search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு - எடப்பாடி அரசின் தலைவிதியை 3-வது நீதிபதி நிர்ணயிப்பார்- மு.க.ஸ்டாலின்
    X

    18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கு - எடப்பாடி அரசின் தலைவிதியை 3-வது நீதிபதி நிர்ணயிப்பார்- மு.க.ஸ்டாலின்

    18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் எடப்பாடி அரசின் தலைவிதியை 3-வது நீதிபதி நிர்ணயிப்பார் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MLAsDisqualification #MKStalin

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணாநகர் வடக்கு பகுதியில் நேற்றிரவு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்துக்கு பகுதிச் செயலாளர் ச.பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்டக் கழக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் 5 முறை கலைஞர் முதல்-அமைச்சராக இருந்திருக்கிறார். பலமுறை எதிர் கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். அவர் நாட்டைப்பற்றி, மக்களைப்பற்றி என்றைக்கும் சிந்திக்க கூடிய தலைவராக விளங்கியிருக்கிறார்.

    கருணாநிதி உடல் நலிவுற்று ஓய்வெடுத்து வருகிறார். அவரது தொண்டையில் ஒரு ‘டியூப்’ உள்ளது. அதன் மூலம்தான் உணவு உண்ணும் நிலை உள்ளது. சுவாசமும் அந்த டியூப் வழியாகத்தான். அவரால் தெளிவாக பேச முடியா விட்டாலும், நாம் சொல்வதை புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளார்.

    கருணாநிதி நல்ல நிலையில் இருந்திருந்தால் விட்டிருப்பாரா? என்கிறார்கள். கருணாநிதி செயல் பட்டிருந்தால் அது முடிந்திருக்குமே? இது நடந்திருக்குமே? என்று சொல்கிறார்கள்.

    கருணாநிதி எந்த நேரத்தில் எதை செய்வார்? எப்படி செய்வார்? என்று அவரிடம் நாங்களும் கற்று வைத்திருக்கிறோம்.

    எனவே இங்கு இருக்கக்கூடிய உங்களுக்கெல்லாம் சொல்கிறேன். கவலைப் படாதீர்கள். இன்னும் செய்யவில்லையே என்று வருத்தப்படாதீர்கள்.

    நேரம் வரும். அந்த நேரத்தை பயன்படுத்தி எப்படி செய்ய வேண்டும் என்ற தந்திரத்தை பயன்படுத்த வேண்டிய நேரத்திலே பயன் படுத்துவோம்.

    எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய நாம் தொடர்ந்து மக்கள் பிரச்சினைக்காக போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கிறோம். தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. இது கண்டனத்துக் குரியது.

    இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்று இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி ஆட்சி மத்தியிலே உள்ள பி.ஜே.பி. ஆட்சிக்கு மோடிக்கு அடி பணிந்து தலைகுனிந்து மண்டியிட்டு அடங்கி இருக்கக்கூடிய ஆட்சியாக உள்ளது.


    18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட கருத்து சொல்லி உள்ளனர். இதில் நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவை கடுமையாக விமர்சித்து ரத்து செய்திருக்கிறார்.

    இனி 3-வது நீதிபதி எடப்பாடி அரசின் தலைவிதியை நிர்ணயிப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. அதனால்தான் நேற்றைக்கே இந்த தீர்ப்பால் மக்களுக்கு ஆபத்து என்று சொன்னேன். ஏனென்றால் இந்த ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு பேராபத்து என்பதாலேயே அப்படி கூறினேன்.

    சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நீதிமன்றத்தின் நிலையோ இப்படி...? இனி எங்கே, யாரை நம்புவது இனி நாங்கள் நம்புவது மக்களைத்தான்.

    எனவே தமிழ்நாட்டிலே மிக விரைவிலே தி.மு.க. ஆட்சி உதயமாகும் தயாராக இருங்கள், தயாராக இருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளி செங்கோல் வழங்கி சிறப்பு செய்தார்.

    கூட்டத்தில் பகுதி செயலாளர் ராமலிங்கம், பரமசிவம், கே. ஏழுமலை, ஜெ.கருணாநிதி, மதன் மோகன், மாவட்ட நிர்வாகிகள் எம்.டி.ஆர்.நாதன், வெல்டிங் மணி, ஐ.கென்னடி, துரை, செல்வி சவுந்தர்ராஜன், குணசேகர், கோவிந்தராஜ், பாபு, இளங்கோவன், ஏ.டி. முருகன், டாக்டர் ஆற்காடு கலாநிதி வீராசாமி, வக்கீல் ரகு, டாக்டர் ஜீவகன், இளைஞரணி சிற்றரசு, சேப்பாக்கம் சிதம்பரம் உதயசூரியன், மாரி, ஜானகி ராமன் உள்பட பலர் பங்கேற்றனர். #MLAsDisqualification #MKStalin

    Next Story
    ×