என் மலர்
திருவள்ளூர்
- எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன.
- கோப்புகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டையில் கடந்த 1989 -ம் ஆண்டு ஜூன் 24-ந் தேதி தாலுகா அலுவலகம் தொடங்கப் பட்டது. அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தாலுகா அலுவலகத்தை தொடங்கி வைத்தார்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு சான்று, முதியோர், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற இந்த அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து பயன் அடைந்து வருகிறார்கள். சுமார் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
2 அடுக்கு மாடியில் செயல்படும் இந்த தாலுகா அலுவலகத்தின் கட்டிட சுவர்களில் பல இடங்களில் விரிசல்கள் காணப்படுகின்றன. மாடிகளின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் மழை பெய்தால் ஒழுகி தண்ணீர் அலுவலகத்தின் உள்ளே வருகிறது. இதனால் கோப்புகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கம்ப்யூட்டர் அறையில் உள்ள மின் விசிறிகள் உடைந்து காணப்படுகின்றன. கம்ப்யூட்டர் மற்றும் இதர எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சின்னாபின்னமாக அகற்றப்படாமல் அலங்கோலமாக கிடக்கின்றன.
மேலும் இங்கு செயல்படும் இ-சேவை மையத்தில் அடிக்கடி சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி அனுப்புவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

இதனால் அருகில் உள்ள தனியார் இ -ேசவை மையங்களில் பணம் கொடுத்து மனுக்களை பதிவு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோல் ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் அறை மேல்தளத்தில் உள்ளதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மேல்தளத்திற்கு நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே ஆதார் பதிவு மையத்தை கீழ்தளத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தாலுகா அலுவலக வளாகத்தில் எங்கு பார்த்தாலும் முள்செடிகள், புதர்கள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது.
அலுவலகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலம் முறையாக பாராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. அங்கு சென்றால் அரசு அலுவலகத்துக்கு சென்றது போன்ற உணர்வு இல்லை. இதனை பராமரிக்க வேண்டும்.
மேலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். போதுமான கிராம நிர்வாகம், மற்றும் வருவாய் அலுவலர்கள் இல்லாததால் கோப்புகள் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மழை பெய்யும் போது தண்ணீர் செல்ல வழியில்லாததால் வளாகம் முழுவதும் தேங்கி நிற்கிறது. தாலுகா அலுவலகத்தை சுற்றிலும் முட்புதர்கள் அகற்றப்படாமல் கிடக்கின்றன.
கடந்த ஆண்டில் மட்டும் 18 தாசில்தார்கள் இங்கு பணியாற்றிவிட்டு இடம்மாறுதல் பெற்று சென்று உள்ளனர். எனவே ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.
திருவள்ளூர்:
திருத்தணியில் அமைந்துள்ள திருமுருகப்பெருமானின் ஐந்தாம்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அடுத்த மாதம் 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு ஜூலை 29-ந்தேதி செயல்படவேணடும்.
இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.
- 5 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்துதீர்ப்பளித்தார்.
- போலீசார் குற்றவாளிகள் 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த ராகவரெட்டிமேடு கிராமத்தைச்சேர்ந்தவர் திருச்செல்வம். இவர் கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையின் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 6-ந்தேதி அவர் மதுக்கடையில் விற்பனையான பணம் ரூ. 12 லட்சத்தை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கும்மிடிப்பூண்டி பஜார் வழியே சென்ற போது காரில் வந்த மர்ம கும்பல் திருச்செல்வத்தை கத்தியால் தாக்கி, ரூ. 12 லட்சத்தை பறித்து சென்றனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சோழவரத்தை சேர்ந்த அருண், மீஞ்சூரை சேர்ந்த ஜெயசீலன் என்கிற கார்த்திக், வன்னியம்பாக்கத்தை சேர்ந்த அருண், மதன்குமார், புழலைச்சேர்ந்த பக்ருதீன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பொன்னேரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிரேமாவதி தீர்ப்பளித்தார். அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் அருண், கார்த்திக் உள்பட 5 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்துதீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் பல்லவன் வாதாடினார்.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையிலான கும்மிடிப்பூண்டி போலீசார் குற்றவாளிகள் 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
- கடந்த ஆண்டு இதே நாளில் 7.132 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பூண்டி ஏரியில் ஷட்டர் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு தமிழகத்துக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஆக மொத்தம் 12 டி.எம் சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விடவேண்டும்.
இன்றைய காலை நிலவரம் படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆறு ஏரிகளிலும் 6.412 டி.எம்.சி. தண்ணீர்(மொத்தம் 13.2 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 7.132 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இருப்பில் உள்ள தண்ணீரைக் கொண்டு வரும் நவம்பர் மாதம் வரை சென்னையில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்க முடியும். எனினும் பூண்டி ஏரி முழுவதுமாக வறண்டு வருவதால் இனி கிருஷ்ணா நதி நீரை நம்பித்தான் ஏரி உள்ளது. கண்டலேறு அணையில் தற்போது 3 1/2 டி. எம். சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் ஆந்திராவில் பலத்த மழை பெய்தால் மட்டுமே கண்டலேறு அணைக்கு போதுமான தண்ணீர் வந்த பின்னர் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட முடியும். இதனால் பூண்டி ஏரி கிருஷ்ணா தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் மொத்த கொள்ளவான 3231 மி.கனஅடியில் வெறும் 74 மி.கனஅடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் எரிக்கு தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியில் ஷட்டர் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்து விட்டதால் ஏராளமான மீன்கள் இறந்து மிதக்கின்றன.
- ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
- போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யூ காஞ்சிபுரம் மண்டல துணைத் தலைவர் மாயக்கண்ணன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் முன்னாள் நகர மன்ற தலைவர் சுந்தர்ராஜன், சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன், போக்குவரத்து படி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான வேண்டும்.
வாரிசு வேலை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில் கோயம்பேடு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- சாலையில் கால்நடைகளை சுற்றவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
- இருசக்கர வாகன ஓட்டிகள் மாட்டின் மீது மோதி படுகாயம் அடையும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
பொன்னேரி:
சாலையில் சுற்றும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக சாலையில் கால்நடைகளை சுற்றவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொன்னேரி, மீஞ்சூர், நாலூர், பட்டமந்திரி, காட்டூர், உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் மாடுகள் ஹாயாக கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மாடுகள் சாலையின் ஓரத்தில் படுத்துக் கொள்வதால் கனரக வாகனங்களில் மாடுகள் அடிபட்டு இறக்கும் சம்பவமும், இருசக்கர வாகன ஓட்டிகள் மாட்டின் மீது மோதி படுகாயம் அடையும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
எனவே பொன்னேரி, மீஞ்சூர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கவும், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- 1,519 டாஸ்மாக் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
கள்ளக்குறிச்சி, கருணா புரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் கள்ளச்சாராயத்திற்கு பயன்படுத்தப்படும் மெத்தனால் குறித்தும் சோதனை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடந்து வருகிறது.

மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 19-ந் தேதி முதல் இன்று அதிகாலை வரை நடத்திய சோதனையில் மது கடத்தல் மற்றும் மது விற்பனை செய்த 105 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் 1,519 டாஸ்மாக் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து தமிழக எல்லையில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்த 4 பெண் கள் உட்பட 10 பேரை ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து 53 லிட்டர் கள்ளச்சாராயம் பறி முதல் செய்யப்பட்டு உள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்பட்டு வரும் 2 தொழிற்சாலை திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழில் பேட்டையில் செயல்பட்டு வரும் 2 தொழிற்சாலை என மொத்தம் 4 தொழிற்சாலைகளில் கும்மிடிப் பூண்டி, திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் கிரியாசக்தி, அழகேசன் தலைமையில் போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மெத்தனால் இருப்பு சரியாக உள்ளதா? என்றும் அவை பாது காப்பாக வைக்கப்பட்டுள்ள னவா? அவற்றின் காலக் கெடு, பாதுகாப்பு தன்மை ஆகியன குறித்தும் போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் மூடிய ஒரு தொழிற்சாலையில் மெத்தனால் உபயோகிக்கக்கூடிய தொட்டியை போலீசார் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மெத்தனால் பயன்படுத்தி மூடி உள்ள தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
- பயணிகளின் வசதிக்காக பூந்தமல்லி, திருவேற்காடு பகுதியில் பஸ்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
- மாநகர போக்கு வரத்துக்கழகம் முறையாக பராமரிக்கவில்லை. .
பூந்தமல்லி:
சென்னையை ஒட்டி அமைந்துள்ளது பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள். இங்கு பிரசித்திப் பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் தேவார பாடல் பெற்ற தலமான வேதபுரீஸ்வரர் கோவில்கள் உள்ளன. இதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் சென்னை நகருக்கும், புறநகர் பகுதிகளுக்கும் சென்று வருகிறார்கள். இதனால் பூந்தமல்லி, திருவேற்காடு பகுதி எப்போதும் பரபரப்பாக இருக்கும். பயணிகளின் வசதிக்காக பூந்தமல்லி, திருவேற்காடு பகுதியில் பஸ்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரசு பஸ்கள், மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்த 2 பஸ்நிலையங்களும் தற்போது கட்டணம் இல்லாத இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் பஸ்நிலையத்திற்குள் பஸ்கள் சென்று வருவதிலும் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பாரிமுனை, தாம்பரம், கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பதிக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் பூந்தமல்லி பஸ்நிலையம் எப்போதும் பயணிகள் வருகையால் பரபரப்பாக இருக்கும். பஸ்நிலையத்தில் கட்டணம் கொடுத்து வாகனங்கள் நிறுத்த நகராட்சி சார்பில் தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலானோர் தங்களது மோட்டார் சைக்கிள்கள், கார்களை பஸ்நிலையத்திற்கு உள்ளேயே கட்டணமின்றி நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் பஸ்நிலையம் முழுவதுமே வாகனம் நிறுத்தும் இடம் போல் காட்சி அளிக்கிறது. பயணிகள் பஸ்நிலையத்திற்கு சென்று வரவும், பஸ்கள் இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. மேலும் சில ஷேர் ஆட்டோக்கள் பஸ்நிலையத்தின் உள்ளேயே வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதனை கட்டுப்படுத்தி பஸ்நிலையத்திற்குள் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதே நிலைதான் திருவேற்காடு பஸ்நிலையத்திலும் நீடிக்கிறது. திருவேற்காடு பஸ் நிலையத்தில் இருந்து, பிராட்வே, கோயம்பேடு, கிளாம்பாக்கம், தி.நகர், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆவடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் 72 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பஸ்நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த பஸ்நிலையம் போதிய பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் காணப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்துமிடமாகவும், மாடுகள் சுற்றித் திரியும் இடமாகவும் விளங்குகிறது என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருவேற்காடு பேரூராட்சியாக இருந்த போது, இந்த பஸ் நிலையம் சென்னை மாநகர போக்கு வரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் திருவேற்காடு நிலையத்தை சென்னை மாநகர போக்கு வரத்துக்கழகம் பராமரித்து வருகிறது. ஆனால் மாநகர போக்கு வரத்துக்கழகம் முறையாக பராமரிக்கவில்லை. .
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு நாள்தோறும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கிறார்கள். திருவேற்காடு பஸ்நிலையம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேற்கூரை பகுதிகளில் சிறுமழை பெய்தால் கூட மழைநீர் ஒழுகுகிறது. இங்கு போதிய மின் விளக்குகள் இல்லை.
பஸ்நிலையத்தை இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் நிறுத்துமிடமாகவும், மாடுகள் சுற்றித் திரியும் இடமாகவும் மாற்றி விட்டனர். குடிநீர் வசதியும் போதுமானதாக இல்லை. இதேபோல் தான் பூந்தமல்லி பஸ்நிலையமும் காட்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் வெறும் 82 மி.கனஅடியாக சரிந்து விட்டது.
- பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருகிறது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன.
இந்த 5 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 5 ஆயிரத்து 74 மி.கனஅடியாக (5 டி.எம்.சி) குறைந்து உள்ளது.
பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் வெறும் 82 மி.கனஅடியாக சரிந்து விட்டது. இதனால் பூண்டி ஏரி வேகமாக வறண்டு வருகிறது. ஏரியின் ஷட்டர் பகுதியில் மட்டும் குட்டை போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்து உள்ளதால் அங்குள்ள மீன்கள் இறந்து வருகின்றன. ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடக்கிறது.
பூண்டி ஏரியில் நீர் மட்டம் சரிந்ததை தொடர்ந்து அங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு உள்ளது. பூண்டி எரியில் நீர்இருப்பு அதிகரித்தால் தான் இனி வரும் நாட்களில் புழலுக்கு குடிநீர் அனுப்ப முடியும். ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலும் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கிருஷ்ணா தண்ணீர் இப்போதைக்கு திறக்கப் படவாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2908மி.கன அடி தண்ணீர் உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி வருகிறது. இதனால் புழல் ஏரிக்கு தண்ணீர் வர தொடங்கி உள்ளது.
இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு 152 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. குடிநீர் தேவைக்காக 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 1649 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது. 60 கனஅடி தண்ணீர் வருகிறது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் வெறும் 124 மி.கனஅடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 500 மி.கனஅடியில் 311 மி.கனஅடி நீர் இருக்கிறது. குடிநீர் ஏரிகளில் தற்போதைய நிலவரப்படி 5 டி.எம்.சி தண்ணீர் இரு ப்பு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே நாளில் 7 டி.எம்.சி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- காரில் சோதனை செய்த போது கணக்கில் வராத ரூ.11 லட்சம் ரொக்கப்பணம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
- லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் 10 அதிகாரிகள் இதில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவள்ளூர்:
பள்ளிப்பட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய சார்பதிவாளர் ஸ்ரீதர் கடந்த சில நாட்களாக விடுமுறையில் உள்ளார். இதைத்தொடர்ந்து பேரம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய மோகன்ராஜ் என்பவர் பள்ளிப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பொறுப்பு சார்பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மோகன்ராஜ் தனது காரில் கணக்கில் வராத பணத்தை எடுத்து செல்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராம மூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா உள்ளிட்டோர் விரைந்து சென்றனர். இதற்குள் மோகன்ராஜ், தனது காருக்கு பெட்ரோல் நிரப்ப சென்றபோது குமாரராஜு பேட்டை கிராமத்தில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது காரில் சோதனை செய்த போது கணக்கில் வராத ரூ.11 லட்சம் ரொக்கப்பணம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து மோகன்ராஜை பள்ளிப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை மற்றும் விசாரணை நேற்று இரவு 11 மணிவரை நடைபெற்றது.
இதற்கிடையே இன்று காலை 7 மணி முதல் திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள சார்பதிவாளர் மோகன்ராஜின் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் 10 அதிகாரிகள் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். வீட்டில் உள்ள ஆவணங்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பல்வேறு இடங்களில் விதிமுறைகள் மீறி பிரமாண்ட பேனர்களை வைத்து உள்ளனர்.
- விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலை ஓரம் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விதிமுறைகள் மீறி விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. விளம்பர பேனர் வைக்க வேண்டும் என்றால் அந்தந்த நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி கோரி குறிப்பிட்ட தொகை செலுத்தி போலீசாரிடம் அனுமதி பெற்று வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
எனினும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விதிமுறைகள் மீறி பிரமாண்ட பேனர்களை வைத்து உள்ளனர்.
இவ்வாறு வைக்கப்படும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலை ஓரம் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர் ஒன்று காற்றில் சரிந்தது. அந்த பேனர் எப்போது வேண்டுமானாலும் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது விழும் அபாய நிலையில் காட்சி அளித்தது. இதனால் அவ்வழியே செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது.
எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த விளம்பர பேனர்களை அகற்றி, விதிமுறைகள் மீறி விளம்பர பேனர்கள் வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பக்தர்களின் கூட்டம் நாளுக்கு, நாள் கட்டுக்கடங்காத வகையில் கூடிக்கொண்டே உள்ளது.
- நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன் பின்னர், இக்கோவிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு, நாள் கட்டுக்கடங்காத வகையில் கூடிக்கொண்டே உள்ளது. இக்கோவிலில் மரகதகலால் ஆன மயில், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் இருப்பதும், திருமண கோலத்தில் வள்ளி மணவாளன் காட்சியளிப்பதும் கூடுதல் சிறப்பு ஆகும். இக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று ஆனி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மற்றும் விசாக நட்சத்திரம் கூடிய சுப தினம் என்பதால் விடியற்காலை முதலே இக்கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. இதனால் கோவிலின் பின்பகுதியில் உள்ள அன்னதான மண்டபம் வரையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விடியற்காலை மூலவருக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் ஆனந்தன் குருக்கள் தலைமையில் அபிஷேகம் செய்தனர்.
இதன்பின்னர் மூலவருக்கு வெள்ளி அங்கி கவச அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலின் கோபுர வாசல் அருகே 108 ஆம்புலன்ஸ் சேவையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதுரோடு கூட்டுச் சாலை, அகரம் கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் இருந்து இக்கோவிலுக்கு வந்து செல்ல மினி பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்தப் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மினி பேருந்துகளை இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவில் அருகே உள்ள நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






