என் மலர்tooltip icon

    சிவகங்கை

    கீழடியில் இன்று 8-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கப்படுகிறது. இந்த பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதன் பின்னர் 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. இங்கு கிடைத்த தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகின்றன.. இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் கீழடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ள இருக்கிறது.

    இந்த பணிகளை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இன்று(வெள்ளிக்கிழமை) காலையில் தொடங்கி வைக்கிறார். இதற்காக கீழடியில் அலங்காரப் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது.

    அகழாய்வு பணிக்கான தொடக்க விழா ஏற்பாடுகளை சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் அதிகாரிகள் செய்துவருகின்றனர்.



    ஆசிரியர்களை அவமதிப்பதை ஏற்கமுடியாது என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.
    சிவகங்கை

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2021&22 கல்வியாண்டில் தொடக்கக்கல்வி மாணவர்களின் கற்றல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் 2 மாதங்கள் மட்டுமே இதுவரை வகுப்பறை கற்றல், கற்பித்தல் நடைபெற்றுள்ளது. 

    அதுவும் இந்த காலகட்டத்தில் மாணவர்களை வகுப்பறை சுழலுக்குக் கொண்டுவரும் ஆயத்தப் பணிகளே பெரும்பாலும் நடைபெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த பிப்ரவரி 1ந்தேதி முதல் அனைத்து வகைப்பள்ளிகளும் திறக்கப்பட்டு கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

    ஏற்கனவே கடந்த ஜனவரி 10ந்தேதி தொடங்கி பிப்ரவரி 2ந் தேதி முடிய 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் பயிற்சி நடத்தப்பட்டது. குடிப்பதற்கு  தண்ணீர் கூட கொடுக்காத பயிற்சி என்று பெயர் பெற்ற அப்பயிற்சி முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 9.2.2022 முதல் 9.4.2022 வரை 2 மாத காலம் ‘எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி’ என்ற பெயரில் இணைய வழியில் பயிற்சி அளிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இது ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பயிற்சியின் மீது சலிப்பையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பயிற்சியில் ஒவ்வொரு பயிற்சி கட்டத்தின் முடிவிலும் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு கொள்குறிவகை வினா மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும், அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும், பயிற்சிக்கான செலவினமும் வழங்கப்படும் எனவும் மாநில திட்ட இயக்ககம் அறிவித்திருப்பது ஆசிரியர்களை வேதனையடைய செய்துள்ளது.

    ஆசிரியர்களுக்கு தேர்வு என்ற இந்த அறிவிப்பும், தேர்வில் வெற்றி பெறுகிறவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சிக்கான செலவினம் வழங்கப்படும் என்பதும் தேசிய கல்விக்கொள்கை 2020ன் உட்கூறுகள் என்பதையும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சுட்டிக்காட்டுகிறது. 

    தேசிய கல்விக்கொள்கையை படிப்படியாக நுழைக்கும் இது போன்ற செயல்கள் தொடருமானால் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அதை எதிர்த்து களத்தில் இறங்கி போராடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சிவகங்கையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
    சிவகங்கை

    சிவகங்கையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேளதாளங்கள் முழங்க காவல்துறை கொடி அணிவகுப்பு நடந்தது. 

    தமிழகம் முழுவதும் வருகிற 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சிவகங்கை நகராட்சி பகுதியில் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் போலீசாரின் கொடி அணிவகுப்பை தொடங்கிவைத்தார். 

    மேளதாளங்கள் முழங்க அரண்மனை வாயில் முன்பு தொடங்கிய அணிவகுப்பு மதுரை முக்கு, காந்தி வீதி, நேரு பஜார் வழியாக பஸ் நிலையம் வந்தடைந்தது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த கொடி அணிவகுப்பில் ஆண், பெண் காவலர்கள் மற்றும் அதிவிரைவு படையினர் என சுமார் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.
    தேவகோட்டை அருகே கோட்டாட்சியர் பெயரை கூறி பணம் வசூலித்த வி.ஏ.ஓ. சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    தேவகோட்டை

    தமிழக அரசு பட்டா மாறுதல் தொடர்பாக அதிகாரிகள் கிராமங்களுக்கு நேரடியாகச்சென்று பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் வருவாய் சம்பந்தமான சான்றிதழுக்கு சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. 

    இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள அரண்மனை சிறுவயல் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின் பட்டா மாறுதலில் திருத்தம் செய்ய அப்பகுதி மக்களிடையே கோட்டாட்சியர் பிரபாகரன் பெயரை சொல்லியும், மேலும் அதிகாரிகளின் பெயரை சொல்லியும் பணம் கேட்டதாக கோட்டாட்சியருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 

    இதுகுறித்து விசாரணை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலினை தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். கோட்டாட்சியரின் அதிரடி நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
    தேவகோட்டையில் போலீஸ் எனக்கூறி மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பழைய சருகணி சாலை யோகி ராம்சுரத்குமார்  காலனியை சேர்ந்த செல்லப்பன் என்பவரின் மனைவி மீனாட்சி ஆச்சி(வயது 62). 

    இவர் காந்திரோடு மரக்கடை முன்பு சென்று கொண்டிருந்தபோது  இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், தங்களை போலீஸ் என்று கூறி தங்க நகைகள் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியவாறு உங்கள் கழுத்தில் கிடக்கும் தங்கச் செயினை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.

    அப்போது மீனாட்சி ஆச்சி, தான் அணிந்திருந்த 7 பவுன் தங்கசெயினை எடுக்க முயற்சி செய்தார். அப்போது அந்த மர்மநபர்கள் அவரிடமிருந்து செயினை பறித்துக்கொண்டு தப்பிஓடினர்.  அதிர்ச்சியடைந்த மீனாட்சி ஆட்சி அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். ஆனால் மர்மநபர்கள் தப்பிவிட்டனர்.

    இதுகுறித்து மீனாட்சி ஆட்சி தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  போலீஸ் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின்பேரில் நகர் காவல் ஆய்வாளர் சரவணன் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார். 

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. தேவகோட்டை நகரில் போலீஸ் என்று கூறி மூதாட்டியிடம் நகைபறித்து சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தேவகோட்டையில் தேர்தல் விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    தேவகோட்டை


    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விதிமுறைகள் குறித்து காவல்துறையினர் எடுத்துரைத்தனர்.

    நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலில் தேவகோட்டை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு 171 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.  56 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். 

    இறுதியாக அ.தி.மு.க. 25, தி.மு.க. 18, அ.ம.மு.க. 8, பா.ஜ.க. 21, காங்கிரஸ் 9, நாம்தமிழர் 3, தே.மு.தி.க. 1, மார்க்சிஸ்ட் 1, புதிய தமிழகம் 1, எஸ்.டி.பி.ஐ. 1, சுயேட்சைகள் 24 என மொத்தம் 112 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து காவல்துறை சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெற்றிசெல்வன் தலைமையில், தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், ஆய்வாளர்கள் சரவணன், சத்தியசீலா,  சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் எடுத்துரைத்தார். 

    தேர்தல் விதிமுறைகள் குறித்து வேட்பாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பதட்டமான வார்டுகளை கண்டறிந்து அந்த வார்டுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

    தங்கள் வார்டுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறி இருந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஜல்லிக்கட்டு காளை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்களாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவர் காரி என்ற ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து பராமரித்து வந்தார்.

    மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இந்த காளை பங்கேற்றது மட்டுமல்லாமல் வடமாடு மஞ்சுவிரட்டுக்கு செல்லும்போது ஊரில் உள்ள இளைஞர்கள், பெண்கள்  ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைப்பார்கள். 

    இந்த நிலையில் ஜெயபால் வளர்த்து வந்த காரி என்று பெயரிடப்பட்ட ஜல்லிக்கட்டு காளை உடல்நிலை சரியில்லாமல் இன்று உயிரிழந்தது. 

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் மனிதரின் இறப்புக்கு வருவது போல பூ மாலை, வேட்டி, துண்டு என கொண்டு வந்து கோடி எடுத்து, மாட்டிற்கு மஞ்சள் தடவிய வேட்டியை போர்த்தினர். 

    பெண்களும், இளைஞர்களும் கதறி அழுதனர். பின்னர் ஜெயபாலுக்கு சொந்தமான தோட்டத்தில் காளையை அடக்கம் செய்தனர். இதனால் அந்த பகுதியே சோகமாக காணப்பட்டது.
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் என்பது பேரம் பேச வாய்ப்பாக உள்ளது. இதனால் ஜனநாயகம் செத்து விடுகிறது. குடியரசு தலைவரையும் மக்களாகவே தேர்வு செய்யும் முறை கொண்டு வர வேண்டும்.

    சிவகங்கை:

    சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    3-வது பெரிய கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பில்லை. எங்களை கட்சியாகவே கருதாதபோது எங்கள் வேட்பாளரை கண்டு தி.மு.க. அஞ்சுவது ஏன்? நீட் தேர்வில் வென்றவர்களுக்கே படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை ஏன்?

     

    பாஜக

    நீட் தேர்வில் வென்றவர்களுக்கு தனியார் கல்லூரியில் பணம் வசூல் செய்யாமலா சீட் வழங்குகிறார்கள்? பா.ஜ.கவும், காங்கிரசும் வேறு வேறு கட்சியாக இருந்தாலும் அவைகளுக்கு கொள்கை ஒன்றுதான். இந்தியா என்பது 130 கோடி மக்களின் நாடு அல்ல. சில, பல முதலாளிகளின் வீடாக மாறிக்கொண்டிருக்கிறது.

    பா.ஜ.க. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுமா? நாம் தமிழர் கட்சியை விட பா.ஜ.க. தனித்து நின்று ஒரு ஓட்டு அதிகமாக வாங்க முடியுமா? அப்படி வாங்கினால் அது பெரிய கட்சி என ஏற்றுக் கொள்கிறேன்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் என்பது பேரம் பேச வாய்ப்பாக உள்ளது. இதனால் ஜனநாயகம் செத்து விடுகிறது. குடியரசு தலைவரையும் மக்களாகவே தேர்வு செய்யும் முறை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

    பிள்ளையார்பட்டி அருகே பிரசித்திபெற்ற வயிரவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே என்.வைரவன்பட்டியில் வளரொளிநாதர் உடனாய வடிவுடையம்பாள் வயிரவர்சுவாமி கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் கி.பி.712ல் கட்டப்பட்டது. 

    நகரத்தார்களின் 9 கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. சிவனைப்போல ஐந்து தலையுடன் இருந்த பிரம்மா அகந்தையுடன் இருந்ததாகவும், சிவன் தனது அம்சமான வயிரவரை அனுப்பி பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார் என்றும், இவரே இத்தலத்தில் வயிரவர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார் என்ற தல வரலாறு உள்ளது. 

    பழமையான இந்த கோவிலுக்கு  வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது உண்டு. ஆகம விதிப்படி கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வந்தன. 

    கோவில் கோபுரம் சீரமைத்து வர்ணம் பூசும் பணி முடிவடைந்த பின் கடந்த வாரம் கும்பாபிஷேகத்திற்கான ஆரம்ப கட்ட பூஜைகள் நடைபெற்றன. இதற்காக கோவில் முன்பு பிரமாண்டயாக சாலைகள் அமைத்து பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் பூஜைகள் நடந்தது. 

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று அதிகாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது  கோவிலை சுற்றி கூடியிருந்த  ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறைகோஷமிட்டு தரிசனம் செயதனர்.

    தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த மாணவிக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் காரைக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இதற்காக அங்குள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார்.

    இவரது தந்தை சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதன் காரணமாக அந்த மாணவி காரைக்குடியில் தனது தாய் மற்றும் தம்பி தங்கையுடன் வசித்து வந்தார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக காரைக்குடியில் மாணவி தனது வீட்டில் சில மாதங்களாக தங்கியிருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வந்தார்.

    இந்த நிலையில் அவரது தாயாருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி தனது தாயாரை அருகில் உள்ள தனியார் கிளீனிக்குக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர் மோகன்குமார் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார்.

    அப்போது டாக்டர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல முடியாமல் அந்த மாணவி தவித்து வந்தார்.

    இதற்கிடையே சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த அவரது தந்தை சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார். அப்போது டாக்டரின் அத்துமீறல் குறித்து மகள் தனது தந்தையுடன் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் டாக்டர் மோகன்குமார் மீது காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மோகன்குமாரை கைது செய்தனர்.

    தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த மாணவிக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் காரைக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காளையார்கோவில் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் கொலையில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தை அடுத்த அதியதிரும்பல் கிராமத்தை சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் சண்முகம் (வயது 32). இவர் கோவையில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் விடு முறைக்கு ஊருக்கு வந்திருந்த சண்முகம் சம்பவத்தன்று  காளையார்கோவில் பக்க முள்ள புரசடி உடைப்பு பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடைக்கு மது வாங்க சென்றுள்ளார். இந்நிலையில் அவர் அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். 

    கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடந்த அவரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது உடனடியாக தெரிய வில்லை. இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத் தினர். 

    சண்முகம்  கொலைக் கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து துப்புதுலங்க சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, காளையார் கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.  சண்முகம் கொலை செய்யப்பட்டு கிடந்த பகுதி அருகே உள்ள மதுக்கடை  உள்ளிட்ட இடங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவத்தன்று சண்முகத்துக்கும், சிலருக்கும் மதுக்கடை அருகே வைத்து தகராறு நடந்ததாக சிலர் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சண்முகத் துடன் தகராறு செய்த நபர்கள் யார்? என்று போலீசார் துப்புதுலக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட னர். அப்போது அவருடன் தகராறு செய்த நபர்கள் மறவமங்கலத்தை சேர்ந்த செல்லப்பாண்டி (24), அருண்குமார் (24) மற்றும் 17 வயது மதிக்கத்தக்க 3 பேர், 16 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்பது தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சண்முகத்தை கொன்றது அவர்கள் தான் என்பது தெரியவந்தது.  சம்பவத்தன்று சண்முகம் மது குடிக்க புரசடி உடைப்பு பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு செல்லப்பாண்டி உள்ளிட்ட 6 பேரும் மது வாங்க வந்திருக்கின்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் தங்களின் மீது மோதுவது போல் வந்ததாக கூறி சண்முகத்தை தட்டிக் கேட்டுள்ளனர். 

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த வர்கள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சண்முகம் மதுக்கடையில் இருந்து சற்று தொலைவில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று மது குடித்துள்ளார். 

    அப்போது அங்கு செல்லப்பாண்டி உள்ளிட்டோர் சென்று சண்முகத்திடம் மீண்டும் தகராறு செய்துள்ளனர். மேலும் அவரை கத்தியால் கழுத்தை  அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கின்றனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. 

    இதையடுத்து  செல்லப் பாண்டி, அருண்குமார் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். டாஸ்மாக் பார் ஊழியர் கொலையில் 4 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் காளையார்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   
    தேவகோட்டை அருகே ஆற்றங்கரை நாச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஈகரை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சேவுகப்பெருமாள் அய்யனார், ஆற்றங்கரை செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குலதெய்வமாக இருந்து வருகிறது. 

    கோவிலில் செல்லியம்ம னுக்கு ராஜகோபுரமும், முருகன், விநாயகர், கருப்பருக்கு விமான கோபுரமும் மற்றும் அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் புதியதாக சன்னதிகள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப் பட்டது. முடிவடைந்ததை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 4ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 

    இன்று காலை 4ம் கால யாக பூஜை, தத்துவார்ச்சனை, மகா பூர்ணாகுதியை தொடர்ந்து காலை 6.50 மணியளவில் சேவுகப்பெருமாள் அய்யனார் ஆலயத்தில் கலசங்களுக்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினார்கள்.

    அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடாகி 9 மணியளவில் கோவிலின் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பா பிஷேகம் நடைபெற்றது. 

    தென்னிலைநாடு ஈகரைசேர்கை கிராம மக்கள் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. தேவ கோட்டை போலீஸ் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் ஆய்வாளர்கள் சரவணன், சுப்பிரமணியன், சார்பு ஆய்வாளர், காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.

    ×