என் மலர்
திருநெல்வேலி
- சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
- நாங்குநேரி, திசையன்விளை பஜார், கரைசுத்துபுதூர், உவரி உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திசையன்விளை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் கடந்த 2-ந்தேதி மாயமான நிலையில் நேற்று வீட்டருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த கே.பி.கே. ஜெயக்குமார் காண்டிராக்ட் தொழிலும் செய்து வந்தார். அவர் கடந்த 2-ந்தேதி மாயமான நிலையில் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அவரது கட்சி அலுவலகத்தில் எழுதி இருந்த கடிதம் சிக்கியது.
30-ந்தேதியே காங்கிரஸ் கட்சியின் லெட்டர் பேடில் மரண வாக்குமூலம் என்று அவர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் இவர்கள் தான் காரணம் என சிலரது பெயரை குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் நேற்று எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது கை, கால்கள் பலகையில் மின் ஒயரால் கட்டப்பட்டிருந்ததால், அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர் ஆனந்தி, தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே கே.பி.கே. ஜெயக்குமார் தனது மருமகன் மற்றும் மொத்த குடும்பத்தினருக்கு என்று எழுதிய 2 கடிதங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், அவர் தொழில் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பலருக்கு பணம் கொடுத்த விபரங்கள் மற்றும் தான், யார் யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்த விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதோடு குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில், குடும்பத்தினர் யாரும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களை பழிவாங்க நினைக்க வேண்டாம். சட்டம் தனது கடமையை செய்யும் என கூறி உள்ளார்.
தற்போது வரை போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் கூறுகையில், ஜெயக்குமார் தனசிங் சாவு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏ.டி.எஸ்.பி. கார்த்திகேயன், வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் தலைமையில் 7 தனிப்படைகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.
சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் கை, கால்கள் ஒயரால் கட்டப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கிடமாக யாராவது நடமாடினார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் கொலை செய்யப்பட்டதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அவரது சாவிற்கான காரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை விபரத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை தொடர போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார் உடலுக்கு இன்று காலை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து அவரது உடல் அவரது மகன் கருத்தையா ஜெப்ரினிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் அவரது சொந்த ஊரான திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூருக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
இதனையொட்டி உடல் கொண்டு செல்லப்படும் வழியில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி நாங்குநேரி, திசையன்விளை பஜார், கரைசுத்துபுதூர், உவரி உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வெளிப்படையாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
- காவல்துறை பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மாயமான நிலையில் நேற்று இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கே.பி.கே. ஜெயக்குமாரின் பூத உடலை அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் பெற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கே.பி.கே. ஜெயக்குமார் ஒரு நல்ல மனிதர். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர். அவர் தற்போது உயிரிழந்துள்ளார் என்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வெளிப்படையாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் பல்வேறு சந்தேகங்கள் இருந்து வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் எந்த கட்சியின் பின்புலத்தில் இருந்தாலும், எவ்வளவு பெரிய தொழிலதிபராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இன்று மாலைக்குள் ஒரு நல்ல தகவல் வெளியே வரும் என்று மாவட்ட எஸ்.பி என்னிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது மரண வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் யாருடைய பெயர்கள் இருந்தாலும் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எங்கள் கட்சியை சேர்ந்த வர்களாக இருந்தாலும் கூட காவல்துறை வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி வெளிப்படையாக விசாரணை மேற்கொண்டால் தான் இவர் உயிர் இழப்புக்கு யார் காரணம் என்பது வெளியே வரும்.
மேலும் நாங்கள் கட்சி ரீதியாகவும் இதை விசாரித்து மேலிடத்திற்கு இந்த அறிக்கையை அனுப்புவோம். காவல்துறை விசாரணை என்பது தற்போது நடைபெற்று கொண்டிருப்பதன் காரணமாக மற்ற தகவல்கள் எங்களால் வெளியே தெரிவிக்க முடியாது.
இதில் பணம் படைத்தவராக இருக்கலாம். மிகப்பெரிய அரசியல்வாதியாக கூட இருக்கலாம். அப்படி இருந்தாலும்கூட அவர்கள் மீதும் காவல்துறை பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் உள்ள தாக எங்கள் கட்சிக்காரர்கள் என்னிடம் தெரிவித்துள்ளா ர்கள். அதேபோன்ற புகைப்பட ங்களும் வெளியாகி உள்ளது. ஆகவே இதில் பெருத்த சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த விசாரணை என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். மேலும் உயிரிழந்த ஜெயக்குமாரின் கை கால்கள் இரண்டும் கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து ஏதோ ஒரு சம்பவம் நடை பெற்றுள்ளதாக எங்களுக்கு தெரிகிறது.
ஆகவே தான் நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்கி றோம் வெளிப்படையான விசாரணை மேற்கொண்டால்தான் இவருடைய உயிர் இழப்புக்கு காரணம் என்ன என்பது வெளியே தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கிள்ளியூர் ராஜேஷ் குமார், விஜய் வசந்த் எம்.பி., நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பண்டியன் மற்றும் திரளான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்.
- பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.
2 மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
பிதேர பரிசோதனை முடிந்த பிறகே, இது கொலையா ? தற்கொலையா உ என தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
சம்பவ இடத்தில் டிஐஜி ஆய்வு செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- யாருக்கெல்லாம் தான் பணம் கொடுக்க வேண்டும் என்ற விபரத்தையும் ஜெயக்குமார் எழுதி வைத்திருப்பது தெரியவந்தது.
- காணாமல் போன ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் 30-ந்தேதி போலீசில் புகார் அளித்திருந்தார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கருத்தையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் காண்ட்ராக்ட் தொழிலும் செய்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் கருத்தையா ஜெப்ரின்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெயக்குமார், வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதையடுத்து காணாமல் போன ஜெயக்குமாரை தேடி கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் கருத்தையா உவரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெயக்குமாரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவரது அறையில் கடிதங்கள் எதுவும் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளாரா என்று போலீசார் ஆய்வு செய்தபோது, ஒரு டைரியில் தனக்கு பணம் கொடுக்க வேண்டியவர்கள் குறித்த விபரத்தையும், யாருக்கெல்லாம் தான் பணம் கொடுக்க வேண்டும் என்ற விபரத்தையும் அவர் எழுதி வைத்திருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் கையோடு எடுத்துச்சென்றுள்ளனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஜெயக்குமார் தனசிங், கடந்த 30-ந்தேதி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு மரண வாக்குமூலம் என்ற பெயரில் தனது காங்கிரஸ் கட்சி லெட்டர் பேடில் ஒரு புகார் மனு கைப்பட எழுதி அனுப்பி வைத்துள்ளார். அதில் தனக்கு ஏதாவது நேர்ந்தால் இவர்கள் தான் காரணம் என்று கூறி சிலரது பெயரை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த நபர்கள் தனக்கு லட்சக்கணக்கில் பணம் தரவேண்டும் எனவும், அவர்கள் ஏமாற்றியதன் காரணமாக, வெளியில் கடன் வாங்கி அதனை செலுத்த முடியாமல் திணறி வருவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த கடிதத்தில் அவர் யாருடைய பெயரை எல்லாம் குறிப்பிட்டுள்ளாரோ? அந்த நபர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
காணாமல் போன ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் 30-ந்தேதி போலீசில் புகார் அளித்திருந்தார்.
மேலும் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு கடிதம் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெயக்குமார், வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
- ஜெயக்குமாரை தேடி கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் கருத்தையா உவரி போலீசில் புகார் அளித்தார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கருத்தையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது60). தொழில் அதிபரான இவர் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர்.
இவர் காண்ட்ராக்ட் தொழிலும் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மகன் கருத்தையா ஜெப்ரின் (28).
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற ஜெயக்குமார், வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், தங்களது உறவினர்கள் வீடுகளிலும், அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகளிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து நேற்று மாலையில் காணாமல் போன ஜெயக்குமாரை தேடி கண்டுபிடித்து தருமாறு அவரது மகன் கருத்தையா உவரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெயக்குமாரை தேடி வருகின்றனர். அவர் எங்கு சென்றார்? என்பது குறித்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்தகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் 2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
உடலை மீட்ட போலீசார் இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என மகன் கருத்தையா ஜெப்ரின் புகார் அளித்திருந்த நிலையில் அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயக்குமார் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்காக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- பல வருடங்களாக பல தொழில் அதிபர்களை தங்கள் வலையில் சிக்கவைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது.
- வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது நெல்லை மாவட்டத்திலும் சில தொழிலதிபர்கள் சபலத்தால் இந்த கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.
நெல்லை:
சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 47). இவர் காற்றாலைகளுக்கு மின் உபகரணங்கள் வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு முகநூல் (பேஸ்புக்) மூலமாக பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பானுமதி(40) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, பானுமதி கடந்த 29-ந்தேதி ஆசை வார்த்தை கூறி நித்யானந்தமை நெல்லைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் பானுமதி வீட்டுக்கு சென்ற அவரை அங்கிருந்த மேலும் 4 பேர் கும்பல் சேர்ந்து கடத்தி சென்று நகை, ரூ.10 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை பறித்தது.
இதுகுறித்து நித்யானந்தம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தியிடம் அளித்த புகாரின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையிலான போலீசார் பானுமதி, அவரது கூட்டாளிகளான ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பார்த்தசாரதி(46), வெள்ளத்துரை(42), ரஞ்சித்(42), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுடலை(40) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
அந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் பானுமதி மற்றும் அவரது கூட்டாளிகள் இதேபோல் பல வருடங்களாக பல தொழில் அதிபர்களை தங்கள் வலையில் சிக்கவைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது. இதுதொடர்பான தகவல்கள் வருமாறு:-
பானுமதிக்கு ஆழ்வார்திருநகரியை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி கல்லூரி படிப்பு முடித்த ஒரு மகனும், 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இவரது நடவடிக்கைகள் சரியாக இல்லாததால், அவரது குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பானுமதியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.
இந்நிலையில் பானுமதிக்கு தனது பள்ளி தோழனான ஆழ்வார்திருநகரியை சேர்ந்த வெள்ளத்துரையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக அவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 2 பேரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டுள்ளனர். பானுமதி பட்டப்படிப்பு முடித்தவர் என்பதால் முகநூலை பயன்படுத்தி அதில் தொழில் அதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்களை தொடர்பு கொண்டு பழகி வந்துள்ளார்.
அவர்களிடம் மாதக்கணக்கில் பழகி நம்ப வைத்து, ஆசை வார்த்தை கூறி நெல்லைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு அவர் தொழிலதிபர்களை வரவழைத்து படுக்கை அறைக்கு அழைத்து சென்று கதவுகளை பூட்டிக்கொள்வார். அடுத்த 5 நிமிடங்களில் வெள்ளத்துரை தனது கூட்டாளிகள் 3 பேருடன் அங்கு வந்து கதவை தட்டுவார்.
பின்னர் எனது மனைவியை கற்பழிக்க முயன்றுள்ளாய் என கூறி போலீசில் புகார் அளித்து உன்னை அவமானப்படுத்தி விடுவேன் என்று கூறி அந்த தொழில் அதிபர்களை மிரட்டி அவர்களிடம் இருக்கும் நகை மற்றும் உடைமைகளை பறித்து வந்துள்ளனர்.
தங்களின் பிடியில் சிக்கும் தொழிலதிபர்களை பொன்னாக்குடி பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் தங்களது பெயரில் உள்ள ஒரு தனி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளனர்.
சுமார் 6 ஆண்டுகளுக்கு மேல் இந்த கும்பல் சென்னை, கோவை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலதிபர்களை குறிவைத்து ஆசைவார்த்தை பேசி நெல்லைக்கு வரவழைத்து அவர்களிடம் பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்களது வலையில், 40 வயதில் தொடங்கி 65 வயது வரையிலான தொழிலதிபர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சபலத்தால் சிக்கி பணத்தை இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறாக அந்த கும்பல் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளது.
வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது நெல்லை மாவட்டத்திலும் சில தொழிலதிபர்கள் சபலத்தால் இந்த கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளனர். ஆனால் வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும். அதற்கு பணத்தோடு போகட்டும் என்று அவர்கள் வெளியே தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே பார்த்தசாரதியை தவிர மற்ற 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பார்த்தசாரதிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் நெல்லை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் கூறுகையில், பல வருடங்களாக இந்த கும்பல் தொழிலதிபர்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து பணத்தை பறித்து வந்துள்ளனர்.
இந்த கும்பலிடம் தங்களது பணத்தை இழந்தவர்கள் வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். இன்று அல்லது நாளை அந்த கும்பலை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அதன்பின்னரே இதுவரை எத்தனை தொழிலதிபர்களை ஏமாற்றி எவ்வளவு பணத்தை இவர்கள் பறித்துள்ளனர் என்ற விபரம் தெரியவரும்.
அதேநேரத்தில் பணத்தை இழந்த தொழிலதிபர்கள் எங்களிடம் வந்து புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்கள் பெயர் ரகசியம் காக்கப்பட்டு அவர்களது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்றும் பகலில் சுட்டெரித்தது.
இந்நிலையில் மதியம் 3 மணிக்கு பிறகு மாவட்டம் முழுவதும் திடீரென வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது.
சிறிது நேரத்தில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. அதே நேரத்தில் கொளுத்திய கோடை வெயிலால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வந்த நிலையில் நேற்று பெய்த கோடை மழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடி யில் 29 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தென்காசியில் 16.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணைகளை பொறுத்த வரை கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இந்த மழையால் அணைகளின் நீர்மட்டம் உயரும் அளவிற்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்றாலும், மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்துள்ளது.
85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் கோடை வெயிலால் வேகமாக குறைந்து வருகிறது. அந்த அணையில் தற்போது 27.40 அடி நீர் மட்டுமே இருக்கிறது.
ராமநதி அணையின் நீர் மட்டம் பாதியாக குறைந்துள்ளது. அதாவது 84 அடி கொண்ட அந்த அணையில் 41.50 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மேலும் 72.10 அடி கொண்ட கருப்பாநதியில் 39.37 அடி நீர் இருப்பும், மிகச்சிறிய அணையான குண்டாறு அணையின் நீர் இருப்பு 15.250 அடியாகவும் உள்ளது.
- கடுமையான வெயிலால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.
- அதிகபட்சமாக மாஞ்சோலையில் 32 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே கடுமையான வெப்ப அலை வீசி வருவதோடு வெயில் சுட்டெரிக்கிறது.
இதனால் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பகல் நேரங்களில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம், மணிமுத்தாறு அணைப் பகுதிகளில் நேற்று திடீரென கோடை மழை பெய்தது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 2 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 2.40 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
கடுமையான வெயிலால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 76 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 58 அடியாக குறைந்துவிட்டது. அந்த அணைக்கு வினாடிக்கு 59 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையில் 70 அடி நீர் இருப்பு உள்ளது. 22 அடி கொண்ட நம்பியாறு அணையின் நீர்மட்டம் 13 அடியாகவும், 52 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு நீர்மட்டம் 9 அடியாகவும் உள்ளது.
மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று மதியத்திற்கு மேல் சுமார் 1 மணிநேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் அங்குள்ள தேயிலை தோட்டங்கள், சாலைகளில் தண்ணீர் ஓடியது. பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது.
கடந்த சில நாட்களாகவே அங்கு அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வரும் நிலையில் இந்த திடீர் மழையால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது கோடை விடுமுறையின் காரணமாக நெல்லை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் மணிமுத்தாறு அருவிக்கு படையெடுத்து வரும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் மாஞ்சோலைக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்கின்றனர்.
நேற்று மாலையில் அதிகபட்சமாக மாஞ்சோலையில் 32 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. காக்காச்சியில் 23 மில்லிமீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 21 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 90.40 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- 50-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.
- பள்ளி நிர்வாகத்தின் இந்த திடீர் அறிவிப்பால் 9-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 10-ம் வகுப்பு வேறு பள்ளியில் சேர்வது மிகவும் கடினம்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா வெங்கட்ராயபுரம் பகுதியில் கடந்த 1990-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. இந்த பள்ளியில் வெங்கட்ராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1990-களில் பஸ் போக்குவரத்து உள்ளிட்டவைகள் இல்லாத நேரத்திலும், அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்து விட்ட நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை எனக் கூறி அடுத்த ஆண்டு முதல் பள்ளி செயல்படாது என பள்ளி நிர்வாகத்தின் மூலம் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஊர் மக்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளியை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து செயல்படுவதற்கு தங்களால் இயன்ற நிதியை தருகிறோம் என தெரிவித்த நிலையிலும் பள்ளி செயல்படாது என அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் மற்றும் பழைய மாணவர்கள், தற்போது படிக்கும் மாணவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் அவர்கள், நடுநிலை பள்ளியாக இருந்த இந்த பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர். சுமார் 34 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் பள்ளி நிர்வாகத்தின் இந்த திடீர் அறிவிப்பால் 9-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 10-ம் வகுப்பு வேறு பள்ளியில் சேர்வது மிகவும் கடினம். எனவே இந்த பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும். அரசு இந்த பள்ளியை கையகப்படுத்தி அரசு பள்ளியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதில் முன் வைத்துள்ளனர். இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடியாத சூழல் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன்பிருந்த பெட்டியில் தங்களது கோரிக்கை மனுவை போட்டு சென்றுள்ளனர்.
- கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
- ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனி தனியாக தடுப்பு கம்பிகள், காங்கிரீட் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமான மணிமுத்தாறு அருவியில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினமும் குளித்து சென்றனர்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில் மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்கும் தடாகம், தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவை கடும் சேதமாகின. தொடர்ந்து வனத்துறை சார்பில் மணிமுத்தாறு அருவியில் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனி தனியாக தடுப்பு கம்பிகள், காங்கிரீட் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வனவிதிகளுக்கு உட்பட்டு குளிக்க வனத் துறையினர் அனுமதித்தனர்.
அதன்படி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் வழக்கத்தைவிட ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
- செல்போன், பணம் மற்றும் தங்க செயின் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
- கைது செய்யப்பட்ட கலையரசன் பந்தல் கட்டும் தொழிலாளி எனவும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
வள்ளியூர்:
திருவாரூர் மாவட்டம் சேர்ந்தமங்கலத்தை சேர்ந்தவர் ஞானவேல் (வயது23). இவர் சென்னையில் வெல்டராக பணிபுரிந்து வருகின்றார்.
இவரும் நெல்லை மாவட்டம் டோனாவூரை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் செல்போனில் பேசி வந்தனர்.
இந்நிலையில் தேர்தல் முடிந்த மறுநாள் தனது காதலன் ஞானவேலை வள்ளியூரில் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வருமாறு அந்த பெண் அழைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஞானவேல் தனது நண்பர்கள் 2 பேருடன் வள்ளியூருக்கு வந்து அந்த பெண்ணை சந்தித்ததோடு அவருடன் சாமி கும்பிட்டு விட்டு அருகில் உள்ள கல்மண்டபத்தில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கு வந்த 3 பேர் காதலர்களை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போன், பணம் மற்றும் தங்க செயின் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஞானவேல் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டியதாக வள்ளியூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மகன் கலையரசன், அதே பகுதியை சேர்ந்த குட்டி மற்றும் கால் கரையை சேர்ந்த கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட கலையரசன் பந்தல் கட்டும் தொழிலாளி எனவும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் உள்பட 14 போலீசாரும் ஆஜராகினர்.
- இதுவரை 7 கட்டங்களாக வாய்தா போடப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு வந்த சிலரின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக அப்போதைய உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். மேலும் அவர் மீதும் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் உட்பட 14 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணை நெல்லை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் உள்பட 14 போலீசாரும் ஆஜராகினர்.
அதனைத் தொடர்ந்து இதுவரை 7 கட்டங்களாக வாய்தா போடப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று 8-வது முறையாக குற்றம் சாட்டப்பட்ட பல்வீர்சிங் மற்றும் போலீசார் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று காலை நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு-1 நீதிபதி திரிவேணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் முதல் நிலை காவலர் ஒருவர் ஆகிய 4 பேர் தவிர மீதம் உள்ள 10 போலீசாரும் ஆஜராகினர். அதனை தொடர்ந்து நீதிபதி திரிவேணி இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.






