என் மலர்
சேலம்
- தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 2 வாரமாகவே சேலம் நகர கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
- பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் நேற்று மாலை சேலம் மாநகரின் பல்வேறு இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சேலம்:
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 2 வாரமாகவே சேலம் நகர கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் நேற்று மாலை சேலம் மாநகரின் பல்வேறு இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
முதல் அக்ரகாரம், 2-வது அக்ரகாரம், புதிய பஸ் நிலையம், பேர்லேண்ட்ஸ், 5-ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள் மற்றும் நகை கடைகள், இனிப்பு கடைகளில் கூட்டம் அைலமோதியது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இதே போல் சீலநா யக்கன்பட்டி, கொண்ட லாம்பட்டி, பெங்களூரு பைபாஸ் ரோடு பகுதிக ளிலும் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
அலைமோதிய கூட்டம்
தீபாவளி பண்டிகையை கொண்டாட சேலத்தில் வசிக்கும் வெளியூர் காரர்களும், வெளியூரில் வசிக்கும் சேலத்து காரர்களும் அதிகளவில் வந்ததால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்து சென்ற அனைத்து பஸ்களும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இதனால் பஸ்சில் இடம் பிடிக்க பயணிகள் இடையே கடுமையான போட்டியும் நிலவியது. சிலர் பஸ் நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டு இடம் பிடித்தனர்.
இதே போல் சேலம் வழியாக சென்ற ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது. மேலும் ரெயில்களில் யாராவது பட்டாசு கொண்டு செல்கிறார்களா என்று போலீ சார் தீவிரமாக சோதனை நடத்தினர்.
பட்டாசு கடைகளில் கூட்டம்
இந்த ஆண்டு சேலத்தில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், இரும்பாலை பகுதியில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளிலும் சிறுவர்கள் அதிகளவில் திரண்டு தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி சென்றனர்.
கண்காணிப்பு
பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் இருப்பதால் போலீசார் உயர் கோபுரம் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். ேமலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் யாராவது பொதுமக்களிடம் கை வரிசை காட்டுகிறார்களா, என்றும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இதே போல் புறநகர் பகுதிகளான மேட்டூர், கொளத்தூர், ஓமலூர், வாழப்பாடி, ஆத்தூர், தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சேலம் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகையை யொட்டி கடைவீதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் கூட்டம் அலை மோதியது. மேலும் நாமக்கல்லில் வசிக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட சென்றனர். இதனால் பஸ் நிலையத்திலும் கூட்டம் நிலவியது.
இதே போல் குமார பாளையம், பள்ளி பாளைம், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 700 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சேலத்தில் நடக்கிறது.
- தி.மு.க. அந்தந்த பகுதி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
மாநில இளைஞரணி மாநாட்டிற்கு முன்னோட் டமாக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சேலத்தில் நடக்கிறது.
இதனை சிறப்பாக நடத்திட வேண்டி வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் மத்திய மாவட்ட, மாநகர, நிர்வாகிகள் பகுதி, ஒன்றியங்களுக்கு நேரில் வந்து அந்தந்த பகுதி ஒன்றியங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளோம்,
அதன்படி 14-ந் தேதி காலை 9.30 மணி பொன்னம்மாப்பேட்டை பகுதி, 10.30 மணி அரிசிபாளையம் பகுதி, 11.30 மணி அம்மாப்பேட்டை பகுதி, 12.30 கிச்சிப்பாளையம் பகுதி, மதியம் 1.30 மணி குகை பகுதி, 4.30 தாதகாப்பட்டி பகுதி, 5.30 மணி கொண்டலாம்பட்டி பகுதி, 6.30 மணி செவ்வாய்ப்பேட்டை பகுதி, 7.30 மணி குமாரசாமிப்பட்டி பகுதியிலும் நடக்கிறது.
15-ந் தேதி 9.30 மணி அஸ்தம்பட்டி பகுதி, 10.30 அழகாபுரம் பகுதி, 11.30 மணி மெய்யனூர் பகுதி, 12.30 மணி சூரமங்கலம் பகுதி, 1 மணி சேலம் வடக்கு ஒன்றியம், 3 மணி தாரமங்கலம் கிழக்கு மற்றும் ஓமலூர் தெற்கு ஒன்றியம், 4 மணி ஓமலூர் வடக்கு மற்றும் கிழக்கு ஒன்றியம், 5 மணி காடையாம்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் நடக்கிறது.
இதில் தி.மு.க. அந்தந்த பகுதி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
- மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.
- சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்த 29 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது செல்போனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நீங்கள் மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.
அதற்கு அவர் நான் எந்த பார்சலும் அனுப்பவில்லை என தெரிவித்தார். மறுமுனையில் பேசியவர் நாங்கள் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி, உங்கள் பெயரில் தான் பார்சல் சென்றுள்ளது. அதனால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.27 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டினார்.
இதனால் பயந்து போன சாப்ட்வேர் என்ஜினீயர் 3 தவணைகளாக ரூ.8 லட்சத்து 29 ஆயிரத்து 348-ஐ அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ஆன்லைனில் அனுப்பினார். தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியது.
இதனால் சந்தேகம் அடைந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது உத்தரபிரதேசத்தை சேர்ந்த மோசடி கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
- வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகள் பணத்தை பெற்றுகொண்டு பில் தொகை ஒப்புதல் கொடுப்பதாக சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 4 மணியளவில் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அலுவலகத்திலிருந்து காரில் புறப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரியின் வாகனத்தை நிறுத்தி உள்ளே அழைத்துச் சென்று அவரது அறை மற்றும் அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் சோதனை நடத்தினர்.
சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.32,500 கைப்பற்றப்பட்டது. இதனிடையே அலுவலர்கள் வைத்திருந்த ஆயிரம், 2 ரூபாய்க்கு கணக்கு இருந்ததால் அவர்களை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இரவு 12 மணி வரை சோதனைகள் தொடர்ந்தது. இதில் மொத்தமாக ரூ.32,500 மட்டுமே கிடைத்ததை தொடர்ந்து அனைவரும் சோதனை முடித்துக்கொண்டு திரும்பி சென்றனர். இந்த தொகை குறித்து அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் காடையாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 6 லட்சத்து 3500 ரூபாய் பணம் சிக்கிய நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகள் உஷாராக இருந்ததாக கூறப்படுகிறது. அடுத்த நாளே ஓமலூர் ஒன்றிய அலுவலகத்தில் சோதனை நடத்தியதால் பெரிதாக பணம் ஏதும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
- அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.
- தற்போது மேட்டூர் அணையில் 23.32 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வரும் நிலையில் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 445 கனஅடி வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 8 ஆயிரத்து 424 கனஅடியாக குறைந்தது.
இதே போல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58.15 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 23.32 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந் தேதி)நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளதால் ஜவுளி கடைகள், நகை கடைகள், பட்டாசு கடைகளில் இறுதி கட்ட விற்பனை களை கட்டியுள்ளது.
- நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் இன்று மாலையும் அதிக அளவில் பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதையொட்டி நேற்று முன்தினம் முதல் சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந் தேதி)நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளதால் ஜவுளி கடைகள், நகை கடைகள், பட்டாசு கடைகளில் இறுதி கட்ட விற்பனை களை கட்டியுள்ளது.
குறிப்பாக சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் பொது மக்கள் ஜவுளிகடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். குடும்பத்துடன் வரும் அவர்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் சேலம் கடை வீதி முதல் அக்ரகாரம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு, 5 ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது . இதனால் ஜவுளி விற்பனை களை கட்டி உள்ளது.
இதே போல கடை வீதி மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள நகை கடைகளிலும் குவியும் பெண்கள் தங்களுக்கு பிடித்த தங்கம், வைர நகைகளை தேர்வு செய்து வாங்கி செல்கிறார்கள். பட்டாசு கடைகளிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் குவிந்துள்ளனர். அவர்கள் புதிதாக கு வித்து வைக்கப்பபட்டுள்ள புதிய ரக பட்டாசுகளை வாங்கி செல்கிறார்கள்.
இதே போல மளிைக கடைகளிலும் பெண்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். தீபாவளிக்கு பலகாரங்கள் செய்ய தேவையான எண்ணை, மாவு வகைகள் மற்றும் மளிகை பொருட்களும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள இனிப்பு கடைகள், ஐஸ்கிரீம் கடைகள், ஜூஸ் கடைகள், ஓட்டல்கள் நிரம்பி வழிகிறது. பழ வகைகள் விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது.
சேலம் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அருணாச்சல ஆசாரி தெரு, முதல் அக்ரகாரம், 2-வது அக்ரஹாரம், பழைய, புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், 4 ரோடு, 5 ரோடு, சொர்ணபுரி ஏ.வி.ஆர் ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை உள்பட பல பகுதிகளில் காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாநகரில் தீபாவளி திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண உடையிலும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
சேலத்தில் ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு தீபாவளி பண்டிகையை யொட்டி இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதலே தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட புறப்பட்டு சென்றனர்.
இதே போல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரும் விடுமுறை எடுத்து கொண்டு தீபாவளி பண்டிகையை 4 நாட்கள் கொண்டாடும் வகையில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது.
நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் இன்று மாலையும் அதிக அளவில் பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதையொட்டி நேற்று முன்தினம் முதல் சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சென்னை, பெங்களூரு, திருப்பூர், மதுரை, திருச்சி, கோவை உள்பட பல ஊர்களுக்கு அதிக அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் கூட்டம் அலை மோதியது.
இதே போல சேலம் வழியாக சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு செல்லும் ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.
- சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த 4 நாட்களாக பெய்து வருகிறது.
- தொடர் கனமழை காரணமாக சடையம்பட்டி, சித்தம்பட்டி சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறை சாலையில் நடுவே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த 4 நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் வனப்பகுதியில் இருந்து கீழ்நாடு ஊராட்சிக்குட்பட்ட சடையம்பட்டி கல்லூர், சேம்பூர், நாகலூர், கணியான் வளைவு , அடியலூர் குன்னூர், சித்தம்பட்டி, சடையம்பட்டி உள்ளிட்ட 25 மலை கிராமங்களுக்கு செல்லும் பாதையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது.
இந்த தொடர் கனமழை காரணமாக சடையம்பட்டி, சித்தம்பட்டி சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறை சாலையில் நடுவே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் 25 கிராம மலை வாழ் மக்கள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு எந்தவித பொருட்களும் வாங்க நகரப் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று 4-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த மண் சரிவு ஏற்பட்டு தகவலறிந்த வனத்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மலை கிராம மக்களே ஒன்றிணைந்து சாலையில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை பெய்து வரும்நிலையில் இதுபோன்ற மண்சரிவு அடிக்கடி மலை கிராம பகுதியில் நடைபெற்று வருவதாகவும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
- தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர்கள் அன்சர், ரஹீம், நசீம்.
இவர்களிடம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்த அவர்கள் தங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தஸ்தகீர் பணம் வாங்கி மோசடி செய்ததாக தலைவாசல் போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மேலும் அவர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பகுதியில் 7 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளதும், நாகப்பட்டினம் சிறையில் தஸ்தகீர் அடைக்கப்பட்டு ள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அருண்குமார், தஸ்தகீரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்
- காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
கோவை மாவட்டம் செம்மேடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (45), இவரது மனைவி பத்மாவதி (40).இவர்களது மகள் மணிமேகலை (21), மகன் அருண்குமார் (19).
இவர்கள் சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்.
அந்த வாகனத்தை கரூர் மாவட்டம் வேடிச்சம்மபாளையம் ஒத்தையூர் பகுதியை சேர்ந்த மணிவேல் என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை 2 மணியளவில் காரிப்பட்டி தனியார் பால் நிறுவனம் அருகே வந்த போது பின்னால் வந்த செங்கல்பட்டை சேர்ந்த அட்வின்குமார் (49) என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென சரக்கு வாகனம் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறிய சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தின் பின் பகுதியில் அமர்ந்து இருந்த பத்மாவதி, தேவராஜ், டிரைவர் மணிவேல் ஆகியோர் காயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். தகவல் அறிந்த காரிப்பட்டி போலிசார் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவராஜ் மற்றும் மணிவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விசாரித்த காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- அதன் ஒரு பகுதியாக சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம்:
போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மண்டல பொதுச்செயலாளர் அன்பழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இது குறித்து மண்டல பொதுச் செயலாளர் அன்பழகன் கூறுகையில் கடந்த 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு கேட்டு பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. குறிப்பாக தீபாவளிக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து துறை செயலாளர் உறுதி அளித்தும் இதுவரை நிறைவேற்றவில்லை. மேலும் மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.
- பட்டாசு கடைகளில் அரசின் அறிவுறுத்தல் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
- சிவகாசியில் இருந்து அதிக அளவில் புதிய பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையிலும் 30 முதல் 40 லட்சம் வரை பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலைய பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பட்டாசு கடைகளை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது பட்டாசு கடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து நிருபர்க ளிடம் அவர் கூறியதாவது:-
பட்டாசு கடைகளில் அரசின் அறிவுறுத்தல் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் இரும்பாலை பகுதி என மொத்தம் 143 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு கடைகளுக்கும் 3½ இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் இருந்து அதிக அளவில் புதிய பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையிலும் 30 முதல் 40 லட்சம் வரை பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
விபத்து இல்லாமல் மாசற்ற வகையில் தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும். அரசின் அறிவுறுத்தல் படி அனைவரும் ஒத்துழைத்து பாதுகாப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொளத்தூரில் நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வெள்ளாடு, செம்மறிஆடு, குரும்பை ஆடு விற்பனை சூடு பிடித்தது.
- வெள்ளாடு கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று செம்மறியாடு ரு.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாளன்று கால்நடை வார சந்தைக்கு சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு இன்று கொளத்தூரில் நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வெள்ளாடு, செம்மறிஆடு, குரும்பை ஆடு விற்பனை சூடு பிடித்தது. வெள்ளாடு கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று செம்மறியாடு ரு.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
இதன் காரணமாக கொளத்தூர் கால்நடை வார சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கால்நடை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகளவில் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்ததால் ஆடுகளின் விலை கிலோ ஒன்றுக்கு 1,200 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது.






