என் மலர்tooltip icon

    கேரளா

    • 300 பேருக்கு கீழ் இருந்த அந்த எண்ணிக்கை தற்போது 472 ஆக அதிகரித்துள்ளது.
    • நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றே வந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகின்றன. டெங்கு, டைபாய்டு, எலி மற்றும் பன்றி காய்ச்சல்கள் மட்டுமின்றி வெஸ்ட் நைல், ஷிகல்லா, அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட அரிய வகை நோய்களும் பரவியது.

    இந்தநிலையில் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரசுக்கு பலியானான். கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

    இதையடுத்து நிபா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை களமிறங்கியது. பலியான சிறுவனின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார் செய்தது. குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    300 பேருக்கு கீழ் இருந்த அந்த எண்ணிக்கை தற்போது 472 ஆக அதிகரித்துள்ளது. சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றே வந்துள்ளது.

    நிபா வைரஸ் பாதிப்பு உள்ள இடங்களில் ஆய்வு செய்வதற்காக புனேவில் இருந்து வந்துள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையினான நிபுணர்கள் குழுவினர் வவ்வால்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நிவா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மாநில சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் பரவல் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. அனக்காயம் ஊராட்சியில் 95 குழுக்களும், பாண்டிக்காடு ஊராட்சியில் 144 குழுக்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

    இந்த 2 ஊராட்சிகளிலும் நேற்று 8,376 ஆயிரம் வீடுகளில் சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்தினர். இதுவரை 26ஆயிரத்து 430 வீடுகளில் காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    • பலியான சிறுவனின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார் செய்தது.
    • தொற்று அறிகுறிகள் உள்ள 19 பேர் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்குவதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவ தொடங்கின. இந்நிலையில் பருவமழை தீவிரமடைந்ததால் தொற்று நோய்களின் பாதிப்பு அதிகரித்தது.

    அங்கு வழக்கமான காய்ச்சல்களான டெங்கு, டைபாய்டு, எலி மற்றும் பன்றி காய்ச்சல்கள் மட்டுமின்றி வெஸ்ட் நைல், ஷிகல்லா, அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட அரிய வகை நோய்களும் பரவின. காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

    இந்தநிலையில் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபா வைரசுக்கு பலியானான். காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து நிபா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை களமிறங்கியது. பலியான சிறுவனின் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார் செய்தது.

    குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் என 460 பேர் தொடர்பு பட்டியலில் இடம் பெற்றனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் ஆபத்தான பிரிவில் 220 பேர் உள்ளனர். அவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    தொற்று அறிகுறிகள் உள்ள 19 பேர் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறார்கள். சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களிடமிருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நெருங்கிய உறவினர்கள் 17 பேருக்கான பரிசோதனை முடிவு நேற்று வந்தது. அதில் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டது.

    இந்த தகவலை மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார். மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 21 நாள் தனிமைப்படுத்தலை தொடரவேண்டும் என்றும், நெறிமுறைகளை மீறுவோர் மீது பொது சுகாதார திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மந்திரி தெரிவித்திருக்கிறார். 

    இந்நிலையில் நிபா வைரஸ் பாதிப்பு உள்ள இடங்களில் ஆய்வு செய்வதற்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையினான நிபுணர்கள் குழு கேளா வந்தது. அவர்கள் தொற்று பாதித்த பகுதியில் வவ்வால்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் புனே வைராலஜி நிறுவனத்தில் இருந்து ஒரு மொபைல் பரிசோதனை வாகனம் கோழிக்கோட்டுக்கு வந்துள்ளது. அந்த வாகனத்தில் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து சேகரிக்க்ப்படும் மாதிரிகளை உடனடியாக பரிசோதனை செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    காய்ச்சல் பரவலை கண்காணிக்கும் விதமாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் அனக்காயம் மற்றும் பாண்டிக்காடு ஊராட்சிகளில் 7ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று காய்ச்சல் பாதிப்பு பற்றிய தகவல்களை சேகரித்துள்ளனர்.

    அனக்காயம் ஊராட்சியில் 95 குழுக்களும், பாண்டிக்காடு ஊராட்சியில் 144 குழுக்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. அது மட்டுமின்றி இந்த 2 ஊராட்சிகளிலும் 18ஆயிரம் வீடுகளில் சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிபா வைரசுக்கு 14 வயது சிறுவன் பலியானான்.
    • கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை நிபா வைரசுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பல்வேறு காய்ச்சல்கள் பரவியிருக்கும் நிலையில் நிபா வைரசுக்கு 14 வயது சிறுவன் ஒருவன் பலியானான். மலப்புரம் மாவட்டம் பாண்டிக்காடு அருகே உள்ள செம்பரசேரி பகுதியை சேர்ந்த அந்த சிறுவன், கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை சுகாதாரத்துறையினர் தயார் செய்தனர்.

    அந்த பட்டியலில் சிறுவனின் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் என 330 பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் உள்பட 406 பேர் சுகாதார துறையினரின் நேரடி கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களில் 139 சுகாதார பணியாளர்கள் உள்பட 194 பேர் ஆபத்து உள்ளவர்களாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்திருக்கிறார்.

    கேரள மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை நிபா வைரசுக்கு 21 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிபா வைரஸ் பரவலையடுத்து, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • திருநங்கைகள் ஒரு முக்கியமான பிரிவினர்.
    • கோவிலில் நடந்திருப்பது கேரளா மாநிலத்தில் இதுவே முதன்முறை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் தயா காயத்ரி, கார்த்திகா ரதீஷ், ஸ்ருதி சித்தாரா, ஸ்ரேயா திவாகரன், மைதிலி நந்தகுமார், சந்தியா அஜித், சங்கீதா.

    இவர்களுக்கு பரத நாட்டியம் படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் ஒரு தனியார் அறக்கட்டளையின் முயற்சி காரணமாக திருநங்கைகளுக்கு பரதநாட்டிய பயிற்சி கொடுக்கும் அகாடமியில் சேர்ந்தனர்.

    அவர்களுக்கு பரதநாட்டிய கலைஞரான சஞ்சனா சந்திரா பயிற்சி அளித்தார். இவர் மோகன்லால் நடித்த 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற படத்ததன் மூலம் பிரபலமானவர் ஆவார். அவரிடம் திருநங்கைகள் 7 பேரும் பரதநாட்டிய பயிற்சியை முடித்தனர்.

    இதையடுத்து அவர்கள் பரதநாட்டிய அரங்கேற்றம் நடத்துவதற்கு அவர்கள் பயிற்சி பெற்ற அகாடமி ஏற்பாடு செய்தது. அந்த நிகழ்ச்சி எர்ணாகுளத்தில் உள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவிலில் நடை பெற்றது. திருநங்கைகள் 7 பேரும் பரதநாட்டியம் ஆடினர்.

    திருநங்கைகள் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும் போது, 'திருநங்கைகள் ஒரு முக்கியமான பிரிவினர். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவளிக்க விரும்புகிறேன். இந்த நிகழ்வு உள்ளடக்கம் மற்றும் சமூக ஏற்புக்கான ஒரு படியாகும்' என்றார்.

    திருநங்கைகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி ஒரு கோவிலில் நடந்திருப்பது கேரளா மாநிலத்தில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது.
    • பாம்பு வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம்.

    கண்ணூர்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 28). டெக்னீஷியனான இவர் கடம்பேரி பகுதியில் உள்ள பாபு என்பவரது வீட்டில் சலவை எந்திரத்தை பழுதுபார்க்க சென்றார். அங்கு எந்திரத்தை இயக்க முயன்றபோது, உள்ளே ஏதோ ஒன்று சுழல்வதை கண்டார். அது துணி என நினைத்து எந்திரத்திற்குள் கையை நீட்டி எடுக்க முயன்றார். அப்போது அது பாம்பு என்பது தெரியவந்தது. உடனே ஜனார்த்தனன் கையை மேலே தூக்கினார். இதை பார்த்த அவர், பாபு ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது. அதற்குள் பாம்பு எப்படி புகுந்தது என்பது தெரியவில்லை என்று பாபு கூறினார்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது பிடிபட்டது நாகப்பாம்பு ஆகும். வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • உம்மன் சாண்டி பவுண்டேசன் சார்பில், பொது சேவை விருதுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
    • சசிதரூர் எம்.பி. தலைமையிலான குழு, பரிசுக்கு தகுதியானவர்களை பரிசீலித்து தேர்வு செய்தது.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் மூத்த தலைவா்களில் ஒருவரும், கேரள முன்னாள் முதல் மந்திரியுமான உம்மன் சாண்டி, இறந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி அவரது பெயரில் நிறுவப்பட்டுள்ள உம்மன் சாண்டி பவுண்டேசன் சார்பில், பொது சேவை விருதுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி முதல் ஆண்டுக்கான விருதுக்கு காங்கிரஸ் தலைவர், ராகுல்காந்தியின் பெயர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த பரிசு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும், விருதுச் சிற்பமும் கொண்டதாகும். சசிதரூர் எம்.பி. தலைமையிலான குழு, பரிசுக்கு தகுதியானவர்களை பரிசீலித்து தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

    பொதுமக்களின் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், ராகுல்காந்தி நடத்திய பாரத ஒற்றுமை யாத்திரை உள்ளிட்ட சேவைகளுக்காக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

    • கேரளாவை தனி நாடாக மாற்ற முயல்கிறாரா முதலவர் பினராயி விஜயன்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
    • னியாக ஒரு பதவியை உருவாக்கி அதில் ஒருவரை நியமித்துள்ளது வழக்கத்துக்கு மாறாக உள்ளது.

    இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை மத்திய அரசின் வெளியுறவுத் துறை கவனித்து வரும் நிலையில் கேரள அரசு தங்களின் மாநிலத்துக்கான வெளியுறவுத் துறைச் செயலாளரை நியமித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி கே.வாசுகி வெளியுறவு விவகாரங்கள் துறையை கூடுதலாக கவனிப்பார் என்று கடந்த 15-ம் தேதி கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இந்த விவகாரங்களில் வாசுகிக்கு பொது நிர்வாக [அரசியல்] துறை உதவும் என்றும்  மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் வாசுகி தொடர்பு கொள்ள ஏதுவாக டெல்லியில் உள்ள கேரள இல்லத்தின் ஆணையர் உதவ வேண்டும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கேரள அரசின் இந்த நடவடிக்கை சர்ச்சையாகியுள்ள நிலையில் கேரள பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் தனது எக்ஸ் பதிவில், 'இந்த செயல் அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது. கேரள இடதுசாரி கூட்டணி அரசுக்கு வெளியுறவு விவகாரங்களை கவனிக்க எந்த அதிகாரமும் இல்லை. அரசியல் சாசனத்துக்கு முரணான இந்த நடவைடிகை ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச்செல்லும். கேரளாவை தனி நாடாக மாற்ற முயல்கிறாரா முதலவர் பினராயி விஜயன்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், 'வெளியுறவுத்துறை மத்திய அரசில் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசுகள் தன்னிச்சையாக வெளியுறவு விவகாரங்களில் செயல்பட அதிகாரம் இல்லை.ஆனால் வெளிநாடுகளில் உள்ள தங்கள் மாநிலத்தின் மக்கள் தொடர்பான விவகாரங்களில் மாநில அரசு கவனம் செலுத்துவது இயல்பானதுதான். ஆனால் அதற்காக தனியாக ஒரு பதவியை உருவாக்கி அதில் ஒரு தனி நபரை நியமித்துள்ளது வழக்கத்துக்கு மாறாக உள்ளது என்று கூறியுள்ளார். 

    • கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
    • பலத்தமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் பலத்த காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதிலிருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டிருப்பதன் காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.

    ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது மட்டுமின்றி, தாழ்வான பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளையும் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. அது மட்டுமின்றி பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது. இந்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

    மழையால் வயநாடு மாவட்டம் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு கனமழை காரணமாக இன்றும் பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.

    வயநாடு மாவட்டம் மட்டுமின்றி கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களில் இன்று பலத்தமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி வருகிற 23-ந்தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர வாய்ப்பு இருக்கதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்பிறகு மழையின் தீவிரம் குறையும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் பலத்தமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் பலத்த காற்றும் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மிகவும் அதிகளவு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த 13-ந்தேதி முதல் நேற்று (19-ந்தேதி) வரையிலான ஒரு வார காலத்தில் சராசரியாக 150 மில்லிமீட்டர் மழை பெய்ய வேண்டும்.

    ஆனால் மாநிலத்தில் 315.5 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது. சராசரி அளவை விட இருமடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த ஒரு வார காலத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டத்தில் 171 சதவீதமும், கோழிக்கோட்டில் 132 சதவீதமும், மாஹே பகுதியில் 160 சதவீதமும், வயநாட்டில் 95 சதவீதமும் மழை பதிவாகியிருக்கிறது.

    • நியூயார்க்கில் உள்ள ஸ்டேட்டன் தீவில் வசித்து வருகிறார்.
    • அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாலவட்டம் கைப்பட்டூர் செறிவுகால் பகுதியை சேர்ந்த தம்பதி ஜான் மேத்யூ-ராஜி மேத்யூ. இவர்களது மகள் மீரா தங்கம் மேத்யூ.

    ஜான் மேத்யூவின் குடும்பம் முதலில் கேரளாவில் தான் இருந்தது. அப்போது தான் மீரா தங்கம் மேத்யூ பிறந்தார். பின்பு தனது 3 வயதில் அமெரிக்காவுக்கு சென்றுவிட்ட மீரா தங்கம் மேத்யூ, அங்கே தான் வாழ்ந்து வந்தார்.

    அவர் நியூயார்க்கில் உள்ள ஸ்டேட்டன் தீவில் வசித்து வருகிறார். வாலிப வயதை எட்டியதும் மீராவுக்கு மாடலிங் துறையில் விரும்பம் வந்தது. அதன் காரணமாக பல்வேறு அழகி போட்டிகளில் அவர் பங்கேற்றார். 'மிஸ் ஸ்டேட்டன் ஐலேண்ட்' என்ற பட்டத்தையும் அவர் வென்றார்.

    கடந்த 2022-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த 'மிஸ் இந்தியா' பட்டத்தை வென்ற மீரா, அமெரிக்காவின் பிரதிநிதியை அனுப்பும் 'மிஸ் வோல்டு அமெரிக்கா' போட்டியில் பங்கேற்க உள்ளார். நியூயார்க்கை பிரதிநிதித் துவப்படுத்தும் பட்டங்களின் ஒன்றான மிஸ் லிபர்ட்டியாக மீரா வருகிறார்.

    கேரள பெண்ணான மீரா தங்கம் மேத்யூ அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குழு அமைத்து ஆலோசனை நடத்தியது.
    • பா.ஜ.க.வின் முன்னேற்றம் ஒரு தற்காலிக நிகழ்வு மட்டுமே.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் கடந்த 2019 தேர்தலைப்போன்றே காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. அங்குள்ள 20 தொகுதிகளில் 18 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.

    மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி மற்றும் பா.ஜ.க. தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. இந்த படுதோல்வி கம்யூனிஸ்ட்டு கட்சிகளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும், பா.ஜ.க.வுக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

    காரணம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ்கோபி வெற்றி பெற்றதன் மூலம், கேரளாவில் முதன்முதலாக கால் பதித்துவிட்ட பெருமையை பா.ஜ.க. பெற்றுவிட்டது. அது மட்டுமின்றி கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலை விட தற்போதைய தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது.

    கேரளாவில் கால் பதித்து விட்டது, வாக்கு சதவீதம் அதிகரித்தது உள்ளிட்ட இரு விஷயங்களே பா.ஜ.க.வுக்கு மகிழ்ச்சியை அளித்தது. பா.ஜ.க.வின் இந்த எழுச்சி கேரள மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்டுகள், 18 மக்களவை தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    தங்களது கட்சி படுதோல்வி அடைவதற்கான காரணங்களை கண்டறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குழு அமைத்து ஆலோசனை நடத்தியது. அந்த குழு வெளியிட்ட அறிக்கையின் படி வருங்காலங்களில் சிறப்பாக செயல்பட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    இந்தநிலையில் கேரளாவில் பா.ஜ.க.வின் முன்னேற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்களும் கவலை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் சுல்தான் பத்தேரியில் நடந்து வருகிறது.

    அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் தான், நிர்வாகிகளின் மத்தியில் கவலை தெரிவித்து பேசியிருக்கின்றனர்.

    நிர்வாகிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசும்போது, 'கேரள மாநிலத்தில் பா.ஜ.க.வின் முன்னேற்றம் ஒரு தற்காலிக நிகழ்வு மட்டுமே. காங்கிரஸ் தலை வர்கள் மற்றும் தொண் டர்கள் முறையான அர்ப் பணிப்புடன் செயல்படு வதன் மூலம் இது எளிதில் மாறும்' என்று தெரிவித்தார்.

    மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் பேசும் போது, 'கேரள மாநில மக்களவை தேர்தலில் 11 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. முதலிடம் பிடித்ததை குறிப்பிட்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர் பேசியதாவது:-

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக மாறும் சூழ்நிலை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கூட்டு முயற்சியின் மூலம் அந்த வாக்குகளை மீண்டும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு கொண்டுவர வேண்டும்.

    அடிமட்ட தொழிலாளர்கள், சாமானிய மக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் வகையில் தொழிலாளர்களின் பூத் அளவிலான செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்.

    சி.பி.எம்.-ன் பின்னடைவுக்கு காரணம் சாமானியர்களுடன் அவர்களுக்கு தொடர்பு இல்லாதது தான். காங்கிரசுக்கு இது நடக்கக்கூடாது. அவர்களின் தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சதீசன் பேசும் போது, 'எதிர்வரும் நாட்களில் நடைபெற உள்ள தேர்தலை எதிர்கொள்ள கட்சியை நன்கு ஒழுங்கமைக்க வேண்டும். நமது பணி சமூகத்தில் அனைத்து மட்டங்களிலும் சென்றடைய வேண்டும். அவர்களை பிரநிதிதித்துவப் படுத்துவோம் என்று மக்கள் நினைக்கும் போது தான் நமக்கு வாக்களிப்பார்கள் . சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் உள்வாங்க வேண்டும்' என்றார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசியதாவது:-

    மாநிலத்தில் பாரதிய ஜனதாவின் முன்னேற்றத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மீது பினராய் விஜயன் எடுத்த மென்மையான நிலைப்பாடு தான் சி.பி.எம்.-ன் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு செல்வதற்கு காரணமாக அமைந்தது.

    மேற்குவங்கம் மற்றும் திரிபுராவில் நடந்தது கேரளாவிலும் மீண்டும் மீண்டும் நடந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் சாமானியர்களின் உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் விழிப்புடன் இருக்கவேண்டும். அப்போது தான் மக்கள் நம் கட்சியின் மீது நம்பிக்கை வைப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கேரளா மாநிலத்தில் வருகிற 22 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் மாயமாகி உள்ளார்.

    மழை பாதிப்பு காரணமாக 224 பேர் மீட்கப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கனமழையால் 97 வீடுகள் சேதமுற்றும், ஒரு வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    தொடர் கனமழை காரணமாக ஆலப்புழா, இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கண்ணூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

    • லிப்ட்டில் இருந்த எச்சரிக்கை ஒலி பொத்தானையும் அழுத்தினேன். அப்போதும் யாரும் உதவ முன்வரவில்லை.
    • எனக்கு தாகமோ பசியோ ஏற்பட்டபோது, ​​நான் என் உதடுகளை நக்கினேன்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 13-ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக ரவீந்திரன் நாயர் (59) என்பவர் சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் உள்ள லிப்ட் நடுவழியில் நின்றதால் ரவீந்திரன் லிப்ட்டிற்குள் சிக்கியுள்ளார்.

    ரவீந்திரன் வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்நிலையில் 2 நாட்களாக செயல்படாமல் இருந்த லிப்ட் நேற்று சரிசெய்யப்பட்டு இயக்கப்பட்டது. அப்போது தான் ரவீந்திரன் லிப்ட்டுக்குள்ளேயே 2 நாட்களாக சிக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டார்.

    2 நாட்களாக லிபிட்டிற்குள் சிக்கியிருந்த மோசமான அனுபவங்களை உயிர் பிழைத்த ரவீந்திரன் பகிர்ந்துள்ளார்.

    "எனது அலைபேசியைப் பயன்படுத்தி லிப்ட்டுக்குள் இருந்த அவசர உதவி எண்களை அழைத்தேன்.ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை. பின்னர் அலைபேசி கீழே விழுந்து வேலை செய்வதை நிறுத்தியது. லிப்ட்டில் இருந்த எச்சரிக்கை ஒலி பொத்தானையும் அழுத்தினேன். அப்போதும் யாரும் உதவ முன்வரவில்லை. அதன் பிறகு, இரண்டாவது சனிக்கிழமை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை விடுமுறை நாள் என கருதி உதவிக்காக காத்திருந்தேன்.

    ஒரு மூலையில் சிறுநீர் கழித்தேன். சில சமயம் சத்தமாக அழுதேன். என்னால் தூங்க முடியவில்லை. எனக்கு தாகமோ பசியோ ஏற்பட்டபோது, நான் என் உதடுகளை நக்கினேன். தொடர்ந்து எச்சரிக்கை மணியை அழுத்திக்கொண்டே இருந்தேன். லிப்ட் அறையில் மின்விசிறி அல்லது வெளிச்சம் இல்லை என்றாலும், காற்று நுழைய இடம் இருந்ததால் என்னால் மூச்சு விட முடிந்தது" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மருத்துவமனையின் 2 லிப்ட் ஆபரேட்டர்கள் உட்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில சுகாதாரத் துறை நேற்று உத்தரவிட்டது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தர விட்டுள்ளார்.

    ×