என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
    • போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    சி.ஐ.டி.யூ காஞ்சிபுரம் மண்டல துணைத் தலைவர் மாயக்கண்ணன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் முன்னாள் நகர மன்ற தலைவர் சுந்தர்ராஜன், சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன், போக்குவரத்து படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான வேண்டும்.

    வாரிசு வேலை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    இதில் கோயம்பேடு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சாலையில் கால்நடைகளை சுற்றவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
    • இருசக்கர வாகன ஓட்டிகள் மாட்டின் மீது மோதி படுகாயம் அடையும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    சாலையில் சுற்றும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக சாலையில் கால்நடைகளை சுற்றவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பொன்னேரி, மீஞ்சூர், நாலூர், பட்டமந்திரி, காட்டூர், உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் மாடுகள் ஹாயாக கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மாடுகள் சாலையின் ஓரத்தில் படுத்துக் கொள்வதால் கனரக வாகனங்களில் மாடுகள் அடிபட்டு இறக்கும் சம்பவமும், இருசக்கர வாகன ஓட்டிகள் மாட்டின் மீது மோதி படுகாயம் அடையும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    எனவே பொன்னேரி, மீஞ்சூர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கவும், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 1,519 டாஸ்மாக் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    • தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    கள்ளக்குறிச்சி, கருணா புரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் கள்ளச்சாராயத்திற்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் குறித்தும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடந்து வருகிறது.

    மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 19-ந் தேதி முதல் இன்று அதிகாலை வரை நடத்திய சோதனையில் மது கடத்தல் மற்றும் மது விற்பனை செய்த 105 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் 1,519 டாஸ்மாக் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து தமிழக எல்லையில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்த 4 பெண் கள் உட்பட 10 பேரை ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து 53 லிட்டர் கள்ளச்சாராயம் பறி முதல் செய்யப்பட்டு உள்ளது.

    கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்பட்டு வரும் 2 தொழிற்சாலை திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழில் பேட்டையில் செயல்பட்டு வரும் 2 தொழிற்சாலை என மொத்தம் 4 தொழிற்சாலைகளில் கும்மிடிப் பூண்டி, திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் கிரியாசக்தி, அழகேசன் தலைமையில் போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மெத்தனால் இருப்பு சரியாக உள்ளதா? என்றும் அவை பாது காப்பாக வைக்கப்பட்டுள்ள னவா? அவற்றின் காலக் கெடு, பாதுகாப்பு தன்மை ஆகியன குறித்தும் போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.

    கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் மூடிய ஒரு தொழிற்சாலையில் மெத்தனால் உபயோகிக்கக்கூடிய தொட்டியை போலீசார் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மெத்தனால் பயன்படுத்தி மூடி உள்ள தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகளின் வசதிக்காக பூந்தமல்லி, திருவேற்காடு பகுதியில் பஸ்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
    • மாநகர போக்கு வரத்துக்கழகம் முறையாக பராமரிக்கவில்லை. .

    பூந்தமல்லி:

    சென்னையை ஒட்டி அமைந்துள்ளது பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள். இங்கு பிரசித்திப் பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் தேவார பாடல் பெற்ற தலமான வேதபுரீஸ்வரர் கோவில்கள் உள்ளன. இதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் சென்னை நகருக்கும், புறநகர் பகுதிகளுக்கும் சென்று வருகிறார்கள். இதனால் பூந்தமல்லி, திருவேற்காடு பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும். பயணிகளின் வசதிக்காக பூந்தமல்லி, திருவேற்காடு பகுதியில் பஸ்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரசு பஸ்கள், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இந்த 2 பஸ்நிலையங்களும் தற்போது கட்டணம் இல்லாத இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் சென்று வருவதிலும் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பாரிமுனை, தாம்பரம், கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பதிக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் பூந்தமல்லி பஸ்நிலையம் எப்போதும் பயணிகள் வருகையால் பரபரப்பாக இருக்கும். பஸ்நிலையத்தில் கட்டணம் கொடுத்து வாகனங்கள் நிறுத்த நகராட்சி சார்பில் தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலானோர் தங்களது மோட்டார் சைக்கிள்கள், கார்களை பஸ்நிலையத்திற்கு உள்ளேயே கட்டணமின்றி நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் பஸ்நிலையம் முழுவதுமே வாகனம் நிறுத்தும் இடம் போல் காட்சி அளிக்கிறது. பயணிகள் பஸ்நிலையத்திற்கு சென்று வரவும், பஸ்கள் இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. மேலும் சில ஷேர் ஆட்டோக்கள் பஸ்நிலையத்தின் உள்ளேயே வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனை கட்டுப்படுத்தி பஸ்நிலையத்திற்குள் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதே நிலைதான் திருவேற்காடு பஸ்நிலையத்திலும் நீடிக்கிறது. திருவேற்காடு பஸ் நிலையத்தில் இருந்து, பிராட்வே, கோயம்பேடு, கிளாம்பாக்கம், தி.நகர், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆவடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் 72 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பஸ்நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த பஸ்நிலையம் போதிய பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் காணப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்துமிடமாகவும், மாடுகள் சுற்றித் திரியும் இடமாகவும் விளங்குகிறது என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருவேற்காடு பேரூராட்சியாக இருந்த போது, இந்த பஸ் நிலையம் சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் திருவேற்காடு நிலையத்தை சென்னை மாநகர போக்கு வரத்துக்கழகம் பராமரித்து வருகிறது. ஆனால் மாநகர போக்கு வரத்துக்கழகம் முறையாக பராமரிக்கவில்லை. .

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு நாள்தோறும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கிறார்கள். திருவேற்காடு பஸ்நிலையம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேற்கூரை பகுதிகளில் சிறுமழை பெய்தால் கூட மழைநீர் ஒழுகுகிறது. இங்கு போதிய மின் விளக்குகள் இல்லை.

    பஸ்நிலையத்தை இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்துமிடமாகவும், மாடுகள் சுற்றித் திரியும் இடமாகவும் மாற்றி விட்டனர். குடிநீர் வசதியும் போதுமானதாக இல்லை. இதேபோல் தான் பூந்தமல்லி பஸ்நிலையமும் காட்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் வெறும் 82 மி.கனஅடியாக சரிந்து விட்டது.
    • பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 5 ஆயிரத்து 74 மி.கனஅடியாக (5 டி.எம்.சி) குறைந்து உள்ளது.

    பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் வெறும் 82 மி.கனஅடியாக சரிந்து விட்டது. இதனால் பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருகிறது. ஏரியின் ஷட்டர் பகுதியில் மட்டும் குட்டை போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்து உள்ளதால் அங்குள்ள மீன்கள் இறந்து வருகின்றன. ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடக்கிறது.

    பூண்டி ஏரியில் நீர் மட்டம் சரிந்ததை தொடர்ந்து அங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு உள்ளது. பூண்டி எரியில் நீர்இருப்பு அதிகரித்தால் தான் இனி வரும் நாட்களில் புழலுக்கு குடிநீர் அனுப்ப முடியும். ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலும் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கிருஷ்ணா தண்ணீர் இப்போதைக்கு திறக்கப் படவாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

    புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2908மி.கன அடி தண்ணீர் உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி வருகிறது. இதனால் புழல் ஏரிக்கு தண்ணீர் வர தொடங்கி உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு 152 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. குடிநீர் தேவைக்காக 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 1649 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது. 60 கனஅடி தண்ணீர் வருகிறது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் வெறும் 124 மி.கனஅடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மி.கனஅடியில் 311 மி.கனஅடி நீர் இருக்கிறது. குடிநீர் ஏரிகளில் தற்போதைய நிலவரப்படி 5 டி.எம்.சி தண்ணீர் இரு ப்பு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே நாளில் 7 டி.எம்.சி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • காரில் சோதனை செய்த போது கணக்கில் வராத ரூ.11 லட்சம் ரொக்கப்பணம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
    • லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் 10 அதிகாரிகள் இதில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    பள்ளிப்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய சார்பதிவாளர் ஸ்ரீதர் கடந்த சில நாட்களாக விடுமுறையில் உள்ளார். இதைத்தொடர்ந்து பேரம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய மோகன்ராஜ் என்பவர் பள்ளிப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பொறுப்பு சார்பதிவாளராக நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று மோகன்ராஜ் தனது காரில் கணக்கில் வராத பணத்தை எடுத்து செல்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராம மூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா உள்ளிட்டோர் விரைந்து சென்றனர். இதற்குள் மோகன்ராஜ், தனது காருக்கு பெட்ரோல் நிரப்ப சென்றபோது குமாரராஜு பேட்டை கிராமத்தில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது காரில் சோதனை செய்த போது கணக்கில் வராத ரூ.11 லட்சம் ரொக்கப்பணம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதைத்தொடர்ந்து மோகன்ராஜை பள்ளிப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை மற்றும் விசாரணை நேற்று இரவு 11 மணிவரை நடைபெற்றது.

    இதற்கிடையே இன்று காலை 7 மணி முதல் திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள சார்பதிவாளர் மோகன்ராஜின் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் 10 அதிகாரிகள் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். வீட்டில் உள்ள ஆவணங்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பல்வேறு இடங்களில் விதிமுறைகள் மீறி பிரமாண்ட பேனர்களை வைத்து உள்ளனர்.
    • விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலை ஓரம் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விதிமுறைகள் மீறி விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. விளம்பர பேனர் வைக்க வேண்டும் என்றால் அந்தந்த நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி கோரி குறிப்பிட்ட தொகை செலுத்தி போலீசாரிடம் அனுமதி பெற்று வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    எனினும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விதிமுறைகள் மீறி பிரமாண்ட பேனர்களை வைத்து உள்ளனர்.

    இவ்வாறு வைக்கப்படும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலை ஓரம் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர் ஒன்று காற்றில் சரிந்தது. அந்த பேனர் எப்போது வேண்டுமானாலும் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது விழும் அபாய நிலையில் காட்சி அளித்தது. இதனால் அவ்வழியே செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது.

    எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த விளம்பர பேனர்களை அகற்றி, விதிமுறைகள் மீறி விளம்பர பேனர்கள் வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பக்தர்களின் கூட்டம் நாளுக்கு, நாள் கட்டுக்கடங்காத வகையில் கூடிக்கொண்டே உள்ளது.
    • நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன் பின்னர், இக்கோவிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு, நாள் கட்டுக்கடங்காத வகையில் கூடிக்கொண்டே உள்ளது. இக்கோவிலில் மரகதகலால் ஆன மயில், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் இருப்பதும், திருமண கோலத்தில் வள்ளி மணவாளன் காட்சியளிப்பதும் கூடுதல் சிறப்பு ஆகும். இக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.


    இந்நிலையில் நேற்று ஆனி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மற்றும் விசாக நட்சத்திரம் கூடிய சுப தினம் என்பதால் விடியற்காலை முதலே இக்கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. இதனால் கோவிலின் பின்பகுதியில் உள்ள அன்னதான மண்டபம் வரையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விடியற்காலை மூலவருக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் ஆனந்தன் குருக்கள் தலைமையில் அபிஷேகம் செய்தனர்.

    இதன்பின்னர் மூலவருக்கு வெள்ளி அங்கி கவச அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலின் கோபுர வாசல் அருகே 108 ஆம்புலன்ஸ் சேவையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


    புதுரோடு கூட்டுச் சாலை, அகரம் கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் இருந்து இக்கோவிலுக்கு வந்து செல்ல மினி பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்தப் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மினி பேருந்துகளை இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவில் அருகே உள்ள நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடல் அலையில் அடித்து வரப்படும் மணல் கருமையாக மாறி உள்ளது.
    • தொழிற்சாலை கழிவுநீரே காரணம் என்று கூறப்படுகிறது.

    பொன்னேரி:

    பழவேற்காடு பகுதியை சுற்றி 35 மீனவ கிராமங்கள் உள்ளன. திருமலை நகர் தொடங்கி காட்டுப்பள்ளி வரை நீண்ட கடற்கரை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பழவேற்காடு கடற்கரை பகுதி கருப்பு நிறமாக மாறி வருகிறது. பழைய சாட்டன்குப்பம், கோரைகுப்பம், வைரவன் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம கடற்கரை பகுதிகளில் கடல் அலையில் அடித்து வரப்படும் மணல் கருமையாக மாறி உள்ளது.

    இதனால் அந்த பகுதியில் கடற்கரை முழுவதும் கருப்பாக காட்சி அளிக்கிறது. கடல் அலைகளும் சகதியாக மாறிவிட்டன. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்த பாதிப்புக்கு தொழிற்சாலை கழிவுநீரே காரணம் என்று கூறப்படுகிறது.

    கடலில் கலக்கப்படும் கடல்நீரால் மாசு ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம், அத்திப்பட்டு புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் கழிவுகள் கடலில் கலக்கின்றன.

    தற்போது கடலில் அலை சீற்றம் அதிகமாக இருக்கிறது. இதனால் அந்த கழிவுகள் கடற்கரை பகுதியில் ஒதுங்குகிறதா? என்று தெரியவில்லை. இதுவரை, இதுபோன்று பழவேற்காடு கடற்கரை கருப்பு நிறமாக மாறியது இல்லை என்றார்.

    • சேமிப்பு கிடங்கில் இருந்து இந்த பழங்களை மர்ம நபர்கள் லாரியில் எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர்.
    • ஆப்பிள் பழங்களை கொட்டி விட்டு சென்றவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரில் இருந்து திருவேற்காடு செல்லும் சாலையில் அயப்பாக்கம் ஏரிக்கரையோரமாக இன்று காலையில் டன் கணக்கில் ஆப்பிள் பழங்கள் கொட்டப்பட்டிருந்தது.

    இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வியப்புடன் பார்த்துசென்றனர். இவ்வளவு பழத்தை வீணாக கொட்டிவிட்டு சென்றுள்ளார்களே என்று கூறி பலரும் வேதனைப்பட்டனர்.

    இந்த ஆப்பிள் பழங்கள் கெட்டுப்போன ஆப்பிள்களாக இருந்தன. அதில் சில ஆப்பிள் பழங்கள் நன்றாக இருந்தன. அவைகளை பொதுமக்களில் சிலர் எடுத்துசென்றதையும் காண முடிந்தது.

    அப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து இந்த பழங்களை மர்ம நபர்கள் லாரியில் எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை.

    இதைதொடர்ந்து ஆப்பிள் பழங்களை கொட்டி விட்டு சென்றவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    டன் கணக்கிலான இந்த ஆப்பிள் பழங்களின் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. கடைகளில் கிலோ ரூ. 200 முதல் 300 வரை விற்பனையாகும் ஆப்பிள் பழங்கள் சாலையோரமாக கொட்டப்பட்டு இருந்ததை பார்த்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கடல் அலையின் சீற்றம் காரணமாக இந்த மணல் பிரச்சினை இருக்கும்.
    • கடற்கரையில் கடல் அரிப்பு தடுப்பு கற்களை போட வேண்டும்.

    பொன்னேரி:

    பழவேற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பழவேற்காடு அடுத்த கருங்காலி பகுதியில் உள்ள பள்ளப்பாடு என்ற இடத்தில் கடல் அலைகள் கரையை தாண்டி வெளியே வந்தது. அந்த பகுதியில் கடற்கரையில் இருந்து சில அடிதூரத்திலேயே சாலை உள்ளது. மேலும் சாலையை ஒட்டி குறைந்த உயரத்திலேயே தடுப்பு சுவர் இருப்பதால் அதனை தாண்டி கடல் நீர் சாலைக்கு வந்தது.

    இதன்காரணமாக கருங்காலி பகுதியில் உள்ள பழவேற்காடு சாலையில் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் கடல் மணலால் மூடப்பட்டது. சாலையில் சுமார் 4 மீட்டர் உயரம் அளவிற்கு கடல்மணல் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதனால் அதானி துறைமுகம், எல்.என்.டி. துறைமுகம்,காமராஜர் துறைமுகம், மற்றும் சென்னை செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் 40 கிலோமீட்டர் தூரம் சுற்றி சென்று வருகின்றன. கடந்த ஒரு மாதமாக இதே நிலை நீடித்து வருகிறது. தற்போது கடல் அலையின் சீற்றம் குறைந்து உள்ள நிலையில் பழவேற்காடு சாலையில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் இதுவரை மணல் அகற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தினந்தோறும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். பழவேற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வேலைக்கு செல்பவர்கள் ஷேர் ஆட்டோவில் பள்ளப்பாடு பகுதி வரைக்கும் சென்று பின்னர் அங்கிருந்து மணலில் 1½ கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது.

    எனவே பள்ளப்பாடு பகுதியில் கடல் நீர் சாலைக்கு வராமல் தடுக்க பெரிய கற்கள் அல்லது தடுப்பு சுவரை உயரமாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்திடம் மனு அளித்து உள்ளார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வழக்கமாக மழை காலங்களில் கடல் அலையின் சீற்றம் காரணமாக இந்த மணல் பிரச்சினை இருக்கும். ஆனால் இப்போது இது ஏற்பட்டு உள்ளது. வரும் மழை காலத்திலும் இதே பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். எனவே கருங்காலி பகுதியில் கடல் அலை சாலைக்கு வராத அளவில் தடுப்பு சுவரை உயர்த்தி அமைக்க வேண்டும். அல்லது கடற்கரையில் கடல் அரிப்பு தடுப்பு கற்களை போட வேண்டும்.

    தற்போது சாலையில் உள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 40 கி.மீட்டர் தூரம் சுற்றி சென்று கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் கடந்த 2013ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. 2013ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகத்திற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2025ம் ஆண்டு மே 23ம் தேதி வரை இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் போலீசாரும் , அதிகாரிகளும் வாகன சோதனையில் ஈடுபட்டு குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று பூந்தமல்லி அருகே போலீசார் வாகன சோதனையின் போது வாகனம் ஒன்று நிற்காமல் சென்றது.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நிற்காமல் சென்ற வானகத்தை சினிமா பாணியில் விரட்டி சென்றனர். ஆனால் நசரத்பேட்டை சிக்னலில் அந்த வாகனம் விபத்தில் சிக்கியது.

    போலீசார் பார்த்ததும் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பியோடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில், ஒரு டன் குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    குட்கா பொருட்களுடன் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×