என் மலர்
தேர்தல் செய்திகள்
ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளிடையே 4 முனைப் போட்டி ஏற்பட்டு இருக்கிறது.
இந்த 4 தொகுதிகளிலும் தற்போது தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. தேர்தல் பிரசாரம் ஓய்வதற்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. இதனால் 4 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.
4 தொகுதிகளிலும் 4 முனைப்போட்டி என்று கூறப்பட்ட போதிலும் உண்மையில் அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கணிசமான அளவுக்கு வாக்குகளை பிரித்து மற்ற கட்சிகளின் வெற்றி தோல்விக்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.

அதுபோல துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளிலும் முற்றுகையிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் 4 தொகுதிகளிலும் கிராமம், கிராமமாக சென்று ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இடைத்தேர்தல் என்பதால் உள்ளூர் பகுதி மக்களை அதிகம் கவர வேண்டும் என்பதற்காக அந்தந்த பகுதி சிறு, சிறு அமைப்புகளின் ஆதரவை பெற்று அ.தி.மு.க. பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவுகிறது.
அரவக்குறிச்சி தொகுதியில்தான் அதிகபட்ச உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. திருப்பரங்குன்றம் தொகுதியை கவுரவ பிரச்சினையாக கருதி அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
அ.தி.மு.க.வை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வருகிற 11-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளார்.
பிரேமலதா, ஜி.கே.வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே முதல் கட்ட பிரசாரத்தை முடித்து விட்டார். தற்போது 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று அவர் அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து பேசினார்.
அதுபோல அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களை ஆதரித்து டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்து வருகிறார். இன்று மாலை அவர் திருப்பரங்குன்றம் தொகுதியில் கிராமம், கிராமமாக சென்று ஆதரவு திரட்ட உள்ளார். #TNAssemblyByElection #EdappadiPalaniswami #MKStalin
ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அவர்கள் வீதிவீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று மாலை தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர் நேற்று ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் வீதிவீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார்.
இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி 2-வது வார்டு பகுதிகளான அன்னை இந்திராநகர் பிள்ளையார் கோவில் முன்பு பிரசாரத்தை தொடங்கினார். பின்பு அய்யப்பன்நகர், விஸ்வபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது கனிமொழி எம்.பி. அனைத்து வீதிகளிலும் நடந்தே சென்றார். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாக சென்று ஆதரவு திரட்டினார்.
இன்று மாலை தூத்துக்குடி ஒன்றியம் சோரீஸ்புரம், அந்தோணியார்புரம், மறவன்மடம், சிலுக்கன்பட்டி, கீழகூட்டுடன்காடு, புதுக்கோட்டை, செந்தியம்பலம், கட்டாலங்குளம், புதூர், முடிவைத்தானேந்தல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
நாளை மறுநாள் (11-ந் தேதி) ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய பகுதிகளிலும், 13-ந்தேதி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய பகுதிகளிலும், 15-ந்தேதி தூத்துக்குடி ஒன்றிய பகுதிகளிலும் கனிமொழி எம்.பி. தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். #TNByPolls #DMK #Kanimozhi
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறார்.
சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து கருமத்தம்பட்டியில் இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து வேலாயுதம்பாளையத்தில் நாளை (10-ந்தேதி) மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசார பொதுகூட்டம் நடக்கிறது. இதிலும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். #TNByPolls #PChidambaram
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி விமானநிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் இணைந்து செயல்பட்டு வருவதாக, ஏற்கனவே நான் பல்வேறு கூட்டங்களில் தெரிவித்து வந்தேன். தற்போது தங்கதமிழ்செல்வன் மூலமாக அது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
2006 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்கள் இல்லாமல் மைனாரிட்டி ஆட்சி நடத்தியது தி.மு.க. தான்.
அ.தி.மு.க. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி நடத்தியது, நடத்தியும் வருகிறது, இனிமேலும் நடத்தும்.
22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. நிச்சயமாக வெற்றி பெற்று முழு பெரும்பான்மையுடன் எங்களுடைய ஆட்சி தொடரும். எதிர் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தான் வெற்றி பெறும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மக்கள் அப்படி நினைக்கவில்லை. அவர் கனவு என்றுமே பலிக்காது என்பது மக்களுக்கு தெரியும். அது ஒரு அர்ப்ப ஆசை. வருகிற 23-ந்தேதிக்கு பிறகு அவர் கனவு கூட காண முடியாது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் திறமையான மாணவர்கள். கல்வியிலேயே தமிழகம் முதன்மையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக 2019-ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 304 நிறுவனங்கள் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. அந்த திட்டங்கள் எல்லாம் நிறைவேறும் போது படித்த இளைஞர்களுக்கு நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5.50 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும். புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த 10 தொழில் நிறுவனங்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்ததன் பேரில் வருகிற ஜூன் மாதம் அந்த 10 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 10.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடிய ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி.
தேர்தல் ஆணையம் என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு. அதில் யாரும் குறுக்கிட முடியாது. பாரபட்சமின்றி அனைவர் மீதும் வழக்குப் போடுகிறார்கள். வேண்டும் என்றே தோல்வி பயத்தின் காரணமாக எதிர்கட்சிகள் தவறான கருத்தினை மக்களிடத்திலே பரப்பி வருகிறார்கள்.
தோற்றால் இந்த காரணத்தை அவர்கள் சொல்லுவார்கள். வெற்றி பெறுகின்ற கட்சி இது போன்ற கருத்துகளை தெரிவிக்கமாட்டார்கள். தோல்வி பெறுகின்ற கட்சி தோல்வி பயத்தின் காரணமாக இப்படிப்பட்ட அப்பட்டமான குற்றச்சாட்டை தெரிவிக்கிறார்கள்.
இந்த தேர்தலில் நாங்கள் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தி, மக்களைச் சந்தித்து வாக்குகளைப்பெற பணியாற்றியுள்ளோம். கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalaniswami #DMK #AMMK
பொதுத்தேர்தல் நடக்கும் முன்பு மாதிரி வாக்குப்பதிவை வாக்குச்சாவடி அதிகாரிகள் நடத்துவார்கள். 50 ஓட்டுகள் வரை மாதிரியாக அந்த எந்திரங்களில் போட்டுக்காட்டுவார்கள். அப்போது ஏதாவது பிரச்சினை எழுந்தால் அந்த எந்திரத்தை தூர வைத்துவிட்டு, அடுத்த எந்திரத்தை எடுப்பார்கள்.
மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு முன்பு அந்த எந்திரங்களை அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில், அவை ஏற்கனவே காலியாக உள்ளன என்பதையெல்லாம் காட்டிவிட்டுத்தான் வாக்குப்பதிவை நடத்துவோம்.
நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேனி, ஈரோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 15 பாராளுமன்ற தொகுதிகளுக்குள் (13 மாவட்டங்களுக்குள்) வரும் 46 வாக்குச்சாவடிகளில் 3 விதமான தவறுகள் நடந்துள்ளன.
மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டதும், அந்த வாக்குப்பதிவை கட்டுப்பாட்டு எந்திரத்தில் இருந்து அழிக்க வேண்டும். அதன்பிறகு, ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் விழுந்து கிடக்கும் துண்டுச்சீட்டுகளை எடுத்து அவற்றை தேர்தல் ஆணையம் அளித்துள்ள உறையில் போட்டு அதை மூடி வைத்துவிட வேண்டும். அதன் பின்னர் அதை வாக்குப்பதிவுக்காக கொண்டு வரவேண்டும். இது வழக்கமான நடைமுறை.
ஆனால் நடந்து முடிந்த தேர்தலில், சில வாக்குச்சாவடிகளில் கட்டுப்பாட்டு எந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட மாதிரி வாக்குகளையும் அழிக்கவில்லை; ஒப்புகைச் சீட்டுகளை அந்த எந்திரத்தில் இருந்து எடுக்கவும் இல்லை.
மற்ற சில இடங்களில் கட்டுப்பாட்டு எந்திரத்தில் பதிவான மாதிரி வாக்குகளை அழித்திருக்கின்றனர். ஆனால் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் கிடந்த சீட்டுகளை எடுக்காமல் விட்டுவிட்டனர். மேலும் சில இடங்களில், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களில் இருந்த சீட்டுகளை அப்புறப்படுத்தி உள்ளனர். ஆனால் கட்டுப்பாட்டு எந்திரங்களில் பதிவு செய்யப்பட்டு இருந்த மாதிரி வாக்குகளை அழிக்கத் தவறிவிட்டனர்.
எனவே இது வாக்கு எண்ணிக்கையின்போது பிரச்சினைகளை உருவாக்கும். கட்டுப்பாட்டு எந்திரத்தில் ஒரு எண்ணிக்கையும், ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் வேறு எண்ணிக்கையும் காட்டும். எனவே இப்படி தவறு நடந்த 46 வாக்குச்சாவடிகள் பற்றிய தகவலை தேர்தல் நடத்தும் அதிகாரி, தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்தனர்.
இதுபற்றிய அறிக்கையை தேர்தல் கமிஷனுக்கு கடந்த மாதம் 29-ந் தேதி அனுப்பி வைத்து இருக்கிறோம். இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தர்மபுரி, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் பரிந்துரைத்திருக்கிறோம். அங்கு நடந்த பிரச்சினைகள் வேறு. அங்கு போதிய அளவில் எந்திரங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில், தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று நேற்று இரவு தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அதாவது தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளிலும், தேனி பாராளுமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், ஈரோடு, கடலூர் பாராளுமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் பாராளுமன்றத்துக்கு இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் 12-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. #electioncommission #reelection

தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் சி. சவேரியார்புரத்தில் தி.மு.க. காரியாலயத்தை இன்று கனிமொழி எம்.பி. திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவையில் இருந்து நேற்று 50 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேனி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை வேட்பாளர்களிடம் கூறிய பின்னர் மாற்றி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதனால் தேர்தல் ஆணையம் மீது எதிர்கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் நம்பிக்கை இல்லை. நான் ஏற்கனவே கூறிய படி தேர்தல் தோல்வி பயத்தால் ஆளுங்கட்சி, தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளது.
தேர்தல் ஆணையம் சுகந்திரமாக செயல்படவில்லை. மக்களின் நம்பகத்தன்மையை பெறவில்லை. மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராக கனவு தான் காணமுடியும் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இதற்கு முன்பு தான் முதலமைச்சர் ஆகுவோம் என்று கனவு கண்டிருக்கமாட்டார்.
வருகிற 23-ந் தேதிக்கு பின்னர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சாராக வருவார். அதற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தாம் முதலமைச்சர் ஆகுவோம் என்று கனவு கூட காணமுடியாது. ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அ.தி.மு.க.வினருக்கோ இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். #kanimozhimp #mkstalin #edappadipalanisamy

அரியானா மாநிலத்தில் வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரியானா மாநிலத்தில் பதேபாத் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்களில் சீக்கியர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர். இதன் காரணமாக சீக்கியர்களுக்கு கொடுமை இழைத்தவர்களை தண்டிப்பேன் என உங்கள் காவலாளியான நான், அவர்களுக்கு அளித்த சத்தியத்தினை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை எண்ணி ஆறுதல் அடைகிறேன். ஆனால் காங்கிரசோ, இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை பாராட்டி பேசுகிறது. இதிலிருந்தே அவர்களுக்கு மக்களின் உணர்வுகள் குறித்து எந்த கவலையும் இல்லை என்பது புரிகிறது.
மக்கள் என் மீதும், பாஜக மீதும் கொண்டுள்ள நம்பிக்கையினை நான் உணர்வேன். பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. உங்களுக்காக இந்த காவலாளி என்றும் பணியாற்றுவான்.
இவ்வாறு அவர் பேசினார். #PMModi #ElectionCampaign
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து மனு கொடுத்தார்.
பின்னர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-
தேனியில் உபயோகப்படுத்தாத 50 வாக்குப் பதிவு எந்திரங்களை அதிகாரிகள் கொண்டு வந்து வைத்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. பதிவான வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற சதி நடப்பதாக சந்தேகிக்கிறோம்.
இதுகுறித்து நேற்று அனைத்துக்கட்சியினரும் சேர்ந்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் விளக்கம் கேட்டனர். கலெக்டர் தந்த விளக்கம் தெளிவாக இல்லை. ஆகவே தி.மு.க. சார்பில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளோம். அவர் விளக்கம் தருவதாக கூறி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் எப்போதுமே அமைதியான முறையில் தேர்தல் நடக்கும். வட மாநிலங்களைப் போல் வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் சம்பவம் நடைபெறாது. ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் பல வினோதங்கள், பல வேடிக்கைகள் நடைபெறுகிறது.
கரூரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட் டிருந்த அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா சரியாக வேலை செய்யவில்லை. 2 மணி நேரம் வித்தியாசம் காட்டுகிறது.
மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருந்த கட்டிடத்திற்குள் பெண் தாசில்தார் சென்று வந்துள்ளார். இந்த விஷயம் கோர்ட்டு வரை சென்று அதன் பிறகு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இப்போது தேனியிலும், ஈரோட்டிலும் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து வைக்கிறார்கள். இது ஏதோ சதி செய்வதற்காக திட்டமிடுவதாகவே கருதுகிறோம். எந்த சதி திட்டமானாலும் அதை திமு.க. முறியடிக்கும்.
தேனியில் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவை யாரும் கேட்கவில்லை. தேர்தல் நடந்து முடிந்து 20 நாட்களுக்கு பிறகு இப்போது திடீர் என உபயோகப்படுத்தாத வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து வைத்துள்ளனர்.

தர்மபுரி-பூந்தமல்லி, கடலூரில் உள்ள 10 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு கேட்டு இருந்தோம். அதற்கு இதுவரை பதில் இல்லை. ஆனால் கேட்காத இடத்துக்கு மறுவாக்குப்பதிவுக்காக அதிகாரிகள் தன்னிச்சையாக வாக்குப்பதிவு எந்திரங்களுடன் வருகிறார்கள்.
இதில் மிகப்பெரிய மர்மம் உள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படுகிறது.
கடந்த வாரம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்று பிரதமர் மோடியின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது மகனை வெற்றி பெற செய்ய வைக்க தேவையான உதவிகளை செய்யுங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்த சூழ்நிலையில் இப்போது தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துள்ளதால் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் புகார் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #LokSabhaElections2019 #TNElections2019
கொல்கத்தா:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மேற்கு வங்க மாநிலம் பிரூலியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடியை கடுமையாக கிண்டல் செய்தார். அவர் பேசியதாவது:-
பா.ஜனதா கட்சியின் முக்கிய நோக்கமே பிரதமர் மோடியை எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான். ஆனால் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர எந்த வழியும் இல்லை.
இந்திய மக்கள் மோடிக்கு சரியான பதிலடியையும், பெரிய அதிர்ச்சியையும் கொடுப்பார்கள். இதை அவர் உணர்ந்துள்ளார்.

மோடியிடம் கேட்டுக் கொள்வதெல்லாம், நீங்கள் இந்திய மக்களிடம் பொய் பேசாதீர்கள். எந்த சக்தியாலும் உங்களை மீண்டும் நாட்டின் பிரதமர் ஆக்க முடியாது.
மோடி பிரசாரம் செய்யும் போது அவர் முன்னால் இருபுறமும் டெலிபிராம்ப்டர் என்று சொல்லக்கூடிய திரை கண்ணாடிகளை பொருத்தி வருகின்றனர். அதில் இருப்பதை பார்த்து தான் மோடி பேசுகிறார். அவருக்கு சொந்தமாக பேசத் தெரியாது.
நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை பற்றி அவர் பேசுவது கிடையாது. இதனால் மோடி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். விவசாயிகளை பற்றியும் அவர் பேசவில்லை.
நாட்டில் உள்ள மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என அவர் கூறியுள்ளது பற்றியும் அவர் பேசுவதே கிடையாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் நலனுக்காக புதிய சட்டம் இயற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.#RahulGandhi #PMModi






