என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் 3-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகங்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இதில் பல்வேறு துறை சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் 123 பெண்கள் உள்பட 177 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார்.

    பல்வேறு துறை சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகங்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

    பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் 79 பெண்கள் உள்பட 127 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி போட்டுக் கொண்டார்.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை கலெக்டர் சந்தீப்நந்தூரி போட்டுக் கொண்டார்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி போட்டுக் கொண்டார்.

    முன்னதாக அவருக்கு உடல் வெப்பம், ரத்த அழுத்தம் மற்றும் பல்சோமீட்டர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கணினியில் ஆன்லைன் மூலம் விவரங்கள் பதிவு செய்யப்பட்டது.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த தடுப்பூசி போடுவதற்கு 10 ஆயிரம் நபர்கள் பதிவு செய்து தற்போது வரை 2500 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் உத்தரவின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் பணியாற்றிய வருவாய்த் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை உட்பட மற்ற துறைகளில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பதிவு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    அதன்படி வருவாய்த் துறை சார்பாக நானும் தடுப்பூசி போட்டு கொண்டேன். இந்த தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 30 நிமிடங்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.

    கொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. இதுவரை யாருக்கும் பாதகமான விளைவுகள் ஏற்படவில்லை. இந்த நல்ல வாய்ப்பினை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என முதல் கட்டமாக 6 இடங்களில் போடப்பட்டு வந்தது. தற்போது 24 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி டீன் திருமால்பாபு, டாக்டர்கள் ஷகீல்அகமது, ஸ்ரீதர், நலப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, திருவண்ணாமலை சுகாதார மாவட்ட துணை இயக்குனர் அஜிதா ஆகியோர் உடனிருந்தனர்.

    திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39-வது வார்டு வேட்டவலம் சாலை கீழ்நாத்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சரிவர குடிநீர் வரவில்லை என்றும், குடிநீரில் கால்வாய் நீர் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காலிக்குடங்களுடன் கீழாத்தூர் - வேட்டவலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வேட்டவலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் வெங்கடேசன் மற்றும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வந்தவாசியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சைக்கிள் வரதராஜ முதலி தெருவை சேர்ந்தவர் பிச்சைமணி, இவர் ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் முன்பக்க கதவும், பின்பக்க கதவும் திறந்து கிடப்பதை கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து பிச்சைமணிக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோக்கள் திறந்து, துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன.

    போலீசார் விசாரணையில், பூட்டப்பட்டிருந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை திறந்து, பீரோவில் இருந்த 3¼ பவுன் நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

    இதேபோல் வந்தவாசி கனகராமசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி, ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். பூட்டப்பட்டிருந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் பட்டு சேலைகள், 2 அமெரிக்கன் டாலர், 2 ரியால் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் போலீசார் 2 வீடுகளிலும் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் இந்த சம்பவங்கள் குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு ெசய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    வந்தவாசியில் 2 வீடுகளின் பூட்ைட உடைத்து நகை, பணம் திருடி சென்ற சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவண்ணாமலை அருகே வறுமையால் முதியோர் தம்பதி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே உள்ள தானாநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 90), இவருடைய மனைவி காயாம்பாள் (80), தம்பதிக்கு 5 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    கந்தசாமி தம்பதியை கவனிக்க ஆளில்லை. இதனால் வறுமையில் வாடி வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட கந்தசாமி, காயாம்பாள் இருவரும் நேற்று இரவு வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை அவர்கள் வீட்டில் இறந்து கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை உள்ளது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

    ஆரணி:

    ஆரணியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    சசிகலா அ.தி.மு.க. பொது செயலாளராக இருக்கும் போது தான் சிறைக்கு சென்றார். இதனால் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த சசிகலாவிற்கு உரிமை உள்ளது.

    திராவிட இயக்கத்தை பொறுத்தவரை பொது செயலாளர் தான் கட்சியை இயக்க முடியும். அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா பொது செயலாளர் ஆனார்.

    கே.பி.முனுசாமி கருத்தை வைத்து பார்க்கும் போது சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்வதாக தெரிகிறது.

    சசிகலாவை சேர்க்காவிட்டால் அ.தி.மு.க. 2-ஆக உடையும்.

    வரும் தேர்தலில் தி.மு.க. 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று புதிய அத்தியாயத்தை படைக்கும் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்.

    ஜே.பி.நட்டாவை பார்த்து தமிழக மக்கள் ஓட்டு போடும் அளவுக்கு பலவீனமானவர்கள் அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெரணமல்லூர் அருகே லாரியில் மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி, சப்- இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவணியாபுரம் அருகே செய்யாற்றில் இருந்து வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 யூனிட் மணல் கடத்திவந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விண்ணமங்கலம் கிராமத்தைசேர்ந்த லாரி டிரைவர் ராமானுஜம் (வயது 46) என்பவரை கைது செய்தனர். மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    ‘லிப்ட்’ கொடுத்து மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்று பெண்ணிடம் கவரிங் சங்கிலியை பறித்த திருடன் கைது செய்யப்பட்டான்.
    வேட்டவலம்:

    வேட்டவலம் அருகில் உள்ள வடக்குவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரின் மனைவி மீனா (வயது 54). இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். மீனா நேற்று மாலை வேலைக்குச் சென்று விட்டு வேட்டவலம் பஸ்சில் இருந்து இறங்கி வடக்குவெளி கிராமத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர், மீனாவிடம் எனது மோட்டார்சைக்கிளில் உட்காருங்கள் உங்களை ஊரில் கொண்டு போய் விட்டு விடுகிறேன், எனக் கூறினார். அவர் கூறியதை உண்மை என்று நம்பிய மீனா, அவரின் மோட்டார்சைக்கிளில் ஏறி அமர்ந்து கொண்டார்.

    சிறிது தூரம் சென்றபோது, மோட்டர்சைக்கிள் கண்ணாடி வழியாக மீனா அணிந்திருந்த நகையை அவர் பார்த்துக் கொண்டே வந்தார். அவருக்கு சந்தேகம் ஏற்படவே மீனா மோட்டார்சைக்கிளை நிறுத்துமாறு கூறினார். ஓடும் மோட்டார்சைக்கிளை நிறுத்தியதும், அதில் இருந்து கீழே இறங்கிய மீனா மீண்டும் கிராமத்தை நோக்கி நடந்துள்ளார்.

    மீனாவை பின்தொடர்ந்து சென்ற அவர், திடீரென மீனாவின் சங்கிலியை பறிக்க முயன்றார். அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் எனச் சத்தம்போட்டு கூச்சலிட்டார். அவரின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து சங்கிலி பறித்தவரை மடக்கி பிடித்தனர்.

    இதுகுறித்து அவர்கள், வேட்டவலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சங்கிலி பறித்த திருடனை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா தேவதானம்பேட்டையைச் சேர்ந்த குமார் (38) என்றும், மீனா அணிந்திருந்த சங்கிலி தங்கம் என நினைத்து கவரிங் சங்கிலியை பறிக்க முயன்றதாகக் கூறினார். இதையடுத்து குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி பகுதியில் மதுபானம் விற்ற 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான தெள்ளார், கீழ்கொடுங்காலூர், பொன்னூர், வடவணக்கம்பாடி, கீழ்ப்பாக்கம், வெண்குன்றம், நல்லூர், கூத்தம்பட்டு, மழையூர் ஆகிய கிராமங்களில் வெளி மார்க்கெட்டில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் வந்தவாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், கீழ்கொடுங்காலூர் இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மஞ்சுநாதன், மோகன், ஆசைத்தம்பி, வேலு, ஜெயராமன், கணேசன், நடராஜன் மற்றும் போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வெண்குன்றத்தைச் சேர்ந்த குமரேசன் (வயது 36), எள்ளுபாறையைச் சேர்ந்த குமார் (55), நல்லூரைச் சேர்ந்த மாயக்கிருஷ்ணன் (49), சுபன் (50), கூத்தம்பட்டை சேர்ந்த முருகன் (45), தெள்ளாரைச் சேர்ந்த விஜிபாபு (33), செய்யாறைச் சேர்ந்த சலீம் (28), செங்கம்பூண்டியைச் சேர்ந்த முருகன் (50), வந்தவாசி கோட்டை காலனியைச் சேர்ந்த வெங்கடேசன் (48), சுந்தர் என்பவரின் மனைவி அமுலு (38), கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பழனிவேல் (38), கீழ்கொடுங்காலூரைச் சேர்ந்த முனுசாமி (55) ஆகிய 12 பேர் மதுபானம் விற்றதாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபானப் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
    கண்ணமங்கலம் அருகே உடம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு வீரகோயில் கோட்டை மலை செல்லும் சாலையில் வசிக்கும் விவசாயி சரவணன். இவரின் மனைவி சகுந்தலா (வயது 28). அவர்களுக்கு ஓவியா (9), தேவிஸ்ரீ (7) என்ற இரு மகள்களும், திவ்யதர்ஷன் (4), பிரவேஷ் (2) என்ற இரு மகன்களும் உள்ளனர்.

    சகுந்தலா உடல் நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. 26-ந்தேதி மீண்டும் உடல் நலம் பாதிக்கப்படவே பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார்.

    அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை சகுந்தலா உயிரிழந்தார். சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலையில் ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும் ஒன்று. ஈசானியகுளம், அய்யங்குளம், தாமரைகுளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் அருணாசலேஸ்வரர் கலந்து கொள்வார்.

    அதன்படி திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நேற்று தைப்பூசத்தையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதைமுன்னிட்டு நேற்று காலையில் கோவிலில் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்கள மேளதாளத்துடன் கோவிலில் இருந்து அம்பாளுடன் அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்திற்கு வந்தார். அங்கு சூலத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது சூலத்திற்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மாலை வரை சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு கோவிலுக்கு திரும்பினார்.

    அருணாசலேஸ்வரர் கோவில் வரலாற்று கதையின்படி திருவண்ணாமலை பகுதியை ஆண்டு வந்த வல்லாள மகாராஜா என்ற மன்னர் அருணாசலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அருணாசலேஸ்வரரிடம் அவர் தனது மனைவியுடன் தினமும் மனமுருக குழந்தை வரம்கேட்டு வேண்டி வந்து உள்ளார். ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அருணாசலேஸ்வரர் உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். இந்த பிறவியில் நானே உனது மகன் என்று கூறியுள்ளார். அதன்படி ராஜாவும் அருணாசலேஸ்வரரை தனது மகனாக பாவித்து சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வந்துள்ளார். தைப்பூசத்தின் போது அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மாலையில் மேளதாளத்துடன் கோவிலுக்கு திரும்பி செல்வார்.

    அப்போது போர்களத்தில் வல்லாள மகாராஜா எதிரிகளால் தந்திரமாக கொல்லப்பட்டார் என்ற தகவல் அருணாசலேஸ்வரருக்கு தெரிவிக்கப்படும். தன்னை மகனான பாவித்த வல்லாள மகாராஜா இறந்ததை கேட்டு மேளதாளங்கள் இல்லாமல் கோவிலுக்கு அருணாசலேஸ்வரர் திரும்புவார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை நினைவுகூறும் விதமாக நேற்று மாலை அறிவொளிப்பூங்கா அருகே தீர்த்தவாரி முடித்து விட்டு அருணாசலேஸ்வரர் சென்றபோது பணியாளர் ஒருவர் வல்லாள மகாராஜா இறந்த செய்தியை தெரிவித்தார். இதையடுத்து மேளதாளங்களின்றி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.
    ×