என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • இறங்கும் இடத்தில் தடுப்புவேலிகள் அமைத்து அடைக்கப்பட்டுள்ளது.
    • கடல் உள்வாங்குவதும், கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளியே சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அமாவாசையாக இருந்ததினால் நேற்று காலையில் இருந்து கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

    கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுமார் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கோவில் முன்புள்ள கடலில் இறங்க அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் பகுதியில் இந்த கடல் அரிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இன்று அதிக அளவு கடல் அலைகளின் சீற்றத்தின் காரணமாக 2-வது நாளாக அதிக அளவில் இந்த அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே படிக்கட்டுகள் வழியாக இறங்கும் இடத்தில் தகரத்தை வைத்தும், தடுப்புவேலிகள் அமைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.

    கடந்த நவம்பர் மாதம் இதே போல் பக்தர்கள் கடற்கரையில் இறங்கும் இடத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மணலை கொட்டி கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை சீர் செய்தனர். ஆனால் மீண்டும் தற்போது அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஒருபுறம் கடற்கரையில் அதிக அலைகள் காரணமாக கடல் அரிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அதே கடற்கரையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் கடல் உள்வாங்கிய நிலையில் காணப்படுகிறது.

    சுமார் 50 அடி கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் பாறைகளும், மணல் திட்டுகளும் அதிகமாக தென்படுகிறது. கோவில் கடற்கரை பணியாளர்கள், காவல்துறையினர் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.



    • நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
    • சிலர் தைப்பூசம் வரை பாத யாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

    இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் கோவிலுக்கு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    மேலும் தற்போது மார்கழி மாதம் என்பதால் நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பாத யாத்திரையாக வருவது வழக்கம்.

    இவர்களில் பெரும்பாலானோர்கள் ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் பொங்கலுக்கு முன்பே முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும் என்பதற்காக காவடி எடுத்தும், நீண்ட அலகு குத்தியும் பாத யாத்திரையாக வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம். சிலர் தைப்பூசம் வரை பாத யாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. 

    • கோவில் சார்பில் நடைபெற்று வருகின்ற பணிகள் 43 சதவீதத்தை தாண்டியுள்ளது.
    • பணிகள் அனைத்தும் விரைவாக நடைபெற்று வருகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார். அவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாக பணிகளை அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. நடைபெற்று வரும் பெருந்திட்டவளாக பணிகளில் 20 பணிகளை ஹெச்.சி.எல். நிறுவனம் செய்து வருகின்றது. அதில் மூன்று பணிகள் நிறைவுற்று திறப்பு விழா நடைபெற்று உள்ளது.

    அதேபோல் ராஜகோபுரம் பணி முடியும் தருவாயில் உள்ளது. வருகிற 20-ந் தேதி 7 கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெற உள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள வரைவு திட்டத்தின் படி பக்தர்கள் தங்க 122 அறைகள் கட்டப்பட உள்ளன. இதில் 56 பக்தர்கள் தங்கும் அறைகளை ஆய்வு செய்தோம். இந்தப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிவுற்று தமிழக முதலமைச்சரால் திறக்கப்பட உள்ளது.

    மொத்தம் 43 பணிகள் என்றாலும் அவை ஒவ்வொன்றாக முடிந்ததும், பக்தர்களின் தேவையை கருத்தில் கொண்டு திறப்பு விழாக்கள் தொடர்ந்து நடைபெறும். வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது ஹெச்.சி.எல். நிறுவனம் எடுத்துக்கொண்ட பணிகள் 60 சதவீதத்தை தாண்டியுள்ளது. கோவில் சார்பில் நடைபெற்று வருகின்ற பணிகள் 43 சதவீதத்தை தாண்டியுள்ளது. பணிகள் அனைத்தும் விரைவாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் 2025-ம் ஆண்டுக்குள் முடிந்துவிடும்.

    இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    • நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
    • பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்க பாடுபட்டு வரலாறு படைப்போம்.

    தூத்துக்குடி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. நிர்வாகிளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

    இதில் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிள், பகுதி, வட்ட செயலாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர்களிடம், வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

    கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குகள் பெற்ற பகுதிகளில் நிர்வாகிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிற சட்டமன்ற தேர்தல்களில் அதிக வாக்குகள் பெறுவதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் செய்ய வேண்டும். சரியாக பணி செய்யாத நிர்வாகிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பின்னர் நிர்வாகிகள் செய்த பணிகள் குறித்த மினிட் புத்தகத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்த நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

    இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில், களப்பணியாற்றும் கழக வீரர்கள் களம் 2026-ல் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட உறுதி யேற்றோம்!

    தங்களுக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் கழகத்துக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்க பாடுபட்டு வரலாறு படைப்போம் எனக் கழக நிர்வாகிகள் உறுதியளித்த னர்.

    இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

    • 100 பெண்களில் இருவர் மட்டுமே கல்வி பயின்று இருந்த நிலை இன்று மாறியுள்ளது.
    • வந்த பாதையை மறக்காமல் இருந்தால் தான் வழித்தவறி போகாமலிருக்க முடியும்.

    தூத்துக்குடி மாவட்டம் காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவிகளுக்கான ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் புதுமைப்பெண் திட்டத்தில் புதிதாக இணைந்து புதிதாக சாதனை படைக்க உள்ள மகள்களே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசத்தொடங்கினார். மேலும் அவர் கூறியதாவது:-

    * ஆயிரக்கணக்கான பெண்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பதை காணும்போது பெருமையாக உள்ளது.

    * நாட்டிலேயே தமிழக பெண்கள் தான் அனைத்து நிலைகளிலும் முதலிடத்தில் உள்ளனர்.

    * நாட்டில் உயர்கல்வி கற்கும் பெண்கள் எண்ணிக்கையில் தமிழகம் தான் டாப். தமிழக பெண்கள் இந்தியாவிலேயே மதிப்பெண் உள்பட அனைத்திலும் டாப்-ஆக உள்ளீர்கள்.

    * உயர்கல்வி பயில்வது, வேலைக்கு செல்வது அனைத்திலும் தமிழக பெண்கள் டாப்-ல் இருப்பதே பெரியாரின் கனவு.

    * கல்வியை பொறுத்தவரை பெண்கள் தான் முன்னிலையில் உள்ளனர்.

    * 100 ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ரீதியாக, பாலின ரீதியாக கல்விக்கு தடை இருந்தது.

    * கல்வி கனவை அனைவருக்கும் திறந்து விட்ட ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி.

    * இந்தியாவிலேயே அனைவருக்கும் கல்வி என சட்டம் இயற்றியது நீதிக்கட்சி.

    * 100 பெண்களில் இருவர் மட்டுமே கல்வி பயின்று இருந்த நிலை இன்று மாறியுள்ளது.

    * வந்த பாதையை மறக்காமல் இருந்தால் தான் வழித்தவறி போகாமலிருக்க முடியும்.

    * புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைப்பதில் Dravidian Stock ஆக நான் பெருமைப்படுகிறேன்.

    * பெருந்தலைவர் காமராஜர் பெயர்கொண்ட கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதை பெருமைக்குரியதாக கருதுகிறேன்.

    * காமராஜர் ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் ஏராளமான பள்ளிகள் திறக்கப்பட்டது.

    * நாட்டிற்கே தமிழக அரசின் திட்டங்கள் தான் வழிகாட்டியாக உள்ளன என்றார். 

    • காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்
    • 4,680 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்றது முதலே மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.

    பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண வசதி தரும் விடியல் பயணம் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

    இதில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் கடந்த 5-9-2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவிகள் பயன் அடைந்து உள்ளனர்.

    புதுமைப்பெண் திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளையும் சேர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

    அதை ஏற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

    இந்த புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் தொடக்க விழா இன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் பயன் பெறுவார்கள்.

    விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மினி டைடல் பார்க் 63 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் அமைந்துள்ளது.
    • மினி டைடல் பூங்கா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.

    மேலும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெல்வதை இலக்காக கொண்டு செயலாற்றுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார்.

    அந்த வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் தொடக்கம், மினி டைடல் பூங்கா திறப்பு, தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடி வந்த முதலமைச்சர் விமான நிலையத்தில் இருந்து சத்யா ரிசார்ட் சென்று அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் மாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார்.

    பிறகு, டைடல் பூங்காவில் புதிய நிறுவனங்களுக்கு இட ஒப்பந்த ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்த மினி டைடல் பூங்கா தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் ரவுண்டானாவில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இப்பூங்காவானது வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.

    சுமார் ரூ. 32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது.

    தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் குறிப்பாக தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா மேலும் ஒரு மைல்கல் திட்டமாக வடிவெடுத்துள்ளது.

    • பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சியை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்மீக சுற்றுலா தலமாகவும் சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.

    இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும், ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

     

    மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சியை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30-க்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை, 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள் கால சந்தி பூஜை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 மணியில் இருந்து 9 மணிக்குள் உச்சி கால தீபாராதனை மற்றும் ஸ்ரீபலி நடைபெற்றது.

    மாலை 3 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு இராக் கால அபிஷேகம், இரவு 7 மணிக்கு இராக்கால தீபாராதனை, 7.30 மணிக்கு ஏகாந்தம், 8 மணியில் இருந்து 8.30க்குள் பள்ளியறை தீபாராதனை நடை பெற்று நடை திருக்காப்பிடப்படுகிறது.

    • மினி டைடல் பார்க்கில் வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
    • அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வருகிறார்.

    மதியம் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார்.

    மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு சத்யாநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பார்க்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    ரூ.32½ கோடி செலவில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட மினி டைடல் பார்க்கில் வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

    இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு மாணிக்கம் மஹாலில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் இரவில் தூத்துக்குடி சத்யா ரிசார்ட்சில் முதலமைச்சர் தங்கி ஓய்வெடுக்கிறார்.

    நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தமிழக அரசின் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    ஏற்கனவே அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75 ஆயிரத்து 28 மாணவிகள் பயன்பெறுவர்.

    இந்த திட்டம் வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு, பெற்றோரின் பொருளாதார சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. மாணவிகளிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பதாக அமைந்துள்ளது.

    மதியம் நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோடு வழியாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் பிரதான சாலைகளின் இருபுறமும் தி.மு.க. கொடிகள் பறக்க விடப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் காமராஜ் கல்லூரியில் பிரமாண்ட பந்தல் மற்றும் கல்லூரி முன்பாக அலங்கார வளைவு, தோரணம் அமைக்கப்பட்டு உள்ளது.

    • மாணிக்கம் மகாலில் நடைபெறும் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.
    • புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி வருகிறார்.

    இதுதொடர்பாக தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகிறார். அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள நியோ டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார்.

    மாலை 5 மணிக்கு மாணிக்கம் மகாலில் நடைபெறும் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    நிகழ்ச்சி முடித்து காமராஜர் சாலை, போல்டன்புரம், தேவர்புரம் ரோடு, தென்பாகம் போலீஸ் நிலையம், பாளையங்கோட்டை ரோடு, 3-வது மைல் வழியாக சத்யா ரிசாட் செல்கிறார்.

    மறுநாள் (திங்கட்கிழமை) காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, காமராஜ் கல்லூரியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சி முடிந்து சிவந்தாகுளம் ரோடு, பக்கிள்புரம், புதுகிராமம், வி.இ.ரோடு, அண்ணா சாலை, பாளையங்கோட்டை ரோடு வழியாக கன்னியா குமரி புறப்பட்டு செல்கிறார்.

    எனவே அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தைரியமாக புகார் அளித்த பெண்ணுக்கு பாராட்டுகள்.
    • பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில், சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக்கழகத்தில் மனைவிக்கு நடந்த சம்பவம் குறித்து புகார் வந்தவுடன் உடனடியாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவரிடம் இப்போது தீவிரமான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.

    பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தைரியமாக புகார் அளித்த பெண்ணுக்கு பாராட்டுகள்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புகார் கொடுக்க முன்வருபவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.

    பிள்ளைகளுக்கு எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக 181 என்ற என்னை தொடர்பு கொண்டு பிரச்சினைகள் பற்றி புகார் கூறுகிறார்கள்.

    பெண்களுடைய தோழிகளும் அந்த எண்களை தொடர்பு கொண்டு குழந்தை திருமணம் நடைபெறும் புகார்கள் கூறுகிறார்கள். அனைத்து உதவி எண்களும் நல்ல முறையில் செயல்பட்டுகொண்டு இருக்கிறது.

    அரசு பெண்களுக்கு நன்மைபயக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாங்களும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

    பெண்கள் தைரியமாக புகார் தந்தால்தான் குற்றச் செயல்கள் உருவாகாத நிலையை ஏற்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுனாமி தாக்கி 20-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

    தூத்துக்குடி:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமியால் பெரும் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. சுனாமி தாக்கிய 20-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அப்பகுதியை சேர்ந்த அண்ணா சங்குகுளி மீனவர் சங்கம் சார்பில் அதன் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

    அப்போது, இனிமேல் இப்படி ஒரு பேரழிவை இயற்கை தந்து விடக்கூடாது என்று வேண்டி கடல் தாய்க்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    சுனாமியால் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதில், அண்ணா சங்கு குளி சங்க துணைத்தலைவர் மாரி லிங்கம், பொருளாளர் விமல்சன் ஆலோசகர் பாத்திமா பாபு, செயலாளர் முருகையா, பரதவர் முன்னேற்ற பேரவை தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாலன் உள்ளிட்ட அப்பகுதி மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×