search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் மோசடி"

    • லிங்க் திறப்பதன் மூலம் உங்கள் மொபைல் போன் ஹேக் செய்யப்படலாம்.
    • மூத்த குடிமக்கள் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    திருப்பதி:

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக, 'அயோத்தியின் நேரடி புகைப்படங்கள்' வீடியோ இருப்பதாகக் கூறி, ஆன்லைனில் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது.

    இது ஐதராபாத் குறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதில் "ஜனவரி 22-ந் தேதி 'அயோத்தியின் நேரடிப் புகைப்படங்கள்' அல்லது அது போன்ற உள்ளடக்கம் கொண்ட பல லிங்க் மொபைல் சாதனங்களில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.


    இதுபோன்ற இணைப்புகளை நீங்கள் திறக்காமல் இருப்பது மிகவும் அவசியம்.

    லிங்க் திறப்பதன் மூலம் உங்கள் மொபைல் போன் ஹேக் செய்யப்படலாம் மற்றும் உங்கள் வங்கிக் கணக்குகள் கொள்ளையடிக்கப்படலாம்.

    மூத்த குடிமக்கள் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • குயவர்பாளையம் பெண் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி ரூ.88 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.
    • கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 40 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்து போனார்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.

    இதில் புதுச்சேரியில் என்ஜினீயர், டாக்டர் என நன்கு படித்தவர்கள் தான் அதிகம் ஏமாந்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் புதுச்சேரியில் 10 பேர் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் ரூ.8.25 லட்சத்தை இழந்துள்ளனர். வில்லியனுார் பெண் ஒருவர், குறைந்த விலையில் துணிகள் கிடைக்கும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை நம்பி மர்மநபர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 6 ஆயிரத்தை செலுத்தி ஏமாந்துள்ளார்.

    இன்ஸ்டாகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி அரியாங்குப்பம் பெண் ரூ. 90 ஆயிரத்தையும், முதலியார்பேட்டை பெண் ரூ.21 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

    வேலை தேடி ஆன்லைனில் பதிவு செய்திருந்த சின்ன காலாப்பட்டு வாலிபரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஸ்பைஸ் ஜெட் மனிதவள மேம்பாட்டு அதிகாரி பேசுவதாக கூறி வேலை உறுதியாகி விட்டது. சில கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளார்.

    குயவர்பாளையம் பெண் டெலிகிராம் மூலம் பகுதி நேர வேலை என கூறியதை நம்பி ரூ.88 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.

    சாரத்தை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்மநபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும், கே.ஓய்.சி.யை அப்டேட் செய்வதாக கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.7,500 அபேஸ் செய்து உள்ளார்.

    லாஸ்பேட்டை வாலிபருக்கு, கிரெடிட் கார்டு வந்துள்ளதாக வந்த லிங்க்கை ஓபன் செய்து வங்கி தகவலை பதிவிட்ட அடுத்த நொடியே அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 24 ஆயிரம் அபேஸ் ஆனது. காமராஜர் சாலையைச் சேர்ந்த பெண்ணிடம், மர்மநபர் கூரியர் கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், டெலிவரி ஆகாத பொருள் குறித்து அறிய அவர் அனுப்பிய மொபைல் அப்ளிக்கேஷன் இன்ஸ்டால் செய்து, தகவல் பதிவிட்டதும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.19 ஆயிரம் திருடப்பட்டது.

    வி.மணவெளியை சேர்ந்தவர் வாட்ஸ்அப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து, தாய்லாந்து சுற்றுலா செல்ல தொடர்பு கொண்டுள்ளார். விமான டிக்கெட், ரூம் புக்கிங் செய்ய ரூ. 3 லட்சம் வங்கி கணக்கில் செலுத்திய பின்பு மர்மநபர் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

    இதேபோன்று, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 40 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்து போனார்.

    இதுதொடர்பான புகார்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்த 29 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நீங்கள் மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.

    அதற்கு அவர் நான் எந்த பார்சலும் அனுப்பவில்லை என தெரிவித்தார். மறுமுனையில் பேசியவர் நாங்கள் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி, உங்கள் பெயரில் தான் பார்சல் சென்றுள்ளது. அதனால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.27 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டினார்.

    இதனால் பயந்து போன சாப்ட்வேர் என்ஜினீயர் 3 தவணைகளாக ரூ.8 லட்சத்து 29 ஆயிரத்து 348-ஐ அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ஆன்லைனில் அனுப்பினார். தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியது.

    இதனால் சந்தேகம் அடைந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது உத்தரபிரதேசத்தை சேர்ந்த மோசடி கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமண வரன் பார்த்து தருவதாகவும் அதிகளவில் மோசடி நடந்து வருகிறது.
    • தீபாவளியை முன்னிட்டு குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாகவும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் மோசடி அதிகளவில் நடந்து வருகிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் ஆன்லைன் மூலம் ரூ.2 கோடியே 86 லட்சத்து 23 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.

    பணத்தை இழந்தவர்களில் பெரும்பாலானோ ர் டாக்டர்கள், என்ஜினீயர்கள் தான். மோசடிக்காரர்கள் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும், ஆன்லைனில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகவும், மற்றும் ஆண்களை மயக்கும் வசீகர குரலில் பெண்கள் நூதனமாக பேசியும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். திருமண வரன் பார்த்து தருவதாகவும் அதிகளவில் மோசடி நடந்து வருகிறது.

    தற்போது புதிய வகையாக தீபாவளியை முன்னிட்டு குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாகவும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    ஆன்லைன் மோசடியை தடுக்க போலீசார் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனை தடுக்க முடியவில்லை. பேராசை மற்றும் சபலத்தால் மோசடி அதிகரித்துதான் வருகிறது. சொகுசு கார் பரிசு விழுந்ததாக விவசாயி ஒருவரிடம் ரூ.17 லட்சம் பறித்துள்ளனர்.

    ஆன்லைன் மோசடியை தடுப்பது குறித்து புதுவை டி.ஐ.ஜி. பிரிஜேந்திர குமார் யாதவ் கூறியிருப்பதாவது:-

    இணையதள மோசடியில் பணத்தை இழந்தால் உடனே புகார் செய்தால் மட்டுமே பணத்தை மீட்க முடியும். காலதாமதம் ஏற்பட்டால் மோசடிக்காரர்கள் அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மற்ற கணக்கிற்கு மாற்றி விடுவார்கள்.

    அவ்வாறு செய்து விட்டால் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்வது மிகவும் கடினம். நாம் நடவடிக்கை எடுக்கும் போது அவர்களது வங்கி கணக்கை முடக்குவதன் மூலம் பணத்தை மீட்க முடியும்.

    சைபர் கிரைம் செல் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த பொதுமக்கள் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும் என்று இல்லை. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சைபர் கிரைம் செல் உள்ளது.

    எனவே அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கூட புகார் செய்யலாம். பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
    • விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.

    சென்னை:

    தீபாவளி பட்டாசை ஆன்லைனில் விற்பனை செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்களை உருவாக்கி நம்ப முடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாக உறுதியளித்து மோசடி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் இந்த மோசடி பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதும், இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதும் அவசியமாகும்.

    பொதுமக்கள் https://luckycrackers.com/ என்ற இணைய தளத்திற்குச் சென்று ஆர்டரைச் செய்தபின் பின்னர் வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு ஆர்டரின் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்புகிறார்கள். விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.

    ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதனால் சம்பாதித்த பணத்தையும் இழந்து மிகவும் ஏமாற்றம் அடைகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 25 வழக்குகள் பதிவாகி உள்ளன. நீங்கள் பட்டாசு வாங்கும் இணைய தளத்தின் சட்டபூர்வமான தன்மையை எப்போதும் சரி பார்க்கவும், வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்க்கவும், அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்ணுக்கான லேண்ட்லைன் எண் இணைய தளத்தில் உள்ளதா? எனச் சரி பார்த்து, பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.

    நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகி இருந்தால், உடனடியாக சைபர்கிரைம் கட்டணமில்லா உதவி எண். 1930-ஐ டயல் செய்து புகார் அளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டாக்டர் ஆன்லைன் செயலி மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதியில் இருந்து அக்டோபர் 4-ந்தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.90 லட்சத்தை முதலீடு செய்தார்.
    • பெங்களூரு நகரில் நடந்து வரும் தொடர் சைபர் குற்றங்களால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு கன்னிங்காம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் செயலி மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அந்த டாக்டர் ஆன்லைன் செயலி மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதியில் இருந்து அக்டோபர் 4-ந்தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.90 லட்சத்தை முதலீடு செய்தார்.

    இதையடுத்து சம்மந்தப்பட்ட செயலியை தொடர்பு கொண்டு கேட்டபோது டாக்டர் செய்த முதலீட்டில் ரூ.40 லட்சம் லாபம் ஈட்டியதாக சொன்னார்கள். இதையடுத்து லாபத்தொகையை டாக்டர் திருப்பி கேட்டார். அப்போது அவர்கள் லாபத்தொகையை கொடுக்க ரூ.8 லட்சம் வழிகாட்டுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினர்.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த டாக்டர் பெங்களூரு ஐகிரவுண்ட்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு நகரில் நடந்து வரும் தொடர் சைபர் குற்றங்களால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    • குறைந்த அளவு முன்தொகை செலுத்தினால், மாதந்தோறும் ஊதியம் போல் பணம் வந்து கொண்டிருக்கும் என்று கூறி மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது.
    • தொடக்கத்தில் குறைந்த அளவு லாபத்தை கொடுக்கும் கும்பல், நாளடைவில் அதிக அளவு பணத்தை பறித்து கொண்டு ஏமாற்றி விடுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள சங்கர்நகர் பாலாஜி நகரை சேர்ந்தவர் இமானுவேல். இவரது மகன் சார்லஸ் (வயது 31). இவர் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது செல்போன் வாட்ஸ்அப்பில் கடந்த செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் குறுந்தகவல் மற்றும் லிங்க் வந்துள்ளது.

    தொடர்ந்து அவரது செல்போனுக்கு வந்த அழைப்பில் எதிர்புறம் பேசிய நபர், வாட்ஸ்அப்பில் அனுப்பிய அந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் அதிக அளவு பொருட்கள் ஆர்டர் செய்யுங்கள். விளம்பரங்களை பாருங்கள். அப்போது உங்களுக்கு ரேட்டிங் அதிகரித்து லாபமாக பணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

    இதனை உண்மை என்று நம்பிய சார்லஸ், அதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பேசிய அந்த நபர், வாட்ஸ்அப்பில் 2 வங்கி கணக்குகளை அனுப்பி விடுவதாகவும், அதில் பணம் செலுத்துமாறும் கூறியுள்ளார். அவ்வாறு அனுப்பும் பணத்திற்கு வட்டியுடன் கூடுதல் லாபம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய சார்லஸ் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக 2 வங்கி கணக்குகளுக்கும் பணம் செலுத்தி வந்துள்ளார். இவ்வாறாக அவர் நேற்று முன்தினம் வரை ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 803 செலுத்திய நிலையில் அவருக்கு எந்த லாபமும் வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த சார்லஸ் நேற்று நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரமா வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்மநபர் குறித்து விசாரித்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் இதுபோன்ற மோசடிகள் அதிக அளவில் நடக்கிறது. குறிப்பாக யூ-டியூப்பில் விளம்பரங்களை பார்த்து அதற்கு ரேட்டிங்கை அதிகரிக்க செய்ய வேண்டும். இதற்கு குறைந்த அளவு முன்தொகை செலுத்தினால், மாதந்தோறும் ஊதியம் போல் பணம் வந்து கொண்டிருக்கும் என்று கூறி மோசடி செய்யும் கும்பல் அதிகரித்துள்ளது.

    தொடக்கத்தில் குறைந்த அளவு லாபத்தை கொடுக்கும் அந்த கும்பல், நாளடைவில் அதிக அளவு பணத்தை பறித்து கொண்டு ஏமாற்றி விடுகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் அதிக அளவில் இதுபோன்ற மோசடியில் சிக்கும் நிலையும் இருந்து வருகிறது. மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் ஒவ்வொரு கிராமம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் எவ்வளவோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இனியும் இதுபோன்ற மோசடிகளில் யாரும் சிக்கிவிட வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த 2 பேருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
    • பெண் குழந்தைகளுக்கு எதிரான 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மோசடி மற்றும் செல்போன் திருட்டு தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்தன.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அந்த செல்போன்களை யார் பயன்படுத்தி வருகிறார்கள்? என கண்டுபிடித்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அதன்படி புதுவையை சேர்ந்த 70 பேரின் செல்போன்களை போலீசார் மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.

    இந்த செல்போன்களை காவல்துறை தலைமையகத்தில் அதன் உரிமையாளர்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி.பிரிஜேந்திரகுமார் யாதவ் வழங்கினார்.

    மேலும் ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த 2 பேருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து போலீஸ் டி.ஐ.ஜி. பிரிஜேந்திர குமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடப்பாண்டில் மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆன்லைன் மோசடியில் பணம் இழந்தது தொடர்பாக 24 வழக்குகளில் 13 வழக்கில் ரூ.94 லட்சம் மீட்கப்பட்டது.

    பெண்களுக்கு எதிரான 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைதாகி உள்ளனர்.

    பெண் குழந்தைகளுக்கு எதிரான 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    • தனது காதலனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த இளம்பெண் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்ணிடம் மோசடி செய்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வடமாநிலத்தை சேர்ந்த லாவண்யா (வயது 26) என்ற பெண், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். காதலர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு சில மாதங்களாக பேசாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் லாவண்யாவின் இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? காதல் பிரச்சனையா? தொழிலில் பிரச்சனையா? எதுவாக இருந்தாலும் நாங்கள் மாந்திரீக முறையில் தீர்த்து வைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது அவர் தனது காதலுடன் பிரச்சனை இருப்பதாக கூறினார்.

    எதிர்முனையில் பேசியவர், நான் சொல்கிற சில விஷயங்களை செய்து, மாந்திரீக பூஜைக்கும் ஒத்துழைப்பு கொடுத்தால் உங்கள் காதலரை சேர்த்து வைக்கிறோம் என்று கூறினார். பின்னர் அந்த பெண்ணிடம் அவர் மாந்திரீக பொருட்கள் வாங்க வேண்டும், பல பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய லாவண்யா பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 84 ஆயிரத்து 340 அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

    இருப்பினும் தனது காதலனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து லாவண்யாவிடம் மோசடி செய்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி நூதனம்
    • வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர், தொரப்பாடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆகிய இருவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த தகவலில் `ஆன்லைனில்' பகுதி நேர வேலையில் பங்கேற்று அதிகம் சம்பாதிக்க முடியும் என கூறியுள்ளனர்.

    ஆர்வம் உள்ளவர்கள் அவர்கள் அனுப்பிய இணைப்பில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி இருந்தனர்.

    அதனை உண்மை என நம்பிய 2 பேரும் தங்களது முழு விவரத்தையும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

    மேலும் அவர்களுக்காக தனி கணக்கு தொடங்கி அதில் முதலீடு செய்து அவர்கள் அளித்த வேலையை செய்து முடித்துள்ளனர்.

    அவர்கள் கொடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்ததால் அவர்கள் முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகையும் சேர்ந்துள்ளது.

    அதன்படி சேவூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழிய தனது வங்கி கணக்கிலிருந்து கடந்த மாதம் மொத்தம் ரூ.13.64 லட்சமும், தனியார் பள்ளி ஆசிரியரும் தனது வங்கி கணக்கில் இருந்து கடந்த 30, 31- ந் தேதிகளில் ரூ.6.15 லட்சமும் அனுப்பியுள்ளனர்.

    அவர்கள் கூறியபடி முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகை கிடைத்ததும் அதை தங்களது வங்கி கணக்கு இருவரும் மாற்ற முயன்றனர்.

    ஆனால் அந்தப் பணத்தை மாற்ற முடியாததால் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் இருவரும் வேலூர் மாவட்ட சைர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • எத்தனை விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் ஆன்லைன் மோசடி கும்பலின் வலையில் சிக்குபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
    • பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளித்தால் வங்கிக்கணக்கை முடக்கி பணத்தை கைப்பற்றலாம்.

    திருச்சி:

    ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை முதலில் தூண்ட வேண்டும்...

    இங்கு சிலர் கனகச்சிதமாக அந்த வேலையை செய்து முடிக்கிறார்கள்.

    வங்கிகள், பொது காப்பீ ட்டு நிறுவனங்கள், அஞ்சலகங்களில் முதலீடு செய்யும் தொகைக்கு குறைவான வட்டி கிடைப்பதால் மக்களின் நாடி துடிப்பை அறிந்து கொண்டு பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும். நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முதலீடு செய்தால் உடனடியாக குபேரன் ஆகிவிடலாம் என்றெல்லாம் தூண்டில் போடுகிறார்கள்.

    இந்த மோசடி பேர்வழிகள் நேரடி பரிச்சயம் இல்லாவிட்டாலும் கூட, ஏதோ ஒருவகையில் உறவினராகவோ, நண்பர்களாகவோ இருப்பவர்களை தங்களுடன் சேர்த்து கொள்கிறார்கள். பின்னர் அவர்கள் மூலம் அப்பாவிகளுக்கு வலைவிரிக்கிறார்கள். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் சிக்கி தங்கள் கையில் இருக்கும் பொருளாதாரத்தை தொலைத்து தவிக்கிறார்கள். இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் சிக்கி சென்னை, திருச்சி, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் மக்கள் நாளும் பணத்தை இழந்து காவல் நிலையங்களில் காத்து நிற்கிறார்கள்.

    திருச்சியில் நடப்பு ஆண்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.

    எத்தனை விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் ஆன்லைன் மோசடி கும்பலின் வலையில் சிக்குபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

    சமீபத்தில் திருச்சி பெல் நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர் ஒருவர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ. 49 லட்சம் தொகையை இழந்து சைபர் கிரைம் போலீசிடம் சரணடைந்தது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.

    திருச்சி தில்லை நகரில் சட்டக்கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனின் தாய் வெளிநாட்டு கார் பரிசு விழுந்ததாக தனது செல்போனுக்கு வந்த குறுந்தகவலை வைத்து சம்பந்தப்பட்ட மோசடி பேர் வழியை தொ டர்பு கொண்டார். அதன் விளைவாக அந்த பெண்மணியின் கணவர் அயல்நாட்டில் கஷ்டப்பட்டு அனுப்பிய ரூ.12 லட்சம் பணத்தை மோசடி பேர்வழி கூறிய வங்கிக்கணக்குகளுக்கு பல தவணைகளாக செலுத்தி ஏமாந்து நிற்கிறார்.

    இந்த மோசடி ஆசாமி முதலில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுக் கார் பரிசு விழுந்ததாக கூறி ஜிஎஸ்டி, ரிசர்வ் பேங்க் அனுமதி, சர்வீஸ் டாக்ஸ் என பல யுக்திகளை கையில் எடுத்து சில லட்சங்களை கறந்திருக்கிறான்.

    கேட்க... கேட்க பணம் வரவும் சுதாகரித்துக்கொண்ட அந்த ஆசாமி நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி என்பதால் மேலும் ரூ. 8 லட்சம் பரிசு விழுந்ததாக புரூடா விட்டு மொத்தமாக ரூ. 12 லட்சம் வரை விழுங்கி விட்டான்.

    நேற்றைய தினம் காந்தி மார்க்கெட் பகுதியில் பிரவீன் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் கூடுதல் வட்டித்தொகைக்கு ஆசைப்பட்டு ஆன்லைன் கும்பலிடம் ரூ.8 லட்சத்து 42 ஆயிரத்தை இழந்துவிட்டார்.

    இது போன்ற மோசடிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மோசடி பேர்வழிகள் யுக்திகளை மாற்றி மிரட்டும் வேலைகளையும் செய்ய தொடங்கியிருக்கும் தகவல் பேரதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

    அதற்கு இப்போது கடன் செயலி (லோன் ஆப்) என்ற ஒன்றை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஆண்ட்ராய்டு செல்போன்களில் ப்ளே ஸ்டோரில் இவ்வாறான கடன் செயலிகள் நிரம்ப இருக்கிறது.

    இதனை நாம் டவுன்லோட் செய்து அப்டேட் கொடுத்தால் வாடிக்கையாளரின் ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றை பதிவிட சொல்கிறார்கள்.

    பின்னர் நம்முடன் நட்பாக பழகி நமது காண்டாக்ட் லிஸ்ட் அத்தனையும் எடுத்து விடுகிறார்கள்.

    பின்னர் நாம் ரூ.5 ஆயிரம் கடன் கேட்டு அப்ளை செய்தால் அடுத்த சில நிமிடங்களில் பிடித்தம் போக ரூ.3000 ரூ.4000 நமது வங்கிக் கணக்கிற்கு அனுப்புகிறார்கள்.

    அதன்பின்னர் அந்த கும்பல் ஒரு வாரத்தில் இந்த தொகைக்கான வட்டியுடன் ரூ. 5500, 6000 செலுத்த வேண்டும் என மிரட்டுகிறார்கள்.

    இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்தால் அந்த மோசடி பேர்வழிகள் கையில் எடுக்கும் ஆயுதம் தான் இப்போது பாதிக்கப்பட்டவர்களை நிலைகுலைய செய்து வருகிறது.

    அது என்னவென்றால், கடன் கேட்டு அந்த மோசடி பேர்வழிகளின் செயலில் நாம் பதிவிடும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவற்றில் இருக்கும் போட்டோக்களை எடுத்து மார்பிங் செய்து பெண்ணாக இருந்தால் ஆணுடனும், ஆணாக இருந்தால் வேறு பெண்ணுடனும் தவறாக சித்தரித்து நமது காண்டாக்ட் லிஸ்டில் அந்த ஆபாச பதிவை வாட்ஸ் அப்பில் பதிவிடுகிறார்கள். முதலில் மிரட்டுகிறார்கள். அதற்கு அடிபணியவில்லை என்றால் வீடியோக்களை அனுப்பி விடுகிறார்கள்.

    இவ்வாறு சைபர் கிரைம் போலீசாரிடம் தினமும் நான்கு முதல் ஐந்து புகார்கள் வருவதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் இளம்பெண்கள், குடும்ப பெண்கள், ஆண்கள் ஆத்திர அவசரத்திற்கு கடன் பெற்று மோசடி கும்பலிடம் சிக்கி கண்ணீர் வடிக்கின்றனர்.

    பொதுவாக இந்த மாதிரியான செயலியை தேடும் போது ரிசர்வ் வங்கி அங்கீகரித்த நிறுவனம் தானா என்பதை முதலில் நாம் உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னரே கடனுக்கு அப்ளை செய்ய வேண்டும். மோசடி பேர்வழிகள் ஏதோ ஒரு ரூபத்தில் நமது நெருக்கடிகளை சாதகமாக்கி நெருங்குவார்கள். நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.

    இது போன்ற மோசடி கும்பல் வடமாநிலங்களில் இருந்து இயங்குகிறது. ஆகவே குற்றவாளிகளை பிடிப்பது கடினமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளித்தால் வங்கிக்கணக்கை முடக்கி பணத்தை கைப்பற்றலாம். இல்லை என்றால் அதுவும் இயலாமல் போய்விடுகிறது. இவ்வாறு மோசடி கும்பலிடம் சிக்குபவர்கள் உடனடியாக புகார் அளித்தால் நிவாரணம் கிடைக்கும் என்றார்.

    • குருநாத் ஆன்லைனில் லோன் வாங்கி இருப்பதும் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
    • போலீசார் குருநாத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு சேவியர்புரம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதரன். இவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் குருநாத் (வயது 21), நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தக்கலை போலீசார் குருநாத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பரிசோதனை செய்வதற்காக போலீஸ் நிலையம் எடுத்துச்சென்று ஆய்வு செய்தனர்.

    இதில், குருநாத் ஆன்லைனில் லோன் வாங்கி இருப்பதும் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பல்வேறு ஆன்லைன் செயலிகளில் இருந்து லோன் வாங்கியுள்ள அவர், அதை பலமுறை திருப்பி அளித்தும் உள்ளார். ஆனால் தாங்கள் இன்னமும் வட்டி கட்ட வேண்டி உள்ளது என்று தொடர்ந்து பல்வேறு ஆன்லைன் எண்களில் இருந்து அவருக்கு நிர்பந்தம் வந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஒரு கட்டத்தில் நிர்பந்தம் மிரட்டல் ஆக மாறியதால், குருநாத் வாட்ஸ் அப்பில் ஆன்லைன் மோசடிக்காரர்களிடம் வாய்விட்டு கெஞ்சியுள்ளார். தன்னால் இதற்கு மேல் முடியாது என்றும், நிறைய பணம் கொடுத்து விட்டேன் என்றும், இதற்கு மேல் என்னை நீங்கள் நிர்பந்தப்படுத்தினால் என் வாழ்க்கையை முடித்துக்கொள்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என்றும் அவர் அதில் கூறியிருப்பதாக தெரிகிறது.

    ஆனால் அவரது இந்த நடவடிக்கையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட மோசடி கும்பல், குருநாத்தின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவர் நிர்வாணமாக இருப்பது போன்று சித்தரித்து அவருக்கே அனுப்பி உள்ளது. உடனடியாக நாங்கள் சொல்லும் பணத்தை கட்டா விட்டால் இந்த புகைப்படத்தை இன்டர்நெட்டில் பரவ விடுவதோடு உனது உறவினர்கள் உனது தாய், தந்தை அனைவருக்கும் அனுப்பி வைப்போம் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் தான் குருநாத் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக குருநாத்தின் தந்தை ஸ்ரீதரன், ஆன்லைன் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து தனது மகனுடைய சாவுக்கு காரணமான மோசடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அளித்துள்ளார்.

    ×