search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MLAs Disqualified"

    18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கு தீர்ப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று வைத்திலிங்கம் எம்.பி. பேட்டியில் கூறியுள்ளார். #MLAsDisqualified #Vaithilingam

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும் எம்.பி.யுமான வைத்திலிங்கம் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி:-ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்களா?

    பதில்:- ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வார்.

    கேள்வி:-குட்கா ஊழல் விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடந்தது குறித்து?

    பதில்:- அமைச்சர் விஜயபாஸ்கர் ‘மடியில் கனம் இல்லை. இதனால் எனக்கு பயம் இல்லை’ என்று அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார். அதே நேரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நடைபெறும் போது அதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை. விசாரணை முடிவில் தான் அதற்கான நடவடிக்கை குறித்து தெரியும்.

    கேள்வி:- காவிரியில் தண்ணீர் வந்தும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வர வில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகிறார்களே?

    பதில்:- காவிரி கடைமடை பகுதிக்கு தண்ணீர் இன்னும் சில நாட்களில் சென்று விடும். அதன்பின்னர் ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தூர்வாரும் பணியை பொறுத்தவரை மிக அற்புதமாக நடந்து வருகிறது.

    கேள்வி:- 18 எம்.எல். ஏ.க்கள் மீதான வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளதே?

    பதில்:- இந்த வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் அதை எதிர் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திண்டுக்கல்லில் டி.டி.வி. தினகரன் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்டு நாற்காலிகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. #TTVDhinakaran #MLAsDisqualified

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு வருகிற 26-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வருகிறார். அவருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

    கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் ராமுத்தேவர், மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் தங்கத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தங்கத்துரை பேச ஆரம்பித்தார். அப்போது மாவட்ட நிர்வாகிகள் பலரது பெயரை சொல்லாமல் தனக்கு வேண்டியவர்கள் பெயரை மட்டும் கூறினார்.

    இதனால் மற்றொரு தரப்பினர் அவரை பேச விடாமல் கூச்சலிட்டனர். இதனையடுத்து தங்கத்துரை ஆதரவாளர்கள் அவர்களை அமருமாறு எதிர்த்து கோ‌ஷமிட்டனர்.

    சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதுடன் நாற்காலிகளையும் வீசினர். தங்கதமிழ்ச்செல்வன் முன்னிலையிலேயே இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கூட்டடத்தில் கலந்து கொள்ள வந்த பெண்கள் அலறியடித்து மண்டபத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அதன்பிறகு தங்கத்துரை தனது ஆதரவாளர்களுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

    கடந்த மாதம் செம்பட்டியில் நடந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டத்திலும் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். தங்கதமிழ்ச்செல்வன் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தும் கேட்கவில்லை.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அ.ம.மு.க. இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருவதால் இது குறித்து கட்சி தலைமையிடம் எடுத்து கூறி குழப்பத்தை ஏற்படுத்தும் நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என்று தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

    18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு தீர்ப்புக்கு பிறகு ஆட்சி மாற்றம் வரும் என்று தினகரன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualified

    தஞ்சாவூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சையில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 16, 17-ந் தேதிகளில் எங்கள் தரப்பில் 2 வக்கீல்கள் ஆஜராகி வாதாடுகிறார்கள். நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும். இந்த ஆட்சி முடிவுக்கு வரும். நாங்கள், ஜெயலலிதாவின் ஆட்சியை அமைத்து நிச்சயம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம்.

    இடைத்தேர்தலில் தி.மு.க. தான் வெற்றி பெறும் என திவாகரன் கூறியிருப்பதை பற்றி கேட்கிறீர்கள். பாவம். அவர் உடம்பு முடியாதவர் ஏதோ பேசியிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் பேசிவிட்டு போகட்டும். நாம் செயலில் காண்பிப்போம்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் இப்போது அறிவிக்கப்பட மாட்டார்கள். தற்போது எங்கள் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை பணி நடந்து கொண்டு இருக்கிறது.

    எம்.ஜி.ஆருக்கு தானாகவே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதேபோல ஜெயலலிதாவுக்கும் மத்திய அரசு தானாகவே முன்வந்து பாரத ரத்னா விருது வழங்கும் சூழ்நிலை உருவாகும்.


    ஆறுகளில் செல்லும் தண்ணீர் எல்லாம் கடலில் வீணாக கலக்கிறது. ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை அனைத்து கிளை வாய்க்கால்களையும் தூர்வாரியிருந்தால் தண்ணீருக்காக கையேந்தக்கூடிய நிலை ஏற்படாது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை அமைச்சராக 7 ஆண்டுகளாக இருக்கிறார். குடிமராமத்து பணிக்கு ரூ.400 கோடி ஒதுக்கியதாக சொன்னார்கள். கோடை காலத்தில் தான் ஆறு, ஏரி, குளங்கள் தூர்வாரும் பணியை செய்து கரைகளை பலப்படுத்துவார்கள். ஆனால் இப்போது கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டவுடன் தூர்வாரும் பணியை செய்கிறார்கள்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்களுடன் தான் இருக்கிறார்கள்.

    மன்னார்குடியில் பணம் கொடுத்து மக்கள் கூட்டத்தை கூட்டியதாக காழ்ப்புணர்ச்சி காரணமாக திவாகரன் கூறுகிறார். லெட்டர் பேடு கம்பெனியில் கூறுவதை எல்லாம் பெரிய கேள்வியாக கேட்கிறீர்கள். கழிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் தான் திவாகரன் கட்சியில் இணைவார்கள்.

    மத்திய அரசு அடிமைகளை வைத்து தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. தேவையில்லாத சாலை, மக்கள் விரும்பாத ரோட்டிற்காக ரூ.10 ஆயிரம் கோடி கேட்டு பெற்றுள்ளார்கள். தமிழக மக்களுக்காக எதையும் கேட்கமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    என் மீது வழக்கு போட்டு தமிழக அரசு மிரட்டி பார்க்கிறது என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.#Thangatamilselvan

    தேனி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை, ஆலோசனை கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசியதாவது:-

    எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து பேசியதற்காக என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா மீது செல்லமேஸ்வர் உள்பட சக நீதிபதிகள் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அவர்கள் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரப்படவில்லை.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 6 மாதம் அவகாசம் கொடுத்தும் மத்திய அரசு அமைக்கவில்லை. ஆனால் அதற்கு ஏன் அவமதிப்பு வழக்கு தொடரவில்லை.


    உள்ளாட்சி, கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய போதும் தமிழக அரசு எதையும் செய்யவில்லை. அப்போது தமிழக அரசு மீது ஏன் வழக்க தொடரவில்லை.

    ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் எம்.எல்.ஏ. இல்லாமல் அவதிப்படும் ஆதங்கத்தில் பேசியதை அவமதிப்பு என்கின்றனர்.

    தமிழக அரசு என் மீது வழக்கு போட்டு மிரட்டி பார்க்கிறது. என்னை கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது. சென்னை- சேலம் 8 வழிச்சாலை அமைக்க விவசாய நிலங்களை அழிப்பது தேவையற்றது. சென்னை கன்னியாகுமரி சாலையை 8 வழிச்சாலையாக அமைக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார். #Thangatamilselvan

    டி.டி.வி.தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.180 கோடி கொடுத்ததாக அமைச்சர் மணிகண்டன் குற்றம் சாட்டியுள்ளார். #TTVDhinakaran #MKStalin

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    காவிரி நீர் பங்கீடு தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தை 1974-ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி மிரட்டலுக்கு பயந்து முதல்வராக இருந்த கருணாநிதி புதுப்பிக்க தவறிவிட்டார். அப்போது முதல் கர்நாடகா அரசு தண்ணீரை தர மறுத்து விட்டது.

    மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழி காட்டுதலின்படி முதல்- அமைச்சர் பழனிசாமி மேற்கொண்ட கடுமையான போராட்டத்தின் விளைவாக இந்த வழக்கை நேர் திசையில் எடுத்துச் சென்று சட்டப் போராட்டங்களை நடத்தி 177 டி.எம்.சி. தண்ணீரை பெற்றுள்ளோம். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த கட்சியும் செய்யாத வகையில் காவிரி நீருக்காக பாராளுமன்றத்தை 22 நாட்கள் முடக்கினோம். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் காவிரி நீருக்காக உண்ணாவிரதம் இருந்தோம்.

    தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம். அதன் மூலம் இந்த ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம் இந்த ஆட்சியை கலைக்கலாம் என்ற நோக்கத்தில் சதிகார வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

     


    செயலற்ற தலைவராக விளங்கி வரும் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் அந்த மக்களை எல்லாம் தூண்டி விட்டு அதில் பல்வேறு விதமான சமூக விரோதிகள் புகுந்து போராட்டத்தை போர்க்களமாக மாற்றி விட்டனர்.

    18 எம்.எல்.ஏ.க்களை தினகரன் மூலமாக கடத்தி சென்று அவர்களுக்கு தலா ரூ.10 கோடி வீதம் 180 கோடி ரூபாயை டி.டி.வி.தினகரன் வழியாக மு.க.ஸ்டாலின் கொடுத்து இருக்கிறார்.

    ஆசை காட்டி மோசம் செய்து இன்றைக்கு அந்த எம்.எல்.ஏ.க்கள் நடுத் தெருவில் நிற்கின்றனர். இதற்கு மு.க.ஸ்டாலின்தான் காரணம். இதற்கு கருவியாக விளங்கியவர் டி.டி. வி.தினகரன். 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வெகு விரைவில் தீர்ப்பு வரும். இடைத்தேர்தல் வரும்.

    இதுவரை நடந்த 110 அரசு விழாக்களில் ஒரே ஒரு விழாவில் மட்டும் கருணாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டுள்ளார். திருவாடானை தொகுதியில் மக்கள் குறைகளை நாங்கள் போக்கி வருகிறோம். அந்த தொகுதி மக்கள் புலம்புகின்றனர். தொகுதிக்குள் செல்வதற்கு பயமாக இருந்தால் நான் கூட்டிச் செல்கிறேன் தகுதி இல்லாதவருக்கு வாய்ப்பு கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்.

    மு.க.ஸ்டாலின் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் அதிருப்தியில் உள்ளனர். மு.க.ஸ்டாலினுக்கு வெளிமாநிலத்தில் இருந்து வந்து அறிவுரை வழங்குவதாகவும், அதன்படி செயல்படுவதாகவும் தெரிகிறது.

    மு.க.ஸ்டாலினுக்கும். துரைமுருகனுக்கும் அதிகாரப்போட்டி நடக்கிறது. தடை செய்யப்பட்ட குட்காவை சட்ட சபைக்கு கொண்டு வந்த எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் நிலை பரிதாபமாக உள்ளது. காலம், நேரம் கருதி சரியான நேரத்தில் சபாநாயகர் முடிவு எடுப்பார். தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வந்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை இருக்கும்.

    அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு தடைபோடும் வகையில் தி.மு.க. விவசாயிகளை தூண்டி விடுகிறது. மிகப் பெரிய சாலைகளை போட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறோம். அப்போது தான் தொழில் வளர்ச்சிகள் பெருகும். மத்திய அரசு தரக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #MKStalin

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணம் பலிக்காது என்று தங்க தமிழ்செல்வன் பேட்டியில் கூறியுள்ளார். #Thangatamilselvan #EdappadiPalaniswami

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் அந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை நீதிபதி விமலா விசாரிக்க உள்ளார்.

    இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச் செல்வன் தன்னுடைய வழக்கை நாளை மறுநாள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இதகுறித்து ‘மாலைமலர்’ நிரூபரிடம் அவர் கூறியதாவது:-

    நான் எனது தொகுதி மக்களை நேற்று சந்தித்து பேசினேன். இந்த தொகுதியில் வளர்ச்சி திட்டங்கள் நடைபெற எம்.எல்.ஏ. இருக்க வேண்டும். அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்க வேண்டும். ஆனால் எந்த மக்கள் பிரதிநிதியும் தொகுதியில் இல்லாததால் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலை உள்ளது.

    அதனால் ஐகோர்ட்டில் நடந்துவரும் எனது வழக்கை வாபஸ் பெற்றால் இடைத்தேர்தல் மூலம் எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுக்கலாம் என்றேன்.

    அதற்கு அங்குள்ள மக்கள் இடைத்தேர்தல் வந்தால் நீங்கள்தான் தேர்தலில் நிற்க வேண்டும் என்றனர்.

    என்னை பொறுத்தவரை தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ. வேண்டும். அது நானாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி நான் தேர்தலில் நிற்க சட்ட சிக்கலை உருவாக்குவார்கள் என்றேன். மக்கள் எனது கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

    எனவே இடைத்தேர்தல் நடத்துவதற்கு வசதியாக நாளை மறுநாள் (வியாழன்) சென்னை உயர்நீதிமன்றத்தில் 3-வது நீதிபதி விமலாவை சந்தித்து வழக்கை வாபஸ் பெறும் மனுவை கொடுக்க உள்ளேன்.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தால் பாராட்டுக்குரியது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

    அவர் என்னதான் ஆசை வார்த்தை கூறி அழைத்தாலும் ஒரு ஆள் கூட போக மாட்டார்கள். 18 பேரும் தினகரன் பக்கம் உறுதியாக உள்ளோம்.

    எனவே எடப்பாடியின் பேச்சு வெற்றுஜம்பம். அவரது எண்ணம் பலிக்காது. நிறைவேறாது. நாங்கள் பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம்.

    சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஏற்கனவே எங்களை தகுதி நீக்கம் செய்து விட்டார்கள். இப்போது மறுபடியும் வந்தால் வரவேற்கிறோம் என்றால் சட்டத்தை வளைக்க போவதாக சொல்கிறாரா?

    அல்லது 3-வது நீதிபதியிடம் எங்களுக்காக பரிந்து பேச போகிறாரா? என்பது தெரியவில்லை. மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வதாக ஒரு அமைச்சர் கூறுகிறார். அப்படி என்றால் நீதி எங்கே போகிறது? நீதியை வளைக்க இவர்கள் துணிந்து விட்டார்கள் என்றுதான் கருத வேண்டி உள்ளது.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் தனித் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளதால் நான் எனது வழக்கை வாபஸ் பெறுவதில் உறுதியாக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangatamilselvan #EdappadiPalaniswami

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறியுள்ளார். #MLAsDisqualified #Tamilarasan

    வாலாஜா:

    இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் ராணிப்பேட்டையில் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் சுமார் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பிற சமுதாய மக்களிடம் உள்ளது. பஞ்சமி நிலம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இது குறித்த விவரங்களை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த விவரங்களை வழங்காமல் தமிழக அரசு மெத்தனம் காட்டி வருகிறது. உடனடியாக தமிழக அரசு, மாநில மீட்பு ஆணையத்தை உருவாக்கி பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பின்னடைவு காலி பணியிடங்களை சிறப்பு பணி நியமனம் மூலம் தலித் மக்களுக்கு வழங்க ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது. 3 வருடங்கள் ஆகியும் இது நிறைவேற்றப்படவில்லை. சிறப்பு நியமனம் மூலம் இந்த பணி இடங்களில் தலித் மக்களை அரசு நியமிக்க வேண்டும்.

    ஜவ்வாதுமலை, ஏலகிரி மலை பகுதிகளில் போலி சான்றிதழ்கள் பரவி வருகிறது. தகுதியானவர்களுக்கு அவரவர் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சிறப்பு அதிகாரம் பெற்ற ஆதிதிராவிடர் நல ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

    பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் நிர்வாக பங்கீட்டில் தலித் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே வழங்க வேண்டும். நீட்தேர்வு அவசியமில்லை. இந்தியா முழுவதிலும் ஒரே மாதிரியான கல்வி திட்டம், ஒரே மாதிரியான பாடத்திட்டம் வேண்டும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். தமிழக காவல்துறை தற்போது செயலற்று உள்ளது. நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. தமிழக அரசை மத்திய அரசு பின்னால் இருந்து இயக்குகிறது என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #MLAsDisqualified #Tamilarasan

    18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் எடப்பாடி அரசின் தலைவிதியை 3-வது நீதிபதி நிர்ணயிப்பார் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MLAsDisqualification #MKStalin

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணாநகர் வடக்கு பகுதியில் நேற்றிரவு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்துக்கு பகுதிச் செயலாளர் ச.பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்டக் கழக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் 5 முறை கலைஞர் முதல்-அமைச்சராக இருந்திருக்கிறார். பலமுறை எதிர் கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். அவர் நாட்டைப்பற்றி, மக்களைப்பற்றி என்றைக்கும் சிந்திக்க கூடிய தலைவராக விளங்கியிருக்கிறார்.

    கருணாநிதி உடல் நலிவுற்று ஓய்வெடுத்து வருகிறார். அவரது தொண்டையில் ஒரு ‘டியூப்’ உள்ளது. அதன் மூலம்தான் உணவு உண்ணும் நிலை உள்ளது. சுவாசமும் அந்த டியூப் வழியாகத்தான். அவரால் தெளிவாக பேச முடியா விட்டாலும், நாம் சொல்வதை புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளார்.

    கருணாநிதி நல்ல நிலையில் இருந்திருந்தால் விட்டிருப்பாரா? என்கிறார்கள். கருணாநிதி செயல் பட்டிருந்தால் அது முடிந்திருக்குமே? இது நடந்திருக்குமே? என்று சொல்கிறார்கள்.

    கருணாநிதி எந்த நேரத்தில் எதை செய்வார்? எப்படி செய்வார்? என்று அவரிடம் நாங்களும் கற்று வைத்திருக்கிறோம்.

    எனவே இங்கு இருக்கக்கூடிய உங்களுக்கெல்லாம் சொல்கிறேன். கவலைப் படாதீர்கள். இன்னும் செய்யவில்லையே என்று வருத்தப்படாதீர்கள்.

    நேரம் வரும். அந்த நேரத்தை பயன்படுத்தி எப்படி செய்ய வேண்டும் என்ற தந்திரத்தை பயன்படுத்த வேண்டிய நேரத்திலே பயன் படுத்துவோம்.

    எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய நாம் தொடர்ந்து மக்கள் பிரச்சினைக்காக போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கிறோம். தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. இது கண்டனத்துக் குரியது.

    இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்று இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி ஆட்சி மத்தியிலே உள்ள பி.ஜே.பி. ஆட்சிக்கு மோடிக்கு அடி பணிந்து தலைகுனிந்து மண்டியிட்டு அடங்கி இருக்கக்கூடிய ஆட்சியாக உள்ளது.


    18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட கருத்து சொல்லி உள்ளனர். இதில் நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவை கடுமையாக விமர்சித்து ரத்து செய்திருக்கிறார்.

    இனி 3-வது நீதிபதி எடப்பாடி அரசின் தலைவிதியை நிர்ணயிப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. அதனால்தான் நேற்றைக்கே இந்த தீர்ப்பால் மக்களுக்கு ஆபத்து என்று சொன்னேன். ஏனென்றால் இந்த ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு பேராபத்து என்பதாலேயே அப்படி கூறினேன்.

    சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நீதிமன்றத்தின் நிலையோ இப்படி...? இனி எங்கே, யாரை நம்புவது இனி நாங்கள் நம்புவது மக்களைத்தான்.

    எனவே தமிழ்நாட்டிலே மிக விரைவிலே தி.மு.க. ஆட்சி உதயமாகும் தயாராக இருங்கள், தயாராக இருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளி செங்கோல் வழங்கி சிறப்பு செய்தார்.

    கூட்டத்தில் பகுதி செயலாளர் ராமலிங்கம், பரமசிவம், கே. ஏழுமலை, ஜெ.கருணாநிதி, மதன் மோகன், மாவட்ட நிர்வாகிகள் எம்.டி.ஆர்.நாதன், வெல்டிங் மணி, ஐ.கென்னடி, துரை, செல்வி சவுந்தர்ராஜன், குணசேகர், கோவிந்தராஜ், பாபு, இளங்கோவன், ஏ.டி. முருகன், டாக்டர் ஆற்காடு கலாநிதி வீராசாமி, வக்கீல் ரகு, டாக்டர் ஜீவகன், இளைஞரணி சிற்றரசு, சேப்பாக்கம் சிதம்பரம் உதயசூரியன், மாரி, ஜானகி ராமன் உள்பட பலர் பங்கேற்றனர். #MLAsDisqualification #MKStalin

    ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலியால் தினகரனிடம் இருந்து 8 எம்.எல்.ஏ.க்கள் விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #TTVDhinakaran #MLAsDisqualification

    சென்னை:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் டி.டி.வி.தினகரனை முதலில் ஆதரித்தனர். ஜக்கையன் எம்.எல்.ஏ. விலகியதால் அவரது எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.

    இந்த 18 எம்.எல்.ஏ.க்களும் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து மாற்றக்கோரி மனு கொடுத்ததால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார். அதன்படி 18 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    சபாநாயகர் உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-வது நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களின் ஒருவரான தங்கதமிழ்செல்வன் தனது வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு இடைத்தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் டி.டி.வி.தினகரன் அணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    தங்க தமிழ்செல்வன் நாளை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு கோர்ட்டில் மனு செய்ய திட்டமிட்டுள்ளார். மற்ற 17 பேரும் வழக்கை சந்திக்க போவதாக டி.டி.வி. தினகரன் கூறி வருகிறார். ஆனால் தங்க தமிழ்செல்வன் பாணியில் மேலும் சிலரும் வழக்கை வாபஸ் பெற விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இதற்கிடையே டி.டி.வி. தினகரன் அணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி அந்த அணியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு ஆளும் அ.தி.மு.க. தரப்பில் இருந்து முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கான பொறுப்பை மூத்த அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைத்து இருப்பதாக சொல்கிறார்கள்.

    அந்த மூத்த அமைச்சர் கடந்த 2 தினங்களாக டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அப்போது அவர் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தால் அமைச்சர் பதவி உட்பட பல்வேறு சலுகைகளை பெற்று தருவதாக வாக்குறுதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவரது சமரச பேச்சுவார்த்தை பயனாக டி.டி.வி. தினகரனின் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் சிலர் அணி மாறும் மனநிலைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்களது பெயர் விவரங்களை தெரிவிக்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மறுத்து விட்டனர்.

    அ.தி.மு.க. வட்டாரத்தில் இது பற்றி விசாரித்த போது டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 8 எம்.எல்.ஏ.க்கள் அணி மாறுவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக தெரிவித்தனர். 3-வது நீதிபதியின் தீர்ப்பை பொறுத்து அவர்கள் 8 பேரும் தங்களது முடிவை உனடியாக அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே அந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சந்திக்க வைக்க ஒருசாரார் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். நேற்று இரவு வரை ரகசியமாக நடந்து வந்த இந்த திட்டங்கள் இன்று அரசியல் வட்டாரத்தில் மெல்ல கசிந்து உள்ளன.


    இதன் காரணமாக அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது 21ஆக உள்ளது. டி.டி.வி. தினகரனையும் சேர்த்தால் அ.தி.மு.க.வுக்கு எதிராக 22 பேர் உள்ளனர். 8 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணியில் இருந்து விலகும் பட்சத்தில் அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 14 ஆக குறையும்.

    இதற்கிடையே தங்க தமிழ்செல்வனையும் தினகரன் அணியில் இருந்து பிரித்து இழுப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக ஒரு தகவல் வெளியானது. அமைச்சர் பதவி தருவதாக அவரிடம் ரகசிய பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் இதை தங்க தமிழ்செல்வன் மறுத்து உள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “எனக்கு அமைச்சர் பதவி தருவதாக சொன்னால் நான் ஏன் அ.தி.மு.க. தலைவர்களை எதிர்த்து போராட்டம் நடத்த போகிறேன். எனவே என்னிடம் ரகசிய பேச்சு நடந்ததாக கூறப்படும் தகவலில் எந்த உண்மையும் இல்லை” என்றார். #TTVDhinakaran #MLAsDisqualification

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் காலதாமதம் செய்யாமல் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று ரங்கராஜன் எம்.பி. நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualified

    ராஜபாளையம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ராஜபாளையத்தில் இன்று மாலை நடைபெற உள்ள தொழில் பாதுகாப்பு மாநாட்டில் டி.கே.ரங்கராஜன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவர் ரெயில் நிலையத்தில் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் ஏற்படக் கூடிய தொழில் நெருக்கடி காரணமாக, ராஜபாளையத்தில் தொழில் நெருக்கடி வளர்ந்து கொண்டே இருக்கிறது. பஞ்சாலைகள் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் மூடு விழாக்களை கண்டு கொண்டு இருக்கிறது.

    அரசின் கொள்கை காரணமாக தொழில் முனைவோர், உழைப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மாநில அரசு இது குறித்து பொருட்படுத்தாமல் இருப்பது இன்னொரு துயரமான பகுதி.

    இதற்கான மாற்று வழி கண்டுபிடிக்க ராஜபாளையத்தில் கூட்டம் நடக்க உள்ளது. இதில் கலந்து கொண்டு அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதை நாடாளுமன்றத்திலும், மத்திய அரசுக்கும் தெரிவிக்க உள்ளோம்.

    முரண்பட்ட கருத்துக்களை நீதிபதிகள் கொடுப்பது புதிதல்ல. அரசியல் நெருக்கடியை உருவாக்கி கொண்டே இருக்கும்போது, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் காலதாமதப்படுத்தாமல் தீர்ப்பு வழங்க முடியும் என்றால் நீதிமன்றம் ஜனநாயக செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும். இல்லை என்றால் ஜனநாயக செயல்பாட்டை மேலும் முடக்கும் என்பது எனது கருத்து.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualified

    தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி போராடுவார்கள் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualified

    கோபி:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார்.

    அப்போது அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    நான் ஏற்கனவே கூறியது போல சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் போது ஸ்லீப்பர் செல்கள் யார் என்று தெரியும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்களாகத்தான் இருந்து வருகிறார்கள்.

    வழக்கை தாமதப்படுத்துவார்கள் என கூறி தங்க தமிழ் செல்வன் மட்டும் தான் வழக்கை வாபஸ் பெறுகிறார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி போராடுவார்கள். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அழிவை நோக்கி செல்கிறது. அதை மீட்டெடுக்கும் பொறுப்பை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

     


    எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதே போன்று சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் கட்சி சார்பில் தேர்தலை சந்திப்போம். அதில் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம். கட்சியை காப்பாற்றுவோம்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualified

    தங்க தமிழ்செல்வன் மற்றும் வெற்றிவேல் கருத்து வேறுபாடு காரணமாக தினகரன் அணியில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. #TTVDhinakaran #MLAsDisqualified

    சென்னை:

    டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக உள்ள 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அறிவித்த விவகாரம் அடுத்தடுத்து புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது.

    வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட அந்த 18 எம்.எல்.ஏ.க்களும் தங்களது தகுதி நீக்கத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் இருவரும் பலமாத விசாரணைக்கு பிறகு நேற்று முன்தினம் மாறுபட்ட தீர்ப்பை வெளியிட்டனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றார். ஆனால் நீதபதி சுந்தர் செல்லாது என்றார்.

    இதனால் இந்த வழக்கின் தீர்ப்பு மூன்றாவது நீதிபதி முடிவுக்கு செல்ல உள்ளது. 3-வது நீதிபதி பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அவர் தனது தீர்ப்பை வெளியிட எத்தனை மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொள்வார் என்பதும் தெரியாத நிலை உள்ளது.

    உறுதியான, ஒருமித்த கருத்துடைய தீர்ப்பு வெளியாகாத காரணத்தால் டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உருவாகத் தொடங்கியுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்களில் ஒரு சாரார், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு, தங்கள் தொகுதியில் இடைத் தேர்தலை சந்திக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

    ஆனால் மற்றொரு சாரார், பதவியை ராஜினாமா செய்யவோ அல்லது இழக்கவோ விரும்பவில்லை. எனவே தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்து சட்ட ரீதியாக போராடுவது என்ற மனநிலையில் உள்ளனர். இந்த மாறுபட்ட நிலையால் 18 எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் புதிய குழப்பம் நிலவுகிறது.

    வழக்கை வாபஸ் பெற்று விட்டு மீண்டும் தேர்தலை சந்திக்கலாம் என்ற மன நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் உள்பட சில எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த கருத்தை கொண்டிருப்பவர்கள், “இடைத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடாதபட்சத்தில் தங்களால் அ.தி.மு.க.வை எளிதாக வீழ்த்த முடியும்” என்று சொல்கிறார்கள்.

    இது குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ் செல்வன் ‘மாலைமலர்’ நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

     


    எங்கள் மீதான தகுதி நீக்க வழக்கு செல்லுமா? செல்லாதா? என்று இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறி உள்ளார்களே தவிர இந்த வழக்கை எந்த கால கட்டத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சொல்லாமல் உள்ளனர். இதில் 3-வது நீதிபதியை உடனே நியமித் திருந்தால் நீதிமன்றத்தை பாராட்டி இருக்கலாம். அல்லது இன்னும் 10 நாளில் இறுதி தீர்ப்பை 3-வது நீதிபதி கூற வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் வரவேற்கலாம்.

    ஆனால் இந்த நீதிமன்றம் ஓட்டு போட்ட பொதுமக்களை பற்றி கவலைப்படாமல் பொத்தாம் பொதுவாக தீர்ப்பு சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

    என்னுடைய தொகுதியில் கடந்த 9 மாதங்களாக எம்.எல்.ஏ. இல்லை. இதனால் மக்கள் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க கோரி யாரிடம் சென்று முறையிடுவது என தெரியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

    தினமும் 300 பேர் என்னை சந்திக்க வருகிறார்கள். அவர்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த மக்களை பற்றி தலைமை நீதிபதிக்கு எந்த கவலையும் இல்லை.

    இந்த ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்ட ஓ.பி.எஸ். இன்று துணை முதல்- அமைச்சராக உள்ளார். அ.தி.மு.க. அரசு நீடிக்க வேண்டும் என்று ஓட்டளித்த நாங்கள் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறோம்.

    இதை கோர்ட்டு கண்டு கொள்ளவில்லை. அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறுகிறது.

    புதுச்சேரி சட்டசபை வழக்கில் ஒரு தீர்ப்பும் தமிழக சட்டசபை வழக்கில் மற்றொரு தீர்ப்பையும் தலைமை நீதிபதி கூறுகிறார் என்றால் இன்றைக்கு தமிழகமே நீதிமன்றத்தை பார்த்து சிரிக்கிறது.

    எனவே தீர்ப்பை நம்பி பிரயோஜனமில்லை. இவர்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

    அதற்கு பதில் எனது வழக்கை வாபஸ் பெறுவது தான் சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்துள்ளேன். எனவே வழக்கை வாபஸ் பெற இப்போதுள்ள நீதிபதிகள் முன்பு மனு கொடுப்பதா? அல்லது 3-வது நீதிபதி நியமனத்துக்கு பிறகு அவரிடம் கொடுப்பதா? என்பது பற்றி சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்.

    நான் வழக்கை வாபஸ் பெறும் மனுவை கூட நீதிமன்றத்தில் உடனே ஏற்காமல் காலம் தாழ்த்துவார்கள் என்பதால்தான் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க உள்ளேன்.

    ஆண்டிப்பட்டி தொகுதியில் எவ்வளவு நாள்தான் மக்கள் கஷ்டப்படுவார்கள். எனவே 6 மாதத்தில் தேர்தல் வரட்டும். தேர்தலில் நின்று யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. அதனால் தான் எனது வழக்கை வாபஸ் பெறுவதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளேன். மற்றவர்களை பற்றி கவலைப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் வெற்றிவேல் உள்பட பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், வழக்கை வாபஸ் பெறவோ, இடைத் தேர்தலை சந்திக்கவோ விரும்பவில்லை. அப்படி முடிவு செய்தால் அது தி.மு.க.வுக்கு சாககமாகி விடும் என்று நினைக்கிறார்கள்.

     


    நான் கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருப்பேன். வழக்கை வாபஸ் பெற மாட்டேன். ஏனென்றால் முக்கால் கிணறை தாண்டி விட்டோம். இன்னும் கொஞ்சம் காலம்தான்.

    இந்த விசயத்தில் வழக்கை வாபஸ் பெறுவது தீர்வாகாது. ஏனென்றால் வாபஸ் பெறுவது மனு கொடுத்தாலும் அதை உடனே நீதிமன்றம் ஏற்காது.

    இரு நீதிபதிகள் தீர்ப்பு கூறிய காரணத்தால் இரு நீதிபதிகள் இருக்கும்போது மனு கொடுங்கள் என்று சொல்லி விடுவார்கள். அல்லது 3-து நீதிபதி நியமித்த பிறகு வாருங்கள் என்று சொல்லி திருப்பி அனுப்பி விடுவார்கள்.

    தலைமை நீதிபதி அர்த்தமே இல்லாமல் தீர்ப்பு எழுதி உள்ளார். காரணமே சொல்லவில்லை. அவர் எதற்காக புதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்துக்கு ஒரு தீர்ப்பு கூறுகிறார் என்று குழந்தைகளுக்கு கூட தெரியும்.

    3-வது நீதிபதியை நியமித்த பிறகு ரொம்ப நாளைக்கு காலம் கடத்த முடியாது. 6 மாதத்திற்குள் இறுதி தீர்ப்பு சொல்லிதான் ஆக வேண்டும்.

    எனவே இறுதி தீர்ப்புக்கு காத்திருப்பது தான் புத்திசாலித்தனம். எனவே நான் வழக்கை வாபஸ் பெற மாட்டேன்.

    தங்க தமிழ்ச்செல்வன் வழக்கை வாபஸ் பெறுவேன் என்று சொல்வது எளிதாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவரது வக்காலத்து மனுவை உடனே கோர்ட்டு ஏற்காமல் காலம் கடத்தி விடும்.

    2-வது பாயிண்ட் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதால் தேர்தல் வந்தாலும் இவர் தேர்தலில் நிற்க முடியுமா? அல்லது இந்த 5 ஆண்டுக்குள் நிற்க முடியாதா? என்ற கேள்வி எழும். நிறைய சட்ட சிக்கலில் வழக்கு இழுத்துக் கொண்டே செல்லும்.

    எனவே வழக்கை எதிர் கொண்டு இறுதி தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதுதான் புத்திசாலித்தனம். அதுவரை நான் காத்திருப்பேன்.

    இவ்வாறு வெற்றிவேல் கூறினார்.

    18 எம்.எல்.ஏ.க்களில் ஒரு சாரார திடீரென வழக்கை வாபஸ் பெற முடிவு செய்திருப்பது, ஆளும் அ.தி.மு.க.விலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் பாதகமாக அமைந்து விட்டால், சட்ட சபையில் மெஜாரிட்டியை நிரூபிப்பதில் சிக்கல் உருவாகும் என்று கூறப்படுகிறது.

    இதனால் 18 எம்.எல்.ஏ.க் களில் சிலர் வழக்கை திரும்பப் பெற்றாலும் அது இடைத் தேர்தலுக்கு வழி வகுத்து ஆளும் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. #TTVDhinakaran #MLAsDisqualified

    ×