என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- கொசு பெருகும் போது கொசுவால் பரவும் எல்லா நோய்களும் அதிகமாகும்.
- டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவரை கொசு கடிக்கும் போது கொசுவுக்குள், வைரஸ் செல்கிறது.
"கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா!"
என்ற நகைச்சுவையை எல்லோரும் கேட்டு இருப்பீர்கள்.
இப்போது இருக்கும் இந்த பருவநிலை, வெயிலும் மழையுமாக, கொசுவுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.
கொசு பெருகும் போது கொசுவால் பரவும் எல்லா நோய்களும் அதிகமாகும். 1897வது வருடம் டாக்டர் ரோனால்ட் ராஸ் என்பவர் தான் மலேரியா நோய் கொசுவால் தான் பரவுகிறது, கொசுவை ஒழித்தால் மலேரியா நோயை கட்டுப்படுத்தலாம் என்பதை கண்டுபிடித்தார். அதைத்தொடர்ந்து கொசுவால் பரவும் மற்ற நோய்கள் டெங்கு, சிக்கன் குனியா, யானைக்கால் நோய், எல்லோ ஃபீவர், ஜிக்கா போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. டெங்கு காய்ச்சல் எப்படி ஒருவருக்கு வந்தது என்பதை கீழே படியுங்கள்.
மோகனாவிற்கு திடீரென தலைவலி அதிகமாக இருந்தது. அடிக்கடி வருவது தானே தலைவலி என்று தன்னுடைய வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இரவில் காய்ச்சல் அதிகமானது. தன்நிலை மறந்து முனகத் தொடங்கினார். உடல் வலி மற்றும் வயிற்று பிரட்டல், வாந்தி. எதுவும் சாப்பிட முடியவில்லை. காய்ச்சல் மாத்திரை எடுத்தால் சரியாகிவிடும் என்று மாத்திரையை போட்டுக் கொண்டார். அன்று இரவு காய்ச்சல் கடுமையானது. உடல் வலி மிக அதிகம். எழும்பவே முடியவில்லை. கண்களை திறக்க முடியாத அளவுக்கு கண்ணுக்கு பின்னே கடும் வலி. அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். மூன்று நாட்கள் கழித்த பின் பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதியானது.

ஜெயஸ்ரீ சர்மா
அதே நேரத்தில் ரத்த தட்டுகளும் குறைய ஆரம்பித்தன. வயிற்றில் ஸ்கேன் செய்ததில் வயிற்றில், நெஞ்சுக்கூட்டில் நீர் சேர்ந்து இருந்தது மற்றும் இருதயத்தை சுற்றியும் நீர் சேர்ந்து இருந்தது. கல்லீரல் என்சைம்கள் ஆயிரத்தை கடந்திருந்தன. பொதுவாக முப்பது நாற்பது தான் இருக்கும்.
முழு உடல் பாதிப்பாக டெங்கு காய்ச்சல் பாதித்திருந்தது. ஆனால் அவருடைய அதிர்ஷ்டம் ரத்த தட்டுகள் மிகவும் குறையவில்லை. மோகனாவிற்கு டெங்குவிலிருந்து வெளியே வர இரண்டு வாரங்கள் ஆனது.
எப்படி வருகிறது?
டெங்கு ஒரு வைரஸ் காய்ச்சல். டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவரை கொசு கடிக்கும் போது கொசுவுக்குள், வைரஸ் செல்கிறது. கொசுவுக்குள் வைரஸ் பல மடங்காக பெருகிறது. இதே கொசு இன்னொரு வரை கடிக்கும் போது அவர் உடம்புக்குள் வைரஸ் எளிதாக நுழைந்து விடுகிறது. 3 -14 நாட்களுக்குள் அவருக்கு டெங்கு காய்ச்சல் உண்டாகிறது.
என்னன்னு அறிகுறிகள்?
பொதுவான அறிகுறிகள் -
கடுமையான காய்ச்சல்(104*)
தாங்க முடியாத தலைவலி
கண்களுக்கு பின்னால் வலி மூட்டு வலி, தசை வலி வாந்தி, தலைசுற்றல், சோர்வு உடல் முழுவதும் தடிப்புகள். இது எல்லாமே எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதில்லை. எந்த அளவுக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாக இருக்கும் என்பது மாறுபடும்.
மருத்துவமனையில் சேர வேண்டுமா? அல்லது வீட்டில் இருந்தே சிகிச்சை பெறலாமா?
முதல் மூன்று நாட்கள் கடும் காய்ச்சல் இருக்கும். பிறகு காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும். மிகவும் கடுமையான காய்ச்சல் இருந்தால் மருத்துவமனையில் சேரலாம். ஆனால் உண்மையில் மிகவும் பிரச்சினையான காலம், காய்ச்சல் குறையும் போது தான். அதாவது மூன்று நாட்களுக்கு பிறகு. ரத்த தட்டுகள் குறைய ஆரம்பிக்கும். (பிளேட்லட்ஸ்) அந்த சமயத்தில் மருத்துவமனையில் இருப்பது நல்லது.
எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது?
முதலில் நம்மைச் சுற்றியுள்ள இடங்களில் கொசு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுப்பழுக்களை கண்டுபிடிக்க. குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். கொசு புழுக்களை கண்டால் உடனே அழித்து விடுங்கள். எங்கு தண்ணீர் தேங்கி இருந்தாலும் அதில் நெளிவதை காணலாம். குடிக்கும் நீர் எனில் மூடி வையுங்கள். சங்கு பூக்களை போட்டு வைத்தாலும் கொசுப்புழுக்கள் வராது (என் பாட்டி சொல்லிக் கொடுத்தது). கொசு வலை தான் கொசுக்கடியில் இருந்து தப்பிப்பதற்கான மிகச் சிறந்த வழி.
குழந்தைகளுக்கு வந்தால் எப்படி?
நான்கு வயதான சூர்யாவுக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல். குழந்தை மருத்துவரை பார்த்து விட்டு, உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மூன்று நாட்களில் காய்ச்சல் குறைந்து, வீட்டிற்கு அனுப்பலாம் என்று முடிவு. அன்று குழந்தை அரக்கு கலரில் வாந்தி எடுத்தது. அது வயிற்றில் ரத்தம் கசிவதற்கான அறிகுறி. ரத்த பரிசோதனைகளில் டெங்கு காய்ச்சல் உறுதியானது. உடல் முழுவதும் எங்கும் ரத்த தடிப்புகள் இருந்தது. ரத்த தட்டுகள் மிகவும் குறைய ஆரம்பித்தது. ரத்தத் தட்டுகள் ஏற்றப்பட்டன. குழந்தைக்கு நீர்ச்சத்து சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு வாரத்தில் டெங்குவின் தீவிரம்குறைந்து நல்வாய்ப்பாக குழந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லை. குழந்தைகளுக்கு வயதானவர்களுக்கு, இணை நோய் உள்ளவர்களுக்கு டெங்கு வந்தால் மிகவும் தீவிரமாகி இறந்து போக வாய்ப்பு உண்டு. காய்ச்சல் வந்தால் இவர்களை உடனே கவனிப்பது நல்லது. கொசு வலையை பயன்படுத்துங்கள்.
மற்றவருக்கு பரவுமா?
ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு பரவாது. கொசுவினால் மட்டுமே பரவும்.
டெங்குவினால் ஏன் இறந்து போகிறார்கள்?
பெரும்பாலானவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்ற வைரஸ் காய்ச்சலை போல வந்துவிட்டு சென்று விடும். ஆனால் நூறில் ஒருவருக்கு 'டெங்கு ஷாக் சின்றோம் 'அல்லது 'டெங்கு ஹெமரேஜிக் டிசீஸ்', எனப்படும் கடும் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ரத்தம் மற்றும் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் பாதிக்கப்படுவதால் மரணம் ஏற்படுகிறது.

ஒருமுறை வந்தால் மீண்டும் வருமா?
அவரவர் உடலினுடைய எதிர்ப்பு சக்தியை பொறுத்து மீண்டும் வரலாம்.
தடுப்பூசி உண்டா?
இதுவரை தடுப்பூசி இல்லை. டெங்கு வைரஸை நேரடியாக கொல்லும் மருந்துகள் இல்லை. சப்போர்ட்டிவ் ட்ரீட்மென்ட் எனப்படும் குளுக்கோஸ் ஏற்றுவது, காய்ச்சலை குறைப்பது மற்றும் பிளேட்லெட்ஸ் அளவை கண்காணிப்பது போன்ற சிகிச்சைகள் மட்டுமே செய்கிறோம்.
நிலவேம்பு கஷாயம் பயன் தருமா? பப்பாளி இலை பயன்படுமா?
சித்த மருத்துவத்தில் நிலவேம்பு கஷாயம் பரிந்துரைக்கப்படுகிறது எல்லா வகையான வைரஸ் காய்ச்சலுக்கும். மருத்துவரின் அறிவுரையின் படி எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கும் பக்க விளைவுகள் உண்டு. பப்பாளி இலை சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து ரத்தத்தில் உள்ள பிலைட் லிஸ்ட் அளவை மிகவும் கீழே போகாமல் காப்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டது. அதிலிருந்து தயாரிக்கப்படும் சிரப் கொடுக்கப்படுகிறது.
காய்ச்சல் வந்தால் என்ன செய்யக்கூடாது?
காய்ச்சல் டெங்குவா? என்று தெரியாத வரை வலி மாத்திரைகளை எடுக்கக்கூடாது. எந்த ஒரு ஊசியும் போட்டுக் கொள்ளக் கூடாது . மருத்துவமனையில் சென்று ரத்தத்தில் ஏற்றும் ஊசிகளை மட்டுமே எடுக்கலாம். இதை எல்லோரும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் . அதுபோல காய்ச்சல் அதிகமாகும் போது தண்ணீர் குடிக்காமல் இருக்க கூடாது. இப்போது தமிழ்நாட்டில் வெகுவேகமாக டெங்கு பரவி வரும் நிலையில், இதைப் பற்றி மக்கள் தெரிந்து கொண்டால்தான், நோய் பரவுதலை கட்டுப்படுத்த முடியும்.
வாட்ஸ்அப்: 8925764148
- ரஜினிக்கு எதிராக வில்லனாக நடிக்க மாட்டேன் என்று முத்துராமன் சொல்லி ஒதுங்கி விட்டார்.
- படப்பிடிப்பின்போது ரஜினி மிக எளிமையாக நடந்து கொண்டார்.
இது எப்படி இருக்கு? என்ற ரஜினியின் "பஞ்ச்" டயலாக் 1978-ம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களின் வாய்களில் அதிகம் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது. 16 வயதினிலே படம் ஆரம் பிக்கப்பட்ட போது இந்த டயலாக்கை ரஜினியால் சரியான உச்சரிப்புடன் சொல்ல இயலவில்லை.
16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவுக்கு உதவியாக பாக்கியராஜும் சித்ரா லட்சுமணனும் உதவி இயக்குனர்களாக இருந்தனர். அவர்களில் பாக்கியராஜ் பல தடவை "இது எப்படி இருக்கு?" என்பதை ஏற்ற இறக்கத்துடன் ரஜினிக்கு பேசிக் காட்டுவார். அதை அப்படியே "சிக்"கென்று பிடித்துக் கொண்டு ரஜினி பேசியதால் "இது எப்படி இருக்கு?" நிகரற்ற புகழைப் பெற்றது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற "செந்தூரப் பூவே.... செந்தூரப்பூவே" பாடலைப் பாடிய எஸ்.ஜானகிக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.
இதனால் ரஜினியைத் தேடி வந்த படத் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை 1978-ல் மேலும் அதிகரித்தது. 1978-ம் ஆண்டு ரஜினி நடிப்பில், சங்கர்-சலீம்-சைமன், கில்லாடி கிட்டு (கன்னடம்), அண்ண தம்முல சவால் (தெலுங்கு), ஆயிரம் ஜென்மங்கள், மாத்து தப்பித மகா (கன்னடம்), மாங்குடி மைனர், பைரவி, இளமை ஊஞ்சலாடுகிறது, சதுரங்கம், வணக்கத்துக்குரிய காதலியே, வயசு பிலி சிந்தி (தெலுங்கு), முள்ளும் மலரும், இறைவன் கொடுத்த வரம், தப்பித தானா (கன்னடம்), தப்புத் தாளங்கள், அவள் அப்படித்தான், தாய் மீது சத்தியம், என் கேள்விக்கென்ன பதில், ஜஸ்டிஸ் கோபிநாத், ப்ரியா ஆகிய 20 படங்கள் வெளியானது.
இந்த 20 படங்களில் மார்ச் மாதம் 10-ந்தேதி வெளியான "ஆயிரம் ஜென்மங்கள்", ஜூன் மாதம் 2-ந்தேதி வெளியான "பைரவி", 9-ந்தேதி வெளியான "இளமை ஊஞ்சலாடுகிறது", 30-ந்தேதி வெளியான "சதுரங்கம்", ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி வெளியான "முள்ளும் மலரும்", அக்டோபர் மாதம் 30-ந்தேதி வெளியான "தப்பு தாளங்கள்", "தாய் மீது சத்தியம்", டிசம்பர் மாதம் 16-ந்தேதி வெளியான "ஜஸ்டிஸ் கோபிநாத்", 22-ந்தேதி வெளியான "ப்ரியா" ஆகிய 9 படங்களும் ரஜினிக்கு மிகப்பெரிய புகழையும், சிறப்புகளையும் பெற்று தந்தன.
இதில் ஆயிரம் ஜென்மங்கள் படம் ரஜினி நடித்த முதல் கலர் படம் ஆகும். இந்த படத்தில் லதாவின் அண்ணனாக ரஜினி நடித்து இருந்தார். லதாவுக்கும், விஜயகுமாருக்கும் திருமணம் ஆகும். ஆனால் தற்கொலை செய்த விஜயகுமாரின் காதலி ஆவி லதா உடம்புக்குள் புகுந்துக் கொண்டு படாதபாடுப்படுத்தும். அந்த ஆவியை விரட்டும் வேடத்தில் ரஜினி நடித்து இருந்தார்.
இந்த படம் 100 நாள் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தில் இடம் பெற்ற வெண்மேகமே.... பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து வெளியான "பைரவி" படமும் ரஜினியை தமிழ் திரையுலகில் மிகவும் உச்சத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியது.
இந்த படத்தை சாண்டோ சின்னப்பா தேவர் கதை இலாகாவில் பணிபுரிந்து வந்த கதை வசன கர்த்தா கலைஞானம் தயாரித்தார். முதலில் அவருக்கு படம் தயாரிக்க நிதி உதவி செய்வதாக சாண்டோ சின்னப்ப தேவர் உறுதி அளித்து இருந்தார். ஆனால் பைரவி படத்தில் ரஜினியை கதாநாயகனாகப் போடுவதில் கலைஞானத்துக்கும், சாண்டோ சின்னப்ப தேவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

"ரஜினி இதுவரை பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அதோடு கருப்பாகவும் இருக்கிறார். அவரை நம்பி ஹீரோவாக ஏற்றுக் கொண்டு நான் எப்படி பணம் தர முடியும்? நான் பணம் தர மாட்டேன்" என்று சாண்டோ சின்னப்ப தேவர் திட்டவட்டமாக கூறி விட்டார்.
கலைஞானம் மனம் தளரவில்லை. மனைவியின் கழுத்தில் கிடந்த நகைகளை கழற்றி அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த 5 ஆயிரம் ரூபாயை கொண்டு சென்று ரஜினியிடம் அட்வான்சாக கொடுத்து கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார். பைரவி படத்தில் நீங்கள்தான் ஹீரோவாக நடிக்கிறீர்கள் என்று கலைஞானம் சொன்னபோது ரஜினி அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை.
அதைவிட ஆச்சரியம் பைரவி படம் பற்றி அறிவிப்பு வெளியானதுமே ரஜினி ஹீரோ என்றதும் பலரும் போட்டி போட்டுக் கொண்டு விநியோக உரிமையை வாங்கியதுதான். இதன் மூலம் கலைஞானத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் முத்துராமனை நடிக்க வைக்க முயற்சி நடந்தது.
ஆனால் ரஜினிக்கு எதிராக வில்லனாக நடிக்க மாட்டேன் என்று முத்துராமன் சொல்லி ஒதுங்கி விட்டார். பல நடிகர்கள் ஆய்வுக்கு பிறகு ஸ்ரீகாந்தை வில்லனாக நடிக்க வைத்தனர். அதன் பிறகு கதாநாயகியாக யாரை நடிக்க வைப்பது என்று கலைஞானம் நீண்ட ஆலோசனை நடத்தினார்.
ஸ்ரீபிரியாவை கதாநாயகியாக நடிக்க வைக்க தேர்வு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டது. கற்பகம் ஸ்டூடியோவில் பைரவி படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டன. கதாநாயகன் வேடம் முதல் முதலாக கிடைத்ததால் ரஜினி தனக்குள் புதைந்து கிடந்த அத்தனை திறமைகளையும் வெளியில் கொட்டி அந்த படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அவர் மிகவும் சிரத்தை எடுத்து நடித்தது அனைவருக்கும் கண்கூடாக தெரிய வந்தது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பைரவி படத்தின் ஒவ்வொரு காட்சியின் போதும் ரஜினியிடம் இருந்து ஒரு நெருப்பு பொறி வெளியில் வந்து கொண்டே இருந்தது.
அந்த படத்தில் இடம் பெற்ற "நண்டூருது நரி யூருது...." பாடல் அண்ணன்-தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டது. ரஜினியை மிகவும் நெகிழ வைத்த அந்த பாடல் சூப்பர் ஹிட் பாடலாக மாறியதும் குறிப்பிடத்தக்கது. கண்ணதாசன் எழுதி டி.எம்.சவுந்தரராஜன் பாடி இளையராஜா இசையமைத்த அந்த பாடலுக்கு நடித்த போது ரஜினி உணர்ச்சிப் பிழம்பாக திகழ்ந்தார்.
படப்பிடிப்பின்போது ரஜினி மிக எளிமையாக நடந்து கொண்டார். சிறிது நேரம் கிடைத்தாலும் மரத்தடி அல்லது கிழிந்த சோபா அல்லது வெறும் தரையில் படுத்து தூங்கி விடுவார். சராசரி மனிதனாக நடந்து கொண்ட அவர் கதாநாயகன் என்ற பந்தாவை வெளிப்படுத்தவே இல்லை. இப்போது கதாநாயகர்கள் கேட்பது போல எந்த ஒரு வசதியையும் அவர் கலைஞானத்திடம் கேட்கவில்லை.
பைரவி படத்தை கஷ்டப்பட்டு தயாரிக்கிறார்கள் என்பதை உணர்ந்து ரஜினி அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார். படப்பிடிப்பு ஊழியர்கள் எந்த உணவு சாப்பிடுகிறார்களோ அதையேதான் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். தான் சம்பந்தப்பட்ட காட்சி படமாக்காத நேரங்களில் ஸ்டூடியோவில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து எதையோ யோசித்துக் கொண்டே இருப்பார். அவர் மனதுக்குள் ராகவேந்திரரிடம் பேசிக் கொள்வார்என்பது யாருக்கும் தெரியாது.
படப்பிடிப்புக்கு வரும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊழியர்கள் யாரிடமும் அவர் தேவையில்லாமல் பேசவே மாட்டார். அமைதியாக உட்கார்ந்து கொண்டே இருப்பார். யாரிடம் பேசினாலும் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேச மாட்டார்.
அதே சமயத்தில் அவரது காட்சியை படமாக்க அழைத்து விட்டால் மின்னல் போல வந்து சுறுசுறுப்பாகி விடுவார். இது கலைஞானத்துக்கும், மற்றவர்களுக்கும் மிகப்பெரிய உதவியாக இருந்தது. மளமளவென பைரவி படத்தின் காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டன.
படப்பிடிப்பு தகவல்கள் தினத்தந்தி நாளிதழில் அடிக்கடி வெளியானதால் தமிழக ரசிகர்கள் மத்தியில் பைரவி படம் பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உருவானது. அனைத்து ஏரியாக்களிலும் விநியோக உரிமை விற்று தீர்ந்தது. சென்னை நகர உரிமையை இஸ்லாமியர் ஒருவர் வாங்கி இருந்தார்.
அவருக்கு கூடுதலாக பணம் கொடுத்து அவரிடம் இருந்த பைரவி பட விநியோக உரிமையை கலைப்புலி தாணு வாங்கிக் கொண்டார். படம் வெளியானதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்தனர். பைரவி படம் அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் விருந்து படைத்தது.
பைரவி படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை பெற்று இருந்த கலைப்புலி தாணு அந்த படத்துக்காக செய்த விளம்பரம் ரஜினி வாழ்வில் அதிரடியாக இமாலயமாற்றத்தை ஏற்படுத்தியது. சென்னை அண்ணா சாலையில் பிளாசா தியேட்டரில் திரையிடப்பட்ட பைரவி படத்துக்காக அவர் அங்கு 35 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து இருந்தார். இதைப் பார்த்ததும் ரஜினி நெகிழ்ந்துப் போனார்.
சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்த காலங்களில் அதே அண்ணாசாலையில் அவர் நண்பர்களுடன் நடந்து செல்லும் போது, "எனக்கும் இப்படி கட்-அவுட் வைப்பார்களா?" என்று ரஜினி கேட்டது உண்டு. அந்த கனவை நனவாக்கும் வகையில் கலைப்புலி தாணு வைத்திருந்த கட்-அவுட் அவரை மெய் சிலிர்க்க வைத்தது.
எதையும் வித்தியாசமாக செய்யும் கலைப்புலி தாணு அந்த 35 அடி உயர கட்-அவுட்டோடு நின்று விடவில்லை. பைரவி பட போஸ்டர்களில் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பைரவி" என்று போட்டு விளம்பரம் செய்து இருந்தார். இதுபற்றி தாணு கூறுகையில், "ரஜினியின் நடிப்பு ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகவே நான் பைரவி படத்தின் விநியோக உரிமையை போராடி வாங்கினேன். அதோடு ரசிகர்களை கவரவே ரஜினி பெயருக்கு முன்பு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சேர்த்தோம்" என்றார்.
அன்று முதல் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழர்களும் ரஜினியை "சூப்பர் ஸ்டார்" என்று அழைக்கத் தொடங்கினார்கள். அதுவரை அதாவது 1977-ல் ஸ்டைல் மன்னன் என்று அழைக்கப்பட்டு வந்த ரஜினி மிக குறுகிய காலத்துக்குள் சூப்பர் ஸ்டார் என்ற இடத்துக்கு உயர்ந்தார். தனக்கு சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதை அறிந்ததும் ரஜினி முதலில் மகிழ்ச்சி அடைந்தார். கலைப்புலி தாணுவின் கையை பிடித்துக் கொண்டு, "பென்டாஸ்டிக் போஸ்டர் பியூட்டிபுல் பப்ளிசிட்டி" என்று நெகிழ்ந்தார்.
ஆனால் அடுத்த நாளே அவருக்குள் திடீர் பதட்டம் ஏற்பட்டது. சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம். அதை இனி போடாதீர்கள். நிறுத்தி விடுங்கள் என்று ரஜினி அவசரம் அவசரமாக கலைப்புலி தாணுவிடமும் மற்ற விநியோகஸ்தர்களிடமும் கேட்டுக் கொண்டார்.
"சூப்பர் ஸ்டார்" பட்டத்தை வேண்டாம் என்று ரஜினி எதற்காக சொன்னார் என்பதை நாளை பார்க்கலாம்.
- உணவிலும் நல்ல பாக்டீரியாவான புரோபயாடிக் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்போது தேவையில்லாத கிருமி தொற்றுக்கள் வராது.
நமது உடலின் ஆரோக்கியத்தில் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை நமது உடலில் நோய்களை ஏற்படுத்தக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி அழிக்கின்றன. இதன் மூலம் நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகின்றன. இதேபோல் பெண்களின் கர்ப்பப்பைக்குள் நுழைய முயலும் தொற்றுக்களை தடுக்கும் முக்கியமான வேலைகளையும் இந்த நல்ல பாக்டீரியாக்கள் செய்கின்றன.
ஆனால் நாம் சாப்பிடும் ஆன்டிபயாடிக் மருந்து அந்த நல்ல பாக்டீரியாவை அழித்துவிடுகிறது. எனவே எந்த ஒரு ஆன்டிபயாடிக்கும் இந்த புரோபயாடிக் பாக்டீரியாவை அழித்து விடாமல் இருக்க, நாம் ஒரு புரோபயாடிக் மருந்து எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம்.
மாதவிடாய் காலத்தில் நல்ல பாக்டீரியா பாதிக்கப்படலாம்:
பெண்களின் ஒவ்வொரு வாழ்க்கை தரத்திலும், குறிப்பாக மாதவிடாய் வருகிற காலகட்டத்தில் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா பாதிக்கப்படும். எனவே அந்த காலகட்டத்தில் புரோபயாடிக் பாக்டீரியா அழிந்துவிடாமல் நாம் பாதுகாக்க வேண்டும். அதாவது பெண்களுக்கு மாதவிடாய் வருகிற காலகட்டத்தில் அவர்களின் பி.எச். அளவு மாறுபடும். அதனால்தான் இந்த புரோபயாட்டிக் எனப்படும் நல்ல பாக்டீரியா பாதிக்கப்படும்.
மாதவிடாய் வருகிற காலத்தில் வரும் ரத்தமானது காரத்தன்மை (ஆல்கலைன்) கொண்ட பி.எச். ஆகும். இது அந்த குழாய் வழியாக வரும்போது அதனுடைய இயற்கையான அமிலத்தன்மை கொண்ட பி.எச். தன்மையில் இருந்து மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் வெள்ளைப்படுதல் ஏற்படும்போது பாதிக்கப்படலாம். வெள்ளைப்படுதல் என்பது ஒரு ஆல்கலைன் சுரப்பாகும். அது கர்ப்பப்பையில் இருந்து வரும். அதுவும் இந்த புரோபயாடிக்கை பழுதாக்கும்.
பல நேரங்களில் கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்திலும் இந்த யோனிப்பகுதியில் சீரான புரோபயாடிக் வருவதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும். இந்த வகையில் புரோபயாட்டிக் பழுதாவது, மாதவிலக்கு வரும்போது வரலாம். எனவே இந்த புரோபயாட்டிக் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் தான் பல நேரங்களில் ஆன்டிபயாடிக் எடுக்கும் போது கூடவே லேக்டோபேசிலிஸ் (நல்ல பாக்டீரியா) மருந்து கொடுக்கிறோம். பல நேரங்களில் வயிற்றுப்போக்கு வந்தால் முதலில் கொடுப்பதே லாக்டோபேசிலிஸ் கொண்ட மருந்து தான். இவை உங்களுடைய நல்ல பாக்டீரியாவை மேம்படுத்தும் போது கிருமி தொற்றுக்கள் வராமல் தடுக்கவும் முடியும். ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கவும் முடியும்.
எளிதாக கிடைக்கும் நல்ல பாக்டீரியா நிறைந்த உணவு தயிர்:
சரி டாக்டர், இந்த புரோபயாடிக் நல்ல பாக்டீரியா என்பது எவ்வளவு காலமாக எல்லோருக்கும் தெரியும் என்று பலரும் கேட்பதுண்டு. கிட்டத்தட்ட 1945-ம் ஆண்டில் இருந்தே இந்த புரோபயாடிக் பாக்டீரியா பற்றி நிறைய விஷயங்கள் கண்டுபிடித்தார்கள்.
ஏனென்றால் பாக்டீரியாவை முதலில் மைக்ரோஸ்கோப்பில் பார்த்து கண்டுபிடித்த உடனேயே காற்று, தண்ணீரில் இருக்கிற எல்லா பாக்டீரியாக்களை பற்றியும் நிறைய ஆய்வுகள் கண்டுபிடித்தார்கள். அதிலும் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தி பலவிதமான நல்ல பாக்டீரியா நமது உடலில் இருப்பதையும் உறுதி செய்தனர்.
அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாவான லாக்டோபேசிலிசை கண்டுபிடித்தார்கள். புரோ என்றாலே நமது உடலுக்கு சாதகமானது என்று அர்த்தம். அதனால்தான் புரோபயாடிக் கண்டிப்பாக உணவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ஆன்டிபயாடிக் எடுக்கும்போது கூடுதலாக புரோபயாடிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு மிகவும் எளிதாக கிடைக்கும் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா நிறைந்த உணவு தயிர் ஆகும். தயிர் மற்றும் மோரில் நிறைய புரோபயாடிக் இருக்கிறது. புளிக்க வைத்த அல்லது நொதிக்க வைத்த அனைத்து உணவுப்பொருட்களிலும் புரோபயாடிக் இருக்கிறது. புளிக்க வைத்த பொருட்கள் என்றால் பாலை தயிராக மாற்றுகிறோம்.
இந்த தயிரில் இருப்பதுதான் சிறந்த புரோபயாடிக். அதனால் தான் ஒரு காலத்தில் தயிர் சாதமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த நிறைய பேர் நன்றாக ஆரோக்கியமாக இருந்தார்கள்.
வயிற்றுப்போக்கு, பேதி வந்தால் தயிர் கொடுங்கள், தயிர் சாதம் கொடுங்கள் என்று சொல்கிறோம். வைரஸ் பாதிப்பால் வயிறு பிரச்சினை ஏற்பட்டால் தயிர் சாப்பிடுங்கள் என்று சொல்கிறோம். இதில் இருக்கிற புரோபயாடிக் நமது குடல் சம்பந்தமான எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வை கொடுக்கிறது. எந்த ஒரு வியாதிக்கும் இந்த புரோபயாடிக் கண்டிப்பாக ஒரு பாதுகாப்பை கொடுக்கிறது. அந்த வகையில் நாம் புரோபயாடிக் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டியது மிக மிக முக்கியமாகும்.
நல்ல பாக்டீரியா நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்:
நாம் அன்றாடம் சாப்பிடுகிற நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் எல்லாவற்றிலும் ரசாயன பொருட்கள் மற்றும் கிருமிகள் இருக்கிறது. இதில் இருந்து நமது உடலை பாதுகாப்பது இந்த புரோபயாடிக் தான். இதனால் தான் நமது உணவுகளில் எப்போதுமே புரோபயாடிக் நிறைந்த தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் இருக்கின்ற புரோபயாடிக் குடலுக்கு பாதுகாப்பை கொடுக்கிறது.
பெண்களை பொருத்தவரைக்கும் கர்ப்பப்பையின் வெளிப்புறத்தில் உள்ள யோனிப்பகுதியில் பூஞ்சை தொற்றுக்கள், அரிப்பு, எரிச்சல், திரிதிரியாக வருதல், வெள்ளைப்படுதல் ஆகியவற்றால் வரும் தொற்றுக்கள் மற்றும் சிறுநீர்க்குழாய் பகுதிகளில் ஏற்படுகிற தொற்றுக்கள் ஆகியவற்றை தடுக்க இந்த புரோபயாடிக் பாக்டீரியா கண்டிப்பாக தேவை. அதனால்தான் அந்த நேரங்களில் ஆன்டிபயாடிக் கொடுக்கும்போது புரோபயாடிக்கை சேர்த்து கொடுக்கிறோம்.
மேலும் உணவிலும் நல்ல பாக்டீரியாவான புரோபயாடிக் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்தில் கண்டிப்பாக புரோபயாடிக் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதனால் தான் பெண்களுக்கு அந்த நேரத்தில் கூடவே புரோபயாடிக் மருந்துகளை கொடுக்கிறோம்.
நமக்கு பாதுகாப்பு கொடுக்கிற இந்த புரோபயாடிக்கை என்னென்ன உணவு பழக்க வழக்கங்கள் மூலம் மேம்படுத்தலாம் என்று பார்த்தால், ஒன்று மாத்திரைகளாக சாப்பிடலாம். இரண்டாவதாக இந்த புரோபயாடிக்கை யோனியில் வைக்கலாம், இதன் மூலமாக இந்த புரோபயாடிக் மேம்படும். மூன்றாவதாக உணவு பழக்க முறைகளால் அதிகரிக்கலாம்.

திரும்ப திரும்ப வரும் தொற்றுக்களுக்கு தயிர் மூலம் தீர்வு:
தயிர், மோர், புளித்த பாலாடைக்கட்டி (சீஸ்), ஆகியவற்றில் புரோபயாடிக் உள்ளது. ஆனால் அது பதப்படுத்தப்படாத பாலாடைக்கட்டியாக இருக்க வேண்டும். வீட்டில் தயாரிக்கும் பாலாடைக்கட்டி நல்ல ஒரு புரோபயாடிக்கை கொடுக்கிறது. சீனர்கள் சாப்பிடும் கிம்ச்சி என்ற உணவும் ஒருவகையான நொதித்த, புரோபயாடிக் நிறைந்த உணவுதான்.
நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் ஊறுகாய் கூட நொதித்தல் தன்மை கொண்ட உணவுதான். அதிலும் புரோபயாடிக் இருக்கிறது. அதனால் தான் நிறைய நேரங்களில் தயிர் சாதமும், ஊறுகாயும் சாப்பிடும்போது உடலுக்கு நல்லது என்று சொல்கிறோம். ஆனால் ஊறுகாயில் உப்பு அதிகம் இருக்கிறது. ஊறுகாயை உப்பு குறைவாக போட்டு நொதிக்க வைத்தால் அது ஒரு நல்ல உணவாக மாறும்.
இது தவிர முக்கியமாக நீங்கள் சாப்பிட வேண்டியது, புளித்த மாவில் செய்யும் இட்லி, தோசை போன்ற உணவாகும். புளித்த மாவில் நிறைய லாக்டோபேசிலிஸ் இருக்கிறது. கையில் திடீரென்று ஒரு புண் வந்தால், உதாரணத்துக்கு சூடுபட்டு காயம் உண்டானால், உடனடியாக நீங்கள் அதற்கு பாதுகாப்பு நடவடிக்கையாக புளித்த தோசை மாவில் கையை வைக்க வேண்டும். அந்த லாக்டோபேசிலிஸ் உடனடியாக பாதுகாப்பு கொடுக்கும். அதன் மூலம் காயம் விரைவில் குணமாகும். இந்த மாதிரியான சின்னச்சின்ன விஷயங்களிலும் நொதிக்கப்பட்ட உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் உங்களுடைய யோனிப்பகுதி, கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு போதுமான பாதுகாப்பை கொடுக்கிறது. எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தயிர் கொடுங்கள், உணவுகளில் தயிரை அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள், ஒவ்வொருவரும் ஒரு ஆன்டிபயாடிக் எடுக்கும்போது உங்களுடைய டாக்டரிடம் புரோபயாடிக் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்.
பல நேரங்களில் உங்களுக்கு ஒரு தொற்றானது திரும்ப திரும்ப வந்தால் அது சிறுநீர் தொற்றுக்களாக இருக்கலாம், யோனிப்பகுதி மற்றும் கர்ப்பப்பையை பாதிக்கக்கூடிய தொற்றுக்களாக இருக்கலாம், அல்லது பேதி, வயிற்றுப்போக்காக இருக்கலாம்.
இப்படிப்பட்டவர்கள் உணவுகளில் கண்டிப்பாக தயிர் சேர்த்துக் கொள்வது மிக மிக முக்கியமாகும். குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்போது தேவையில்லாத கிருமி தொற்றுக்கள் வராது. தொற்றுக்களிடம் இருந்து பாதுகாப்பை ஏற்படுத்தும். நாம் ஆரோக்கியமாக வாழவும் வழி வகுக்கும்.
- சுஜாதாவுடன் நடிக்கும் காட்சிகளில் சில சமயங்களில் ரஜினி திணறினார்.
- ரஜினியிடம் நாடகங்களில் நடிக்கும்போதும், சினிமாவில் நடிக்கத் தொடங்கிய போதும் ஒரு பழக்கம் இருந்தது.
அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு படங்களின் தாக்கத்தால் 1977-ம் ஆண்டு ரஜினிக்கு அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த ஆண்டை ரஜினிக்கு திரையுலகின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொன்னான ஆண்டாக சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் அந்த ஆண்டு மள...மள...வென படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மூன்று முடிச்சு படத்தில் ரஜினியின் வேகத்தை பார்த்த டைரக்டர் பாலச்சந்தர் உடனடியாக ரஜினியை முன்னிறுத்தி "அவர்கள்" என்று ஒரு படத்தை தயாரித்தார். இந்த படத்தில் கமல், சுஜாதா, ரவிக்குமார் ஆகியோருடன் ரஜினி வித்தியாசமான ஒரு வேடத்தை ஏற்றார்.
கதைப்படி மும்பையில் வசிக்கும் சுஜாதா ரவிக்குமாரை காதலிப்பார். ஆனால் எதிர் பாராதவிதமாக அவர்களிடம் பிரிவு ஏற்படும். இதனால் சுஜாதாவுக்கும், ரஜினிக்கும் திருமணம் நடைபெறும். திருமணத்திற்கு முன்பு ரவிக்குமாரை சுஜாதா காதலித்த விஷயம் ரஜினிக்கு தெரிய வரும்.
இதனால் சுஜாதாவை ரஜினி கடுமையாக துன்புறுத்தி அதில் மகிழ்ச்சி அடையும் ஒருவிதமான "சாடிஸ்ட்" வேடத்தில் நடித்து இருந்தார். சுஜாதாவை அவர் துன்புறுத்தும் காட்சிகளில் மிகப்பெரிய முத்திரையை பதித்தார். ஆனால் படத்தில் அவர் காட்டிய வேகமும், ஸ்டைல்களும் வசன உச்சரிப்பின் போது தடுமாற வைத்தன.
இதனால் வழக்கம்போல இந்த படத்திலும் டைரக்டர் பாலச்சந்தரிடம் ரஜினி அடிக்கடி திட்டு வாங்க நேரிட்டது. குறிப்பாக சுஜாதாவுடன் நடிக்கும் காட்சிகளில் சில சமயங்களில் ரஜினி திணறினார். அதற்கு காரணம் ரஜினியைவிட சுஜாதா திரையுலகத்துக்கு முன்பே வந்தவர் ஆவார்.
17 படங்களில் நடித்து அனுபவம் பெற்று இருந்த சுஜாதாவுடன் நெருங்கி நடிப்பதற்கு புதுமுக நடிகரான ரஜினி மிகவும் வெட்கப்பட்டார். ஒரு காட்சியின் போது சுஜாதாவை ரஜினி இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு வசனம் பேச வேண்டும்.
"இந்த மாதிரி அணைத்துப் பிடித்தால் உனக்கு பிடிக்குமா? உன் பழைய காதலன் உன்னை எப்படி கட்டிப்பிடிப்பான்?" என்று வசனம் பேச வேண்டும். ஆனால் அளவுக்கு மீறிய கூச்சம் காரணமாக ரஜினியால் சுஜாதாவை கட்டிப்பிடித்துக் கொண்டு வசனம் பேச முடியவில்லை. சுமார் 2 மணி நேரம் போராடியும் அந்த காட்சி சரியாக அமையவில்லை.
டைரக்டர் பாலச்சந்தருக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. "என்னடா இவன் இப்படி இருக்கிறான்? அவனவன் பொம்பளையைத் தொட முடியாதா? என்று சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அலைகிறான். இவன் சந்தர்ப்பம் கிடைத்தும் கட்டிப்பிடிக்க மாட்டேன் என்கிறான். சுஜாதாவை கரப்பான் பூச்சியை தொடுவது போல தொடுகிறானே?" என்று கத்தி தீர்த்து விட்டார்.
டைரக்டர் பாலச்சந்தர் இப்படி கத்தித் தீர்த்தப்பிறகுதான் ரஜினி ஒழுங்காக கட்டிப்பிடித்து நடித்தார். சுஜாதாவை ரஜினி துன்புறுத்தும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அவர் ரஜினியை விவாகரத்து செய்து விட்டு சென்னைக்கு வந்து விடுவார்.
சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேருவார். அந்த நிறுவனத்தில் ஜானி என்ற பெயரில் கமல்ஹாசன் வேலை பார்த்து வருவார். மனைவியை இழந்த அவருக்கு சுஜாதா மீது புது ஈர்ப்பு ஏற்படும். சுஜாதாவுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுப்பார். இதனால் கமல் வீட்டிலேயே சுஜாதா குடியேறுவார்.
அப்போதுதான் பக்கத்து வீட்டில் மும்பையில் முதல் முதலாக காதலித்த ரவிக்குமார் இருப்பது தெரிய வரும். இருவரும் மனம் விட்டு பேசுவார்கள். திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வருவார்கள். அந்த சமயத்தில் சுஜாதா வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு மானேஜராக மும்பையில் இருந்து மாற்றலாகி அவரது கணவர் ரஜினி வருவார்.
அவர் சுஜாதாவிடம், "நான் திருந்திவிட்டேன். இனி உன்னை துன்புறுத்த மாட்டேன். நாம் சேர்ந்து வாழலாம்" என்பார். அதே சமயத்தில் கமல்ஹாசனும் சுஜாதாவை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருப்பார். அதாவது ஒரே நேரத்தில் சுஜாதாவை கமல், ரஜினி, ரவிக்குமார் மூன்று பேருமே விரும்புவார்கள்.
நான்கு கோணங்களில் இந்த காதல் கதையை டைரக்டர் பாலச்சந்தர் விறுவிறுப்பாக எடுத்து இருந்தார். கடைசியில் சுஜாதா என்ன முடிவு எடுத்தார் என்பதுதான் மிகப்பெரிய விறுவிறுப்பாக இந்த படத்தில் அமைந்து இருந்தது.
மூன்று முடிச்சு படத்தில் ஸ்டைல் மூலம் கலக்கிய ரஜினிக்கு இந்த படத்தில் அத்தகைய வாய்ப்பு எதையும் பாலச்சந்தர் கொடுக்க வில்லை. ஸ்டைலுக்கு பதில் நடிப்பு திறமையை காட்ட வேண்டியது இருந்ததால் ரஜினி அதிகம் உழைக்க வேண்டியது இருந்தது. ரஜினியிடம் இருந்த சிறு சிறு பலவீனங்கள் எல்லாவற்றையும் இந்த படத்தில்தான் டைரக்டர் பாலச்சந்தர் சரி செய்தார் என்று சொல்லலாம்.
ரஜினியிடம் நாடகங்களில் நடிக்கும்போதும், சினிமாவில் நடிக்கத் தொடங்கிய போதும் ஒரு பழக்கம் இருந்தது. வசனம் பேசும்போது அவர் அவரையும் அறியாமல் கீழ்நோக்கி பார்க்க ஆரம்பித்து விடுவார். அவரது கண்கள் காந்த சக்தி கொண்டதாக இருந்தாலும் சற்று சிறிய கண்கள் ஆகும். இந்த குறை தெரியக் கூடாது என்பதற்காகத்தான் ரஜினி அவ்வாறு கீழ்நோக்கி பார்த்து வசனம் பேசி நடித்தார்.
இது டைரக்டர் பாலச்சந்தருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒவ்வொரு காட்சியையும் படமாக்கும் போது அவர் நேரே பார்த்து பேசு.... நேரே பார்த்து பேசு.... என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சில சமயங்களில் ரஜினிக்கு அவரையும் அறியாமல் பார்வை கீழ் நோக்கி சென்று விடும்.
அப்போது எல்லாம் ரஜினியை பார்த்து, "என்னடா இந்த பாடுபடுத்துகிறாய்? கண்ணை நல்லா திறந்து நடி?" என்று பாலச்சந்தர் திட்டிக் கொண்டே இருப்பார். ஒருநாள் சூட்டிங்கின் போது சுஜாதாவிடம் குழந்தையை தூக்கி கொடுத்து விட்டு வசனம் பேச வேண்டிய காட்சியில் ரஜினி மிகவும் திணறினார்.
படக்குழுவினர் அனைவரும் ரஜினிக்கு பல்வேறு விதங்களில் உதவிகள் செய்தனர். ஆனாலும் ரஜினியால் அந்த காட்சியில் சரியான நேரத்தில் வசனம் பேச இயலவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த டைரக்டர் பாலச்சந்தர், "உனக்கு நடிப்பு வராது. திரைப்படக் கல்லூரியில் 2 வருடம் என்னதான் படித்து கிழிச்சியோ?" என்றார்.
ரஜினி தலையைக் குனிந்து கொண்டே திட்டுகள் வாங்கினார். அதன் பிறகும் பாலச்சந்தருக்கு கோபம் தணியவில்லை. "இந்த படத்தில் நிறைய வசனம் பேச வேண்டியது இருக்கும். இவனுக்காக வசனத்தை மாற்ற முடியாது. இவனை நீக்கி விட்டு ஜெய்கணேசை போட வேண்டியதுதான். ஜெய்கணேசை அழைத்து வாருங்கள்" என்று படப்பிடிப்பு தளமே அதிரும்படி கத்தினார்.
அதே வேகத்தில் படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டு போய் விட்டார்.
அதன் பிறகு ரஜினி தன்னை திருத்திக் கொண்டு மறுநாள் அந்த காட்சியில் சிறப்பாக நடித்துக் கொடுத்தார். ஒரு சிற்பி கொஞ்சம் கொஞ்சமாக தட்டி, தட்டி, செதுக்கி அழகான சிற்பத்தை உருவாக்குவது போல ரஜினியை டைரக்டர் பாலச்சந்தர் செதுக்கி, செதுக்கி ரஜினியிடம் பன்முகத் திறமையை உருவாக்கினார். இதனால் "அவர்கள்" படம் நிறைவு பெற்ற போது ரஜினி சிறப்பான நடிகராக மாறி இருந்தார்.
ஒரு கட்டத்தில் டைரக்டர் பாலச்சந்தரே பிரமித்து போகும் அளவுக்கு ரஜினியின் நடிப்பாற்றல் மெருகு ஏறி இருந்தது. இதுபற்றி டைரக்டர் பாலச்சந்தர் ஒரு பேட்டியில் கூறும்போது, "ரஜினியின் நடிப்பு, வேகம், மேனரிசம் போன்றவை தமிழக ரசிகர்களுக்கு ஒரு புதிய ரசனையை உருவாக்கி இருக்கிறது. அவரது விறுவிறுப்பான நடிப்பை தமிழக மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். அதனால் தான் "அவர்கள்" படத்தில் மனைவியை துன்புறுத்தும் சாடிஸ்ட் வேடத்தில் அவர் நூறு சதவீதம் கனகச்சிதமாக நடிக்கும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட்டது" என்று கூறி இருந்தார்.
ஆனால் "அவர்கள்" படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. என்றாலும் ரஜினியின் "ஆன்டிஹீரோ" வேடம் தமிழக மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ரஜினியின் சினிமா வாழ்க்கையில் 'அவர்கள்' படம் ஒரு முக்கியமான மைல் கல்லாக மாறி இருந்தது.
இதுபற்றி ரஜினியே பல தடவை பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். ஒரு தடவை அவர் நிருபர்களிடம் பேசும்போது, "அவர்கள் திரைப்படம் மூலம் பாலச்சந்தர் சார் எனக்கு எல்லா விஷயங்களையும் சொல்லி கொடுத்து விட்டார். அதனால்தான் அந்த படம் எனக்கு நட்சத்திர அந்தஸ்தை தந்தது" என்று குறிப்பிட்டு இருந்தார்.
1977-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 'அவர்கள்' படம் வெளியான பிறகு ரஜினியை தேடி வரும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த ஆண்டு ரஜினி அவர்கள், கவிக் குயில், ரகுபதி ராகவன் ராஜாராம், சில சும்மா செப்பிந்தி (தெலுங்கு), புவனா ஒரு கேள்விக் குறி, ஒந்து பிரேமதே கதே (கன்னடம்), 16 வயதினிலே, சகோதர சவால் (கன்னடம்), ஆடு புலி ஆட்டம், குங்கும ரக்ஷே (கன்னடம்), காயத்ரி, ஆறு புஷ்பங்கள், தொலிரேயி கடி சிந்தி (தெலுங்கு), ஆம்மே கதா (தெலுங்கு), கலாட்டா சம்சாரா (கன்னடம்) என 15 படங்களில் நடித்து சாதனை படைத்தார்.
இந்த 15 படங்களில் புவனா ஒரு கேள்விக் குறி, 16 வயதினிலே ஆகிய இரு படங்களும் ரஜினியை தமிழ் திரையுலகின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றன. இந்த இரு படங்கள் மூலம் ஒவ்வொரு தமிழனின் சுவாசத்திலும், உச்சரிப்பிலும் ஒருவராக ரஜினி மாறிப்போன விந்தை நடந்தது. அந்த விந்தையை ரஜினி எப்படி உருவாக்கினார். அதன் பின்னணியில் ஆன்மீக சக்தி எப்படி உதவியது? என்பதை நாளை 22-ந்தேதி (புதன்கிழமை) பார்க்கலாம்.
- அமைதி என்பதும் தியானம் என்பதும் தவம் என்பதும் ஒன்றுக்கொன்று உரிமைத் தொடர்புடைய உறவுச் சொற்களாகும்.
- தியானம் என்பது நம்மையும் நமது போக்குகளையும் நேர்முறையில் நெறிப்படுத்திடும் அரும்பணியைச் செய்கிறது.
அமைதியும் ஆனந்தமும் ததும்பும் வாழ்க்கையை அன்றாடம் எதிர்நோக்கிக் காத்திருக்கும் அன்பின் வாசகர்களே! வணக்கம்.
வாழ்க்கையில் அமைதியும் நிம்மதியும் வேண்டுமென்றால் தவ வாழ்க்கை வாழவேண்டும்! என்கிறார்கள். இந்த உலகத்தில் நிலைத்த அறங்களாகவும், நிலைத்து நிற்கவேண்டிய அறங்களாகவும் வள்ளுவர் குறிப்பிடுவது, 'தானம்', 'தவம்' ஆகிய இரண்டை மட்டுமே. இவ்விரண்டையும் மறைந்து போகாமல் காப்பதற்குத், தொடர்ந்த மழைவளத்தை உடை யதாக உலகம் இருக்க வேண்டும் என்கிறார்.
"தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்"
'தானம்' அடுத்தவர் நலத்தை முன்னிறுத்தி செய்யப்படுகிற அறமாகும்; 'தவம்' தன்னை முன்னிலைப்படுத்தி இயற்றுகிற அறப்பயிற்சி ஆகும். மழைவளம் குன்றாமல், உலகச் செழிப்புக் குறையாமல் இருந்தால் மட்டுமே தானம் செய்வதும், தவம் இயற்றுவதும் ஆகிய அறங்கள் தொய்வில்லாமல் நடைபெறும்.
ஒருகாலத்தில் உலக வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும் வெறுத்துக், குடும்பத்தைத் துறந்து, காடுகளுக்கும் வனங்களுக்கும் மலைகளுக்கும் சென்று, கனிகிழங்குகளை உண்டு, பசிதாங்கி, உடலியல் வலிகளைப் பொறுத்து, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, கடுமையான முறையில் தியானத்தில் ஆழ்ந்திருப்பதே தவம் என்று எண்ணியிருந்தார்கள். தவம் என்பது துறவு நெறியில் இருக்கும் சாமியார்களுக்கே உரியது என்றும் கருதப்பட்டது. ஆனால் இல்லறத்தில் வாழ்வோர்க்கும் தவம் வாய்க்கும் என்பது வள்ளுவச் சிந்தனை ஆகும்.
"உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு"
இக்குறளில் திருவள்ளுவர், 'தமக்கு வருகிற துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குத் துன்பம் இழைக்காமல் இருப்பதுமே தவம்' என்கிறார். வாழும் இல்லற வாழ்விலும் வலி பொறுத்தலே வாழ்க்கை என்கிறார் திருவள்ளுவர். இவ்வாறு பொறுத்துக் கொள்வது அல்லது தாங்கிக் கொள்வது ஆகியவற்றை 'நோன்பு இருத்தல்' அல்லது 'விரதம் இருத்தல்' என்று நாம் ஆன்மீக அடிப்படையில் கூறுவோம். மத சம்பிரதாயங்களைத் தாண்டியும், நமக்கு ஏற்படும் இடையூறுகளையும், வலிகளையும் மன உறுதியோடு தாங்கிக் கொள்ளும் வல்லமை நமக்கு வாய்த்துவிட்டால் உண்மையில் அதுவே தவம் ஆகும். இவ்வகை தவத்தைத் துறவறவாசிகள் மட்டுமல்லாது, இல்லறவாசிகளும் எளிதில் கடைப்பிடிக்க முயலலாம்.
தவத்தினால் கிடைக்கக் கூடிய அடிப்படையான பலன் எதுவென்று திருவள்ளுவரைக் கேட்டால், ' இது அது என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி எதையும் கூறிவிட முடியாது' என்கிறார்.
"வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்"
அதாவது, இவர் அவர் என்று வேறுபாடு இல்லாமல், இதுதான் வேண்டும்! அதுதான் வேண்டும்! என்று வித்தியாசம் இல்லாமல், யார் எதுவேண்டுமென்று தவம் இயற்றத் தொடங்கினாலும் அவர்கள் வேண்டியது வேண்டியபடி தவத்தினால் கிடைக்கும் என்பது வள்ளுவர் தரும் உறுதிப்பாடு. தவம் தவமாக இருக்கவேண்டும்; அதுபோதும். பலன்கள் இல்லறத்தார்க்கும் உண்டு; துறவறத்தார்க்கும் உண்டு.
தவம் இயற்றுவதற்கு அடிப்படைத் தேவை அமைதி. நமது உள்ளமும் அமைதியாக இருக்க வேண்டும்; நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலையும் அமைதியாக இருக்க வேண்டும். நம்முடைய உள்ளமாகிய அகத்திலும் சரி. புறமாகிய வெளி உலகத்திலும் சரி ஒரே இரைச்சல் மயமாகவே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இடைவேளை இல்லாத பரபரப்பில் நமது உள்ளும் புறமும் சிதைந்து கொண்டிருக்கும்போது அமைதியை முதலில் வரவழைப்பது எப்போது?. முதலில் அமைதி வந்தால்தானே பிறகு தவம் இயற்ற முடியும்!; அத் தவத்தை வென்றெடுத்த பிறகுதானே வேண்டிய வெற்றிச் சாதனைகளை எட்டிப் பிடிக்க முடியும். இந்த உலகில் சாதிக்கிறவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், சாதிக்க முடியாமல் பின்தங்குகிறவர்கள் எண்ணிக்கை கூடுதலாகவும் இருப்பதற்கான காரணத்தை ஆராய்கிறார் திருவள்ளுவர். ஏன் இல்லாதவர்கள் பலராகவும் இருக்கிறவர்கள் சிலராகவும் இருக்கிறார்கள் என்றால், வலிதாங்கும் நோன்பை மேற்கொண்டு தவமியற்றி வெல்பவர்கள் சிலராகவும், மேற்கொள்ள முடியாமல் தோற்பவர்கள் பலராகவும் இருக்கின்றனராம்.
"இலர்பலராகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர்"
தவமியற்றுதல் என்பதே தமக்கு வரும் எல்லாத் தொல்லைகளையும் பொறுமையினால் வெற்றிகாண்பதும், அவற்றிலிருந்து வெளியேறுவதும், தொல்லைகளற்ற மனத்தை அமைதியுடன் ஒருநிலைப்படுத்தலும், பிறகு வேண்டியன கிட்ட வேண்டியாங்கு தியானித்தலும் ஆகும்.
ஓர் அடர்ந்த காட்டிற்குள் ஒரு விறகுவெட்டி சென்றான். செல்லும் வழியில் ஒரு மரத்தடியில் ஒரு துறவி கண்களை மூடித் தியானம் பண்ணிக் கொண்டிருந்தார். விறகு வெட்டி அவர்முன் சிறிதுநேரம் நின்று அவரையே பார்த்து கொண்டிருந்தான். தன்னை யாரோ நின்று பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த துறவி கண்களைத் திறந்து கையில் கோடரியோடு நின்றிருந்த விறகுவெட்டியைப் பார்த்துப் புன்னகைத்தார். அவனிடம் துறவி பேசினார், "விறகு வெட்டியே நீ அன்றாடம் இங்கு வந்து, ஒரு தலைச்சுமை விறகை எடுத்துச் சென்று ஊரில் விற்றால் உனக்கு எவ்வளவு கிடைக்கும்?". "இந்த ஒருநாளைப் பசியில்லாமல் கடத்துவதற்கு இது பயன்படும்! அவ்வளவுதான்!" என்றான் விறகுவெட்டி." சரி!. இன்று முதல் நான் சொல்கிறபடிக் கேட்டால், நாள்தோறும் நீ இங்கு வந்துபோக வேண்டிய அவசியம் இருக்காது; மரங்களை வெட்டி வனங்களை அழிக்க வேண்டிய நிலைமையும் இருக்காது!" என்றார் துறவி. " சரி! நீங்கள் சொல்லுங்கள்! சொல்கிறபடிக் கேட்கிறேன்" என்றான் விறகுவெட்டி. "இந்த வழியே கிழக்குப் பக்கமாகக் கொஞ்ச தூரம் செல்! அங்கே ஒரு செம்புச் சுரங்கம் இருக்கிறது; ஒரு தலைச்சுமை அளவு வெட்டிக்கொண்டு சென்றால், அதனை விற்று ஒருவாரத்திற்குச் சாப்பிடலாம்! செல்!" என்றார் துறவி. அவ்வழியே சென்று செம்பை வெட்டி, ஊருக்குள் சென்றான் விறகுவெட்டி.

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
அடுத்து ஒருவாரம் கழித்து வந்து துறவிமுன் நின்றான் விறகுவெட்டி. "நீ கடந்த முறை சென்ற செம்புச் சுரங்கத்தைத் தாண்டி, இன்னும் கொஞ்ச தூரம் செல்! அங்கே ஒரு வெள்ளிச் சுரங்கம் இருக்கிறது; அதில் ஒரு தலைச்சுமை அளவுக்கு வெட்டி எடுத்து ஊருக்குள் சென்று விற்றால் ஒரு மாதகாலத்திற்குச் சாப்பிடலாம்" என்றார் துறவி. அப்படியே செய்த விறகுவெட்டி, அடுத்து ஒருமாதம் கழித்துக் காட்டிற்குள் வந்து துறவிமுன் நின்றான். இப்போது துறவி அவனிடம், " கடந்த முறை நீ சென்ற வெள்ளிச் சுரங்கத்தைத் தாண்டிக் கொஞ்ச தூரம் சென்றால், அங்கே தங்கச் சுரங்கம் இருக்கும்; வெட்டியெடுத்துச் செல்!; அடுத்து ஆறு மாத காலத்திற்கு இங்கு நீ வரவேண்டிய தேவை இருக்காது!" என்றார்.
அடுத்து ஆறு மாதங்கள் கழித்து விறகுவெட்டி துறவிமுன் வந்து நின்றபோது, "தங்கச் சுரங்கம் தாண்டியும் செல்! அங்கே வைரச் சுரங்கம் உனக்காக காத்திருக்கிறது; அது உனக்கு ஒரு வருட காலம் இந்தப்பக்கம் உன்னை வரவிடாமல் பார்த்துக்கொள்ளும்" என்றார் துறவி. அடுத்து ஓராண்டு கழித்துத், துறவிமுன் வந்து விறகுவெட்டி நின்றபோது, அவனை ஏற இறங்கப் பார்த்த துறவி, " இப்போது வைரச் சுரங்கம் தாண்டியும் கொஞ்ச தூரம் சென்று தேடிப்பார்!; எனக்குக் கிடைத்த பொக்கிஷம் உனக்கும் கிடைக்கலாம்!; அதைக்கொண்டு நீ உன் வாழ்க்கையை நிரந்தரமாக அனுபவிக்கலாம்!" என்று விறகுவெட்டியை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வைத்தார் துறவி.
உள்ளே காட்டிற்குள் சென்ற விறகுவெட்டி, வைரச் சுரங்கத்திற்கும் மேலான பொக்கிஷம்! அதுவும் துறவிக்குக் கிடைத்த பொக்கிஷம்! எதுவாக இருக்கும்?. தேடியலைந்து, களைத்து, நடுக்காட்டில், அடர்வனத்தில், ஓர் அமைதியான இடத்தைக் கண்டுபிடித்து அங்கே அமர்ந்தான். அவனையறியாமலேயே கண்களை மூடித் தியானத்தில் ஈடுபடத் தொடங்கினான். ஆம் பொக்கிஷத்தைக் கண்டுபிடித்து விட்டான்; அது தியானம் என்னும் பொக்கிஷம்! செலவழிக்கச் செலவழிக்க ஆயுள் முழுவதும் தீராத பொக்கிஷம்!. அங்கேயே வேண்டியதைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டான்.
அமைதி என்பதும் தியானம் என்பதும் தவம் என்பதும் ஒன்றுக்கொன்று உரிமைத் தொடர்புடைய உறவுச் சொற்களாகும். குழப்பம், பரபரப்பு, மனக்கூச்சல் போன்றவை இவற்றிற்கு எதிரான மனோ நிலைகள் ஆகும். குழப்பமில்லாத தெளிவு, பரபரப்பில்லாத அமைதி, மனக்கூச்சல்களற்ற தியான நிலை இவை வாய்த்துவிட்டால் வாழ்தலே தவம்போல ஆகிவிடும். ஒரு காலத்தில் அமைதியைத் தேடி அமைதியான சூழல் நிலவும் இடங்களுக்கு மனிதர்கள் சென்றனர். ஆனால் இன்றோ அப்படிப்பட்ட அமைதியான இடங்கள் அமையாவிட்டாலும், மனப்பயிற்சிகள் மற்றும் எளிய உடற்பயிற்சிகள் மூலமாக அமைத்துக்கொள்ளும் தியான வித்தைகளை மனிதர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். அலைபாயும் கடல், ஓசைமயமாக இருப்பதுபோல, அலைபாயும் எண்ணங்கள் கொண்ட மனமும் ஓசைமயமாகவே திகழ்கிறது. மனத்தின் அலைபாய்தல் அடங்காத வரை, ஓசை ஒடுங்காத வரை, தியானம் சாத்தியப்படுவதே இல்லை.
தியானம் என்பது மனத்தின் எண்ணங்களை ஒருங்கிணைத்துக், கூர்மைப்படுத்தி, விழிப்புணர்வைப் பிரகாசப்படுத்துகிற பயிற்சியாகும். இதன் மூலமாக மனமும் உடலும் ஒத்திசைவில் இயங்கத் தொடங்குகின்றன. மனமும் உடம்பும் குறிப்பிட்ட இலக்கு நோக்கி விழிப்புணர்வோடு இயங்குவதற்குத் தியானம் பெருமளவில் கைகொடுக்கிறது. மனத்தில் வீண் குழப்பங்களால் ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைத்திடும் அமைதிப் பணியையும் தியானம் செய்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்பெறும் தியானப்பயிற்சி, நமது நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. தேவையற்ற கவலைகளிலும் பிரச்சினைகளிலும் ஆழ்ந்துபோய் அவற்றிலேயே உழன்று கொண்டிருக்கும் மனத்தின் அவல நிலையையும் தியானம் மாற்றுகிறது. ஒட்டுமொத்தத்தில், தியானம் என்பது நம்மையும் நமது போக்குகளையும் நேர்முறையில் நெறிப்படுத்திடும் அரும்பணியைச் செய்கிறது.
இந்த உலகத்தில் தனிமனிதர் தொடங்கிப், பெரும்பெரும் நாடுகளின் தலைவர்கள் வரை அமைதியையே பெரிதும் விரும்புகின்றனர். நாடுகளுக்கிடையே வளரும் பகை எண்ணங்களும் போட்டி பொறாமைகளும் அவற்றிற்கிடையே சண்டைகளை உருவாக்கி, அமைதியின்மைக்கு வழி வகுத்துவிடுகின்றன. அமைதியின்மையில் தத்தளிக்கிற நாடுகள், என்றும் எத்துறையிலும் வளர்ந்த நாடுகளாகப் பரிமளிக்கப் போவதில்லை. அதைப்போலத்தான் ஒவ்வொரு தனிமனிதனும். அமைதியின்மையில் தடுமாறுகிற எவரும் சாதனை மனிதராகச் சரித்திரம் படைப்பதில்லை. எல்லா நிலைகளிலும் தமக்கு உள்ளும் புறமுமாக அமைதியே நிலவ வேண்டும் என்று, முயல்கிறவர்கள் உண்மையான தவ வாழ்விற்குச் சொந்தக்காரர்கள். அமைதி தவழும் உள்ளமும் இல்லமும் உண்மையான தவக்குடில்கள்.
தொடர்புக்கு: 9443190098
- உடலுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி குளித்துவிட்டு குளியல் என்று கூறக்கூடாது.
- தலைக்கு குளிர்ந்த தண்ணீர் அல்லது இளம்சூடான தண்ணீரை பயன்படுத்தலாம்.
தீபாவளி கொண்டாடப்படும் இந்த மகிழ்ச்சியான வேளையில் ஆரோக்கியமாக வாழ தினமும் காலை பொழுதில் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து பார்த்து வருகிறோம். இத்தொடரில் குளியல் பற்றிய கட்டுரை தீபாவளி திருநாள் வரும் வேளையில் அமைந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.
தீபாவளிக்கும் குளியலுக்கும் என்ன சம்பந்தம் என்றால், தீபாவளி பண்டிகை அன்று அனைத்து நீர்நிலைகளிலும் கங்கா வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே தீபாவளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை கங்கா ஸ்நானம் என்பார்கள்.
தமிழ் மொழி நல்லொழுக்க நெறிமுறைகளை ஆரோக்கிய வாழ்விற்காக பலவற்றை நூல்கள் மூலமாகவும் பழமொழிகள் மூலமாகும் வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்று "கந்தையானாலும் கசக்கி கட்டு, கூழானாலும் குளித்துக் குடி என்பது ஆகும். அதாவது அழுக்கான கந்தை ஆடையாகயிருந்தாலும் அதனை துவைத்து தான் உடுத்த வேண்டும். அதேப்போல் கூழ் என்ற எளிமையான உணவாக இருந்தாலும் அதனை குளித்துப் பின்பு தான் உண்ணவேண்டும் என்பதே அதன் பொருள்.
ஒப்பற்ற மருத்துவ முறையான ஆயுர்வேதம் தினமும் குளிக்க வேண்டும் என்றும் மேலும் அதனை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும் மிக தெளிவாக விளக்கி கூறுகிறது. உடலை குளிர்விப்பதே குளியல் என்று மருவிற்று. குளியல் என்பது தலைக்கு சேர்த்து தான். உடலுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி குளித்துவிட்டு குளியல் என்று கூறக்கூடாது. குளியலால் உடல் தூய்மை மட்டுமல்ல, உள்ளமும் தூய்மை அடைகிறது. ஆம் குளியலால் அகமும் புறமும் பசுமை அடைகிறது.
குளிப்பதால் தூக்கம் போகும், சிரமம் குறையும், உடல் எரிச்சல் போகும், வியர்வை, அரிப்பு, இவற்றை போக்க வல்லது. மனதில் ஒருவித உற்சாகம், புத்துணர்ச்சி பிறக்கும். மேலும் உடம்பில் உள்ள அழுக்குகளை போக்குகிறது. ஐம்புலன்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்குகிறது. சோம்பலை போக்குகிறது. ஆண்மையை அதிகரிக்கிறது. பசி தீயை அதிகரித்து நன்றாக ஜீரணம் செய்ய வழிவகைச்செய்கிறது. ரகத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.
இவ்வளவு நன்மைகளை கொண்ட குளியலை எவ்வாறு மேற்கொள்ளுவது. இது என்ன கேள்வி, கோடை காலம் என்றால் குளிர்ந்த தண்ணீர், குளிர் காலம் என்றால் வெந்நீர் கொண்டு குளிக்க வேண்டியது தானே என்று என்ன தோன்றுகிறதா... ஆனால் இது முற்றிலும் தவறு. ஆம் இதற்கு ஆயுர்வேதம் ஒரு வழிகாட்டுதலை வழங்குகிறது.
தற்போது மக்கள் என்ன செய்கிறார்கள் என்றால், தலைவலியோ அல்லது மூக்குஒழுகுதல் போன்ற பிரச்சனை இருந்தால் தலைக்கு சுட சுட தண்ணீர் ஊற்றுதல் நன்மை தரும் என கருதுகிறார்கள். ஆனால் இதனை தப்பான நடைமுறை என்று ஆயுர்வேதம் கண்டிக்கிறது. ஆம் தலைக்கு சுடுதண்ணீர் ஊற்றினால் தலைமுடிக்கும் கண்ணுக்கும் ஆபத்து. எனவே சுடுத்தண்ணீர் தலைக்கு கீழே மட்டும் பயன்படுத்த வேண்டும். தலைக்கு குளிர்ந்த தண்ணீர் அல்லது இளம்சூடான தண்ணீரை பயன்படுத்தலாம்.

Dr. ரா. பாலமுருகன், அரசு ஆயுர்வேத மருத்துவர், 9025744149
முக வாதம், கண் வலி, கண்ணில் நீர்வடிதல், காது வலி, காதில் நீர் வடிதல், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, அஜீரணம் உள்ளவர்கள் அந்த தொந்தரவுகள் சரியாகும் வரை தலைக்கு குளிப்பதை தவிர்க்கலாம். சரி எவ்வாறு குளிக்க வேண்டும் என்பதை காண்போம்.
இதுநாள் வரையிலும் குளியலறைக்கு சென்று இருக்கிற தண்ணீரில் குளித்து விட்டு அவசரமாக தலையை துவட்டி செல்லுவது வழக்கம். இதற்கும் வழிகாட்டுதலை வழங்குகிறது ஆயுர்வேதம். அதாவது முதலில் தலையை நனைக்காமல் உடலில் தண்ணீர் ஊற்றக்கூடாது. இது எதனால் கூறப்பட்டு இருக்கலாம் என்றால் முதலில் தண்ணீரை உடலுக்கு ஊற்றும்போது ஏற்கனவே சூடாகயிருக்கும் உடலில் தண்ணீர் பட்டவுடன் சூடு எழும்பி அது தலையை தாக்க வாய்ப்புள்ளது. எனவே முதலில் குளியலுக்கு சிறிதளவு தண்ணீரைக்கொண்டு தலையை நனைத்து குளியலுக்கு உடலை தயார் செய்ய வேண்டும்.
அடுத்தபடியாக மிகுந்த குளிர்ச்சியான நீரில் குளிக்கக்கூடாது. ஆடையில்லாமல் குளிக்கக்கூடாது. ஒற்றை ஆடையுடன் குளிக்க வேண்டும். குளித்தபின்பு வேகமாக உடலையும் தலைமுடியையும் துவட்டிக்கொள்ளக்கூடாது. அவசரமாக துவட்டினால் தோலின் வனப்பும், முடியின் உறுதி தன்மை கேள்விக் குறியாகிவிடும்.
ஒரு நாளைக்கு ஆண்கள் இரண்டு வேளையும், பெண்கள் ஒரு வேளையும் குளிக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஏன் இந்த பாலின வேறுபாடு என்று பார்ப்போமேயானால் அக்காலத்தில் ஆண்கள் பணி நிமித்தமாக வெளியே சென்று வீட்டுக்கு திரும்பினார்கள். அதனால் இரு வேளை குளிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அக்கால பெண்கள் அவ்வாறு இல்லை. அதன் காரணமாக ஒரு வேளை குளிக்க சொல்லியிருக்கலாம். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு முடி அதிகம் என்பதினால், முடியை உலர்த்துவது கடினம் என்ற காரணத்தினால் கூட இருக்கலாம். ஆனால் இக்காலத்தில் அனைவரும் சமம் என்றாகிவிட்டது. எனவே அனைவரும் இருவேளை குளிக்க வேண்டும். இதில் விதியை சற்று தளர்த்தி தேவைப்படுவோர் மட்டும் ஒரு தடவை உடலுக்கும் தலைக்கும், மற்றொரு தடவை உடலுக்கு மட்டும் குளிக்கலாம்.
குளியலின் வகைகள் - ஒன்னு சுடுத் தண்ணீர் குளியல் மற்றொன்று குளிர்ச்சியான தண்ணீர் குளியல் என்று தான் அனைவரும் அறிந்தது. ஆனால் சாஸ்திரங்கள் பல குளியல்களை கூறுகின்றன. அவற்றில் ஒன்று தான் ஐவகை குளியல். 1. நிலம் சார்ந்த குளியல் உதாரணத்திற்கு மண் குளியல். 2. நீர் சாந்த குளியல் - இது தான் நடைமுறையில் உள்ள குளியல். 3. நெருப்பு சார்ந்த குளியல் - நீராவி குளியல், சூர்ய ஒளியில் இருந்துக்கொண்டு வியர்வை மூலமாக குளித்தல். 4. வாயு சார்ந்த குளியல் - வெளிக்காற்று உடலில் படும்படியிருத்தல் அல்லது மூலிகைக்கொண்டு புகை எழுப்பி அப்புகை உடலில் படும்படி செய்தல். 5. ஆகாயம் சார்ந்த குளியல் - வெட்ட வெளியில் உலாவுதல். இதற்கும் மேல் மற்றொரு குளியல் இருக்கிறது. அது தான் மானசீக குளியல். இவை தான் மனதளவில் உள்ள அழுக்குகளை போக்க வல்லது.
இவை இருக்கட்டும். நாம் தற்போது நடைமுறையில் நோயற்றவர்களுக்கு உள்ள குளியல், நோயுள்ளவர்களுக்கு உள்ள குளியல் என இரண்டாக பிரித்து பார்ப்போம். ஆம் இன்றைய காலகட்டத்தில் நீண்ட நாள் நோயினால் அவதியுறுபவர்கள் ஏராளம். அவர்களுக்கு மூலிகை குளியல் எவ்வாறு நன்மையளிக்கும் என்பதை வரும் தொடரில் காண்போம்.
- எல்லா மார்புவலியும் மாரடைப்பு வலி அல்ல.
- இதயத்தை மிகவும் பாதிக்கக்கூடிய காரணிகளில் முதன்மையானது மனஅழுத்தம்
இதயத்தை எப்படிப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அறிவதற்கு ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 29-ம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நீங்கள்நீண்ட நாட்கள் வாழ, இதய நோயால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து விலகி இருக்க இப்பகுதி உங்களுக்கு வழிகாட்டும்.
முதலில் நம் இதயத்தின் இயல்பு பற்றிப் புரிந்து கொள்வோமா? இதயம் ஒரு முறை துடித்து விரிவடைவதற்கு 8 நொடிகள் எடுத்துக் கொள்கிறது. முதல் 5 நொடிகளுக்கு விரிவடைந்து தூய்மையாக்கப்பெற்ற இரத்தத்தை நுரையீரலில் இருந்து இடப்பக்க அறைகளில் பெறுகிறது. அதேநேரத்தில் கெட்ட இரத்தம் உடலின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வலப்பக்க அறைகளில் பெறப்படுகிறது. அடுத்த 3 நொடிகளுக்கு இதயம் சுருங்கும்போது கெட்ட இரத்தம் தூய்மையாக்கப்படுவதற்கு நுரையீரலுக்கும், தூய இரத்தம் உடல் முழுவதற்கும் தமனிகள் வாயிலாக எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி ஓய்வில்லாமல் பிறப்பு முதல், நம் இறப்பு வரை வேலை செய்கிறது நம் இதயம்.
நிறைய நோயாளிகள் இடது தோள்பட்டை வலி வந்தாலோ இடது கை வலித்தாலோ மாரடைப்பு வந்துவிட்டதோ? என்று பயப்படுகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் மார்புவலி என்பது எல்லோருக்கும் இயல்பாக ஏற்படக் கூடிய ஒன்றாகி விட்டது. மார்புவலி ஏற்படுவதற்குப் பலதரபபட்ட காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் மாரடைப்பு (ஹார்ட்அட்டாக்). இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எல்லா மார்புவலியும் மாரடைப்பு வலி அல்ல. மார்பு வலி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
மார்புவலி ஏற்படுவதற்கான காரணங்கள்
மன அழுத்தம், நிறைய நேரங்களில் நம்மனதில் ஏற்பட்டகாயங்கள், கவலைகள், பதற்றம் மற்றும் பிற மனநலச் சிக்கல்களால் கூட இந்த மார்புவலி ஏற்படலாம். இந்த மனஅழுத்தத்தினால் பலப்பேருக்கு இதயம் கனப்பது போன்ற உணர்வு, இதயத்தில் அழுத்தம், மார்பில் சுருக்சுருக்கென்று ஒரு கூர்மையான வலி மற்றும் இதயத்தில் தீவிரவலி போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் மார்புவலி மார்பெலும்பின் அடிப்பகுதியில் ஏற்படும். சிலசமயங்களில் நமக்கு ஏற்படும் மிகுந்த பயமே மார்பில்வலி ஏற்படக் காரணமாக அமைந்து விடுகிறது.
ஏதாவது கனமான பொருளைத் தூக்கும்போதோ, தீவிர உடற்பயிற்சிகளைச் செய்யும்போதோகூட மார்புவலி ஏற்படலாம். மாதவிடாய் நாட்களின் போது சில பெண்களுக்கு மார்பில் வலி ஏற்படலாம். மாதவிடாய் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் இது சரியாகிவிடும். நுரையீரல் மற்றும் நுரையீரலைச் சுற்றி உள்ள சவ்வுகளில் ஏற்படும் இடர்களினாலும் மார்பு வலி ஏற்படலாம். விலா எலும்பு மற்றும் சதைகளில் ஏற்படும் இடர்களினால் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் வலி ஏற்படுகின்றது.
உணவுக் குழாய்களில் ஏற்படும் இடர்கள் நடுமார்பில் வலி ஏற்படக் காரணமாகிறது. ஆக அனைத்துமே மார்பு வலியை ஏற்படுத்தினாலும், மாரடைப்பினால் ஏற்படும் மார்புவலி சில சிறப்புத் தன்மைகளைக் கொண்டிருக்கும்.
மாரடைப்பினால் ஏற்படும் வலி எவ்வாறு இருக்கும்?
மாரடைப்பு என்றால், வலி, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். மேலும் வலிநீண்ட நேரம் வரை நீடிக்கும். மார்பில் தோன்றும் வலிபடிப்படியாகத் தோள்பட்டை, முதுகு, கைகள், தாடைஎன்றுபரவ ஆரம்பித்துவிடும். வியர்த்துக்கொட்டுவது சிலருக்கு ஏற்படலாம், சிலருக்கு வாந்தி வரக்கூடும். இவை அனைத்துமே ஒருவருக்கு இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே உங்களுக்கு வலிகடுமையாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

மரு.அ.வேணி
இதயத்தைப் பாதிக்கும் காரணிகள்
இதயத்தின் இயக்கம் மாறுபடும்போது பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.
இதயத்தை மிகவும் பாதிக்கக்கூடிய காரணிகளில் முதன்மையானது மனஅழுத்தம் (Stress) ஆகும். இந்த மனஅழுத்தம் கார்டிசால் மற்றும் பல வேதியியல் பொருள்களைச் சுரக்க வைக்கிறது. இது கொழுப்பை இரத்தக் குழாய்களில் படியச் செய்வதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதநோய் ஏற்படுகின்றன. மேலும் இது இதயத் துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தி இதய நோய்க்கு இட்டுச் செல்கிறது.
இன்று பள்ளிக்குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் கூறும் சொல் மனஅழுத்தம் (Stress/Tension). இவையே இக்காலக்கட்டத்தில் மாரடைப்புக்கு முதன்மைக் காரணம். எனவே மனஅழுத்தம் குறைய என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிப் பின்வரும் பகுதிகளில் விரிவாகப் பார்க்கலாம். இதயத்தைப் பாதிக்கக்கூடிய அடுத்த காரணி இரவில் அதிக நேரம் கண்விழிப்பது மற்றும் குறைந்த நேர உறக்கம். காலம் கடந்து 10 மணிக்கு மேல் உணவருந்திவிட்டு உடனே உறங்குவது இதயத்தையும் மற்ற உடல் உறுப்புகளையும் கெடுக்கக்கூடியது.
சமீபத்தில் 40 வயதில் இருப்பவர்கள் இதய நோய்களுக்கு அதிகம் ஆளாகிறார்கள். புகைப்பிடிப்பது இதய நோய்கள் ஏற்பட ஒரு முக்கிய காரணம். அடுத்து, இப்போது பலரும் உட்கார்ந்தே செய்யும் பணிகளில் இருக்கின்றனர். இதனால் உடல் இயங்க வாய்ப்புக் குறைந்துவிடுகிறது. இதுவும் மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாகும். கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், அதிக இரத்தக் கொழுப்பின் அளவு, மரபணுக் கோளறுகள், மது மற்றும் புகைப் பழக்கம், போதைப்பொருட்களுக்கு அடிமையாவது, உடல் பருமன். இவை அனைத்துமே மாரடைப்பை வருவிக்கும் மிக முதன்மையான காரணிகளில் சிலவாகும், இவற்றில் மரபணு மாற்றங்களைத் தவிர மற்றவற்றை நம்மால் தவிர்க்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதயத்தைப் பாதுகாப்பது எப்படி?
"விருந்தும் மருந்தும் மூன்று நாள்" எனும் பழமொழி நம் அனைவரும் அறிந்ததுதான். முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பலகாரம் என்பது தீபாவளி மற்றும் சிறப்பான சில விழாக்களில்தாம் கிடைக்கும். ஆனால் இப்போதோ, ஆண்டு முழுவதும்எப்போது வேண்டுமானாலும் வேண்டிய பலகாரம் கிடைக்கிறது.
நலவாழ்வு காக்கும் இந்தியப் பாரம்பரிய உணவுகளைச் சாப்பிடும் வழக்கம் இப்போது பொதுவாகவே குறைந்து விட்டது. மேற்கத்திய உணவுப் பழக்கம் நம்மை அடிமைப்படுத்திவிட்டது. சிறுதானியங்களின் மதிப்பை நாம் மறந்துவிட்டோம். பருப்புகளின் பலனைப் புறந்தள்ளிவிட்டோம். காய்கறிகளைச் சமைக்கச் சோம்பல் வந்துவிட்டது. மாறாக, அடிக்கடி உணவகங்களுக்குச் சென்று, எண்ணெய்யில் வறுத்த, பொரித்த, கலோரிச் சத்து மிகுந்த பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகளையும், அசைவ உணவுகளையும் மிகையாக உண்பது வாடிக்கையாகி விட்டது.
ஆயத்த உணவுகளைக் குழந்தைகள், இளம் வயதினர் சாப்பிடுவதால், உடலில் கொழுப்பு அதிகமாகிறது. இதனால் இதய நோய்கள் சிறுவயதிலேயே வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். முடிந்த அளவு இந்த உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது. இவற்றை வழக்கமான உணவாகச் சாப்பிடவேகூடாது. நம் பாரம்பரிய அரிசி வகைகள், கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற தானிய உணவுகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகளும், பழங்களும் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். நன்கு தீட்டப்பட்ட அரிசி, உப்பு, சர்க்கரை போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நண்பர்கள், குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது; அதிகம் சமூக ஊடகம் பயன்படுத்தாமல், அலை பேசியைப் பயன்படுத்தாமல் இருப்பது, யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் செய்வது என நம்மை நாமே அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் இரவு வேளையில் குறைந்தது 10 மணி நேரமாவது உணவு மண்டலத்துக்கு ஓய்வு கொடுத்தால்தான், நம் இதயமும், இரத்தக் குழாய்களும் நலமாக இருக்கும். எனவே நாம் அனைவரும் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும், என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தினமும் 30 நிமிட உடற்பயிற்சி தேவை. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இரவில் பணிசெய்பவர்களின் கவனத்திற்கு
இரவில் பணி செய்பவோருக்கு இதயம் தொடர்பான நோய்கள், பகலில் பணி செய்பவர்களை விட அதிகம் ஏற்படுவது தெரியவந்துள்ளது! இரவில் பணி செய்பவர்களில் இதயத்துடிப்பு 20 முதல் 25 சதவீதம் சீராக இல்லை என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதே போல், இரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்ற இடர்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, வெளிச்சம் இல்லாத அறையில் 8 மணி நேரம் வரை நன்றாக உறங்க வேண்டும். மேற்கூறிய தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
பெண்களின் கவனத்திற்கு
இதய நலனில், பெண்கள் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வரை ஈஸ்ட்ரோஜன் இயல்பாக சுரக்கும். இதனால், 45 வயது வரை இதய நோய்கள் ஏற்படுவது குறைவாக இருக்கும். ஆனால், மாதவிடாய் நின்றதும், ஆண்களுக்கு இணையாக இதய நோய் வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த வயதில், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, படபடப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இப்படிச் செய்வதால் நம் இதயமும் பாதுகாக்கப்படும் பிறர் இதயங்களிலும் நாம் நீண்ட நாட்கள் வாழவும் முடியும். சிந்தித்துச் செயலாற்றுங்கள்.
- ரஜினியுடன் அறையில் தங்கி இருந்த வேணு மற்றும் நண்பர்களும் புறப்பட்டு விட்டனர்.
- சினிமா வாய்ப்புகள்தான் அவரை தேடி ஒன்றுகூட வரவில்லை.
அபூர்வ ராகங்கள் படத்தை சென்னையில் திரைப்படக் கல்லூரி நண்பர்களுடனும், பெங்களூரில் கர்நாடகா அரசு போக்குவரத்துக் கழக நண்பர்களுடனும் சேர்ந்து பார்த்த திருப்தி ரஜினிக்கு ஏற்பட்டு இருந்தது. அந்த மகிழ்ச்சியுடன் அவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு திரும்பினார்.
அப்போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது.... திரைப்படக் கல்லூரியில் படித்த நண்பர்களுடன் அமைந்தகரை அருண் ஓட்டலில் ரஜினி தங்கி இருந்தார். திரைப்படக் கல்லூரி படிப்பு நிறைவு பெற்றுவிட்டதால் அவரது நண்பர்கள் ஓட்டல் அறையை காலி செய்து விட்டு ஆளுக்கு ஒரு பக்கமாக பிரியத் தொடங்கினார்கள்.
ரஜினியுடன் அறையில் தங்கி இருந்த வேணு மற்றும் நண்பர்களும் புறப்பட்டு விட்டனர். இதனால் ரஜினியும் அருண் ஓட்டல் அறையை காலி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அவருக்கு எங்கு செல்வது என்பது புரியவில்லை. இதுபற்றி நண்பர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இவை எல்லாவற்றையும் ரஜினியின் நண்பர்களில் ஒருவரான சதீஷ் கவனித்துக் கொண்டு இருந்தார். அவர் மற்றொரு நண்பரான தெலுங்கு வகுப்பில் படித்த விட்டல்ராவிடம், "சிவாஜி பாவம்டா.... அவன் இந்த அறையை காலி செய்து விட்டால் வேறு எங்கு போவான்? நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது. நாம்தான் அவனை இங்கு அழைத்து வந்தோம். இப்போது மீண்டும் அவன் வேறு இடம் தேட வேண்டியது இருக்கிறது. அவனுக்கு நாம் ஏதாவது உதவி செய்ய வேண்டும்.
அவனுக்கு இப்போது பட வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கின்றன. நல்ல வசதியான இடமாக இருந்தால்தான் அவனுக்கு நன்றாக இருக்கும்" என்றார். அதோடு, "எனக்கு மட்டும் வசதி வாய்ப்புகள் இருந்தால் அவனுக்கு நிச்சயம் உதவி செய்து இருப்பேன்" என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்தவிட்டல் ராவுக்கு மனம் இளகியது. விட்டல் ராவ் மிகப்பெரிய வசதி வாய்ப்புகளுடன் இல்லா விட்டாலும் சென்னை ராயப்பேட்டையில் அவர் குடும்பத்தினருக்கு ஓரளவு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டின் ஒரு பகுதியில் அறைகள் காலியாக இருந்தன.
இதைப் பற்றி ஒரு நிமிடம் யோசித்த விட்டல்ராவ் அடுத்த நிமிடமே, "டேய் கவலைப்பட வேண்டாம். ரஜினி என் வீட்டில் வந்து தங்கிக் கொள்ளட்டும். அவனுக்கு எவ்வளவு வாடகை கொடுக்க முடியுமோ அதை மட்டும் கொடுத்தால் போதும். அவன் எதிர்பார்க்கும் வசதிகள் நிச்சயமாக அந்த வீட்டில் கிடைக்கும்" என்றார்.
உடனே சதீஷ், டேய் ரொம்ப நன்றிடா... நீ செய்து இருக்கும் உதவி மிகப்பெரியது. நானும் ரஜினியுடன் வந்து தங்கி கொள்ளட்டுமா? என்று கேட்டார். அதற்கும் விட்டல்ராவ் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ரஜினி ஒரு நல்லநாள் பார்த்து விட்டல்ராவின் வீட்டுக்கு குடிபெயர்ந்தார்.
அன்று முதல் ரஜினியின் புதிய முகவரியாக 36/1, புதுப்பேட்டை கார்டன் தெரு, ராயப்பேட்டை, சென்னை-14 என்று மாறியது. இந்த இடம் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய 3 முக்கிய பகுதிகளை இணைக்கும் மையப்புள்ளியில் இருந்தது. அதாவது மியூசிக் அகாடமியின் அருகில் அந்த வீடு அமைந்து இருந்தது.
ரஜினிக்கு அந்த வீடு மிகவும் பிடித்துப் போனது. தன்னைத் தேடி வரும் படத் தயாரிப்பாளர்கள், நண்பர்களுடன் அமர்ந்து பேசுவதற்கு மிகவும் வசதியாக இருந்ததால் அங்கு அவர் சுதந்திரமாக நடமாட தொடங்கினார். மாத வாடகையாக அவர் 115 ரூபாய் கொடுத்தார்.
இதனால் ரஜினி 3 அறைகள் மற்றும் ஒரு பெரிய கூடம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விட்டல்ராவ் குடும்பத்தினர் அனுமதி கொடுத்து இருந்தனர். அந்த வீட்டின் வெளியே இருந்த பரந்த முற்றமும் ரஜினிக்கு பயன் உள்ளதாக இருந்தது.
ஆனால் சினிமா வாய்ப்புகள்தான் அவரை தேடி ஒன்றுகூட வரவில்லை. அபூர்வ ராகங்கள் படத்தின் படப்பிடிப்பு 1975-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவு பெற்று விட்ட நிலையில் அடுத்த சில மாதங்கள் அவர் சென்னையில் ஒவ்வொரு சினிமா கம்பெனியாக ஏறி-இறங்கி ஏமாற்றத்துக்குள்ளாகி இருந்தார்.
ஒரு படத்தயாரிப்பாளர் ரஜினியை நடித்து காட்டும்படி சொன்னதால் அவருக்கு கோபமே வந்து விட்டது. பாலச்சந்தர் சார் படத்தில் நடித்து இருக்கிறேன் என்று சொன்ன பிறகும் என்னை நடித்துக் காட்ட சொல்லலாமா? என்று அவர் ஆவேசம் ஆனார். இதனால் அந்த பட நிறுவனம் ரஜினிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
ரஜினி புகழ் பெற்ற பிறகு அதே நிறுவனம் தேடி வந்து வாய்ப்பு கொடுத்தது என்பது தனி கதை. பல மாதங்கள் வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் ரஜினிக்குள் ஒரு சோர்வு மனப்பான்மை வந்து இருந்தது. இதை எப்படியோ டைரக்டர் பாலச்சந்தர் தெரிந்து கொண்டார். அபூர்வ ராகங்கள் படத்தில் மிக சிறிய வேடம் கொடுத்ததால் ரஜினியின் முழுத் திறமையும் வெளியில் தெரியாமல் போய் விட்டது என்ற எண்ணம் பாலச்சந்தருக்கு ஏற்பட்டது.
எனவே ரஜினியை மீண்டும் பட்டை தீட்ட டைரக்டர் பாலச்சந்தர் முடிவு செய்தார். ஏற்கனவே அவர் சொன்னது போல தமிழில் தயாரித்த அவள் ஒரு தொடர்கதை படத்தை தெலுங்கில் தயாரிக்க முடிவு செய்தார்.
ரஜினியை அழைத்து உனக்கு தெலுங்கு பேச தெரியுமா? என்று கேட்டார். ரஜினிக்கு உண்மையில் தெலுங்கில் சில வார்த்தைகளை தவிர வேறு எதுவுமே தெரியாது. என்றாலும் வந்த வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஏதோ ஒரு தைரியத்துடன் தெலுங்கு தெரியும் என்று சொல்லி விட்டார்.
உடனே அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஜெய்கணேஷ் நடித்த வேடத்தில் தெலுங்கில் ரஜினியை நடிக்க வைக்க டைரக்டர் பாலச்சந்தர் ஏற்பாடுகள் செய்தார். அதன்படி "அந்துலேனி கதா" என்ற பெயரில் அவள் ஒரு தொடர்கதை படம் தெலுங்கில் எடுக்கப்பட்டது. இந்த படம் தெலுங்கில் மிக பிரமாதமாக ஓடியது. முதல் தெலுங்கு படத்திலேயே ரஜினிக்கு ஆந்திர ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது. டைரக்டர் பாலச்சந்தரின் ஒவ்வொரு முத்திரையும் ரஜினியின் நடிப்பில் மேலும் மேலும் பட்டை தீட்டி மிளிர வைத்தன.
1976-ம் ஆண்டு தெலுங்கில் "அந்துலேனி கதா", கன்னடத்தில் "கதா சங்கமம்", "பாலு ஜேனு" ஆகிய 3 படங்களில் ரஜினி நடித்து முடித்து இருந்தார். கன்னட படங்களும் அவருக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்து இருந்தன. இதன் தொடர்ச்சியாக ரஜினிக்கு ஏற்கனவே வாக்களித்தபடி டைரக்டர் பாலச்சந்தர் தனது "மூன்று முடிச்சு" படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தில் ரஜினிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வில்லன் வேடம் வழங்கப்பட்டது. கமல்ஹாசன் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் அவரை மூன்று முடிச்சு படத்தில் கவுரவ வேடத்தில் டைரக்டர் பாலச்சந்தர் நடிக்க வைத்திருந்தார்.
அந்த படத்தில் ரஜினி கதாநாயகன். கதாநாயகியாக ஸ்ரீதேவி அறிமுகம் ஆனார். தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வந்த ஸ்ரீதேவிக்கும் "மூன்று முடிச்சு" படம்தான் முதல் முதலாக கதாநாயகியாக நடித்த படம் ஆகும். படத்தில் கமல்ஹாசனும், ரஜினியும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் ஸ்ரீதேவியை காதலிப்பார்கள். ஆனால் ஸ்ரீதேவிக்கு கமல்ஹாசனைதான் பிடித்து இருந்தது. எனவே அவர் கமல்ஹாசனை காதலித்தார்.
இதை அறிந்ததும் ரஜினிக்கு கமல்ஹாசன் மீது கோபமும், ஆத்திரமும் வந்தது. கமல் மீது அவர் வெறுப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி மூன்று பேரும் ஒரு படகு பயணம் மேற்கொள்வார்கள். அப்போது கமல்ஹாசன் கால் தடுமாறி படகில் இருந்து தண்ணீருக்குள் விழுந்து விடுவார். நீச்சல் தெரியாததால் கமல் தத்தளிப்பார். அவரை காப்பாற்றும்படி ஸ்ரீதேவி கதறி கெஞ்சுவார். ஆனால் ரஜினி காப்பாற்ற மாட்டார்.
காதலில் தனக்கு போட்டியாக இருக்கும் கமல்ஹாசன் தண்ணீரில் மூழ்கி சாகட்டும் என்று விட்டு விடுவார். இதனால் ரஜினி மீது ஸ்ரீதேவிக்கு மேலும் கோபம் ஏற்பட்டது. அவரை பழி வாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் ரஜினியின் தந்தையாக நடித்த கல்கத்தா விஸ்வநாதனை திருமணம் செய்து கொள்வார்.
இதை ரஜினி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கடைசியில் அவர் மனம் திருந்துவார். இதுதான் மூன்று முடிச்சு படத்தின் கதை. இந்த படத்தில் ரஜினியை இரண்டு மாறுபட்ட கோணங்களில் டைரக்டர் பாலச்சந்தர் கையாண்டு இருந்தார். தமிழ் திரையுலக பிரபலங்கள் அனைவரும் இந்த மாறுபட்ட கோணம் நிச்சயமாக தோல்வியில் முடியும் என்றுதான் பாலச்சந்தரிடம் சொன்னார்கள்.
ஆனால் பாலச்சந்தர் ரஜினியை முழுமையாக நம்பினார். அதற்கு காரணம் ரஜினியிடம் இருந்த வித்தியாசமான ஸ்டைஸ் தான். அந்த ஸ்டைலை மூன்று முடிச்சு படத்தில் டைரக்டர் பாலச்சந்தர் பயன்படுத்தி வெற்றி கண்டார். அதன் மூலம் தமிழகத்தில் ஒரு புதிய கலாச்சாரம் உருவானது.
அது என்ன கலாச்சாரம் என்பதை நாளை காணலாம்.
- நல்ல பாக்டீரியாக்கள் அழிவதால் நமது உடலில் நோய்க்கிருமிகள் எளிதாக தொற்றிக்கொள்ளும்.
- புரோபயாட்டிக் நல்ல பாக்டீரியாவில் பொதுவாகவே பாதுகாப்பு தன்மைகள் அதிகமாக இருக்கிறது.
நமது உடலின் ஆரோக்கியத்துக்கு புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை நமது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. நமது உடலில் நோய்களை ஏற்படுத்தக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி அழிக்கின்றன. இதன் மூலம் நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகின்றன. இதில் முக்கியமாக குடல் பாக்டீரியா நமது ஆரோக்கியத்துக்கான அடிப்படை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
அதேபோல் பெண்களின் பெண் உறுப்புகளில் இருக்கிற சில நல்ல பாக்டீரியாக்கள் அவர்களின் ஆரோக்கியத்தில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. பெண்களின் கர்ப்பப்பைக்குள் நுழைய முயலும் தொற்றுக்களை தடுக்கும் முக்கியமான வேலைகளை இந்த நல்ல பாக்டீரியாக்கள் செய்கின்றன.
இந்த நல்ல பாக்டீரியாக்கள் அழிவதால் நமது உடலில் நோய்க்கிருமிகள் எளிதாக தொற்றிக்கொள்ளும். குறிப்பாக கர்ப்பப்பையில் நோய்த்தொற்றுக்கள் எளிதாக பரவி விடும். அப்படி பரவாமல் இருக்க யோனிப்பகுதியில் உள்ள பாக்டீரியாவின் அமிலத்தன்மை பி.எச். அளவை மிகவும் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை சீரமைக்கும் பாக்டீரியாக்கள்:
நமது உடலில் இயற்கையாக உள்ள நல்ல பாக்டீரியாக்கள் லாக்டோபேசிலிஸ் ஆகும். இவற்றில் கிரிஸ்பேக்டர்ஸ், கெசேரி, ஜென்சினி ஆகிய வகைகள் மிகவும் பொதுவான லாக்டோபேசிலிஸ் ஆகும். இதனுடைய தன்மையே இந்த அமிலத்தன்மை பி.எச். அளவை 3.5 முதல் 4.5 ஆக வைத்துக்கொள்ளும். அப்படி இருந்தால் தான் எந்தவித தொற்றுக்களும் நமது உடலின் உள்ளே நுழைய முடியாது.
எனவே பெண்களை பொருத்தவரைக்கும் கர்ப்பப்பை வாயில் பி.எச். அளவை பராமரிப்பது இந்த லாக்டோபேசிலிஸ் தான். இது மட்டுமல்ல, இந்த லாக்டோபேசிலிஸ் சில ஆன்டி பாக்டீரியாக்களை வெளிப்படுத்தும். அதாவது பாக்டீரியோசின், ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இந்த ஹைட்ரஜன் பெராக்சைடை புண்களை கழுவுவதற்கு பயன்படுத்துவோம்.
இவை அனைத்தையும் இந்த நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்கிறது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் யோனி பகுதியில் தங்கியிருப்பதால் எந்த கிருமிகளும் கர்ப்பப்பைக்குள் செல்ல முடியாது. இந்த லாக்டோபேசிலிஸ் அப்படி ஒரு பாதுகாப்பை கொடுக்கும். இதுதவிர இவை அந்த செல்லின் மேற்பரப்பு எல்லாவற்றிலுமே, அதனுடைய செல் ஏற்பிகளுடன் சேர்ந்து செல்கள் வழியாக தொற்றுக்கள் உள்ளே நுழைய முடியாதபடி ஒரு அடுக்கு போல உருவாகி காணப்படும்.
வெளியில் இருந்து ஏதாவது கெட்ட பாக்டீரியா நமது உடலின் உள்ளே நுழைந்து ஊடுருவினால், அது அதிகமாக பரவிய பிறகுதான் கிருமிகளிடம் இருந்து நோய் தாக்கம் ஏற்படும். இதனை தடுப்பதற்கு லாக்டோபேசிலிஸ் இதனுடைய செல்களின் சீட்ஸ் மேலே ஒரு பாதுகாப்பு படிவத்தை உருவாக்குகிறது. மேலும் ஆன்டிபயாடிக் போல வெளியிடுகிறது. அது தவிர இது ஒரு பாதுகாப்பு அடுக்கையும் உருவாக்குகிறது.
இவை தவிர இது நமது உடலில் சில நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் சீரமைக்கிறது. செல்களில் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை சீரமைப்பதால் இதை கடந்து எந்த கிருமிகளும் நமது உடலில் நுழைய முடியாது. அது ஒரு பாதுகாப்பான நோய் எதிர்ப்பு சக்தி மெக்கானிசத்தையும் உருவாக்குகிறது. இதெல்லாம் இந்த நல்ல பாக்டீரியாவின் முக்கியமான விஷயங்கள் ஆகும்.
பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் பூஞ்சை தொற்று:
அப்படி இருக்கும் நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் இந்த நல்ல பாக்டீரியா பழுதானாலோ அல்லது அழிக்கப்பட்டாலோ அல்லது குறைவானாலோ பல நேரங்களில் நமது உடலில் எளிதாக சில கிருமிகள் தொற்றிக்கொள்ளும். முக்கியமாக பூஞ்சை நோய்த்தொற்று வரும். அதாவது பூஞ்சை தொற்று தான் எங்கு வேண்டுமானாலும் ஏற்படும். உடலில் ஏதாவது ஒரு பகுதியில் நோய்க்கிருமி வருகிறது என்றால், அந்த இடத்தில் பாதுகாப்பு இல்லாத அடுக்குகள் இருந்தால், உடனே பூஞ்சை தொற்று பரவி பெண்களுக்கு தொல்லை கொடுக்கும்.
இந்த பூஞ்சை நோய்த்தொற்றான கார்ட்னரெல்லா என்பது எளிதாக பரவும் தன்மை கொண்டது. இது உடலில் பரவும் போது தான் கிருமிகளும் உடலில் தொற்றி எளிதில் பரவலாம். அது வைரஸ் ஆக இருக்கலாம், பாக்டீரியாவாக இருக்கலாம், வேறு பலவிதமான தொற்றுக்களாக இருக்கலாம், அருகில் இருக்கிற மலக்குடல் பகுதியில் ஈகோலை எனப்படும் கெட்ட பாக்டீரியா வரலாம், பல நேரங்களில் சிறு நீர்க்கு ழாயிலும் கெட்ட பாக்டீரியா ஊடுருவலாம். அதாவது நமது உடலில் உள்ள நல்ல பாக்டீரியா பழுதடைந்தால், அந்த பகுதியில் பாதுகாப்பு தன்மை குறைவாகி, அந்த நோய்த்தொற்றுகள் நமது உடலில் எளிதாக பரவுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். நமது உடலில் எப்பொழுதெல்லாம் பாக்டீரியா பழுதடையலாம் என்று பார்க்கலாம்.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
நல்ல பாக்டீரியாக்கள் அழிவதற்கான காரணங்கள்:
குறிப்பாக ஏதாவது நோய்க்காக நாம் ஆன்டிபயாடிக் மருந்து சாப்பிடும்போது இந்த நல்ல பாக்டீரியாக்கள் பழுதடைய வாய்ப்பு உள்ளது. நமது உடலில் ஏதோ ஒரு நோய் வரும்போது நாம் என்ன நினைக்கிறோம்? உடனே ஆன்டிபயாட்டிக் மருந்து சாப்பிடுகிறோம். அந்த ஆன்டிபயாடிக் நோய்க்கிருமிகளை மட்டுமல்லாமல், சில நேரங்களில் இந்த நல்ல பாக்டீரியாவையும் பழுதடைய செய்யும். இன்னும் சில நேரங்களில் நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடும்.
இதனால்தான் சில பெண்களுக்கு நல்ல பாக்டீரியாக்கள் குறைவதால் பல நேரங்களில் நோய்த்தொற்று ஏற்பட்டு விடும். இதை நீங்கள் பல நேரங்களில் உணர்ந்து இருப்பீர்கள். அதாவது ஏதோ ஒரு காரணத்துக்காக பெண்கள் ஆன்டிபயாடிக் மருந்து எடுக்கும் போது, அவர்களுக்கு யோனி பகுதியில் அரிப்பு ஏற்படும், வெள்ளைப்படுதல் ஏற்படும், அரிப்பு இருக்கும், நமைச்சல் இருக்கும். இவை அனைத்தும் பூஞ்சை தொற்றுகள் வருவதால் ஏற்படுகிறது. இதனால் பெண்கள் பலரும் அவதிப்படுவது உண்டு.
இந்த பூஞ்சை தொற்றுகள் ஏன் வந்தது என்று பார்த்தால், நாம் சாப்பிடும் ஆன்டிபயாடிக் மருந்து அந்த நல்ல பாக்டீரியாவை அழித்துவிடுகிறது. அல்லது அதை பழுதாக்கி விடுகிறது. அதனுடைய செயல்பாடு குறைவானவுடன் கிருமிகள் பரவி பூஞ்சை தொற்றுக்கள் எளிதாக ஏற்பட்டு விடுகிறது. இதுதான் இதில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
அதனால்தான் பொதுவாகவே ஆன்டிபயாடிக் மருந்து எடுக்கும்போது முக்கியமாக, நல்ல பாக்டீரியாக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, குறிப்பிட்ட வகையான ஆன்டிபயாடிக் மருந்து எடுங்கள் என்று சொல்கிறோம். அப்படி குறிப்பிட்ட வகை ஆன்டிபயாடிக் எடுக்கும்போது கூட, நல்ல பாக்டீரியாக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் கூடவே சில மருந்துகள் எடுத்தால் இந்த மாதிரி எளிதில் பரவக்கூடிய பூஞ்சை உள்ளிட்ட தொற்றுகள் வராமல் தடுக்க முடியும். இதெல்லாம் சில முக்கியமான விஷயங்கள். இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
நல்ல பாக்டீரியாக்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்:
எனவே அந்த வகையில் புரோபயாடிக் எனப்படும் இந்த நல்ல பாக்டீரியாவான லாக்டோபேசிலிஸ், நமது உடலுக்கு நல்ல ஒரு பாதுகாப்பை கொடுக்கும் பாக்டீரியாவாக இருக்கிறது. அதனால் தான் பொதுவாகவே இந்த நல்ல பாக்டீரியாக்கள் பழுதாகக்கூடாது. அதனால் தான் நாம் ஆன்டிபயாடிக் எடுக்கும்போது, கூடவே நல்ல பாக்டீரியாக்களை பாதுகாப்பதற்கான ஒரு மருந்தையும் எடுத்துக்கொள்வோம். அதாவது நல்ல பாக்டீரியா இருக்கும் மற்றொரு மருந்தை கூடுதலாக எடுத்துக்கொள்வோம்.
இந்த புரோபயாட்டிக் நல்ல பாக்டீரியாவில் பொதுவாகவே பாதுகாப்பு தன்மைகள் அதிகமாக இருக்கிறது. இவை அனைத்தும் இந்த ஆன்டிபயாடிக்கின் தாக்கத்தால் உருவாகிற எதிர்மறை விளைவை குறைத்து ஆரோக்கியமான செல்கள் வளர்வதற்கும், பாதுகாப்பு அடுக்கு உருவாவதற்கும் உதவி செய்கிறது. இது ஒரு முக்கியமான விஷயம்.
இந்த வகையில் எந்த ஒரு ஆன்டிபயாடிக்கும் இந்த புரோபயாடிக் பாக்டீரியாவை அழித்து விடாமல் பார்ப்பதற்கு, நாம் ஒரு புரோபயாடிக் மருந்து எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம். பெண்களின் ஒவ்வொரு வாழ்க்கை தரத்திலும், குறிப்பாக மாதவிடாய் வருகிற காலகட்டத்தில் புரோபயாடிக் எனப்படும் நல்ல பாக்டீரியா பாதிக்கப்படும். எனவே அந்த புரோபயாடிக் பாக்டீரியா அழிந்துவிடாமல் நாம் பாதுகாக்க வேண்டும்.
இந்த புரோபயாடிக் பாக்டீரியா இன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டதல்ல. இதை சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். இந்த நல்ல பாக்டீரியாவை அவர்கள் எப்படி கண்டு பிடித்தார்கள்? இந்த நல்ல பாக்டீரியாவை நமது உடலில் அதிகப்ப டுத்துவது எப்படி? அதற்கு என்னென்ன வகையான உணவுகளை நாம் சாப்பிட வேண்டும்? இதைப்பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
- “கேள்வியின் நாயகனே” பாடலை கண்ணதாசன் மிகவும் அற்புதமாக எழுதி இருந்தார்.
- அபூர்வ ராகங்கள் படம் பல்வேறு விருதுகளை பெற்றது.
1975-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று அபூர்வ ராகங்கள் படம் வெளியானது. இந்த படத்தின் கதை மிகவும் வித்தியாசமாக இருப்பதாக மக்கள் மத்தியில் தகவல் பரவி இருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் இந்த படம் வெளியானதும் தொடக்கத்தில் இருந்தே வெற்றிகரமாக ஓடியது.
சென்னையில் மிட்லண்ட், அகஸ்தியா, ராக்சி, கிருஷ்ணவேணி ஆகிய 4 தியேட்டர்களில் அபூர்வ ராகங்கள் படம் திரையிடப்பட்டது. 144 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தில் கதாநாயகன் கமல்ஹாசன், கதாநாயகி ஸ்ரீ வித்யா. இவர்களுடன் சுந்தரராஜன், நாகேஷ், ஜெயசுதா முக்கிய வேடம் ஏற்று இருந்தனர்.
கவிஞர் கண்ணதாசன், ஜெய்சங்கர் இருவரும் சிறப்பு வேடத்தில் வந்து சென்றனர். கடைசி காட்சிகளில் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். ஆனால் படத்தில் அவரது வருகை ரசிகர்கள் மத்தியில் மனதில் பதியும் அளவுக்கு அமைந்தது. அதற்கு காரணம் அபூர்வ ராகங்கள் படத்தின் வித்தியாசமான, சிக்கலான கதை ஆகும்.
இந்த படத்தில் பிரசன்னா என்ற வேடத்தில் மிருதங்க இசைக்கலைஞராக கமல் நடித்து இருந்தார். அவரது தந்தையாக மேஜர் சுந்தரராஜன், மகேந்திரன் என்ற வேடத்தில் நடித்து இருந்தார். பைரவி என்ற வேடத்தில் ஸ்ரீவித்யாவும், ரஞ்சனி என்ற வேடத்தில் ஜெயசுதாவும் நடித்தனர்.
கமல்ஹாசன் இந்த படத்தில் தன்னை விட வயதில் மூத்த ஸ்ரீவித்யாவை காதலிப்பார். ஸ்ரீவித்யாவின் மகள் ஜெய சுதாவை கமல்ஹாசனின் தந்தை மேஜர் சுந்தரராஜன் திருமணம் செய்ய முயற்சி செய்வார். இந்த கதை அமைப்பை தமிழக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற சந்தேகம் டைரக்டர் பாலச்சந்தர் உள்பட அபூர்வ ராகங்கள் படக்குழுவினர் அனைவருக்குமே இருந்தது.
ஆனால் அவர்களது எண்ணங்களை தவிடு பொடியாக்கி விட்டு தமிழக ரசிகர்கள் இந்த படத்தை ஆரவாரமாக ரசித்தனர். கமல்ஹாசனும், ஸ்ரீவித்யாவும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யும் நேரத்தில்தான் பாண்டியன் என்ற பெயரில் புயலாக ரஜினிகாந்த் படத்துக்குள் வருவார்.
அவர்தான் ஸ்ரீவித்யாவை முதல் முதலில் காதலித்தவர். புற்று நோய் பாதித்ததால் அவர் காதலியை விட்டு விலகி இருப்பார். கடைசி காலத்தில் அவர் ஸ்ரீவித்யாவை தேடி வருவார். காதலர்களை சேர்ந்து வாழும்படி சொல்லி விட்டு உயிரை விடுவார். இந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லன் போல வரவில்லை. அவரை அந்த படத்தில் டைரக்டர் பாலச்சந்தர் ஒரு தியாகி போலவே காட்டி இருப்பார். அந்த காட்சிகள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் படம் பாதிக்கப்படவில்லை. வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அந்த படம் பெற்றது.
இந்த படத்தின் வெற்றிக்கு கண்ணதாசன் எழுதிய பாடல்களும் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையும் மிகப்பெரிய பலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. "அதிசய ராகம்... ஆனந்த ராகம்..." பாடலை கே.ஜே.ஏசுதாஸ் பாடி இருந்தார். "கைகொட்டி சிரிப்பார்கள்..." என்று தொடங்கும் பாடலை சியாக் முகமது பாடி இருந்தார்.
"ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்..." என்ற பாடலை வாணிஜெயராம் பாடி இருந்தார். அதுபோல "கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதில் ஏதய்யா?" என்ற பாடலை வாணி ஜெய ராமும், சசிரேகாவும் பாடி இருந்தனர். ஸ்ரீவித்யாவுக்கு வாணி ஜெயராமும், ஜெயசுதாவுக்கு சசிரேகாவும் பாடி இருந்தது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
"கேள்வியின் நாயகனே" பாடலை கண்ணதாசன் மிகவும் அற்புதமாக எழுதி இருந்தார். இந்த பாடலில் அவர் அபூர்வ ராகங்கள் படத்தின் ஒட்டு மொத்த கதையையும் அழகாக சொல்லி இருந்தார். படப்பிடிப்பும் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டு இருந்தது. இந்த பாடல் காட்சியில் ஸ்ரீ வித்யா தவிப்புடன் பாடுவதும், கமல்ஹாசன் மிருதங்கம் வாசிக்காமல் இடையில் எழுந்து செல்வதும் மேஜர் சுந்தரராஜன் முன் வரிசையில் அமர்ந்து பாடலை கேட்பதையும் மிக மிக அற்புதமாக பாலச்சந்தர் காட்டி இருப்பார். அந்த பாடலின் கடைசியில் ரஜினி தோன்றுவதும் மிகப்பெரிய சிறப்பாக அமைந்தது.
இதன் காரணமாக அபூர்வ ராகங்கள் படம் பல்வேறு விருதுகளை பெற்றது. வாணிஜெயராமுக்கும் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது. கமல்ஹாசன், பாலச்சந்தருக்கு பிலிம்பேர் விருதுகள் கிடைத்தன. தமிழகத்தின் பல தியேட்டர்களில் இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் வேடம் பலராலும் பாராட்டுகளை பெற்றது. பத்திரிகை விமர்சனங்களில் ரஜினிகாந்த் நடிப்பு பற்றியும் சிறப்பான கருத்துக்கள் வெளியானது. இது ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய டானிக்காக இருந்தது. என்றாலும் அவர் மனதுக்குள் ஒரு ஆசை தோன்றியது. தனது முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்தை தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப்பட்டார். ரசிகர்கள் அந்த படத்தில் எந்தெந்த காட்சிகளை ரசித்து பார்த்து வரவேற்கிறார்கள் என்பதை நேரில் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
ரஜினிகாந்த் சென்னையில் திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அமைந்தகரை லட்சுமி தியேட்டரிலும், தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரிலும் தான் அதிக தமிழ்ப் படங்களை பார்த்தார். எனவே கிருஷ்ணவேணி தியேட்டருக்கு சென்று அபூர்வ ராகங்கள் படத்தை பார்க்க முடிவு செய்தார்.
(கிருஷ்ணவேணி தியேட்டரில் ரஜினிகாந்த் முதல் முதலில் நடித்த அபூர்வ ராகங்கள் படம் தொடங்கி சமீபத்தில் அவரது சினிமா உலக 50-வது ஆண்டில் வெளியாகி இருக்கும் "கூலி" படம் வரை அனைத்து படங்களும் தவறாமல் வெளியானது என்பது மிகப்பெரிய சாதனையாகும்)
1975-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி ரஜினிகாந்த் டிப்-டாப்பாக உடை அணிந்து, கம...கம....க்கும் சென்ட் பூசிக் கொண்டு தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்ட ருக்கு அபூர்வ ராகங்கள் படம் பார்க்க சென்றார். அவருக்கு முன்பு அங்கு நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர். கூட்டமோ கூட்டம். ரஜினி தவித்துப்போனார்.
வெயிலும், கூட்ட நெரிசலும் அவரை வாட்டி வதைத்தது. கிருஷ்ணவேணி தியேட்டருக்கு சென்றதும் தன்னை ரசிகர்கள் அடையாளம் கண்டுக் கொண்டு சூழ்ந்து கொள்வார்கள் என்று ரஜினிகாந்த் நினைத்து இருந்தார். ஆனால் ஒருவர் கூட அவரை திரும்பிப் பார்க்கவில்லை. ஏனெனில் அவரை யாருக்கும் அந்த சமயத்தில் அடையாளம் தெரியவில்லை. ஆட்டோ கிராப் வாங்க தன்னை மக்கள் கூட்டம் துரத்தும் என்று நினைத்த அவருக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம் ஆகி விட்டது. டென்சன் தீர்வதற்கு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். தியேட்டரில் நிரம்பி வழிந்த கூட்டத்தை தாண்டிச் சென்று டிக்கெட் வாங்க முடியுமா? என்பது அவருக்கு மலைப்பாக இருந்தது.
அப்போது அங்கு குண்டாக இருந்த ஒரு நபர் வந்தார். அவர் ரஜினியைப் பார்த்து, "என்னப்பா டிக்கெட் கிடைவில்லையா? உன்னைப் பார்த்தால் இந்த படத்தில் கடைசியில் வரும் நடிகர் போலவே இருக்கிறாய்? எனவே தியேட்டருக்குள் போய் மானேஜரை பார்த்து நான்தான் இந்த படத்தில் நடித்து இருக்கிறேன் என்று சொல்லி டிக்கெட் கேள்., டிக்கெட் தந்து விடுவார்கள்" என்றார்.
இதைக் கேட்டதும் ரஜினிக்கு சிரிப்பாக வந்தது. உண்மையில் அந்த வாலிபன் நான்தான் என்று அவர் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அந்த நபர், "நேரமாகி விட்டது..... நீ டிக்கெட் வாங்கினால் வாங்கு... வாங்காவிட்டால் எப்படியோ போ..." என்று சொல்லி விட்டு போய் விட்டார். இதையடுத்து ரஜினி அந்த நபர் சொன்னது போலவே தியேட்டருக்குள் சென்று மானேஜரை பார்த்தார். "சார், இந்த படத்தில் நானும் நடித்து இருக்கிறேன். டிக்கெட் வாங்க முடியவில்லை. கடுமையான கூட்டமாக இருக்கிறது. எனக்கு ஒரு டிக்கெட் தாருங்கள்" என்று கேட்டார்.
அவரை பார்த்து தியேட்டர் மானேஜர் நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, "இப்படி எல்லாமா... ஏமாற்றுவீர்கள்? போய் ஒழுங்காக வரிசையில் நின்று டிக்கெட் எடுங்கள்" என்று சொல்லி விரட்டி விட்டார். வெளியில் வந்த ரஜினிக்கு எதுவுமே புரியவில்லை. எப்படியாவது இன்று ரசிகர்களோடு உட்கார்ந்து அபூர்வ ராகங்கள் படத்தை பார்த்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால் டிக்கெட் கிடைக்குமா? என்ற சந்தேகம் அவருக்குள் ஏற்பட்டது. அப்போது அவரை நெருங்கிய ஒரு நபர் கூடுதல் விலைக்கு பிளாக்கில் டிக்கெட் இருப்பதாக சொன்னார்.
இதை கேட்டதும் ரஜினிகாந்த் வேறு வழி தெரியாமல் பிளாக்கில் டிக்கெட் எடுத்துக் கொண்டு தியேட்டருக்குள் சென்றார்.
அங்கு என்ன நடந்தது என்பதை நாளை பார்க்கலாம்.
- படத்தின் இறுதிக் காட்சிகளில் வந்தாலும் சிவாஜிராவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
- ரசிகர்களோடு அமர்ந்து ரஜினி தனது முதல் படத்தை பார்த்தார்.
1975-ம் ஆண்டு, சிவாஜிராவின் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஆண்டாகும். சாதாரண கண்டக்டராக இருந்த அவர் அந்த ஆண்டுதான் சென்னை நடிப்புப் பயிற்சி கல்லூரியில் படித்து முடித்தார். அதே ஆண்டு இயக்குனர் சிகரம் பாலச்சந்தரால் அடையாளம் காணப்பட்டு சினிமாவிலும் தனது வாழ்க்கையை தொடங்கி விட்டார்.
1975-ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் படத்தின் படப்பிடிப்புகள் நடந்து முடிந்து இருந்தன. மிக மிக வித்தியாசமான கதை அம்சம் கொண்ட அந்த படம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்த படத்தில் கமலஹாசன், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், ஸ்ரீவித்யா, ஜெயசுதா என்று நட்சத்திர பட்டாளத்துக்கு மத்தியில் முதன் முதலாக சிவாஜிராவ் தலை காட்டினார். படத்தின் இறுதிக் காட்சிகளில் வந்தாலும் சிவாஜிராவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
இவை அனைத்தும் சிவாஜிராவின் பின்னணியில் ஏதோ ஒரு மாய சக்தி இருந்து அவரை இயக்குவது போன்றே நடந்து முடிந்தது. ஆனால் அந்த மாய சக்தி ராகவேந்திர சுவாமிகள் என்பது அந்த கால கட்டத்தில் சிவாஜிராவுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். சிவாஜிராவின் முதல் நாள் படப்பிடிப்பு அவர் விரும்பியபடியே ராகவேந்திர சுவாமிகளுக்கு உகந்த வியாழக்கிழமை நடந்தது போல, மற்றொரு முக்கிய நிகழ்வும் வியாழக் கிழமையே நடந்தது. அதை இன்றும் ராகவேந்திர சுவாமிகளின் திருவிளையாடல் என்றே அனைவரும் கருதுகிறார்கள்.
1975-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி வியாழக்கிழமை நாடு முழுவதும் மிக உற்சாகமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு கொண்டிருந்தது. அன்று மதியம் பாலச்சந்தரிடம் இருந்து சிவாஜிராவுக்கு ஒரு அழைப்பு வந்தது. அன்று இரவு பாலச்சந்தரை சந்திக்க வேண்டும் என்று சிவாஜிராவிடம் கூறி இருந்தனர்.
அதன்படி அந்த முழு நிலவு நாளில் இரவு 7 மணிக்கு இயக்குனர் பாலச்சந்தரை அவரது அலுவலகத்துக்கு சென்று சிவாஜிராவ் சந்தித்தார். அவரை வரவேற்ற பாலச்சந்தர், 'வாங்க சிவாஜி, அபூர்வ ராகங்கள் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்துவிட்டது. டப்பிங் பணிகளும் நிறைவு பெற்றுவிட்டன.
இன்னும் சில வேலைகள்தான் பாக்கி உள்ளது. படம் தொடங்கும்போது நட்சத்திரங்களின் பெயர் போடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அறிமுகம் நட்சத்திரம் என்று உனது பெயரையும் போட வேண்டும். என்ன பெயர் போடவேண்டும் என்று முதலில் நீயே சொல்.
உன்னுடைய உண்மையான பெயரான சிவாஜிராவ் என்ற பெயர் வேண்டாம். ஏனென்றால் தமிழ் திரையுலகில் ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இருக்கிறார். நீயும் சிவாஜி என்று பெயர் வைத்துக் கொண்டால் குழப்பம் வரும். எனவே அந்த பெயர் வேண்டாம்.
உன்னுடைய பெயரில் இருக்கும் ராவ் என்பதும் தமிழ்நாட்டுக்கு அவ்வளவாக பொருந்தாது. எனவே நீயே ஒரு பெயரை சொல் பார்க்கலாம்' என்றார்.
சிவாஜிராவ் ஏற்கனவே இது தொடர்பாக தனது நண்பரர்களிடம் ஆலோசனை நடத்தி இருந்தார். ஆர்.எஸ்.கெய்க்வாட் அல்லது சரத் என்ற பெயரில் நடிக்கலாம் என்று சிவாஜிராவுக்கு விருப்பம் இருந்தது. ஆனால் அவரது நண்பர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த 2 பெயர்களையும் நிராகரித்து விட்டார்கள்.
இதனால் சிவாஜிராவுக்கு என்ன பெயர் சொல்வது என்று குழப்பமாக இருந்தது. அவர் பாலச்சந்தரிடம் மெல்லிய குரலில் கெய்க்வாட் என்று பெயர் வைக்கலாமா? என்றபடி இழுத்தார். அதை பாலச்சந்தர் ஏற்கவில்லை. கெய்க்வாட் என்பதெல்லாம் கிரிக்கெட்டுக்குதான் சரியாக இருக்கும். தமிழர்கள் உச்சரிக்கும்போது 'கருவாடு' என்று சொல்லிவிடுவார்கள். எனவே அந்த பெயர் வேண்டாம் என்றார். இதையடுத்து சிவாஜிராவ் ஒரு தீர்க்கமான முடிவுடன் பாலச்சந்தரை பார்த்து, 'என்னை திரையுலகுக்கு அறிமுகம் செய்தது நீங்கள்தான். எனவே நீங்களே என்னை ஆசிர்வாதம் செய்து, எனக்கு ஏதாவது ஒரு பெயர் சூட்டுங்கள் சார்' என்றார்.
உடனே பாலச்சந்தர் கடகடவென பேச ஆரம்பித்தார்.... என்னுடைய 'மேஜர் சந்திரகாந்தா' நாடகத்தில் சந்திரகாந்துக்கு 2 மகன்கள் உண்டு. ஒருவன் பெயர் ஸ்ரீகாந்த் மற்றொருவன் பெயர் ரஜனிகாந்த். இதில் ஸ்ரீகாந்த் என்ற பெயரை ஏற்கனவே ஒரு நடிகருக்கு நான் வைத்துவிட்டேன். ரஜனிகாந்த் என்ற பெயரை யாருக்கு வைக்கலாம் என்று நான் நீண்ட நாட்களாக யோசித்துக்கொண்டே இருந்தேன். இந்த பெயர் உனக்கு நன்றாக இருக்கும். எனவே உனக்கு ரஜனிகாந்த் என்று பெயர் வைக்கிறேன்.
இவ்வாறு இயக்குனர் பாலச்சந்தர் சொன்னதும், சிவாஜிராவ் நெகிழ்ந்து போனார். பாலச்சந்தர் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார். அப்போது சிவாஜிராவ், 'சினிமாவில் நான் நல்ல வில்லன் நடிகராக வரவேண்டும் என்று ஆசிர்வாதம் செய்யுங்கள் சார்' என்றார். இதைக் கேட்டதும் இயக்குனர் பாலச்சந்தர் சிரித்துக்கொண்டே, 'வில்லன் எதுக்கப்பா? நீ சிறப்பாக நடிக்கிறாய். நிச்சயமாக நீ எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகனாக வருவாய். பார்த்துக் கொண்டே இரு' என்று சொல்லி ஆசிர்வதித்தார்.
இது ரஜினியின் வாழ்வையே புரட்டிப் போட்ட மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது. அந்த வினாடியே சிவாஜிராவ் பெயர் நீங்கி தமிழ் திரை உலகுக்கு ரஜினிகாந்த் என்ற புதிய நட்சத்திரம் அவதாரம் கிடைத்தது. இந்த பெயர் சூட்டப்பட்ட தினம் வியாழக்கிழமையும், பவுர்ணமியும் ஒருங்கிணைந்த நாளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாமும் இனி சிவாஜிராவ் என்பதை கைவிட்டு 'ரஜினி' என்ற காந்த் பெயரால் அழைக்கலாம். ரஜினி அறியாமலேயே அவரை ராகவேந்திர சுவாமிகள் எப்போதும் உடன் இருந்து கைப்பிடித்து வழிநடத்தினார் என்பதற்கு இந்த பெயர் சூட்டப்பட்ட நிகழ்வையும் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
இயக்குனர் பாலச்சந்தர் தனக்கு பெயர் சூட்டி வாழ்த்தியதும் ரஜினி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கண்ணீர் மல்க பாலச்சந்தரிடம் விடைபெற்று அவரது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். பாலச்சந்தர் சொன்ன பாராட்டுக்கள் ரஜினிக்குள் புத்துணர்ச்சியுடன் இமாலய பலம் வந்தது போல இருந்தது.
கலாகேந்திராவில் இருந்து நேராக மெரினா கடற்கரைக்கு ரஜினி சென்றார். மெரினா கடலை பார்த்தபடி ஒரு இடத்தில் போய் உட்கார்ந்தார்.
கடல் அலை போல மனதில் மகிழ்ச்சி அலை வந்து வந்து போனது. நீண்டநேரம் கடற்கரையில் ரஜினி யோசித்துக்கொண்டே இருந்தார். தனது வாழ்வில் ராகவேந்திர சுவாமிகள் நிகழ்த்தும் அற்புதங்களை நினைத்து மெய் சிலிர்த்தார்.
பெரிய நடிகனாகி சம்பாதித்ததும், தனது குடும்பத்துக்கும் தனக்கு உதவி செய்தவர்களுக்கும் நன்றி மறக்காமல் தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அவரது மனதில் சிந்தனைகள் ஓயாத அலைஅலையாக வந்து கொண்டிருந்தன. ரஜினி என்று புதிய அவதாரம் எடுத்த மகிழ்ச்சி காரணமாக கடற்கரையில் அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை.
நள்ளிரவுதான் அவர் மெரினா கடற்கரையில் இருந்து அருண் ஓட்டலுக்கு திரும்பினார். அதன்பிறகு வந்த நாட்களும் ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி தரும் நாட்களாக மாறின. குறிப்பாக இயக்குனர் பாலச்சந்தர் பத்திரிகையாளர்களிடம் அபூர்வ ராகங்கள் படம் பற்றி பேட்டி கொடுத்தபோது ரஜினிகாந்த் பற்றி புகழ்ந்து கருத்துக்கள் தெரிவித்து இருந்தார்.
ஒரு பேட்டியில் அவர், 'ரஜனிகாந்த் என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்து இருக்கிறேன். அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. அவர் திறமையான நல்ல நடிகர், மிகச் சிறப்பான நடிப்பை அவரிடம் நீங்கள் எதிர்பார்க்கலாம்' என்றார். இதை அறிந்தபோது ரஜினி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ராகவேந்திர சுவாமிகளின் அருளால் அனைத்து பத்திரிகைகளும் புதுமுகம் ரஜினிகாந்த் பற்றி புகழ்ந்து எழுதின. 'ரஜனிகாந்த் என்றால் இரவு காதலனாகிய நிலவு' என குமுதம் அரசு பதில்களில் குறிப்பிடப்பட்டது.
ஆனால் தமிழர்கள் ரஜனியை விடுத்து பேச்சு வழக்கில் சொல்வதற்கு மிக, மிக, எளிதாக இருந்ததால் ரஜினி என அழைக்கத் தொடங்கினார்கள். இதனால் அன்றுமுதல் ரஜினி அவதாரம் தமிழக மக்கள் மத்தியில் புகழ்பெற ஆரம்பித்தது.
1975-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று அபூர்வ ராகங்கள் படம் வெளியானது. படத்தில் 'ரஜனிகாந்த்' என்றே டைட்டிலில் பெயர் இடம் பெற்றது. ஆனால் ரசிகர்கள் ரஜினி என்று சொல்வதில் உறுதியாக இருந்தனர்.
அந்த ரசிகர்களோடு அமர்ந்து ரஜினி தனது முதல் படத்தை பார்த்தார்.
அப்போது அவருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி பற்றிய ருசிகர தகவலை நாளை பார்க்கலாம்.
- ஒருநாள் திடீரென அவரது மனதில் ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது.
- பல சரக்கு வணிகம் செய்து வந்த அவருக்குப் போதுமான அளவுக்கு வருமானம் இருந்தது.
வாழ்க்கையின் இன்பத் தருணங்களை எப்போதும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் இனிய வாசகப் பெருமக்களே! வணக்கம்.
"எல்லாம் இன்ப மயம்!" என்கிற முழக்கம் கவிதைகளிலும் பாடல்களிலும் கதைகளிலும் மட்டுமே கேட்கிறதே, அன்றாட வாழ்வியலில் அது வந்து போவது எக்காலம்?; அப்படி அது வந்து போனாலும் ஒரு மின்னலைப் போலல்லவா தோன்றியவுடன் மறைந்து விடுகிறது?; நிரந்தர மகிழ்வாய்த் தங்கி நம்மை நிரந்தர இன்பத்தில் ஆழ்த்திடும் காலம் என்பது வாராதா? என்பதெல்லாம் நம் ஒவ்வொருவரின் ஏக்கமாகவே இருக்கிறது. துன்பமும் இன்பமும் மாறி மாறி வருமென்பது வாழ்வியல் உண்மை என்றாலும், பெரும்பாலானோர் வாழ்வில் துன்பம் மட்டுமே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதே இதற்கு மாற்றுக் காண்பது எவ்வாறு?.
'இன்பம்' என்பதும் 'துன்பம்' என்பதும் எதிர் எதிர் உணர்வுகள்தாம். இன்பம் வந்தால் உள்ளமும் உடலும் மகிழ்ச்சியால் திளைத்திருப்பதும், உற்சாக உணர்வோட்டம் உடலெங்கும் பரவுவதும் இயல்பாக இருக்கிறது. இன்பச் சூழ்நிலையில் எதைச் செய்தாலும் சரியாகவும் திறமாகவும் இருக்கிறது; இன்பச் சூழ்நிலை பெரும்பான்மையும் வெற்றிச் சாதனைகளின் ஊற்றுக் கண்ணாகவே இருக்கிறது. ஆனால் துன்பச் சூழலோ முற்றிலும் மாறுபட்ட உணர்வுகளைக் கொண்டுவந்து சேர்க்கிறது; மனம் துயரத்தில் ஆழ்ந்து குழப்பத்தில் தடுமாறுகிறது; உடலோ சோகத்தில் தள்ளாடிச் செயலற்றுப் போகிறது. துன்பம் நமக்கு எதிர்மறைச் சிந்தனைகளைக் கொண்டுவந்து கொட்டுவதால், எல்லாச் செயல்களும் தோல்விப் பயணங்களாகவே முடிவடைகின்றன. துன்பத்தை இன்பமாக மாற்றும் மாயவித்தைதான் என்ன?.
இராமாயணத்தில், இராமனைப் பிரிய நேருகிற தருணத்தில் குகன் கலங்கி நிற்கின்றான். பிரிவு என்பது வந்துவிட்டால் துன்பம் வந்துவிடுமே! என்பது அவனது கலக்கத்திற்கான காரணம். அந்த நேரத்தில் குகனைப் பார்த்து இராமன், "துன்புளது எனினன்றோ சுகம் உளது!" என்று கூறுகிறான். அதாவது 'எல்லா இன்பங்களும் முதலில் துன்பங்களாகவே வரும்; துன்பங்களின் நிறைவு இன்பங்களாகவே மலரும்!' என்பதை இந்தத் தொடரின் வாயிலாக இராமன் நமக்கு உணர்த்த விரும்புகிறான். பிரிவது துன்பமானால் பின்பு இணைவது இன்பம்தானே! என்று குகனிடம் உணர்த்தாமல் உணர்த்தி நிற்கிறான் இராமன். திருவள்ளுவரும்,
"இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்"
என்கிறார். 'இடும்பை எனப்படும் துன்பம் என்பது, மனித வாழ்வியலின் போக்கில் அடிக்கடி ஏற்படுவதுதான்!; இயல்பானதுதான்! என்கிற உண்மையைப் புரிந்து கொள்பவன் இன்பத்தைத் தனியாகத் தேடாமல், துன்பத்தோடு வாழ்வதற்கும்கூடப் பழகிக்கொள்வான்' என்கிறார் திருவள்ளுவர். சுவைகளில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு, உறைப்பு எனப் பலவகை உண்டு என்றாலும் மனம் எப்போதும் இனிப்பை மட்டுமே நாடி நிற்பது போன்றது இன்பத்தை மட்டுமே வேண்டி நிற்பது ஆகும். எல்லாச் சுவைகளின் கூட்டுக்கலவைகளில் நமக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்கள், ஆகச் சிறந்த சுவைப்பையும், சத்துக்களையும் தருவதைப்போல, இனிப்புத் தவிர்ந்த பல்சுவை உணர்வுகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும்.
துக்கமோ மகிழ்ச்சியோ அதை நமது மனம் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொறுத்தே அவை தரும் விளைவுகளின் தாக்கமும் எதிர்மறையானதாகவோ நேர்முறையானதாகவோ இருக்கும். இன்பத்தை இன்பமாக எதிர்கொள்வதைப்போல, துன்பத்தையும் இன்பமாகவே எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு துன்பம் வருகிறது; அதற்கு எளிதாகத் துன்பம் கொடுத்து அதனைத் தூரத் தள்ளிவிடுவதற்கு ஓர் எளிய வழியை வள்ளுவர் கூறுகிறார்.
"இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு
இடும்பைப் படாதவர்"
'துன்பத்தைக் கண்டு துவண்டுவிடாமல் துணிச்சலோடு எதிர்த்து நின்று போராடத் தெரிந்தவர்களே துன்பத்திற்குத் துன்பம் செய்து இன்பம் விளைவிப்பவர்கள் ' என்பது வள்ளுவ வாக்கு. வாழ்க்கையில் துன்பமே இயல்பானது; அதனைத் துரத்தித் துரத்திப் போரிடுவதே இன்பம் விளைவிக்கும் செயலாகும். இப்போராட்டத்தில், துன்பமும் துயரமும் சூழத் தளர்ந்து போரிடாமல், தெம்பும் நம்பிக்கையும் பெருக உத்வேகத்துடன் போரிட்டால், வெற்றி இலக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். ஓர் ஊரில் ஒரு வணிகர் இருந்தார். பலசரக்கு வணிகம் செய்து வந்த அவருக்குப் போதுமான அளவுக்கு வருமானம் இருந்தது. நாலு பெண்குழந்தைகள். தனது வருமானத்தில் நாலு பெண்குழந்தைகளுக்கும் நல்ல கல்வியை வழங்கி ஆளாக்கி வளர்த்து விட்டார். இப்போதுதான் அவரது வாழ்க்கையில் துன்பம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. நாலு பெண்களுக்கும் படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்க வேண்டும்; அதோடு அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளைகள் கிடைத்துக் கல்யாணம் வேறு நல்லபடியாகச் செய்து முடிக்க வேண்டும். பல சரக்குக் கடை வணிகமும் தற்போது சிரமதிசையில் போய்க்கொண்டிருந்தது; போட்டிக்கு நிறையக் கடைகள் வந்ததனால் நஷ்டக் கணக்கு நாள்தோறும் பெருகிக் கொண்டே இருந்தது.
அந்த ஊரில் பெரிய கோவில் ஒன்று இருந்தது. அக்கோவிலுக்குச் சென்று அங்குள்ள கடவுளை நாள்தோறும் வழிபடும் வழக்கத்தைப் பல்லாண்டுகளாகக் கொண்டிருந்தார் வணிகர். முன்பெல்லாம் வியாபாரம் நன்றாக நடந்துகொண்டிருக்கும் போது, அவருக்கு நிதானமாக நின்று சாமி கும்பிடுவதற்கே நேரம் இருக்காது; ஆனால் இப்போதெல்லாம் கோவிலுக்கு வந்தால் மணிக்கணக்காக நேரத்தைச் செலவழிக்கிறார். தெய்வத்தின்முன் நின்று தன்னுடைய மகள்களின் வேலைவாய்ப்பு, திருமணம், மற்றும் வணிகத்தில் நேர்ந்துவரும் நஷ்டங்கள் ஆகியவை குறித்து நிறையவே புலம்பவும் தொடங்கி விட்டார்.
ஒருநாள் திடீரென அவரது மனதில் ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது. "நாள்தோறும் கூட்டத்தோடு கூட்டமாய் வந்து சாமிமுன் நின்று நமது துன்பங்களையெல்லாம் புலம்பிவிட்டுச் செல்கிறோமே! உண்மையிலேயே சாமி அதனை முழுமையான கவனத்தோடு கேட்பாரா?. நாம் இப்படிச் செய்தால் என்ன? ஊரில் சில முக்கிய நபர்களைக் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று பார்க்காமல், தனியாகச் சென்று தனிப்பட்ட முறையில் பார்த்தால் காரியம் நடந்துவிடுகிறதே!. அதைப்போல நாமும் சாமியை யாருமில்லாத நேரம் பார்த்துச் சென்று , நமது துன்பங்களைச் சொல்லிக் கதறி அழுதால் நிச்சயம் நமது துன்பங்களைக் கடவுள் நீக்கி விடுவாரல்லவா?".

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
தொடர்புக்கு 9443190098
'சரியான முடிவு!' எனத் தீர்மானித்த வணிகர் அன்று இரவே கோவிலுக்குள் சென்று நடை சாத்தும் நேரத்தில் யார் கண்ணிலும் படாமல் கோவில் மண்டபத்தில் ஒளிந்து கொண்டார். அப்படியே ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்து சிறிது நேரம் கண்ணயர்ந்து தூங்கவும் தொடங்கிவிட்டார். நள்ளிரவு நேரத்தில் யாரோ பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டு படக்கென்று விழித்துக்கொண்டார். அந்தக்கோவில் பிரகாரத்தில் இருந்த ஒரு தூணும் ஒரு படிக்கல்லும் பேசிக்கொண்டன. அவை பேசிக்கொண்டிந்ததை எந்தவித ஓசையும் எழுப்பிவிடாமல் அமைதியாகக் கேட்டார் வியாபாரி.
படிக்கல் பேசியது, "இந்தக் கோவிலில் கருவறையில் சாமியாக இருக்கக் கூடிய சிலையும், தூணாக இருக்கக் கூடிய நீயும், படியாகக் கிடக்கக் கூடிய நானும் ஆகிய நாம் மூவரும் ஒரே மலையில் அருகருகே கிடந்த பாறாங்கற்கள்தானே!. நம்மை வந்து பார்த்த சிற்பியும் கொத்தனாரும் நம்மை இப்படிப் பிரித்துத் தூணாகவும் சாமிசிலையாகவும், படிக்கட்டாகவும் மாற்றி இந்தக் கோவிலில் நம்மை அமைத்து விட்டார்கள். ஆனால் எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி தாங்கமுடியாத துன்பம்?. கோவிலுக்கு வருவோர் போவோர் என்று ஒவ்வொருவரும் மிதித்து மிதித்து நான் படும் வேதனைக்கு அளவே கிடையாது!".
உடனே தூண் பேசியது, " உனக்காவது ஆட்கள் வந்து போய் மிதித்தால் மட்டுமே வேதனை! மற்ற நேரத்தில் நீ மிதிபடாமல் இன்பமாக இருக்கலாம்; ஆனால் நான் அப்படியா?. என்னைத் தூணாக நிறுத்தி, என்மீது இந்தக் கோவிலையே தூக்கி நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இரவு பகல் எந்நேரமும் இறக்கி வைக்க முடியாத சுமையைச் சுமந்த வண்ணமே இருக்கும் என் துன்பத்தை நான் எங்குபோய்ச் சொல்வேன்?".
"ஆமாம்! ஆமாம்! உன் துன்பமும் பெருந்துன்பம்தான். நம்மில் துன்பம் எதுவுமில்லாமல் ஜாலியாக இருப்பது சாமிசிலை மட்டும்தான்" என்றது படிக்கல். உடனே கருவறையிலிருந்து ஒரு விசும்பல் ஒலி கேட்டது; இலேசான வெளிச்சத்தில் வியாபாரி உற்றுக் கவனித்தார்; சாமி சிலை அழுது கொண்டிருந்தது. "உனக்கென்ன கஷ்டம்?. அன்றாடம் பாலபிஷேகம், பன்னீர் அபிஷேகம், நெய் அபிஷேகம் என்று விதம் விதமான அபிஷேகங்களில் உன்னைக் குளிப்பாட்டி வணங்குகிறார்களே! உனக்கென்ன துன்பம்?" தூண் கேட்டது. "எல்லாரும் என்னைக் குளிப்பாட்டுகிறார்கள்!, குளிர்விக்கிறார்கள்!, கும்பிடுகிறார்கள்! உண்மை. ஆனால் என் சிலை முன்னால் நின்றுகொண்டு ஒவ்வொரு பக்தரும் அவர்கள் படுகிற துன்பங்களை அடுக்கடுக்காய்ச் சொல்லி அழும்போது, ஒவ்வொரு துன்பத்தையும் நானே அனுபவிப்பதுபோல் உணர்கிறேன். ஒரு நாளைக்குப் பத்தாயிரம்பேர் வந்து என்னை வழிபட்டாலும், எந்தக் குறையும் சொல்லாமல் மகிழ்ச்சியோடு வந்து என்னை எந்தத் தொந்தரவும் செய்யாமல் வழிபட்டுச் செல்பவர்கள் பத்துப்பேர்கூடத் தேற மாட்டார்கள்; அடுத்தவர் படும் துன்பப் பட்டியல்களிலிருந்து மீண்டு வந்து நான் எப்போது நிம்மதியாக இருக்கப்போகிறேன்? என்று நினைத்துப் பார்க்கிறேன்; அதற்கு வாய்ப்பே இல்லை!; துன்பத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வதிலும் ஒரு இன்பம் இருக்கும்; ஏற்றுக்கொள்வோம்!" என்றது சாமி சிலை. சாமியைத் தனிப்படப் பார்த்துத், துன்பப்பட்டியல் வழங்க வந்திருந்த வணிகருக்குக், கோவிலுக்குள்ளேயே இவ்வளவு புலம்பல்களா? என்று ஆகிப்போனது.
துன்பம் இருக்கும் வரைதான் நிவர்த்திக்கான தேடல்களும் தீர்ப்பதற்கான வேட்டைகளும் இருந்துகொண்டே இருக்கும். மனிதனுக்கு இன்பம் வேண்டும்! ஆனால் துன்பத்தை வென்றால்தான் இன்பம் சாத்தியம். துன்பமில்லாத உலகத்தில் போட்டிகளே இல்லை; போட்டிகள் இல்லையென்றால் வெற்றி ஏது? மகிழ்ச்சி ஏது?.
நம்மில் ஒருவருக்குத் துன்பம் என்றால் துடைக்க வரும் அத்தனை கரங்களும் அன்பின் கரங்கள்; சமூக ஒருங்கிணைவைத் துயரங்களே கயிறுகளாகச் சேர்ந்து பிணைத்து வைக்கின்றன. அடுத்தவர்க்கு உதவுவது அல்லது அடுத்தவரிடம் உதவிக்காகக் காத்து நிற்பது ஆகிய இவ்விரண்டு அன்பின் செயல்களும் துன்பத்தின் நெருக்கடிகளால் சாத்தியமாகின்றன; பிறகு உதவி என்னும் மகிழ்ச்சி மலர்ந்து மணம் பரப்புகிறது.






