என் மலர்tooltip icon

    கேரளா

    • அரவணை பிரசாதம் விற்பனை வரவு ரூ.146 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 700 ஆகும்.
    • காணிக்கை முழுவதும் இன்னும் எண்ணி முடிக்காததால் அதன் வருவாய் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    சபரிமலை:

    சபரிமலை சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பி.எஸ். பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மொத்த வருமானம் ரூ.357 கோடியே 47 லட்சத்து 71 ஆயிரத்து 909 ஆகும். கடந்த ஆண்டு இதே கால அளவில் மொத்த வருமானமாக ரூ.347 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 884 கிடைத்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.10.35 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

    அரவணை பிரசாதம் விற்பனை வரவு ரூ.146 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 700 ஆகும். அப்பம் பிரசாதம் விற்பனை மூலம் ரூ.17 கோடியே 64 லட்சத்து 77 ஆயிரத்து 795 கிடைத்துள்ளது.

    கோவிலில் நேற்று வரை 50 லட்சத்து 6 ஆயிரத்து 412 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5 லட்சம் அதிகம். மேலும் காணிக்கை முழுவதும் இன்னும் எண்ணி முடிக்காததால் அதன் வருவாய் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

    நாளை (21-ந் தேதி) காலையில் பந்தளம் அரச குடும்ப உறுப்பினரின் தரிசனத்திற்கு பிறகு கோவில் நடை காலை 7 மணிக்கு அடைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அறிவியலுக்கு மாற்றாக புராணங்களை முன் வைப்பதை எதிர்க்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
    • தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்திலும் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள தோன்னக்கல் அறிவியல் பூங்காவில் சர்வதேச அறிவியல் திருவிழா நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டார். கருத்தரங்கில் அவர் பேசியதாவது:-

    மனிதனின் எலும்பிலும், தோலிலும் சாதி எழுதப்பட்டுள்ளதா என்று கேள்வி கேட்ட கவிஞர்கள் பண்டைய காலத்தில் நம்முடன் இருந்தனர். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கவிஞர்கள், கடவுள்களை கூட கேள்வி கேட்ட பாரம்பரியம் நமக்கு உள்ளது. ஆனால் தற்போது சாதி, மதம் போன்ற வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தங்களுக்கு பிடித்த உணவு சாப்பிடுபவர்களையும், பிடித்த உடைகள் அணிபவர்களையும் சமூகத்தை விட்டு ஒதுக்கி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பகுத்தறிவற்ற வாதங்களுக்கு பதில் அளிக்க வேண்டியது அரசியல் சாசனத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும். மக்களிடையே அறிவியல் உணர்வை பரப்ப வேண்டும் என்று நமது அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களே அறிவியலை கட்டுக்கதையாகவும் புராணங்களை அறிவியலாகவும் திரித்து விடுகின்றனர்.

    அறிவியலுக்கு மாற்றாக புராணங்களை முன் வைப்பதை எதிர்க்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். அறிவியல் என்பது இயற்கை நம்முடன் பேசும் மொழியாகும். அறிவியலுக்கும் அறிவியல் விழிப்புணர்வுககும் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய காலகட்டம் இது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்திலும் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.

    • கடந்த 15-ந்தேதி மகரவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
    • மகரவிளக்கு காலம் முடிவடைவதை தொடர்ந்து நாளை (20-ந்தேதி) இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை வந்தனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    41 நாட்கள் நடைபெற்ற வழிபாடுகளுக்கு பிறகு கடந்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. பின்னர் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது. இந்த கால கட்டத்திலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    கடந்த 15-ந்தேதி மகரவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர். தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு படிபூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (20-ந்தேதி)யுடன் மகரவிளக்கு காலம் நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை கோவிலில் கடைசி நாள் நெய்யபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு அத்தாள பூஜை நடக்கிறது. அதன்பிறகு மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து ஐயப்பசாமி ஊர்வலம் சரம்குத்தி வரை சென்று விட்டு மீண்டும் சன்னிதானம் வந்து சேரும். மகரவிளக்கு காலம் முடிவடைவதை தொடர்ந்து நாளை (20-ந்தேதி) இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு அரிவராசனம் பாடப்பட்டு நடை அடைக்கப்படும். தொடர்ந்து மாளிகப்புரம் கோவிலில் குருதி சடங்குகள் நடைபெறும்.

    மறுநாள் (21-ந்தேதி) காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன. அதன்பிறகு திருவாபரண ஊர்வலம் பந்தளத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சபரிமலை கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்னர் சபரிமலை மேல்சாந்தி, பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம் கோவில் சாவியை ஒப்படைப்பார். இத்துடன் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும்.

    • சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
    • அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது.

    தகவல் தொழில் நுட்பத்தில் நாளுக்குநாள் வளர்ச்சி கண்டுவரும் காலக்கட்டத்தில் வாழ்ந்து வரும் நாம், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கிடைக்கப் பெறுகிறோம். இதன் காரணமாக எந்த ஒரு விஷயத்தையும் நாம் எளிதாக செய்து முடிக்க முடிகிறது.

    இதுபோன்ற வளர்ச்சிகளை கண்டு வியக்கும் நாம், சில விஷயங்களை கண்டு அதிர்ச்சியடைய வேண்டி இருக்கிறது. அதில் ஒன்று தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள். சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

    அதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த போதிலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன. ஆகவே அதனை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டம்.

    சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகளின் பாதுகாப்பு மசோதா (POCSO)-2011 நம் நாட்டு நாடாளுமன்றத்தில் 2012-ம் ஆண்டு மே 22-ந்தேதி நிறைவேற்றப்பட்டது.

    2019-ம் ஆண்டில், போக்சோ சட்டம் திருத்தப்பட்டு மேலும் கடுமையாக்கப்பட்டது. இந்த திருத்தம் குறைந்தபட்ச தண்டனையை 7 முதல் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் வரை உயர்த்தியது. பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், குற்றத்தில் ஈடுபட்டவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும். தீவிர தாக்குதலுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.

    போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்து அனைத்து மாநிலங்களிலும் அது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும் கிடைத்துள்ளது. ஆனால் போக்சோ வழக்குகள் அதிகரித்ததே தவிர, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்ததாக தெரியவில்லை.

    அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது. குட் டச், பேடு டச் என அனைத்து தொடுகைகளின் விவரத்தையும் சிறு குழந்தைகள் இன்று எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் பெரும்பாலான குழந்தைகளுக்கு தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றி அறிந்து கொண்டுள்ளனர் என்றால் அதை மறுக்கமுடியாது. இருந்தபோதிலும் போக்சோ சட்டம் பற்றி பள்ளி குழந்தைகள் எளிதில் தெரிந்துகொள்வதற்காக கேரள மாநில பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் சேர்க்கப்படுகிறது.

    வருகிற கல்வியாண்டில் 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் பற்றிய பாடம் இடம்பெற உள்ளது. இந்த தகவலை கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் கூறியதாவது:-

    போக்சோ சட்டம் பற்றிய பாடம் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் கற்பிக்கப்படும். இது அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலும் சேர்க்கப்படும்.

    மேலும் 5 முதல் 10-ம் வகுப்பு வரை தொழிற்கல்வி சேர்க்கும் வகையில் பாடத்திட்டம் முழுமையாக திருத்தப்படும். 1,3,5,7,9 ஆகிய வகுப்பு பாடப் புத்தகங்களும் அடுத்த கல்வியாண்டில் மாற்றப் படும். 4,6,8,10 வகுப்புகளிலும் பாடத்திடம் அடுத்த ஆண்டு மாற்றப்படுகிறது.

    1-ம் வகுப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் செயல்பாட்டு புத்தகங்கள் உள்ளன. ஆசிரியர்களுக்கான புத்தகங்களும் தயாராகி வருகின்றன. மேலும் நாட்டிலேயே முதன்முறையாக பெற்றோருக்கான புத்தகங்களும் தயாராகிறது.

    புதிய பாடத்திட்டத்தில் விளையாட்டு, கழிவு பிரச்சினை, தூய்மை, குடிமை உணர்வு, சமநீதியுடன் கூடிய பாலின விழிப்புணர்வு, அறிவியல் உணர்வு, விவசாயம், மதச்சார்பின்மை உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. பாட சாலைகள் திறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநிலத்தில் இதற்கு முன்பு விரிவான பாடத்திட்ட திருத்தம் 2007-ம் ஆண்டு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகரவிளக்கு வழிபாடு முடிந்து பக்தர்கள் மலை இறங்கும்போது ஏராளமானோர் தரிசனத்திற்காக மலை ஏறினர்.
    • படி பூஜையில் மத்திய மந்திரி எல்.முருகன், திருவிதாங்கூர் காவடியார் அரண்மனை கோபிகவர்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டும் அதுபோல் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

    இதனால் மகரவிளக்கு தரிசனத்திற்கு உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இருப்பினும் சபரிமலை மகரவிளக்கு வழிபாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். மகரவிளக்கு வழிபாடு முடிந்து பக்தர்கள் மலை இறங்கும்போது ஏராளமானோர் தரிசனத்திற்காக மலை ஏறினர்.


    இந்நிலையில் மகரவிளக்கு வழிபாட்டுக்கு பிறகு சபரிமலையில் சிறப்பு படிபூஜை தொடங்கியது. தினமும் நடைபெறும் படிபூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற படி பூஜையில் மத்திய மந்திரி எல்.முருகன், திருவிதாங்கூர் காவடியார் அரண்மனை கோபிகவர்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    வருகிற 20-ந்தேதி வரை படிபூஜை நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை திருவிதாங்கூர் தேவச ம்போர்டு செய்து வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகரவிளக்கு பூஜை தொடக்கத்திலும் சில நாட்கள் கடும் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி அவதிப்பட்டனர்.
    • கடந்த ஆண்டு ரூ.403 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசனில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டும் மண்டல பூஜை காலத்தில் பல லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்தார்கள்.

    ஆன்லைனில் முன்பதிவு செய்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த நிலையில், உடனடி முன்பதிவு வசதியை பயன்படுத்தியும் ஏராளமானோர் வந்ததால் மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. இதன் காரணமாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட நேர்ந்தது.

    மகரவிளக்கு பூஜை தொடக்கத்திலும் சில நாட்கள் கடும் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி அவதிப்பட்டனர். உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்ட பிறகே கூட்ட நெரிசல் கட்டுக்குள் வந்தது. தற்போது மகரவிளக்கு பூஜை முடிவுக்கு வந்த நிலையில், தை மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டிருக்கிறது. வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

    பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததாக கூறப்பட்டாலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பக்தர்கள் வருகை குறைவு என்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை 16 லட்சம் குறைந்துள்ளது.

    அதேபோன்று வருவாயும் கடந்த ஆண்டை விட குறைவாகவே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.403 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு மண்டல சீசனில் ரூ.241 கோடியே வருவாய் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசனில் வருவாய் ரூ.300 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி பாரம்பரிய உடை அணிந்து கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார்.
    • பிரதமர் மோடிக்கு நடிகர் சுரேஷ்கோபி தங்க தகடு ஒன்றை பரிசாக வழங்கினார்.

    திருவனந்தபுரம்:

    பிரதமர் நரேந்திரமோடி கடந்த 3-ந்தேதி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்த நிலையில், தற்போது 2-வது முறையாக கேரளா வந்துள்ளார். அவர் நேற்று மாலை தனி விமானத்தில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சிக்கு வந்தார்.

    பின்பு பிரதமர் மோடி கொச்சியில் நடந்த பிரமாண்ட ரோடு-ஷோவில் பங்கேற்றார். திறந்த வாகனத்தில் நின்றபடி சென்ற பிரதமர் மோடியை சாலையில் இருபுறமும் நின்ற பாரதிய ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். பின்னர் கொச்சியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கினார்.

    பிரதமர் மோடி இன்று காலை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதற்காக அவர் கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக குருவாயூருக்கு வந்தார். அவர் இன்று காலை 7.35 மணியளவில் ஸ்ரீகிருஷ்ண கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். பின்பு அங்கிருந்து காரில் குருவாயூர் கோவிலுக்கு சென்றார்.

    பிரதமர் மோடி பாரம்பரிய உடை அணிந்து கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார். அவர் கோவிலின் அனைத்து பகுதிகளுக்கும் நடந்து சென்று வழிபட்டார். சுமார் 1 மணி நேரம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

    அதன் பிறகு காலை 8.45 மணியளவில் குருவாயூர் கோவிலில் நடந்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யான நடிகர் சுரேஷ்கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிரதமர் மோடிக்கு நடிகர் சுரேஷ்கோபி தங்க தகடு ஒன்றை பரிசாக வழங்கினார்.

    திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு குருவாயூர் கோவிலில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, திருப்பாறையாறு ஸ்ரீராம சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மற்றும் திருப்பாறையாறு ஸ்ரீராமசுவாமி கோவிலில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு கடற்படைக்கு சொந்தமான சர்வதேச கப்பல் பழுது நீக்கும் மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் மராமத்து உலர் பணியகத்தை தொடங்கி வைக்கிறார்.

    அதன் பிறகு எர்ணாகுளம் அருகே மரைன் டிரைவ் பகுதியில் பாரதிய ஜனதா சார்பில் நடக்கும் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் நரேந்திரமோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு குருவாயூர் மற்றும் கொச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பல்வேறு திட்டங்களில் தென் மாநிலங்களை மோடி தலைமையிலான மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.
    • பிற மாநில முதல்-மந்திரிகள் மற்றும் மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியின் கூட்டம் நடந்தது. அதில், கேரள மாநிலத்தை புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லி ஜந்தர்மந்தரில் பிப்ரவரி 8-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார். அதில் கேரள மாநில மந்திரிகள், இடதுசாரி கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.

    இது குறித்து இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-


    மாநில அரசுகளுக்கு எதிரான பாரபட்ச நடவடிக்கைகளை கைவிடுமாறு கேரள அரசு சார்பில் மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தென் மாநிலங்களை மோடி தலைமையிலான மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.

    அதனை கண்டித்து பிப்ரவரி 8-ந்தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்த இடது ஜனநாயக முன்னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அன்றைய தினம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிற மாநில முதல்-மந்திரிகள் மற்றும் மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா வருகிறார்.
    • விமானம் மூலம் கொச்சிக்கு வரும் பிரதமர் மோடி ரோடு-ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    இன்று மாலை கேரளா செல்லும் பிரதமர் மோடி எம்.ஜி ரோட்டில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் இருந்து எர்ணாகுளத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வரை ரோடு ஷோ செல்கிறார். அதனை தொடர்ந்து, நாளை கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி குருவாயூர் செல்கிறார். குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கு நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி-யும் நடிகருமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

    அதன் பின்னர் காலை 10 மணிக்கு திரிச்சூர் மாவட்டம் திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். அங்கிருந்து கொச்சிக்கு திரும்பும் பிரதமர் மோடி, கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்பு சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் 6 ஆயிரம் பேர் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதன் பிறகு டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி வந்து செல்லும் வரை, குருவாயூர் கோவில் மற்றும் திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது. பிரதமர் புறப்பட்டு சென்ற பின்னரே, பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் வருகையால், காலை குருவாயூர் கோவிலில் நடைபெற இருந்த 39 திருமணங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

    மோடி வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் ரோடு-ஷோ மேற்கொள்ளும் இடங்கள், குருவாயூர் கிருஷ்ணர் கோவில், திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோவில், கொச்சி கப்பல் கட்டும் தளம், எர்ணாகுளம் அரசு விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

    • 18ம் படி ஏறி ஐயப்பன் சன்னிதானத்தை திருவாபரணம் அடைந்தது.
    • கோவிலில் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர்.

    புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மகரவிளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான மகரஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.

    மகரவிளக்கு பூஜையையொட்டி இன்று அதிகாலை 2.46 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகர சங்கராந்தி எனப்படும் மகர சங்ரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    மாலை 6.20 மணிக்கு பந்தளத்தில் இருந்து சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும் திருவாபரணத்தை தந்திரி மகேஷ் மோகனரு, மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக் கொண்டு அய்யப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்துகிறார்கள். 

    அதன்படி, 18ம் படி ஏறி ஐயப்பன் சன்னிதானத்தை திருவாபரணம் அடைந்தது.

    அந்த சமயத்தில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் சுவாமி ஐயப்பன் பேரொளியாக ஜோதி வடிவத்தில் பக்தர்களுக்கு 3 முறை காட்சி தந்தார். அப்போது, அங்கு திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர்.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக பம்பை மற்றும் சன்னிதானத்தில் கூடுதலாக ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • காருக்கு பேன்சியாக நம்பர் வாங்க ஆசைப்பட்ட ராஜ், 7777 என்ற எண்ணை தேர்வு செய்துள்ளார்.
    • பேன்சி நம்பர் பொருத்திய காருடன் ராஜ் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜ். இவர் ஆசை ஆசையாக பி.எம்.டபிள்யூ. தயாரிப்பான ஐ.7 மாடல் கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

    இந்தியாவில் இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ.2 கோடி என கூறப்படும் நிலையில், அந்த காருக்கு பேன்சியாக நம்பர் வாங்க ஆசைப்பட்ட அவர், 7777 என்ற எண்ணை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த எண்ணை பெறுவதற்கு கடும் போட்டி நிலவியது.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்ற ராஜ் கே.எல்.07 டி.சி.7777 என்ற பேன்சி நம்பர் பிளேட்டை வாங்குவதற்காக அவர் ரூ.7.7 லட்சம் செலவழித்துள்ளார். பேன்சி நம்பர் பொருத்திய காருடன் ராஜ் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தொடர்ந்து 18-ம் படி வழியாக சன்னிதானம் கொண்டு செல்லப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
    • ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நிறைவடைந்த பின்னர் இரவு 8 மணிக்கு பிறகு பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். மண்டல பூஜை முடிவடைந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பதிவு செய்த பக்தர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    நடை திறக்கப்பட்ட நாள் முதல் பக்தர்களின் கூட்டம் சபரிமலையில் அலைமோதியதால் தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கூட்டம் ஓரளவுக்கு குறைந்தது.

    இந்த நிலையில் மகரவிளக்கு பூஜை நாளை (15-ந்தேதி) நடக்கிறது. இந்த நாளில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்கள் நேற்று முதலே சபரிமலையில் குவியத் தொடங்கி விட்டனர். இதனால் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் 3 சந்தன பெட்டிகளில் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். அந்த ஆபரணங்கள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்பட்டன.

    இந்த ஊர்வலம் பாரம்பரிய பெருவழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக சென்றது. நாளை (15-ந்தேதி) மதியம் பம்பை சென்றடையும் திருவாபரண ஊர்வலம், அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷங்களுக்கிடையில் சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலை சென்றடையும். அங்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18-ம் படிக்கு கீழ் பகுதியில் மந்திரி ராதாகிருஷ்ணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படும்.

    தொடர்ந்து 18-ம் படி வழியாக சன்னிதானம் கொண்டு செல்லப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதன்பிறகு பொன்னம்பலமேட்டில் சுவாமி ஐயப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளிப்பார். இதனை பக்தர்கள் சரண கோஷம் முழங்கியபடி தரிசனம் செய்வார்கள். முன்னதாக மகர விளக்கு பூஜையையொட்டி நடைபெறும் மகர சங்ரம பூஜை வழிபாடு அதிகாலை 2.46 மணிக்கு தந்திரி தலைமையில் நடைபெறும். அப்போது திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து கன்னி ஐயப்பன்மார்கள் புடை சூழ கொண்டு வரப்படும் நெய் மூலம் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    மகரவிளக்கு பூஜையில் பங்கேற்க சபரிமலையில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு பணிகளில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளனர். இதுகுறித்து கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. ஷேக் தர்வேஷ் கூறுகையில், சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் பாண்டிதா வலம் போன்ற முக்கிய இடங்களில் 4 சூப்பிரண்டுகள், 19 துணை சூப்பிரண்டுகள், 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட கூடுதலாக 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.

    மகரஜோதி தரிசனத்திற்கு பிறகு மலையில் இருந்து இறங்கும் பக்தர்கள் அசம்பாவிதங்களை தவிர்க்க சரியான வெளியேறும் திட்டம் நடைமுறையில் உள்ளது என்றும், மகரஜோதியை காண பக்தர்கள் கூடும் இடங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

    ஐயப்பனுக்கான திருவாபரண பெட்டிகள் கொண்டு செல்வதற்கு வசதியாக நாளை (15-ந்தேதி) காலை 10 மணி முதல் பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை 18-ம் படி வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நிறைவடைந்த பின்னர் இரவு 8 மணிக்கு பிறகு பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவார்கள். பம்பையில் இருந்து நாளை மறுநாள் (16-ந்தேதி) அதிகாலை முதல் மீண்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

    ×