என் மலர்
நீங்கள் தேடியது "டெங்கு மரணம்"
- கொசு பெருகும் போது கொசுவால் பரவும் எல்லா நோய்களும் அதிகமாகும்.
- டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவரை கொசு கடிக்கும் போது கொசுவுக்குள், வைரஸ் செல்கிறது.
"கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா!"
என்ற நகைச்சுவையை எல்லோரும் கேட்டு இருப்பீர்கள்.
இப்போது இருக்கும் இந்த பருவநிலை, வெயிலும் மழையுமாக, கொசுவுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.
கொசு பெருகும் போது கொசுவால் பரவும் எல்லா நோய்களும் அதிகமாகும். 1897வது வருடம் டாக்டர் ரோனால்ட் ராஸ் என்பவர் தான் மலேரியா நோய் கொசுவால் தான் பரவுகிறது, கொசுவை ஒழித்தால் மலேரியா நோயை கட்டுப்படுத்தலாம் என்பதை கண்டுபிடித்தார். அதைத்தொடர்ந்து கொசுவால் பரவும் மற்ற நோய்கள் டெங்கு, சிக்கன் குனியா, யானைக்கால் நோய், எல்லோ ஃபீவர், ஜிக்கா போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. டெங்கு காய்ச்சல் எப்படி ஒருவருக்கு வந்தது என்பதை கீழே படியுங்கள்.
மோகனாவிற்கு திடீரென தலைவலி அதிகமாக இருந்தது. அடிக்கடி வருவது தானே தலைவலி என்று தன்னுடைய வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இரவில் காய்ச்சல் அதிகமானது. தன்நிலை மறந்து முனகத் தொடங்கினார். உடல் வலி மற்றும் வயிற்று பிரட்டல், வாந்தி. எதுவும் சாப்பிட முடியவில்லை. காய்ச்சல் மாத்திரை எடுத்தால் சரியாகிவிடும் என்று மாத்திரையை போட்டுக் கொண்டார். அன்று இரவு காய்ச்சல் கடுமையானது. உடல் வலி மிக அதிகம். எழும்பவே முடியவில்லை. கண்களை திறக்க முடியாத அளவுக்கு கண்ணுக்கு பின்னே கடும் வலி. அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். மூன்று நாட்கள் கழித்த பின் பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதியானது.

ஜெயஸ்ரீ சர்மா
அதே நேரத்தில் ரத்த தட்டுகளும் குறைய ஆரம்பித்தன. வயிற்றில் ஸ்கேன் செய்ததில் வயிற்றில், நெஞ்சுக்கூட்டில் நீர் சேர்ந்து இருந்தது மற்றும் இருதயத்தை சுற்றியும் நீர் சேர்ந்து இருந்தது. கல்லீரல் என்சைம்கள் ஆயிரத்தை கடந்திருந்தன. பொதுவாக முப்பது நாற்பது தான் இருக்கும்.
முழு உடல் பாதிப்பாக டெங்கு காய்ச்சல் பாதித்திருந்தது. ஆனால் அவருடைய அதிர்ஷ்டம் ரத்த தட்டுகள் மிகவும் குறையவில்லை. மோகனாவிற்கு டெங்குவிலிருந்து வெளியே வர இரண்டு வாரங்கள் ஆனது.
எப்படி வருகிறது?
டெங்கு ஒரு வைரஸ் காய்ச்சல். டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவரை கொசு கடிக்கும் போது கொசுவுக்குள், வைரஸ் செல்கிறது. கொசுவுக்குள் வைரஸ் பல மடங்காக பெருகிறது. இதே கொசு இன்னொரு வரை கடிக்கும் போது அவர் உடம்புக்குள் வைரஸ் எளிதாக நுழைந்து விடுகிறது. 3 -14 நாட்களுக்குள் அவருக்கு டெங்கு காய்ச்சல் உண்டாகிறது.
என்னன்னு அறிகுறிகள்?
பொதுவான அறிகுறிகள் -
கடுமையான காய்ச்சல்(104*)
தாங்க முடியாத தலைவலி
கண்களுக்கு பின்னால் வலி மூட்டு வலி, தசை வலி வாந்தி, தலைசுற்றல், சோர்வு உடல் முழுவதும் தடிப்புகள். இது எல்லாமே எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதில்லை. எந்த அளவுக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாக இருக்கும் என்பது மாறுபடும்.
மருத்துவமனையில் சேர வேண்டுமா? அல்லது வீட்டில் இருந்தே சிகிச்சை பெறலாமா?
முதல் மூன்று நாட்கள் கடும் காய்ச்சல் இருக்கும். பிறகு காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும். மிகவும் கடுமையான காய்ச்சல் இருந்தால் மருத்துவமனையில் சேரலாம். ஆனால் உண்மையில் மிகவும் பிரச்சினையான காலம், காய்ச்சல் குறையும் போது தான். அதாவது மூன்று நாட்களுக்கு பிறகு. ரத்த தட்டுகள் குறைய ஆரம்பிக்கும். (பிளேட்லட்ஸ்) அந்த சமயத்தில் மருத்துவமனையில் இருப்பது நல்லது.
எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது?
முதலில் நம்மைச் சுற்றியுள்ள இடங்களில் கொசு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுப்பழுக்களை கண்டுபிடிக்க. குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். கொசு புழுக்களை கண்டால் உடனே அழித்து விடுங்கள். எங்கு தண்ணீர் தேங்கி இருந்தாலும் அதில் நெளிவதை காணலாம். குடிக்கும் நீர் எனில் மூடி வையுங்கள். சங்கு பூக்களை போட்டு வைத்தாலும் கொசுப்புழுக்கள் வராது (என் பாட்டி சொல்லிக் கொடுத்தது). கொசு வலை தான் கொசுக்கடியில் இருந்து தப்பிப்பதற்கான மிகச் சிறந்த வழி.
குழந்தைகளுக்கு வந்தால் எப்படி?
நான்கு வயதான சூர்யாவுக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல். குழந்தை மருத்துவரை பார்த்து விட்டு, உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மூன்று நாட்களில் காய்ச்சல் குறைந்து, வீட்டிற்கு அனுப்பலாம் என்று முடிவு. அன்று குழந்தை அரக்கு கலரில் வாந்தி எடுத்தது. அது வயிற்றில் ரத்தம் கசிவதற்கான அறிகுறி. ரத்த பரிசோதனைகளில் டெங்கு காய்ச்சல் உறுதியானது. உடல் முழுவதும் எங்கும் ரத்த தடிப்புகள் இருந்தது. ரத்த தட்டுகள் மிகவும் குறைய ஆரம்பித்தது. ரத்தத் தட்டுகள் ஏற்றப்பட்டன. குழந்தைக்கு நீர்ச்சத்து சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு வாரத்தில் டெங்குவின் தீவிரம்குறைந்து நல்வாய்ப்பாக குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லை. குழந்தைகளுக்கு வயதானவர்களுக்கு, இணை நோய் உள்ளவர்களுக்கு டெங்கு வந்தால் மிகவும் தீவிரமாகி இறந்து போக வாய்ப்பு உண்டு. காய்ச்சல் வந்தால் இவர்களை உடனே கவனிப்பது நல்லது. கொசு வலையை பயன்படுத்துங்கள்.
மற்றவருக்கு பரவுமா?
ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு பரவாது. கொசுவினால் மட்டுமே பரவும்.
டெங்குவினால் ஏன் இறந்து போகிறார்கள்?
பெரும்பாலானவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்ற வைரஸ் காய்ச்சலை போல வந்துவிட்டு சென்று விடும். ஆனால் நூறில் ஒருவருக்கு 'டெங்கு ஷாக் சின்றோம் 'அல்லது 'டெங்கு ஹெமரேஜிக் டிசீஸ்', எனப்படும் கடும் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ரத்தம் மற்றும் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் பாதிக்கப்படுவதால் மரணம் ஏற்படுகிறது.

ஒருமுறை வந்தால் மீண்டும் வருமா?
அவரவர் உடலினுடைய எதிர்ப்பு சக்தியை பொறுத்து மீண்டும் வரலாம்.
தடுப்பூசி உண்டா?
இதுவரை தடுப்பூசி இல்லை. டெங்கு வைரஸை நேரடியாக கொல்லும் மருந்துகள் இல்லை. சப்போர்ட்டிவ் ட்ரீட்மென்ட் எனப்படும் குளுக்கோஸ் ஏற்றுவது, காய்ச்சலை குறைப்பது மற்றும் பிளேட்லெட்ஸ் அளவை கண்காணிப்பது போன்ற சிகிச்சைகள் மட்டுமே செய்கிறோம்.
நிலவேம்பு கஷாயம் பயன் தருமா? பப்பாளி இலை பயன்படுமா?
சித்த மருத்துவத்தில் நிலவேம்பு கஷாயம் பரிந்துரைக்கப்படுகிறது எல்லா வகையான வைரஸ் காய்ச்சலுக்கும். மருத்துவரின் அறிவுரையின் படி எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கும் பக்க விளைவுகள் உண்டு. பப்பாளி இலை சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து ரத்தத்தில் உள்ள பிலைட் லிஸ்ட் அளவை மிகவும் கீழே போகாமல் காப்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டது. அதிலிருந்து தயாரிக்கப்படும் சிரப் கொடுக்கப்படுகிறது.
காய்ச்சல் வந்தால் என்ன செய்யக்கூடாது?
காய்ச்சல் டெங்குவா? என்று தெரியாத வரை வலி மாத்திரைகளை எடுக்கக்கூடாது. எந்த ஒரு ஊசியும் போட்டுக் கொள்ளக் கூடாது . மருத்துவமனையில் சென்று ரத்தத்தில் ஏற்றும் ஊசிகளை மட்டுமே எடுக்கலாம். இதை எல்லோரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் . அதுபோல காய்ச்சல் அதிகமாகும் போது தண்ணீர் குடிக்காமல் இருக்க கூடாது. இப்போது தமிழ்நாட்டில் வெகுவேகமாக டெங்கு பரவி வரும் நிலையில், இதைப் பற்றி மக்கள் தெரிந்து கொண்டால்தான், நோய் பரவுதலை கட்டுப்படுத்த முடியும்.
வாட்ஸ்அப்: 8925764148
- டெங்கு வைரஸ், ஏடிஸ் (Aedes) எனும் கொசு வகை மூலம் பரவுகிறது
- குணமடைந்தவர்களுக்கு மீண்டும் இந்நோய் வந்தால் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கும்
பருவநிலை மாற்றங்களினால் பல நாடுகளில் அதிக வெப்பம் மற்றும் சீரற்ற மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இது கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமான சூழ்நிலை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அதிக வெப்பம் மற்றும் அதிக மழைப்பொழிவு தோன்றும் நாடுகளில், கொசுக்களின் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது.
டெங்கு வைரஸ், ஏடிஸ் (Aedes) எனும் கொசு வகை மூலம் பரவுகிறது.
1960களிலிருந்தே இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம், ஒவ்வொரு வருடமும் டெங்கு காய்ச்சலில் மக்களை இழந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூலையிலிருந்து செப்டம்பர் மாதம் வரை இந்த காய்ச்சலில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அந்நாட்டில் அதிகமாக இருக்கும். 2000 தொடக்கத்திலிருந்து டெங்கு பரவலும் உயிரிழப்புக்களும் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது. சமீப சில வருடங்களாக குளிர் காலங்களிலும் அந்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அந்நாட்டு பொது சுகாதார இயக்குனரகம், இவ்வருடம் ஒரு லட்சம் பேருக்கும் மேல் அங்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 1006 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் 112 பேர் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என்பதும் பிறந்த குழந்தைகளும் அதில் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு முறை டெங்கு காய்ச்சல் வந்து சிகிச்சை பெற்று குணமானவர்களுக்கு மீண்டும் இக்காய்ச்சல் வந்தால் உயிரிழக்கும் அபாயம் அதிகம் என வங்காள தேச இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
வங்காள தேசத்தில், சென்ற வருடம், ஆண்டு முழுவதிற்குமான எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சலுக்கு 281 பேர் பலியாகியிருந்தனர். இவ்வருடம் முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே உயிர் பலி ஆயிரத்தை தாண்டி விட்டது.
அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகிறது. வார்டுகளில் கொசு வலைகளுக்கு அடியில் காய்ச்சலுடன் இருக்கும் நோயாளிகளும், அவர்களுக்கு அருகே கவலையுடன் நிற்கும் உறவினர்களையும் காண்பது நாளுக்கு நாள் அதிகரிப்பதால் வங்காள தேச அரசாங்கம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீவிரமாக போராடி வருகிறது.
- 8 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
- டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் குள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு கோபுர தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மோகித்குமார் (வயது 10). ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த வாரம் மோகித்குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 8 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
சிகிச்சையில் இருந்த மோகித்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட சங்கமூர்த்திபட்டியில் சுகாதார சீர்கேடு இருப்பதாகவும் இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயமங்கலம் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். தற்போது தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி சுகாதார சீர்கேட்டை களைய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






