என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • பிரவீன் நுழைவுவாயில் பணியில் இருந்தபோது திடீரென தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படை விமானத்தள வளாகத்தில் பிரவீன் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட வீரர் பிரவீன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

    பிரவீன் நுழைவுவாயில் பணியில் இருந்தபோது திடீரென தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    பிரவீன் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாதந்தோறும் ரோப்கார் சேவையை சில நாட்கள் நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
    • பணிகள் முடிந்து வருகிற 13-ந்தேதி முதல் வழக்கம் போல் ரோப்கார் சேவை இயங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்த பெற்ற யோக நரசிம்மசாமி கோவில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு 1,305 படிகள் கொண்ட பெரிய மலையில் யோக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார். கார்த்திகை மாத பெருவிழாவையொட்டி முதியோர் மற்றும் நடக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக கோவிலில் ரோப் கார் சேவை இயங்கி வருகிறது.

    இதனால் பக்தர்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. ரோப் காரில் மலைக்கு செல்ல ரூ.50, மலையிலிருந்து இறங்க ரூ.50 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்நிலையில், மாதந்தோறும் ரோப்கார் சேவையை சில நாட்கள் நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

    அதன்படி நாளை (ஞாயிற்றுகிழமை) முதல் 12-ந்தேதி (புதன்) வரை 4 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    பணிகள் முடிந்து வருகிற 13-ந்தேதி முதல் வழக்கம் போல் ரோப்கார் சேவை இயங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
    • காலில் காயம் அடைந்த ஹரி வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

    காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

    அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஹரி என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.

    உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது குற்றவாளி ஹரி என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

    உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

    காலில் காயம் அடைந்த ஹரி வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரியும் தன்மை கொண்ட பொருட்கள் அங்கு இல்லை என ஆய்வில் தெரியவந்தது.
    • மின் ஒயரில் கசிவு ஏற்பட்டே தீ விபத்து நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக் அறையில் தீ விபத்து சம்பவத்தில் நாசவேலை எதுவும் இல்லை என டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார்.

    மேலும் கூறிய அவர், "தீ விபத்து நடந்த அன்றே வழக்குப்பதிவு செய்து தடயவியல், மின்சார நிபுணர்கள் விரிவான ஆய்வு நடத்தினர்.

    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரியும் தன்மை கொண்ட பொருட்கள் அங்கு இல்லை என ஆய்வில் தெரியவந்தது.

    மின் ஒயரில் கசிவு ஏற்பட்டே தீ விபத்து நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ''சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் (TNUSRB) கூடுதல் காவல் துறை இயக்குநர் மற்றும் உறுப்பினரான கல்பனா நாயக் ஐபிஎஸ் அவர்களிடமிருந்து 14.08.2024 அன்று தமிழ்நாடு காவல் துறை இயக்குநர்/காவல் படைத் தலைவர் மற்றும் சென்னை நகர காவல் ஆணையர் ஆகியோருக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது.

    விரிவான விசாரணை

    அதில் சென்னை எழும்பூரில் உள்ள USRB அலுவலகத்தில் உள்ள தனது அறையில் 28.07.2024 அன்று தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் சட்டவிரோத செயல் மற்றும் நாசவேலை நடந்ததாக சந்தேகிப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோரி, கடிதம் உடனடியாக சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டது.

    தீ விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் தொடர்பான உண்மைகள் மற்றும் தெளிவுகள்

    இது தொடர்பாக, சம்பவம் நடந்த அதே நாளில் F2 எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையர், தடயவியல் நிபுணர்கள், மின்சார வாரியம் (TANGEDCO), தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகம் மற்றும் ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்களுடன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விரிவான விசாரணை நடத்தினார்.

    நாசவேலை காரணமில்லை

    இதையடுத்து, வழக்கு சென்னை நகர மத்திய குற்றப்பிரிவுக்கு (CCB) மாற்றப்பட்டது, மேலும் கூடுதல் DCP, CCB-I விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது 31 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன, மேலும் தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தடயவியல், தீயணைப்பு சேவைகள் மற்றும் மின் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

    தற்போது, நிபுணர் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. செப்பு கம்பிகளில் ஷார்ட் சர்க்யூட் இருப்பதற்கான சான்றுகள் காணப்பட்டதாக தடயவியல் நிபுணர்களின் அறிக்கை தெரிவித்துள்ளது. கூடுதலாக, தடயவியல் அறிக்கையில் மெல்லிய அடுக்கு குரோமடோகிராபி மற்றும் வாயு குரோமடோகிராபி அடிப்படையில், பெட்ரோல், டீசல் அல்லது வேறு ஏதேனும் எரியக்கூடிய பொருட்கள் அங்கு கண்டறியப்படவில்லை. அவை இந்த தீ விபத்தில் சம்பந்தப்படவில்லை என்று கூறியுள்ளது.

    பெண் ஏடிஜிபி உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை. எனவே, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த தீ விபத்தில் வேண்டுமென்றே தீ வைப்பு எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. கல்பனா நாயக்கின் உயிருக்கு எந்தவொரு திட்டமிடப்பட்ட அச்சுறுத்தலும் இல்லை.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • 14 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சுற்றுப்புறத்தில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை யொட்டி சிப்காட் போலீஸ் நிலையம் உள்ளது.

    நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் வந்தனர். அவர்கள் சிப்காட் போலீஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் உள்ள வரவேற்பாளர். பொதுமக்கள் அமரும் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர்.

    கட்டிடப் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியதால் குபீரென தீ பிடித்து கரும்புகை ஏற்பட்டது.

    பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஓடிச்சென்று தண்ணீரை ஊற்றினர். தப்பியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். உடனடியாக குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக தேடுதல் பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் பழைய குற்றவாளிகளை பிடித்து சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இதேபோல் போலீஸ் நிலையம் எதிரே சிப்காட் மெயின் பஜார் தெரு பகுதியில் உள்ள அரிசி கடையின் இரும்பு கதவின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

    இந்த நிலையில் சிப்காட் போலீஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அரிசி கடையின் மீதும் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாகவும் தனியாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதிகளில் கடைகளில் ரவுடி கும்பல் மாமூல் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் குறித்து வியாபாரிகள் சிலர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் ரவுடி கும்பலை சேர்ந்த சிலரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடித்து எச்சரிக்கை செய்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கும்பல் போலீஸ் நிலையம் மற்றும் அரிசி கடை மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக இதுவரை 14 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களின் உறவினர்கள் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். இதனால் சிப்காட் போலீஸ் நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடி சென்றனர்.

    காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு வாலிபர் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    ஓச்சேரி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த திருமால்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடந்த 16-ந்தேதி இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது.

    இதில் நெல்வாய் பகுதியை சேர்ந்த சூர்யா என்கிற தமிழரசன் (வயது23), விஜயகணபதி ஆகிய 2 பேர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டனர். இதில் தமிழரசன் இறந்தார். இதையடுத்து தமிழரசனின் உடலை 23-ந்தேதி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால் உடலை வாங்க குடும்பத்தினர் மறுத்தனர்.

    தமிழரசனை எரித்து கொன்று கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று இரவு போராட்டக்காரர்கள் மற்றும் உறவினர்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சந்தித்து பேசினார். இதனையடுத்து உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு வாலிபர் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று பிரேத பரிசோதனை முடிந்து உடல் வர இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    • பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு நண்பர்களுடன் தப்பிச் சென்றார்.
    • 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    ஓச்சேரி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் சூர்யா என்கிற தமிழரசன், விஜயகணபதி. இவர்களுக்கும் திருமால்பூரை சேர்ந்த பிரேம் என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடை பிரேம், தமிழரசன் மற்றும் விஜயகணபதி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தன் நண்பர்களுடன் தப்பிச் சென்றார்.

    இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் பிரேம் உள்ளிட்ட நண்பர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    நெல்வாய் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின் காரணமாக அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் திருமால்பூர் மற்றும் நெல்வாய் பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவியது.

    • காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் MBT சாலையில் பேருந்தும், ஈச்சர் வேனும் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து சீர் செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹோங்பூ தொழில் குழுமத்தின் தலைவர் டி.ஒய்.சங்க்கிடம் கொள்கை அளவில் நிலம் ஒதுக்கீட்டு ஆணை அப்போது வழங்கப்பட்டது.
    • தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைவதையொட்டி 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

    ராணிப்பேட்டை:

    பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்கி வருகிறது.

    தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியின் காரணமாக தமிழகம் மேலும் மேன்மை பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தைவானைச் சேர்ந்த ஹோங்பூ தொழில் குழுமம் தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையுடன் கடந்த ஆண்டு காலணி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து ஹோங்பூ தொழில் குழுமத்தின் தலைவர் டி.ஒய்.சங்க்கிடம் கொள்கை அளவில் நிலம் ஒதுக்கீட்டு ஆணை அப்போது வழங்கப்பட்டது.

    அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் 125 ஏக்கர் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், 5 ஏக்கர் நிலம் உள் நாட்டு பயன்பாட்டுக்காகவும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆரம்ப கட்ட பணிகள் அங்கு நடைபெற தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் பனப்பாக்கத்தில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை தொடங்குவதற்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில்துறை செயலாளர் அருண்ராய் மற்றும் தைவான் நாட்டைச் சேர்ந்த ஹோங்பு நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைவதையொட்டி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

    • பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.
    • மயங்கி விழுந்த மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.

    மயங்கி விழுந்த மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மாணவி உயிரிழந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திடீரென மாணவி உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியாவிலேயே விளையாட்டு துறையில் தமிழகம் சாதனைகள் படைத்து வருகிறது.
    • மகளிர் சுயமரியாதையாக வாழ வேண்டும்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் இன்று காலை விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முன்னிலை வகித்தனர்.

    இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 288 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:

    இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. விளையாட்டு துறையில் சாதிக்கக்கூடிய வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அரசு சார்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தோம். விரைவில் முதலமைச்சர் கைகளால் விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு வேலை வழங்கி வாக்குறுதியை உறுதி செய்வோம்.

    இந்தியாவிலேயே விளையாட்டு துறையில் தமிழகம் சாதனைகள் படைத்து வருகிறது. பலவிதமான விருதுகளை தமிழக விளையாட்டு துறை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநில விருது தமிழகத்திற்கு கிடைத்தது பெருமைக்குரியது.

    புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து வழங்குவது தான் திராவிட மாடலின் தனித்துவம்.

    மகளிர் சுயமரியாதையாக வாழ வேண்டும். யாருடைய ஆதரவும் இல்லாமல் தலை நிமிர்ந்து வாழ்வதற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டது அவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. பெரியார் கண்ட கனவை கலைஞர் கருணாநிதி இதன் மூலம் சாத்தியபடுத்தினார்.

    இதுவரை மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.92 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அரணாக நின்று காத்து வருகிறார். இன்று 3000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கை மேம்படும்.

    நான் உங்கள் வீட்டு பிள்ளையாக துணை நிற்பேன்.

    மாற்றுத்திறனாளிகளின் சிரிப்புதான் திராவிட மாடலின் வெற்றி. மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் செயற்கை கால்கள் வழங்கப்படுகிறது. நாங்கள் உங்கள் வீடு தேடி வந்து நலத்திட்டங்களை வழங்குகிறோம்.

    கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. திராவிட மாடல் என்றால் என்ன என சிலர் கேட்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல்.

    நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் விடியல் பயண திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். இதன் மூலம் இதுவரை 580 கோடி பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

    அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாகிறது. இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ. ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    மகளிர் வளர்ந்தால் மாநிலம் வளரும். மக்களோடு மக்களாக கைகோர்த்து இந்த அரசு செயல்படும். முதலமைச்சர் உங்கள் குடும்பத்தின் ஒருவராக துணையாக இருப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×