search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய பாராளுமன்றத்தை திறப்பது இந்தியர்களுக்கு செய்யும் துரோகம்- கே.எஸ்.அழகிரி
    X

    சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய பாராளுமன்றத்தை திறப்பது இந்தியர்களுக்கு செய்யும் துரோகம்- கே.எஸ்.அழகிரி

    • பாராளுமன்ற இரு அவைகளின் தலைவராக இருப்பவர் குடியரசு தலைவர்.
    • பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவும், முடிக்கவும் உரிமை படைத்தவர் குடியரசு தலைவர்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.

    இதன்மூலம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ரூ. 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அகில இந்திய அளவில் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி 2022-23ம் நிதியாண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அந்நிய முதலீடு 16.3 சதவீதம் குறைந்திருப்பதாக கூறுகிறது. இந்தியாவில் தொழில் துறை வளர்ச்சி பெறவும், வேலைவாய்ப்பு பெருகுவதற்கு மாறாக, பொருளாதார பேரழிவிற்கு வழிவகுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி அரசு எடுத்து வருகிறது. இதற்கு சமீபத்தைய காரணம் ரூ.2000 நோட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாகும்.

    இதனால் 6 கோடி சிறு, குறு தொழில்களும் 11 கோடி விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    உலகமே வியந்து போற்றுகிற அற்புதமான பாராளுமன்ற கட்டிடம் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வருகிற நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மிக அருகாமையிலேயே ரூ.850 கோடிக்கு மேலாக செலவிட்டு கட்டிடம் கட்டுவது துக்ளக் ஆட்சியை தான் நினைவுபடுத்துகிறது. துக்ளக் ஆட்சியில் தலைநகர் மாற்றப்பட்டது. ஆனால் நவீன துக்ளக் ஆக செயல்பட்டு வருகிற மோடி ஆட்சியில் தற்போது பாராளுமன்றம் மாற்றப்பட்டிருக்கிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான திறப்பு விழாவிற்கு பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்.

    ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு அன்றைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. நாட்டின் மிக உயர்ந்த பதவிகளுக்கு தலித், ஆதிவாசிகளை நியமித்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்ட பிரதமர் மோடி, அழைக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதன்மூலம் மோடியின் சுயரூபத்தை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

    பாராளுமன்ற இரு அவைகளின் தலைவராக இருப்பவர் குடியரசு தலைவர். பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவும், முடிக்கவும் உரிமை படைத்தவர் குடியரசு தலைவர். பாராளுமன்றத்தில் இயற்றப்படுகிற மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுத்தால் தான் அது சட்டமாக நிறைவேறும். குடியரசு தலைவருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளை உதாசீனம் செய்கிற வகையில் குடியரசு தலைவரை புறக்கணித்துவிட்டு பிரதமர் மோடியே புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பது அரசமைப்பு சட்டத்தையும் குடியரசு தலைவரையும் அவமதிக்கிற செயலாகும்.

    எனவே தான் 28-ந்தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து புறக்கணித்திருக்கின்றன. பிரதமர் மோடியின் ஜனநாயக விரோத பாசிச செயலுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திற்குக்கின்றன.

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கான தேதி மே 28. அந்த தேதியை தேர்வு செய்ததற்கான காரணம் அன்று தான் சாவர்க்கர் பிறந்தநாள். இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக எவ்வித செயலிலும் ஈடுபடமாட்டேன் என்று உறுதி கூறி, மன்னிப்பு கடிதம் எழுதி, சிறையில் இருந்து விடுதலை ஆனவர்.

    இதன்மூலம் இந்திய விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திய சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பதை விட இந்திய மக்களுக்கு செய்கிற துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×