என் மலர்
திருவள்ளூர்
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.
- மொத்த கொள்ளளவான 3645மில்லியன் கன அடியில், 3271 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூந்தமல்லி:
மிச்சாங் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து ஏரியில் இருந்து 8 ஆயிரம் கன அடிவரை தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மழை இல்லாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 622 கன அடியாக குறைந்தது. ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 22.59 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645மில்லியன் கன அடியில், 3271 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
சென்னை மக்களின் கோடைகால தண்ணீர் தேவைகளை கருத்தில் கொண்டு, ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 622 அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு மேலும் குறைக்கப்படும் என்று தெரிகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் பராமரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
- சில இடங்களில் தண்ணீர் வடியாமல் வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது.
- பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. எனினும் இன்னும் சில இடங்களில் வீடுகளை சூழ்ந்து வெள்ள நீர் வடியாமல் உள்ளது. வெள்ளவேடு அருகே உள்ள புதுச்சத்திரம் அடுத்த கொட்டம்பேடு, வேப்பம்பட்டு, பெருமாள் பட்டு, திருநின்றவூர் உள்ளிட்ட இடங்களில் சில இடங்களில் தண்ணீர் வடியாமல் வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கொட்டம்பேடு பகுதியில் மழை வெள்ள நீரை வெளியேற்ற புதுச்சத்திரம்- திருநின்றவூர் நெடுஞ்சாலையை துண்டித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் அருகில் உள்ள கூவம் ஆற்றில் கலக்கும் வகையில் வெளியேற்றப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக புதுச்சத்திரத்தில் இருந்து கொசவன்பாளையம், கொட்டம்பேடு, திருநின்றவூர், தாமரைப்பாக்கம் கூட்டுசாலை, புதுவாயல் கூட்டு சாலை வழியாக கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு உள்ளன.
புதுச்சத்திரத்தில் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர். இதேபோல் திருநின்றவூரில் இருந்து புதுச்சத்திரம் வரும் வாகனங்கள் திருவள்ளுவர் வந்து செல்கின்றன. இதனால் வாகனங்கள் சுமார் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- கோவிலின் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக நடந்து கோவிலுக்கு சென்றனர்.
- மலைப் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர்:
மிச்சாங் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. வரலாறு காணாத மழையால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.
கடந்த 4-ந்தேதி பலத்த மழை கொட்டியபோது திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
பின்னர் அதனை தற்காலிகமாக மணல் மூட்டைகளைக் கொண்டு சரி செய்து போக்குவரத்துக்கு அனுமதித்தனர்.
இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ள அந்த இடத்தில் மீண்டும் அதிக அளவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதை வழியாக போ க்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன. மலைப்பாதையை முற்றிலும் ஆய்வு செய்து மண்சரிவை சரிசெய்த பின்னரே போக்குவரத்துக்கு அனுமதிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து மலைக் கோவிலுக்கு செல்லும் பஸ், லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நுழைவுவாயில் பகுதியிலேயே தடுப்புகள் அமைத்து நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதியில் இருந்து பஸ், கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனத்தில் வந்த பக்தர்கள் வாகனத்தில் மலை கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அவர்கள் கோவிலின் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக நடந்து கோவிலுக்கு சென்றனர். இதன்காரணமாக முதியோர் மற்றும் குழந்தைகள் அவதி அடைந்தனர். மலைப் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- சாலை மிச்சாங் புயலினால் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது.
- கவுன்சிலர் சுமித்ரா குமார் போக்குவரத்திற்கு தற்காலிகமாக சீர் செய்தார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சி பழவேற்காடு காட்டுப்பள்ளி ஒன்றிய சாலை மிச்சாங் புயலினால் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது.
இதனை அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு சமரசம் பேசி சாலையில் மணல் கொட்டி கவுன்சிலர் சுமித்ரா குமார் போக்குவரத்திற்கு தற்காலிகமாக சீர் செய்தார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது
- பொன்னேரி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட தாலுகாக்கள் மற்றும் நகர்புற பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
- மாவட்டம் முழுவதும் 150 மோட்டார்கள் வைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
மிச்சாங் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆவடி, திருநின்றவூர், பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதியில் பலத்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகளில் வெள்ளநீர் வெளியேற்றப் பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்தநிலையில் திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே உள்ள பெரியார் நகர், சுதேசி நகர் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் இன்னும் சூழ்ந்து உள்ளது. அருகில் உள்ள ஈசா ஏரி நிரம்பி தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் வந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் இன்னும வெள்ள நீர் வடியவில்லை. இடுப்பு அளவுக்கு மேல் உள்ள தண்ணீரில் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள். குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியே வரமுடியாமலும் அத்தியா வசிய பொருட்கள் வாங்க முடியாமலும் தவிக்கும் நிலை உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை நீடித்து வருகிறது.
இந்தநிலையில் அந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். குடியிருப்பு பகுதியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட தாலுகாக்கள் மற்றும் நகர்புற பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 50 ஆயிரம் ஹெக்டேர் சம்பா நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. பழவேற்காடு மீனவர்களின் படகுகள் மீன்பிடி உபகரணங்கள் கணக்கெடுக்கும் பணி முடிந்துள்ளது. கால்நடை உயிரிழப்பு மற்றும் 3 மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.
மழையினால் பூண்டி, புழல் பகுதிகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மற்றும் ஆரணி ஆற்று உபரி நீர் ஆகியவை தேங்கி வடியாமல் இருந்த இடங்களில் தற்போது தண்ணீர் வடிந்து உள்ளது.
மாவட்டம் முழுவதும் 172 முகாம்களில் 15 ஆயிரம் பேரை குறிப்பாக அதிகள வில் இருளர் இன மக்களை தங்க வைத்து தற்போது வரை உணவளித்து வருகி றோம். இதுவரை அதிகம் பாதித்த பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 99 சதவீதம் இயல்புநிலை திரும்பி உள்ளது. மாவட்டத்தில் காக்களூர், திருநின்றவூர் அருகே பெரியார் நகர் சுதேசிநகர் பூந்தமல்லி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மாவட்டம் முழுவதும் 150 மோட்டார்கள் வைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்போது வரை தண்ணீர் வெளியேறாமல் இருப்பதற்கான வடிகால் இல்லாமல் கட்டப்பட்ட குடியிருப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட குடியிருப்புகளால் இந்தப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மேலும் தேவையான இடங்களில் போர்க்கால அடிப்படையிலும் மற்ற இடங்களில் அரசின் விதி முறைகளை பின்பற்றியும் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்படும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு ளை எடுத்தால் மட்டுமே நீர் வடியும் என்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை தவிர 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. ஆரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கினால் வஞ்சிவாக்கம் பகுதியில் கரை உடைப்பு ஏற்படுவதால் அப்பகுதியில் நிரந்தர தீர்வு காண திட்ட அறிக்கை தயார் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அரசுக்கு சமர்ப்பித்து நிரந்தர தீர்விற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.
- சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் திடீரென மோதியது.
- தூக்கி வீசப்பட்ட கமலேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து போனார்.
திருத்தணி:
திருத்தணி எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் லோகநாதன். இவரது மகன் கமலேஷ் (வயது19). இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நண்பரான திருத்தணியைச் சேர்ந்த யூசுப் அலி என்பவருடன் மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் கனகம்மாசத்திரம் சென்றனர். பின்னர் அவர்கள் திருத்தணி நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் திடீரென மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கமலேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து போனார். யூசுப் அலிக்கு படுகாயம் ஏற்பட்டது. அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருத்தணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோட்டைக் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சிஅம்மன் நகரில் மழைநீர் தேங்கியுள்ளதால் படகில் சென்று வருகின்றனர்.
- இடையன்குளம் சாலை முழுவதும் மணலால் மூடி உள்ளன. அப்பகுதியில் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.
பொன்னேரி:
மிச்சாங் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியும், ஆற்று வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீரும் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தற்போது வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.
எனினும் திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர், பழவேற்காடு, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான ஒருசில இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 3 இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
பழவேற்காடு அடுத்த ஆண்டார் மடம் கிராமத்தில் ஆரணி ஆற்று வெள்ளம் காரணமாக தரைப் பாலம், சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.
குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அவர்கள் பழவேற்காடு பகுதிக்கு படகுகளில் சென்று வருகின்றன. கடந்த ஒரு வாரமாக அவர்களது படகு பயணம் நீடித்து வருகிறது. ஆரணி ஆற்றில் வெள்ளம் இன்னும் குறையவில்லை. தண்ணீர் குறைந்த பின்னரே சாலைகள் சீரமைக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பும் என்று தெரிகிறது. ஒரு வாரமாக தங்களை அரசு அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை, நிவாரண உதவிகள் எதுவும் கிடைக்க வில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்
இதேபோல் கோட்டைக் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சிஅம்மன் நகரில் மழைநீர் தேங்கியுள்ளதால் படகில் சென்று வருகின்றனர்.
மீஞ்சூர் அடுத்த கேசவ புரம், பகுதியில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கிறது. அதனை ராட்சத மின்மோட்டார் மூலம் வெளியேற்றி வருகிறார்கள். மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம், பகுதியில் மின் கம்பங்கள் சாய்ந்தும் மழைநீர் வடியாமல் இன்னும் தேங்கி நிற்கிறது.
பழவேற்காடு அடுத்த தாங்கள் பெரும் புலம் ஊராட் சிக்கு உட்பட்ட தாங்கல், பெரும் புலம், இடையன்குளம் சாலை முழுவதும் மணலால் மூடி உள்ளன. அப்பகுதியில் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவித்து வருகின்றனர். போக்குவரத்து தடைப்பட்டதால் டிராக்டரில் உணவு மற்றும் குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் தலைமையில் வழங்கப்பட்டு வருகின்றன. பழவேற்காடு அண்ணா மலைச்சேரி பகுதியில் 500 க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன. மீன்வளத்துறை சார்பில் கணக்கெ டுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
- மழை குறைந்ததால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.
- ஏரிக்கு 750 கனஅடி தண்ணீர் வருகிறது. 1456 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
திருவள்ளூர்:
மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனால் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியது. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுமார் 8 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் மழை குறைந்ததால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 1091 கனஅடியாக குறைந்து உள்ளது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பும் 1500 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.64 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் 3284 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
இதேபோல் புழல், சோழவரம் ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 239 கனஅடி மட்டுமே தண்ணீர் வருகிறது. இதனால் உபரிநீர் திறப்பு 239 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த உயரமான 21.20 அடியில் 20.21 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3300மி.கனஅடியில் 3054மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081மி.கனஅடியில் 790மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 750 கனஅடி தண்ணீர் வருகிறது. 1456 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2924மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 1610கனஅடி தண்ணீர் வருகிறது. 1009 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 118 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
- மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி இறந்து போனதாக தெரிவித்தனர்.
- கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பிஞ்சிவாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (22). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். ரஞ்சித்குமார் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினியை (18) 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் பிரியதர்ஷினி குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்று ஹீட்டரை போட முயன்றார். அப்போது மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்தார். இதை கண்ட வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியதர்ஷினி இறந்து போனதாக தெரிவித்தனர். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளிப்பதற்காக ஹீட்டர் போடும்போது மின்சாரம் தாக்கி திருமணமான 15 நாளில் புதுப்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சாலை முழுவதிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.
- புல்லரம்பாக்கம் பகுதியில் மட்டும் 180 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் இன்னும் மழை வெள்ளபாதிப்பில் இருந்து மீளாமல் உள்ளது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவுப்படி நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகள், மற்றும் வெள்ள நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
திருவள்ளுர் மாவட்டத்தில் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, நசரத்பேட்டை, திருமழிசை, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழைநீர் இன்னும் வடியவில்லை.
பழவேற்காடு ஆண்டார்மடம், தாங்கள் பெரும்புலம் , எடமணி, வைரங்குப்பம், நக்கத் துறவு, கோரை குப்பம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றிலும் மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் படகில் சென்று வருகின்றனர். இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. சாலை முழுவதிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றன.
பலத்த காற்று காரணமாக பழவேற்காடு சுற்றியுள்ள பகுதிகளில் மின்கம்பங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதனால் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5-வது நாளாக இன்றும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் மழைவெள்ளம் காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.

பொன்னேரி அடுத்த சின்ன காவனம், பெரிய காவனம், உப்பளம் பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிநீர், மற்றும் மின்சாரம் இல்லாததால் அப்பகுதி பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று இரவு அவர்கள் மின்சாரம் வழங்க கோரி பொன்னேரி-பழவேற்காடு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பங்குகளில் பெட்ரோல் டீசல் இல்லாததால் பொன்னேரியில் இருந்து பாட்டில்களில் வாங்கப்படும் பெட்ரோலை சிலர் ஒரு லிட்டர் ரூ.140 -க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு மற்றும் அனுப்பப்பட்டு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான ஆழ்துளைக் கிணறுகள் வன்னிப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 40-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குழாய் வழியாக அனுப்பப்பட்டு வருகின்றன.
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 34 மின் மோட்டார்கள் நீரில் மூழ்கி பழுதானது. இதனால் 5 நாட்களாக கிராமங்களுக்கு குடிநீர் அனுப்பவில்லை. பழதடைந்த மின்மோட்டர்களை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, வாரிய தலைமை பொறியாளர் சன்முகநாதன்,மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், நிர்வாகப் பொறியாளர் அமலதீபன், உதவிப் பொறியாளர்கள் சம்பத், தமிழ்மணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1146 ஏரிகளில் 784 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மாவட்டத்திர் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதனால் புல்லரம்பாக்கம் பகுதியில் மட்டும் 180 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
- நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
- ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயணம்செய்து வருகிறார்கள்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. பல ரெயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்க நடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடைமேம்பாலம் இல்லை.
இதேபோல் திருவள்ளூரை அடுத்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திலும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர்.
தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் சுரங்க நடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரெயில் மோதி பலியான சம்பவத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் இந்த நிலைக்கு ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தின் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே நிர்வாகம் மற்றொரு புதிய ஏற்பாடு செய்துள்ளது.
வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் வரும்போதும் போகும்போதும் எச்சரிக்கும் விதமாக ஒலிபெருக்கி மூலம் ஒலி எழுப்பப்படுகிறது. விரைவு வண்டி ரெயில் நிலையத்தை கடக்கும்போது எச்சரிக்கும் விதமாக ஒலி பெருக்கி மூலம் ஒலி எழுப்பப்படுகிறது. ரெயில்கள் வரும்போது பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காத வண்ணம் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக ஏற்பாடு செய்த போதிலும், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும்.
- மப்பேடு போலீசார் மயில்வேலின் உடலை மீட்டனர்.
- மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலி கிராமம்,மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது38). கொத்தனார். இவரது மனைவி தாந்தோணி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
சமீபத்தில் பெய்த கனமழையால் கன்னிகைப்பேர் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு ராஜா வந்த போது கன்னிகைப்பேர்-திருக்கண்டலம் நெடுஞ்சாலையில் உள்ள கால்வாயில் தவறி விழுந்தார். இதில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அவரை அவ்வழியே சென்றவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடிவந்தனர். இதற்கிடையே இன்று காலை அதே பகுதியில் கால்வாயில் ராஜாவின் உடல் கரை ஒதுங்கி இருந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூரை அடுத்த, பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமம் கிடங்கு தெருவை சேர்ந்தவர் மயில்வேல்(51). இவர் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் கேண்டினில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை மயில்வேல் வழக்கம்போல் வேலைக்கு சென்றபோது சத்தரை பஸ்நிறுத்தம் எதிரே உள்ள குளத்தில் குளித்தார். அப்போது சேற்றில் சிக்கிய அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மப்பேடு போலீசார் மயில்வேலின் உடலை மீட்டனர்.
திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கபிலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (30). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை மேல் நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலை எதிரே உள்ள டீ கடைக்கு சென்றார். அப்போது மகேஷ் சிறுநீர் கழிப்பதற்காக டீக்கடையின் சுவர் ஓரம் சென்றார். அவர் அருகில் இருந்த மின்இணைப்பு பெட்டியை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






