என் மலர்
கன்னியாகுமரி
- திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.
- கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறைகளில் விவேகா னந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.
இதில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2000-வது ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
வருகிற 1-ந் தேதி இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா, 30-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து, விழா 2 நாட்களாக மாற்றப்பட்டு 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நகர் முழுவதும் கொடி, தோரணங்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளுவர் சில வெள்ளி விழாவை முன்னிட்டு இன்று கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி கடலில் படகு மூலம் திருவள்ளுவர் சிலையை அடைந்தார். அங்கு, திருவள்ளுவரின் உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிறகு, திருவள்ளுவர் சிலை அருகே Statue of wisdom தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைதொடர்ந்து, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர் பாபு, எம்பி டி.ஆர்.பாலு, எம்.பி கனிமொழி உள்ளிட்டோரும் இருந்தனர்.
பின்னர் அனைவரும், கண்ணாடி இழை பாலத்தின் மீது நடந்து சென்றனர்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.
- சுகி சிவம் தலைமையிலான பட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறைகளில் விவேகா னந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.
இதில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2000-வது ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போ தைய முதல்-அமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
வருகிற 1-ந் தேதி இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார்.
அவர் மாலை 4.30 மணிக்கு பூம்புகார் படகு குழாமுக்கு சென்று அங்கு அமைக்கப் பட்டுள்ள திருவள்ளுவரின் மணல் சிற்பத்தினை பார்வையிடுகிறார். அதன் பிறகு படகு மூலமாக சென்று திருவள்ளுவர் சிலையை பார்க்கிறார்.
தொடர்ந்து திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறையை இணைத்து ரூ.37 கோடியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அதன் பிறகு தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் அவர், திருவள்ளுவர் பாதமலருக்கு மலர் அஞ்சலியும் செலுத்துகிறார். தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி விளக்கு மற்றும் வீடியோ படக்காட்சியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். ஏறத்தாழ 20 நிமிடங்கள் அக்காட்சி நடைபெற இருக்கிறது.
தொடர்ந்து மேடைக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விழாவில் நடைபெறும் சுகி சிவம் தலைமையிலான பட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறார். திருக்குறளால் அதிகம் நன்மை பயப்பது தனி மனி தருக்கா? சமுதாயத்திற்கா? என்ற தலைப்பில் இந்த பட்டிமன்றம் நடக்கிறது.
தனி மனிதருக்கே என்ற தலைப்பில் ராஜாராம், மோகனசுந்தரம், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் பேசு கின்றனர். சமுதாயத்திற்கே என்ற தலைப்பில் புலவர் சண்முக வேல், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ராஜா ஆகியோர் பேசுகின்றனர்.
மறுநாள் (31-ந்தேதி) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளி விழா பந்தலுக்கு வருகிறார். விழாவில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரை வெளியிட்டு அவர் பேசுகிறார். இந்த விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைர முத்து உள்ளிட்டோர் பேசு கின்றனர்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்ன ரசு தலைமையில் கருத்த ரங்கம் நடைபெறுகிறது. சமகாலத்தில் வள்ளுவர் என்ற தலைப்பில் பேரா சிரியர் கருணானந்தன் பேசுகிறார். திருக்குறளும், சங்க இலக்கியமும் என்ற தலைப்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் பேசுகிறார்.
வள்ளுவம் போற்றும் சமய நல்லிணக்கம் என்ற தலைப்பில் புலவர் செந்தலை நாம் கவுதமன், திருக்குறள் போற்றும் மகளிர் மாண்பு என்ற தலைப்பில் வக்கீல் அருள்மொழி, வள்ளுவம் காட்டும் அறம் என்ற தலைப்பில் கரு. பழனி யப்பன், திருக்குறளில் இசை நுணுக்கம் என்ற தலைப்பில் பேராசிரியர் விஜயசுந்தரி ஆகியோர் பேசுகின்ற னர்.
மாலையில் அமைச்சர் பெரியசாமி திருக்குறள் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்து நினைவு பரிசுகளை வழங்குகிறார். முடிவில் மாவட்ட கலெக்டர் அழகு மீனா நன்றி கூறுகிறார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா, 30-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து, விழா 2 நாட்களாக மாற்றப்பட்டு 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நகர் முழுவதும் கொடி, தோரணங்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- முன்விரோதத்தில் தான் மோகனை கத்தியால் குத்தி ஷாஜி கொலை செய்துள்ளார்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி ஒழுகினசேரி கன்னிமார் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 54), சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மதியம் வடசேரி எம்.எஸ்.ரோடு பகுதியில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு லோடுமேன் நாவல்காடு ஷாஜி (28) அங்கு வந்தார். அவர், மோகனிடம் ஏதோ பேச அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஷாஜி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோகனின் வயிறு, மார்பு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த பலரும் அலறியடித்து ஓடினர். இதற்கிடையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்த மோகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு லலித்குமார், வடசேரி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.
அவர்கள் மோகன் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கொலை செயலில் ஈடுபட்டு விட்டு தப்பி ஓடிய ஷாஜி, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்ததாக குறிப்பிட்டார்.
ஆனால் அவரது பதிலில் சந்தேகம் அடைந்த போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு துருவித் துருவி விசாரணை நடத்தினர். இதில் பெண் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவ தாவது:-
கொலை செய்யப்பட்ட மோகனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றில் இறந்து விட்டார். மகள், நெல்லையில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மகன் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் மகனுடன் வசித்து வந்த மோகனுக்கு, அதே பகுதியை சேர்ந்த பர்னிச்சர் கடையில் வேலை பார்க்கும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்தப் பெண்ணிற்கு மோகன், பல்வேறு உதவிகளும் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பர்னிச்சர் கடையின் அருகே உள்ள இரும்புக் கடையில் லோடு மேனாக வேலை செய்த ஷாஜியுடன் அந்தப் பெண்ணிற்கு தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனை மோகன் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண் ஷாஜியிடம் தெரிவித்துள்ளார். அவர் மோகனிடம் சென்று பேசியதில் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் தான் நேற்று மோகனை கத்தியால் குத்தி ஷாஜி கொலை செய்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது தூண்டுதலின் பேரில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
- பைசல்கான் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தக்கலை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலருடன் இருந்த குமரி மாவட்ட மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தகவலுடன் கூடிய எப்.ஐ.ஆர். வெளியான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கி உள்ளன. சென்னை ஐகோர்ட்டும் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் குமரி மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் வந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெளிமாவட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்று விட்டு திரும்பிய அவர், இயற்கை உபாதை கழிக்க சென்ற போது இந்த சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
தக்கலை சேர்ந்த தொழிலாளிக்கு 2 மகள்கள் உள்ளனர். தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் அவரது இளைய மகள், கைப்பந்து விளையாட்டில் பங்கு பெற்று வந்துள்ளார். கடந்த 25-ந் தேதி இவர், உடற்பயிற்சி ஆசிரியை மற்றும் 14 மாணவிகளுடன் கைப்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்க திருச்சி மாவட்டம் சென்றார்.
போட்டி முடிந்ததும் அவர்கள் இரவு 9 மணியளவில் குமரி மாவட்டம் திரும்பி உள்ளனர். சக மாணவிகள் வீட்டுக்கு புறப்பட்டுச் செல்ல தொழிலாளியின் மகள் மட்டும் தனது தந்தை வருகைக்காக காத்திருந்துள்ளார். அப்போது இயற்கை உபாதையால் அவதிப்பட்ட அவர், அதற்காக இடம் தேடியுள்ளார்.
அந்த நேரத்தில் அங்கு அதேபகுதியை சேர்ந்த பைசல்கான் (வயது 37) என்பவர் வந்துள்ளார். அவர், மாணவியிடம் நைசாக பேசி உதவி செய்வது போல் நடித்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவி கழிவறை சென்று வந்ததும், அவரை வீட்டின் அறையில் அடைத்து வைத்து பைசல்கான் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இந்நிலையில், பைசல்கான் பிடியில் இருந்து தப்பி மாணவி தனது வீட்டிற்கு வந்தார். அவரின் நிலையை பார்த்து பெற்றோர் பதறினர். அப்போது, மாணவி தனக்கு நடந்த பாலியல் கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.
மேலும் பைசல்கான் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.
- தோவாளை தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பூதப்பாண்டி:
பூதப்பாண்டி அருகே பேச்சாங்குளம் பகுதியில் வேம்படிகுளம் உள்ளது. இந்த குளத்தின் இரு கரைகளிலும் சுடுகாடு, இடுகாடு உள்ளது. இதில் சுடுகாடு அரசு கட்டிக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் தனியார் ஒருவர் தென்னந்தோப்பு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த தென்னந்தோப்பிற்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக அவர் தோவாளை தாசில்தாரிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அந்த பகுதியில் சுடுகாடு, இடுகாடு மக்கள் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளார். இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேச்சாங்குளம் பகுதியில் திரண்டனர்.
திடீரென நாகர்கோவில்-இறச்சகுளம் சாலையில் பேச்சாங்குளம் பகுதியில் ஊர் தலைவர் கார்த்திக் தலைமையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறச்சகுளம் ஊராட்சி தலைவர் நீலகண்ட ஜெகதீஷ், துணை தலைவர் மனோ சிவா, மீனவ கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சகாயம், தி.மு.க. தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என்.சங்கர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். காலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நாகர்கோவில் ஏ.டி.எஸ்.பி. லலித்குமார், இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தோவாளை தாசில்தார் கோலப்பன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் போர்டு அகற்றப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட பஸ்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்தும் சீரானது. பின்னர் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டை அதிகாரிகள் அகற்றினர்.
- 400-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.
- தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி:
கடலோர மக்களுக்கு அலைகள் புதிதல்ல. அன்று வந்த அலையையும் சாதாரணமாகவே நினைத்தனர். ஆனால் அந்த அலை ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
ஆம். 2004-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளின் மறுதினத்தை அவ்வளவு எளிதில் தமிழக கடற்கரை வாழ் மக்களால் மறக்க இயலாது. அன்று ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர்.
குமரி மாவட்டத்தில் சுனாமியில் சிக்கி கடலோர கிராமங்களான குளச்சல் , கொட்டில்பாடு, மணக்குடி, பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
பலர் காணாமல் போனார்கள். குளச்சல் பகுதியில் பலியான சுமார் 400-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.

இதேபோன்று மணக்குடி கிராமத்தில் 119 பேரும், கொட்டில்பாடு பகுதியில் 140-க்கும் மேற்பட்டோரும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். அந்த இடங்களில் நினைவு ஸ்தூபிகள் அமைக்ப்பட்டு உள்ளன.
இந்த நினைவு ஸ்தூபியில் ஆண்டுதோறும் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் அன்றைய தினம் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டு வருகிறது. மீனவ மக்களின் மனதில் நீங்காத வடுவாக உள்ள சுனாமி தாக்கி இன்று 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று காலை சுனாமி நினைவு ஸ்தூபிகளில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி திரி வேணி சங்கமம் கடற்கரை யில் அமைந்து உள்ள சுனாமி நினைவு சின்ன த்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு. குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா. மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் ஆகி யோர் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி னார்கள்.
இதில் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணக்குடியில் இன்று காலை 7 மணிக்கு அங்குள்ள புனித அந்தி ரேயா ஆலயத்தில் நினைவு திருப்பலி நடத்தப்பட்டது. ஆலய பங்கு தந்தை அஜன்சார்லஸ் தலைமை யில் நடந்த இந்த திருப்பலி யில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டனர். 119 பேரை அடக்கம் செய்த கல்லறை தோட்டத்திற்கு வந்ததும் அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் இன்று காலை 7 மணி அளவில் சுனாமி காலனியில் இருந்து மவுன ஊர்வலம் பங்குத் தந்தை ராஜ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் 199 பேர் அடக்கம் செய்யப் பட்ட கல்லறைதோட்டத்தில் இறந்தவர்களின் நினை வாக மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் புனித அலெக்ஸ் ஆலயத்தில் நினைவு திருப்பலி நடந்தது. தொடர்ந்து கொட்டில்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும், பூ மாலை அணிவித்தும். அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட ஜவான்களும் கலந்து கொண்டனர்.
கொட்டில் பாடு புனித அலெக்ஸ் ஆலய பங்குத்தந்தை, ராஜ் பிரார்த்தனை செய்தார். குளச்சலில் இன்று இரவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
- தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 27-வது கிறிஸ்துமஸ் விழா நேற்று முன்தினம் அருமனையில் தொடங்கியது. 2-வது நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி மாலை 6 மணிக்கு நெடிய சாலை சந்திப்பிலிருந்து மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்பு, பேண்ட் வாத்தியம், சிங்காரி மேளம், நாசிக் டோல், சிங்கார காவடி, பூக்காவடி, மேஜிக் ஷோ, ஜோக்கர், சிலம்பாட்டம், ஆதிவாசி நிறுத்தம், உலக்கை ஆட்டம், கோலாட்டம், பொம்மலாட்டம், தம்போல, பெல்லி டான்ஸ், பஞ்சாபி டான்ஸ் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியை தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி நெடுங்குளம் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து பார்வையிட்டார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் தலைமையில் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெற்றது.
முழுக்கோடு சேகர ஆயர் ஜான்பெண்டிங் தொடக்க ஜெபம் செய்தார். டாக்டர் பிரியா சாலமன் வரவேற்று பேசினார். கல்வியாளர் ரவி பச்சமுத்து, எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கத்பட், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், அருட்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னாள் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆசி உரை வழங்கினார். இயக்க செயலாளர் ஸ்டீபன் நினைவு பரிசு வழங்கி பேசினார். தொடர்ந்து தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி 'கேக்' வெட்டியும், குழு பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இயேசு கிறிஸ்து நமக்கு கொடுக்கிற நற்செய்தி என்னவென்றால் அன்பு, மதச்சார்பற்ற பண்பு, மனித குலத்திற்கு சேவை செய்கின்ற பண்பு என்பதாகும். காங்கிரஸ் கட்சியும் அந்த மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்கிறது.
நமது விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களும் இந்த மதிப்பீடுகளை தான் போதித்தார்கள். இன்று சில சக்திகள் இந்திய மக்களிடையே இருக்கின்ற அன்பை சிதைக்க பார்க்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் இத்தகைய தீய சக்திகளை எதிர்க்கிறார். அதனால் தான் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை இந்த குமரி மண்ணில் இருந்து தொடங்கினார்.
தமிழ்நாடு, கேரள மாநிலங்களை நான் பாராட்ட விரும்புகிறேன். ஏனென்றால் நீங்கள் இந்த பாசிச சக்திகளை அனுமதிக்கவில்லை. தெலுங்கானா மக்களும் கலை நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களை பின்பற்றி வாழ விரும்புகிறார்கள்.
நாங்கள் ஏழை, எளிய மக்களுக்கு நன்மைகள் செய்கின்றோம் என்றால் அதற்கு முக்கியமான காரணம் நாங்கள்சோனியா காந்தியையும், மல்லிகார்ஜுன கார்கேவின் தலைமையையும் போற்றுகின்றவர்களாக இருக்கின்றோம். இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி வரப் போகிறார்.
மதச்சார்பற்ற அவருடைய சிந்தனையின் கீழ் இந்த நாடு மிகப்பெரிய வளர்ச்சியை காணப் போகிறது. சீனா போன்ற நாடுகளுக்கு இணையான நாடாக அவருடைய தலைமையின் கீழ் இந்தநாடு உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் உள்பட பலர் கலந்து கொண் டனர்.முடிவில் இயக்க தலைவர் திலீப் சிங் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை இயக்கநிர்வாகிகள் ஜோஸ் செல்வன், கென்னத், பிரதாப் சிங், டென்னிஸ், கிளாடிஸ் பிரபு ஜான் கிறிஸ்டோபர், சிங், பிஜின் சிங், சேம் ஜெகன், ஆரோன், புஷ்பராஜ், செல்வகாந்த், அருள், ஜஸ்டின் ஜேம்ஸ் ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- வேர்கிளம்பி சந்திப்பில் நேற்று மாலை வாகனங்கள் திரண்டதால் செல்ல வழியின்றி ஆங்காங்கே நின்றன.
- முந்திச் செல்ல முயன்ற வாகனங்களால், யாரும் நின்ற இடத்தை விட்டு நகர முடியாத அளவிற்கு அந்த பகுதி ஸ்தம்பித்து நின்றது.
நாகர்கோவில்:
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (25-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் கேக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். பண்டிகை கொண்டாட்டத்திற்காக இன்று (செவ்வாய்க்கிழ மை) குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது. பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாகவே மாவட்டம் முழுவதும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும் நிலவி வருகிறது. வேர்கிளம்பி சந்திப்பில் நேற்று மாலை வாகனங்கள் திரண்டதால் செல்ல வழியின்றி ஆங்காங்கே நின்றன.
முந்திச் செல்ல முயன்ற வாகனங்களால், யாரும் நின்ற இடத்தை விட்டு நகர முடியாத அளவிற்கு அந்த பகுதி ஸ்தம்பித்து நின்றது. அப்போது மின்னலாக ஒரு பெண் சாலையில் இறங்கி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் இறங்கினார்.
இங்கும் அங்கும் கைகளை காட்டி வாகனங்களை நிறுத்தியும், போகச்செய்தும் சிறிது நேரத்தில் நெருக்கடி நிலையை சீர்படுத்திய அவரை அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர். ஆண்களும் பெண்களும் வாகனங்களை விட்டு இறங்காமல் காத்து நின்ற போது, வேகமாக செயல்பட்டு போக்குவரத்து நெருக்கடியை தீர்த்தவர் குறித்து விசாரித்த போது, அவர் பெண் போலீஸ் பவானி என தெரிய வந்தது.

ஆனால் அவர் பணிபுரிவது நம் மாவட்டத்தில் அல்ல. கோவையில் பணியாற்றும் அவர், விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். அப்போது வேர்கிளம்பி வந்த அவர், ஸ்தம்பித்து நின்ற வாகனங்களை பார்த்து உடனடியாக களம் இறங்கி நிலைமையை சமாளித்துள்ளார். விடுமுறையிலும் பொதுச்சேவை புரிந்த அவரது செயல்பாடுகள் சமூகவலைதளங்களில் வைரலானதால் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
- வாகனங்களில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.
- வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
களியக்காவிளை:
தமிழக-கேரளா எல்லைப்பகுதியான குமரி மாவட்டம் களியக்காவிளை வழியாக தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் சென்று வருகின்றன.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காலியான சரக்கு வாகன டிரைவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த மாநிலத்தில் இருந்து புழுக்கள் நெளியும் மீன், கோழி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டி செல்லும் நிலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.
அதனை கட்டுப்படுத்த அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் களியக்காவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து ஒரு மினி டெம்போ மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகள் கொண்டு செல்லும் (மனித கழிவு) வாகனம் வேகமாக வந்தது.
அந்த வாகனங்களில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அதனை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாகனங்களை சோதனை செய்தபோது அதில் ஒரு வாகனத்தில் கோழி கழிவுகளும், மற்றொரு வாகனத்தில் செப்டிக் டேங்க் கழிவுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த வாகனங்களின் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த மணிகண்ட தேவா மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வள்ளி முருகன் என்பது தெரியவந்தது. இந்த கோழி மற்றும் செப்டிக் டேங்க் கழிவுகளை கேரள மாநிலத்தில் இருந்து எடுத்து நெல்லை மாவட்டத்தில் கொட்ட கொண்டு சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இரு வாகனங்களின் டிரைவர்கள் 2 பேர் மீதும், வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கேரளாவில் இருந்து குமரிக்கு மறைமுகமாக வாகனங்களில் தொடர்ச்சியாக கழிவுகள் வந்த வண்ணம் இருப்பதால் குமரி மாவட்டம் குப்பை கூடமாக மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளாவில் இருந்து கோழி உள்ளிட்ட கழிவு பொருட்களை குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வந்து கைதானவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு டன் கணக்கில் கேரளா மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. இதனை உடனடியாக கேரளா அதிகாரிகள் அகற்ற வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு கேரளா அதிகாரிகள் மருத்துவ கழிவுகளை கேரளாவுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று கேரளா கழிவு பொருட்களை ஏற்றி கொண்டு குமரி மாவட்டத்தில் கொட்ட வந்த 2 வாகனங்கள் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலும் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் சுற்றுலா தலங்களும் களை கட்டியது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.
அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர். அதன்பிறகு சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலும் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா,சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம் பாரதமாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் சுசீந்திரம் தாணுமாலயன்சாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று சபரிமலை சீசன் மீண்டும் களைகட்டி உள்ளது. இதைத்தொடர்ந்து சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் சுற்றுலா தலங்களும் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- குமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
இதை கொண்டாடும் விதமாக, "மூப்பிலா தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom-ஆக கொண்டாடுவோம்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து ஆண்டுகள் ஆகிறது 25.
மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom-ஆகக் கொண்டாடுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அஸ்வின் என்ற மந்திரச் சொல் எதிரணிகளை நிலை குலைய செய்துள்ளது.
- சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது.
நாகர்கோவில்:
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது சாதனைகளை பாராட்டும் வண்ணம் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை வழங்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2010 ஆண்டு முதல் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரராக விளங்கி வருகிறார் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட், ஒரு நாள், 20-20 என அனைத்து போட்டிகளிலும் இந்தியாவிற்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையான பேட்டிங் வாயிலாகவும் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.
அஸ்வின் என்ற மந்திரச் சொல் எதிரணிகளை நிலை குலைய செய்து இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளது. பல சாதனைகளை படைத்த நம்ம சென்னையை சேர்ந்த அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்ற செய்தி அதிர்ச்சி அளித்தது.
இவ்வளவு திறமை வாய்ந்த வீரர் தனது புகழின் உச்சியில் ஓய்வை அறிவித்தது ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது. சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார்.
இத்தகைய சிறந்த வீரருக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதினை மத்திய அரசு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






