search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teachers day"

    • டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களைக் கேட்டனர்.

    திசையன்விளை:

    வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி .எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குநர் சவுமியா ஜெகதீஸ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஆசிரியர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

    9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களைக் கேட்டனர். அதற்கு ஆசிரியர்களும் தகுந்த விடைகளை அளித்தனர். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நன்றி கூறினார். 

    • தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
    • திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆசிரியர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் 'பாரதம்' என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இளம் மனங்களின் திறனையும் குணநலன்களையும் வடிவமைத்து வலிமை மற்றும் திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள்.
    • கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

    சென்னை :

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்! தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள். கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்னும் நல்லாசிரியர் விருதாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விருது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் அன்றைய தினம் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்னும் நல்லாசிரியர் விருதாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய விருது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

    அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் விவரம் வருமாறு:-

    புழுதிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சங்கர், மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தி.வி.லதா, அத்திவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சு.மீனாட்சி, பாப்பாநல்லூர் ஆர்.சி. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். சுகந்தி, மெல்ரோசாபுரம் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கிரேஸ் பெட்ரீ ஷியா மாலினி,

    செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ம.சச்சி தானந்தம், காரணை புதுச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ப.இரா. சூரியகலா, மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ச.நாகராஜி, ஊரப்பாக்கம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ந.புவனேஸ்வரி ஆகியோருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வல்லக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் அ.ஷேக் தலைமை அகமது, வாலாஜாபாத் ஒன்றியம் பூதேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சி. சுந்தர ராசன்,

    குன்றத்தூர் ஒன்றியம், சிக்கராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, கீழ்க்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சி.மழலை நாதன், வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரா. சொர்ணலட்சுமி,

    குன்றத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.ஆ.வசந்தி, ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எஸ்.பி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் அ.சுந்தரராஜன், குன்றத்தூர் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை நூருல் குதாயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
    • சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.

    ராணிப்பேட்டை:

    முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். இவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் 1888-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பிறந்தார்.

    அப்போது தமிழகத்தின் முதல் நகராட்சியான வாலாஜாவில் அரசு பள்ளி தரம் வாய்ந்ததாக இருந்தது.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் வாலாஜா அரசு பள்ளியில் சேர்ந்தார். இதற்காக அவர் வாலாஜாவில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து பள்ளி படிப்பை முடித்தார்.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.

    இந்த பள்ளி 120 ஆண்டுகளை கடந்தும் திறமைமிக்க மாணவர்களை உருவாக்கி வருகிறது .

    இந்த பள்ளியில் மு.வரதராசனார் முன்னாள் தலைமைச் செயலர் பத்மநாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் உள்ளிட்ட சாதனையாளர்கள் படித்துள்ளனர்.

    இந்த அரசு பள்ளி 1867-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தால் அந்த காலத்திலேயே மிகத் தரம் வாய்ந்த பர்மா தேக்குகளால் மேற்தளம் மாடிபடிக் கட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .

    மிகப் பெரிய வாணிப நகரமாக விளங்கிய வாலாஜாவில் பல வியாபாரிகளின் பிள்ளைகள் இந்த பள்ளிக்கூடத்தில் கல்வி கற்பதை மிகவும் பெருமையாக கருதுகின்றனர்.

    கடந்த 1920-ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் திவான் பகதூராகவும் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்த ராஜகோபாலாச்சாரியார் முயற்சியினால் எச். வடிவில் பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.

    தற்போது பழமை வாய்ந்த இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் சிதிலமடைந்து உள்ளன. சில கட்டிடங்கள் இடித்து விழும் நிலையில் உள்ளன.

    ஓடுகள் சரிந்தும், சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது.

    நாளை இந்த பள்ளியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • காரைக்கால் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் முடிவு
    • ஆசிரியர் தினத்தன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது என முடிவு எடுத்துள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை யூனியன் பிரதேச ஆசிரியர் காரைக்கால் சங்க தலைவர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வின் போது காரைக்கால் பகுதியை ஏ.பி. என பிரிக்காமல் ஒரே பகுதியாக கொண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கலந்தாய்வின்போது காரைக்கால் பகுதியில் பணி மூப்பு அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்.

    கருப்பு பேட்ஜ் அணிந்து...

    காரைக்கால் பகுதி தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமனம் செய்ய வேண்டும்.பணி நிரவல் என்ற பெயரில் காரைக்கால் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை குறைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பலகட்ட நிலையில் கோரிக்கை கடிதம், போராட்டங்கள் நடத்தியும் கல்வித்துறை செவிசாய்க்க வில்லை.

    எனவே ஆசிரியர் தினத்தன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது என முடிவு எடுத்துள்ளோம்.

    அதேபோல் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாள் அன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து கலந் தாய்வை புறக் கணித்தும், காரைக்கால் ஆசிரியர் கூட்டமைப்புடன் இணைந்து காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அலுவ லகத்தை முற்றுகை யிடவும் முடிவு எடுத்துள்ளோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அன்றைய வரலாற்றின் முக்கியத்துவத்தை கண்டறிந்து ஒருங்கிணைந்த செயல்முறையாக கற்பித்தல் மற்றும் கற்றல் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
    • ஆசிரியர்களுக்கு அதிர்ஷ்ட விளையாட்டு நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அரியகுளம் சாரதா மகளிர் தன்னாட்சி கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் மாணவர் பேரவை இவ்விழாவினை ஏற்பாடு செய்திருந்தது.

    மாணவர் பேரவையின் மாணவியத்தலைவி ரங்க ப்ரியங்கா வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவப்பிரியா அம்பா ஆசிரியர்களின் பழமையான, நிகழ்கால மற்றும் எதிர்கால சூழல் விழுமியங்களை மேற்கோள் காட்டி அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

    கல்லூரி முதல்வர் கமலா தொடக்க உரையாற்றினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அன்றைய வரலாற்றின் முக்கியத்துவத்தை கண்டறிந்து ஒருங்கிணைந்த செயல்முறையாக கற்பித்தல் மற்றும் கற்றல் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    ஆசிரியர்களுக்கு அதிர்ஷ்ட விளையாட்டு நடத்தப்பட்டது.

    நிறுவனத்தின் இயக்குனர் பங்கேற்பாளர்களை வாழ்த்தி மாணவர்கள் மற்றும் அறிஞர்களை சமூக பொறுப்புணர்வோடு கல்வி, ஆராய்ச்சி, புதுமை மற்றும் விரிவாக்கம் பயிற்சிக்கு மாற்றும் பணியில் ஆசிரியர்களின் தற்போதைய பங்களிப்பை சிறப்பித்து அனைத்து ஆசிரியர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

    • சிறப்பு விருந்தினராக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி கலந்து கொண்டார்.
    • விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் யு.ஜி.சி.யின் வழிகாட்டுதல்படி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. அகதர மதிப்பீட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அ.அந்தோணி சகாய சித்ரா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார், மூத்த பேராசிரியர் ரா.முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு விருந்தினராக டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஆசிரியர்கள் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப, தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். அதன் மூலம் மாணவர்களுக்கு தேவையானவற்றை ஆசிரியர்களால் வழங்க முடியும் என்றார். விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை, மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர் பென்னட் நன்றி கூறினார்.

    இதேபோன்று, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அணி எண்.48 மாணவர்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கலை நயத்துடன் வாழ்த்து அட்டைகள் செய்திருந்தனர். அவர்கள் கல்லூரியில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களுக்கும் வாழ்த்து அட்டை மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியை கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் (பொறுப்பு) முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் கவிதா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.


    • எங்களுக்கு சாமாசார் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.
    • எங்கள் நாகூரில் அவர் ஒரு முக்கியப்புள்ளி. எல்லார் வீட்டு விழாக்களிலும் அவருக்கே முதன்மை. ஏன் அப்படி?

    செப்டம்பர் 5 டாக்டர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் பிறந்தநாள். அவர் விரும்பியவாறு இது ஆசிரியர் நாளாக மலர்ந்துள்ளது.

    ஆசிரியராகத் தொடங்கிக் குடியரசுத் தலைவர் பொறுப்பு வரை அனைத்தையும் பொறுப்புடன் நிறைவேற்றிய பெருந்தகை அவர்.

    'வருங்கால இந்தியா வகுப்பறையில்தான் உள்ளது' என்று கல்வியின் பெருமையைக் கவின்மிக உரைத்தவர்.

    என் ஆசிரியர்கள் நினைவுக்கு வருகிறார்கள். இரண்டாம் வகுப்பு ஆசிரியர் அருமையாகப் பாடம் நடத்துவார். இனிய கருத்துகளை எளிமையாக விளக்கும் ஆற்றல் உடையவர். மதியம் உணவு உண்ட களைப்பில் சற்றே அவர் கண்ணயர்வார். இந்தப் பழக்கத்தை மட்டும் அவரால் விடமுடியவில்லை. இதனால் தலைமையாசிரியரிடம் பலமுறை திட்டுவாங்கியிருந்தார்.

    ஒருநாள் மதியம் சட்டாம் பிள்ளையான என்னை ஆத்திசூடி சொல்ல வைத்துவிட்டுத் தூங்கிப்போனார். என்னிடம் 'அந்த ஹச்.எம் வந்தார்னா என்னை எழுப்பிவிடுடா' என்று சொல்லியிருந்தார்.

    தலைமையாசிரியர் இவரைக் கையுங்களவுமாகப் பிடிக்கவேண்டுமென்றே வருவது தெரிந்தது. இரண்டு மூன்றுமுறை எழுப்பினேன். அவர் விழிப்பதாயில்லை.

    ஓங்கி ஒரு தட்டு தட்டி எழுப்பினேன். அவர் விழித்தெழவும் தலைமையாசிரியர் வகுப்பில் நுழையுவும் சரியாக இருந்தது. தலைமையாசிரியர் சினத்துடன், 'என்னாய்யா பண்ணிக்கிட்டு இருக்கீங்க' என்று பொறிந்தார்.

    எங்கள் ஆசிரியர் கவலையே படாமல், "ஒன்னுமில்லே சார், சிங்கமும் சுண்டெலியும் கதை சொன்னேனா, சிங்கம் எப்படித் தூங்கும்னு பையங்க கேட்டாங்க. அதைத்தான் செஞ்சு காட்டிகிட்டு இருந்தேன். நீங்களும் கரெக்டா வந்துட்டீங்க." என்ற சொல்லிச் சமாளித்தார்.

    பையன்களாகிய நாங்கள் மிகவும் ரசித்தோம்.

    எங்களுக்கு சாமாசார் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.

    எங்கள் நாகூரில் அவர் ஒரு முக்கியப்புள்ளி. எல்லார் வீட்டு விழாக்களிலும் அவருக்கே முதன்மை. ஏன் அப்படி?

    மாணவர்களுக்கு அவர் ஆசான் மட்டுமல்ல. ஆலோசகர் மற்றும் வழிகாட்டி.

    மேலே எவ்வளவு படித்தபின்னும் அவரிடம் வந்து யோசனை கேட்டு, அதன்படி முன்னாள் மாணவர்கள் நடப்பார்கள்.

    உடல் நலமில்லாமல் இருப்போருக்கு அவர் மருத்துவ ஆலோசகர், பள்ளிமுடிந்து அவர் தெருவில் நடந்து போகும்போது அழைத்துக் காட்டுவார்கள்.

    அவர் நாடி பிடித்துப் பார்ப்பார். "உடனே ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போங்க" என்பார். நோயாளி பிழைப்பார்.

    சில பேர் நாடி பார்த்த பின் "ரெண்டு நாள் பார்த்துட்டு அப்புறமா ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போகலாம்" என்று சொல்லுவார். அந்த ரெண்டு நாளில் நோயாளி பரமபதம் அடைந்து விடுவார்.

    நிலை உணர்ந்து கருத்துச்சொல்லி உதவுவார். ஊர் மக்கள் அவரிடம் உயிரையே வைத்திருந்தனர்.

    சாமிநாத அய்யர் என்ற அவர் ஒவ்வொரு நாளும் நாகூர் தர்காவுக்குப்போவார். அவர் போவதை பார்த்து வெற்றிலைப் பாக்குக் கடை உசேன் ராவுத்தர் வெற்றிலை சீவல் எடுத்து பொட்டலம் கட்டி வைப்பார்.

    அவர் திரும்பி வரும்போது தெருவில் இறங்கி வந்து அவரிடம் பணிவோடு வழங்குவார். சாமாசார் பையில் கைவிடுவார், காசுகொடுக்க. உசேன் ராவுத்தர் "போயிட்டு வாங்க சார்" என்று வழிஅனுப்புவார். இந்த நாடகம் ஒவ்வொருநாளும் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

    கணவர் அனுப்பிய பணத்தை சரியாக தரவில்லை என்று போஸ்ட்மேன் மீது குறை சொல்லுகிறார் ஓர் இஸ்லாமிய மாது. சாமாசார் அதை கேட்டு, அந்த போஸ்ட்மேனை வரவழைத்து, அவரைக் கண்டித்து பணத்தை வாங்கி அம்மையாரிடம் கொடுத்து அனுப்பி விட்டு, போஸ்ட் மாஸ்ட்டருக்குத் தெரிஞ்சா உன் வேலையே போய்விடும். இனிமே இப்படிச் செய்யாதே என்று எச்சரித்தார்.

    ஊரில் முக்கியமானவராக ஆசிரியர் இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த சாமாசார் ஓர் உதாரணம்.

    ஆசிரியர் என்பவர் எல்லோராலும் மதித்து போற்றப்படுபவர். எனவே ஆசிரியர்கள் பொறுப்புணர்ந்து நடப்பது அவசியம்.

    ஆசிரியர் என்பவர் பணியாற்றுபவர் அல்லர். அவர் சிறந்தப் பொறுப்பினை வகுத்து நிறைவேற்றுபவர்.

    -புலவர் சண்முகவடிவேல்

    • ஆசிரியர் ராமச்சந்திரன் பள்ளிக்கு தினமும் வரும்போது மாணவர்களின் சீருடை அணிந்தே வருவார்.
    • தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளை கற்று கொடுத்து, திருக்குறளின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் விதைத்து வருகிறார்.

    ஆசிரியராக பணியை தொடங்கி நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது நினைவாக அவருடைய பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    மாணவர்களின் எதிர்காலத்தை வளமுடைய தாக்கவும், அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்படும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ந் தேதி மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

    தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளியில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்களை தமிழக பள்ளி கல்வித்துறை பரிந்துரை செய்தது.

    அவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் கே.ராமச்சந்திரன் என்பவரும் ஒருவராவார். இறுதியில் அவர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    தமிழகத்தில் இருந்து இவர் மட்டுமே நல்லாசிரியராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நல்லாசிரியர் விருதை வழங்கினார்.

    கொரோனா காலத்தில் அரசு பள்ளியில் படித்த குழந்தைகளின் கல்வி தடைபட்டது. இதையடுத்து அவர்களுக்கு கல்வி கிடைக்கும் வகையில் ஆசிரியர் ராமச்சந்திரன் தனது சொந்த செலவில் செல்போன்கள் வாங்கி கொடுத்து உதவி செய்தார்.

    மேலும் தான் பணிபுரியும் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் யூடியூப்பில் தனி கணக்கு தொடங்கி மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த வழி செய்துள்ளார். அதுமட்டுமின்றி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளை கற்று கொடுத்து, திருக்குறளின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் விதைத்து வருகிறார்.

    மேலும் தனது கிராமத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு டி.என்.பி.எச்.பி. போட்டி தேர்வுக்கு பயிற்சி வழங்கி கிராமத்து இளைஞர்களை அரசு ஊழியர்களாக்கும் முயற்சியை முன்னெடுத்து வருகிறார். இதன் காரணமாகவே இவருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

    நல்லாசிரியர் விருது பெற்ற ராமச்சந்திரனுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ஆசிரியர் ராமச்சந்திரன் பள்ளிக்கு தினமும் வரும்போது மாணவர்களின் சீருடை அணிந்தே வருவார். தானும் ஒரு மாணவன் தான் என்பதை வெளிக்காட்டும் வகையிலும், மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே இடைவெளி இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாகவும் அவர் பள்ளி சீருடை அணிந்து வகுப்பு எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

    இந்த நிலையில் ஜனாதிபதியிடம் நல்லாசிரியர் விருது வாங்கும் போதும் அவர் பள்ளி சீருடை அணிந்தே வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிரியர் ராமச்சந்திரன் ஜனாதிபதியிடம் நல்லாசிரியர் விருது வாங்கும் வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு, பாராட்டு தெரிவித்துள்ளார்.

    • பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • செஞ்சி வட்டம் சகாய மேரி தேவாலய பங்கு தந்தை பிரவின்குமார் தலைமை தாங்கி பேசினார்.

    புதுச்சேரி:

    பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. செஞ்சி வட்டம் சகாய மேரி தேவாலய

    பங்கு தந்தை பிரவின்குமார் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் குருமீத்சிங், அன்னை தெரசா சுகாதார அறிவியல் பட்ட மேற் படிப்பு ஆராய்ச்சி க ல்லூரி முதல்வர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கினர்.

    தொடர்ந்து தமிழாசிரியை ராசலட்சுமி சக்திவேல் எழுதிய மரபின் மழைத்துளிகள், நிகழ்வின் நிழல்கள் ஆகிய 2 நூல்கள் வெளியிடப்பட்டன. இந்நூலிற்கான தனித்தமிழ் பாவணர் விருது மற்றும் மர புப்பாமணி விருதுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர் கவுரவிக்கப்பட்டார்.

    மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் சார்பில் 2022-23-ம் கல்வியாண்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகையினைப்பள்ளி முதல்வரிடம் வழங்கினர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பிரடெரிக், மருத்துவ இயக்குனர் ஜீத்தா பிரடெரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா , ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராமன், முத்தானந்தம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • இளம் மனங்களில் கல்வியின் மகிழ்ச்சியை பரப்பும் கடின உழைப்பாளிகளான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
    • முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

    புதுடெல்லி:

    ஆசிரியர் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    இளம் மனங்களில் கல்வியின் மகிழ்ச்சியை பரப்பும் கடின உழைப்பாளிகளான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

    முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×