என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐப்பசி பூஜை"

    • பெருமாள் வழிபாட்டில் மிகவும் முக்கியமான பொருள் துளசியாகும்.
    • துளசி செடிக்கு நீர் ஊற்றினால் கூட அது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும் என்ற ஐதீகம் உருவானது.

    புனிதமான செடிகளின் வரிசையில் முதலிடம் பிடிக்கக்கூடிய செடியாக திகழ்வது துளசி செடி. துளசி செடி மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. துளசிக்கும் மகாவிஷ்ணுவுக்கும் திருமணம் நடந்த நாளை தான் துளசி கல்யாணம் என்று கூறுகிறார்கள். அந்த நாளில் வீட்டிலேயே துளசி கல்யாணத்தை செய்து பார்த்தால் அனைத்து விதமான மங்களங்களையும் பெற முடியும்.

    ஐப்பசி மாதம் வரும் அமாவாசை நாளில் இருந்து 12-வது நாள் வரக்கூடிய துவாதசி அன்றுதான் துளசி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் இந்த வருடம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நவம்பர் 2-ந் தேதி அன்று வருகிறது.

    அதாவது ஐப்பசி மாதம் வரும் தேவ உத்தாணி ஏகாதசி நாளில், விஷ்ணு பகவான் நான்கு மாத யோக தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்து மீண்டும் காக்கும் தொழிலைத் தொடங்குகிறார். அடுத்த நாள், துவாதசி திதியில், துளசி விவாகம் நடைபெறுகிறது.

    பஞ்சாங்கத்தின்படி, துவாதசி திதி நவம்பர் 2, அன்று அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கி நவம்பர் 3, அன்று அதிகாலை 1.43 மணிக்கு முடிவடையும்.

    இவ்வாறு திருக்கல்யாணம் செய்து வைக்கும் பொழுது, திருமணத்தில் பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுத்தப் பலன்களை கொடுக்கும். இதனால் திருமண தடைகள் நீங்கி, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகும். இந்த நாளில் நம் வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடிக்கு நாம் பூஜை செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளையும் பெற முடியும்.

    இந்த திருமணத்தை அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் செய்வது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளாகவும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நாளைய தினம் பஞ்சாங்கப்படி காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை துளசி திருமணத்தை நடத்தலாம். இந்த வழிபாட்டிற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடி போதுமானது தான். துளசி செடி இல்லாதவர்கள் துளசி இலைகளை பறித்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்தும் பூஜை செய்யலாம்.

    முதலில் ஒரு வெற்றிலையில் சந்தனத்தில் பிள்ளையாரை பிடித்து வைத்து மலர்கள் மற்றும் அருகம்புல்லால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட வேண்டும். பிறகு துளசி செடி இருக்கும் இடத்தை சுத்தம் செய்து மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து மாக்கோலம் போட வேண்டும். அடுத்ததாக துளசி செடி வைத்திருக்கும் தொட்டிக்கு அல்லது மாடத்திற்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும். பிறகு ஒரு சுத்தமான செம்பில் சுத்தமான தண்ணீரை பிடித்து அதில் மஞ்சள் மற்றும் குங்குமத்தை சிறுதுளி அளவு கலந்து துளசிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

     

    வீட்டில் மகாவிஷ்ணுவின் சிலையோ அல்லது புகைப்படமோ இருந்தால் அதை எடுத்து வந்து துளசி செடிக்கு அருகில் வைத்துவிட்டு அந்த சிலைக்கும் மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பிறகு மலர்களால் துளசி செடியையும், மகாவிஷ்ணுவின் புகைப்படத்தையும் அலங்காரம் செய்ய வேண்டும். துளசி செடிக்குரிய மந்திரங்களையும் பாடல்களையும் உச்சரித்த வண்ணம் துளசி செடிக்கும் மகாவிஷ்ணுவிற்கும் உதிரி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நெய்வேத்தியமாக கற்கண்டு, உலர் திராட்சை, பேரிச் சம்பழம் போன்றவற்றை வைத்து, வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்து, ஊதுபத்தி தூபம் காட்டி 5 பெரிய நெல்லிக் காய்களை எடுத்து அதில் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ள வேண்டும். மகாவிஷ்ணுவின் சிலையோ புகைப்படமோ இல்லாதவர்கள் மகாவிஷ்ணுவின் அம்சமான பெரிய நெல்லிக்காய் மரத்தில் இருந்து ஒரு சிறிய கிளையை எடுத்து வந்து துளசி செடியுடன் வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

    இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகளும் துர் தேவதைகளும் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். மேலும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் எந்தவித தங்கு தடைகளும் இன்றி நடைபெறும். செல்வ செழிப்பு மேலோங்கும். எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும்.

    பெருமாள் வழிபாட்டில் மிகவும் முக்கியமான பொருள் துளசியாகும். மலர்கள் அணிவிக்காவிட்டாலும் 2 துளசி இலைகளை மகாவிஷ்ணுவிற்கு படைத்து வழிபட்டாலே அனைத்து விதமான நன்மைகளும் ஏற்படும். துளசி இலைகளை பறிப்பதற்கும் கூட பல கட்டுப்பாடுகள் உள்ளன. மருத்துவ குணமும், தெய்வீக தன்மையும் நிறைந்த துளசியை வருடத்திற்கு ஒரு முறையாவது பூஜை செய்து வழிபட வேண்டும்.

    "ஓம் துளசியை வித்மஹி; விஷ்ணு பரியை தீமஹி; தன்னோ விருந்தா ப்ரசோதயாத்" என்ற துளசி மந்திரத்தை தினமும் உச்சரித்து, தண்ணீர் ஊற்றி வழிபடுவதால் செல்வ வளம் பெருகும். துளசி மாடத்திற்கு பொட்டு வைத்து, விளக்கேற்றி வழிபட்டால் சகல விதமான துன்பங்களும் விலகி, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

    செடிகளில் துளசிக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? தெய்வங்களுக்கு இணையாக வணங்கப்படுவது ஏன்? என பலரும் நினைக்கலாம். இதற்கு இந்து புராணங்களில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அசுர அரசனின் மகளான விருந்தா, தீவிர விஷ்ணு பக்தை. இவள் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியில் இருந்து தோன்றிய ஜலந்தரை மணந்தாள். பக்தியில் சிறந்தவளும், தீவிர பதிவிரதையுமான விருந்தாவை மணம் முடித்ததால் ஜலந்தர் மிகவும் பலம் மிகுந்தவனாக மாறினான். இதனால் அவனின் சக்தி பல மடங்காக அதிகரித்து சிவபெருமானால் கூட வெல்ல முடியாதவன் ஆனான்.

    இதன் காரணமாக தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக விளங்க வேண்டும் என்ற ஆசை ஜலந்தருக்கு ஏற்பட்டது. இதனால் அஞ்சிய தேவர்கள் அனைவரும் காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். ஆனால் விருந்தா தனது பக்தை என்பதால், அவளது கணவரை அழிப்பதா என குழப்பத்தில் ஆழ்ந்தார் மகா விஷ்ணு.

    இதனால் சிவனுக்கும், ஜலந்தருக்கும் போர் நடைபெற்ற சமயத்தில் ஜலந்தரின் உருவத்தில் துளசியை காண சென்றார் மகா விஷ்ணு. வந்திருப்பது தனது கணவன் என நினைத்து அவருடன் அமர்ந்து, பூஜை செய்தாள் விருந்தா. பிறகு தனது கணவர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக தனது கணவரின் உருவில் வந்த மகாவிஷ்ணுவின் காலை தொட்டு வணங்கினாள்.

    அப்போது வந்திருப்பது தனது கணவன் இல்லை என தெரிந்து கொண்டாள். தனது கடவுளே தன்னை ஏமாற்றி விட்டதால் வேதனையடைந்த விருந்தா, மகா விஷ்ணுவை கல்லாக மாற சாபம் அளித்தாள். இதனால் மகா விஷ்ணு சாளகிராம கல்லாக மாறினார். அதே சமயம், விருந்தாவின் தூய்மை தன்மை குறைந்ததால் ஜலந்தரின் பலம் குறைந்தது. போரில் அவனை வென்றார் சிவபெருமான்.

    தனது தூய்மை தன்மை குறைந்ததால் உயிரை விட துணிந்தாள் விருந்தா, அந்த சமயத்தில் விருந்தா இனி துளசி என அழைக்கப்படுவாள் என வரமளித்தார் மகா விஷ்ணு. துளசி இல்லாமல் மகா விஷ்ணுவிற்கு செய்யும் பூஜைகள் முழுமை பெறாது. துளசி செடிக்கு நீர் ஊற்றினால் கூட அது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும் என்ற ஐதீகம் உருவானது.

    துளசி கல்யாணத்தன்று துளசிக்கு பூஜை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இவ்வாறு வழிபடும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியும், செல்வ வளமும் பெருகும். இளம் வயதினர் துளசி பூஜை செய்தால் தங்களின் மனத்திற்கு பிடித்தது போல் விரைவில் திருமண வாழ்க்கை அல்லது வாழ்க்கை துணை அமைவார்கள். திருமண தடை, திருமணம் தாமதமாகிக் கொண்டே செல்பவர்கள் நாளை துளசி மாதாவிடம் வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

    திருமணமாகாத ஆண்கள் துளசி செடிக்கு பூஜைகள் செய்து, வஸ்திரம் படைத்து, துளசி செடியை 7 முறை வலம் வந்து வணங்க வேண்டும். திருமணமாகாத பெண்கள், மனத்திற்கு பிடித்த கணவர் அமைய வேண்டும் என விரும்பும் பெண்கள் வீட்டில் துளசி கல்யாணம் நடத்தி, துளசி மாதாவிற்கு பூஜை செய்து வழிபட வேண்டும்.

    துளசி முன் விழுந்து வணங்கி, பூக்கள் படைத்து, விரைவில் திருமணம் நடைபெற வேண்டிக் கொள்ளலாம்.

    • புதிய மேல்சாந்திகள் தேர்வு இன்று சன்னிதானத்தில் நடைபெறும்.
    • ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் அனுமதி.

    திருவனந்தபுரம்:

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்திகள் தேர்வு இன்று (புதன்கிழமை) சன்னிதானத்தில் நடைபெறும்.

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

    இன்று முதல் 5 நாட்கள் தினமும் அதிகாலை கோவிலில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதனையொட்டி சபரிமலைக்கு வரும்

    பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் சபரிமலைக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையமும் செயல்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
    • வருகிற 21-ந் தேதி வரை சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

    திருவனந்தபுரம்:

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு பிரம்மதத்தன், கண்டரரு ராஜீவரு ஆகியோர் தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.

    அதைதொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 21-ந் தேதி வரை நடை திறந்து ஐப்பசி மாத சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். முன்னதாக இன்று காலை சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு குலுக்கல் மூலம் நடைபெறுகிறது.

    சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகளுக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். மறுநாள் 31-ந் தேதி சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

    அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மண்டலகால பூஜைகளுக்காக அடுத்த மாதம் 15-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.

    ×