என் மலர்
சென்னை
- சீமைக் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.
- அரசு அரசாணை வெளியிட்டது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
சீமைக் கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு உதரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீர் நிலைகள், வனப் பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற கணக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் மரங்களை சர்வே எடுக்க வேண்டியுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்க இருப்பதால் மரங்களை கணக்கெடுப்பதற்கும், அவற்றை நீக்குவதற்கும் மேலும் 3 கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
சீமைக் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. அரசு அரசாணை வெளியிட்டது. அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஒவ்வொரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மூலம் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம்.
தனியார் நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்கள் அகற்றவில்லை என்றால், அதற்கான செலவினங்களை நில உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கலாம். அவர்கள் அனுமிக்காவிட்டால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அத்துடன், வடகிழக்கு பருவமழையை காரணம் காட்டி சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதை தள்ளி வைக்க முடியாது. மரங்களை அகற்றுவது தொடர்பாக திட்டங்களை அக்டோபர் 10ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். அன்று உரிய பதிலை அளிக்காவிடில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனத் தெரிவித்தனர்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- த.வெ.க. தலைவர் விஜய் சனிக்கிழமை தோறும் மக்களை சந்தித்து வருகிறார்.
- மக்களை ஒருநாள் சந்தித்தால் போதுமா? என மற்ற கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் வெறும் சனிக்கிழமை சனிக்கிழமை மட்டும் வெளியே வரமாட்டேன். ஞாயிற்றுக்கிழமை கூட சுற்றிக்கொண்டுதான் இருப்பேன். இன்னைக்கு என்ன கிழமை என்று கூட தெரியாது. வெள்ளிக்கிழமையா..,
நான் பல மாவட்டங்களுக்கு போகும்போது அங்கு மக்கள் கூட்டமாக நிற்பார்கள். மனுக்களுடன் நிற்பார்கள். தாய்மார்கள் நிற்பார்கள். நான் வண்டியை நிற்கச் சொல்லுவேன். நிறைய பேர் மனுக்குள் கொடுப்பார்கள். நிறைய பேர் பாராட்டுவார்கள். நிறைய பேர் வாழ்த்துவார்கள். தம்பி, அப்பாட்ட சொல்லிடுங்க.., 1000 ரூபாய் வந்திருச்சி. தேங்க்ஸ். அப்படி பேசி வாழ்த்தியிருக்காங்க.
ஆயிரம் ரூபாய் எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டேன். 90 சதவீதம் பேர் மருத்துவ செலவிற்கு பயன்படுத்துகிறேன் என்பார்கள்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், சனிக்கிழமை தோறும் இரண்டு மாவட்டங்கள் என சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். சனிக்கிழமை மட்டும் பிரசாரம் செய்தால் போதுமா? என மற்ற கட்சித் தலைவர்கள் விமர்சித்த நிலையில், கட்சி தொண்டர்களின் நலனிற்காகத்தான் சனிக்கிழமையை தேர்வு செய்தேன் என விஜய் பதில் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
- இவ்வளவு விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை எந்த மாநிலத்திலும் கொடுக்கப்படவில்லை.
- 100-க்கும் அதிகமான வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பைக் ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 819 வீரர், வீராங்கனைகளுக்கு 21.40 கோடி ரூபாய்க்கான உயரிய ஊக்கத்தொகைகளை வழங்கினார்.
அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நம்முடைய அரசு அமைந்த இந்த 4½ வருடத்தில் மட்டும், இன்றைக்கு வரை சுமார் 4 ஆயிரத்து 510 விளையாட்டு வீரர்களுக்கு 150 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகையை நம்முடைய முதல்-அமைச்சர் கொடுத்திருக்கிறார்.
4 வருடத்தில் மட்டும் இந்தியாவுலேயே இந்த அளவுக்கு எந்த மாநிலத்திலும், இவ்வளவு விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை எந்த மாநிலத்திலும் கொடுக்கப்படவில்லை.
இன்றைக்கு மட்டும் இவ்வளவு பேருக்கு உயரிய ஊக்கத்தொகையை கொடுத்திருக்கிறோம் என்றால், அதற்கும் நம்முடைய முதல்-அமைச்சர் தான் காரணம்.
பொதுவாக, போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்த பிறகு தான் விளையாட்டு வீரர்களுக்கு அரசு அந்த அங்கீகாரத்தை கொடுக்கும், அந்த பரிசுத்தொகை கொடுக்கும்.
ஆனால், நம்முடைய முதலமைச்சரும், நம்முடைய அரசு மட்டும் தான், போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னாடியே அந்த வீரர்களை அழைத்து அவர்களுக்கான ஊக்கத் தொகையை, முன்னாடியே நிதி உதவியை செய்கின்றது நம்முடைய அரசு. நிதி உதவி மட்டும் அல்ல, நீங்கள் வெற்றி பெற்று வந்தீர்கள் என்றால், உங்களுக்கு அரசு வேலையையும் நம்முடைய அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டினுடைய வரலாற்றிலேயே முதன்முறையாக கடந்த வருடம் 100-க்கும் அதிகமான வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பைக் ஏற்படுத்தி கொடுக்கின்றோம்.
அந்த வகையில், இன்றைக்கு உங்களுக்கு உயரிய ஊக்கத்தொகையை கொடுத்து இருக்கின்றோம். நீங்கள் மீண்டும் வெற்றி பெற்று வரும் போது, நம்முடைய முதல்-அமைச்சர் உங்களுக்கு அரசு வேலையும் நிச்சயம் பெற்றுத் தருவார்.
இந்த அளவுக்கு, தமிழ்நாட்டினுடைய விளையாட்டு வீரர்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
அதில் ஒரு சில பேரை மட்டும் இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன். இந்திய அளவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும் பல சாதனைகளை செய்து கொண்டு வருகின்றீர்கள். அதற்கு சிறந்த உதாரணமாக இன்றைக்கு இந்த மேடையில் 2 பேரை அமர வைத்திருக்கின்றோம்.
அதில் ஒருத்தர், தம்பி ஆனந்த்குமார் வேல்குமார் இங்கே வந்து இருக்கிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரரான தம்பி ஆனந்த்குமார், சமீபத்தில் சீனாவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு, இன்றைக்கு ஒட்டு மொத்த உலகத்தையும் தன்பக்கம் திரும்ப வைத்திருக்கிறார். இந்தப் போட்டியில் மொத்தம் 3 மெடல் வென்றிருக்கிறார் ஆனந்த்குமார்.
இதன் மூலம் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை ஆனந்த்குமார் இன்றைக்கு படைத்திருக்கிறார். அவருடைய வெற்றிப்பயணத்திற்கு நம்முடைய அரசு, நாம் அத்தனைபேரும் அவருக்கு துணை நிற்போம்.
அதே மாதிரி, இங்கு வந்திருக்கக்கூடிய செஸ் கிராண்ட் மாஸ்டர்என்று போற்றப்படும் வைஷாலி. சில நாட்களுக்கு முன்பு, ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்து மிகப்பெரிய ஒரு சாதனையை படைத்துவிட்டு வந்துள்ளார்.
வைஷாலிக்கும் என்னென்ன தேவையோ அதையெல்லாம் செய்து கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- தாயைப்போல பாசம் கொண்ட தலைவன் இல்லாமல் ஏங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என விஜய் கூறினார்.
சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில், தமிழ் ஈழ விடுதலை போராளி திலீபன் நினைவு நாளையொட்டி, அவரது படத்திற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நிருபர்களிடம், வைகோ கூறியதாவது:-
தமிழ் ஈழ வரலாற்றில் அழியாத புகழ்பெற்ற திலீபன் 7 அணு ஆயுத வல்லரசுகளை எதிர்த்து, 7 ஆயிரம் விடுதலைப் புலி வீரர்களை வைத்து தோற்கடித்தார். தாயைப் போல பாசம் கொண்ட தலைவன் இல்லாமல் ஏங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென த.வெ.க தலைவர் விஜய் தனது பிரசாரத்தில் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, ஈழத் தமிழர்களுக்காக யார் குரல் கொடுத்தாலும் அதை மனதார மெச்சி வரவேற்பதாக வைகோ பதில் அளித்தார்.
- நான் எதையும் எழுதி வைத்து படிக்க மாட்டேன்.
- அ.தி.மு.க.விடம் இருந்து 2 இட்லி தி.மு.க.விடமிருந்து 2 இட்லி என எடுத்துக் கொண்டு செயல்படும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார்.
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் 13 கோடி மக்கள்தொகை கொண்ட இனம் தமிழ் இனம். சோழன் பல்வேறு நாடுகளை படை எடுத்து வெற்றி கண்டாலும் புலி கொடியை ஏற்றினார். ஆனால் இனக்கொடியை ஏற்றவில்லை. இதனால் தமிழ் இனத்துக்கு நாடு இல்லாமல் போனது.
தாயகத்தின் விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த திலீபனின் வழியில் எங்களது இலக்கை அடைவதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.
சென்னையில் தமிழக அரசு நடத்திய கல்வி விழா பாடல் வெளியீட்டு விழா போன்றே நடைபெற்று முடிந்துள்ளது. இந்த அரசு விளம்பர மாடல் அரசாகவே செயல்பட்டு வருகிறது.
அந்த விழாவில் கலந்து கொண்டு பேசுவதற்கு கல்வியாளர்களை ஏன் அழைக்கவில்லை.. கல்வி வளர்ச்சி பற்றி தமிழக அரசு பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.
இன்றைக்கு பள்ளிப் படிப்பை படித்த பிறகும் மாணவர்கள் தமிழ் எழுத முடியாமல் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தமிழக அரசின் கல்வி சாதனையாகும்.
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 ஆட்சிகளிலும் தொழில் முதலீடு தொடர்பாக என்ன சாதித்து விட்டார்கள். ஒன்றுமே கிடையாது.
வெளிநாட்டில் இருந்து வரும் முதலாளிகள் மக்கள் நலனையா பார்ப்பார்கள். அவர்கள் லாப நோக்கோடு தான் செயல்படுவார்கள். என்னுடைய காருக்கு 5 லட்சம் சாலை வரி கட்டி உள்ளேன். பின்னர் எதற்காக சுங்கச்சாவடிகளை வைத்து கட்டணம் வசூலிக்கிறீர்கள். எங்களையெல்லாம் இதுபோன்று ஏமாற்ற முடியாது.
நான் எதையும் எழுதி வைத்து படிக்க மாட்டேன். எனது உள்ளங்கையிலேயே அனைத்து விவரங்களும் உள்ளன. தமிழக அரசு அனைத்து இடங்களுக்குமே கருணாநிதியின் பெயரை வைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்த பெயரை எல்லாம் மாற்றுவோம்.
விஜய் தற்போது பிரசாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டி கொண்டு இருக்கிறார்.
அ.தி.மு.க.விடம் இருந்து 2 இட்லி தி.மு.க.விடமிருந்து 2 இட்லி என எடுத்துக் கொண்டு செயல்படும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார். அண்ணா, எம்.ஜி.ஆர். என இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு சனிக்கிழமைதோறும் விஜய் சென்று வருகிறார்.
மண்ணரிப்பா மீன் அரிப்பா என்பதை கூட அவரால் புரிந்து படிக்க முடியவில்லை. அவரால் எழுதிக் கொடுத்ததை கூட ஒழுங்காக படிக்க முடியவில்லை.
செல்லும் இடங்களில் எல்லாம் சொன்னார்களே செய்தார்களா சொன்னார்களே செய்தார்களா என்று கேட்டால் மட்டும் போதுமா? மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டாமா?
பிப்ரவரி மாதம் வரையில் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவித்திருக்கிறார் அது அவரது விருப்பம். அண்ணனின் பேச்சை கேட்காவிட்டாலும் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் முதல் 30-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 30-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இதுவரை 254 புதிய 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன.
- மீதமுள்ள டவர்கள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறுவப்படும்.
சென்னை:
இந்தியா முழுவதும் 4ஜி சேவை நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. ஒடிசாவில் பிரதமர் மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் மற்றும் சென்னை தொலை பேசி தலைமை பொது மேலாளர் எஸ்.பார்த்திபன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
டிஜிட்டல் பாரத் நிதியத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவைகள் வழங்கப்படும். தமிழகத்தில் 4ஜி சேவை வழங்க 620 கிராமங்கள் கண்டறியப்பட்டன. அதில் 222 கிராமங்களில் புதிய டவர்களும் மற்றும் 35 கிராமங்களில் உள்ள 2ஜி டவர்கள் மேம்படுத்தவும் மொத்தம் 289 கிராமங்களில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் ஒத்துழைப்புடன் 188 வருவாய் கிராமங்களிலும் வனப்பகுதியில் உள்ள 21 கிராமங்களிலும் மொத்தம் 29 இடங்களில் 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டு உள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 19 கிராமங்களில் உள்ள மொபைல் டவர்கள் 4ஜி சேவை வழங்க தரம் உயர்த்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நீலகிரி, சத்தியமங்கலம், கொல்லிமலை, ஏற்காடு, பச்சமலை, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, ஜருகுமலை, மார்த்தாண்டம் பில்லிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொலைதூர மலை கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து 4ஜி டவர் உள்ள இடங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மொபைல் சேவை வழங்குவதற்காக சூரிய ஒளி மின்சாரம், பேட்டரி பவர் பிளாண்ட் ஜெனரேட்டர் ஆகிய கருவிகள் நிறுவப்பட இருக்கிறது.
இதுவரை 254 புதிய 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள டவர்கள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறுவப்படும்.
நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4ஜி கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் பி.எஸ்.என்.எல். விரைவான முன்னேற்றம் தன்னம்பிக்கை மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு சக்தி வாய்ந்த சான்றாக திகழ்கிறது.
இந்த நெட்வொர்க்கின் வேகம் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் பாதுகாப்பான அதிவேக நம்பகமான மொபைல் சேவையை வழங்குவதற்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- 5-ந்தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு செல்கிறார்.
சென்னை:
துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 12-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிற 4-ந்தேதி, முதல் முறையாக தமிழகம் வருகிறார். அவர் தமிழகத்தில் 2 நாட்கள் தங்கி இருக்கிறார். அப்போது பல முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) சி.பி.ராதாகிருஷ்ணன் விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அன்று அவர் சென்னையில் தங்கி இருக்கிறார். அப்போது பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணுக்கு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள அரங்கம் ஒன்றில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, பொதுமக்கள் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
மறுநாள் 5-ந்தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு செல்கிறார். கோவை விமான நிலையத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோவையில் அவர் தனது வீட்டுக்கும் செல்கிறார். அன்று முழுவதும் அவர் கோவையில் தங்கி இருக்கிறார். அப்போது அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் பலரையும் அவர் சந்திக்கிறார். 5-ந்தேதி இரவு அல்லது 6-ந்தேதி காலையில் அவர் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் தமிழக சுற்றுப்பயண திட்டம் தயாராகி வருகிறது. இன்று அல்லது நாளை அவரது சுற்றுப்பயண திட்டம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
- எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!
- உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழா மேடையில், 'நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்று தனது முதல் மாத சம்பளத்தை தந்தையிடம் வழங்கிய பிரேமா பேசுகையில், தந்தை ஒழுகும் வீட்டில் இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்!
எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!
உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர்?
- பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை.
சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் நேற்று அரசு நடத்திய விழா கல்வி சாதனை விழாவாக தெரியவில்லை, சினிமா பாடல் வெளியீட்டு விழா போல் இருந்தது.
* கல்வியில் சிறந்த அறிஞர்கள் எத்தனை பேர் விழாவில் கலந்து கொண்டனர்?
* மாநிலம் முழுவதும் பல இடங்களில் அரசு பள்ளிகளை மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என விழா நடத்துகிறீர்கள்.
* தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல, விளம்பர மாடல் அரசு.
* பட்டம் படித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்களுக்கு தாய் மொழியில் எழுத தெரியவில்லை.
* தாய் மொழியான தமிழ்த்தேர்வு எழுதுவதற்கு 60,000 பேர் வராத அவலநிலை தமிழ்நாட்டில் தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- செப். 27 முதல் அக்.5-ந்தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
- விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கு சுமை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. செப். 27 முதல் அக்.5-ந்தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கு சுமை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் விதிமுறைகளை மீறிச் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.






