என் மலர்tooltip icon

    சென்னை

    • பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (01-10-2025), மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 02 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 03-ஆம் தேதி வாக்கில் காலை கரையை கடக்கக்கூடும்.

    தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    திருவள்ளூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    2-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    3-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    4-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 3-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • ரெங்கநாதன் தெரு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்தை தாண்டி மேம்பாலம் செல்லும் வகையில் இந்த இணைப்பு மேம்பாலம் இரும்பால் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையின் மையப் பகுதியாக விளங்கும் தியாகராய நகரில் மிகப் பெரிய ஜவுளிகடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இதனை கருத்தில் கொண்டு தி.நகர் உஸ்மான் சாலையில் ஏற்கனவே ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு இருந்தது. இந்த மேம்பாலம் ரெங்கநாதன் தெரு அருகே இறங்கும் வகையில் இருந்ததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் தெற்கு உஸ்மான் சாலையையும், சி.ஐ.டி. நகர் முதல் பிரதான சாலையை இணைக்கும் வகையிலும் 1¼ கிலோ மீட்டர் நீளத்துக்கு தி.நகர் பாலத்தை நீட்டித்து புதிய மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.

    அதாவது ரெங்கநாதன் தெரு பகுதியில் இருந்து தி.நகர் பஸ் நிலையத்தை தாண்டி மேம்பாலம் செல்லும் வகையில் இந்த இணைப்பு மேம்பாலம் இரும்பால் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இது 3,800 மெட்ரிக் டன் இரும்பினால் வடிவமைக்கப்பட்டு 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதல் இரும்பு மேம்பாலம் ஆகும்.

    இந்த புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

    இந்த புதிய மேம்பாலம், 1200 மீட்டர் நீளம் மற்றும் 8.40 மீட்டர் அகலத்தில் 53 இரும்பு தூண்களுடன் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு தெற்கு உஸ்மான் சாலையில் ஏற்கனவே உள்ள 800 மீட்டர் நீள கான்கிரீட் மேம்பாலத்துடன், உயரிய தொழில் நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 2 கிலோ மீட்டர் நீளத்திலும் தியாகராய நகர் பஸ் நிலையத்தில் இருந்து இந்தப் பாலத்தில் ஏறுவதற்கு 120 மீட்டர் நீளத்திலும், தெற்கு உஸ்மான் சாலை பாலத்தில் இருந்து தியா கராய நகர் பகுதிக்கு இறங்குவதற்கு 100 மீட்டர் நீளத்திலும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இருபுறமும் நடைபாதைகளுடன் 6 மீட்டர் அகல சேவை சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியின் மிக நீண்ட பாலமாக 2 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தில் தினசரி சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து, சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    சிங்காரச் சென்னையை நோக்கிய பயணத்தில் புதிய பெருமைமிகு அடையாளமாக புதிய தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இம்மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்களில் தியாகராய நகர் மற்றும் சுற்றுப்புறங்களின் வாழ்வியல் காட்சிகள் அழகிய ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் உழைப்பையும் மரபையும் சிறப்பிக்கின்றன.

    சி.ஐ.டி நகர் முதல் பிரதான சாலையிலுள்ள தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சாய்வுதளப் பகுதியிலிருந்து சி.ஐ.டி நகர் நான்காவது பிரதான சாலை சந்திப்பை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் மூலம், தெற்கு உஸ்மான் சாலை - பர்கிட் சாலை - மேட்லி சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - தென்மேற்கு போக்சாலை - நியூ போக் சாலை ஆகியவற்றின் சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலை - சி.ஐ.டி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேம்பால திறப்பு விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா, ஆ. ராசா எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, த. வேலு, தாயகம் கவி, துணை மேயர் மு. மகேஷ் குமார், உயர் அதிகாரிகள் கார்த்திகேயன், ஆணையர் குமரகுருபரன், வினய், தமிழ்நாடு வீட்டுவதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, திண்டுக்கல் ஐ.லியோனி, பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சிற்றரசு,

    தியாகராய நகர் மேற்கு பகுதி செயலாளர் கே.ஏழுமலை, கோ.சு.மணி, எம்.எஸ்.பழனி, ஜெ.ஜானகிராமன், ராஜா அன்பழகன், தியாகராய நகர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் பாண்டிபஜார் பாபா சுரேஷ், தி.நகர் கிழக்கு பகுதி பொருளாளர் ஜி.மோகன் ராஜ், வட்டச் செயலாளர் பி.மாரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மோனிஷா கருணாநிதி, வனிதாபுரம் துரை, இ.சஞ்சீவ் குமார்(எ) கார்த்தி, 133-வது வட்ட துணை செயலாளர் ஆர்.கலா ராஜா, என்.வெங்கடேசன், கனிமொழி வெங்கடேசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அந்தந்த மாவட்டங்களில் விஜய் பிரசாரத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டு நிர்வாகிகள் போலீசாரிடம் விண்ணப்பித்துள்ளனர்.
    • விஜய் வருகிற 4-ந்தேதி வேலூர், ராணிப்பேட்டையில் பிரசாரம் செய்ய இருந்தார்.

    சென்னை:

    2026 தேர்தலை எதிர் கொண்டு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ள விஜய் 3-ம் கட்டமாக கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்தார்.

    அடுத்தடுத்து மற்ற மாவட்டங்களில் பிரசாரம் செய்ய இருந்தார். இதற்கான முன்னேற்பாடு பணிகளில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அந்தந்த மாவட்டங்களில் விஜய் பிரசாரத்திற்கு முறைப்படி அனுமதி கேட்டு நிர்வாகிகள் போலீசாரிடம் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்தநிலையில் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே சோகமயமாக்கியது.

    மேலும் த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மற்றும் நிர்வாகிகள் மீது ஜாமினில் வரமுடியாத வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன் ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பது பற்றி த.வெ.க. தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிவில் அடுத்த கட்டமாக நடைபெற இருக்கும் பிரசார திட்டங்களுக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து உத்தரவு வரும் வரை அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு கொடுப்பதை தற்காலிகமாக தள்ளி வைக்கும்படி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    விஜய் வருகிற 4-ந்தேதி வேலூர், ராணிப்பேட்டையில் பிரசாரம் செய்ய இருந்தார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து அங்கு சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    • பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது.
    • வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,

    திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம்பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

    பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது.

    பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?

    இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும்.

    மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    • தற்போது தமிழகம் முழுவதும் 3,529 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன.
    • விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வதை முறையாக, நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிகமான நெல் விளைச்சல் காரணமாகவும், இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடில்லாமல் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விவசாயிகள் நேரடியாக அரசிடம் அவர்கள் விளைவித்த நெல்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக 1973-ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடங்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 1996-ல் தமிழ்நாடு முழுமைக்குமாக பரவலாக்கப்பட்டது, தற்போது தமிழகம் முழுவதும் 3,529 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன.

    ஒரு கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முன்பதிவு மூப்பு படி மூட்டைகளை தான் எடை போட வேண்டும் என்கிற நிலையில், வியாபாரிகள் பணியாளர்கள் உதவியுடன் பதிவில் குளறுபடி செய்து வியாபாரிகள் மூட்டைகளை பணியாளர்கள் எடை போட்டுவிட்டு, விவசாயிகளின் மூட்டைகளை காலதாமதப்படுத்துவதாக கூறப்படுகிறது.

    எனவே, பரவலாக நடைபெறுகின்ற இந்த முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தடுப்பதுடனும், விவசாயிகளின் ஆவணங்களை போலியாக வியாபாரிகளுக்காக கொடுக்கின்ற அலுவலர்கள் மீதும், வியாபாரிகளின் நெல்லை மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளின் நெல்லை புறக்கணிக்கும் பணியாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயிகள் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வதை முறையாக, நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.
    • கரூரில் நடந்த கொடூரத்தை பற்றி உண்மை கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டதே.

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.

    கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு இன்று கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க உள்ளனர்.

    இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,

    * கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை பா.ஜ.க. நேரடியாக தொடங்கி உள்ளது.

    * கரூரில் நடந்த கொடூரத்தை பற்றி உண்மை கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டதே.

    * காங்கிரஸ் பேரியக்கமும் உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    * கரூர் விவகாரத்தில் பா.ஜ.க.வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாக உள்ளது.

    * தமிழ்நாடு அல்லாத பிற மாநில பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை ராகுல் காந்தி நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இப்படிப்பட்ட நேரத்தில் பழி சுமத்துவது தேவையில்லாத ஒன்று, தவறான ஒன்று.
    • அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றும்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக த.வெ.க. தலைவர்கள் அரசு மற்றும் காவல்துறை மீது பழிபோடுவது குறித்து கனிமொழி எம்.பி.யிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    இதற்கு கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    பாதிக்கப்பட்ட மக்களுடன் உடனடியாக நின்றது திமுக மற்றும் அரசாங்கம். மக்களின் உயிர் மற்றும் ஆறுதல்தான் முக்கியமான விசயம். அடிப்படையில் எல்லோரும் மனிதர்களாக செயல்பட வேண்டும். விசாரணை முடிவில் உண்மை வெளிவரும்.

    யார் மீது தவறுகள் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

    இப்படிப்பட்ட நேரத்தில் பழி சுமத்துவது தேவையில்லாத ஒன்று, தவறான ஒன்று. அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.

    அந்த நேரத்தில் கட்சி தலைவர் அந்த இடத்தை விட்டு செல்வதோ, ஆறுதல் கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்று செல்வதோ, தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைப்பதோ என்னைப் பொறுத்தவரையில் பார்த்திராத ஒன்று. அவர்கள் இல்லை என்றாலும், அடுத்தக்கட்ட தலைவர்களை அனுப்பியிருக்க வேண்டும்.

    நான் செல்கின்ற போதும் கூட அந்த கட்சியை சார்ந்த தலைவர்கள் இல்லை என்று பார்க்கும்போது மனிதாபிமானம் இல்லை என்று சொல்லத்தோன்றுகிறது. மற்ற கட்சித் தலைவர்கள் கூட மக்களோடு நின்று உதவி செய்து கொண்டிருக்கிறாரக்ள்.

    இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

    • பேராவூர் அருகே அமைந்து உள்ள புல்லங்குடி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிவுற்ற நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதுடன் புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி பேசுகிறார்.

    ராமநாதபுரம்:

    சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை ஓராண்டுக்கு முன்பே தொடங்கிய முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் மக்களை சென்றடைவதை கண்காணிக்கும் முறையிலும், கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த சுற்றுப் பயணத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் காரணமாக முதலமைச்சரின் ராமநாதபுரம் மாவட்ட சுற்றுப்பயணம் மற்றும் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. வேறொரு தேதியில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டி ருந்தது.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் நடைபெறவிருந்த ரோடு ஷோ மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாறாக அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (2-ந்தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் செல்கிறார். அன்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

    மறுநாள் (3-ந்தேதி) காலை காரில் புறப்பட்டு ராமநாதபுரத்தையடுத்த பேராவூர் அருகே அமைந்து உள்ள புல்லங்குடி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கு 55 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிவுற்ற நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதுடன் புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி பேசுகிறார். விழா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    • அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
    • தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 'ஆயுத பூஜை' மற்றும் 'விஜயதசமி' வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாகவும்; செல்வத்தைத் தரும் திருமகளாகவும்; துணிவைத் தரும் மலைமகளாகவும் விளங்கும் அன்னையை, பெண்மையைப் போற்றி வணங்கும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், அடுத்த நாளில் விஜயதசமியையும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும்; மனத் திட்பத்தோடு துணிவைத் தரும் மலைமகளையும்; செல்வங்களை அள்ளித்தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும்.

    அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும். ஊக்கமுடன் கூடிய உழைப்பே, வறுமையை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் திருநாளாக இந்தப் பண்டிகை விளங்குகிறது.

    ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து நலமும், வளமும் ஒருங்கே பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட அருள் புரியுமாறு, தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 4 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு அரசாணை.
    • ஏ, பி, சி, டி என்று நான்கு நிலைகளிலும் 119 பதவிகள் மாற்றத்திறனாளிகளுக்கு ஏற்றவை.

    மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் பணி புரிவதற்கான ஏற்ற பதவிகள் குறித்த தகவலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏ, பி, சி, டி என்று நான்கு நிலைகளிலும் 119 பதவிகள் மாற்றத்திறனாளிகளுக்கு ஏற்றவை என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது.
    • மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 157-ஆம் பிறந்தநாளையொட்டி நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் நாள் உள்ளாட்சி அமைப்புகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராம சபைகள் மிகவும் வலிமையான அமைப்புகள் ஆகும். அவற்றில் எடுக்கப்படும் முடிவுகளை உச்சநீதிமன்றம் கூட மதிக்கும் என்பதால், அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிக்க கிராமசபைக் கூட்டங்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தமிழ்நாட்டின் இன்றைய தலையாய பிரச்சனை மது மற்றும் போதை ஒழிப்பு தான். ஒருபுறம் தெருத்தெருவாக மதுக்கடைகளைத் திறந்து இளைஞர்களையும், மாணவர்களையும் அரசே குடிகாரர்களாக்கி வரும் நிலையில், இன்னொருபுறம் ஆளுங்கட்சியின் ஆசிகளுடன் செயல்படும் போதை வணிகர்கள் கிராமங்கள் வரை கஞ்சா, அபின், கோகெயின், பிரவுன் சுகர், எல்.எஸ்.டி, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள்களை கொண்டு வந்துவிட்டனர்.

    மது மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது. மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கையும் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு நாளை மறுநாள் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    • சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

    இதுபோன்ற வீடியோக்கள் மட்டுமின்றி முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்று கருத்துகளை பதிவிடும் நபர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறையினரை குற்றம் சாட்டியும், குறிப்பிட்ட கட்சி மீது களங்கம் விளைவிக்கும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

    இப்படி அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை தலைமை இயக்குனரகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தியான பதிவுகளை வெளியிட்ட 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகியான சகாயம், மாங்காடு பகுதியைச் சேர்ந்த விஜய் கட்சி உறுப்பினர் சிவனேஸ்வரன், ஆவடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான சரத்குமார் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெலிக்சை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர மேலும் 22 பேர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர். இதை மீறி, செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசில் சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கென்று ஏற்கனவே தனிப்பிரிவு உள்ளது. அவர்கள் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.

    ×