என் மலர்tooltip icon

    இந்தியா

    • நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்.
    • தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை.

    திருச்சி:

    திருச்சி அ.ம.மு.க. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார்.

    கூட்டத்திற்கு முன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்.

    மோடி பிரதமராக வேண்டும் என 2024 ல் உருவாக்கப்பட்ட கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி அதில் நாங்கள், ஓ.பன்னீர் செல்வம் இணைந்தோம்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்த பின்பு அ.ம.மு.க. இருப்பிற்கு எந்த ஆபத்தும் வரவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி பலப்பட்டுள்ளது. தி.மு.க.விற்கு தான் ஆபத்து வந்துள்ளது. எங்களின் ஒரே குறிக்கோள் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது தான்.

    அமித்ஷாவின் அந்த முயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.

    அ.தி.மு.க. தலைமைக்கும் எங்களுக்கு எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் தேர்தல் வரை ஒதுக்கி வைத்துவிட்டு தி.மு.க.வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம்.

    அமித் ஷாவின் முயற்சிக்கு எந்த பங்கமும் வரக்கூடாது என வார்த்தைகள் விடாமல் நாங்கள் நாகரிகமான முறையில் கூட்டணி பலப்பட வேண்டும் என விரும்புகிறோம்.

    தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை யார் என்பது குறித்து அமித் ஷா என்ன பதில் கூறினாரோ அது தான் என் பதிலும்.

    தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை.

    டிசம்பரில் எல்லா கூட்டணிகளும் உருப்பெற்று விடும். அந்த நேரத்தில் நானே கூட்டணி குறித்து பதில் அளிக்கிறேன்.

    தி.மு.க. ஆட்சி மீது கடுமையான கோபம் மக்களிடம் இருப்பதால் பயந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் என கூறுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவி மற்றும் அவரது தாயிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
    • சிறுமிக்கு பிறந்த குழந்தை தற்போது குழந்தைகள் நலக்குழு பராமரிப்பில் உள்ளது.

    கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீடடில் வைத்து குழந்தை பெற்றார். அவருக்கு ரத்தப்போக்கு அதிகமானதை தொடர்ந்து கண்ணங்காட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இதையடுத்து 10-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற விவகாரம் வெளியே தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தனக்கு தெரியாது என்று தாய் கூறினார். மாணவியிடம் விசாரித்தபோது கர்ப்பத்துக்கு காரணமானவர் யார்? என்பதை கூறவில்லை.

    இருந்தபோதிலும் மாணவி மற்றும் அவரது தாயிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் கர்ப்பத்துக்கு அவரது தந்தையே காரணம் என்பது தெரியவந்தது. 48 வயதான அவர் வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்தார்.

    அவரை உடனடியாக சொந்த ஊருக்கு திரும்பி வருமாறு போலீசார் கூறினர். இதையடுத்து அவர் வளைகுடா நாட்டில் இருந்து விமானம் மூலம் மங்களூருக்கு வந்தார். அங்கிருந்து தனது ஊருக்கு ரெயிலில் வந்த மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

    மாணவி பெற்றெடுத்த குழந்தைக்கு அவர்தான் காரணம் என்பதை உறுதி செய்ய மாணவியின் தந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறுமிக்கு பிறந்த குழந்தை தற்போது குழந்தைகள் நலக்குழு பராமரிப்பில் உள்ளது. குழந்தை பெற்றெடுத்த 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பத்துக்கு காரணமான தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் காசர்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது.
    • கடந்த 1999-ம் ஆண்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. ஆட்சி அமைத்ததை தான் கூறினேன்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க- பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ,

    1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பா.ஜ.க. வை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம் என்று கூறினார்.

    பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்கும் விதமாக ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை என்று கடம்பூர் ராஜூ விமர்சித்து பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை என்ற பேச்சிற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    கடந்த 1999-ம் ஆண்டில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. ஆட்சி அமைத்ததை தான் கூறினேன்.

    தான் கூறிய கருத்து தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டு திரித்து வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முடிவை நான் ஒருபோதும் வரலாற்று பிழை என பேசவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

    • தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    வரும் 1-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 2-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 3-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 4-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 5-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சி.பி.ஐ. அதிகாரிகள் போலீஸ்காரர்களை விசாரிப்பார்கள் என தெரிகிறது.
    • வழக்கு விசாரணையை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிறப்பு தனிப்பிரிவு போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களை காவலில் எடுக்க முடிவு செய்து, இது தொடர்பான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வந்த பின் சி.பி.ஐ. அதிகாரிகள் போலீஸ்காரர்களை விசாரிப்பார்கள் என தெரிகிறது.

    இந்த நிலையில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 5 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 5 போலீஸ்காரரின் காவலை ஆகஸ்டு 13-ந்தேதி நீட்டித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • பா.ஜ.க. ஆட்சியை அ.தி.மு.க. கவிழ்த்ததால் தி.மு.க. 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது.
    • தி.மு.க. தமிழகத்தில் வளர பா.ஜ.க. தான் காரணம்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அ.தி.மு.க- பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

    1998-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க இருந்தது. நாங்கள் தவறு செய்துவிட்டோம். கூட்டணி ஆட்சியில் இருந்துவிட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த சுப்பிரமணியசுவாமி பேச்சை கேட்டு ஒரு ஓட்டில் பா.ஜ.க. வை வீழ்த்தி வரலாற்று பிழை செய்துவிட்டோம்.

    அன்றைக்கு பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணி அமைந்ததன் காரணமாக தான் தி.மு.க. இன்று பொருளாதார வளர்ச்சியில் உள்ளது.

    பா.ஜ.க. ஆட்சியை அ.தி.மு.க. கவிழ்த்ததால் தி.மு.க. 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது.

    தி.மு.க. தமிழகத்தில் வளர பா.ஜ.க. தான் காரணம்.

    தி.மு.க.விற்கு அதிகாரம் கொடுத்ததே பா.ஜ.க. தான். அந்த பா.ஜ.க.வை இன்றைக்கு தி.மு.க. தீண்ட தகாத கட்சியாக பார்க்கிறது என்றார்.

    ஜெயலலிதாவின் முடிவை விமர்சித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்புவதற்காக சட்டப்பூர்வமாக கொடிக்கம்பங்களை நிறுவி வருகின்றனர்.
    • ஐகோர்ட்டின் தடை உத்தரவினால் எங்கள் கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    மதுரை:

    தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சார்பில் தங்கள் கட்சி கொடியை அகற்றுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சவுந்தர், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த முழு அமர்வு, இந்த வழக்கில் தங்கள் கருத்துகளை தெரிவிக்க விரும்பும் கட்சிகள் ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதிக்குள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

    இது தொடர்பாக தமிழக அரசு ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். அதுவரை கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்டு மாதம் 6-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இந்த உத்தரவின்பேரில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், மதுரை ஐகோர்ட்டில் ஒரு இடையீட்டு மனுவை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழக வெற்றிக் கழகம் என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகும். மதச்சார்பற்ற சமூக நீதி என்பதுதான் எங்கள் கட்சியின் சித்தாந்தம். அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைகளை பரப்புவதற்காக சட்டப்பூர்வமாக கொடிக்கம்பங்களை நிறுவி வருகின்றனர். ஆனால் ஐகோர்ட்டின் தடை உத்தரவினால் எங்கள் கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    குறிப்பாக எங்கள் கட்சி கடுமையான பாதிப்பை சந்திக்கிறது. எனவே கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் எங்கள் கட்சியையும் ஒரு தரப்பாக சேர்த்து, இதுதொடர்பாக எங்கள் தரப்பில் இருந்து சட்டப்பூர்வ கருத்துகளையும் தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இதையடுத்து ஏற்கனவே நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என தெரிகிறது.

    • ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
    • ஆகஸ்ட் 3-ந்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்ல இருக்கிறார்.

    சென்னை:

    தூத்துக்குடியில் தயாராகி உள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற் சாலையையும் அதன் விற்பனையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 4-ந்தேதி தூத்துக்குடிக்கு நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார்.

    உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கார் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு தூத்துக்குடி சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த தொழிற்சாலையை ஆகஸ்ட் 4-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார். இதற்காக ஆகஸ்ட் 3-ந்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்ல இருக்கிறார்.

    • விவசாய நிலத்தில் வைரம் கிடைத்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.
    • வைரத்திற்கு ரூ. 18 லட்சம் விலை நிர்ணயம் செய்தார்.

    ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் துக்கலி அடுத்த ஜிகவா சிந்தில் கொண்டா பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. மழை பெய்ததால் அதே கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது கொண்டு இருந்தார்.

    அப்போது மண்ணில் மின்னும் ஒரு பொருளை கண்டார். அதனை கையில் எடுத்து பார்த்த போது வைரம் என தெரிய வந்தது. விவசாய நிலத்தில் வைரம் கிடைத்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதனை கண்ட விவசாயிகள் போட்டி போட்டு கொண்டு வைரக்கல்லை வாங்க கிராமத்திற்கு வந்தனர். அப்போது பெண் விவசாயி என்னிடம் உள்ள வைரத்திற்கு ரூ. 18 லட்சம் விலை நிர்ணயம் செய்தார். ஆனால் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து ரூ. 8 லட்சத்துக்கு வைரக்கல்லை வாங்க பேரம் பேசினர்.

    ஆனால் சென்னம்பள்ளியை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் ரூ. 13.50 லட்சத்திற்கு வைரக்கல்லை வாங்கி சென்றார். இதனால் பெண் வியாபாரி ஒரே நாளில் அதிர்ஷ்டசாலியாக மாறினார். கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜோனகிரி, எர்ரகுடி, உப்பர்லபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் விலை மதிப்புள்ள வைரங்கள் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • தண்ணீர் திறப்பு மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.
    • பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் டிசம்பர் இறுதி வரையிலும் நன்செய் பாசனத்துக்கு உட்பட்ட 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்களுக்கும், ஜனவரி முதல் வாரத்தில் இருந்து ஏப்ரல் 30ம் தேதி வரை புன்செய் பாசனத்துக்குட்பட்ட 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தண்ணீர் திறப்பு மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.

    நடப்பாண்டில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் குந்தா, அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, மசினகுடி, மாயாறு போன்ற பகுதிகளிலும், வட கேரள மாநிலத்தில் உள்ள முக்காலி, அகளி போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதில் மேல் பவானி அருகே உற்பத்தியாகும் பவானி ஆற்று நீர் கேரளா வழியாக பாய்ந்து தமிழக- கேரள எல்லையில் உள்ள அத்திக்கடவு வழியாக பில்லூர் அணைக்கு பவானி ஆற்று நீர் வந்து சேருகிறது. தற்போது பில்லூர் அணையும் நிரம்பியதால் பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டு பவானிசாகர் அணையை வந்தடைகிறது.

    இதேபோல நீலகிரி மாவட்டத்தின் பைகாரா, கிளன்மார்க்கன், கூடலூர், சிங்காரா, மசினகுடி வழியாக பாயும் மாயாறு ஆற்று நீர் மோயாறு பள்ளத்தாக்கு வழியாக பாய்ந்து பவானிசாகர் அணையை வந்தடைகிறது. பவானி, மாயாறு ஆகிய 2 ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பவானிசாகர் அணை அதன் முழுக் கொள்ளளவையும் எட்டும் நிலையில் உள்ளது.

    எனவே பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி உபரிநீர் பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எனவே பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்க அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் ஆகியோரும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர். தற்போது கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் தண்ணீர் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என நீர்வளத் துறை அதிகாரிகள் கூறி வந்தனர். இந்நிலையில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று முன்கூட்டியே தண்ணீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் இன்று காலை நிலவரப்படி 100.04 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணையில் தற்போது 28.75 டிஎம்சி நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கு சராசரியாக 4509 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 3600 கன அடி நீர் பவானி ஆற்றின் வழியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

    நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு கீழ்பவானி பிரதான வாய்க்காலில் நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை அநேகமாக இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் வர வாய்ப்புள்ளது. எனவே, நாளை 31ம் தேதி மாலை 6 மணி முதல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.

    • தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிவுசார் சொத்துரிமை மாநாடு நடைபெறுகிறது.
    • கலைஞர் ஆட்சியில் தான் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாட்டின் புத்தமை அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாடு நடைபெற்றது.

    இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 ஆராய்ச்சியாளர்களின் காப்புரிமை பெற்ற கண்டு பிடிப்புகள் அடங்கிய அரங்குகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, ஆராய்ச்சியாளர்களுடன் கலந்து ரையாடினார்.

    நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிவுசார் சொத்துரிமை மாநாடு நடைபெறுகிறது. திராவிட மாடல் அரசு புதிய தொழில் நுட்பங்களை எப்போதும் வரவேற்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை சிறந்து விளங்குகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. தமிழ் நாட்டில் அதிகளவில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகிறது. கலைஞர் ஆட்சியில் தான் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.

    இன்று அது வளர்ச்சி அடைந்துள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில் இந்திய அளவில் 3-வது மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. 'நான் முதல்வன்' திட்டம் மூலம் தமிழக மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநிலத் திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்னித், ஐடிஎன்டி மையத்தின் தலைமைச் செயல் அலுவலர் வனிதா வேணுகோபால், தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (ஓய்வு) கமாண்டர் அமித்ரஸ்தோகி, ஜெட் வெர்க்கின் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜோஷ் போல்கர், மற்றும் ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • இந்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.
    • வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    சென்னை:

    சென்னை பள்ளிக்கரணையில், வேளச்சேரி மெயின்ரோடு மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை சந்திப்பில், காமாட்சி மருத்துவமனை அருகே சில மாதங்களுக்கு முன்பு கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இந்த நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்து சில நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் மூலம் அந்த பகுதிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள சுண்ணாம்பு கொளத்தூர் சந்திப்பில் சமீப காலமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இந்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.

    சுண்ணாம்பு கொளத்தூர் மெயின்ரோடு மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை - விநாயகபுரம் மெயின்ரோடு ஆகிய 2 சந்திப்புகளில் சிக்னல்களை அகற்றி போக்குவரத்து போலீசார் சில மாற்றங்களை செய்தனர்.

    மேலும் ரேடியல் சாலையில் 'யு' வளைவில் திரும்புவதற்கும் ஏற்பாடுகளை செய்தனர். இதன் மூலம் தற்போது அந்த பகுதியில் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் செல்ல முடிகிறது. இந்த புதிய போக்குவரத்து மாற்றங்கள் சிக்னல் சந்திப்புகளில் வாகன நெரிசலை குறைத்திருந்தாலும், சுண்ணாம்பு கொளத்தூர் மெயின்ரோடு மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை ஆகிய இடங்களில் வாகன ஓட்டிகள் தவறான திசையில் வாகனம் ஓட்டி செல்வது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    சுண்ணாம்பு கொளத்தூர் சந்திப்பில் தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ள புதிய போக்குவரத்து மாற்றங்கள் வாகன நெரிசலை குறைத்துள்ளன. ஆனால் அருகில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளுக்கு செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வது அதிகரித்துள்ளது. நீண்ட தூரம் செல்வதை தவிர்க்க அவர்கள் யு வளைவின் வழியாக தவறான திசையில் வாகனங்களில் செல்கிறார்கள்.

    வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×