வனவிலங்குகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் - வெளியான அதிர்ச்சி தகவல்

மனிதர்கள் உயிரிழப்பதும், காயம் அடைவதும் அடிக்கடி நடக்கிறது.கடந்த 5 ஆண்டுகளில் இது அதிகம் எனவும் கூறப்படுகிறது.
வனவிலங்குகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் - வெளியான அதிர்ச்சி தகவல்
Published on

கோவை:

தமிழகத்தில் மனித-விலங்கு மோதல் என்பது அடிக்கடி நடந்து வருகிறது. அதிலும் யானைகள் தாக்கி மனிதர்கள் இறக்கும் சம்பவம் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அதுவும் குறிப்பாக மலைப்பகுதிகளான நீலகிரி மற்றும், கோவை மாவட்டங்களில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும், காயம் அடைவதும் அடிக்கடி நடக்கிறது.

நேற்று முன்தினம் கூட ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியான மைக்கேல் (வயது73), என்பவர் பொள்ளாச்சியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் வால்பாறை நோக்கி சுற்றுலாவுக்காக பயணித்து கொண்டிருந்தார்.

வாட்டர் பால்ஸ் அருகே அருகே சென்றபோது சாலையை மறித்து நின்ற காட்டு யானை, இவரை திடீரென மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இப்படி தொடர்ந்து நாளுக்குள் நாள் காட்டு யானைகள் தாக்கி மனிதர்கள் காயம் அடைவதும், சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் மட்டும் இதுவரை, மனித-வனவிலங்குகள் மோதலில் 80 பேர் இறந்துள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இது அதிகம் எனவும் கூறப்படுகிறது.

கடந்த 2021-22-ம் ஆண்டு 40 பேரும், 2022-23 ம் ஆண்டு 43 பேரும், 2023-24 ம் ஆண்டு 62 பேரும், 2024- 25-ம் ஆண்டு 80 பேரும் மனித-வனவிலங்கு மோதலில் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மனித-வனவிலங்கு மோதல் என்பது அதிகரித்து காணப்படுறது. 2024-25-ம் ஆண்டில் வனவிலங்குகளால் 259 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மனிதர்கள் 138 பேர் காயம் அடைந்துள்ளனர். 100-க்கும் அதிகமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளது.

மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வனத்துக்கு அருகில் குடியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே வனவிலங்குகள் தாக்குதல் நடக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com