என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • கட்சி தொடங்குபவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது.
    • தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால்தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது.

    நாகையில் கலைஞரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவரும், மாவட்ட செயலாளருமான கவுதமன் தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் ரகுபதி ஆகியோர் முன்னிலையில் மாற்று கட்சியிலிருந்து விலகி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

    அப்போது ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:-

    நாகையில் நடக்கும் இந்த கட்சியில் இணையும் நிகழ்ச்சியை பார்க்குபோது, மீனவர்கள் தி.மு.க.வின் மீது நம்பிக்கையோடு உள்ளனர் என்பது தெரிகிறது. முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    யார் கட்சி ஆரம்பித்தாலும் நமக்கு கவலை இல்லை. ஒரு அமாவாசை தாங்கும். அல்லது இரு அமாவாசை தாங்கும். அதற்கு மேல் தாங்காது. ஏற்கனவே இருக்கும் கட்சியைப் பார்த்து புது கட்சி தொடங்குவது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல உள்ளது.

    யார் யாரெல்லாம் கட்சி தொடங்கினார்கள். கட்சி தொடங்குபவர்களெல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்ததால்தான் எம்.ஜி.ஆர் நிலைக்க முடிந்தது. இளைஞர்கள் இன்றைக்கு புதிய கட்சிக்கு செல்வதற்கு காரணம் பதவி கிடைக்கும் என்ற நோக்கமே. கொள்கை, லட்சியம் என்பதை நிலையாக கொண்ட கட்சி தி.மு.க. இக்கட்சிக்கு வரும்போது எந்த அரவணைப்பு வழங்கப்படுகிறதோ? அதே அரவணைப்புடன் கடைசி வரை இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.
    • கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அவர்கள் அவ்வாறு மீன் பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மற்றும் எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதன்படி, நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகரத்தினம், சஞ்சை (வயது 23), பிரகாஸ் (35), சுதந்திர சுந்தர், சந்துரு (23), ரமேஷ் (47), ஆனந்தவேல், நம்பியார்நகரை சேர்ந்த சிவராஜ் (45), வர்சன் (19), சுமன் (25), புதியகல்லாரை சோந்த ராஜேந்திரன் (45) ஆகிய 11 மீனவர்கள் சாந்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் இரவு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    இந்நிலையில், நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 41 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகுடன் மேற்படி 11 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.

    தொடர்ந்து, அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    கடலில் மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மீனவர்கள், உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விசிகவினர்.
    • நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளு முற்று ஏற்பட்டது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 20-ந்தேதி நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் குவிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அன்று இரவு கொடிக்கம்பத்தை 62 அடி உயர கொடி கம்பத்தை நட்டு வைத்து கொடியேற்ற முயன்றனர்.

    இதையறிந்த கீழ்வேளூர் வட்டாட்சியர் மற்றும் போலீசார் அங்கு வந்து கொடிக்கம்பம் நாட்டுவதற்கு அனுமதி வாங்கவில்லை என்று கூறி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அதிகாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த விவகாரத்தில் கீழ்வேளூர் வட்டாட்சியரும், கீழ்வேளூர் ஆய்வாளரும் ஒருதலைபட்சமாக நடந்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை இடப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த நிலையில் நூற்றுக்கணக்கான போலீசார் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர். நாகை மற்றும் திருவாரூரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாகை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. தலைமையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

    இதில் அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • கடல் உள்பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது.
    • காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல ஓரிரு நாட்களாக என மீனவர்கள் தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்களில் கடலில் பலத்த சுறைக்காற்று வீசுவதாலும், கடல் உள்பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது.

    இதனால் இந்த பகுதியை சேர்ந்த சுமார் 5,000 மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வார காலமாக மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் வலையில் வாவல், காலா, ஷீலா, திருக்கை, நண்டு இறால், உள்ளிட்ட அனைத்து வகையான மீன்களும் கிடைத்து வந்தன. மீன்களுக்கு நல்ல விலையும் கிடைத்து வந்தது. இதனால் அதிகப்படியான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கடலுக்குச் சென்று அதிக மீன்களை பிடித்து வரலாம் என்று நினைத்த மீனவர்களுக்கு, கடலில் பலத்த சுறைக்காற்று வீசுவதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    சுறைகாற்றின் வேகத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் வீடுகளில் 2-வது நாளாக முடங்கிப் போய் உள்ளனர். மீனவர்கள் பயன்படுத்திய பைபர் படகுகளும் கடற்கரையில் ஓய்வெடுக்கின்றன. காற்று தணிந்து மீன்பிடிக்க செல்ல ஓரிரு நாட்களாக என மீனவர்கள் தெரிவித்தனர்.

    • நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்கபடுகிறது.
    • இந்த கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் என 150 இருக்கைகள் உள்ளன.

    நாகப்பட்டினம்:

    இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23-ந்தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, ஆகஸ்ட் 16 ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

    காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 12 மணிக்கும், மறுமார்க்கமாக அதேநாள், மதியம் 2 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்திற்கு கப்பல் வந்தடையும்.

    இந்நிலையில், நாகை - இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவைக்கு போதிய பயணிகள் வருகை இல்லாததால் செப்டம்பர் 15ம் தேதி வரையில், வாரத்திற்கு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிவகங்கை கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் என மொத்தம் 150 இருக்கைகள் உள்ளன. ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ரூ.7 ஆயிரத்து 500 கட்டணமும், சாதா இருக்கைக்கு ஜி.எஸ்.டி.யுடன் ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பலில் ஒரு நபர் 25 கிலோ எடை கொண்ட லக்கேஜ் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கப்பலில் சாம்பார் சாதம், தயிர் சாதம், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • முதல்வர் மருந்தகம் மாநிலம் முழுவதும் 1,000 திறக்கப்பட உள்ளது.
    • விக்கிரவாண்டி தேர்தலை பார்த்து பயந்தவர்கள் அதிமுகவினர்.

    நாகப்பட்டினம்:

    தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசு, ஸ்டிக்கர் ஒட்டி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறார்கள் என்று விமர்சித்துள்ளார். 'ஸ்டிக்கர் பாய்ஸ்' என்று பெயர் பெற்றவர்கள் அதிமுகவினர்.

    அம்மா மருந்தகத்தை முதல்வர் மருந்தகம் என்ற பெயர் மாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். அம்மா மருந்தகம் வேறு, முதல்வர் மருந்தகம் வேறு. அம்மா மருந்தகம் கூட்டுறவு துறையோடு இயங்கியது. மாநிலம் முழுவதும் அம்மா மருந்தகம் 380 தான் இருந்தது.

    ஆனால் முதல்வர் மருந்தகம் மாநிலம் முழுவதும் 1,000 திறக்கப்பட உள்ளது. முதல்வர் மருந்தகம் மூலம் அனைத்து வகையான மருந்துகளும் கிடைப்பதுடன், வேலையில்லா திண்டாட்டமும் குறையும்.

    மேலும் அம்மா சிமெண்டு் திட்டத்தை வலிமை சிமெண்டு திட்டமாக மாற்றி விட்டதாகவும் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்திலேயே அம்மா சிமெண்ட் திட்டம் கைவிடப்பட்டது. ஏழை மக்களுக்கு பயன்பெறும் வகையில் வலிமை சிமெண்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் அதிமுக 3, 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதிமுகவில் உள்ளவர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவதை தவிர்க்கவே ஜெயக்குமார் இதுமாதிரி பேசி வருகிறார்.

    விக்கிரவாண்டி தேர்தலை பார்த்து பயந்தவர்கள் அதிமுகவினர். திமுக எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. கவர்னரை தன் பக்கம் வைத்துக்கொள்ள தேநீர் விருந்தில் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    திமுகவினருக்கு ஒருபோதும் பாஜகவின் துணை தேவையில்லை. அதிமுகவுக்கு வேண்டுமானால் பாஜக எஜமானர்களாக இருக்கலாம். இந்தியாவிலேயே பாஜகவை எதிர்ப்பதில் முன்னோடியாக இருந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அந்தமானில் இருந்து 'சிவகங்கை கப்பல்' நாகை துறைமுகத்திற்கு கடந்த வாரம் வந்தது.
    • நாகையில் இருந்து இன்று காலை புறப்பட்ட பயணிகள் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 2 மணிக்கு சென்ற டையும்.

    நாகப்பட்டினம்:

    இந்தியா-இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக அதே மாதம் 23-ந்தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக அந்தமானில் இருந்து 'சிவகங்கை கப்பல்' நாகை துறைமுகத்திற்கு கடந்த வாரம் வந்தது. இந்த கப்பலுக்கான சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

    இந்த சிவகங்கை பயணிகள் கப்பலை புதுச்சேரி மந்திரி நமச்சிவாயம், நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், செல்வராஜ் எம்.பி. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, 44 பயணிகளுடன் நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்பட்டது.

    நாகையில் இருந்து இன்று காலை புறப்பட்ட பயணிகள் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 2 மணிக்கு சென்ற டையும். மறுமார்க்கமாக நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு இலங்கை காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு நாகை துறைமுகம் வந்தடையும்.

    பின்னர், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து புறப்படும் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 12 மணிக்கும், மறுமார்க்கமாக அதேநாள், மதியம் 2 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்திற்கு கப்பல் வந்தடையும்.

    இந்த சிவகங்கை கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் என மொத்தம் 150 இருக்கைகள் உள்ளன. ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ரூ.7 ஆயிரத்து 500 கட்டணமும், சாதா இருக்கைக்கு ஜி.எஸ்.டி.யுடன் ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கப்பலில் ஒரு நபர் 25 கிலோ எடை கொண்ட லக்கேஜ் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கப்பலில் சாம்பார் சாதம், தயிர் சாதம், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது.

    பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. *

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் சேவை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
    • அந்தமானில் இருந்து சிவகங்கை கப்பல் கடந்த வாரம் நாகை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 -ம் தேதி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.

    ஆனால் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணம் காட்டி சேவை தொடங்கிய சில நாட்களிலேயே கப்பல் சேவை நிறுத்தப்பட்டதால் இரு நாட்டு சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் சேவை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு அந்தமானில் இருந்து சிவகங்கை கப்பல் கடந்த வாரம் நாகை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இலங்கைக்கு கப்பல் சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் வரும் 16 -ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்க இருப்பதாக தனியார் கப்பல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    மேலும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இன்று நள்ளிரவு முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கப்பல் சேவை தொடங்க இருப்பதால் இருநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தனிப்படை போலீசார் பிரதாபராமபுரம் அருகே அறிவழகனை கைது செய்து விசாரித்தனர்.
    • அறிவழகனை சிறையில் அடைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே சம்பவத்தன்று தனிப்படை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது நாகை -திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை மேலப்பிடாகை அருகே வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட 3 சொகுசு கார்கள் தொடர்ச்சியாக வேகமாக வந்ததை மறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த கார்களில் 200 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது குறித்து காரில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி (வயது 41), அவரது தம்பி சிவமூர்த்தி (38), திருப்பூர் மாவட்டம் இடுவை திருமலைகார்டனை சேர்ந்த மணிராஜ் (36), புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி கவுதம் (36) என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கார் மூலமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை ஆந்திரா வழியாக வேதராண்யம் கொண்டு சென்று படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

    இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தெட்சிணாமூர்த்தி உள்பட 4 பேரையும் கைது செய்து 200 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட 3 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வேதாரண்யம் கோடியக்காடு பகுதியை சேர்ந்த அறிவழகன் (60) என்பவருக்கு கஞ்சா கடத்தில் வழக்கில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. அறிவழகன் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதும், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவராக உள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் பிரதாபராமபுரம் அருகே அறிவழகனை கைது செய்து விசாரித்தனர். அதில் அறிவழகன் கஞ்சா, தங்கம் உள்ளிட்ட கடத்தலில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அறிவழகனை சிறையில் அடைத்தனர்.

    • படகை ஏற்றி வலையை சேதப்படுத்திவிட்டு சென்று விட்டனர்.
    • வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் மீன்பிடி வலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியே வந்த நாகை பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆறுக்காட்டுத்துறை மீனவர்களின் வலையின் மீது விசை படகை ஏற்றி வலையை சேதப்படுத்திவிட்டு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் ஆறுக்காட்டுத்துறை மீனவ்ாகளின் வலையை விசைப்படகு மூலம் சேதப்படுத்திய நாகை மீனவர்களை கண்டித்தும், இழுவை மடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த பைபர் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து, நேற்று முதல் கடலுக்குள் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று தொடர்ந்து 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் சுமார் ரூ.5 லட்சம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறினர்.

    இந்நிலையில் இது தொடர்பாக இன்று மீன்வளத்துறை அதிகாரிகள் ஆறுக்காட்டுதுறை மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்த தொடர் வேலை நிறுத்தத்தால் அப்பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    • இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அருகே வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் செருதூர் பாலத்தடி அருகில் இறால் பண்ணை வைத்துள்ளார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று இவர் வழக்கம்போல் இறால் பண்ணையை வந்து பார்த்துள்ளார். அப்போது பண்ணையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பாாத்துள்ளார். அப்போது பண்ணையில் இருந்த ஏரேட்டர் மோட்டார், ஜெனரேட்டர் பேட்டரி, ஏரேட்டர் கேபிள், போக்கஸ் லைட் உள்ளிட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    உடனடியாக இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கீழையூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து இறால் பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில்:-

    இந்த பகுதிகளில் உள்ள இறால் பண்ணைகளில் தொடர் திருட்டு நடைபெறுவதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதனை தடுக்கும் பொருட்டு இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

    மேலும், இப்பகுதியில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே சிறுதலைக்காடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 50). மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் இவரும், அதே ஊரை சேர்ந்த லெட்சுமணன் (30), ராஜதுரை (28), ராமநாதன் (38), புகழ்ராஜ் (28), ராம பெருமாள் (26), ராமன் (26) மற்றும் பன்னாள் சக்கரம் பேட்டையை சேர்ந்த பாக்கிய ராஜ் (26) ஆகிய 8 மீனவர்களும், ராமானுஜத்திற்கு சொந்தமான படகில் நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    அப்போது அனைவரும் சிறுதலைக்காட்டு கிராமத்திற்கு தெற்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்த நிலையில் இருந்த படகு ஒன்று அவர்களது வலையில் சிக்கியது. அதனை கண்ட அவர்கள் உடனடியாக தங்களது படகில் கட்டி இழுத்து நள்ளிரவு கரைக்கு வந்தனர்.

    பின்னர், இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படகை கைப்பற்றி அதில் சோதனை செய்தனர். அப்போது படகில் TRB-A-1260 JFN என்றும், இரு பக்கத்திலும் Y.S.S merini என்றும் எழுதப் பட்டுள்ளது. இந்த படகு நீலம், கருப்பு, வெள்ளை நிறத்தில் இருந்தது. ஆனால் இந்த படகில் என்ஜின் மற்றும் வலைகள் ஏதும் இல்லை.

    படகில் எழுதப்பட்ட படகின் எண் மற்றும் அதன் தோற்றத்தை வைத்து, அது இலங்கை நாட்டை சேர்ந்த படகு என்றும், இது கரை ஒரத்தில் மீன் பிடிக்கும் படகு என்றும் தெரிய வந்துள்ளது. இந்த படகு கள்ளக்கடத்தலுக்கு பயன்படுத்தியதா? வேறு யாரும் இலங்கையில் இருந்து வந்தார்களா? அல்லது யாழ்ப்பாணம் பகுதியில் கரையில் இருந்த படகு காற்றின் வேகத்தால் இங்கு வந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×