என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கடல் அலையில் அடித்து வரப்படும் மணல் கருமையாக மாறி உள்ளது.
    • தொழிற்சாலை கழிவுநீரே காரணம் என்று கூறப்படுகிறது.

    பொன்னேரி:

    பழவேற்காடு பகுதியை சுற்றி 35 மீனவ கிராமங்கள் உள்ளன. திருமலை நகர் தொடங்கி காட்டுப்பள்ளி வரை நீண்ட கடற்கரை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பழவேற்காடு கடற்கரை பகுதி கருப்பு நிறமாக மாறி வருகிறது. பழைய சாட்டன்குப்பம், கோரைகுப்பம், வைரவன் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராம கடற்கரை பகுதிகளில் கடல் அலையில் அடித்து வரப்படும் மணல் கருமையாக மாறி உள்ளது.

    இதனால் அந்த பகுதியில் கடற்கரை முழுவதும் கருப்பாக காட்சி அளிக்கிறது. கடல் அலைகளும் சகதியாக மாறிவிட்டன. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்த பாதிப்புக்கு தொழிற்சாலை கழிவுநீரே காரணம் என்று கூறப்படுகிறது.

    கடலில் கலக்கப்படும் கடல்நீரால் மாசு ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, காட்டுப்பள்ளி, புழுதிவாக்கம், அத்திப்பட்டு புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் கழிவுகள் கடலில் கலக்கின்றன.

    தற்போது கடலில் அலை சீற்றம் அதிகமாக இருக்கிறது. இதனால் அந்த கழிவுகள் கடற்கரை பகுதியில் ஒதுங்குகிறதா? என்று தெரியவில்லை. இதுவரை, இதுபோன்று பழவேற்காடு கடற்கரை கருப்பு நிறமாக மாறியது இல்லை என்றார்.

    • சேமிப்பு கிடங்கில் இருந்து இந்த பழங்களை மர்ம நபர்கள் லாரியில் எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர்.
    • ஆப்பிள் பழங்களை கொட்டி விட்டு சென்றவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரில் இருந்து திருவேற்காடு செல்லும் சாலையில் அயப்பாக்கம் ஏரிக்கரையோரமாக இன்று காலையில் டன் கணக்கில் ஆப்பிள் பழங்கள் கொட்டப்பட்டிருந்தது.

    இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வியப்புடன் பார்த்துசென்றனர். இவ்வளவு பழத்தை வீணாக கொட்டிவிட்டு சென்றுள்ளார்களே என்று கூறி பலரும் வேதனைப்பட்டனர்.

    இந்த ஆப்பிள் பழங்கள் கெட்டுப்போன ஆப்பிள்களாக இருந்தன. அதில் சில ஆப்பிள் பழங்கள் நன்றாக இருந்தன. அவைகளை பொதுமக்களில் சிலர் எடுத்துசென்றதையும் காண முடிந்தது.

    அப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து இந்த பழங்களை மர்ம நபர்கள் லாரியில் எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை.

    இதைதொடர்ந்து ஆப்பிள் பழங்களை கொட்டி விட்டு சென்றவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    டன் கணக்கிலான இந்த ஆப்பிள் பழங்களின் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. கடைகளில் கிலோ ரூ. 200 முதல் 300 வரை விற்பனையாகும் ஆப்பிள் பழங்கள் சாலையோரமாக கொட்டப்பட்டு இருந்ததை பார்த்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கடல் அலையின் சீற்றம் காரணமாக இந்த மணல் பிரச்சினை இருக்கும்.
    • கடற்கரையில் கடல் அரிப்பு தடுப்பு கற்களை போட வேண்டும்.

    பொன்னேரி:

    பழவேற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பழவேற்காடு அடுத்த கருங்காலி பகுதியில் உள்ள பள்ளப்பாடு என்ற இடத்தில் கடல் அலைகள் கரையை தாண்டி வெளியே வந்தது. அந்த பகுதியில் கடற்கரையில் இருந்து சில அடிதூரத்திலேயே சாலை உள்ளது. மேலும் சாலையை ஒட்டி குறைந்த உயரத்திலேயே தடுப்பு சுவர் இருப்பதால் அதனை தாண்டி கடல் நீர் சாலைக்கு வந்தது.

    இதன்காரணமாக கருங்காலி பகுதியில் உள்ள பழவேற்காடு சாலையில் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் கடல் மணலால் மூடப்பட்டது. சாலையில் சுமார் 4 மீட்டர் உயரம் அளவிற்கு கடல்மணல் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதனால் அதானி துறைமுகம், எல்.என்.டி. துறைமுகம்,காமராஜர் துறைமுகம், மற்றும் சென்னை செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் 40 கிலோமீட்டர் தூரம் சுற்றி சென்று வருகின்றன. கடந்த ஒரு மாதமாக இதே நிலை நீடித்து வருகிறது. தற்போது கடல் அலையின் சீற்றம் குறைந்து உள்ள நிலையில் பழவேற்காடு சாலையில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றி போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் இதுவரை மணல் அகற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தினந்தோறும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். பழவேற்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வேலைக்கு செல்பவர்கள் ஷேர் ஆட்டோவில் பள்ளப்பாடு பகுதி வரைக்கும் சென்று பின்னர் அங்கிருந்து மணலில் 1½ கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது.

    எனவே பள்ளப்பாடு பகுதியில் கடல் நீர் சாலைக்கு வராமல் தடுக்க பெரிய கற்கள் அல்லது தடுப்பு சுவரை உயரமாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்திடம் மனு அளித்து உள்ளார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, வழக்கமாக மழை காலங்களில் கடல் அலையின் சீற்றம் காரணமாக இந்த மணல் பிரச்சினை இருக்கும். ஆனால் இப்போது இது ஏற்பட்டு உள்ளது. வரும் மழை காலத்திலும் இதே பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். எனவே கருங்காலி பகுதியில் கடல் அலை சாலைக்கு வராத அளவில் தடுப்பு சுவரை உயர்த்தி அமைக்க வேண்டும். அல்லது கடற்கரையில் கடல் அரிப்பு தடுப்பு கற்களை போட வேண்டும்.

    தற்போது சாலையில் உள்ள மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 40 கி.மீட்டர் தூரம் சுற்றி சென்று கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இந்த மணலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் கடந்த 2013ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. 2013ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகத்திற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2025ம் ஆண்டு மே 23ம் தேதி வரை இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் போலீசாரும் , அதிகாரிகளும் வாகன சோதனையில் ஈடுபட்டு குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று பூந்தமல்லி அருகே போலீசார் வாகன சோதனையின் போது வாகனம் ஒன்று நிற்காமல் சென்றது.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் நிற்காமல் சென்ற வானகத்தை சினிமா பாணியில் விரட்டி சென்றனர். ஆனால் நசரத்பேட்டை சிக்னலில் அந்த வாகனம் விபத்தில் சிக்கியது.

    போலீசார் பார்த்ததும் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பியோடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில், ஒரு டன் குட்கா பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    குட்கா பொருட்களுடன் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பு இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
    • மின்தடை குறித்து முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    கோடை வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடை நிலவுகிறது. இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடையால் மக்கள் புழுக்கத்தால் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    திருவள்ளூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பு இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. தினந்தோறும் 10 மணிநேரத்திற்கும் மேல் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் மின்வினியோகம் சீரானது. ஆனால் இரவு 10 மணிக்கு மேல் மீண்டும் மின்தடை ஏற்பட்டது. இடையிடையே சுமார் 10 நிமிடம் மட்டும் மின்வினியோகம் வழங்கபட்ட நிலையில் அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது.


    இதனால் வீடுகளில் தூங்க முடியாமல் பொதுமக்கள் விடிய, விடிய தவித்தனர். மின்தடை குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட போது அதிகாரிகள் யாரும் பதில் அளிக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். ஏற்கனவே மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில் திருவள்ளூர், தேரடி பகுதியில் இரவு நேரத்தில் மின் இணைப்பை துண்டித்து ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர்.

    மின்தடை குறித்து முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மாணவ, மாணவிகள் போலியான நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
    • வெளிநாட்டு வேலை மற்றும் படிப்புக்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதனை மாணவர்கள், இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாட்டிற்கு வேலை மற்றும் படிக்க விண்ணப்பிக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் போலியான நிறுவனங்களில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வெளிநாட்டு வேலை மற்றும் படிப்புக்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதனை மாணவர்கள், இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே கல்வி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பக் கட்டணம் மற்றும் முதலீடுகள் செலுத்துவதை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.

    ஆசை வார்த்தைகளை விளம்பரப்படுத்தும் போலி நிறுவனங்களை நம்பி கல்வி தொடர்பான ஆவணங்கள் மற்றும் தொகை செலுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்த நிறுவனங்களால் வெளிநாட்டில் வேலை, கல்லுாரிகளில் சேர வாய்ப்புகள் வாங்கித்தர அலைக்கழிக்கப் படும்போது இந்நிறுவனங்களுக்கு அளித்த ஆவணங்கள் மற்றும் முதலீடுகள் திரும்ப பெறுவது கடினமான பணியாகும். மேலும் இந்த பரிமாற்றத்திற்கு முறைப்படி சிவில் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டி உள்ளதால் காலதாமதம் ஏற்பட்டு பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே இளைஞர்களும் மாணவ, மாணவிகளும் மற்றும் பெற்றோர்களும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாமரைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம்நகர் அருகே சாலையில் அரிப்பு ஏற்பட்டு மெகா பள்ளம் ஏற்பட்டது.
    • இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அஞ்சும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் கிராமத்தில் இருந்து முஸ்லிம்நகர் வழியாக ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையில் வந்தடையும் பாயிண்ட் பகுதி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் மதனஞ்சேரி, தொண்டுகுழி, கண்டிகை ஆகிய கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊத்துக்கோட்டையில் இருந்து ஜீரோ பாயிண்ட்டுக்கு இந்த சாலை வழியாகத்தான் அடிக்கடி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு உங்களில் வங்கக்கடலில் ஏற்பட்ட மிச்சாங் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    இதில் தாமரைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம்நகர் அருகே சாலையில் அரிப்பு ஏற்பட்டு மெகா பள்ளம் ஏற்பட்டது. மேலும் தாமரைகுப்பம் - ஜீரோ பாயிண்ட் இடையே சாலையும் குண்டும் குழியு மாக மாறியது.

    இந்த சாலை இதுவரை சீரமைக்கப்படாமல் ஒத்தையடி சாலையாக மாறிவிட்டது. மேலும் மண் அரிப்பு ஏற்பட்ட இடம் ஆபத்தான நிலையில் மெகா பள்ளமாக காட்சி அளிக்கிறது. இது இன்னும் மூடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லவே அச்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் பள்ளத்தில் இருசக்கர வாகனஓட்டிகள் அடிக்கடி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அஞ்சும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே தாமரைக்குப்பம் - ஜீரோ பாயிண்ட் இடையே குண்டும் குழியுமாக மாறிய சாலையை சீரமைத்து மெகா பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமரைகுப்பம் மற்றும் முஸ்லிம் நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • திருத்தணி மலைக்கோவில் முழுவதும் கூட்டமாக காணப்பட்டது.
    • திருப்போரூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருத்தணி:

    பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில் திருத்தணி கோவிலுக்கு தற்போது வரும் பக்கதர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்ந நிலையில் இன்று வைகாசி மாதத்தில் வரும் முதல் சுப முகூர்த்த நாள் என்பதால் திருத்தணி கோவிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.

    மேலும் இன்று வார இறுதி விடுமுறை நாள் என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. திருமணகோஷ்டி மற்றும் பக்தர்கள் வருகை அதிகரிப்பால் திருத்தணி மலைக்கோவில் முழுவதும் கூட்டமாக காணப்பட்டது.

    புதுமணத்தம்பதிகள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்போரூர்

    இதேபோல் திருப்போரூர் முருகன் கோவிலிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் சுமார் 50 திருமணங்கள் நடைபெற்றது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    திருமண கோஷ்டியினர் வந்த வாகனங்களால் திருப்போரூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.
    • புது பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை.

    ஊத்துக்கோட்டை:

    ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.

    இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, நந்தனம், சுப்பாநாயுடு கண்டிகை, அச்சம

    நாயுடு கண்டிகை, காரணி, சுருட்டப்பள்ளி ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் ஆரணி, புதுவாயல் வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.

    தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து நிலத்தடி நீர்மட்டம் பெருக சுருட்டபள்ளியில் 1950- ம் ஆண்டில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டப்பட்டது.

    இந்த தடுப்பு அணையில் இருந்து ஊத்துக்கோட்டை அருகே அம்பேத்கார் நகரில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரிக்கு ஆரணி ஆற்று கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    இப்படி திறந்து விடப் படும் தண்ணீர் அண்ணாநகர், ஊத்துக்கோட்டை வழியாக பாய்ந்து அம்பேத்கர் நகர் ஏரிக்கு செல்லும்.

    சுருட்டப்பள்ளி தடுப்பணையில் இருந்து அம்பேத்கர் நகர் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் சக்திவேடு சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.

    இதனை கருத்தில் கொண்டு 1953-ம் ஆண்டில் ஊத்துக் கோட்டை நகர எல்லையில் சத்தியவேடு சாலையில் சிறிய பாலம் அமைக்கப்பட்டது.

    இந்தப் பாலம் வழியாகத்தான் ஊத்துக்கோட்டையில் இருந்து ஆந்திராவில் உள்ள சத்தியவேடு, தடா, சூலூர்பேட்டை, நெல்லூர், ராக்கெட் ஏவுதளம் அமைந் துள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது.

    குறிப்பாக இந்த சாலை வழியாகத்தான் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழிற் சாலைகளில் தயாரிக்கப்படும் ராக்கெட் உதிரி பாகங்கள், கனரக வாகனங்கள் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    மேலும் நெல்லூர் - சென்னை இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் வாகனங்களை இந்த பாலம் வழியாக ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பூந்தமல்லி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளுக்கு திருப்பி விடப்படும்.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டையில் உள்ள இந்த பாலம் கடந்த சில மாதங்களாக பழுதடைந்து உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும் போது பாலத்தில் கடும் அதிர்வு ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த அதிர்வால் பாலத்தில் சில இடத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    இதேபோல் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களிலும் லேசாக விரிசல் ஏற்பட்டு உள்ளன. பாலத்தில் உள்ள விரிசல்களில் செடி கொடிகள் வளர்ந்துள்ளன.

    கடந்த சில் நாட்களுக்கு முன்னர் பாலத்தின் இடது புறத்தில் மெகா பள்ளம் ஏற்பட்டது. இதனால் சுமார் 8 மணி நேரம் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. பொதுமக்கள் ஒன்று திரண்டு மெகா பள்ளத்தை பாறாங்கற்களை கொண்டு சீரமைத்தனர்.

    இதனை கருத்தில் கொண்டு பழுதடைந்த இந்த பாலத்தை அகற்றிவிட்டு புது பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • உணவும் கிடைக்காததால் வீட்டில் இருந்த நாய்க்ள் நாள்முழுவதும் குரைத்து கொண்டே இருந்தன.
    • பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை பிரியா என்பவர் வாடகைக்கு எடுத்து இருந்தார். அதில் பல்வேறு நாய்களை அடைத்து வைத்து பராமரித்து வந்தார். அதுமட்டுமின்றி வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் வீடுகளில் பராமரிக்க முடியாத நாய்களை இங்கு கொடுத்துவிட்டு செல்லும் நிலையில் அதற்கான பணத்தை பெற்று பிரியா அந்த நாய்களை பராமரித்து வந்துள்ளார். இதனால் அந்த வீட்டில எப்போதும் அதிக அளவில் நாய்கள் இருந்து வந்தன.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக நாய்கள் பராமரிக்கப்படாமல் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. மேலும் பிரியாவும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் நாய்களுக்கு முறையாக உணவுகள் ஏதும் வழங்கப்படாமல் அவை குரைக்கத்தொடங்கின. மேலும் அதன் மலம்,சிறுநீர் சுத்தப்படுத்தப்படாததால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. நாய்களுக்கு வழங்கப்பட்ட மீதி இருந்த இறைச்சிகள் அழுகிகிடந்தன. மேலும் உணவும் கிடைக்காததால் வீட்டில் இருந்த நாய்க்ள் நாள்முழுவதும் குரைத்து கொண்டே இருந்தன. பெரும்பாலான நாய்கள் நோய்வாய்ப்பட்டு கிடந்தன. இதனை கவனித்த பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலர் தங்களது மாடியில் இருந்து நாய்களுக்கு உணவுகளை வீசினர்.

    இதற்கிடையே கடும் துர்நாற்றம் மற்றும் நாய்கள் தொடர்ந்து குரைத்ததால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தனியார் தொண்டு நிறவனத்தினரிடம் தெரிவித்தனர்.


    இதைத்தொடர்ந்து விலங்குகள் நல வாரிய அமைப்பில் உள்ள ஓய்வு பெற்ற மருத்துவர் மதனகோபால் தலைமையில் தனியார் விலங்குயகள் நல ஆர்வலர்கள் வந்து பார்த்தபோது வீட்டுக்குள் பரிதாபமான நிலையில் நாய்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    3 ஆயிரம் சதுர அடி கொண்ட வீட்டின் அறைகள், மொட்டை மாடி மற்றும் வீட்டின் பாதை அனைத்தும் நாய்களின் மலம், சிறுநீர் மற்றும் அழுகிய உணவுகளால் துர்நாற்றம் வீசியது. பெரும்பாலான நாய்களுக்கு தோல் அலர்ஜி நோய், ஒன்றோடு ஒன்று சண்டை போட்டதில் அதன் உடல்களில் காயம் மற்றும் உரிய பராமரிப்பு இல்லாமல் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்கிருந்த 18 நாய்களை மீட்டனர். இதுபற்றி பராமரிப்புக்காக விட்டுச்சென்ற அதன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தங்களது நாய்களை மீட்டுச்சென்றனர். மேலும் உரிமையாளர்கள் வராத நாய்களை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், தனியார் விலங்குகள் நல பராமரிப்பு மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. வீட்டை வாடகைக்கு எடுத்து நாய்களை பராமரித்து வந்த பிரியா எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தலைமறைவாக உள்ள அவரிடம் மனிதாபிமானமற்று நாய்களை பராமரிக்காமல் வீட்டை பூட்டி விட்டு சென்றது ஏன் என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் மதன் குமார் என்பவர் கூறும்போது, இங்கு 30 நாய்கள் வரை இருந்தன. ஆனால் அதனை உரிய முறையில் பராமரிக்கவில்லை. நாய்களின் குரைப்பு சத்தம் மற்றும் துர்நாற்றம் தாங்கமுடியவில்லை. இதனால் அருகில் வசிக்கும் குழந்தைகள் அடிக்கடி நோய்தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே இதுபற்றி போலீசில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்றார்.

    • சில பெண்கள் சாலையில் படுத்து உருண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில் தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவை கூவம் ஆற்றுக்கரையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது.

    பருவமழையின் போது கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கரையோர குடியிருப்புகள் பாதிக்கப்படுவதால் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் எடுத்து வருகிறார்கள்.

    இதற்காக அந்தப் பகுதியில் உள்ள வீடுகளை கணக்கெடுத்து அளவீடு செய்யும் பணியில் வருவாய்துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டனர். இதற்கு அங்கு வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கணக்கெடுத்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வீடுகளை அகற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து திருவேற்காடு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சில பெண்கள் சாலையில் படுத்து உருண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். பின்னர் அவர்களை அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதனைத்தொடர்ந்து அகற்றப்பட உள்ள வீடுகளில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    • மீட்கப்பட்ட நகை, பணம் மற்றும் பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்துகொண்டு போலீசாரை பாராட்டினார்.

    ஆவடி:

    ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி. அம்பத்தூர், கொரட்டூர், நசரத்பேட்டை, வெ ள்ளவேடு, செவ்வாபேட்டை, செங்குன்றம்,உட்பட 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது.

    இதில் கடந்த 2023 - 2024 ல் நடந்த திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசார் திறமையாக செயல்பட்டு சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 185 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி, 398 செல்போன்கள், ரொக்க பணம் 4 லட்சத்து 67 ஆயிரத்து 500 யை போலீசார் மீட்டு உள்ளனர்.

    மீட்கப்ட்ட நகை, பணம் மற்றும் பொருட்களை உரிய வர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மீட்கப்பட்ட நகைகளை பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பதை பார்க்க தங்க நகை கடை போல் காட்சியளித்தது.

    ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்துகொண்டு மீட்கப்பட்ட நகை,பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரையும் அவர் பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் ( ஆவடி ) ஐமான் ஜமால், (செங்கு ன்றம்) பாலகிரு ஷ்ணன், போ க்குவரத்து துணை கமிஷனர் ஜெய லட்சுமி, உதவி கமிஷனர்கள் ஆவடி அன்பழகன், பட்டாபிராம் சுரேஸ்குமார், அம்பத்தூர் கிரி ஆகியோர் பங்கேற்றனர்.

    ×