என் மலர்
கன்னியாகுமரி
- மழை மேகத்தால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் கடந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தெளிவாக தெரிந்தது.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதன் காரணமாக இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல் ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.
இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தநிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர்.
கன்னியாகுமரிக்கும் இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
மழை மேகத்தால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் கடந்த 3 நாட்களுக்கு பிறகு இன்று தெளிவாக தெரிந்தது. சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.
மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம் பாரதமாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், கொட்டாரம் ராமர் கோவில், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் கன்னியாகுமரியில் இன்று சபரிமலை சீசன் களைகட்டியது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்ததால் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- முதல்வர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்.
- மீனவர் நலனில் எப்போதும் உறுதியாக இருப்பவர் முதல்வர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக மீனவ தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. பொது கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது:-
மீனவ மக்களுக்காக ராமநாதபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க மீனவர் மாநாடு நடத்தியவர் முதல்வர். சென்னையில் வெள்ளம் வந்த போது ஒரே நாளில் வெள்ளத்தை அகற்றி மின்சாரம் வழங்கியவர் நமது முதல்வரின் ஆட்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தி தந்தவர் முதல்வர் தான். மீனவர் நலனில் எப்போதும் உறுதியாக இருப்பவர் முதல்வர் தான் அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளார்.
சாதி மதமின்றி இயங்கும் ஒரு இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆனாலும் சரி, திராவிட முன்னேற்ற கழகமானலும் சரி திராவிட கட்சிகள் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று நிர்பந்தம் உள்ளது. முதல்வர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்.
மீனவர் மீது அக்கறை உள்ளவர்கள் என இந்தியாவில் வேண்டுமானால் காங்கிரஸ் கட்சி என கூறலாம் ஆனால் தமிழகத்தில் தி.மு.க. தான் என்பதனை நீங்கள் உணர வேண்டும். மத்திய அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும். ஆனால் 1 ரூபாய்க்கு 29 பைசா தரும் மத்திய அரசு நமக்கு வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும் போது,
`பா.ஜ.க. கடல் தாமரை மாநாடு நடத்தி மோடி ஆட்சிக்கு வந்தால், மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, படகுகள் இலங்கை அரசால் சிறை பிடிக்கப்படாது, அதையும் மீறி பிடித்தாலே பாதுகாப்புக்கு இந்திய ராணுவம் வந்து நிற்கும் என்றார்கள்.
ஆனால் 10 ஆண்டுகளாக வாக்குறுதியை காட்டில் பறக்கவிட்டு விட்டார்கள். மீனவர் தினம் கொண்டாடும் இந்நாளில் ஒரு பக்கம் கண்ணீரும் கம்பலையுமாக மீனவர்கள் உள்ளார்கள். மீனவர்கள் தான் பூர்வ குடிகள், மண்ணின் மக்கள்.

மீனவர்களை ஓரளவு தாங்கி பிடிப்பது தமிழகம் தான். ஆனால் இது போதாது அதிக பிரதிநிதித்துவம் வேண்டும். மீனவர்கள் விவகாரத்தில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவது தொடர்கிறது' என்றார்.
விழாவில் மேயர் மகேஷ், மீனவர் அணி மாநில செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பிஷப் நசரேன் சூசை, டன்ஸ்டன், நிக்சன், மற்றும் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது.
- திருவனந்தபுரம் மெமு ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.
- இரணியல் ரெயில் நிலைய மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும்.
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே துறை பொது மேலாளர் மற்றும் முதன்மை செயல் மேலாளர் ஆகியோரை சந்தித்து கன்னியாகுமரி மக்கள் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-
வேளாங்கண்ணிக்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் நாகர்கோவில்- திருவனந்தபுரம் மெமு ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.
இரணியல் ரெயில் நிலையம் மேம்பாலத்தில் போக்குவரத்து ஒழுங்குபடுத்த அந்த மேம்பாலத்தின் கட்டமைப்பை திருத்தி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக் கூட்டம்.
- தேங்காபட்டணம் துறைமுகம் சென்று பார்வையிட்ட விஜய்வசந்த்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகை தந்தார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இணைந்து கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இடையில் கட்டப்பட்டு வரும் கண்ணாடி பாலத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் தேங்காபட்டணம் துறைமுகத்திற்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளையும் மேற்பார்வையிட்டனர்.

இதில் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி தலைவர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்கு குழு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கத்தில் செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்றது. அதிலும் விஜய்வசந்த் எம்பி கலந்துகொண்டார்.

ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈ.சுந்தரவதனம் , மாநகர மேயர்மகேஷ், பொதுக்கணக்குகுழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், சேகர், முகமது ஷாநவாஸ், ஐயப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், Dr. தாரகைகத்பட், தளவாய்சுந்தரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், மாவட்ட வன அலுவலர், மாநகர ஆணையாளர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- அந்த காலங்களில் விவேகானந்தர் பாறைக்கு மட்டுமே படகு போக்குவரத்து இயக்கப்படும்.
- கூண்டு பாலத்திற்கான ஆர்ச் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.
கன்னியாகுமரி:
உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் பாறை மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.
இவற்றை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். ஆனால் கடல் சீதோஷ்ண நிலை மாறுபடும்போது, திருவள்ளுவர் சிலை பகுதிக்கு படகுகள் இயக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
அந்த காலங்களில் விவேகானந்தர் பாறைக்கு மட்டுமே படகு போக்குவரத்து இயக்கப்படும். அங்கிருந்தே சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்க்கும் நிலை உள்ளது. இதனை மாற்ற விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ரூ.37 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கும் மேல் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு வல்லுனர்கள் கூண்டு பாலம் அமைப்பதற்கான தூண்கள் நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
கூண்டு பாலம் பகுதியில் அமைக்கப்படும் ஆர்ச், புதுச்சேரியில் உருவாக்கப்பட்டு 110 பாகங்களாக கன்னியாகுமரி கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து பாலம் பணிகள் வேகம் பிடிக்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பணிகளை அமைச்சர்கள், சட்டமன்ற குழுக்கள் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளது.
133 அடி உயர திருவள்ளுவர் சிலை 2000-மாவது ஆண்டு ஜனவரி 1-ந் தேதி திறக்கப்பட்டது. அதன் 25-வது ஆண்டு வெள்ளிவிழா, அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 1-ந் தேதி வருகிறது. அதனை சிறப்பாக கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந் தேதி மற்றும் ஜனவரி 1-ந் தேதி விழா நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.
இதனை முன்னிட்டு தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கூண்டு பாலத்திற்கான ஆர்ச் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. தொடர்ந்து தரைதளம் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலு இன்று கன்னியாகுமரி வருகிறார். அவர், திருவள்ளுவர் சிலையில் நடைபெறும் கூண்டுபால பணிகளை ஆய்வு செய்கிறார்.
- கோவிலுக்கு வந்த பின்னணி பாடகியும், டைரக்டரும் ஐஸ்வர்யாவை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
- ஐஸ்வர்யா திடீரென்று தாணுமாலய சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புகழ்பெற்ற தாணுமாலய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வந்த பின்னணி பாடகியும், டைரக்டரும் ஐஸ்வர்யாவை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதையடுத்து, கோவில் உள்ள தாணுமாலயன் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, கொன்றையடி சன்னதி, கோவில் சுற்றுப்பிரகாரங்களில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தசினமம் செய்தார்.
தொடர்ந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா திடீரென்று சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆட்சியில் பங்கு என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.
- விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது அவரது தார்மீக உரிமையாகும்.
நாகர்கோவில்:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நாகர்கோவில் டதி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி படத்திற்கும் மரியாதை செலுத்தினார்.
பின்பு செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக நாடுகள் எல்லாம் இந்தியாவை உற்று நோக்க பார்க்க வைத்த இரும்பு பெண்மணி மாபெரும் தலைவர், இந்திய தேசத்தை தலைநிமிர செய்த இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழாவை குமரி மாவட்டத்தில் கொண்டாடுவதில் பெருமையாக கருதுகிறோம் . பயங்கரவாதத்தை ஒழிக்க அரும்பாடுபட்டவர் இந்திரா காந்தி. எனவே பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளோம். குமரி மாவட்டம் காங்கிரசின் இதயமாக உள்ளது.
ஆட்சியில் பங்கு என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை தான் முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சி தேசிய கட்சி ஆகும். 2004 முதல் 2014 வரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் நாங்கள் பங்கு கொடுத்துள்ளோம். இதுகாங்கிரஸ் பார்முலா. கிராம கமிட்டி அமைப்பதற்காக அந்த திட்டத்தை முன்னோக்கி எடுத்துச்செல்கிறோம். அதுதான் தலையாய கடமையாக பணி செய்து வருகிறோம்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது அவரது தார்மீக உரிமையாகும். அரசியலமைப்பு சட்டத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், இயக்கம் ஆரம்பிக்கலாம். அவரது கருத்தை சொல்லலாம்.
பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் வரை மணிப்பூரில் கலவரம் இருந்து கொண்டுதான் இருக்கும். எல்லா மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதாவும் அமைதியை சீர்குலைத்து வருகிறது. பிரதமர் பல்வேறு நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார். ஏன் மணிப்பூருக்கு மட்டும் செல்லவில்லை. இது மர்மமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பர்ட், மாவட்ட தலைவர்கள் நவீன்குமார், கே.டி.உதயம், பினுலால்சிங், ஐ.என்.டி.யு.சி.தலைவர் சிவக்குமார், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் டைசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- காமராஜர் படிப்பகத்தில் சிலை நிறுவ கோரிக்கை வைத்த நிர்வாகிகள்.
- தனது சொந்த செலவிலேயே காமராஜர் சிலையை நிறுவினார்.
நாகர்கோவில் பள்ளிவிளையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் படிப்பகத்தில் பெருந்தலைவரின் சிலை நிறுவ வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியினர் மற்றும் படிப்பக நிர்வாகிகள் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி யிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை நிறைவேறும் விதமாக விஜய்வசந்த் எம்பி தனது சொந்த செலவிலேயே காமராஜர் வெண்கல சிலையை நிறுவி அதனை அவரது தலைமையிலேயே திறந்து வைத்தார்.
இந்த விழாவில் நாகர்கோவில் மாநகர மேயர் ரெ. மகேஷ், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவீன் குமார், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், காங்கிரஸ் கட்சியின் மண்டல தலைவர் செல்வன், மாமன்ற உறுப்பினர் அனுஷா பிரைட் மற்றும் காங்கிரஸ் திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பரைகோடு அய்யா பதியில் இருந்து விஜய் வசந்த் பாதயாத்திரை
- பூஜித குரு பால பிரஜாதிபதி அடிகளார் தலைமையில் பாதயாத்திரை.
தக்கலை அருகே உள்ள பரைகோடு அய்யா பதியில் அய்யா வைகுண்டசாமி சாமிதோப்பு முதல் திருவனந்தபுரம் வரை கைது செய்து கொண்டு செல்லபட்டதை நினைவு கூரும் வகையில் பூஜித குரு பால பிரஜாதிபதி அடிகளார் தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றது.

இந்த பாதயாத்திரையில் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி பாதயாத்திரையில் கலந்துகொண்டு அங்குள்ள மக்களுக்கு அய்யா வைகுண்டர் பற்றி பேசினார்.
- மறுநாள் ஜெயன் கடைக்கு சென்றபோது ராஜாசிங் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
- ராஜாசிங் கம்பியை எடுத்து வந்து ஜெயனை சரமாரியாக தாக்கினார்
இரணியல்:
இரணியல் அருகே கண்டன்விளை பாலவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயன் (வயது 44), கட்டிட தொழிலாளி. கண்டன்விளையை சேர்ந்தவர் ராஜாசிங் (32). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த மாதம் 6-ந்தேதி அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் வைத்து தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மறுநாள் ஜெயன் கடைக்கு சென்றபோது ராஜாசிங் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
ஜெயன் மீது ராஜாசிங் இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஜெயன் கட்டிட வேலைக்காக கேரளாவுக்கு சென்றார். வேலைக்கு சென்ற ஜெயன் தற்பொழுது ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று ஜெயன் கண்டன்விளை மீன் மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா சிங், ஜெயனிடம் தகராறில் ஈடுபட்டார். அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வீட்டிற்கு சென்ற ராஜாசிங் கம்பியை எடுத்து வந்து ஜெயனை சரமாரியாக தாக்கினார். இதில் ஜெயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே ஜெயன் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து ராஜாசிங் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த ஜெயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜெயனின் மனைவி ஜெமிலா இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜாசிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை ராஜாசிங்கை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை இரணியல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ஜெயனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கே திரண்டு உள்ளனர். கொலை செய்யப்பட்ட ஜெயனுக்கு ஜெமிலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாசிங் போலீசாரிடம் கூறுகையில், நானும் கொலை செய்யப்பட்ட ஜெயனும் நண்பர்கள். நாங்கள் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவது வழக்கம். கடந்த மாதம் மது அருந்தி கொண்டிருந்தபோது எனது தாயாரை பற்றி ஜெயன் அவதூறாக பேசினார். இதனால் எனக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவருடன் இருந்த நட்பை துண்டித்தேன். தொடர்ந்து எனது தாயாரை அவதூறாக பேசி வந்தார். நேற்று ஜெயன் அவதூறாக பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொன்றேன் என்றார்.
- மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
- மழையின் காரணமாக ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இன்று அதிகாலை முதலே மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது.
களியக்காவிளை, மார்த்தாண்டம், தக்கலை, இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை 3 மணி முதல் மழை பெய்து வருகிறது. காலையில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது.

நாகர்கோவிலில் இன்று காலை முதலே பெய்த மழையின் காரணமாக பள்ளி செல்லச்சென்ற மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். குடை பிடித்தவாறு மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர்.
மலையோர கிராமங்களான தச்சமலை, கோதையாறு, குற்றியாறு, மூக்கறைகல் பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது. மலையோர கிராமங்களில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு இன்றும் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் காலை முதலே சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. கடற்கரை பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.
அஞ்சு கிராமம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை மற்றும் மாவட்டம் முழுவதும் மழை நீடித்து வருகிறது.
அதிகாலை முதலே பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் பாதிக்கப்பட்டனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மழைக் கோர்ட்டை அணிந்தவாறு அலுவலகங்களுக்கு சென்றனர்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் மழை கொட்டியது. சிற்றாறு-1 அதிகபட்சமாக 46.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
அணைகளில் இருந்து எந்த நேரத்தில் வேண்டு மானாலும் உபரிநீர் திறக்கப்படலாம் என்பதால் கோதை ஆறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழைக்கு நேற்று மாவட்டம் முழுவதும் 3 வீடுகள் இடிந்து விழுந் துள்ளது. கீரிப்பாறை, தடிக்காரங்கோணம், குலசேகரம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
ரப்பர் மரங்களில் கட்டப் பட்டுள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப் பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.69 அடியாக இருந்தது. அணைக்கு 519 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 501 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65.68 அடியாக உள்ளது. அணைக்கு 309 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 510 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாம்பழத்துறையாறு, முக்கூடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.
- கண்ணாடி பாலம் அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
- கண்ணாடி இழை பாலம் ரூ. 37 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி கடலின் நடுவே உள்ள பாறைகளில் சுவாமி விவேகானந்தர் நினைவிடம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது. இங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் நினைவிடத்திற்கும் இடையே பாதை ஏற்படுத்தும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
அதன்படி திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் கண்ணாடி இழை பாலம் ரூ. 37 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் இப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடல் சீற்றத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் கடின தன்மை கொண்டதாக கண்ணாடி இழை பாலம் அமைக்கப்படுகிறது.
இதற்காகத் திருவள்ளுவர் சிலை அருகேயும், விவேகானந்தர் பாறையிலும் கம்பிகள் பொருத்தப்பட்டு காங்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கண்ணாடி பாலத்தின் கட்டுமான பணிகளை நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, முன்னாள் அமைச்சரும், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜ், நாகர்கோயில் மாநகராட்சி மேயர் ஆர்.மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.






