search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரே நாடு ஒரே தேர்தல்"

    • ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
    • குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.

    ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன்பின் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    * கனிமொழி தலைமையிலான குழு மாநிலம் முழுவதும் பல தரப்பினரை சந்தித்து அறிக்கை தயாரித்துள்ளனர்.

    * திமுக தேர்தல் அறிக்கை மட்டுமில்லை... தமிழக மக்களின் தேர்தலை அறிக்கை.

    * பத்து வருட பாஜக ஆட்சி இந்தியாவை பாழ்ப்படுத்தியுள்ளது.

    * கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

    * மத்தியில் அமைய போகும், ஆட்சி மாநிலங்களை அரவணைக்கும் ஆட்சியாக அமையவேண்டும் என்றார்.

    இதன்பின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

    * ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் 361 பிரிவு நீக்கப்படும்.

    * மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்.

    * நாடு முழுவதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்.

    * குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.

    * காலை உணவு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்

    * புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்.

    * திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

    * சிலிண்டர் விலை 500 ரூபாய், பெட்ரோல் விலை 75 ரூபாய், டீசல் விலை 65 ரூபாயா நிர்ணயிக்கப்படும்.

    * ரெயில்வே துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    * தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

    • இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது
    • உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்தியாவில் 7 கட்டமாக தேர்தல் நடைபெறுவதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் முன் 'ஒரே கட்டமாக தேர்தல்' நடத்தும் முறையை ஏன் அமல்படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு குழுவினரிடம் ஒருமித்த கருத்து நிலவியதாக தகவல்.
    • மக்களவை மற்றும் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்திய 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த பரிந்துரை.

    பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழுவை நியமித்தது.

    இந்தக் குழுவில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதி கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக உயர்மட்ட குழுவுக்கு பொதுமக்கள் இடம் இருந்து சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேறப்ட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டு இருந்தது. இது தொடர்பாக 191 நாட்களாக ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.

    இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கை 18,626 பக்கங்கள் கொண்டது என தகவல் வெளியானது.

    அந்த அறிக்கையில் ஒரே நேரத்தில் மக்களவை மற்றம் மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்த குழு ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியதாகவும், தேர்தல் நடத்தப்பட்ட 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே தேர்தல் தேர்தல் நடைமுறை மற்றும் நிர்வாகத்தை மாற்றும் எனவும் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேலாண்மை செய்வதற்குமான நீண்ட கால ஏற்பாடுகளாக ஒரு அறக்கட்டளை நிறுவுவதற்காக சட்டம் இயற்றப்பட்டது.
    • சட்டம் பேரவையின் இறுதி நாள் அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    2020-ம் ஆண்டு தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் காலாவதியாகி விட்டதால் இச்சட்டத்தை நீக்குவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

    செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இதனை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை போயஸ் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வசித்த இடமான வேதா நிலையத்தை ஒரு நினைவு இல்லமாக மாற்றி அமைக்கப்பதற்கும், பராமரிப்பதற்கும் அதனை மேலாண்மை செய்வதற்குமான நீண்ட கால ஏற்பாடுகளாக ஒரு அறக்கட்டளை நிறுவுவதற்காக சட்டம் இயற்றப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு 2021-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் இந்த நடவடிக்கைகளை ரத்து செய்து ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களுக்கு வேதா நிலையத்தின் சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டு இருந்தது. அதன்படி ஜெயலலிதா வீட்டின் சாவி வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த நிலையில் 2021-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் நோக்கம் தற்போது செயல்பாட்டில் இல்லாத நிலையில் அச்சட்டம் காலாவதியாகி விட்டதால் சட்டத்தை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த சட்டம் பேரவையின் இறுதி நாள் அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • 1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
    • கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 16 பேரை விடுவிக்க தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது.

    கோவை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய மந்திரி எல்.முருகன் மீண்டும் ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிடுகிறார் என பா.ஜ.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம், தமிழகம் என அவரது பணி சிறக்கட்டும். அவரது வேலை இன்னும் மக்களுக்கு சென்று சேரட்டும்.

    மத்திய மந்திரி எல்.முருகனிடம் நீலகிரியில் போட்டியிட நாங்கள் சொல்லவில்லை. நீலகிரி தொகுதியை தயார்படுத்தி தர அவரிடம் சொல்லி இருந்தோம். நீலகிரியில் போட்டியிட வேட்பாளர் தயாராக உள்ளார். தமிழகத்தில் எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.

    இன்று சட்டமன்றத்தில் 2 தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம்.

    பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பல முறை உயர்த்தப்பட்டது. 1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

    இதுவரை 91 முறை மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு உள்ளது. அதில் 50 முறை இந்திராகாந்தி, ஆட்சிகளை கலைத்ததால் தேர்தல் நடத்தும் காலம் மாறியது. ஒரே நாடு, ஒரே தேர்தலை கலைஞர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் வரவேற்று எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் புத்தகத்தை படிக்கவில்லையா?

    இப்போது இல்லையென்றாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்காலத்தில் வரும். 2024-ம் ஆண்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

    கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 16 பேரை விடுவிக்க தி.மு.க. கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது. அக்குற்றவாளிகளை எந்த காரணத்திற்காகவும் விடுவிக்க கூடாது. கோவை இன்னும் அபாயத்தில் இருந்து தப்பிக்கவில்லை.

    தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த பெரிய தலைவர்கள் இணைய தயாராக இருக்கிறார்கள். நாங்கள் யாரையும் போன் போட்டு கட்சிக்கு வர அழைப்பதில்லை. விருப்பம் உள்ளவர்கள் கட்சியில் இணைகிறார்கள். ஒரு கட்சியை உடைத்து கட்சியை வளர்க்கும் வேலையை பா.ஜ.க. செய்யாது.

    எங்கள் கட்சியில் இணைந்தவர்களை வயதானவர்கள் என எஸ்.பி. வேலுமணி பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமியின் வயது என்ன? வயதை பற்றி பேசி வேலுமணி அவரது கட்சி தலைவரை கேவலப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி என்ன இளைஞரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நான் கட்சி பணிகளை மட்டுமே செய்து வருகிறேன். கோவையில் நல்ல வேட்பாளர்களை போட்டியிட வைப்போம் என்றார்.

    • கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட உரிய நிலத்தை தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது.
    • சார் பதிவாளர் அலுவலகம் இப்போது இடம் மாற்றப்பட்டுள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று தியாகராயநகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி பேசுகையில், வடபழனி அழகிரிநகர் 5-வது தெருவில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டப்படுமா என்ற கேள்வி எழுப்பினார்.

    இதற்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிலளித்து கூறுகையில், "இந்த சார் பதிவாளர் அலுவலகம் 100 அடி சாலை தனியார் கட்டிடத்தில் தரை தளத்தில் இயங்கி வருகிறது.

    கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட உரிய நிலத்தை தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது. நிலம் தேர்வு செய்யப்பட்டதும் சொந்த கட்டிடம் கட்ட பரிசீலிக்கப்படும்" என்றார்.

    ஜெ.கருணாநிதி: சார் பதிவாளர் அலுவலகம் இப்போது இடம் மாற்றப்பட்டுள்ளது. மீண்டும் அதே இடத்தில் கட்டிடம் கட்ட அரசு அனுமதிக்குமா?

    அமைச்சர் மூர்த்தி: கோடம்பாக்கத்தில் 8440 சதுர அடி இடம் தேர்வு செய்து கொடுத்தால் உடனே புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜெ.கருணாநிதி : தியாகராயநகர் தொகுதிக்கு உட்பட்ட வடபழனி, மேற்கு மாம்பலம், அசோக்நகர் உள்ளடக்கிய சார் பதிவாளர் அலுவலகம் கே.கே.நகர் பகுதியில் இருந்து இப்போது அந்த பத்திரப்பதிவு அலுவலகம் முகப்பேருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தியாகராயநகர் தொகுதிக்கு உள்ளேயே சார் பதிவாளர் அலுவலகம் அமைத்து தர வேண்டும்.

    அமைச்சர் மூர்த்தி: இடம் இல்லாத பட்சத்தில் அங்கு இருக்கும் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு இடம் இருக்கும் பட்சத்தில் அதுபற்றி ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள்தொகை அடிப்படையில் தொகுதியை குறைத்துவிட்டால் உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைத்து விடுவார்கள்.
    • இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் இணைந்த மாபெரும் நாடு! பல்வேறு மாநிலங்கள் இணைந்த கூட்டாட்சி கூட்டரசு இது!

    சென்னை:

    சட்டசபையில் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ஒரே நாடு-ஒரே தேர்தல் தொடர்பாக கொண்டு வரப்பட்ட அரசினர் தனித் தீர்மானங்களை முன்மொழிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:-

    நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சத்திலும் பதற்றத்திலும் வைக்கும் இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியாக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

    * ஒன்று-'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்கிற மிக மோசமான எதேச்சதிகார எண்ணமாகும். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.

    * இரண்டு-'மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு' என்ற பெயரால் தமிழ்நாட் டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் சதி, இதனை முறியடித்தாக வேண்டும்.

    இவை இரண்டுமே மக்களாட்சியைக் குலைக்கும் செயல்கள் என்பதால் இவை இரண்டுக்கும் எதிராக நாம் அனைவரும் ஒருசேரக் குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    முதலில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது எத்தகைய ஆபத்தானது என்பதை விளக்க விரும்புகிறேன்.

    * ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது.

    அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள "சுதந்திரமான, நேர்மையான" தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது.

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும் அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும் இந்த நடைமுறையை நாம் எதிர்க்க வேண்டும்.

    அனைத்து மாநிலங்களி லும் ஆட்சி அமைந்து ஒன்றியத்தில் அமையும் ஆட்சி கவிழுமானால், அனைத்து மாநிலங்களையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்துவார்களா?

    சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து, தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால் ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தானாக முன்வந்து பதவி விலகுவார்களா?

    இதைவிட காமெடிக் கொள்கை இருக்க முடியுமா?

    பாராளுமன்ற, சட்டமன்றத்துக்கு மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா?

    பாராளுமன்றத் தேர்தலையே கூட, ஒரே நாளில் இந்தியா முழுக்க நடத்து வதற்கு தயாராக இல்லாத சூழல்தான் இப்போது இருக்கிறது?

    இந்த நிலையில், பாராளுமன்றத் தொகுதிகளுக்கும், 30 மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்துவது மாயா ஜாலமா?

    நகராட்சிகளும், பஞ்சாயத்துகளும் மாநில அரசின் நிர்வாக அமைப்புகள் என அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. ஆகவே இவற்றுக்கும் சட்டமன்றம், பாராமன்றத்துடன் தேர்தல் என்பது அரசியல் சட்ட விரோதமானது.

    உள்ளாட்சித் தேர்தல் முழுக்க முழுக்க மாநில அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகும். அதற்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்போவதாகச் சொல்வது மாநில உரிமைகளைப் பறிப்பதாகும்.

    மாநில உரிமைகள் கூட்டாட்சித் தத்துவம்-அனைவருக்கும் சம வாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் அர சியல் சட்டத்தைச் சிதைக்கவோ, உருமாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்படவுள்ள பாராளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் சுயநலத்திற்கு யாரும் பலியாகி விடக்கூடாது.

    எனவே பாராளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு "ஒரே நாடு-ஒரே தேர்தல்" என்ற நடைமுறையை மிக கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.

    இரண்டாவதாக தொகுதி மறுவரையறை குறித்த ஆபத்துகளை விளக்க விரும்புகிறேன்.

    தொகுதி மறுவரையறை என்ற திட்டத்தில் தென்னிந்திய மக்களை, குறிப்பாக, தமிழ்நாட்டு மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைக்க கூடிய ஆபத்து, சூழ்ச்சி இருக்கிறது. இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

    தமிழ்நாட்டின் மீது, தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறு வரையறை உள்ளது.

    அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

    இந்திய அரசமைப்பின் 82 மற்றும் 170-ம் பிரிவுகளின்படி, ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும், பாராளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்களில் புதிய இடங்கள் உருவாக்கப்படுகின்றன.

    ஏற்கனவே உள்ள தொகுதிகளின் எல்லைகள் மறு சீரமைக்கப்படுகின்றன. எல்லை நிர்ணய சட்டத்தின்படி இவை செய்யப்படுகிறது. இந்தச் சட்டத்தின்படி எல்லை நிர்ணய ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்து வருகிறது.

    இதுவரை 1952, 1962, 1972 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் எல்லை நிர்ணய ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் 1976-ம் ஆண்டு வரை ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவை இடங்கள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு வந்தன.

    இவ்வாறு மறுநிர்ணயம் செய்யும்போது, மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளின் இடங்கள் குறைக்கப்படுகின்றன. அதாவது 'மக்கள்தொகைக் கட்டுப்பாடு' எனும் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி, மக்கள்தொகையை குறைத்துக் கொள்ளும் மாநிலங்களுக்குத் தரப்படும் தண்டனையாக இது அமைந்துள்ளது.

    இதனால் மக்கள்தொகை குறையும். மாநிலங்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் ஆர்வம் செலுத்தாத மாநிலங்கள் கூடுதல் பரிசைப் பெறும்; அவற்றுக்கான பிரதிநிதித்துவம் அதிகமாகும்.

    இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை நாம் எதிர்த்தாக வேண்டும்.

    மக்கள்தொகை குறைவதால் ஜனநாயக உரிமைகள் மாநிலங்களுக்குக் குறையக் கூடாது என்பதால்தான் அரசியலமைப்பில் 42-வது சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

    2001-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை, தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்வதை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருந்தது. அது போலவே, அரசியலமைப்புச் சட்டத்தின் 84-வது திருத்தமும் செய்யப்பட்டது.

    தொகுதிகளின் எண்ணிக்கையில் 2026-ம் ஆண்டு வரை மாற்றம் செய்யப்பட மாட்டாது என்றும், 2026-ம் ஆண்டிற்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும் என்றும் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

    மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்தால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பின்னடைவைச் சந்திக்கும்.

    1971-ம் ஆண்டு தமிழ்நாடும் பீகாரும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான மக்கள்தொகையைக் கொண்டிருந்ததால் மக்களவையில் கிட்டத்தட்ட ஒரே அளவிலான தொகுதிகளைக் கொண்டிருந்தன.

    இன்று தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் பீகாரின் மக்கள்தொகை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், ஒன்றிய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டில் தற்போதுள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவை இடங்களின் எண்ணிக்கை பல வடமாநிலங்களின் எண்ணிக்கையை விட விகிதாசாரத்தில் குறைந்து விடும்.

    இதனை நினைத்துப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் உரிமைக்காக இவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

    மக்கள்தொகை அடிப்படையில் தொகுதியை குறைத்துவிட்டால் உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைத்து விடுவார்கள்.

    39 எம்.பி.கள் இருக்கும் போதே ஒன்றிய அரசிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறோம். இதிலும் குறைந்தால் என்ன ஆகும்?

    தமிழ்நாடு, கோரிக்கை வைக்கும் பலத்தை இழக்கும். அதன் சக்தியை இழக்கும். அதனால் அதன் உரிமைகளை இழக்கும். இதனால் தமிழ்நாடு பின்தங்கி விடும்.

    எனவேதான் தொகுதி வரையறை-மறுசீரமைப்பு என்ற பெயரால் தொகுதிகளின் எண்ணிக்கையை எந்தச் சூழலிலும் குறைக்கக் கூடாது என்கிறோம்.

    மக்கள் தொகைக் குறைந்து விட்டதைக் காரணம் காட்டி, தென் மாநிலங்களுக்குத் தொகுதிகளைக் குறைப்பது தமிழ் நாடு உள்ளிட்ட மாநிலங்களை பலவீனம் அடையச் செய்யும். எனவே, அனைத்து மாநிலங்களிலும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளும் வரை, தொகுதிகளின் எண்ணிக்கையை இப்படியே தொடரச் செய்வதே சரியாகும்.

    இதேபோன்ற பாரபட்சம்தான் நிதி ஒதுக்கீட்டிலும், நிதி பகிர்விலும் காட்டப்படுகிறது. மக்கள்தொகையைக் காரணமாகக் காட்டி தென் இந்திய மாநிலங்களுக்கு வரி வருவாயில் பங்கு குறைந்து விட்டது.

    இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் இணைந்த மாபெரும் நாடு! பல்வேறு மாநிலங்கள் இணைந்த கூட்டாட்சி கூட்டரசு இது! இங்கு எந்த மாநிலமும் பிற மாநிலத்தைவிட உயர்ந்ததோ, முக்கியமானதோ அல்ல, அனைத்தையும் சமமாக நடத்த வேண்டும்.

    மக்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பிரதிநிதித்துவம் என்று கணக்கிடப்பட்டு, மாநிலங்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டால், புவியியல், மொழி, பொருளாதார, அரசியல் பின்னணிகளைப் புறந்தள்ளும் செயலாகிவிடும். மக்களாட்சியின் ஆதாரப் பண்பையே அது நாசமாக்கி விடும். இதனால் ஏற்கனவே கனல் வீசிக்கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வுகளை மேலும் வளர்ப்பது போலாகிவிடும்.

    இந்தியாவின் ஒற்றுமையை இதுநாள் வரை கட்டிக்காத்து வரும் கூட்டாட்சித் தத்துவத்தை மீறும் செயல் எதையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளக் கூடாது.

    அதிக தொகுதிகள் மூலம் ஆதிக்கம் செலுத்துவது கூட்டரசின் தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகிவிடும்.

    2026-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட விருக்கும் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும்.

    தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தச் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு முக்கிய தீர்மானங்களையும் நிறைவேற்றித் தருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் பின்வரும் தீர்மானங்களை முன்மொழிகிறேன்.

    "2026-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட விருக்கும் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும் தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள் தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

    மக்கள் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்றும் இந்தப் பேரவை வலியுறுத்து கிறது என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

    "'ஒரு நாடு ஒரு தேர்தல்' என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும்; நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும்; அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதாலும்; இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும்; அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதாலும் 'ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்தினை நடை முறைப்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது." என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

    மேற்காணும் இரண்டு தீர்மானங்களையும் உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினார்கள். காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள்.

    தொகுதிகள் எண்ணிக்கைகள் குறைக்கப்பட கூடாது என்று அ.தி.மு.க. சார்பில் தளவாய் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். இதுதொடர்பாக அ.தி.மு.க. சார்பில் 10 கோரிக்கைகள் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசுகையில், "மத்திய அரசின் நடவடிக்கையை முக்கிய சீர்திருத்தமாக பார்க்க வேண்டும். எனவே இந்த தீர்மானங்கள் தேவையற்றது" என்று கூறினார்.

    அதன் பிறகு அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் தீர்மானங்கள் ஏன் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று விளக்கம் அளித்து பேசினார்.

    இதையடுத்து தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    • ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவிடம் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம்.
    • தேவையற்ற பயத்தால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தின் மீது சட்டசபையில் விவாதம் நடைபெற்று வருகிறது.

    அப்போது கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் கூறியதாவது:

    * ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நிறைய கேள்விகள் எழத்தான் செய்யும்.

    * ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவிடம் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம். 

    * ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த தேர்தலிலேயே நிறைவேற்றப்போவதில்லை.

    * சில உறுப்பினர்கள் தாங்களாகவே, தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.

    * தேவையற்ற பயத்தால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    * நெஞ்சுக்கு நீதியில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரே நாடு, ஒரே தேர்தலை வலியுறுத்தி உள்ளார் என்று அவர் கூறினார்.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப்பேரவை வலியுறுத்துகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் பல ஆண்டுகால இடைவெளிகளில் இப்போது தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் செலவு அதிகமாவதுடன், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும்போது வளர்ச்சித் திட்டங்களும் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு கருதுகிறது.

    இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வந்தார்.

    இந்த முடிவுக்கு பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும், கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிலர் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம் ஒரு வரைவு அறிக்கையையும் தாக்கல் செய்தது. அதில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்தலாம் என பரிந்துரை செய்திருந்தது.

    இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த 2-ந் தேதி சிறப்புக் குழுவையும் மத்திய அரசு அமைத்தது.

    இந்த குழுவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால், கா்ஙகிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம் பெற்று உள்ளனர்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்றும் தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இந்த இரு தீர்மானங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அந்த தீர்மானங்கள் வருமாறு:-

    2026-ம் ஆண்டுக்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும் தவிர்க்க இயலாத காரணங்களால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகள் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

    மக்கள் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும் இந்தப் பேரவை வலியுறுத்துகிறது.

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும், நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும், அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதாலும் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும், அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப்பேரவை வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார்.

    தற்போது இந்த தீர்மானங்களின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளன.

    • தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து நாளை தனித்தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. சட்டசபைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.

    கவர்னரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழக சட்டசபையில் நாளை ஒரே நாடு ஒரு தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.

    இந்தத் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நாளை முன்மொழிகிறார்.

    • கடிதத்தை திமுக எம்பி வில்சன் உயர்மட்ட குழுவிடம் நேரில் சென்று அளித்தார்.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த சில நாட்களாக முன்னாள் தேர்தல் ஆணையர்கள், இந்நாள் தேர்தல் ஆணையர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோரிடம் தொடர்ச்சியாக கருத்துக்களை கேட்டு வருகின்றது. இந்த திட்டத்திற்கு ஏற்கனவே தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் ஒன்று எழுதப்பட்டது. கடந்த மாதம் 17ம் தேதி இந்த கடிதம் எழுதப்பட்டது.

    இந்நிலையில் இந்த கடிதத்தை திமுக எம்.பி. வில்சன் அவர்கள் உயர்மட்ட குழுவிடம் நேரில் சென்று அளித்தார். இந்த திட்டத்தை தி.மு.க. நிராகரிப்பதாகவும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும், இது குடியரசு தலைவர் முறையிலான ஆட்சியை நோக்கி செல்வதற்கு சமம் என்றும் திமுகவினரால் இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. இந்த திட்டதை கைவிட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்மட்ட குழு பல்வேறு கட்சிகளிடம் கருத்து கேட்டு வரும் நிலையில் தி.மு.க. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது
    • தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டது போல நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த திட்டமிடப்படுகிறது. தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி தேர்வுகள், பண்டிகைகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் எப்போது வருகின்றன என்பது பற்றி தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த அட்டவணை அடுத்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. தேர்தல் அட்டவணை வெளியானதும் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த தேதிகளில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்பது தெரிய வரும்.

    மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருக்கும் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதுபோல பெரிய மாநிலங்களிலும் பல கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் சுமூகமான சூழ்நிலை எப்போதும் காணப்படும்.

    இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் எப்போதும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்துவது வழக்கில் உள்ளது. எனவே இந்த தடவையும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.

    இதற்கிடையே தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. துணை நிலை ராணுவத்தினர் எத்தனை கம்பெனி தேவைப்படுவார்கள் என்பது பற்றியும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    மேலும் தேசிய தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இப்போதே திட்டமிடப்பட்டு வருகிறது. அதுபோல மின்னணு எந்திரங்கள் அனைத்தும் தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டிய அதிகாரிகளின் பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றியும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தேர்தல் பணியில் தொடர்புடைய அலுவலர்கள், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தால் அவர்களை வருகிற 31-ந் தேதிக்குள் இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுறுத்தி உள்ளார்.

    இது குறித்து அரசு துறை செயலாளர்களுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் பணியில் நேரடியாக தொடர்புடைய அலுவலர்கள், சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

    ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி 3 ஆண்டுகள் நிறைவடைவதாக இருந்தாலும், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

    பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினாலும் இடமாற்றம் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் பெற்ற பின் அப்பணியில் தொடர அனுமதிக்கலாம். வேறு ஏதேனும் காரணத்துக்காக ஒருவர் அப்பணியில் தொடர வேண்டுமானால் தேர்தல் கமிஷன் ஒப்புதல் அவசியம்.

    ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர் 6 மாதங்களில் ஓய்வு பெறுவதாக இருந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கலாம். ஆனால் அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் போன்றோர், அதே மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்படலாம். ஆனால் அவர்கள் வீடு உள்ள சட்டசபை தொகுதியில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் இருப்போரை வருகிற 31-ந்தேதிக்குள் இட மாற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

    ×