என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி போராடுவார்கள் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualified

    கோபி:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார்.

    அப்போது அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    நான் ஏற்கனவே கூறியது போல சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் போது ஸ்லீப்பர் செல்கள் யார் என்று தெரியும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்களாகத்தான் இருந்து வருகிறார்கள்.

    வழக்கை தாமதப்படுத்துவார்கள் என கூறி தங்க தமிழ் செல்வன் மட்டும் தான் வழக்கை வாபஸ் பெறுகிறார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி போராடுவார்கள். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அழிவை நோக்கி செல்கிறது. அதை மீட்டெடுக்கும் பொறுப்பை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

     


    எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதே போன்று சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் கட்சி சார்பில் தேர்தலை சந்திப்போம். அதில் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம். கட்சியை காப்பாற்றுவோம்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualified

    தனியார் மருத்துவ கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பதா? என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.#Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து, வகுப்புகள் தொடங்கிய பிறகு ஏதேனும் காரணங்களுக்காக விலகும் மாணவர்கள் ரூ.10 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தேசிய அளவில் செப்டம்பர் 30-ந்தேதி வரை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த இந்திய மருத்துவக் குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனால், ஏற்கனவே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள், அதைவிட சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்கும் போது அதில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை.

    ஒரு கல்லூரியை விட சிறந்த இன்னொரு கல்லூரியில் இடம் கிடைக்கும் போது அதில் சேருவதற்கான மாணவர்களின் உரிமையை யாரும் தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி சில மாணவர்கள் தொடக்கத்தில் கடன் வாங்கி ஒரு பருவத்திற்கான கட்டணத்தை மட்டும் கட்டியிருப்பார்கள்.

    அதன்பின் தொடர்ந்து படிக்க வசதியில்லாததால் மருத்துவம் அல்லாத வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முயலுவார்கள். அத்தகைய மாணவர்களும் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்பது அட்டூழியமானது. இதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது.

    இதில் கொடுமை என்ன வென்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் இடையில் விலகினால் அவர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படுவதில்லை. அரசுக்கு இழப்பு ஏற்பட்டால் பரவாயில்லை... தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானம் பாதிக்கப்படக்கூடாது என்று நினைக்கும் அரசு மக்கள் நலன் காக்கும் அரசாக இருக்க முடியாது. மாறாக தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கும் தரகர் அரசாகத் தான் இருக்க முடியும்.

    தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளிகளில் இடம் கிடைத்து அங்கு சேரும் போது, ஏற்கனவே படித்தப் பள்ளியில் நடப்புப் பருவத்திற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது என்று தமிழக அரசே அறிவுறுத்தியுள்ளது. அதே விதி தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொருந்த வேண்டும். அதற்கு மாறாக ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பது மிகப் பெரிய சமூக அநீதி.

    எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, மாணவர்கள் விலகுவதால் காலியாகும் இடங்களை அடுத்த நிலையிலுள்ள மாணவர்களைக் கொண்டு நிரப்புவதற்கு வகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் உள்ளார்.#Ramadoss

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். #RajivMurderCase #Mutharasan

    சேலம்:

    சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்காமல் மத்திய அரசு கபட நாடகம் ஆடுகிறது. ஒரு பக்கம் மாநில அரசிடம் கொலையாளிகள் குறித்த விபரங்களை கேட்கிறது. மறுப்பக்கம் உள்துறை மூலம் விடுதலை செய்ய மறுப்பு தெரிவிக்கிறது.

    ஆயுள் கைதி என்றால் ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பது அல்ல. காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை 13 ஆண்டுகளில் நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை அரசு விடுதலை செய்யாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

     


    விசாரணை அதிகாரிகளே சிலரின் பெயரை தவறுதலாக சேர்த்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். சோனியா காந்தியும் இவர்களை மன்னித்து விட்டதாக கூறியுள்ளார். எனவே மத்திய, மாநில அரசுகள் இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடி வெளியிட்டுள்ள அரசாணை போதுமானது அல்ல என்று மதுரை கிளை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. இதனை மாநில அரசு கவனத்தில் கொள்ளாமல் தாங்கள் செய்ததே சரி சரி என திரும்ப கூறி வருகிறது. கடந்த சில தினங்களாக அமைதி திரும்பி உள்ள தூத்துக்குடியில் அடக்குமுறை மீண்டும் கையில் எடுத்து 100-க்கணக்கானவர்களை கைது செய்து வருவது கண்டனத்திற்குரியது. அடக்குமுறையை போலீசார் கைவிட வேண்டும்.

    ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் 8 வழி பசுமை சாலைக்காக வனங்களையும், நிலங்களையும் அழிப்பது மக்கள் விரோத செயலாகும். வின் ஸ்டார் இந்தியா நிறுவனர் சிவகுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.4 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்துள்ளார்.

    இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajivMurderCase #Mutharasan

    தங்க தமிழ்செல்வன் மற்றும் வெற்றிவேல் கருத்து வேறுபாடு காரணமாக தினகரன் அணியில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. #TTVDhinakaran #MLAsDisqualified

    சென்னை:

    டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக உள்ள 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அறிவித்த விவகாரம் அடுத்தடுத்து புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது.

    வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட அந்த 18 எம்.எல்.ஏ.க்களும் தங்களது தகுதி நீக்கத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் இருவரும் பலமாத விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றார். ஆனால் நீதபதி சுந்தர் செல்லாது என்றார்.

    இதனால் இந்த வழக்கின் தீர்ப்பு மூன்றாவது நீதிபதி முடிவுக்கு செல்ல உள்ளது. 3-வது நீதிபதி பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அவர் தனது தீர்ப்பை வெளியிட எத்தனை மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொள்வார் என்பதும் தெரியாத நிலை உள்ளது.

    உறுதியான, ஒருமித்த கருத்துடைய தீர்ப்பு வெளியாகாத காரணத்தால் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உருவாகத் தொடங்கியுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்களில் ஒரு சாரார், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு, தங்கள் தொகுதியில் இடைத் தேர்தலை சந்திக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

    ஆனால் மற்றொரு சாரார், பதவியை ராஜினாமா செய்யவோ அல்லது இழக்கவோ விரும்பவில்லை. எனவே தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்து சட்ட ரீதியாக போராடுவது என்ற மனநிலையில் உள்ளனர். இந்த மாறுபட்ட நிலையால் 18 எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் புதிய குழப்பம் நிலவுகிறது.

    வழக்கை வாபஸ் பெற்று விட்டு மீண்டும் தேர்தலை சந்திக்கலாம் என்ற மன நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் உள்பட சில எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த கருத்தை கொண்டிருப்பவர்கள், “இடைத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடாதபட்சத்தில் தங்களால் அ.தி.மு.க.வை எளிதாக வீழ்த்த முடியும்” என்று சொல்கிறார்கள்.

    இது குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ் செல்வன் ‘மாலைமலர்’ நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

     


    எங்கள் மீதான தகுதி நீக்க வழக்கு செல்லுமா? செல்லாதா? என்று இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறி உள்ளார்களே தவிர இந்த வழக்கை எந்த கால கட்டத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சொல்லாமல் உள்ளனர். இதில் 3-வது நீதிபதியை உடனே நியமித் திருந்தால் நீதிமன்றத்தை பாராட்டி இருக்கலாம். அல்லது இன்னும் 10 நாளில் இறுதி தீர்ப்பை 3-வது நீதிபதி கூற வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் வரவேற்கலாம்.

    ஆனால் இந்த நீதிமன்றம் ஓட்டு போட்ட பொதுமக்களை பற்றி கவலைப்படாமல் பொத்தாம் பொதுவாக தீர்ப்பு சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

    என்னுடைய தொகுதியில் கடந்த 9 மாதங்களாக எம்.எல்.ஏ. இல்லை. இதனால் மக்கள் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க கோரி யாரிடம் சென்று முறையிடுவது என தெரியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

    தினமும் 300 பேர் என்னை சந்திக்க வருகிறார்கள். அவர்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த மக்களை பற்றி தலைமை நீதிபதிக்கு எந்த கவலையும் இல்லை.

    இந்த ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்ட ஓ.பி.எஸ். இன்று துணை முதல்- அமைச்சராக உள்ளார். அ.தி.மு.க. அரசு நீடிக்க வேண்டும் என்று ஓட்டளித்த நாங்கள் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறோம்.

    இதை கோர்ட்டு கண்டு கொள்ளவில்லை. அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறுகிறது.

    புதுச்சேரி சட்டசபை வழக்கில் ஒரு தீர்ப்பும் தமிழக சட்டசபை வழக்கில் மற்றொரு தீர்ப்பையும் தலைமை நீதிபதி கூறுகிறார் என்றால் இன்றைக்கு தமிழகமே நீதிமன்றத்தை பார்த்து சிரிக்கிறது.

    எனவே தீர்ப்பை நம்பி பிரயோஜனமில்லை. இவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

    அதற்கு பதில் எனது வழக்கை வாபஸ் பெறுவது தான் சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்துள்ளேன். எனவே வழக்கை வாபஸ் பெற இப்போதுள்ள நீதிபதிகள் முன்பு மனு கொடுப்பதா? அல்லது 3-வது நீதிபதி நியமனத்துக்கு பிறகு அவரிடம் கொடுப்பதா? என்பது பற்றி சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்.

    நான் வழக்கை வாபஸ் பெறும் மனுவை கூட நீதிமன்றத்தில் உடனே ஏற்காமல் காலம் தாழ்த்துவார்கள் என்பதால்தான் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க உள்ளேன்.

    ஆண்டிப்பட்டி தொகுதியில் எவ்வளவு நாள்தான் மக்கள் கஷ்டப்படுவார்கள். எனவே 6 மாதத்தில் தேர்தல் வரட்டும். தேர்தலில் நின்று யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. அதனால் தான் எனது வழக்கை வாபஸ் பெறுவதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளேன். மற்றவர்களை பற்றி கவலைப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் வெற்றிவேல் உள்பட பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், வழக்கை வாபஸ் பெறவோ, இடைத் தேர்தலை சந்திக்கவோ விரும்பவில்லை. அப்படி முடிவு செய்தால் அது தி.மு.க.வுக்கு சாககமாகி விடும் என்று நினைக்கிறார்கள்.

     


    நான் கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருப்பேன். வழக்கை வாபஸ் பெற மாட்டேன். ஏனென்றால் முக்கால் கிணறை தாண்டி விட்டோம். இன்னும் கொஞ்சம் காலம்தான்.

    இந்த விசயத்தில் வழக்கை வாபஸ் பெறுவது தீர்வாகாது. ஏனென்றால் வாபஸ் பெறுவது மனு கொடுத்தாலும் அதை உடனே நீதிமன்றம் ஏற்காது.

    இரு நீதிபதிகள் தீர்ப்பு கூறிய காரணத்தால் இரு நீதிபதிகள் இருக்கும்போது மனு கொடுங்கள் என்று சொல்லி விடுவார்கள். அல்லது 3-து நீதிபதி நியமித்த பிறகு வாருங்கள் என்று சொல்லி திருப்பி அனுப்பி விடுவார்கள்.

    தலைமை நீதிபதி அர்த்தமே இல்லாமல் தீர்ப்பு எழுதி உள்ளார். காரணமே சொல்லவில்லை. அவர் எதற்காக புதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்துக்கு ஒரு தீர்ப்பு கூறுகிறார் என்று குழந்தைகளுக்கு கூட தெரியும்.

    3-வது நீதிபதியை நியமித்த பிறகு ரொம்ப நாளைக்கு காலம் கடத்த முடியாது. 6 மாதத்திற்குள் இறுதி தீர்ப்பு சொல்லிதான் ஆக வேண்டும்.

    எனவே இறுதி தீர்ப்புக்கு காத்திருப்பது தான் புத்திசாலித்தனம். எனவே நான் வழக்கை வாபஸ் பெற மாட்டேன்.

    தங்க தமிழ்ச்செல்வன் வழக்கை வாபஸ் பெறுவேன் என்று சொல்வது எளிதாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவரது வக்காலத்து மனுவை உடனே கோர்ட்டு ஏற்காமல் காலம் கடத்தி விடும்.

    2-வது பாயிண்ட் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதால் தேர்தல் வந்தாலும் இவர் தேர்தலில் நிற்க முடியுமா? அல்லது இந்த 5 ஆண்டுக்குள் நிற்க முடியாதா? என்ற கேள்வி எழும். நிறைய சட்ட சிக்கலில் வழக்கு இழுத்துக் கொண்டே செல்லும்.

    எனவே வழக்கை எதிர் கொண்டு இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதுதான் புத்திசாலித்தனம். அதுவரை நான் காத்திருப்பேன்.

    இவ்வாறு வெற்றிவேல் கூறினார்.

    18 எம்.எல்.ஏ.க்களில் ஒரு சாரார திடீரென வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருப்பது, ஆளும் அ.தி.மு.க.விலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் பாதகமாக அமைந்து விட்டால், சட்ட சபையில் மெஜாரிட்டியை நிரூபிப்பதில் சிக்கல் உருவாகும் என்று கூறப்படுகிறது.

    இதனால் 18 எம்.எல்.ஏ.க் களில் சிலர் வழக்கை திரும்பப் பெற்றாலும் அது இடைத் தேர்தலுக்கு வழி வகுத்து ஆளும் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. #TTVDhinakaran #MLAsDisqualified

    தகுதி நீக்க வழக்கில் இருந்து தங்க தமிழ்ச்செல்வன் ஒதுங்கப்போவதாக கூறியுள்ள நிலையில், மற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். #18MLAs
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பதால், இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு செல்கிறது. எனவே, வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாக இன்னும் சில காலம் ஆகும்.

    இந்த தீர்ப்பினால் அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன்,  சபாநாயகர் உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற உள்ளதாக தெரிவித்தார். தனது தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து ஒரு நிரந்தரமான எம்.எல்.ஏ. வந்து, அதன்மூலம் பொதுமக்களும் பயன் அடைவதற்காக இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

    இது தங்க தமிழ்ச் செல்வனின் தனிப்பட்ட விருப்பம் என்றும், மற்ற 17 எம்எல்ஏக்களும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறினார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்): தங்கதமிழ்ச்செல்வன் முடிவுக்கு டி.டி.வி. தினகரன் என்ன கருத்து கூறியிருக்கிறாரோ அதுதான் எனது கருத்து. புதுச்சேரி சபாநாயகர் நடவடிக்கைக்கு ஒரு தீர்ப்பும், தமிழக சபாநாயகர் நடவடிக்கைக்கு ஒரு தீர்ப்பும் இருப்பது நீதித்துறை மாண்பு கேள்விக்குறியாகி உள்ளது. எங்களது பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

    ஆர்.சுந்தரராஜ் (ஓட்டப்பிடாரம்): தகுதி நீக்கம் தொடர்பான கோர்ட்டு தீர்ப்பு மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. எங்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த வழக்கில் புதுவைக்கு ஒரு விதமாகவும், தமிழகத்துக்கு ஒரு விதமாகவும் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

    புதுவையில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்கி றார்கள். தமிழகத்தில் செல் லாது என்கிறார்கள். கட்சியில் பொதுச்செயலாளர் பதவி குறித்த விவரம் தேர்தல் ஆணையம் நிலையில் இருக்கும்போது நாங்கள் யார்பக்கம் இருப்பது என்பது எங்களது உரிமை.

    தமிழக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். எங்கள் மீதான வழக்கை மேலும் காலதாமதம் செய்யவே இந்த நடவடிக்கை. இதன் மூலம் நீதிமன்றம் மீதான மக்களின் நம்பிக்கை சரிந்துவிட்டது.

    பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி): சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ்பெற தங்கதமிழ்செல்வன் முடிவு எடுத்திருப்பது குறித்து அவர் அளித்த பேட்டியை டி.வி.யில் பார்த்தேன்.

    இதுதொடர்பாக அவரிடமும், எங்கள் துணை பொதுச்செயலாளர் தினகரனிடமும் இன்னும் பேசவில்லை. அவர்களிடம் பேசிய பிறகு இதுபற்றிய கருத்தை தெரிவிப்பேன். என்றாலும் எங்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப் படுவோம். எல்லா எம்.எல்.ஏ.க்களையும் கலந்து பேசிதான் அவர் முடிவு எடுப்பார்.

    பாலசுப்பிரமணி (ஆம்பூர்): எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் சம்மந்தமாக நான் தனியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. தலைமை நடவடிக்கை எடுக்கும் டி.டி.வி.தினகரன் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம். தங்கத்தமிழ்செல்வன் கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து.

    ஆர்.ஆர். முருகன் (அரூர்):  சபாநாயகர் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தங்கதமிழ்ச்செல்வன் முடிவு எடுத்திருப்பது அவரது தனிப்பட்ட முடிவாகும். நான் ராஜினாமா செய்யமாட்டேன். மக்கள் நீதிமன்றத்தை நம்புவது போல நானும் நீதிமன்றத்தை நம்புகிறேன்.

    எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சட்டப்படி போராடி வெற்றி பெறுவோம். எங்கள் துணை பொதுச்செயலாளர் தினகரன் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

    ஜெயந்திபத்மநாபன் (குடியாத்தம்): தங்கத்தமிழ்செல்வன் கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து. 18 எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். நாங்கள் முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று தான் கூறினோம். கட்சிக்கு எதிராக செயல்படவில்லை.

    18 எம்.எல்.ஏ.க்களும் ஆளுங்கட்சி அடிப்படை உறுப்பினராகத்தான் இருக்கிறோம். எங்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கட்டும் அதற்கு பிறகு முடிவு செய்வோம். கட்சியில் அடிப்படை உறுப்பினராகவும் வைத்திருக்கிறார்கள் கட்சி தாவல் சட்டத்தில் நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் நாடகம்.

    டி.டி.வி.தினகரன் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. சில நேரங்களில் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிறார். இது ஒட்டுமொத்த 18 எம்.எல்.ஏ.க்கள் கருத்தாக ஏற்கமுடியாது.

    நீதிதுறை மேல் நம்பிக்கை உள்ளது. கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு 18 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

    இவ்வாறு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். #18MLAs
    ‘எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு’ டெல்லியை போன்று போராட தயாராக உள்ளதாக கவர்னர் கிரண்பேடிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- டெல்லியில் கவர்னருக்கு எதிராக முதல்-மந்திரி கவர்னர் மாளிகையிலேயே போராட்டம் நடத்தி வருகிறார். நீங்கள் கவர்னருக்கு எதிராக எப்போது போராட போகிறீர்கள்?

    பதில்:- நாங்கள் நாகரிகம் கருதி சட்டத்தின்படி செயல்படுகிறோம். அந்த நிலைக்கு செல்லவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களது பொறுமைக்கும் எல்லை உண்டு.

    கேள்வி:- புதுவை பட்ஜெட்டிற்கு அனுமதி கிடைத்துவிட்டதா?

    பதில்:- புதுவை பட்ஜெட் தொடர்பான கோப்பில் உள்துறை செயலாளர் கையெழுத்திட்டுவிட்டார். இதுதொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்குவார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், சென்னை ஐகோர்ட்டில் ஒரே மாதிரியான வழக்கில் 2 விதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுவைக்கு ஒரு நீதி? தமிழகத்துக்கு ஒரு நீதியா? என்பது போல் உள்ளது. இதனால் நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கை குறைகிறது. நீதிமன்றங்களின் செயல்பாடு கேள்விக்குறியாகி விடக்கூடாது.

    டெல்லியில் கவர்னருக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான பனிப்போர் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 5 நாட்களாக டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டும், மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்பட்டதை கண்டித்தும் அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாநிலங்களில் மாற்றுக்கட்சி ஆட்சியில் இருந்தால் அந்த அரசை முடக்கும் வேலையை செய்கிறது. புதுவையும் இதற்கு விதிவிலக்கல்ல. அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை நிறைவேற்ற காலதாமதம் செய்வது, கோப்புகளை டெல்லிக்கு அனுப்புவது, ஜனநாயக விதிமுறைகளை மீறி செயல்படுவது ஆகியவற்றை கவர்னர் கிரண்பேடி செய்து வருகிறார்.

    சமூக வலைதளங்கள் மூலம் உத்தரவுகளை பிறப்பித்து அதிகாரிகளை கவர்னர் மிரட்டி வருகிறார். தொடர்ந்து அவர் விதிமுறையை மீறி செயல்படுகிறார். இதுதொடர்பாக புகார் தெரிவித்து கடிதம் எழுதியபோதிலும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதை சமாளித்துத்தான் நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனால்தான் சிறப்பு மாநில அந்தஸ்து கேட்கிறோம்.

    இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்திலும் விவாதித்துள்ளோம். இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் புதுவைக்கு தனி அதிகாரம் பெற்ற மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அதை சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானமாக கொண்டுவருவோம்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட நீதிபதிகளை இனி நியமிக்க வேண்டும் என்று ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். #Eswaran #18MLAsCase
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று இரண்டு நீதிபதிகள் மறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். இந்த தீர்ப்பு பொது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுவாக இது போன்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிப்பதற்கு பதில் 3 பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் விசாரிப்பதே சரியானதாக இருக்கும்.

    ஏன் என்றால் நேற்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புப்படி இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது. இதனால் தேவையில்லாத கால விரயம், பண விரயம் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக வரும் காலங்களில் இது போன்ற வழக்குகளுக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எல்.எல்.ஏ.க்களும் தாங்கள் தொடர்ந்த வழக்குகளை திரும்ப பெற்று தேர்தலை சந்திக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் ஆதரவு யார் பக்கம் இருக்கிறது? என்பது தெரிந்து விடும்.

    நடிகர் ரஜினி புதிய கட்சி தொடங்க போவதாக அறிவித்து உள்ளார். ஆனால் திடீரென காலா படத்தில் நடித்து முடித்தார். இப்போது மற்றொரு புது படத்தில் நடிக்க சென்று விட்டார். இன்னும் 2 மாதம் கழித்து தான் வருவார்.

    அதே போன்று நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்கினார். அவ்வப்போது அறிக்கை, டுவிட்டர் மூலம் கருத்துகளை கூறி வந்தார். தற்போது பிக்பாஸ்-2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்று விட்டார். இவ்வாறு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளனர். மக்களை இவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். எனவே தமிழ்நாட்டு மக்கள் நடிகர்கள் ரஜினியையும், கமல்ஹாசனையையும் ஏற்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Eswaran #18MLAsCase

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புடன் பா.ஜ.க.வை தொடர்பு படுத்தி பேசுவதற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பா.ஜனதாவின் 4 ஆண்டு சாதனை மிகவும் மகத்தானது. பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. விவசாய முன்னேற்றத்துக்கான திட்டங்கள், பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து உள்ளது. தமிழ்நாட்டில் இதற்கான பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் கர்நாடகாவினர் பிரதிநிதிகள் குழு அமைக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஏன் வாயை திறக்கவில்லை?

    காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என்று கூறிதான் குமாரசாமி கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்திருக்கிறார். இவருக்கு தான் இங்குள்ளவர்கள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.

    மத்திய அரசு திட்டங்களில் முக்கியமானது கருப்பு பணம் ஒழிப்பு. ஏகப்பட்ட கருப்பு பணம் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னொரு மகத்தான சாதனை ஆதார் இணைப்பு திட்டம். சாதாரண மக்களுக்கு கூட மானிய தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


    தமிழ்நாட்டில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு கூறி உள்ளனர். இதற்கும் பா.ஜனதாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

    ஆனால் இதற்கும் பாரதிய ஜனதாதான் காரணம் என்று கூறுகிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் பாரதிய ஜனதாவை குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்? நீதிபதிகள் தீர்ப்பு கூறியதற்கு பா.ஜனதாவை குறை சொல்வது ஏன்?

    நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? என என்னிடம் கேட்பது தவறு. அவர் எங்கள் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. அவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்பதை மாநில அரசிடம் கேளுங்கள்.

    இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார். #BJP #VanathiSrinivasan

    மேட்டூர் அணையை திறக்கும் அளவிற்கு அணையில் நீர் இருப்பு இல்லை என்று திருவாரூரில் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #MetturDam #TNMinister #Kamaraj
    திருவாரூர்:

    திருவாரூரில் கூட்டுறவுத்துறை சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் இன்று திறக்கப்பட்டது. விழாவில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பெட்ரோல்- டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.  இதில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ்  மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் இல்லையென்றாலும் அதன் நிர்வாகிகள் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள். குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் சாகுபடிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.


    தற்போது மேட்டூர் அணையை திறக்கும் அளவிற்கு அணையில் நீர் இருப்பு இல்லை. அதேநேரத்தில் கர்நாடக மாநிலத்தில் மழை காரணாக கபினி அணை திறந்து விடப்பட்டுள்ளதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர்மட்டத்தின் உயர்வை பொறுத்து மேட்டூர் அணை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
     
    தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் பேச உரிய வாய்ப்பும், நேரமும் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள் நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டு வெளிநடப்பு என்ற நாடகத்தை நடத்துகின்றனர். இது மக்களுக்கு எந்த பயனையும் அளிக்காது. கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறாததால் பணிகள் தொய்வடையவில்லை. வங்கி செயலாளர்கள் பணிகளை சிறப்பாக செய்து வருவதால் விவசாயிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

    மேலும் தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.115 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவித்திருப்பதின் மூலம் குறுவை சாகுபடி காவிரி டெல்டாவில் சிறப்பாக நடைபெறும்.

     இவ்வாறு அவர் கூறினார். #MetturDam #TNMinister #Kamaraj
    துணைவேந்தர்களை நேர்மையான கல்வியாளர் குழு மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #ViceChancellorAppointment

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராக முனைவர் பி.பி. செல்லத்துரை நியமிக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அடிப்படைத் தகுதியற்ற, ஏராளமான புகார்களுக்கு உள்ளான ஒருவர் துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதன் மூலம் காமராசர் பல்கலைக்கழகம் காப்பாற்றப்பட்டிருப்பது ஒரு வகையில் மகிழ்ச்சியளித்தாலும், துணை வேந்தர் நியமனங்கள் அடிக்கடி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் அளவுக்கு சீரழிந்திருப்பது வேதனையளிக்கிறது.

    மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முனைவர் செல்லத்துரை கடந்த ஆண்டு மே 27-ந்தேதி நியமிக்கப்பட்டபோதே அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்தது.

    பல்கலைக்கழகத் துணை வேந்தர் பதவிக்கான அடிப்படைத் தகுதிகளில் ஒன்று பேராசிரியராக 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதாகும். ஆனால், செல்லத்துரைக்கு அத்தகுதி இல்லை. அது தவிர பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் இவர் மீது சுமத்தப்பட்டன. இதற்கெல்லாம் மேலாக காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராக கல்யாணி மதிவாணன் பணியாற்றிய போது, கிட்டத்தட்ட அவரது அடியாளாக செயல்பட்டு அவருக்கு எதிரானவர்களை மிரட்டும் பணியைத் தான் செல்லத்துரை தலைமையிலான குழு செய்து வந்தது. கல்யாணியின் ஊழல்களை அம்பலப்படுத்திய பல்கலைக்கழக பாதுகாப்புக் குழுவின் அமைப்பாளர் பேராசிரியர் சீனிவாசனை கூலிப்படையை ஏவி, கொலை செய்ய முயன்ற வழக்கில் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.

    இப்படிப்பட்ட கல்வித் துறைக்கே தலைகுனிவை ஏற்படுத்தக்கூடியவர்களை துணைவேந்தராக நியமனம் செய்யக்கூடாது என்பதற்காகத் தான் பா.ம.க. போராடி வந்தது. இப்போது உயர்நீதிமன்றம் மூலமாக நீதி கிடைத்திருக்கிறது. இந்த நடவடிக்கை சில மாதங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டிருந்தாலோ, துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்படாமல் இருந்திருந்தாலோ மதுரைக் காமராசர் பல்கலைக்கழக மாண்பு காப்பாற்றப்பட்டிருக்கும்.

    உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி மூலம் மாணவிகளை பல்கலைக் கழக நிர்வாகத்தின் உயர் பதவிகளில் இருப்பவர்களின் தேவைக்காக சீரழித்தக் கொடூரம் தடுக்கப்பட்டிருக்கும். கடந்த ஓராண்டில் மட்டும் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடை பெற்றுள்ளது. உமா கேட்டரிங் என்ற நிறுவனத்திலிருந்து கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.7 கோடிக்கு உணவு வாங்கப்பட்டதாக கணக்கு காட்டி, அதில் பெருமளவு தொகை ஊழல் செய்யப்பட்டுள்ளது.

    இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி துணைவேந்தராக பதவியேற்றதன் ஓராண்டு விழாவை, ஆட்சியாளர்களுக்கு இணையாக விளம்பரம் செய்து கொண்டாடி கல்வியாளர்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறார்.

    காமராசர் பல்கலைக் கழகத்தில் இவருக்கு முன் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணனும் இதே காரணங்களுக்காக உயர்நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்டவர் தான். நேர்மையின் சின்னமான காமராசர் பெயரில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் அடுத்தடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அந்த பல்கலைக்கழகத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உயர்கல்வித்துறைக்கும் ஏற்பட்ட இழுக்கு ஆகும்.

    துணைவேந்தர் பதவிகள் கோடிகளில் ஏலம் விடப்படுவதும், இதற்காக அமைக்கப்படும் தேர்வுக் குழுக்களில் இடம் பெறுவோர் கல்வியை விட ஊழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் தான் இத்தகைய அவலங்களுக்கு காரணம் ஆகும். செல்லத்துரை நியமனத்திலும் அது தான் நடந்துள்ளது.

    தேர்வுக்குழுத் தலைவராக இருந்த முருகதாஸ் கட்டாயப்படுத்தியதன் பேரில் தான் செல்லத்துரை பெயரை பரிந்துரைத்ததாக குழுவின் மற்ற உறுப்பினர்களான இராமகிருஷ்ணன், ஹரீஷ் மேத்தா ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு இனியும் இத்தகைய அவப்பெயர்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு துணைவேந்தர் தேர்வுக்கான நடைமுறைகளை மாற்றிய மைக்க வேண்டும். முதலில் தேர்வுக்குழுவில் இடம் பெறுபவர்கள் துணை வேந்தரை விட கூடுதல் தகுதியும், அப்பழுக்கற்ற பின்னணியும் கொண்டவர்களாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    அடுத்ததாக துணைவேந்தர் பதவிக்கு குறைந்தபட்ச பணி அனுபவம், வயது, முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டிய அனுபவம், எழுதி வெளியிட்ட நூல்கள் உள்ளிட்ட தகுதிகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். துணைவேந்தர் பதவிக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்களையும், அவர்களில் இருந்து துணைவேந்தர் பதவிக்கு பரிசீலிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட பெயர்களையும் ஒவ்வொரு கட்டத்திலும் தேர்வுக்குழு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

    கடைசியாக ஆளுனருக்கு பரிந்துரைக்கப்படும் மூவரின் விவரங்களும், அவர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதை மக்கள் ஆய்வுக்காக தேர்வுக்குழு வெளியிட வேண்டும். அப்போது தான் துணைவேந்தர் நியமனத்தில் ஊழலையும், தலைகுனிவையும் தடுக்க முடியும்.

    இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதை தவிர்த்து, உயர்நீதிமன்ற ஆணைப்படி மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, நேர்மையான கல்வியாளர்களைக் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட வேண்டும். கடந்த ஓராண்டில் செல்லத்துரை மேற்கொண்ட நியமனங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை ரத்து செய்வதுடன், நியமனங்களில் நடந்த ஊழல்கள் குறித்து கையூட்டுத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #ViceChancellorAppointment

    18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு எப்படி இருந்தாலும் எடப்பாடி ஆட்சி அதிக நாள் நீடிக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #EdappadiPalaniswami #MLAsDisqualified

    பூதலூர்:

    போராடுவோம் தமிழகமே என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பிரசார பயணம் கடந்த 8-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டியில் பிரசார பயணம் நடைபெற்றது. இந்த பிரசார பயணத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன். பேசும் போது கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் உரிமைகளை போராடி பெற வேண்டிய தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது. மக்கள் தமக்குள்ள உரிமைகளை பெற போராடிஆக வேண்டும். போராடாமல் தீர்வு கிடைக்காது.

     


    18 எம்.எல்.ஏக்கள் குறித்து தீர்ப்பு எப்படி இருந்தாலும் எடப்பாடி ஆட்சி அதிக நாள் நீடிக்காது. மத்தியில் ஆளும் மோடியும், மாநிலத்தில் மோடியின் எடுபிடியாக உள்ள எடப்பாடி ஆட்சியும் நீடிக்க வாய்ப்பு இல்லை. இந்த பிரசார பயணம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்த பிரசார பயணம் நிறைவு பெறும் போது மாற்றம் நிகழும்.

    தஞ்சை மாவட்டம் பயன்பெற குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். தண்ணீர் திறக்கப்படவில்லை. விவசாயிகள் விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. விவசாயிகள் சலுகை கேட்டால் சாக்கு போக்கு சொல்லும் மத்திய,மாநில அரசுகள் கார்பரேட் கம்பெனி முதலாளிகளான அதானி. அம்பானி ஆகியோருக்கு சலுகைகளை அள்ளி வழங்கி கொண்டிருக்கின்றன.

    தமிழகத்தில் குட்கா வழக்கை சிபிஐ விவசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிடும் காலம் விரைவில் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalaniswami #MLAsDisqualified

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கிடைத்த தீர்ப்பு தினகரனுக்கு கிடைத்த சம்மட்டி அடி என்று மன்னார்குடியில் திவாகரன் கூறினார். #18MLAscase #Dhivakaran #TTVDhinakaran
    மன்னார்குடி:

    அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டில் மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ளது. இனி 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு பிறகு இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும்.


    இந்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோக வேண்டும் என்பது தான் தினகரனின் விருப்பம் மற்றும் முயற்சி. அந்த முயற்சி பலிக்காமல் போய் விட்டது.

    எனவே இந்த தீர்ப்பு தினகரனுக்கு கிடைத்த சம்மட்டி அடியாகவே நான் கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAscase #Dhivakaran  #TTVDhinakaran
    ×