search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற கட்டிடம்"

    • டெல்லியில் நேற்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சசிதரூர் செங்கோலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு விடுதலை பெற்றபோது ஆட்சிமாற்றத்தின் அடையாளமாக இது வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் இதை காங்கிரஸ் நிராகரித்து உள்ளது.

    இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்து உள்ளது. எனினும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சசிதரூர் செங்கோலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'செங்கோல் சர்ச்சையில் இரு தரப்பும் நல்ல வாதங்கள் எடுத்து வைக்கின்றன என்பது எனது சொந்த கருத்து. இந்த பிரச்சினை சமரசத்துக்குரியதுதான். ஏனெனில் நமது நிகழ்காலத்தின் மதிப்பீடுகளை உறுதிப்படுத்த கடந்த காலத்திலிருந்து இந்த சின்னத்தை (செங்கோல்) தழுவிக்கொள்வோம்' என குறிப்பிட்டு இருந்தார்.

    • முக்கியத்துவம் வாய்ந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் மக்களவைத் தலைவரின் இருக்கையின் அருகில் இடம் பெறவிருப்பது பாராட்டுதலுக்குரியது.
    • தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய விடுதலையின் அடையாளமாகவும், ஆட்சி அதிகார மாற்றத்திற்கு அத்தாட்சியாகவும் விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் செங்கோல், பிரதமரால் நாளை திறக்கப்படவுள்ள புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில், மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் நிரந்தரமாக இடம் பெறவிருக்கிறது என்பது தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

    இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் மக்களவைத் தலைவரின் இருக்கையின் அருகில் இடம் பெறவிருப்பது பாராட்டுதலுக்குரியது.

    புதிய பாராளுமன்ற வளாகத்தில் மக்களவைத் தலைவர் அவர்களின் இருக்கைக்கு அருகில் செங்கோல் நிரந்தரமாக இடம்பெறுவது என்பதும், நவீன வசதிகள் கொண்ட புதிய பாராளுமன்றக் கட்டிடம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரால் திறந்து வைக்கப்படவுள்ளது என்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

    இதனை சில எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது ஏற்புடையதல்ல. இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை உருவாக்கி, தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அதில் செங்கோலை இடம் பெறச் செய்த பிரதமருக்கு என்னுடைய பாராட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • புதிய பாராளுமன்றம் திறக்கப்படும்போது மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே தமிழகத்தை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் நிறுவப்பட உள்ளது.
    • செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதன் அடையாளமாக முதல் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்டதாகும்.

    புதுடெல்லி:

    டெல்லியில் தற்போதைய பாராளுமன்ற வளாகத்தில் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் செயல்படுவதற்கு கடுமையான இட பற்றாக்குறை நிலவுகிறது.

    மேலும் அந்த பாராளுமன்றம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் அதில் புதிய நவீன வசதிகள் எதையும் செய்யமுடியாத நிலை காணப்பட்டது. இதனால் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட பிரதமர் மோடி முடிவு செய்தார்.

    அதன்படி தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் அருகிலேயே புதிய பாராளுமன்றம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கின. 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.

    4 அடுக்கு மாடிகளை கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவை , மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 மிகப்பெரிய ஆலோசனை கூடங்களும் கட்டப்பட்டுள்ளன. மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமரும் வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    மொத்தத்தில் ஒரே நேரத்தில் 1,272 எம்.பி.க்கள் அமர்ந்து தங்களது பணிகளை மேற்கொள்ள முடியும்.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் 2 ஆண்டுகள் 5 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை கட்டுவதற்கு சுமார் 1,200 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் மிகப்பெரிய பாராளுமன்றங்களில் ஒன்றாக இந்த பாராளுமன்றம் கருதப்படுகிறது.

    பழைய பாராளுமன்றம் வட்ட வடிவில் அமைந்திருந்தது. ஆங்கிலேயர்களின் கட்டிட கலை பாணி அதில் காணப்படுகிறது. ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்திய கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. நாளை சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பது ஏற்புடையது அல்ல என்று எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. மேலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    ஆனால் இதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிட திறப்புவிழாவை காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்பட 19 கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக கூட்டாக அறிவித்துள்ளன. என்றாலும், திட்டமிட்டபடி திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    புதிய பாராளுமன்றம் திறக்கப்படும்போது மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே தமிழகத்தை சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் நிறுவப்பட உள்ளது. அந்த செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதன் அடையாளமாக முதல் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்டதாகும்.

    அந்த செங்கோல் புனித நீரால் சுத்தம் செய்யப்பட்டு ஆங்கிலேயர்களிடம் வழங்கப்பட்டு, பிறகு ஆதீனம் மூலம் நேருவின் கைக்கு வந்தது. அப்போது கோளறு பதிகம் பாடப்பட்டது. இத்தகைய சிறப்புடைய அந்த செங்கோல் அலகாபாத்தில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

    ஆட்சி அதிகாரத்தின் மாற்றத்துக்கு அடையாளமாக கருதப்படும் அந்த செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் வைப்பதுதான் பொறுத்தமாக இருக்கும் என்று பிரதமர் மோடி முடிவு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அந்த செங்கோல் அலகாபாத்தில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    திறப்பு விழாவில் தமிழகத்தை சேர்ந்த 20 ஆதீனங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளனர். நாளை காலை புதிய பாராளுமன்றத்தில் நடக்கும் விழாவில் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழகத்தின் ராஜ மேளம் முழங்க அவர்கள் செங்கோல் சுமந்து வருவார்கள். அதை புனித நீரால் தூய்மைப்படுத்தி பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பார்கள்.

    முன்னதாக நாளை காலை புதிய பாராளுமன்றத்தில் சிறப்பு ஹோமம் செய்து வழிபாடுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவை முடிந்ததும் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    நாளை பிற்பகல் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்றத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இந்த விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். பா.ஜ.க. வின் தோழமை கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா., சிவசேனா கட்சிகள் பங்கேற்கின்றன.

    எதிர்க்கட்சிகளில் பிஜூ ஜனதாதளம், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகாலிதளம் உள்பட பல்வேறு கட்சிகள் கலந்துகொள்ள வருகின்றன. வரும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும். அந்த கூட்டத்தொடர் புதிய பாராளுமன்றத்தில் நடைபெறும்.

    • செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் ஏன் தொடர்ந்து வெறுக்கிறது என்று தெரியவில்லை.
    • சைவ மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது.

    புதுடெல்லி:

    மத்திய மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    செங்கோல் விவகாரத்தில் இந்திய பண்பாட்டை காங்கிரஸ் ஏன் தொடர்ந்து வெறுக்கிறது என்று தெரியவில்லை. சைவ மடமான திருவாவடுதுறை ஆதீனத்தை காங்கிரஸ் அவமதித்து விட்டது. ஆதீனத்தின் வரலாற்றை போலி என காங்கிரஸ் தெரிவிப்பது அவர்களின் நடத்தையை காட்டுகிறது. நேருவுக்கு தமிழகத்தின் சைவ மடத்தால் வழங்கப்பட்ட செங்கோலை காங்கிரஸ் ஊன்று கோலாக்கி விட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாட்டின் முதல் குடிமகனாக உள்ள ஜனாதிபதியே பாராளுமன்றத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் என்று மனுதாரர் கூறி உள்ளார்.
    • பாராளுமன்ற நிகழ்வை தொடங்கி வைப்பதையும், பாராளுமன்ற கட்டிடம் திறப்பையும் எப்படி தொடர்புபடுத்த முடியும்?

    டெல்லியில் ரூ.850 கோடி மதிப்பில் புதிய பாராளுமன்ற கட்டிடம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார்.

    ஆனால் பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன.

    இந்த நிலையில் பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கன்னியாகுமரியை சேர்ந்த வக்கீல் ஜெய்சுகீன் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும் இந்த வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    நாட்டின் முதல் குடிமகனாக உள்ள ஜனாதிபதியே பாராளுமன்றத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் என்று மனுதாரர் கூறி உள்ளார்.

    பாராளுமன்ற நிகழ்வை தொடங்கி வைப்பதையும், பாராளுமன்ற கட்டிடம் திறப்பையும் எப்படி தொடர்புபடுத்த முடியும்? நீங்கள் இந்த மனுவை என்ன நோக்கத்திற்காக தாக்கல் செய்துள்ளீர்கள்? இந்த மனுவை தாக்கல் செய்ததற்காக நாங்கள் உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறோம்.

    நாங்கள் வழக்கை தள்ளுபடி செய்ய முடிவு எடுத்தால் மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரராகிய நீங்கள் சொல்கிறீர்கள். இந்த மனுவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. புதிய பாராளுமன்ற கட்டிடம் யாரை வைத்து திறக்க வேண்டும். எப்படி திறக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    இதன் மூலம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க தடை இல்லை என்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதிப்படுத்தி இருக்கிறது.

    இதற்கிடையே வக்கீல் ஜெய்சுகீன் தனது மனுவை திரும்ப பெற்றார்.

    • டெல்லியில் சுதந்திர தின விழாக்கள் முடிந்த பிறகு அந்த செங்கோல் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
    • வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ள இந்த செங்கோலை டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவன மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.

    ராஜாஜியின் ஆலோசனைப்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு அந்த செங்கோல் வழங்கப்பட்டது.

    டெல்லியில் சுதந்திர தின விழாக்கள் முடிந்த பிறகு அந்த செங்கோல் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளியால் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டுள்ள இந்த செங்கோலை டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவன மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். வரும் 28-ந் தேதி சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்படும்.

    இதை முன்னிட்டு அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அந்த செங்கோலை கங்கை புனித நீரால் புனிதப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    மேலும் அந்த செங்கோலை தயாரித்தவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர்.

    • புதிய பாராளுமன்றத்தை பிரதமர் திறப்பது பழங்குடியினரையும், பெண்களையும் அவமதிப்பதாகும் என பேட்டி.
    • பழங்குடியினரை குறிவைத்து அரசியல் செய்யும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட்டம்

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. ஜனாதிபதி திரவுபதி முர்முவை வைத்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் தலைவர் சிவாஜிராவ் மோகே இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதிக்கு பதிலாக பிரதமர் மோடி புதிய பாராளுமன்றத்தை திறந்து வைப்பது ஜனநாயகத்தை அவமதிப்பதாகும். முதல் முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாகி இருக்கிறார். அதுவும் பெண் ஜனாதிபதியை பெற்றிருக்கிறோம். புதிய பாராளுமன்றத்தை பிரதமர் மோடி திறப்பது பழங்குடியினரையும், பெண்களையும் அவமதிப்பதாகும்.

    பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது ஜனாதிபதி என்பதால், அவர் பாராளுமன்றத்தின் முக்கிய அங்கம். எனவே, புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும். அவர் பழங்குடியினர் என்பதால் இப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை.

    பழங்குடியினர் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் இந்த முயற்சிக்கு எதிராக, நாளை நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம். புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டுமே தவிர, பிரதமர் அல்ல. முடிவை மாற்றுவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. பிரதமர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதியை அழைத்து திறந்து வைக்க வேண்டும்.

    பழங்குடியினரை குறிவைத்து அரசியல் செய்யும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவோம். பழங்குடியினரை அரசியலுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய பாராளுமன்ற மக்களவையில் சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது.
    • ஒரு தலைபட்சமாக இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக நடத்த செங்கோல் உறுதுணையாக இருக்கும்.

    சென்னை :

    புதிய பாராளுமன்றத்தில் தமிழக செங்கோல் நிறுவப்படுவது தொடர்பாக சென்னை கவர்னர் மாளிகையில் கவர்னர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற புதிய கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் போது 1947-ல் நடந்த ஒரு முக்கியமான சம்பவம். ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிந்து அவர்கள் கையில் இருந்து நமது மக்கள் கையில் ஆளுமை கிடைத்தபோது, அந்த ஆளுமையை, பரிமாற்றத்தை எப்படி செய்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டக்கூடிய ஒரு நிகழ்ச்சி.

    அதை நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவே அதில் பங்கேற்று அந்த பரிமாற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பரிமாற்றம் நடந்திருக்கிறது. செங்கோல் தான் அந்த பரிமாற்றம். அது நடந்த சமயம் இரவு 10.30 மணி முதல் 12 மணிக்குள்ளாக நடந்த விஷயம். அந்த பரிமாறுதல் அப்போது தான் நடந்திருக்கிறது.

    நாம் கொண்டாடக்கூடிய சுதந்திரம், அந்த பரிமாற்றத்தால் கிடைத்தது. அந்த சுதந்திரத்தை நாம் கொண்டாடுகிறோம். ஆளுமை பரிமாறுதல் பூர்வீகத்தில் எப்படி நடந்தது என்பதை தேடி கண்டு பிடித்து இன்று வரை செய்கிறார்கள்.

    நாம் எந்த ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்தோமோ அந்த ஆங்கிலேயர்கள் கூட இன்று அவர்களின் நாட்டில் 1670-ம் ஆண்டு வாக்கில் நடந்த அதே பாணியில் இன்றும் அங்கு அரசு பரிமாறுதல் நடக்கிறது. சுதந்திரம் என்பது செங்கோல் பரிமாற்றத்தால் கிடைத்தது.

    இந்த பரிமாறுதல் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெருமையான பங்கு இருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியை மாற்றும் போது இதை எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.

    இந்தியாவில் எப்படி செய்தால் ஏற்புடையதாக இருக்கும் என்று கேட்டனர். அந்த ஏற்புடையது என்ன என்பதை விவரிக்க அப்போதைய பிரதமர் நேரு, ராஜாஜியிடம் கலந்து ஆலோசனை செய்தார். ராஜாஜி பின்னர் ஆதீனங்களை கலந்தாலோசனை செய்து திருவாவடுதுறை ஆதீனத்தின் மூலமாக அது தரும தண்டம் எனப்படும் செங்கோல் என கூறப்பட்டது.

    அந்த செங்கோலை அன்றைக்கு உற்பத்தி செய்யவில்லை. தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தில் இருக்கக் கூடிய ஒரு விஷயத்தை அழகாக எடுத்து சொல்லி அதை இன்னும் நமது நல்ல காலமாக அதை தயார் செய்த உம்மிடி ஜூவல்லர்ஸ் பெரியவர்கள் இருவரும் இன்றும் இருக்கிறார்கள். அவர்களும் இந்த நிகழ்ச்சி பற்றி பேச தயாராக இருக்கிறார்கள்.

    புதிய கட்டிடத்தை நிர்மாணம் செய்த தொழிலாளர்களையும், செங்கோலை செய்து கொடுத்த உம்மிடி பெரியவர்களையும், பிரதமர் நரேந்திர மோடி 28-ந்தேதி பாராளுமன்றத்தில் கவுரவிப்பார்.

    புதிய பாராளுமன்ற மக்களவையில் சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது. ஒரு தலைபட்சமாக இல்லாமல் அனைவருக்குமான ஆட்சியாக நடத்த செங்கோல் உறுதுணையாக இருக்கும். பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க தருமபுரி, திருவாவடுதுறை உள்ளிட்ட 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதை செங்கோல் குறிக்கிறது.

    ஆட்சி பரிமாற்றத்தை குறிக்க செங்கோல் பரிமாற்றம் செய்யும் முறை இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது.

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படுவது தமிழ்நாட்டிற்கு பெருமை. செங்கோல் நிறுவப்படுவதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை. அடுத்த 100 வருடத்திற்கு நாட்டின் சின்னமாக செங்கோல் இருக்கப் போகிறது. மக்களுக்காகவாவது பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்.

    ஜனாதிபதி பதவியை மிகவும் உயர்வாக கருதுகிறோம். அது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல. ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்ற கட்டிடத்தை திறக்கும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும். பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் பாராளுமன்றத்துக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.

    செங்கோல் என்பது தமிழகத்துக்கு கவுரவமான, மிகப்பெரிய கவுரவம். புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது. முன்பு ஜனாதிபதியை விமர்சித்தவர்கள்தான் தற்போது அவரை கொண்டு விழாவை நடத்த வேண்டும் என்கின்றனர்.

    சைவ மதத்தை சார்ந்து செங்கோல் வைக்கப்படவில்லை. திருக்குறளில் செங்கோல் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது நிகழ்ந்த ஆட்சி பரிமாற்றத்தை மறு உருவாக்கம் செய்கிறோம்.

    எந்தவித மத அடையாளமும் இல்லாமல் மரபு ரீதியாக செங்கோல் வைக்கப்படுகிறது.

    நேரு பிரதமராக இருந்த போது அவரிடம் வழங்கப்பட்ட செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்படவில்லை. அது அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த செங்கோலுக்கு உள்ள பெருமையை உணர்த்தும் வகையில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் வைக்கிறார்.

    மதுரைக்கே அரசியாக விளங்கும் மீனாட்சி அம்மன் கையில் கூட செங்கோல்தான் உள்ளது. திருவிழா நேரங்களில் செங்கோலுடன் தான் மீனாட்சி அம்மன் காட்சி அளிப்பார். மதுரை எனது பிறந்த மண் என்பதால் இதை சொல்கிறேன்.

    புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதியை வைத்து திறக்கவில்லை என்று விவாதம் எழுகிறது. சமீபத்தில் சத்தீஷ்கரில் புதிய தலைமை செயலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். தெலுங்கானாவில் சட்டசபை கட்டிட திறப்பு விழாவுக்கு அம்மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. முதலமைச்சர் தான் திறந்தார். ஆனால் இப்போது மட்டும் விமர்சனம் செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெய் சுக்தேவ் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.
    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டின் ஜனாதிபதியால் திறந்து வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார். இந்த விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் இது தொடர்பாக பொது நல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டு உள்ளது. ஜெய் சுக்தேவ் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.

    அதில் அவர் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டின் ஜனாதிபதி திறந்து வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என கூறி உள்ளார்.

    • பாராளுமன்ற இரு அவைகளின் தலைவராக இருப்பவர் குடியரசு தலைவர்.
    • பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவும், முடிக்கவும் உரிமை படைத்தவர் குடியரசு தலைவர்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.

    இதன்மூலம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ரூ. 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அகில இந்திய அளவில் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி 2022-23ம் நிதியாண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அந்நிய முதலீடு 16.3 சதவீதம் குறைந்திருப்பதாக கூறுகிறது. இந்தியாவில் தொழில் துறை வளர்ச்சி பெறவும், வேலைவாய்ப்பு பெருகுவதற்கு மாறாக, பொருளாதார பேரழிவிற்கு வழிவகுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி அரசு எடுத்து வருகிறது. இதற்கு சமீபத்தைய காரணம் ரூ.2000 நோட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாகும்.

    இதனால் 6 கோடி சிறு, குறு தொழில்களும் 11 கோடி விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    உலகமே வியந்து போற்றுகிற அற்புதமான பாராளுமன்ற கட்டிடம் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வருகிற நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மிக அருகாமையிலேயே ரூ.850 கோடிக்கு மேலாக செலவிட்டு கட்டிடம் கட்டுவது துக்ளக் ஆட்சியை தான் நினைவுபடுத்துகிறது. துக்ளக் ஆட்சியில் தலைநகர் மாற்றப்பட்டது. ஆனால் நவீன துக்ளக் ஆக செயல்பட்டு வருகிற மோடி ஆட்சியில் தற்போது பாராளுமன்றம் மாற்றப்பட்டிருக்கிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான திறப்பு விழாவிற்கு பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்.

    ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு அன்றைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. நாட்டின் மிக உயர்ந்த பதவிகளுக்கு தலித், ஆதிவாசிகளை நியமித்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்ட பிரதமர் மோடி, அழைக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதன்மூலம் மோடியின் சுயரூபத்தை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

    பாராளுமன்ற இரு அவைகளின் தலைவராக இருப்பவர் குடியரசு தலைவர். பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவும், முடிக்கவும் உரிமை படைத்தவர் குடியரசு தலைவர். பாராளுமன்றத்தில் இயற்றப்படுகிற மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுத்தால் தான் அது சட்டமாக நிறைவேறும். குடியரசு தலைவருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளை உதாசீனம் செய்கிற வகையில் குடியரசு தலைவரை புறக்கணித்துவிட்டு பிரதமர் மோடியே புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பது அரசமைப்பு சட்டத்தையும் குடியரசு தலைவரையும் அவமதிக்கிற செயலாகும்.

    எனவே தான் 28-ந்தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து புறக்கணித்திருக்கின்றன. பிரதமர் மோடியின் ஜனநாயக விரோத பாசிச செயலுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திற்குக்கின்றன.

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கான தேதி மே 28. அந்த தேதியை தேர்வு செய்ததற்கான காரணம் அன்று தான் சாவர்க்கர் பிறந்தநாள். இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக எவ்வித செயலிலும் ஈடுபடமாட்டேன் என்று உறுதி கூறி, மன்னிப்பு கடிதம் எழுதி, சிறையில் இருந்து விடுதலை ஆனவர்.

    இதன்மூலம் இந்திய விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திய சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பதை விட இந்திய மக்களுக்கு செய்கிற துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இனிவரும் காலங்களில் நாடு முழுவதும் தொகுதிகள் மறுபங்கீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
    • முக்கோண வடிவிலான புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான வாயில்களுக்கு அறிவு, சக்தி, கர்மா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் அதி நவீன வசதிகளுடன் ரூ.1,200 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. தன்னம்பிக்கையின் அடையாளமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட உள்ளது.

    பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டிடக்கலை திறன் ஆகியவற்றால் கட்டப்பட்ட புதிய பாராளுமன்றம் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளால் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ளது.

    ஏற்கனவே உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு கடந்த 1921-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆங்கிலேயர்களின் கருத்துக்களுக்கும், காலத்தின் தேவைக்கும் ஏற்ப 6 ஆண்டுகளில் 1927-ல் கட்டி முடிக்கப்பட்டது.

    இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் இதில் கூடும், இது பிரிட்டிஷ் ஆட்சியின் போது கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்டது. 1956-ம் ஆண்டில், தற்போதைய கட்டிடத்தில் 2 மாடிகள் சேர்க்கப்பட்டன. காலப்போக்கில் தேவைகள் அதிகரித்துள்ளன. இடமும் குறுகலாகிவிட்டது.

    இரு அவைகளின் கூட்டு அமர்விற்கு, மைய மண்டபத்தில் 436 பேர் மட்டுமே அமர முடியும். கூட்டுக்கூட்டம் நடக்கும் போதெல்லாம் சுமார் 200 நாற்காலிகள் தற்காலிகமாக ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.

    இது தவிர, 100 ஆண்டுகளை நெருங்கும் இக்கட்டடத்தில், அவ்வப்போது புதிய மின் கேபிள்கள், சிசிடிவி, குளிரூட்டும் அமைப்புகள், ஆடியோ வீடியோ போன்ற வசதிகள் உள்ளன. தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் பலம் இழந்து காணப்படுகிறது.

    இனிவரும் காலங்களில் நாடு முழுவதும் தொகுதிகள் மறுபங்கீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. பின்னர் இருக்கைகள் அதிகரிக்கும். அதற்கு தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் போதாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது. பழைய பாராளுமன்ற கட்டிடம் 6 ஏக்கரில் சுமார் 24 ஆயிரத்து 821 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது.

    ஆனால் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 18 ஏக்கரில் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது. புதிய கட்டிடம் இரண்டு ஆண்டுகள் 5 மாதம் 18 நாட்களில் கட்டப்பட்டுள்ளது. பழைய கட்டிடத்தை போல், புதிய கட்டிடத்தில் மத்திய மண்டபம் எதுவும் கட்டப்படவில்லை. இரு அவைகளின் கூட்டுக் கூட்டங்களுக்கு மக்களவை பயன்படுத்தப்படுகிறது.

    888 இருக்கைகள் கொண்ட மக்களவை மண்டபத்தில் மொத்தம் 1272 இருக்கையில் பொருத்தப்பட்டு உள்ளன.

    உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக இருக்கைகளில் பயோமெட்ரிக்ஸ், டிஜிட்டல் மொழிபெயர்ப்பு சாதனங்கள், மாற்றக்கூடிய மைக்ரோ போன்கள் போன்றவை நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கையிலும் மல்டிமீடியா காட்சி வசதி உள்ளது. கேலரிகளில் எங்கு அமர்ந்தாலும் சாமானியர்கள் தெளிவாகத் தெரியும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு விசேஷ மற்றும் நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊடகங்களுக்கு மொத்தம் 530 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    முக்கோண வடிவிலான புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான வாயில்களுக்கு அறிவு, சக்தி, கர்மா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த 3 வாயில்களுக்கு அருகில் ஆயிரக்கணக்கான ஆண்டு இந்திய வரலாற்றை விளக்கும் வெண்கலப் படங்கள் நிறுவப்பட்டுள்ளன. அறிவு வாயில் அருகே நாளந்தாவின் உருவங்கள். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையின் காட்சிகள், கர்மா வாயிலின் ஒருபுறம் கோனார்க், சக்ரா மற்றும் மறுபுறம் சர்தார், வல்லபாய் படேல், பாபாசாஹேப் அம்பேத்கார் வெண்கல சிலைகள் உள்ளன.

    அனைத்து மாநிலங்களின் ஓவியங்களும் சிற்பங்களும் இதில் வைக்கப்பட்டுள்ளன. லோக்சபா பொதுச்செயலாளர் உத்சல் குமார் சிங், கட்டிட திறப்பு விழாவுக்காக, எம்.பி.,க்களுக்கு ஏற்கனவே அழைப்பு அனுப்பியுள்ளார். இந்தக் கட்டிடத்தை வரும் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு பிரதமர் திறந்து வைப்பார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்க உள்ளார். ஆனால், அழைப்புக் கடிதத்தில் ராஜ்யசபா தலைவரின் பெயர் இல்லை என்று காங்கிரஸ் எம்பி விவேக் தங்கா மறுத்துள்ளார். இந்த அட்டையில் துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவரான ஜக்தீப் தன் காட் பெயர் ஏன் இல்லை என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • புதிய பாராளுமன்ற கட்டிடம் உருவாக உழைத்த தொழிலாளர்களை பிரதமர் மோடி கவுரவிப்பார்.
    • பிரமாண்டமாக நடத்தப்பட உள்ள விழாவை 19 கட்சிகள் புறக்கணித்தாலும் அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகாலி தளம், த.மா.கா. உள்பட பல கட்சிகள் பங்கேற்க உள்ளன.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

    பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய பாராளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன.

    என்றாலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை திறப்பதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது விரிவான தகவல்களை வெளியிட்டார்.

    அமித்ஷா கூறுகையில், "1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த போது ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகார பரிமாற்றம் நடந்ததை குறிப்பிடும் வகையில் பிரதமர் நேருவிடம் தமிழக செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படும்" என்று தெரிவித்தார்.


    புதிய பாராளுமன்றத்தில் இந்தியாவின் விடுதலை சின்னமாக தமிழக செங்கோலை பிரதமர் மோடி நிறுவுவார். அந்த செங்கோல் பாராளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்படும் என்றும் அமித்ஷா விளக்கம் அளித்தார்.

    மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் தமிழக செங்கோல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த தமிழக செங்கோல் அலகாபாத் நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த செங்கோலை புதுப்பித்து டெல்லிக்கு கொண்டு வர உள்ளனர்.

    அந்த செங்கோலை பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் நிறுவும் வைபவம் மிகவும் கோலாகலமாக நடத்தப்பட உள்ளது. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரத்தின் அடையாளமாக நேருவிடம் அந்த செங்கோல் எத்தகைய நிகழ்ச்சிகளுடன் வழங்கப்பட்டதோ அதே போன்ற நிகழ்ச்சிகளுடன் வருகிற 28-ந்தேதியும் விழாவை நடத்த மத்திய அரசு அதிகாரிகள் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

    குறிப்பாக தமிழக செங்கோலை நிறுவும் நிகழ்ச்சியை முழுக்க முழுக்க தமிழக கலாசார பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் ஆட்சி அதிகாரம் மாற்றங்கள் செங்கோல் வழங்கப்படுவதன் மூலமே உறுதிப்படுத்தப்பட்டது. தமிழக மூதாதையர்களின் அந்த பாரம்பரிய சிறப்பை பாராளுமன்றத்தில் நவீன முறையில் பிரதமர் மோடி நிகழ்த்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

    28-ந்தேதி காலை பாராளுமன்றத்தில் தமிழக செங்கோல் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக அலகாபாத் மியூசியத்தில் இருந்து எடுத்து வரப்படும் அந்த செங்கோல் கங்கை நீரால் சுத்தப்படுத்தப்படும். பிறகு அதை ஆதீனங்கள் புடைசூழ பாராளுமன்ற சபாநாயகர் இருக்கை பகுதிக்கு எடுத்து செல்வார்கள்.

    அப்போது தமிழர்களின் கலாசார சிறப்பை கொண்ட மேளதாளங்கள் இசைக்கப்படும். அந்த மேளதாளங்கள் முழங்க பிரதமர் மோடியும் அழைத்துச் செல்லப்படுவார். நிகழ்ச்சி நடக்கும் இடம் அருகே வந்ததும் அந்த செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்படும்.

    இதையடுத்து கோளறு பதிகத்தில் இடம் பெற்றுள்ள "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே" என்ற பாடல் வரிகள் பாடப்படும். அந்த சமயத்தில் தமிழக செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி நிறுவுவார்.

    அப்போது ஓதுவார்கள் தொடர்ந்து கோளறு பதிகம் பாடிக்கொண்டே இருப்பார்கள். நாதசுவரமும் இசைக்கப்படும். இதன் மூலம் இந்திய ஜனநாயக வரலாற்றில் புதிய அத்தியாயத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக கருதப்படுகிறது.

    இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிடம் உருவாக உழைத்த தொழிலாளர்களை பிரதமர் மோடி கவுரவிப்பார். பிரமாண்டமாக நடத்தப்பட உள்ள இந்த விழாவை 19 கட்சிகள் புறக்கணித்தாலும் அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகாலி தளம், த.மா.கா. உள்பட பல கட்சிகள் பங்கேற்க உள்ளன.

    ×