என் மலர்
சென்னை
- பல்வேறு தரப்பினரையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவு சென்னை வருகிறார். 2 நாள் பயணமாக சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
இதனை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களும் நட்சத்திர ஓட்டலிலேயே தங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- தமிழ்நாடு 2024-25-ம் ஆண்டில் 9.69 சதவிகிதம் வளர்ச்சி வீதத்துடன் இந்திய அளவில் முதலிடம் பெற்று உள்ளது.
- அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டம் நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு 2024-25-ம் ஆண்டில் 9.69 சதவிகிதம் வளர்ச்சி வீதத்துடன் இந்திய அளவில் முதலிடம் பெற்று உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும்.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 10 லட்சத்து 14 ஆயிரத்து 368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 32 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம், மின்னணு நுகர் பொருட்கள், விளக்குகள் மற்றும் கைபேசி சந்தைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. சாம்சங், சியோமி, மோட்டாரோலா, போட், பேனசானிக், டி.சி.எல். டெக்னாலஜீஸ், ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில், அவர்களின் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.
இந்த நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ் பேஸ் தொழிற் பூங்காவில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ் பேஸ் தொழிற்பூங்காவில் நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு முகவான்மையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம், காஞ்சிபுரம் மற்றும் அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- குமரி அனந்தன் உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
- குமரி அனந்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமம் லோகையா காலனியில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 5 மணியளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
குமரி அனந்தன் உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.
மேலும் குமரி அனந்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் குமரி அனந்தன் உடலுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.
- பெற்றோரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆபாச படங்களை தானாகவே மங்கலாக்கும் வசதியை முடக்க முடியாது.
- இன்ஸ்டாகிராம் பார்க்கும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் கண்காணிப்பது எளிதாக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
இன்ஸ்டாகிராமில் சமீபகாலமாக பதின்ம வயது குழந்தைகளும் கணக்கு தொடங்கி நிர்வகிப்பது அதிகரித்து வருகிறது. இதையடுத்து 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இன்ஸ்டாகிராம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இன்ஸ்டாகிராம் தற்போது இந்த புதுப்பிப்பிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இன்ஸ்டாகிராமில் சில முக்கியமான அம்சங்களை அணுகுவதற்கு இனி பெற்றோரின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் இனி நேரலை ஒளிபரப்புகளை தொடங்க முடியாது.
அதுமட்டுமின்றி, நேரடியாக வரும் தகவல்களில் இடம்பெற்றிருக்கும் ஆபாச படங்களை தானாகவே மங்கலாக்கும் வசதியை முடக்கவும் அவர்களுக்கு பெற்றோர் அனுமதி தேவைப்படும்.
பெற்றோரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆபாச படங்களை தானாகவே மங்கலாக்கும் வசதியை முடக்க முடியாது. இதன்மூலம் அவர்கள் ஆபாச படங்களை பார்க்கவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
சமீப காலமாக சமூக ஊடகங்களின் தாக்கம் குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் பெற்றோர்களுக்கு ஏற்படும் கவலைகளை குறைக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக மெட்டா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் இன்ஸ்டாகிராமில் பதின்ம வயதினர் கணக்குகள் தொடங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் உலக அளவில் சுமார் 5.4 கோடி பேர், பதின்ம வயதினருக்கான கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் இன்ஸ்டாகிராம் பார்க்கும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் கண்காணிப்பது எளிதாக்கப்பட்டு உள்ளது.
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் முதல்கட்டமாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்பிறகு மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
குழந்தைகளுக்காக இன்ஸ்டாகிராம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்த பாதுகாப்பு அம்சங்களும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். இதில் பதின்ம வயது கணக்குகளை இயல்பாகவே தனிப்பட்டதாக அமைத்தல், வெளி நபர்களிடம் இருந்து வரும் தனிப்பட்ட தகவல்களை தடுத்தல், வன்முறை காட்சிகள் கொண்ட வீடியோக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள், 60 நிமிடங்களுக்கு பிறகு செயலியை விட்டு வெளியேறுவதற்கான நினைவூட்டல்கள் மற்றும் தூங்கும் நேரத்தில் தானாக வரும் அறிவிப்புகளை நிறுத்துதல் ஆகியவையும் அடங்கும்.
இந்த பதின்ம வயதினர் கணக்குகளுக்கான கட்டுப்பாடுகள் விரைவில் முகநூல் மற்றும் மெசஞ்சர் போன்ற மற்ற மெட்டா தளங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடன் வாங்கிய நபர் இறந்து விட்டதால் அந்த கடனை மாதம் தோறும் தனது சம்பளத்தில் இருந்து ஜான் தேவராஜ் கொடுத்து அடைத்து வந்தார்.
- பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து கடன் கொடுத்தவர்கள் யாரேனும் மிரட்டினார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பூர்:
சென்னை புளியந்தோப்பு நரசிம்மன் நகரை சேர்ந்தவர் ஜான்தேவராஜ் (வயது33). பெரவள்ளூரில் உள்ள பூங்காவில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
ஜான்தேவராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு கடன் வாங்க உதவினார். அப்போது அவர் சாட்சி கையெழுத்து போட்டதாக தெரிகிறது. இதற்கிடையே கடன் வாங்கிய நபர் இறந்து விட்டதால் அந்த கடனை மாதம் தோறும் தனது சம்பளத்தில் இருந்து ஜான் தேவராஜ் கொடுத்து அடைத்து வந்தார். மேலும் இதற்காக வேறு நபர்களிடம் கடன் வாங்கியும் நண்பர் வாங்கிய கடனை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் பிரச்சனையில் ஜான்தேவராஜ் சிக்கினார். அவரால் வாங்கிய கடன் தொகையை திருப்பி கொடுக்க முடியவில்லை. அவரிடம் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து கடும் நெருக்கடி கொடுத்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த ஜான் தேவராஜ் தற்கொலை செய்ய முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத போது வெளியில் சென்று இருந்த தனது மனைவி சுப்புலட்சுமியின் செல்போனுக்கு வீடியோ கால் செய்து பேசினார். அப்போது கடன் தொல்லையால் தற்கொலை செய்யப்போவதாக கூறி பேசியபடியே ஜான் தேவராஜ் தூக்கில் தொங்கினார்.
இதனை கண்டு மனைவி சுப்புலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். அவர் விரைந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் ஜான்தேவராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி துடித்தார். இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து கடன் கொடுத்தவர்கள் யாரேனும் மிரட்டினார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தால் பி.டெக் எனப்படும் தொழில்நுட்பக் கல்வியை வழங்க முடியாது என்று அறிவித்தது.
- அனைத்து வகையான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஓப்புதல் பெறப்பட வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) , பி.எஸ்.சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) ஆகிய புதிய பாடப்பிரிவுகளை தொழிற்துறையினரின் ஆதரவுடன் தொடங்க முடிவு செய்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், இது குறித்து தொழில் நிறுவனங்களின் விருப்பத்தைக் கோரியிருக்கிறது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை நடத்த பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லாத நிலையில், இந்தப் படிப்புகளை நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தை பெரியார் பல்கலைக்கழகம் வீணடித்து விடக்கூடாது.
ஏற்கனவே, 2023-24ஆம் கல்வியாண்டில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) என்ற புதிய பாடப்பிரிவை ஸ்கோபிக் எஜுடெக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தபோவதாக பெரியார் பல்கலைக்கழ்கம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தது. அப்போதே இத்தகையப் படிப்பை வழங்க பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தகுதி உண்டா? இந்தப் படிப்புக்கு அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? இந்தப் படிப்பு பட்டமேற்படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் தகுதியானது என்று ஒழுங்குமுறை அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா? என்று பா.ம.க. வினா எழுப்பியிருந்தது.
பா.ம.க.வின் வினாக்களுக்கு விடையளித்த தமிழக அரசு, தமிழக அரசு கொள்கையின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்வியை மட்டும் வழங்கும் கல்வி நிறுவனம் ஆகும். கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தால் பி.டெக் எனப்படும் தொழில்நுட்பக் கல்வியை வழங்க முடியாது என்று அறிவித்தது. மேலும் இந்தப் படிப்பை நிறுத்தும்படி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தாம் ஆணையிட்டிருப்பதாக சட்டப்பேரவையின் அன்றைய உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து அந்தப் படிப்பை சேலம் பெரியார் பல்கலைக்கழகம்கைவிட்டது.
அதன்பின் கல்விச் சூழலில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், புதியப் படிப்புகளை தனியாருடன் இணைந்து நடத்த பல்கலைக்கழகம் துடிப்பது ஏன்? இந்தப் படிப்பு நடைமுறைக்கு வந்தால் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் தனியார் நிறுவனம் தான் மேற்கொள்ளும். மாணவர்களிடமிருந்து பல்வேறு தலைப்புகளில் கட்டணம் தண்டல் செய்யும் தனியார் நிறுவனம், அதில் கல்விக் கட்டணமாக பெறப்படும் தொகையில் மட்டும் ஒரு பகுதியை பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிவிட்டு மீதமுள்ள தொகையை முழுமையாக எடுத்துக் கொள்ளும். அதற்காக பல்கலைக்கழகத்தின் பெயரையும், கட்டமைப்பு வசதிகளையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும். இத்தகைய முறை அனுமதிக்கப்பட்டால் அரசு பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாக்கப்படும். இதை தமிழக அரசு அனுமதிக்கப் போகிறதா?
இவை அனைத்துக்கும் மேலாக, அனைத்து வகையான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஓப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால் அத்தகைய ஒப்புதல் எதையும் பெறாமல் தொழில்நுட்பப் படிப்புகளை பெரியார் பல்கலைக்கழகம் வழங்கினால் அந்தப் படிப்பு செல்லாது. லட்சக்கணக்கில் பணம் கட்டி அந்தப் படிப்பை படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) , பி.எஸ்.சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளை பெரியார் பல்கலைக்கழகம் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு பல்கலைக் கழகங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கல்வியை வணிகமாக்குவதையும் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
- உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டரின் உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எம்.ராஜேந்திரன் (வயது 52) என்பவர் கடந்த 5-ந்தேதி அன்று பணியின் நிமித்தமாக மண்ணுக்குமுண்டான் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்போது திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மயக்கமடைந்து சிகிச்சைக்காக அருகிலுள்ள சித்தமல்லி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
- பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மகாவீா் ஜெயந்தி தினமான நாளை (10-ந் தேதி), வார விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினமான திங்கட்கிழமை (14-ந் தேதி) ஆகிய தொடா் விடுமுறை தினங்களை முன்னிட்டு, இன்றும் (புதன்கிழமை), வெள்ளி, சனிக்கிழமை ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு இன்று (புதன்கிழமை) 190 பஸ்களும், நாளை மறுநாள் 525 பஸ்களும், சனிக்கிழமை 380 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதுபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (புதன்கிழமை) 50 பஸ்களும், வெள்ளிக்கிழமை 100 பஸ்களும், சனிக்கிழமை 95 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இது போல, மாதவரத்தில் இருந்து இன்று 20 சிறப்பு பஸ்களும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 20 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 1680 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதுதவிர, திங்கட்கிழமை (14-ந்தேதி) பொதுமக்கள் சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாலை 5 மணியளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
- குமரி அனந்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை:
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 12.15 மணிஅளவில் குமரி அனந்தன் காலமானார்.
இதையடுத்து குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமம் லோகையா காலனியில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலில் காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு உள்ளது. குமரி அனந்தன் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் நடக்கிறது. அவரது மகன் கீதன் இறுதி சடங்குகளை செய்கிறார். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 5 மணியளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
குமரி அனந்தன் உடலுக்கு இன்று காலை முதலே தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இதனிடையே, குமரி அனந்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், குமரி அனந்தன் உடலுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார். இதன்பின் தந்தையை இழந்து வாடும் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.
- நீட் தேர்வு தொடர்பாக, தமிழக மக்கள் சார்பில், தமிழக பாஜக கேட்டிருந்த பல கேள்விகளுக்கு, திமுக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.
- இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள்.
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நீட் தேர்வு வந்த பிறகே, தமிழகத்தில் சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும், மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். ஆனால், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டிருக்கிறது திமுக.
திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தாங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் எப்படி பணம் விளையாடுகிறது என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், இன்னும் நீட் எதிர்ப்பு என்று பல நாடகங்கள் நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அப்படி ஒரு நாடகமான இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழக பாஜக பங்கேற்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பாக, தமிழக மக்கள் சார்பில், தமிழக பாஜக கேட்டிருந்த பல கேள்விகளுக்கு, திமுக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விகளை மீண்டும் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைக்க விரும்புகிறேன்.
நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்தியது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக அரசுக்கு எண்ணம் இருக்குமேயானால், நீங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். டாஸ்மாக் ஊழல் விசாரணைக்குத் தடை கேட்டும், கள்ளச்சாராய மரணம் குறித்த விசாரணையைத் தடுக்கவும் நீதிமன்றம் செல்லும் உங்கள் அரசு, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள்?
நீட் தேர்வு குறித்து திமுக கூறுவது உண்மை நிலவரத்துக்கு நேர்மாறாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான எந்த ஆதாரங்களையும் இதுவரை முன்வைத்திருக்கிறீர்கள்?
நீட் தேர்வு வந்த பிறகே, மருத்துவக் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நீட் தேர்வினால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு என்று பொய் சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில், நீட் தேர்வு இல்லாத, 2007 - 2016 காலகட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 38 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே, மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றனர் என்ற உண்மையை மறைப்பது ஏன்?
அறிவாலயத்தில் இருந்து தயார் செய்து கொடுத்த முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில், நீட் தேர்வுக்கு முன்பாக, கடந்த 2010 - 2014 ஆண்டுகளில், மருத்துவக் கல்வியில் சேர்ந்த தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை என்ன என்பதை ஏன் குறிப்பிடவில்லை?
நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2024 நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் 8 பேர், தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்கள். தமிழகத் தேர்ச்சி விகிதம், தேசிய சராசரியை விட அதிகம் என்பது முதலமைச்சருக்குத் தெரியாதா? யாரை ஏமாற்ற இன்னும் நீட் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்?
ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நோக்கத்தோடு, நமது பாரதப் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்தில் 14 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்வி இடங்கள், கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் மேலும் பல மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளின் தரத்தைப் பராமரிக்காமல், புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து என்ற நிலைக்குக் கொண்டு சென்றதோடு, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்குக் குறித்த காலத்தில் விண்ணப்பிக்காமல் அலட்சியமாக இருந்தது திமுக அரசு. திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, தமிழக மாணவர்கள் எதிர்காலத்தைக் குழி தோண்டிப் புதைக்க முயற்சி செய்கிறது திமுக என்பதை, முதலமைச்சரால் மறுக்க முடியுமா?
நீட் தேர்வு மட்டுமல்ல, எந்தத் தேர்வானாலும் நமது மாணவர்கள் சாதனை படைக்கும் திறமை வாய்ந்தவர்கள். ஆண்டுதோறும் நீட் தேர்ச்சி விகிதமே இதற்கு சாட்சி. போதும் முதலமைச்சர் அவர்களே நீட் எதிர்ப்பு என்ற பெயரில், நீங்கள் ஆடும் சுயநல நாடகம். எனவே, இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள் என்று கூறியுள்ளார்.
- குமரி அனந்தன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- தந்தையை இழந்து வாடும் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.
சென்னை:
காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சாலிகிராமத்தில் அமைந்துள்ள தமிழிசை சவுந்தரராஜனின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தன் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், குமரி அனந்தன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் தந்தையை இழந்து வாடும் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.
- நேற்றும் அவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறி அமளியில் ஈடுபட்டு வெளியேறினர்.
- மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை நேற்று முன்தினம் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து அவை நடவடிக்கையில் பங்கேற்றனர்.
நேற்றும் அவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறி அமளியில் ஈடுபட்டு வெளியேறினர். மேலும் மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர்.






