என் மலர்
கோயம்புத்தூர்
- பெட்ரோல் வெடிகுண்டுகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல்
- கைது செய்யப்பட்டவர் மீது 5 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவை:
கோவை செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்கா ரர்களாக பணியாற்றி வரும் செல்வகுமார் மற்றும் பிரசாந்த் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 12.30 மணியளவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். போலீசார் நிற்பதை பார்த்ததும், வாலிபர் அங்கிருந்து வாகனத்தை திருப்பி செல்ல முயன்றார்.
இதை பார்த்ததும் போலீஸ்காரர்கள் 2 பேரும் ஓடி சென்று, அந்த வாலிபரை மடக்கிபிடித்தனர். பின்னர் இந்த நேரத்தில் எங்கு செல்கிறீர்கள். எங்களை பார்த்ததும் ஏன் வாகனத்தை திருப்பினீர்கள் என கேட்டு விசாரித்தனர். அவர் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார்.
இதையடுத்து போலீஸ்காரர்கள், அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.
அப்போது அதில், 2 பெட்ரோல் வெடிகுண்டுகள் இருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான போலீசார், அந்த வாலிபரிடம் இது தொடர்பாக விசாரித்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தார்.
இதையடுத்து போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் சுந்தராபுரம் அடுத்த மைல்கல் பகுதியை சேர்ந்த நாசர் என்பது தெரியவந்தது.
இவர் தெலுங்கு பாளையம் பிரிவு ரோட்டில், அலுவலகம் நடத்தி வரும் பா.ஜ.க பிரமுகரான மணிகண்டன் என்பவரிடம் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மணிகண்டனிடம், நாசர் கடனாக ரூ.5 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மணிகண்டன் பணம் கொடுக்க மறுத்து விட்டார் என கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டன் மீது ஆத்திரம் அடைந்த அவர், அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளார்.
நேற்றிரவு, கரும்புக்கடை ஆசாத் நகரில் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து நாசர் மது அருந்தியதும், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர், மணிகண்டனை பழிவாங்க அவரது அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு, பெட்ரோல் வெடிகுண்டுகளுடன் வந்தபோது போலீஸ் சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து பெட்ரோல் வெடிகுண்டுகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கைதான நாசர் மீது, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, கரும்புக்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த வழக்கு, விஸ்வரூபம் படம் வெளியான போது குனியமுத்தூரில் உள்ள ஒரு தியேட்டரில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கு உள்பட 5 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஆண்டுதோறும் லிங்க பைரவியின் பிரதிஷ்டை தின விழா தைப்பூசத் திருநாளில் கொண்டாடப்படுகிறது.
- நூற்றுக்கணக்கான பெண்கள் பெரிய அளவிலான முளைப்பாரிகளை தலையில் சுமந்து பக்தி பரவசத்துடன் பாதயாத்திரையாக வந்தனர்.
கோவை:
கோவை ஈஷா யோக மையத்திற்கு தைபூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று (11/02/2025) முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.

ஈஷாவில் 'லிங்க பைரவி' கடந்த 2010-ம் ஆண்டு தைபூசத் நாளன்று சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆகையால் ஆண்டுதோறும் லிங்க பைரவியின் பிரதிஷ்டை தின விழா தைப்பூசத் திருநாளில் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் ஈஷா யோக மையத்தில் தைபூசத் திருவிழா மற்றும் லிங்க பைரவி பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, ஈஷாவை சுற்றியுள்ள கிராம மக்கள், பழங்குடியினர் மற்றும் வெளிநாட்டினர் உள்பட நூற்றுக்கணக்கான மக்கள் முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி தேவி திருவுருவத்தை பல்லக்கில் ஏந்தி ஊர்வலமாக ஈஷா யோக மையம் வரை பாத யாத்திரையாக வந்தனர்.

ஆலாந்துறைக்கு அடுத்துள்ள கள்ளிப்பாளையம் முதல் ஈஷா வரையிலான 15 கி.மீ தொலைவிற்கு லிங்க பைரவி திருவுருவத்துடன் நூற்றுக்கணக்கான பெண்கள் பெரிய அளவிலான முளைப்பாரிகளை தலையில் சுமந்து பக்தி பரவசத்துடன் பாதயாத்திரையாக வந்தனர்.

இதனுடன் லிங்க பைரவி தேவிக்கு பக்தர்கள் மேற்கொள்ளும் 'பைரவி சாதனா' எனும் ஆன்மீக செயல்முறையின் நிறைவு நிகழ்ச்சியும், மாலையில் லிங்க பைரவி தேவிக்கு அபிஷேக ஆராதனைகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தேவி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- திருமணம் வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி நடக்கிறது.
- கட்சி பாகுபாடு பாராமல் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
கோவை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய்விகாஸ் திருமணம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி நடக்கிறது.
கோவை ஈச்சனாரி செல்வம் மகாலில் நடைபெற உள்ள இந்த திருமண விழாவுக்கான அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், அவரது குடும்பத்தினரும் நேரில் சென்று வழங்கி வருகிறார்கள்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை எஸ்.பி.வேலுமணி வழங்கி வருகிறார்.
இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்தை, எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து தனது மகன் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து அழைப்பிதழை வழங்கினார். எஸ்.பி.வேலுமணியுடன் அவரது அண்ணன் அன்பரசன் மற்றும் குடும்பத்தினர் சென்றிருந்தனர். அவர்களுடன் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் பேசினார்.
இதேபோல கட்சி பாகுபாடு பாராமல் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், நடிகர்-நடிகைகள் என பல்வேறு தரப்பினருக்கும் திருமண அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது மகன் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஏராளமானோர் திருமண விழாவில் பங்கேற்க உள்ளனர். 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக நடைபெற உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்ல திருமண விழா அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- பேருந்தில் சீட்டு பிடிப்பதற்கு கர்ச்சீப் அல்லது பையை போடுவது வழக்கம்.
- பேருந்து இருக்கையில் அரிவாள் இருந்ததை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி - கோபாலபுரம் இடையேயான அரசு பேருந்தில் 2 சீட்களில் இடம்பிடிப்பதற்காக 2 அரிவாள்களை வைத்த நபர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேருந்தில் சீட்டு பிடிப்பதற்கு கர்ச்சீப் அல்லது பையை போடுவது வழக்கம். ஆனால் இருக்கையில் கர்ச்சீப்புக்கு பதில் அரிவாள் இருந்ததை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
5C தடம் எண் கொண்ட பேருந்தில் அரிவாள்கள் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அன்னூர்-அவினாசி சாலையில் உள்ள கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியில் நடக்கிறது.
- விவசாயிகள், மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து அழைத்து செல்கின்றனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை, ஈரோடு, திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவுத்திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டம் ரூ.1,913 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் 3 மாவட்டங்களில் உள்ள 1043 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதில் 93 சதவீத குளங்களுக்கு தண்ணீர் விடப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி நிதி ஒதுக்கியதுடன், திட்டம் செயல்பாட்டுக்கு வர காரணமாக இருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு-அவினாசி திட்ட கூட்டமைப்பு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா இன்று மாலை அன்னூர்-அவினாசி சாலையில் உள்ள கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியில் நடக்கிறது.
இன்று காலை 8 மணிக்கு விழா தொடங்கியது. விழா தொடக்கமாக பாராட்டு விழா நடக்கும் இடத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து கார் மூலமாக இன்று மதியம் கோவை வருகிறார்.
அவருக்கு கோவை மாவட்ட எல்லையில் அ.தி.மு.கவினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
அவர் செல்லும் வழிகளில் எல்லாம் அ.தி.மு.கவினர் திரண்டு வந்து வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்னர் அவர் காரில் விழா நடைபெறும் அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவு பகுதிக்கு செல்கிறார். அங்கு அவரை அத்திக்கடவு-அவினாசி திட்ட கூட்டமைப்பினர், விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்கின்றனர்.
அப்போது அவரை விவசாயிகள், மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து அழைத்து செல்கின்றனர். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி விழா மேடைக்கு செல்கிறார்.
விழா மேடையில் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்திக்கடவு-அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், நன்றி தெரிவித்து அவரை பாராட்டுகின்றனர். அவருக்கு நினைவுப்பரிசும் வழங்கி அவரை கவுரவிக்கின்றனர். இறுதியாக எடப்பாடி பழனிசாமி விழா பேரூரை ஆற்றுகிறார்.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், சூலூர் வி.பி.கந்தசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.
இதுதவிர கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 3 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்களும் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்க உள்ளனர். இதற்காக 3 மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகளும், பொதுமக்களும் என ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் அன்னூர் கஞ்சப்பள்ளிக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
அவர்கள் அங்கு ஏற்படுத்தப்பட்டு இருந்த கார் பார்க்கிங் பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, விழா நடைபெறும் இடத்திற்கு சென்று அங்கு ஒதுக்கப்பட்டு இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் விதமாக விழா மேடையில் பரதநாட்டியம், கம்பத்து ஆட்டம், வள்ளி கும்மி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனை மக்கள் பார்த்து ரசித்தனர்.
முன்னதாக அங்கு விழாவையொட்டி மேடை அமைக்கும் பணிகள் மற்றும் குடிநீர், கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இதற்கான ஏற்பாடுகளை அத்திக்கடவு-அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் செய்துள்ளனர்.
விழாவையொட்டி, அந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு, ஆழியார் அணையை பார்த்து ரசிக்கின்றனர்.
- கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டமும், குளிரும் காணப்படுகிறது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை அருகே கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது.
சுற்றுலா தலமான இந்த நீர்வீழ்ச்சிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
இதன் அருகேயே ஆழியார் அணை, அணை பூங்காவும் உள்ளது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு, ஆழியார் அணையை பார்த்து ரசிக்கின்றனர். பின்னர் அணை பூங்காவில் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசி பொழுதை கழித்து செல்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டமும், குளிரும் காணப்படுகிறது. பகல் நேரங்களில் கடும் வெயில் நிலவுகிறது. மழை குறைந்து விட்டதால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது.
தற்போது அருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது. கவியருவியில் தண்ணீர் குறைந்ததால், கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
விடுமுறை தினமான இன்று, ஏராளமான சுற்றுலா பயணிகள் கவியருக்கு வந்தனர். ஆனால் குளிப்பதற்கு அனுமதியில்லை என்பதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- கோவை துடியலூர் பகுதியில் டெண்ட் அமைத்து தங்கி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- போலீசார் கைதான 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை:
கோவை மரக்கடை சந்திரன் முதல் வீதியை சேர்ந்தவர் ஆய்ஷம்மாள் (வயது75). இவர் மதுக்கரையில் இருந்து பஸ்சில் டவுன்ஹால் வந்தார்.
டவுன்ஹால் வந்ததும் பஸ்சை விட்டு இறங்கிய அவர் தனது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயின் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆய்ஷம்மாள் உக்கடம் போலீசில் புகார் அளித்தார்.
அதேபோல கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வசந்தா(75). இவர் தனது கணவருக்கு உடல் நிலை சரியில்லாததால் சக்தி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்.
சம்பவத்தன்று வசந்தா சரவணம்பட்டி பகுதியில் உள்ள கோவிலுக்கு பஸ்சில் சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது அருகில் இருந்த பெண்கள் அவர் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து வசந்தா சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
இந்த 2 புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகை பறிக்கும் கும்பலை பிடிக்க, உதவி கமிஷனர் சரவணக்குமார் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில், உக்கடம் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, உமா, மஞ்சு மற்றும் போலீசார் கார்த்தி, பூபதி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை போலீசார் கடை வீதி பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக 2 பெண்கள் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த நந்தினி(28) மற்றும் காளிஸ்வரி(28) ஆகியோர் என்பதும், மூதாட்டிகளிடம் நகை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
கைது செய்யப்பட்ட நந்தினி, காளிஸ்வரி இருவரும் அண்ணன் - தம்பியை திருமணம் செய்து உள்ளனர். இவர்கள் பல வருடங்களாகவே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
காளிஸ்வரி தனது 12 வயதிலேயே தனது தாயாருடன் சேர்ந்து திருட தொடங்கி உள்ளார். திருமணம் முடிந்த பின்னர், தனது கணவரின் அண்ணன் மனைவியுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர்கள் இந்தியா முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கியமாக இவர்கள் கோவில் திருவிழாக்களை குறி வைத்து, அங்குள்ள கூட்டநெரிசலை பயன்படுத்தி, பெண்களிடம் நகைகளை திருடி வந்துள்ளனர்.
தாங்கள் திருடிய நகைகளை அந்ததந்த பகுதியிலேயே விற்பனை செய்யும் அவர்கள், அந்த பணத்தை வைத்து பல்வேறு இடங்களுக்கும் இன்ப சுற்றுலா சென்று சொகுசாக வாழ்ந்துள்ளனர். இவர்கள் கோவை துடியலூர் பகுதியில் டெண்ட் அமைத்து தங்கி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் திருடிய பணம் மூலம் தூத்துக்குடியில், பங்களா கட்டி சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறார்கள்.
கோவையில் தற்போது பேரூர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோனியம்மன் கோவில் திருவிழா நடக்க உள்ளதை அறிந்து 2 பேரும் திருடுவதற்காக கோவைக்கு வந்ததும், திருவிழா தொடங்க சில நாட்கள் இருப்பதால் பஸ்களில் பயணித்து மூதாட்டிகளிடம் நகையை பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.
- கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக தனது வியூகப் பயணத்தை கோவையில் இருந்து தான் ஜெயலலிதா தொடங்கினார்.
கோவை:
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஆளும் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க, என அனைத்து கட்சிகளும் தற்போது தேர்தலுக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜயும் 2026 தேர்தலே இலக்கு என்று கூறி அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். இதனால் 2026 தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்படுவதற்கான நிலை உருவாகி உள்ளது.
2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. 2026 தேர்தலில் மீண்டும் அரியணையில் ஏறுவதற்கான திட்டங்களை வகுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். தி.மு.க. ஆட்சியில் நடக்கும் அவலங்களை மக்களிடம் நேரடியாக எடுத்து சொல்லி, மக்களின் குறைகளையும் கேட்டறிவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்க உள்ள எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தையும் விரைவில் தொடங்க உள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தை கொங்கு மண்டலமான கோவையில் இருந்து தொடங்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்கு முக்கிய காரணம், கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக தனது வியூகப் பயணத்தை கோவையில் இருந்து தான் ஜெயலலிதா தொடங்கினார். அவரது வழியை பின்பற்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான தேர்தல் பரப்புரையை கோவையிலிருந்தே தொடங்குகிறார்.
2006-2011 வரை தி.மு.க. ஆட்சியில் நடந்த மின்வெட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு கோவை வ.உ.சி. மைதானத்தில் அ.தி.மு.க. பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவே நேரில் வந்து தலைமை தாங்கி, தி.மு.க. அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இது அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்தது. கோவையில் தொடங்கிய இந்த பயணத்தை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்திய அவர், இதனை தேர்தல் பிரசார பயணமாகவும் மாற்றிக் கொண்டார்.
2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தையும் சென்டிமென்டாக கோவை வ.உ.சி. மைதானத்தில் இருந்தே தொடங்கினார். இப்படி மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களே 2011-ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வருவதற்கு அடித்தளமாக அமைந்தது.
அந்த வகையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 இடங்கள் வீதம், கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்கும் சேர்த்து 20 இடங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இந்த சுற்றுப்பயணத்தின்போது தி.மு.க. ஆட்சியில் நடந்து வரும் அவலங்களை மக்களிடம் எடுத்து கூறுவதுடன், அ.தி.மு.க. ஆட்சியில் கோவைக்கு கொண்டு வரப்பட்ட திட்ட ங்களையும், வளர்ச்சியையும் மக்களிடம் எடுத்து கூறுகிறார். மக்களை சந்திக்கும்போது, அவர்களிடம் குறைகளையும் கேட்டறிய உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக அத்திக்கடவு-அவினாசி கூட்டுக்குடிநீர் திட்டம் அமல்படுத்தியதற்காக நாளை மறுநாள் (9-ந் தேதி) அன்னூரில் அத்திக்கடவு அவினாசி திட்ட கூட்டமைப்பு, விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடக்கிறது.
இந்த பாராட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்த அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.
பாராட்டு விழா முடிந்த சில நாட்களிலேயே எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அ.தி.மு.க. கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
கோவையில் தொடங்கும் புரட்சி தமிழர் பழனிசாமியின் பிரசார பயணம் மாநில அளவில் பேசுபொருளாக மாறும். இது கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஒரு புதிய நம்பிக்கையை விதைக்கும்.
அன்னூர் பாராட்டு விழாவிலும், கோவை சுற்றுப்பயணத்திலும் திரளப்போகும் மக்களின் பெரும் திரட்சியானது மீண்டும் அ.தி.மு.க. அதிகாரத்துக்கு வர முன் அறிவிப்பாக இருக்கும்
2010-ல் கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டம் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியதோ, அதேபோன்று பெரும் தொடக்கத்தை பழனிசாமியின் கோவை சுற்றுப்பயணம் தரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
- கோவையில் இருந்து பேரூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
பேரூர்:
கோவை மாவட்டம் பேரூரில் பிரசித்தி பெற்ற பச்சை நாயகி உடனமர் பட்டீசுவரசுவாமி கோவில் உள்ளது. மேலைச்சிதம்பரம் என அழைக்கப்படும் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நடந்தது.
ராஜகோபுரம், விமான கோபுரங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசப்பட்டு தற்போது கோவில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து வருகிற 10-ந்தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான கும்பாபிஷேக விழா தொடங்கி நடந்து வருகிறது.
இன்று காலை பிள்ளையார் வழிபாடு, புனித தீர்த்தங்கள் மற்றும் அக்னி அழைத்து வருதல் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 4.35 மணிக்கு முதற்கால யாக வேள்வி பூஜை தொடங்குகிறது.
8-ந் தேதி காலை 8.45 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 108 மூலிகை பொருட்கள் ஆகுதி, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, மலர் போற்றுதல் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
9-ந்தேதி காலை 9 மணிக்கு நான்காம் கால வேள்வியும், மாலை 4.15 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி பூஜை, இடைகலை, பிங்கலை பூஜைகளும் நடக்கின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் 10-ந் தேதி காலை 9.05 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடக்கிறது. அன்று காலை 5.45 மணிக்கு ஆறாம் கால வேள்வி பூஜையும், காலை 9.50 மணிக்கு ராஜகோபுரம் அனைத்து விமானங்கள் மற்றும் திருச்சுற்று தெய்வங்கள் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழாவும், 10.05 மணிக்கு பட்டிப்பெருமான், பச்சைநாயகி அம்மன், நடராச பெருமான், தண்டபாணி ஆகிய மூலமூர்த்திகள் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பேரூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது.
- மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சியும் நடைபெற இருக்கிறது.
- ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்" எனும் மாபெரும் கருத்தரங்கம் வரும் 9-ந் தேதி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கினை மண் காப்போம் இயக்கத்துடன் பி.எஸ்.என்.ஏ கல்லூரி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி இணைந்து நடத்துகிறது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கூறியதாவது:-
தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தோடும் விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் மண்வளத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
இதுவரை தமிழகம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாக இயற்கை விவசாய களப்பயிற்சி வழங்கியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு இயற்கை விவசாயம் சார்ந்த வழிகாட்டுதல்களை வாட்ஸ்-அப் குழுக்கள் மூலமாகவும் நேரடியாக அவர்களின் நிலங்களுக்கு சென்றும் வழங்கி வருகிறது. இதன் மூலம் 10,000 விவசாயிகள் இதுவரை இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில், விவசாயிகள் ஒரே ஒரு பயிரை மட்டுமே நம்பி விவசாயம் செய்வதால், போதுமான விளைச்சலும், விளைச்சலுக்கு ஏற்ற விலையும் கிடைக்காமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.
இதற்கு தீர்வாக ஈஷா மண் காப்போம் இயக்கம் "ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்" என்ற மாபெரும் கருத்தரங்கை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைந்து வரும் 9-ந் தேதி நடத்த உள்ளது. இதில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
இக்கருத்தரங்கில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் ஒவ்வொரு நாளும் வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்த தங்களின் அனுபவங்களையும் ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க அரசு சார்பில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்தும் முன்னோடி விவசாயிகள் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
குறிப்பாக ஆடு, மாடு, கோழி, வாத்து மற்றும் பயிர்கள் வளர்த்து வருடத்திற்கு 12 லட்சம் வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயி துளசிதாஸ், சிறுவிடை கோழிகள் மூலம் வருடத்திற்கு 12 லட்சம் வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயி அண்ணாதுரை, மீன் வளர்ப்பில் 30 வருட அனுபவம் கொண்ட சர்மஸ்த், ஆடு வளர்ப்பில் மாதம் 1 லட்சம் ஈட்டும் எம்.ஆர்.கே பண்ணை கௌதம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையில் கீரை சாகுபடி மூலம் சாதித்து வரும் கோவையை சேர்ந்த முன்னோடி விவசாயி கந்தசாமி உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்களை பகிர உள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் நல்ல வருமானம் பெற முடியும் என்பதை விவசாயிகளுக்கு உணர்த்தும் விதமாக ஆடு, மாடு, கோழி, வாத்து, மீன் ஆகியவைகளை உள்ளடக்கிய 'மாதிரி ஒருங்கிணைந்த பண்ணை' ஒன்றை நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரி வளாகத்திலேயே அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதனுடன் விதைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற இருக்கிறது."
இவ்வாறு அவர் கூறினார்.
- மனிதர்கள் உயிரிழப்பதும், காயம் அடைவதும் அடிக்கடி நடக்கிறது.
- கடந்த 5 ஆண்டுகளில் இது அதிகம் எனவும் கூறப்படுகிறது.
கோவை:
தமிழகத்தில் மனித-விலங்கு மோதல் என்பது அடிக்கடி நடந்து வருகிறது. அதிலும் யானைகள் தாக்கி மனிதர்கள் இறக்கும் சம்பவம் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அதுவும் குறிப்பாக மலைப்பகுதிகளான நீலகிரி மற்றும், கோவை மாவட்டங்களில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும், காயம் அடைவதும் அடிக்கடி நடக்கிறது.
நேற்று முன்தினம் கூட ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியான மைக்கேல் (வயது73), என்பவர் பொள்ளாச்சியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் வால்பாறை நோக்கி சுற்றுலாவுக்காக பயணித்து கொண்டிருந்தார்.
வாட்டர் பால்ஸ் அருகே அருகே சென்றபோது சாலையை மறித்து நின்ற காட்டு யானை, இவரை திடீரென மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இப்படி தொடர்ந்து நாளுக்குள் நாள் காட்டு யானைகள் தாக்கி மனிதர்கள் காயம் அடைவதும், சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரை, மனித-வனவிலங்குகள் மோதலில் 80 பேர் இறந்துள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இது அதிகம் எனவும் கூறப்படுகிறது.
கடந்த 2021-22-ம் ஆண்டு 40 பேரும், 2022-23 ம் ஆண்டு 43 பேரும், 2023-24 ம் ஆண்டு 62 பேரும், 2024- 25-ம் ஆண்டு 80 பேரும் மனித-வனவிலங்கு மோதலில் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் மனித-வனவிலங்கு மோதல் என்பது அதிகரித்து காணப்படுறது. 2024-25-ம் ஆண்டில் வனவிலங்குகளால் 259 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மனிதர்கள் 138 பேர் காயம் அடைந்துள்ளனர். 100-க்கும் அதிகமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளது.
மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வனத்துக்கு அருகில் குடியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே வனவிலங்குகள் தாக்குதல் நடக்க முக்கிய காரணமாக இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோவை:
நடிகர் அஜித் நடித்து, மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 11-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. அதற்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து இன்று தான் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.
இதனால் இந்த திரைப்படத்தை ஒரு திருவிழா போன்றே அஜித் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நேற்றிரவே கொண்டாட்டம் களை கட்ட தொடங்கி விட்டது.
கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி உள்ளது.
இதனையொட்டி அதிகாலை முதலே கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள், ரசிகைகள் குவிந்தனர். சில ரசிகர்கள் அஜித்தின் புகைப்படம் பொறித்த டிசர்ட் அணிந்தும் வந்திருந்தனர்.
படம் வெளியானதையொட்டி தியேட்டர் முன்பு, படத்தின் கட்-அவுட்டுகளும் வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த அஜித்தின் படத்திற்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். அங்கு நின்றபடி நடனமும் ஆடினர்.
தியேட்டருக்கு வெளியே சாலையில் பட்டாசுகளையும் வெடித்தனர்.
அந்த வழியாக பஸ் மற்றும் வாகனங்களில் சென்றவர்களுக்கு ரசிகர்கள் இனிப்புகளையும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள தியேட்டர் ஒன்றில் குவிந்த அஜித் ரசிகர்கள் தியேட்டர் வளாகத்தில் ஒன்றாக குவிந்து, மேளதாளங்கள் முழங்க, அஜித்தே. அஜித்தே.. அஜித்தே... என கரகோஷம் எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
அஜித் படத்தின் பாடல்களை இசைக்க விட்டு அதற்கு ஏற்ப நடனமும் ஆடி மகிழ்ந்தனர்.
பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் விடாமுயற்சி படம் வெளியானதையொட்டி அஜித்தின் பிரமாண்ட கட்-அவுட் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த கட்-அவுட்டிற்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். பூக்களை வாங்கி வந்து, அஜித்தின் புகைப்படத்தின் மீதும் மலர்களை தூவி உற்சாகம் அடைந்தனர். தொடர்ந்து அனைவரும் ஒன்றாக கூடி நின்று நடனமாடினர்.
பின்னர் அனைவரும் தியேட்டருக்குள் சென்றனர். சரியாக 9 மணிக்கு திரைப்படம் திரையிடப்பட்டது. 2 வருடங்களுக்கு பிறகு தங்கள் தலைவரை திரையில் பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள், திரையில் அஜித்தின் பெயர் வரும் காட்சியிலும், அஜித் வரும் காட்சியிலும் விசில் அடித்தும், அஜித் அஜித் என கத்தியும் தியேட்டரையே தெறிக்க விட்டனர்.
சில ரசிகர்கள் திரையின் முன்பு ஏறி நின்று துள்ளல் நடனமும் போட்டனர். படம் தொடங்கியதில் இருந்து, படம் முடியும் வரை தொடர்ந்து கரவொலி எழுப்பி கொண்டே இருந்தனர்.
இதேபோன்று துடியலூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் விடாமுயற்சி படம் வெளியாகியது.
அங்கும் ரசிகர்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.






