search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை விடுமுறை"

    • அனைத்து பள்ளிகளும் கோடை கால விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும்.
    • மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அழுத்தம் தரக்கூடாது.

    சென்னை:

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆண்டு இறுதித் தேர்வும் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. மற்ற மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுவிட்டது.

    இந்த நிலையில் கோடைகால விடுமுறை நாட்களில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கல்வித் துறைக்கு புகார்கள் வந்திருக்கின்றன.

    இந்த புகாரைத் தொடர்ந்து கல்வித்துறை, அனைத்து பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று சுற்றறிக்கையை அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும், அது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் பெறப்பட்டு இருக்கிறது.

    இந்த புகார் சார்பாக அனைத்து பள்ளிகளும் கோடை கால விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும். அந்த நாட்களில் மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அழுத்தம் தரக்கூடாது.

    இந்த உத்தரவை கண்டிப்பாக பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
    • கடைசி கட்டத்தில் விமானங்களில் போதிய இருக்கை இல்லாததால் டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்ந்து வருகிறது.

    ஆலந்தூர்:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    இதனால் சென்னையில் இருந்து மும்பை, அந்தமான், டெல்லி உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கு செல்லும் பயணிகள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது அதிகரித்து உள்ளது.

    இதன்காரணமாக சென்னையில் இருந்து கோவா, மும்பை, கொல்கத்தா, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானத்தின் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. விமானத்தில் சென்றால் பயண நேரம் குறைவு என்பதால் அதிகமானோர் விமான பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மே மாதத்திற்கான விமானடிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து உள்ள நிலையில் கடைசிகட்டத்தில் விமானங்களில் போதிய இருக்கை இல்லாததால் டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்ந்து வருகிறது.

    சென்னையில் இருந்து அந்தமானுக்கு ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.10ஆயிரத்து200, கோவா-ரூ.4500-ரூ.5200, மும்பை ரூ.4700-ரூ.7ஆயிரம் , ஜெய்ப்பூர்-ரூ.10ஆயிரத்து 200, ஸ்ரீநகர்-ரூ.12ஆயிரம் முதல் ரூ.17ஆயிரம், கொல்கத்தா-ரூ.6,700-ரூ.9ஆயிரம், கொச்சி-ரூ.3,200-ரூ.8ஆயிரம் வரை கட்டணமாக உள்ளது.இதேபோல் சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.5ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையும், தூத்துக்குடிக்கு ரூ.6200 முதல் ரூ.8 ஆயிரம் வரையும் கட்டணம் அதிகரித்து உள்ளது.

    • தென் மாவட்டங்களுக்கு எத்தனை ரெயில் விட்டாலும் கூட்டம் குறைந்தபாடில்லை.
    • இரவு நேர ரெயில்கள் மட்டுமின்றி பகல் நேர ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து வெளியூர் பயணம் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி செல்கின்ற நிலை உள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.

    வந்தே பாரத் உள்ளிட்ட எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. சென்னை-திருநெல்வேலி இடையே நாளை (11-ந்தேதி) முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து வருகிற 12, 19, 26 ஆகிய நாட்கள் மற்றும் மே 3, 10, 17, 24, 31 ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த ரெயில் வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வழியாக செல்கிறது.

    இதேபோல் நெல்லையில் இருந்து வருகிற 18, 25, மே 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் வியாழக்கிழமை தோறும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேருகிறது.

    இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிய உடனே டிக்கெட் விரைவாக புக்கிங் ஆனது. ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்தனர். இந்த மாதம் மட்டுமின்றி மே மாதத்திற்கும் இடங்கள் நிரம்பி விட்டன. இரண்டு வகுப்பு படுக்கை வசதி இடங்கள் 100 முதல் 200 வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளன.

    ஏ.சி. முதல் வகுப்பு, 2-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு படுக்கைகள் மட்டும் ஒரு சில நாட்களில் காலியாக உள்ளன.

    தென் மாவட்டங்களுக்கு எத்தனை ரெயில் விட்டாலும் கூட்டம் குறைந்தபாடில்லை. இரவு நேர ரெயில்கள் மட்டுமின்றி பகல் நேர ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. பஸ் பயணத்தை விட கட்டணம் குறைவாக இருப்பதோடு இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதால் ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் அலை அலையாக திரண்டு வருகிறார்கள்.

    சென்னை-நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலும் முழு அளவில் செல்கிறது. தற்போது கோடை வெயில் வறுத்தெடுப்பதால் குளு குளு ஏசி வசதியுடன் சொகுசாக பயணம் செய்வதை மக்கள் விரும்புகிறார்கள். இதனால் இந்த ரெயிலில் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது.

    • கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 11, 18, 25 மற்றும் மே 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் புறப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 11, 18, 25 மற்றும் மே 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் (வியாழக்கிழமை மட்டும்) புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06070) அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ஏப்ரல் 12,19,26, மே 3, 10, 17, 24, 31 (வெள்ளிக்கிழமை மட்டும்) ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06069) அடுத்தநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும்.
    • தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் விடுமுறையை ஒட்டி படை எடுப்பார்கள்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும்.

    இந்த காலகட்டங்களில் பள்ளி ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்து பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    குறிப்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவு மக்கள் விடுமுறையை ஒட்டி படை எடுப்பார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டும் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில்களை தென்னக ரெயில்வே அறிவித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் வாரம் தோறும் வியாழக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் வெள்ளிக் கிழமைகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு எழும்பூர் வந்தடையும். இந்த ரெயில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக் கோட்டை, விருதுநகர் வழியாக நெல்லை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
    • நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை முதல் திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. ஆந்திராவில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    கோடைகால விடுமுறையில் மேலும் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

    திருப்பதியில் நேற்று 75,414 பேர் தரிசனம் செய்தனர். 30,073 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • ஏப்ரல் 9-ந்தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படுகிறது.
    • கோடை விடுமுறை விடப்பட்ட போதிலும் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்ததை தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ந்தேதி (திங்கட்கிழமை)யுடன் தேர்வு நிறைவடைகிறது. இதையடுத்து சுமார் 24 லட்சம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப் பட்டுள்ளது.

    மேலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த 2-ந்தேதி ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ந்தேதியுடன் பெரும்பாலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்து விடுகிறது.

    அதனால் 9-ந்தேதி முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. 10 மற்றும் 12-ந் தேதிகளில் 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து தேர்வுகள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ரம்ஜான் பண்டிகை இடையில் வருவதால், தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. 10 மற்றும் 12-ந்தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் 22, 23 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    அடுத்த வாரத்தில் யுகாதி மற்றும் ரம்ஜான் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து பிற நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டியிருப்பதால் முன்கூட்டியே தேர்தலை நடத்தி முடிக்கின்றனர்.

    அதனால் பள்ளி மாணவர்களுக்கு 2 மாதம் கோடை விடுமுறை கிடைக்கிறது. ஏப்ரல் 9-ந்தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படுகிறது.

    தனியார் மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதனால் யுகாதி, ரம்ஜான் அரசு விடுமுறையுடன் சேர்த்து கோடை விடுமுறை விடப்படுகிறது. அரசு பள்ளிகளும் ஏப்ரல் 12-ந்தேதி வரை மட்டுமே செயல்படும். அதன் பின்னர் 2 நாட்கள் தேர்வுக்கு மட்டும் மாணவர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இந்த வருடம் பள்ளி மாணவர்களுக்கு 2 மாதம் கோடை விடுமுறை கிடைத்து இருப்பதால் உற்சாகமாக உள்ளனர். சொந்த ஊர்களுக்கும், உறவினர் இல்லத்திற்கும் செல்ல இப்போதே பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.

    ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் முடிந்தவுடன் கோடை ஸ்தலங்களுக்கும், மலை பிரதேசங்களுக்கும் மற்றும் கோவில்களுக்கும் பயணத்தை தொடங்குகின்றனர்.

    கோடை விடுமுறை விடப்பட்ட போதிலும் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கவில்லை. வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளி திறப்பது பின்னர் முடிவு செய்யப்படுகிறது.

    • 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.
    • இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரில் நடப்பு கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகிறது.

    கடந்த 23-ந் தேதியுடன் முழு ஆண்டு தேர்வு முடிந்து, சி.பி.எஸ்.இ. வழிகாட்டுதலின்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 2 வாரத்துக்கு முன்பே பாடபுத்தகம் வாங்கும் நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டது.

    இதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து என்.சி.ஆர்.டி. பாடபுத்தகம் வாங்கப்பட்டது. இந்த பாடபுத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் வாகனம் மூலம் தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று வருகின்றனர். மிக குறைவாகவும், ஒரு சில பாடங்களுக்கு பாடபுத்தகம் வராமலும் உள்ளது. 3,4,6-ம் வகுப்புகளுக்கு ஒரு பாடங்களுக்கு கூட புத்தகங்கள் வரவில்லை.

    இவற்றையும் உடனடியாக வாங்கி பள்ளி மாணவர்களுக்கு வழங்க கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. இன்று திறக்கப்படும் அரசு பள்ளிகள் வருகிற 30-ந் தேதி வரை இயங்கும். மே 1-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் 3-ந் தேதிமுதல் மீண்டும் பள்ளிகள் திறந்து செயல்படும்.

    • கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும்.
    • கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும்.

    கோவை:

    கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதி மக்கள் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் வழியாக சிறப்பு ரெயில் ஒன்றும், சென்னை வழியாக மற்றொரு சிறப்பு ரெயிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் எண் 06050 கோவை- சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் வருகிற 31-ந்தேதி அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

    அதேபோல் ரெயில் 06049 ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரெயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும். அந்தவகையில் கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும். சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    ரெயில் எண் 06043 தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து 31-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 1.57 மணிக்கு வந்து 2 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

    06044 கொச்சுவேலி- தாம்பரம் சிறப்பு ரெயில் கொச்சுவேலியில் இருந்து 1-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில் கோவை ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.40 மணிக்கு வந்து 12.45 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் ஆகிய இடங்களில் நிற்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுவாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • தமிழகம் முழுவதும் 364 ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பள்ளிகளுக்கு முன் கூட்டியே ஆண்டு இறுதி தேர்வு நடத்தி முடிக்கப்படுகிறது. ஏப்ரல் 12-ந்தேதியுடன் அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வு முடிவதால் 13-ந்தேதி முதல் கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் பஸ் பயணம் அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக பஸ்களை இயக்க தயாராகி வருகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினமும் 800 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் 1000 பஸ்கள் வீதம் இயக்கப்படுகிறது. பொதுவாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கோடை விடுமுறை வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து தொடங்கும். ஆனால் இந்த வருடம் பாராளுமன்ற தேர்தலால் முன் கூட்டியே விடுமுறை விடப்படுகிறது.

    இதன் காரணமாக வெளியூர் செல்லும்போது போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் ஏ.சி. பஸ் பயணம் அதிகரிக்கிறது. தமிழகம் முழுவதும் 364 ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற நாட்களில் அதில் பயணம் செய்வோர் எண்ணிக்கை உயரும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 67 ஸ்பேர் பஸ்கள் உள்ளன. அவற்றையும் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

    இந்தாண்டு கோடை விடுமுறை 45 நாட்களுக்கும் மேலாக மாணவர்களுக்கு கிடைக்கிறது. இதனால் சிறப்பு பஸ்களை இயக்குகிறோம். மேலும் அரசு விரைவு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி தற்போது உள்ளதால் முன்பதிவு அதிகரித்து வருகிறது.

    முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு மாநகர பஸ்சில் செல்வதற்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்வதற்கும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வீடுகளுக்கு செல்ல மாநகர பஸ் வசதியை பயன்படுத்தும் வகையில் ரூ.40 கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.
    • கோடை சீசன் முடிந்த பின்னரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை எழில்கள் நிறைந்தும், சுற்றுலா தலங்கள் நிறைந்தும் காணப்படும் பகுதியாகும்.

    இங்குள்ள சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.

    குறிப்பாக ஏப்ரல், மே உள்ளிட்ட கோடை மாதங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனையொட்டி ஆண்டுதோறும் கோடை விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோடைவிழா கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கி பழ கண்காட்சியுடன் முடிவடைந்து விட்டது.

    கோடைவிடுமுறை முடிந்த பின்னரும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று கூட விடுமுறையை கழிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வந்திருந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. அங்கு மலர் மாடத்தில் காட்சி வைக்கப்பட்டு இருந்த பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை பார்வையிட்டனர். அதன் பின்னணியில் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதுதவிர சுற்றுலா பயணிகள் பெரணி இல்லம் கண்ணாடி மாளிகைக்குள் சென்று பல்வேறு வகையான பெரணி செடிகளை அருகில் சென்று பார்த்து கண்டு ரசித்து செல்கின்றனர். இதே போன்று ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் தலையாகவே காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நேற்று ஊட்டி சாலை, குன்னூர் சாலை, கோத்தகிரி சாலை, தொட்டபெட்டா மலைசிகரம் செல்லும் சாலை, தாவரவியல் பூங்கா சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் மெல்ல மெல்லவே அடியெடுத்து வாகனத்தை ஓட்ட முடிந்தது.

    கோடை சீசன் முடிந்த பின்னரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    • வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • கோயம்பேடு பஸ் நிலைய அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கும், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    9, 10, 11 ஆகிய 3 நாட்களும் 1500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த 2 நாட்களும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

    நேற்று முன்தினம் (9-ந் தேதி) சென்னையில் இருந்து சுமார் 8500 பேரும், நேற்று 5 ஆயிரம் பேரும் அரசு பஸ்களில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

    இதேபோன்று மற்ற பகுதிகளில் இருந்து சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கும் ஏராளமானோர் புறப்பட்டு சென்று உள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் சிறப்பு பஸ்கள் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று மாலையில் சென்னை வருவதற்கு சுமார் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்று மாலைக்குள் மேலும் 4 ஆயிரம் கூடுதலாக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி இன்று மாலையில் மட்டும் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 26 ஆயிரம் பேர் பயணம் மேற் கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இவர்கள் நாளை காலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தை வந்தடைவார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பயணிகள் சிரமப்படக் கூடாது என் பதை கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ×