இந்த விதியை நம் மூச்சுதான் கால நிர்ணயம் செய்கிறது. எனவே நாம் மூச்சை அதிகம் உபயோகம் செய்யும்போது கர்மாக வேகமாக நம்மை நோக்கி வரும். அதற்குள் முடியவில்லை என்றால், நம் கர்மாவை நம் தலைமுறையினருக்கு பங்கீடு செய்யும். மூச்சை மெதுவாக பிரயோகம் செய்யும்போது அந்த மனம் ஆனது அமைதி என்கின்ற ஆல்பா நிலைக்கு செல்கிறது. அந்த நிலையில் உருவாக வேண்டிய காரண காரியம் என்கின்ற கர்மா உருவாகாது. அதையும் மீறி கர்மா பலமாக இருக்கும்போது அது நம்மை நோக்கி வரும்போது, நாம் அமைதி நிலையில் இருப்பதால் அதை நாம் முதலில் ஏற்றுக்கொள்வோம். எனவே ஏற்றுக் கொள்ளும்போது, கர்மாவின் தாக்கம் குறையும். இதை தான் விதியை மதியால் வெல்வது என்கிறோம்.

    அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறோம். அந்த அவன் என்பது தான் அறிவு. இதைத்தான் வேதாந்திரி மகரிஷி அவர்கள் "அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை அது முக்தி" என்று கூறுகிறார். எனவே, அறிவு முழுமை பெறும் இடம் தான் முக்தி. அது தான் முழுமை பொருள். அந்த முழுமை பொருளை நோக்கிய நம் பயணத்தை தான் பக்தி மார்க்கம் , ஞான மார்க்கம் என்கின்ற வழிகளை நமக்கு கொடுத்தார்கள். வழிகளின் ஆராய்ச்சியை அடுத்த பகுதியில் ஆராய்வோம்.

    போன்: 9444234348

    • சின்னம்மை நோயாளியுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்லது அறிகுறிகளைக் கொண்டவர்கள் சுகாதாரப் பணியாளர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
    • நீங்கள் பயன்படுத்தும் துணி மற்றும் பிற பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    நமது மாநிலத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பம் காரணமாக நமது உடல் அதிக நீரிழப்பு, சுடும் வெயிலால் ஏற்படும் மயக்கம் (Sun Stroke), சரும எரிச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம். எனவே வழக்கத்தை விட அதிக நீர் குடித்தல், மோர், வெள்ளரிக்காய் தர்பூசணி போன்ற பழங்கள், தயிர், வெந்தயம் ஊற வைக்கப்பட்ட தண்ணீர் போன்ற விஷயங்களை, வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள மறக்காமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் நமது மாநிலத்தில் தொடர் வெப்ப சலனம் காரணமாக, சின்னம்மை (Chicken Pox) என்று சொல்ல கூடிய ஒருவகை அம்மை நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளத்தில், இந்த ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி வரை 7644 சின்னம்மை நோய்தொற்று பதிவாகியுள்ளன. இந்த காலப்பகுதியில் சின்னம்மை காரணமாக ஒன்பது இறப்புகளும் பதிவாகியுள்ளன. இதில் குழந்தைகளும் அடங்குவர்.

    இதை தடுக்க நமது மாநிலத்தில் சுகாதாரத்துறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். கைக்குழந்தைகள், பதின்வயதினர், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள்,ஸ்டீராய்டு மருந்துகள் உட்கொள்ளுபவர்கள்,நீண்ட கால நுரையீரல் மற்றும் தோல் நோய்களால் அவதிப்படுபவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ள நோயாளிகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு நோய் கடுமையானதாக இருக்கலாம்.

    சின்னம்மை நோயாளியுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்லது அறிகுறிகளைக் கொண்டவர்கள் சுகாதாரப் பணியாளர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

    சின்னம்மை என்பது வெரிசெல்லா ஜோஸ்டர் வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இதுவரை சின்னம்மை தொற்று இல்லாதவர்கள் அல்லது சின்னம்மை வைரஸ் தடுப்பூசி பெறாதவர்கள், இந்த வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    சின்னம்மை அல்லது ஹெர்பெஸ் ஜோஸ்டர் நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள் மூலம் நோய் பரவலாம். மேலும் இது இருமல் மற்றும் தும்மல் மற்றும் கொப்புளங்களில் இருந்து சுரக்கும் நீர்துகள்கள் மூலம் பரவுகிறது.

    அறிகுறிகள்:

    ஆரம்பத்தில் காய்ச்சல், சோர்வு, உடல்வலி, பசியின்மை, தலைவலி போன்ற அறிகுறிகளுடன் தோல் கொப்புளங்கள் தோன்றும். சிவப்பு நிற கொப்புளங்கள் முகம், வயிறு மற்றும் மார்பு, முதுகு மற்றும் மூட்டுகளில் தோன்றும். பின்னர் அவை 4 முதல் 7 நாட்களுக்குள் பரவி காய்ந்து உலர்ந்துவிடும்.

    4 நாட்களுக்கு மேல் கடுமையான காய்ச்சல், கொப்புளங்களில் கடுமையான வலி அல்லது சீழ், அதிக தூக்கம், குழப்பம், அமைதியின்மை, நடப்பதில் சிரமம், கழுத்து வலி, அடிக்கடி வாந்தி, மூச்சுத் திணறல், கடுமையான இருமல், கடுமையான வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.

    இந்த அறிகுறிகள் நிமோனியா (Pneumonia), மூளையழற்சி (Encephalitis), கல்லீரல் அழற்சி (Liver Inflammation), செப்சிஸ் (Sepsis) போன்ற தீவிர சிக்கல்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.


    நோய் பாதித்தவர்கள் எடுக்க வேண்டிய தற்காப்பு முன்னெச்சரிக்கைகள்:

    1. நன்கு காற்றோட்டமான அறையில் முழுமையாக ஓய்வெடுக்கவும்.

    2. நிறைய தண்ணீர் குடிக்கவும்.

    3. பழங்கள் சாப்பிடுங்கள்

    4. வீட்டில் உள்ள மற்றவர்களுடன் நேரடித் தொடர்பைத் தவிர்க்கவும்.

    5. நீங்கள் பயன்படுத்தும் துணி மற்றும் பிற பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் பயன்படுத்திய பொருட்களை, ப்ளீச்சிங் கரைசல் போன்ற கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யுங்கள்.

    6. அரிப்பு உள்ள இடத்தில் கலமைன் லோஷனை (Calamine Lotion) தடவவும்

    7. மென்மையான ஈரத்துணியால் உடலை அடிக்கடி துடைக்கவும். சாதாரண நீரில் குளிப்பது அரிப்புகளை குறைத்து நிவாரணம் அளிக்கும்.

    8. உங்கள் விரல் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருங்கள். நீங்கள் கொப்புளத்தை சொறிந்தால், உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும்.

    9. நீங்கள் சிக்கன் பாக்ஸ் சிகிச்சை பெற்றாலும், வழக்கமான மருந்துகளை நிறுத்த வேண்டாம்.

    இதுவரை சிக்கன் பாக்ஸ் இல்லாதவர்கள், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட 72 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் நோயைத் தவிர்க்கலாம்.

    நோய் பாதிக்காதவர்கள் எடுக்க வேண்டிய தற்காப்பு முன்னெச்சரிக்கைகள்:

    சின்னம்மை நோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த உத்தி தடுப்பூசி. வெரிசெல்லா தடுப்பூசி, பொதுவாக இரண்டு முறை கொடுக்கப்படுகிறது. வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. முதல் டோஸ் 12-15 மாத வயதில் பரிந்துரைக்கப்படுகிறது, இரண்டாவது டோஸ் 4-6 ஆண்டுகளில் பரிந்துரைக்கப்படுகிறது.

    தடுப்பூசி தனிநபர்களை சிக்கன் பாக்ஸிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், கடுமையான நோய் மற்றும் நோயினால் ஏற்படும் கடும்சிக்கல்களின் வாய்ப்பைக் குறைக்கிறது.

    மேலும் நல்ல சுகாதார பழக்கங்களை கடைப்பிடிப்பது சிக்கன் பாக்ஸ் பரவுவதை தடுக்க உதவும். சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கைகளை கழுவுதல், இருமல் மற்றும் தும்மலின் போது மூக்கை கையால் மூடுவது, நோய்வாய்ப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது மற்றும் பிறருக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க அறிகுறிகள் தென்படும்போது வீட்டிலேயே இருப்பது போன்றவை முக்கியமான நோய் தடுப்பு முறைகளாகும்.

    E-Mail ID: karthikspm@gmail.com 

    • ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருந்து மீண்டவருக்கு கூட முதலில் டாக்டர் சாப்பிட சொல்வது இட்லிதான்.
    • செட்டிநாடு இட்லி, மங்களூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, குஷ்பு இட்லி, குட்டி இட்லி என்று பல வகைகள் வந்து விட்டன.

    இட்லி....

    எத்தனை வகை உணவு இருந்தாலும் மல்லிகை பூ போல் வெண்மை நிறத்தில் ஆவி பறக்க சுடசுட இரண்டு, மூன்று இட்லியை தட்டில் கொண்டு வந்து வைப்பார்கள்.

    தொட்டுக்கொள்ள சூடான சாம்பார், தேங்காய் சட்னி, எண்ணெய் கலந்த பொடி...

    சாப்பிடும் முன்பே அந்த வாசனை மூக்கில் நுழைந்து சாப்பிட தூண்டும். இட்லியை பிய்த்து சாம்பாரையும் தொட்டு சாப்பிட்டால்...

    ஆஹா... பிரமாதம்! உன்னால் மட்டும் எப்படி இப்படி செய்ய முடியுது. உன் கைப்பக்குவத்தை அடிச்சுக்கவே முடியாது என்று இளம் பெண்களின் கையை பிடித்து கணவன் பாராட்டினால் போதும்... முகம் ஜிவ்வென்று சாம்பார் போல் சிவக்கும். அதன் நடுவே இட்லி போலவே பற்கள் பளிச்சிட சிரிப்பாள். அந்த ஒரு நாள் சந்தோசத்துக்கு இந்த ஒன்று போதுமே!

    அதெப்படி நம்முடைய உணவு பழக்கத்தில் இந்த இட்லி மட்டும் முடிசூடா மன்னன் போல் காலம் காலமாக இருக்கிறது. எத்தனையோ உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டால் ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டும்.

    ஆனால் தினந்தோறும் இட்லியையே சாப்பிட்டாலும் சலிப்பு ஏற்படுவதில்லை. அதெப்படி?

    மிக எளிய உணவு, தயாரிப்பதும் எளிது. அது மட்டுமல்ல வேறு எந்த உணவை சாப்பிட்டாலும் தொண்டைக்கு கீழே சென்றதும் சண்டை நடக்கும். தொண்டைக்குள் புளித்து கொண்டு எரிச்சல் வரலாம்... வயிறு கடமுடா எனலாம். ஆனால் பூ போன்ற மிருதுவான இட்லியை சாப்பிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

    காரணம் அரிசி, உளுந்தை தவிர எண்ணெய், காரம் என்று எந்தவிதமான பொருட்களும் சேர்க்கப்படுவதில்லை. அது மட்டுமல்ல, நீராவியில் வேக வைப்பது. ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருந்து மீண்டவருக்கு கூட முதலில் டாக்டர் சாப்பிட சொல்வது இட்லிதான். இந்த உணவு மட்டும் தான் உடலுக்கும் உள்ளத்துக்கும் இதமானது... இனிமையானது.

    புழுங்கல் அரிசி 400 கிராம், உளுத்தம்பருப்பு 100 கிராம் என்ற விகிதத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இரண்டையும் தனித்தனியே ஊறவைத்து, தனித்தனியாக நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் இரண்டையும் கலந்து தேவையான அளவில் உப்பு போட்டு 3 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும். அவ்வளவுதான். இட்லி மாவு ரெடி.

    பின்னர் இட்லி கொப்பரையில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைக்க வேண்டும். சூடான, சுவையான இட்லி தயாராகி விடும். அப்புறமென்ன சாப்பிட்டு விடலாம். நம்மூர் உணவில் முக்கிய இடத்தை பிடித்து உணவின் முடிசூடா மன்னனாக இருக்கும் இட்லி பிறந்த இடம் இந்தோனேஷியா என்கிறார்கள்.

    சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாட்டை ஒரு இந்து மன்னன் ஆண்டதாகவும், அவனது ஆட்சியில்தான் இந்த உணவு அறிமுகமாகி பரவியது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

    காலப்போக்கில் இட்லியிலும் பல வகைகள் வந்து விட்டன. செட்டிநாடு இட்லி, மங்களூர் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, குஷ்பு இட்லி, குட்டி இட்லி என்று பல வகைகள் வந்து விட்டன. சாம்பாருக்குள் இட்லியை மிதக்க விட்டால் சாம்பார் இட்லி, இட்லி மீது பொடியை தூவினால் பொடி இட்லி... இப்படி ஒவ்வொரு பகுதியிலும் உணவின் அரசனாக இருக்கும் இட்லி ஒவ்வொரு பெயரில் தயாராகிறது.

    எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிப்பு தட்டாத அம்மா, மனைவி, சகோதரிகள் கைப்பக்குவத்தில் தயாராகும் இந்த இட்லியை பார்த்து பிரிட்டனை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் எட்வர்ட் ஆண்டர்சன் என்பவர் 'இந்திய உணவான இட்லி சலிப்பு மிக்கது. இதை ஏன் மக்கள் விரும்புகிறார்கள் என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று பதிவை போட கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற கதையில் நம்மூர்காரர்களும் வலைத்தளத்தில் வறுத்தெடுத்து விட்டார்கள். உடலுக்கு பாதகம் இல்லாத இட்லியை சாப்பிட்டும், கொண்டாடியும் மகிழ்வோம்.

    • ஓய்வில்லாமல் பிறப்பு முதல், நம் இறப்பு வரை வேலை செய்கிறது நம் இதயம்.
    • உணவுக் குழாய்களில் ஏற்படும் இடர்கள் நடுமார்பில் வலி ஏற்படக் காரணமாகிறது.

    இதயத்தை எப்படிப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அறிவதற்கு ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 29-ந் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் நீண்ட நாட்கள் வாழ, இதய நோயால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து விலகி இருக்க இப்பகுதி உங்களுக்கு வழிகாட்டும்.

    முதலில் நம் இதயத்தின் இயல்பு பற்றிப் புரிந்து கொள்வோமா? இதயம் ஒரு முறை துடித்து விரிவடைவதற்கு 8 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. முதல் 5 நொடிகளுக்கு விரிவடைந்து தூய்மையாக்கப் பெற்ற ரத்தத்தை நுரையீரலில் இருந்து இடப்பக்க அறைகளில் பெறுகிறது. அதே நேரத்தில் கெட்ட ரத்தம் உடலின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வலப்பக்க அறைகளில் பெறப்படுகிறது. அடுத்த 3 நொடிகளுக்கு இதயம் சுருங்கும்போது கெட்ட ரத்தம் தூய்மையாக்கப் படுவதற்கு நுரையீரலுக்கும், தூய ரத்தம் உடல் முழுவதற்கும் தமனிகள் வாயிலாக எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி ஓய்வில்லாமல் பிறப்பு முதல், நம் இறப்பு வரை வேலை செய்கிறது நம் இதயம்.

    நிறைய நோயாளிகள் இடது தோள்பட்டை வலி வந்தாலோ இடது கை வலித்தாலோ மாரடைப்பு வந்துவிட்டதோ? என்று பயப்படுகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் மார்புவலி என்பது எல்லோருக்கும் இயல்பாக ஏற்படக் கூடிய ஒன்றாகி விட்டது. மார்புவலி ஏற்படுவதற்குப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் மாரடைப்பு. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எல்லா மார்புவலியும் மாரடைப்பு வலி அல்ல. மார்பு வலி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

    இதயத்தில் ஏற்படும் பாதிப்பு.

    மன அழுத்தம் - நிறைய நேரங்களில் நம்மனத்தில் ஏற்பட்டகாயங்கள், கவலைகள், பதற்றம் மற்றும் பிற மனநலச் சிக்கல்களால் கூட இந்த மார்புவலி ஏற்படலாம். இந்த மனஅழுத்தத்தினால் பல பேருக்கு இதயம் கனப்பது போன்ற உணர்வு, இதயத்தில் அழுத்தம், மார்பில் சுருக்சுருக்கென்று ஒரு கூர்மையான வலி மற்றும் இதயத்தில் தீவிரவலி போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் மார்புவலி மார்பெலும்பின் அடிப்பகுதியில் ஏற்படும்.

    சிலசமயங்களில் நமக்கு ஏற்படும் மிகுந்தபயமே மார்பில்வலி ஏற்படக் காரணமாக அமைந்து விடுகிறது.


    ஏதாவது கனமான பொருளைத் தூக்கும்போதோ, தீவிர உடற்பயிற்சிகளைச் செய்யும்போதோகூட மார்புவலி ஏற்படலாம்.

    மாதவிடாய் நாட்களின் போது சில பெண்களுக்கு மார்பில் வலி ஏற்படலாம். மாதவிடாய் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் இது சரியாகிவிடும்.

    நுரையீரல் மற்றும் நுரையீரலைச் சுற்றி உள்ள சவ்வுகளில் ஏற்படும் இடர்களினாலும் மார்பு வலி ஏற்படலாம்.

    விலா எலும்பு மற்றும் சதைகளில் ஏற்படும் இடர்களினால் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் வலி ஏற்படுகின்றது.

    உணவுக் குழாய்களில் ஏற்படும் இடர்கள் நடுமார்பில் வலி ஏற்படக் காரணமாகிறது.

    ஆக அனைத்துமே மார்பு வலியை ஏற்படுத்தினாலும், மாரடைப்பினால் ஏற்படும் மார்புவலி சில சிறப்புத் தன்மைகளைக் கொண்டிருக்கும்.

    மாரடைப்பினால் ஏற்படும் வலி எவ்வாறு இருக்கும்?

    மாரடைப்பு என்றால், வலி, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். மேலும் வலிநீண்ட நேரம் வரை நீடிக்கும். மார்பில் தோன்றும் வலி படிப்படியாகத் தோள்பட்டை, முதுகு, கைகள், தாடை என்று பரவ ஆரம்பித்து விடும். வியர்த்துக் கொட்டுவது சிலருக்கு ஏற்படலாம், சிலருக்கு வாந்தி வரக்கூடும்.

    இவை அனைத்துமே ஒருவருக்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே உங்களுக்கு வலிகடுமையாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

    மரு.அ.வேணி

    மரு.அ.வேணி

    இதயத்தின் இயக்கம் மாறுபடும்போது பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

    1.இதயத்தை மிகவும் பாதிக்கக்கூடிய காரணிகளில் முதன்மையானது மன அழுத்தம் (Stress) ஆகும். இந்த மன அழுத்தம் கார்டிசால் மற்றும் பல வேதியியல் பொருள்களைச் சுரக்க வைக்கிறது. இது கொழுப்பை இரத்தக் குழாய்களில் படியச் செய்வதால் மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் ஏற்படுகின்றன. மேலும் இது இதயத் துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தி இதய நோய்க்கு இட்டுச் செல்கிறது. இன்று பள்ளிக் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் கூறும் சொல் மனஅழுத்தம் (Stress - Tension). இவையே இக்காலக்கட்டத்தில் மாரடைப்புக்கு முதன்மைக் காரணம்.

    2.இதயத்தைப் பாதிக்கக்கூடிய அடுத்த காரணி இரவில் அதிக நேரம் கண்விழிப்பது மற்றும் குறைந்த நேர உறக்கம்.

    3.காலம் கடந்து 10 மணிக்கு மேல் உணவருந்திவிட்டு உடனே உறங்குவது இதயத்தையும் மற்ற உடல் உறுப்புகளையும் கெடுக்கக்கூடியது.

    4.சமீபத்தில் 40 வயதில் இருப்பவர்கள் இதய நோய்களுக்கு அதிகம் ஆளாகிறார்கள். புகை பிடிப்பது இதய நோய்கள் ஏற்பட ஒரு முக்கிய காரணம். அடுத்து, இப்போது பலரும் உட்கார்ந்தே செய்யும் பணிகளில் இருக்கின்றனர். இதனால் உடல் இயங்க வாய்ப்புக் குறைந்து விடுகிறது. இதுவும் மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாகும்.

    5.கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய்.

    6.அதிக இரத்தக் கொழுப்பின் அளவு.

    7.மரபணுக் கோளறுகள்.

    8.மது மற்றும் புகை பழக்கம்.

    9.போதைப் பொருட்களுக்கு அடிமையாவது.

    10.உடல் பருமன் (Obesity).

    இவை அனைத்துமே மாரடைப்பை வருவிக்கும் மிக முதன்மையான காரணிகளில் சிலவாகும். இவற்றில் மரபணு மாற்றங்களைத் தவிர மற்றவற்றை நம்மால் தவிர்க்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    இதயத்தைப் பாதுகாப்பது எப்படி?

    "விருந்தும் மருந்தும் மூன்று நாள்" எனும் பழமொழி நாம் அனைவரும் அறிந்ததுதான். முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பலகாரம் என்பது தீபாவளி மற்றும் சிறப்பான சில விழாக்களில்தாம் கிடைக்கும். ஆனால் இப்போதோ, ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் வேண்டிய பலகாரம் கிடைக்கிறது.

    நலவாழ்வு காக்கும் இந்தியப் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடும் வழக்கம் இப்போது பொதுவாகவே குறைந்து விட்டது. மேற்கத்திய உணவுப் பழக்கம் நம்மை அடிமைப்படுத்திவிட்டது. சிறுதானியங்களின் மதிப்பை நாம் மறந்துவிட்டோம். பருப்புகளின் பலனைப் புறந்தள்ளிவிட்டோம். காய்கறிகளைச் சமைக்கச் சோம்பல் வந்துவிட்டது. மாறாக, அடிக்கடி உணவகங்களுக்குச் சென்று, எண்ணெய்யில் வறுத்த, பொரித்த, கலோரிச் சத்து மிகுந்த பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகளையும், அசைவ உணவுகளையும் மிகையாக உண்பது வாடிக்கையாகி விட்டது. ஆயத்த உணவுகளைக் குழந்தைகள், இளம் வயதினர் சாப்பிடுவதால், உடலில் கொழுப்பு அதிகமாகிறது. இதனால் இதய நோய்கள் சிறுவயதிலேயே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். முடிந்த அளவு இந்த உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது. இவற்றை வழக்கமான உணவாகச் சாப்பிடவேகூடாது.

    நம் பாரம்பரிய அரிசி வகைகள், கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற தானிய உணவுகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகளும், பழங்களும் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். நன்கு தீட்டப்பட்ட அரிசி, உப்பு, சர்க்கரை போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

    நண்பர்கள், குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது; அதிகம் சமூக ஊடகம் பயன்படுத்தாமல், அலை பேசியைப் பயன்படுத்தாமல் இருப்பது, யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் செய்வது என நம்மை நாமே அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு நாளில் இரவு வேளையில் குறைந்தது 10 மணி நேரமாவது உணவு மண்டலத்துக்கு ஓய்வு கொடுத்தால்தான், நம் இதயமும், இரத்தக் குழாய்களும் நலமாக இருக்கும். எனவே நாம் அனைவரும் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும், என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    தினமும் 30 நிமிட உடற்பயிற்சி தேவை. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    இரவில் பணி செய்பவர்களின் கவனத்திற்கு இரவில் பணி செய்பவருக்கு இதயம் தொடர்பான நோய்கள், பகலில் பணி செய்பவர்களை விட அதிகம் ஏற்படுவது தெரியவந்துள்ளது! இரவில் பணி செய்பவர்களின் இதயத்துடிப்பு 20 முதல் 25 சதவீதம் சீராக இல்லை என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

    அதே போல், இரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்ற இடர்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, வெளிச்சம் இல்லாத அறையில் 8 மணி நேரம் வரை நன்றாக உறங்க வேண்டும். மேற்கூறிய தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

    பெண்களின் கவனத்திற்கு

    இதய நலனில், பெண்கள் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வரை ஈஸ்ட்ரோஜன் இயல்பாக சுரக்கும்.

    இதனால், 45 வயது வரை இதய நோய்கள் ஏற்படுவது குறைவாக இருக்கும். ஆனால், மாதவிடாய் நின்றதும், ஆண்களுக்கு இணையாக இதய நோய் வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த வயதில், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, படபடப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

    இப்படிச் செய்வதால் நம் இதயமும் பாதுகாக்கப்படும். பிறர் இதயங்களிலும் நாம் நீண்ட நாட்கள் வாழவும் முடியும். சிந்தித்துச் செயலாற்றுங்கள்.

    • அம்பு குத்திய இடத்தில் ஒரு தீர்த்தம் உண்டாயிற்று. அதுவே பாண தீர்த்தம் என பின்னாளில் அழைக்கப்பட்டது.
    • ஆற்றங்கரையில் லட்சுமணன் கொண்டுவந்த பொருட்களைக் கொண்டு சீதை அன்றைய பிண்டப் பிரார்த்தனைக்கு செய்யவேண்டிய உபகாரங்களைச் செய்தாள்.

    கும்பகோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் ராமாயண கால நிகழ்வுகளுடன் தொடர்புடையவை. கும்பகோணத்தை சுற்றியுள்ள பல ஆலயங்களில் ராமபிரான் பாதம் பட்டிருப்பதாக தல புராணங்களில் குறிப்புகள் உள்ளன. அப்படி ராமபிரான் பாதம் பட்ட ஒரு தலம்தான் கோவிந்தபுரம். இந்த தலம் வடநாட்டில் இருக்கும் கயை தலத்துக்கு சமமான பெருமை உடையது. தட்சிண கயை என்றும் ராமர் கயை எனவும் இது அழைக்கப்படுகிறது.

    இந்த தலம் தமிழ்நாட்டிலேயே இருந்தும் அநேகமாகப் பலருக்கும் தெரிந்திராத அற்புத வரலாறு கொண்ட தலம். இந்த தலத்தின் பின்னணியில் உள்ள புராண வரலாற்றை முதலில் தெரிந்து கொள்வோம்.

    கைகேயி பெற்ற ஒரு வரத்தால் ராமபிரான் வனவாசம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. தம்பி லட்சுமணன் துணையாக வர சீதையுடன் காட்டுக்குப் போனார், ராமன். அங்கு சீதையை ராவணன் கவர்ந்து சென்றான்.

    அனுமன் துணையோடு ராமன், சீதையைக் கண்டுபிடித்து போரில் வென்றார். பிறகு விபீஷணனை இலங்கை மன்னனாக பட்டாபி ஷேகம் செய்து வைத்தார். பின்னர் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் தன் தோஷ நிவர்த்திக்காக ஒவ்வொரு தலத்திலும் சிவபூஜை செய்தார்.

    அப்போது ஒருநாள் தந்தை தசரதனுக்கு உரிய நீர்க்கடனைச் செய்ய வேண்டிய குறிப்பிட்ட நாள் வரவே, எள்ளும் நீரும் இறைத்து தர்ப்பணம் செய்யத் தீர்மானித்தார். அதற்கு ஏற்ற இடத்தைத் தேடினார். கயைப் போல் ஆறும் அட்சய வடமும் இருக்கும் ஓர் இடத்தைக் கண்டவர், அதுவே உரிய தலம் என்று தீர்மானித்தார்.

    கயையைப் போல் ஆற்றிலும் அட்சய வடத்திலும் பிண்ட தானம் செய்துவிடலாம். முக்கியமானதும் மூன்றாவது இடமுமான விஷ்ணு பாதத்தில் சேர்ப்பதற்கு உரிய இடம் இல்லையே என ராமர் எண்ணினார்.

    இதற்கிடையே வேண்டிய பொருட்களை சேகரிக்க தம்பி லட்சுமணனை அனுப்பிவிட்டு, அருகில் சிவபூஜைக்கு உரிய லிங்கம் இருக்கும் இடத்தைத் தேடிப்போனார், ராமன். ஊரின் உட்புறமாய் ஓரிடத்தில் மேற்கு நோக்கி கம்பீரமாகக் காட்சி கொடுத்த லிங்க உருவைக் கண்டு மகிழ்ந்த ராமபிரான், அவருக்கு அபிஷேகம் செய்து, அன்றைய சிவபூஜையை நடத்தினார்.

    அதன் பிறகு பிண்ட தானம் செய்ய விரும்பினார். அதற்காக நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து அன்னம் படைக்க ஏற்பாடு செய்யலாம் என்று சென்றார். வெகுதூரம் சென்றும் நீர் கிடைக்காத நிலையில் லிங்கத் திருமேனி கண்ட இடத்திற்குத் திரும்பினார்.

    அதன் தெற்குப்புறம் தன் வில்லின் துணை கொண்டு பாணத்தை எய்தார். அந்த அம்பு குத்திய இடத்தில் ஒரு தீர்த்தம் உண்டாயிற்று. அதுவே பாண தீர்த்தம் என பின்னாளில் அழைக்கப்பட்டது.

    அத்தீர்த்தத்தால் அபிஷேகமும், கொண்டு வந்த மலர்களைத் தூவி அர்ச்சனையும் செய்து வழிபட்டு சிவபூஜையை நிறைவு செய்தார். பாண தீர்த்தத்தை எடுத்து ராமன் அபிஷேகம் செய்ததால் அந்த இடத்திற்கு பாணபுரம் என்ற பெயரும். இறைவனுக்கு பாணபுரீஸ்வரர் என பெயரும் உண்டாயிற்று.

    மானிட அவதாரம் எடுத்திருந்த ராமபிரான், கயையில் விஷ்ணுபாதத்தில் பிண்டம் சமர்ப்பிப்பது போல் இங்கும் பிண்டம் சமர்ப்பிக்க அருள்புரிய வேண்டும் என்று பாண புரீஸ்வரர் சிவலிங்க வடிவை வணங்கினார். பிறகு ஆற்றங்கரை நோக்கி சீதையும் தம்பி லட்சுமணனும் பின் தொடர புறப்பட்டார்.

     

    ஆற்றங்கரையில் லட்சுமணன் கொண்டுவந்த பொருட்களைக் கொண்டு சீதை அன்றைய பிண்டப் பிரார்த்தனைக்கு செய்யவேண்டிய உபகாரங்களைச் செய்தாள். இதையடுத்து அருகில் உள்ள பல்குனி நதிக்கு சமமான ஆற்றங்கரைக்குச் சென்று அரசமரத்தடியில் ராமர் அமர்ந்தார். லட்சுமணன் சற்று தள்ளி நிற்க, சீதை உடன் இருக்க, பித்ரு வழிபாட்டை ராமர் செய்யத் தொடங்கினார். இறுதியில் பிண்டங்களை விஷ்ணு பாதத்தில் சமர்ப்பிக்க கையில் எடுத்தபோது ஒளிக்கீற்றாய் விஸ்வரூபியாய் மேல் கைகளில் தாமரை மற்றும் சக்கரம் தாங்கி, கீழ்க்கையில் பத்மம் மற்றும் கதை தாங்கி நின்ற கோலத்தில் மகாவிஷ்ணு தோன்றினார். அவர் ராமரின் முன்னோருக்கு விஷ்ணு பாதத்தில் சமர்ப்பிக்க வைக்கப்பட்டிருந்த அவிசுகளைப் பெற்றுக்கொண்டார். இதனால் ராமரின் ஆசை நிறைவேறியது. விஷ்ணுவே கதாதரனாக வந்து பெற்றுக்கொண்டதில் ராமர் பூரணமாக மகிழ்ந்தார்.

    ராமபிரான் வழிபட்ட தலமான பாணபுரம், வாணாபுரம் என்று இன்று அழைக்கப்படுகிறது. பாணபுரீஸ்வரர் ஆலயம், குடந்தைக்கு அருகில் உள்ள திருவிடைமருதூர் தலத்தின் ஈசான திசையில் அமைந்துள்ளது. கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் திருவிடை மருதூருக்கு அடுத்ததாக உள்ளது கோவிந்தபுரம். இங்கு பாண்டுரங்கன் கோவில் பிரபலமானது.

    இந்த பாண்டுரங்கன் கோவில் அடுத்த நிறுத்தம் வாணாபுரம். இங்கு மேற்கு நோக்கி கோவில் கொண்டுள்ளார் இறைவன் பாணபுரீஸ்வரர். இறைவி அபிராமி தெற்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளார். இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார்.

    மேற்கு நோக்கி நெடிதுயர்ந்த மூன்று நிலை ராஜகோபுரம், அதனை அடுத்து பெரிய வளாகத்தில் மையமாக நாயக்கர் பாணியிலான முகப்பு மண்டபம் பார்க்க மிக அழகானது செங்கல் வேலைப்பாடுகள் கொண்ட மண்டபம். ராமர் பூஜித்த இறைவன், பாணபுரீஸ்வரர் எனும் பெயர் கொண்டு அருள்புரியும் தலம். வடமேற்கில் விஸ்வலிங்கம் வாயுலிங்கம், விஸ்வநாதர், முருகன், லட்சுமி சன்னதிகள் உள்ளன. தென்மேற்கில் விநாயகர் உள்ளார்.

    இறைவன் கருவறை சுற்றி ஓர் பிரகார அமைப்பு உள்ளது. துர்க்கை, பிரம்மன், விஷ்ணு, தென்முகன் விநாயகர் ஆகியோருக்கு கோட்டங்கள் உள்ளன. தென்கிழக்கு மூலையில் பெரிய வில்வமரம் ஒன்று உள்ளது. வடகிழக்கில் பெரிய யாகசாலை மண்டபம் உள்ளது. ஒரு காலத்தில் நான்கு தேர் வீதிகள் கொண்டு இருந்த கோவில் தற்போது அமைதியாக ஒரு அக்கிரகார தெரு என்ற பெயருடன் அதிக மக்கள் வரவின்றி உள்ளது.

    தலவிருட்சம் அரசமரம். மூலவர் பாணபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக மேற்கு நோக்கி கம்பீரமாகக் காட்சி கொடுக்கிறார். சுவாமிக்கு வலப்பக்கத்தில் அம்பாள் அபிராமி என்ற பெயரோடு தனிச் சன்னதியில் தெற்கு நோக்கி, நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்கிறாள். திருக்கடவூரில் தன் ஆயுளை நீட்டித்து சிரஞ்சீவி வரமளித்த அன்னை அபிராமியையும் பெருமானையும் மார்க்கண்டேயர் இங்கு வழிபட்டார் என தலவரலாறு கூறுகிறது.

    அதேபோல் அய்யனாரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு காவல் தெய்வமாக தனிக்கோவில் கொண்டுள்ளார் என திருக்குடந்தைப் புராணம் சொல்கிறது. அம்மன் சன்னதியின் இருபுறமும் நடராஜப்பெருமான், ஆடிப்பூர அம்மன் சன்னதிகள் அமைந்துள்ளன.

    வெளிச்சுற்றில் தல விநாயகர் பஞ்சலிங்கங்கள், வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியர், கஜ லட்சுமி, பிரம்மன், திருமால், தட்சிணாமூர்த்தி, பைரவர், சூரியன், சண்டேஸ்வரர் திருமேனிகளும், ஈசான திசையில் யாகசாலையும், தென்புறத்தில் பாண தீர்த்தமும் அமைந்துள்ளது.

    பிற்காலச் சோழர் காலத்திலோ அல்லது அதற்குச் சற்று பின்போ கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் இக்கோவில், பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களிடம் முதல் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதரால் புதுப்பிக்கப் பட்டுள்ளது.

    பாத யாத்திரையாக தேச யாத்திரை செய்து வந்த போதேந்திர சுவாமிகள் இங்கு வந்து பாணபுரீஸ்வரர் மற்றும் அபிராமியை தரிசனம் செய்ததோடு இங்கேயே தன் இறுதிக்காலம் வரை தங்கி, ராம பிரான் பித்ரு காரியம் செய்து வழிபட்ட இத்தலத்தின் மற்றொரு புறமான கோவிந்தபுரத்தில் அதிஷ்டானம் (ஞானசமாதி) கொண்டுள்ளார். வீரசோழன் ஆறு ஓடும் கோவிந்த புரத்தில் விஷ்ணுபாதம் மற்றும் கதாதரன் சன்னதி அமைந்துள்ளது. இங்குள்ள விஷ்ணு பாதம் ராமரால் பூஜிக்கப்பட்டது. தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ள மகாவிஷ்ணு பக்தர்களின் முன்னோருக்கான பிண்டங்களை ஏற்று நற்பேறு அருள்கிறார். கயைப் போலவே இங்கும் அரசமரமும், அருகிலேயே பல்குனியைப் போன்ற வீரசோழனாறும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னோருக்கு உரிய தர்ப்பணம் கடன்களைச் செய்யத் தவறியோர், திதி தப்பியோர், திவசம் கொடுக்க முடியா தவர்கள், பித்ரு சாபத்திற்கு ஆளாகி உள்ளதாக கூறப்படும் ஜோதிடக்குறிப்பு உள்ளவர்கள், நாடி ஜோதிடத்தில் வரும் குறிப்புக ளின்படி இங்குள்ள கதாதரன் சன்னதியை 16 திலதீபங்கள் ஏற்றி வழிபட்டு 16 முறை வலம் வருகிறார்கள். அதனால் பித்ருதோஷம் ஏதேனும் தெரிந்தோ தெரியாமலோ இருந்தால் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.

    குறிப்பாக அவர்கள் அமாவாசை, பவுர்ணமி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து விஷ்ணுபாதத்தையும் கதாதரனையும் வணங்கிச் செல்லும் நடைமுறை உள்ளது.

    பாணபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா ஏகதினமாக தற்போது கொண்டாடப்ப டுகிறது. ஆடிப்பூரத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகை சோமவாரங்கள், கடைசி சோமவாரத்தில் 108 பூஜைகள், திருவாதிரை, பிரதோஷ மயிலாடுதுறையிலிருந்து வழிபாடு போன்றவற்றோடு, நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்களும் தினமும் இரண்டு கால பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

    இரண்டும் வெவ்வேறு கோவில்களாக இருந்தாலும் ஒன்றுக்கு ஒன்று வரலாற்றுத் தொடர்பு கொண்டவையாக உள்ளன. உங்களுக்கு வாழ்வில் எந்தக் குறை இருந்தாலும் ஒரு முறை இத்தலம் வந்து ராம பிரான் வழிபட்ட அபிரா மியம்மை உடனாய பாணபுரீஸ்வர ரையும் வழிபடுங்கள். அதோடு, தட்சிண கயா, ஸ்ரீராம கயா என்றெல்லாம் போற்றப்படுவதும் ராமபிரான் தன் தந்தைக்கு உரிய பிதுர்கடனை செய்த இடம் கண்டு, அங்கே அவரது குறை யைப் போக்க கயையில் இருந்து வந்த கதாதரனை யும் ஸ்ரீவிஷ்ணு பாதத்தையும் தரிசியுங்கள். உங்கள் வாழ்வில் உன்னதங்கள் யாவும் வரும். இது பலரும் அனுபவித்த உண்மை.

    மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கோவிந்தபுரம் அக்ரகாரம் நிறுத்தத்தில் இறங்கினால், இடப் புறம் அரை கி.மீ.தொலைவில் பாணபுரத்தில் பாணபுரீஸ்வரர் கோவி லும், வலப்புறம் அரை கி.மீ.தொலைவில் கோவிந்த புரத்தில் கதாதர நாராயணன் கோவிலும் அமைந்துள்ளது.

    இவை மட்டுமல்ல கோவிந்தபுரத்தில் பாண்டு ரங்கன் ஆலயமும் உள்ளது. பாண்டுரங்கனுக்கென தமிழகத்தில் சில கோவில்கள் இருந்தாலும், பண்டரிபுரம் போன்ற பிரமாண்ட தோற்றத்துடன் கோவிந்தபுரத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவிலும், பகவான் நாமத்தின் மகிமையாலும் கோவிந்தபுத்தில் உருவான பாண்டுரங்கன் கோவிலில் 2011 ஜூலை 15-ந் தேதி குருபூர்ணிமா அன்று பரனூர் மகாத்மா ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பகவான் நாமத்தின் பெருமையை நிலைநாட்டிய ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்ந்த புண்ணிய பூமி இது.

    729 சதுர அடி பரப்புள்ள கர்ப்பகிரகத்தில் உள்ள மேடையில் ருக்மணி சமேத பாண்டுரங்கன் காட்சி தருகிறார். பாண்டுரங்கன் சன்னதி மண்டபத்தின் கீழ் தனி அறை உள்ளது. இதில் பக்தர்களால் எழுதப்பட்ட நூறு கோடி விட்டல் நாமாவளி புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறையை சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு தினமும் கோ பூஜைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இங்கு நூறு கோடி விட்டல் நாமவளி புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    கும்பகோணம் பக்தி பயணத்தில் இதையெல்லாம் பாார்த்து தரிசிப்பது உங்களுக்கு மேன்மை தரும். புண்ணியத்தைக் கொடுக்கும். தவற விடாதீர்கள்.

    • குழந்தைகள் உடல் நலம் பெற்றபின் தன் வாழ்நாள் முழுவதும் வலக்கரத்தை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தினாள்.
    • பரமஹம்சர் சொல்லும் உவமைகள் சசிமகராஜின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

    சசிமகராஜ் என அழைக்கப்பட்ட சுவாமி ராமகிருஷ்ணானந்தர், பரமஹம்சரின் முக்கியமான சீடர்களில் ஒருவர். சென்னை ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவர்.

    ஸ்ரீராமகிருஷ்ணானந்தர் பற்றி சுவாமி ஆசுதோஷானந்தர் எழுதிய நூல் உள்பட, தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளியாகியுள்ளன. அவரது வாழ்க்கைச் சரிதம் பயின்று பின்பற்றப்பட வேண்டிய அளவு உன்னதமானது.

    சசிமகராஜுக்கு ராமகிருஷ்ணானந்தர் எனத் தீட்சா நாமம் வழங்கியவர் விவேகானந்தர்தான். பரமஹம்சர் உடல்தரித்து வாழ்ந்த காலத்தில் அவருக்குச் சேவை செய்வதிலும் பரமஹம்சர் சித்தி அடைந்தபின் அவரைச் சிந்தனை செய்வதிலும் ஆனந்தம் கொண்டு வாழ்ந்தவர் ராமகிருஷ்ணானந்தர்.

    ஸ்ரீராமகிருஷ்ணானந்தர் என்ற பெயரைத் தான் சூட்டிக்கொள்ள விரும்பினார் விவேகானந்தர். ஆனால் தன்னை விடவும் சசி மகராஜுக்கே அந்தத் திருநாமம் மிகவும் பொருந்தும் என உணர்ந்து மகிழ்ச்சியோடு அதை அவருக்குச் சூட்டினார்.

    ஓர் ஆன்மிக நெறி உலகில் தழைக்க வேண்டுமானால் தத்துவம் வழிபாடு இரண்டுமே தேவை. பரமஹம்சரின் தத்துவத்தை விவேகானந்தர் பிரபலப்படுத்தினார். பரமஹம்ச வழிபாட்டை ராமகிருஷ்ணானந்தர் நெறிப்படுத்தினார்.

    இன்று குருதேவரின் பக்தர்கள், ராமகிருஷ்ணானந்தர் வகுத்துக் கொடுத்த வழிபாட்டு நெறியில்தான் குருதேவரை வழிபடுகிறார்கள்.

    சசிமகராஜின் தந்தை ஈசுவர சந்திர சக்கரவர்த்தி மாபெரும் ஆன்மிகவாதி. மயானத்தில் ஜபம் செய்து சாதனைகள் செய்தவர்.

    ஒருநாள் அவ்வித சாதனை முடித்து இல்லம் திரும்பும்போது, நள்ளிரவு நேரத்தில் தேவியை ஓர் இளம்பெண்ணாய் தரிசித்தார்.

    யார் நீ என அவர் வியப்போடு வினவியபோது தேவி ஒரு கோவிலில் புகுந்து மறைந்துவிட்டாள். அங்கேயே அமர்ந்து தன் தியானத்தை மேலும் தொடர்ந்தார் ஈசுவர சந்திரர் என்கிறது அவரின் வரலாறு.

    சசிமகராஜின் தாய் பாவசுந்தரி தேவி. தன் இரு குழந்தைகள் நோய்வாய்ப்பட்டபோது ஒரு வேண்டுதலாக தன் வலது கரத்தை தேவிக்கென்று அர்ப்பணித்து விட்டாள்.

    குழந்தைகள் உடல் நலம் பெற்றபின் தன் வாழ்நாள் முழுவதும் வலக்கரத்தை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தினாள்.

    விதையொன்று போடச் சுரையொன்று முளைக்காதல்லவா? இப்படிப்பட்ட பெற்றோருக்குப் பிறந்த பிள்ளை குருதேவரின் தீவிர பக்தராக மாறியதில் வியப்பில்லையே?

    பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்த கேசவ சந்திர சேகரன் மூலம் பரமஹம்சரின் பெருமைகளை அறிந்த சசிமகராஜ், முதல்முறையாக தட்சிணேஸ்வரம் சென்று அங்கு வாழ்ந்த குருதேவரைச் சந்தித்தார்.

    குருதேவர் பக்தர்களின் மனத்தை ஈர்த்து வெளியே எடுத்து, அதைத் தாம் விரும்பியவாறு பிசைந்து உருமாற்றி மீண்டும் பக்தர்களின் இதயத்தில் வைத்துவிடுவார் என்று சொல்வதுண்டு.

    குருதேவரால் கவரப்பட்டவர்கள் அவரின் வாழ்நாள் அடியவர்களாக மாறிவிடுவார்கள். அப்படி மாறியவர்தான் சசிமகராஜ்.

    ஆன்மிக நெறி இளம் வயதிலேயே புகட்டப்பட வேண்டும். ஆன்மிகம் ஏதோ வயோதிகர்களுக்கானது அல்ல. அதைப் பெறும் முதல் உரிமை இளைஞர்களுக்கே உண்டு.

    `செங்கல், ஓடு இவற்றில் பெயர் சின்னம் போன்ற முத்திரைகளைப் பதித்துவிட்டால் காளவாயில் வைத்துச் சுட்டாலும் முத்திரை அழியாமல் பதிந்துவிடும்.

    ஆன்மிக வாழ்வில் சற்று முன்னேறிய பிறகே இளைஞர்கள் உலகியல் வாழ்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் அவர்கள் தடம் மாறமாட்டார்கள்` என்பார் பரமஹம்சர். அவ்விதமே இளம் வயதிலேயே ஆன்மிக நெறிக்கு வந்துவிட்டார் சசிமகராஜ்.

    பரமஹம்சர் சொல்லும் உவமைகள் சசிமகராஜின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. 

    திருப்பூர் கிருஷ்ணன்

    திருப்பூர் கிருஷ்ணன்

    `மனம் இறைவன் குடியிருக்கும் வீடு. ஒரு மன்னர் தன் ஏவலரின் வீட்டுக்கு வருவதாக இருந்தால் என்ன செய்வார்? ஏவலரின் இல்லத்தில் தன்னை வரவேற்கும் வகையிலான தகுந்த சூழல் உள்ளதா என்பதை மன்னர் அறிவார்தானே?

    எனவே அவர் தன் பணியாட்கள் சிலரை ஏவலரின் வீட்டுக்கு அனுப்பி வீட்டையும் சுற்றுப் புறங்களையும் சுத்தம் செய்ய வைப்பார்.

    அதுபோல் இறைவன் நம் இதய வீட்டுக்கு வருவதற்கு முன் சில பணியாட்களை அனுப்பி நம் இதயத்தை சுத்தப்படுத்துவார். புனிதம், அன்பு, கருணை போன்ற உணர்வுகளே அந்த வேலையாட்கள். அவர்கள் இதயத்திற்கு வந்தால் இதய வீடு தூய்மையாகிவிடும். அதன் பின்னர் இறைவன் வருவதற்கு ஏற்ற இடமாக இதயம் மாறிவிடும்`

    இப்படியெல்லாம் பரமஹம்சர் சொன்ன கருத்துகள் சசிமகராஜின் இதயத்தை ஊடுருவின. அவர் மனம் மெல்ல மெல்லத் துறவு நெறியில் புடம்போடப்பட்டது.

    ஒருநாள் கோபால் என்ற மூத்த அடியவர், சில காவித் துணிகளையும் ருத்திராட்ச மாலைகளையும் சிறந்த சன்னியாசிகளுக்குக் கொடுப்பதற்காக மூட்டையாகக் கட்டிக் கொண்டுவந்தார்.

    பரமஹம்சர் நரேந்திரர், சசிமகராஜ் உள்ளிட்ட தம் இளம் சீடர்களைக் காட்டி இவர்களை விடச் சிறந்த சன்னியாசிகள் கிடையாது. இவர்களுக்கே கொடு என்றார்.

    அப்படிப் பன்னிரண்டு பேர் துறவுக்கோலம் பூண்டனர். ஒருநாள் மாலையில் சன்னியாச தீட்சை பெறும் சடங்கொன்றையும் செய்யச் சொல்லி ஊரில் பிட்சை எடுத்துவரச் சொன்னார் பரமஹம்சர். முதலில் அவர்கள் பிட்சை பெற்றது சாரதா தேவியிடம்தான்.

    சசிமகராஜ் காவியாடை தரித்து சாரதா தேவியிடம் பிட்சை பெற்றபோது, தெய்வீக அன்னையிடம் பிட்சை பெற்றதாகவே உணர்ந்தார்.

    பரமஹம்சர் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து சசிமகராஜ் அளவற்ற வருத்தத்தில் ஆழ்ந்திருப்பது பரமஹம்சரின் உள்ளத்தைத் தொட்டது.

    `என்னுள் இருவர் உண்டு. ஒருவர் காளி. இன்னொருவர் பக்தர். நோய் வந்திருப்பது பக்தருக்குத்தான். அதனால் வருந்தாதே. என்னுள் உறையும் காளி உனக்கு என்றும் அருள்புரிவாள்!` எனச் சொல்லி சசிமகராஜைத் தேற்றினார் பரமஹம்சர்.

    குருதேவரின் ஊனுடம்பை ஆலயமாகக் கொண்டு பராசக்தியே அவருக்குள் உறைகிறாள் என்பதை சசிமகராஜ் தெளிவாகப் புரிந்து கொண்டார். அவர் குருதேவர் மேல் கொண்ட பக்தி மேலும் அதிகமாயிற்று.

    பரமஹம்சர் சித்தி அடைந்தபின் அஸ்திக் கலசத்தைக் குழிக்குள் வைத்து அதன்மீது மண் இட்டபோது குருதேவருக்கு வலிக்கும் என அலறினார் அவர். தம் வாழ்நாள் முழுவதும் குருதேவர் தன்னோடு இருப்பதாகவே உணர்ந்தவர் அவர்.

    அவர் நிகழ்த்தும் பூஜை அலாதியானது. குருதேவர் படத்திற்கு வியர்க்கக் கூடாது என விசிறியால் விசிறுவார். நள்ளிரவில் எழுந்து குருதேவருக்குக் குளிருமோ என அவர் படத்தைப் போர்வையால் மூடி வைப்பார்.

    குருதேவருக்குச் சூடான பூரி பிடிக்கும் என்பதால் பூரியை குருதேவரின் படத்திற்குச் சுடச்சுட நிவேதனம் செய்வார். சில நேரங்களில் அடுப்பை பூஜை அறைக்கே கொண்டு சென்று பூரி சுட்டு நிவேதிப்பார்.

    ஒருமுறை இவர் தலைமையில் பாலகங்காதர திலகர் சொற்பொழிவு செய்திருக்கிறார். இவரால் திலகர் கவரப்பட்டிருக்கிறார்.

    வ.உ.சி. இவரிடம் உரையாடி ஆன்மிகத் தத்துவங்களில் தெளிவு பெற்றிருக்கிறார். தொடக்கத்தில் நாத்திகராக இருந்த வங்க எழுத்தாளர் சரத் சந்திரர் ஆத்திகரானது இவருடைய பேச்சின் தாக்கத்தினால் தான்.

    கையைக் கன்னத்தில் வைத்துக்கொண்டு அமராதே... கவலை தோய்ந்த மனத்தின் அறிகுறி அது, காலை ஆட்டிக் கொண்டிருக்காதே.. மனச்சஞ்சலத்தின் அறிகுறி அது` என்றெல்லாம் எடுத்துச் சொல்லித் தம் அன்பர்களுக்கு அவர் வழிகாட்டுவார்.

    விவேகானந்தர் மேல் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். தாம் ஒருமுறை எர்ணாகுளம் சென்றபோது, எர்ணாகுளத்தில் விவேகானந்தர் தங்கியிருந்த இடம் எது என விசாரித்தறிந்து அந்த இடத்தை விழுந்து வணங்கினார்.

    விவேகானந்தர் சித்தி அடையும் முன்னரே அவர் சித்தி அடையப் போவதைச் சென்னையில் இருந்தவாறே அறிந்துகொண்டார்.

    விவேகானந்தர் உடலை உமிழ்நீரைத் துப்புவதுபோலத் துப்பிய காட்சியைத் தாம் தியானத்தில் கண்டதாகத் தம் அன்பர்களிடம் குறிப்பிட்டார். அவர் சொன்னவாறே பின்னர் விவேகானந்தர் சித்தி அடைந்த செய்தி சென்னைக்கு வந்துசேர்ந்தது.

    சாரதா தேவி சென்னை வந்தபோது ரயில் நிலையத்திற்குக் காரில் சென்றார். கார் வெயிலால் சூடாகவே, துணியை நனைத்துப் பிழிந்து சாரதாதேவி அமர இருந்த இருக்கையைத் துடைத்து வைத்தார்.

    சென்னையில் வசித்த சசிமகராஜ் நோய் வாய்ப்பட்டார். சிகிச்சைக்காகக் கொல்கத்தா சென்றார். சிகிச்சை நடைபெற்றது. ஆனால் பயன் கிட்டவில்லை.

    ஒருநாள் பரமஹம்சரும் விவேகானந்தரும் அன்னையும் வந்துள்ளதாகக் கூறி அவர்கள் அமர்வதற்குப் பாயை விரிக்கச் சொன்னார்.

    சிறிதுநேரம் கழித்து அவர்கள் சென்றுவிட்டதாகக் கூறி பாயைச் சுருட்டிவைக்கச் சொன்னார். மூன்று மணிநேரம் சமாதியில் ஆழ்ந்தார். பின் அவர் உயிர் பிரிந்தது.

    சென்னை ராமகிருஷ்ண மடத்தை நிறுவிய சசிமகராஜ், சென்னை விவேகானந்தர் கல்லூரியின் அருகே இயங்கும் மாணவர் இல்லத்தையும் நிறுவினார். தாய் தந்தையற்ற குழந்தைகளுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்தார்.

    பிரபல தமிழ் எழுத்தாளர் காலஞ்சென்ற ஆர்.சூடாமணி, மாணவர் இல்லத்தின் பணிகளால் ஈர்க்கப்பட்டு அந்நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய் நன்கொடையாக உயில் எழுதி வைத்தார்.

    பல்லாண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிவரும் ராமகிருஷ்ண மடத்தின் நூல் வெளியீட்டுத் துறையைத் தொடங்கி வைத்தவரும் ராமகிருஷ்ணானந்தர்தான்.

    அவரை யாராவது புகழ்ந்தால் அவருக்குப் பிடிக்காது.

    `பேனாவுக்கு உயிர் இருப்பதாக வைத்துக் கொள். அது நான் நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதியிருக்கிறேன் என்று கூறக் கூடும். கடிதங்களை எழுதியது பேனா அல்ல, அதை வைத்திருப்பவன். நாம் இறைவன் கையில் உள்ள பேனா. அவ்வளவே!` என்பார் அவர்.

    இறைவன் கைப் பேனாதான் சசிமகராஜ். பேனா மறைந்தாலும் அதனால் எழுதப்பட்ட எழுத்துக்கள் ஒருபோதும் அழிவதில்லை.

    ராமகிருஷ்ண மடத்தின் தூய திருப்பணிகளில் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் நிறுவனரான ராமகிருஷ்ணானந்தர் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    • தொழிலில் அவர் சந்திக்க நேர்ந்த பிரச்சினைகள் ஏராளம்.
    • ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைக்க ஆரம்பித்தார்.

    உயர்ந்த தொழில்களில் ஒன்றான நெசவுத் தொழிலில் தறிகளை இயக்க ஆரம்பித்த ஒருவர் பல லட்சம் கார்களை உலகெங்குமுள்ள நகரங்களில் ஓட வைத்தார் என்றால் சற்று ஆச்சரியமாக இல்லை.

    யார் அவர்? அவர் தான் டொயோடா நிறுவனத்தை நிறுவிய கீச்சிரோ டொயோடா!

    இவர் சாதித்தவை ஏராளம்; ஆகவே தான் அடிக்கடி கூறுவார் இதை : "என்னால் இதைச் செய்ய முடியாது என்று கூறுவதற்கு முன்னால், முயற்சி செய்து தான் பாரேன்!"

    ஆம், அவர் முயற்சி செய்து பார்த்து ஒவ்வொரு புதுமையாகப் படைத்துக் கொண்டே இருந்தார். அவரைப் பற்றி அறிவது முன்னேறுவதற்கான அடிப்படை வழிகளில் ஒன்று.

    பிறப்பும் இளமையும்: ஜப்பானில் யமாகுச்சி என்ற நகரில் யோஷிட்சு என்ற சிறிய கிராமத்தில் 1894-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந் தேதி பிறந்தார் கீச்சிரோ டொயோடா.

    தந்தை சகிச்சி டொயோடா வறுமையில் இருந்ததன் காரணமாக தறி வேலையைச் செய்து கொண்டிருந்தார். தன்னால் படிக்க முடியவில்லையே என்று வருந்திய அவர் தனது புதல்வனை நன்கு படிக்க வைக்க உறுதி பூண்டார்.

    தாயார் டமி, ஸஹாரா குழந்தை கீச்சிரோ பிறந்த இரண்டாம் மாதமே குழந்தையையும் கணவனையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டார். அவர் கூறிய காரணம், " கணவர் சகிச்சி குடும்பத்தை விட தொழிலில் மிக அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்" என்பதே.

    குழந்தையை தாத்தாவும் பாட்டியுமே வளர்த்தனர்.

    முதலில் ஆரம்பப் பள்ளியில் கல்வி பயில ஆரம்பித்த டொயோடா, டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் பயின்று மெக்கானிகல் என்ஜீனியர் ஆனார். படிப்பில் முதன்மையாகவே எப்போதும் விளங்கினார் அவர்.

    1921 ஜூலையில் இருந்து 1922 பிப்ரவரி முடிய சான் பிரான்சிஸ்கோ, லண்டன் முதலான இடங்களில் நூற்புத் தொழில் பற்றியும் வீவிங் பற்றியும் நன்கு அறிந்து கொண்டார். 1922-இல் ஜப்பான் திரும்பிய அவர் டிசம்பர் மாதம் ஹடாகோ லிடா என்பவரை மணம் செய்து கொண்டார்.


    அந்தக் காலத்தில் வாகனத் தயாரிப்பிற்கு - குறிப்பாக கார்களைத் தயாரிப்பதற்கு - ஒரு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை உணர்ந்த அவர் தனது தந்தையாரிடம் இந்த தறியில் ஈடுபடுவதை மாற்றி கார் தயாரிப்பில் கவனம் செலுத்தலாமே என்று கூறினார்.

    தந்தை தந்த ஊக்கம்: அவரது தந்தையாரும் தனது மகனின் விருப்பத்தை ஆமோதிக்க, 1937-இல் டொயோடோ மோட்டார் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை அவர் நிறுவினார்.

    கார்களைத் தயாரிப்பதில் அவர் ஈடுபட்டார். முதலில் AA என்ற மாடல் காரை அவர் தயாரித்து அறிமுகப்படுத்தினார்.

    கிடுகிடுவென அவரது நிறுவனம் உயர்ந்தது. கார்களின் தேவை உலகெங்கும் அதிகமாகும் என்ற அவரது கணிப்பு சரியானது என்பதை பின்னால் எடுக்கப்பட்ட புள்ளி விவரக்கணக்குகள் உறுதி செய்தன. ஜப்பானில் உற்பத்தியான வாகனங்களின் எண்ணிக்கை 1955-ல் 70000 என்ற எண்ணிக்கையில் இருந்தது. அது 1980-ல் 114லட்சம் என்ற எண்ணிக்கை அளவு உயர்ந்தது.

    1980-ல் ஜப்பானிய உற்பத்தியானது அமெரிக்க உற்பத்தியை விட அதிகமானது!

    டொயோடோ என்ற பெயரை அவர் ஜப்பானிய எழுத்து முறையில் ஒன்றான கடகணா என்ற முறையில் எழுதும்படி அமைத்தார். ஏனெனில் அந்த முறைப்படி எட்டு கோடுகளால் அது எழுதப்படும்! எட்டுக் கோடுகள் என்பது அதிர்ஷ்டத்திற்குரிய ஒன்றாகக் கருதப்பட்டது. இப்படி உருவானது தான் டொயோடா என்ற பெயர்.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    இரண்டாம் உலக மகாயுத்தம் ஆரம்பிக்கவே கார்களின் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்திய டொயோடோ ராணுவத்திற்காக லாரிகளையும் ராணுவ வாகனங்களையும் தயாரிக்க ஆரம்பித்தார்.

    தொழிலில் ஈடுபாடு: தனது தொழிலில் விசேஷ அக்கறை கொண்டார் அவர். மேஜையில் முதலாளியாக அமர்ந்திராமல் தொழிலகத்தில் தொழிலாளர்களோடு சேர்ந்து பழகி தொழிலில் உள்ள கஷ்டங்களை அறிந்து அவற்றை நீக்கும் வழிகளை மேற்கொள்ளலானார் அவர்.

    தொழிலில் அவர் சந்திக்க நேர்ந்த பிரச்சினைகள் ஏராளம். அனைத்தையும் அவர் எதிர் கொண்டு சமாளித்தார்.

    நிர்வாகத்தைத் திறம்படச் செய்வதில் முனைந்த அவர் தனது தொழிலகத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிற்குமான வேலையைத் துல்லியமாக நிர்ணயித்தார்.

    ஒவ்வொரு நாளும் வங்கிக்கு தானே நேரில் சென்று நிதி பற்றிய அறிக்கையைப் பெறுவது வழக்கம்.

    பின்னர் மாஸ் புரடக்ஷன் என்னும் பெரும் அளவிலான உற்பத்திக்கு வழி கோலினார்.

    லீன் மானுபாக்சரிங்: இதற்காக புதிய உத்தியான லீன் மானுபாக்சரிங் என்னும் ஒடுங்கு நிலை உற்பத்தியை அவர் மேற்கொண்டார்.

    இந்த வழி புதிய வழி– 'டொயோடா வழி' என்றே உலகினரால் போற்றப்பட்டது.

    வாடிக்கையாளரின் தேவையை சரியாக அறிவது, அவருக்கு அவர் கேட்டபடி தயாரிப்பை சரியான நேரத்தில் விநியோகிப்பது, இதற்காக உற்பத்தியை குறுகிய காலத்தில் திறனுடன் செய்வது இது தான் லீன் மானுபாக்சரிங் வழி.

    முடா, முரா, முரி: இதற்காக தவிர்க்க வேண்டியவை மூன்று. முடா, முரா, முரி.

    அது என்ன முடா, முரா, முரி? ஜப்பானிய வார்த்தைகளான இவை ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை.

    இந்த மூன்று வார்த்தைகளுக்கான அர்த்தம் என்ன?

    முடா- கழிவு;, முரா - சமமற்ற தன்மை அல்லது உரிய தரத்துடன் இல்லாமலிருப்பது, ; முரி - அதிகச் சுமை – இது தான் இவற்றிற்கான அர்த்தம்.

    இந்த மூன்றும் தவிர்க்கப்பட வேண்டும்.

    முடா: ஒரு தயாரிப்பில் அதன் மதிப்பைக் கூட்டாத எந்த ஒரு செயலும் முடா தான்! பொருளுக்கான தேவை சந்தையில் இல்லை என்றால் அதை உற்பத்தி செய்து என்ன பிரயோஜனம்? மூலப் பொருள்களை அதிகமாக வாங்கி இருப்பு வைப்பது தேவையற்ற ஒன்று. பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து உரிய முறைப்படி இருக்கிறதா?

    இவை எல்லாம் முடா – தவிர்க்கப்பட வேண்டியவை.

    முரா: அடுத்து முடாவுடன் கூடவே பார்க்க வேண்டியது முரா!

    தயாரிப்பு சரியான தரத்துடன் இருக்கிறதா? எப்படியாவது விற்பனை செய்வது என்பதல்ல நோக்கம். வாடிக்கையாளர் தாமே முன் வந்து வாங்க வேண்டும். ஆகவே சமமற்ற தன்மை எனப்படும் முராவும் தவிர்க்கப்பட வேண்டும்.

    முரி: அடுத்து முரி எனப்படும் அதிகச் சுமை! சிக்கலாக உள்ளவற்றை எல்லாம் தொழிலாளர் மீது ஏற்றி அவர்களைச் சிரமப்படுத்துவது முரி.

    அவர்களுக்குத் தேவை நல்ல பயிற்சி; அருமையான கருவிகள், சுத்தியலோ, ஸ்க்ரூ டிரைவரோ அற்புதமாக வேலை செய்ய வேண்டும்.

    ஆக மிகக் கடுமையான தர நிர்ணயத்துடன் தயாரிக்கப்பட்ட டொயோடா வழி முறையிலான கார்கள் உலகெங்கும் ஓட ஆரம்பித்தன; அனைவரையும் பிரமிக்க வைத்தன!

    ஓய்வும் மறைவும்: 1950-ம் ஆண்டு 13 ஆண்டு கால உழைப்பிற்குப் பின்னர் தனது நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற டொயோடா ஒகோமோடோ என்ற இடத்தில் தனது இல்லத்தில் அமைதியாக ஓய்வு பெற வந்தார். ஆனால் அங்கும் அவர் சும்மா இருக்கவில்லை. தனக்கென ஒரு லாபரட்டரியை அங்கு உருவாக்கினார். ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைக்க ஆரம்பித்தார்.

    ஆனால் மூளையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ஒரு நாள் கிழே விழ அதுவே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்தது. 1952-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் நாள் அவர் தனது 57-ம் வயதில் மரணமடைந்தார்.

    ''ஜப்பானிய தாமஸ் எடிஸன்'' என்று போற்றப்பட்ட அவரது மறைவிற்கு அனைவரும் வருந்தினர்.

    இன்றைய வளர்ச்சி: இன்று டொயோடா என்றால் நம்பிக்கைக்குரிய திறனுள்ள வாகனம் என்று உலக அளவில் பெயர் எடுத்துள்ளது. 20 வருட காலம் நீடித்து உழைக்கும் என்று வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

    என்ன தான் கார் தயாரிப்பில் உலக அளவில் பெயரைப் பெற்று முன்னனியில் இருந்தாலும் டொயோடோ என்னும் தனது ஆரம்ப கால நெசவுத் தொழிலையோ தானியங்கித் தறிகள் தயாரிப்பையோ இன்னும் விடவில்லை. மின்னியங்கி தையல் மெஷின்களை அது தயாரித்து இப்போது உலகெங்கும் விநியோகித்து வருகிறது.

    2023-ல் டொயோடாவின் பணியாளர்களின் எண்ணிக்கை 3,75,275, 2022-ல் டொயோடாவின் உற்பத்தி எண்ணிக்கை 10.61 மில்லியன் (106.1 லட்சம்) என்ற பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையாகும்.

    வெற்றிக்குக் காரணம்! டொயோடாவின் வெற்றிக்குக் காரணம் தொடர்ந்து புதிய உத்திகளை அவர் கையாண்டது தான்!

    தொடர்ந்து முன்னேற்றங்களை மேம்பாடுகளைச் செய்து கொண்டே இருக்கும் ஜப்பானிய உத்திக்குப் பெயர் கைஸன். இதை அவர் கையாண்டார்; வெற்றி பெற்றார்.

    ஒரு முறை அவர் கூறினார் இப்படி: "திருடர்கள் எங்களது வடிவமைப்புகளையும் திட்டங்களையும் பின்பற்றி தறிகளை அமைக்கலாம். ஆனால் நாங்கள் ஒவ்வொரு நாளும் புதுப் புது வழிமுறைகளைக் கையாண்டு எங்கள் தறிகளை புது மாதிரியாக மாற்றி முன்னேற்றிக் கொண்டிருக்கிறோம். அவர்களால் எங்களது ஒரிஜினலில் நாங்கள் பட்ட தோல்விகளைத் தெரிந்து கொள்ள முடியாது. ஆகவே எங்களுக்குக் கவலையே இல்லை. நாங்கள் முன்னேற்றங்களை உருவாக்கி முன்னேறிக் கொண்டே இருப்போம்."

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    ×