search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK MLAs"

    • எவ்வளவு போராட்டம், எவ்வளவு எதிர்நீச்சல், எவ்வளவு எதிர்வினைகளை தாண்டிதான் நாம் இங்கே எல்லோரும் நிற்கின்றோம்.
    • ஓரிரு நாட்கள் கழித்து என்னிடம் இந்த 40 பேர்களையும் நம்பி நாம் ஆட்சி அமைக்கலாம் என்று நினைக்கிறீர்களா ஒரு போதும் தேவையில்லை.

    சென்னை:

    புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    இப்போது நாமெல்லாம் நிமிர்ந்து நிற்கின்றோம். அதற்கு காரணமானவர் நிமிர்ந்து நிற்கிறார். எவ்வாறு அவர் (மு.க.ஸ்டாலின்) நிமிர்ந்த பார்வையோடு நிற்கிறார் என்று சொன்னால் எளிதாக இது கிடைத்து விடவில்லை.

    எவ்வளவு போராட்டம், எவ்வளவு எதிர்நீச்சல், எவ்வளவு எதிர்வினைகளை தாண்டிதான் நாம் இங்கே எல்லோரும் நிற்கின்றோம்.

    கலைஞர் வருகிறார் என்று சொன்னால் கலைஞர் எவ்வளவு பெரிய தாக்குதல்களை எல்லாம் தாங்கி இருக்கிறார் என்பது உங்கள் எல்லோருக்கு தெரிந்திருக்கும்.

    நான் ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். அம்மையார் ஜெயலலிதா மறைந்த போது 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் புகார் கொடுத்த காரணத்தால் நீக்கப்பட்டார்கள்.

    2017-ம் ஆண்டு அ.தி.மு.க. பல பிரிவுகளாகி 18 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக சென்ற போது அவர்கள் நீக்கப்பட்டனர். அதற்கு துணையாக இருந்தவர் டி.டி.வி. தினகரன்.

    அன்று காலையிலேயே ஒரு நண்பர் என்னை அழைக்கின்றார். இன்றைய முதலமைச்சரான மு.க. ஸ்டாலினிடம் ஒரு தகவலை சொல்லுங்கள். 40 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வுக்கு வர தயாராக இருக்கிறார்கள். நான் அழைத்து வந்து விடுகிறேன். அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

    இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற எடப்பாடி பழனிசாமி அப்போது முதலமைச்சராக பொறுப்பேற்று இருந்தாலும் அடுத்த நிலைக்கு எவ்வாறு செல்வது என்று தெரியாத நிலையில், டி.டி.வி. தினகரன் திகார் சிறைக்கு சென்ற அந்த நாளில் 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. வுக்கு வர தயாராக இருந்த தகவலை என்னிடம் அந்த நண்பர் தெரிவித்தார்.

    அப்போது 4 ஆண்டு காலம் இன்னும் ஆட்சி இருக்கிறது என்பதால் தி.மு.க. ஆட்சி அமைத்தால் வந்தவுடனே பஞ்சாயத்து தேர்தலை வைத்தால் 2 கோடி பேருக்கு பதவி கொடுத்து விடலாம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு கூட்டுறவு துறையில் பதவி போட்டுக் கொடுத்து விடலாம் என்றெல்லாம் நினைப்பு வந்தது.

    10 வருடம் தி.மு.க. ஆட்சி இல்லாமல் இருக்கிறது. நிச்சயமாக இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையோடு நான் முதல்வருடைய வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசரமாக பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.

    இன்றைய முதல்வர் மதிய உணவுக்காக வந்திருந்த சமயம். இந்த தகவல் சென்றதும் என்ன விசயம் அப்பாவு என்று கேட்டார்.

    நான் அப்போது டி.வி. விவாதங்களில் சென்று பேசுவது வழக்கம். அது தொடர்பாகதான் பேசுகிறாரோ என்று நினைத்தேன். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விசயங்கள் பற்றி அவரது கவனத்திற்கு கொண்டு சென்றேன். அதற்கு அவர், நான் அப்புறம் சொல்கிறேன் அப்பாவு என்று தொலைபேசியில் முடித்துக் கொண்டார்.

    அதன் பிறகு ஓரிரு நாட்கள் கழித்து என்னிடம் இந்த 40 பேர்களையும் நம்பி நாம் ஆட்சி அமைக்கலாம் என்று நினைக்கிறீர்களா ஒரு போதும் தேவையில்லை. மக்களிடம் செல்வோம். மக்கள் நமக்கு அந்த அதிகாரத்தை தந்தால் நாம் ஆட்சி செய்வோமே தவிர அதற்கு முன்பாக தேவையில்லை என்று சொன்னவர் இன்றைய முதல்வர். அந்த அளவுக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் கொள்கையோடு இருந்தவர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
    • சட்டசபை கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் சபாநாயகர் அப்பாவுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து மனு அளித்தனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் தொடர் 6 மாத கால இடைவெளிக்குள் கூட்டப்பட வேண்டும். அதன்படி வருகிற 20-ந்தேதிக்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதனால் அக்டோபர் 9-ந்தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடுகிறது.

    இன்றைய சபைக் கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.

    இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் சபாநாயகர் அப்பாவுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து மனு அளித்தனர்.

    எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுடன் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசினர்.

    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.
    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்க உள்ளார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது.

    கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவுக்கும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சிங் யாதவ் மறைவுக்கும் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். கோவைத்தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவு குறித்தும் இரங்கல் தெரிவிக்கப்படும்.

    அதன்பிறகு சட்டசபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும். இதன் பிறகு 11 மணி அளவில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும்.

    இந்த கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். அனேகமாக 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை துவங்கும் சட்டசபை கூட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு சபாநாயகருடன் வாக்குவாதம் செய்து சட்டசபையை புறக்கணிக்க கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    காரணம், அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இப்போது சட்டசபையிலும் எதிரொலிக்க உள்ளது. அ.தி.மு.க.வில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கிக் கொண்டதோடு இதுகுறித்து சபாநாயகருக்கும் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி கொடுத்த கடிதத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டதாகவும் அதற்கு பதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்கட்சி துணைத்தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

    அந்த வகையில் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்த இடத்தை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்றும், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற முறையில் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கடிதம் கொடுத்து உள்ளனர். ஆனால், இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    அதுமட்டுமின்றி சட்டசபை நிகழ்வுகளில் கட்சி சார்பில் முடிவெடுக்கும் போது தன்னை கலந்து பேசிதான் முடிவெடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளார். தான் இன்னும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றி அமைக்கப்படுமா? ஆர்.பி.உதயகுமாரை சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக சபாநாயகர் அங்கீகரிப்பாரா? என்பது நாளை தெரியவரும்.

    ஒருவேளை ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றி அமைக்காவிட்டால் அதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து சட்டசபையை புறக்கணித்து விடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    சட்டசபையை பொறுத்தவரை சபாநாயகர் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் ஜனநாயக முறைப்படி நியாயமான முடிவினை எடுப்பேன் என்று சபாநாயகர் ஏற்கனவே கூறி உள்ளார்.

    தற்போது வரை சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் தான் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை உள்ளது. இன்னும் அந்த இருக்கை மாற்றி அமைக்கப்படவில்லை. சபாநாயகர் இதுபற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை.

    அப்படிப்பட்ட சூழலில் ஓ.பன்னீர் செல்வத்தின் அருகே சென்று எடப்பாடி பழனிசாமி அமருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதால் சட்டசபையில் இது பற்றி சபாநாயகரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அப்போது சபாநாயகர் தான் எடுத்துள்ள முடிவை விளக்கமாக சட்டசபையில் அறிவிப்பார்.

    இதை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது சட்டசபையை புறக்கணிப்பார்களா? என்பது நாளை தெரிந்துவிடும்.

    இதற்காக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்க உள்ளார்.

    ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து சபாநாயகர் மாற்றாமல், இருக்கையையும் மாற்றி அமைக்காத பட்சத்தில் சபாநாயகர் முடிவை கண்டித்து சட்டசபையை புறக்கணிக்கவும் இன்றைய அ.தி.மு.க. கூட்டத்தில் முடிவெடுப்பார்கள் என தெரிகிறது.

    • சட்டசபையில் தனக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அருகருகே இருக்கை உள்ளதால் எப்படி அருகே அமர முடியும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதங்கப்பட்டார்.
    • 63 எம்.எல்.ஏ.க்கள் நம்மிடம் இருக்கும் போது சபாநாயகர் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், தமிழ்மகன் உசேன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கோகுல இந்திரா உள்பட பலரும் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் 51-வது தொடக்க விழாவை 3 நாட்கள் கொண்டாடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது மட்டுமின்றி அ.தி.மு.க. தலைமை கழகத்திலும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டன.

    இதில் அனைவருமே அ.தி.மு.க. தொடக்க விழா பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. கொண்டு வந்த பல திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தியது குறித்து மக்களிடம் எடுத்த கூற இந்த பொதுக்கூட்டம் வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்தனர்.

    சட்டசபை கூட்டம் வருகிற 17-ந்தேதி கூடுவதால் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கைகள் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்பதால் அதுபற்றியும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இந்த விசாரணை அறிக்கையில் அ.தி.மு.க.வுக்கு பாதகமான அம்சங்கள் ஏதேனும் சொல்லப்பட்டிருந்தால் அதை சட்டசபையில் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் விவாதித்தனர்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிய நிலையில், அவர் வகித்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க கோரி சட்டசபை சபாநாயகருக்கு கடிதம் கொடுத்திருந்தது பற்றியும் கூட்டத்தில் விவாதித்தனர்.

    கடிதம் கொடுத்து 2 மாதம் ஆகியும் சபாநாயகர் இதில் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் மூத்த நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கருத்து கேட்டார்.

    சட்டசபையில் தனக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அருகருகே இருக்கை உள்ளதால் எப்படி அருகே அமர முடியும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதங்கப்பட்டார்.

    கட்சி நம் வசம் உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் நம் பக்கம் உள்ளனர். 63 எம்.எல்.ஏ.க்கள் நம்மிடம் இருக்கும் போது சபாநாயகர் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார்.

    எனவே ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றி அமைக்க மீண்டும் ஒரு கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கலாமா? என்றும் ஆலோசனை கேட்டார். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டதாக தெரிகிறது.

    சட்டசபை கூடும் போது சபாநாயகர் என்ன மாதிரி முடிவெடுத்து அறிவிப்பார் என்பதை பார்க்க வேண்டும். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி இருக்கையை மாற்றி அமைக்காவிட்டால் சட்டசபை கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் ஆலோசித்தனர்

    சபாநாயகரின் முடிவை பொறுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் கருத்து பரிமாறப்பட்டது.

    எனவே சட்டசபை கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் எந்த மாதிரி நடந்து கொள்வார்கள் அவரை எந்த மாதிரி விமர்சனம் செய்வார்கள் என்பது அ.தி.மு.க.வினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் முக்கியமான பிரச்சினைகள் பற்றி விவாதிக்கிறார்கள்.
    • முக்கியமாக ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

    கட்சியில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டது.

    ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் முடிவை பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரித்ததால் அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அவர் பக்கம் சென்றனர்.

    இதையடுத்து சட்ட ரீதியாக வழக்கு தொடுத்து கட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீர் செல்வம் இறங்கினார். கோர்ட்டு உத்தரவுகளும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்தன. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

    எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தை செல்லாததாக அறிவிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந்தேதி நடைபெறுகிறது.

    எனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் முக்கியமான பிரச்சினைகள் பற்றி விவாதிக்கிறார்கள். முக்கியமாக ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்கிறார்கள். அதாவது ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால் சட்டமன்றத்தில் அவர் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியும் அனுபவிக்க முடியாது.

    இதுபற்றி அ.தி.மு.க. சார்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமாரை அந்த பதவியில் அமர்த்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

    இதுதொடர்பாக சபாநாயகர் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனால் சட்டமன்ற மரபுப்படி முடிவெடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.

    எனவே இந்த விவகாரத்தில் உறுதியான முடிவெடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி புதிய வியூகத்தை அமைத்துள்ளார். சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு 66 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அவர்களில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 2 பேர் மட்டுமே ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

    அதாவது ஓ.பி.எஸ்.சையும் சேர்த்தால் அந்த அணிக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் பலம் தான் இருக்கிறது. மீதமுள்ள 63 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள்.

    எனவே இன்று மாலையில் நடைபெறும் கூட்டத்தில் ஓ.பி.எஸ். பதவியை பறிக்கும் வகையில் 63 எம்.எல்.ஏ.க்களிடமும் கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளனர்.

    அனைவரது கையெழுத்துடன் கூடிய கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்து துணைத்தலைவர் பதவிக்கு ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்கள்.

    மேலும் வழக்கு நிலவரங்கள் பற்றியும் நிர்வாகிகளிடம் விளக்க திட்டமிட்டுள்ளனர். ஓ.பி.எஸ். தரப்பில் இன்னும் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியில் இருப்பதாகவும், கட்சியில் இருந்து நீக்க முடியாது என்றும் கூறி வருகிறார்கள்.

    இது தவிர கட்சியின் விதிமுறைகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவை செல்லாது என்றும் கூறுகிறார்கள். ஆனால் கட்சியில் எம்.ஜி.ஆர். வகுத்து வைத்துள்ள விதிப்படி கட்சிக்கு எதிராக யார் கோர்ட்டுக்கு சென்றாலும் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

    அந்த விதிப்படி தான் ஓ.பி.எஸ். நீக்கப்பட்டுள்ளார். மேலும் பொதுச்செயலாளருக்கு மட்டும்தான் தொண்டர்கள் வாக்களிக்க வேண்டும். அந்த ஒரு விதியை தான் திருத்த முடியாது.

    வேறு எல்லா விசயங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இருக்கிறது. இந்த தகவல்கள் கட்சி நிர்வாகிகளிடம் விளக்கப்படும் என்றும் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

    • அ.தி.மு.க. தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற தீர்ப்பு.
    • நீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணைய தீர்ப்பு குறித்து பேச மாட்டோம்.

    நெல்லை:

    தமிழக சபாநாயகர் அப்பாவு நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை.

    அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி எதிர்கட்சி துணைத் தலைவர் தொடர்பாக கடிதம் கொடுத்துள்ளார்.

    நான் இன்னும் சென்னை செல்லவில்லை. அங்கு சென்ற பிறகு கடிதத்தை படித்து பார்த்து சட்டமன்ற விதிகளின்படி நடவடிக்கை எடுப்பேன்.

    மேலும் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை எந்தெந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் அவர்கள் கடிதம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பேன்.

    அ.தி.மு.க. தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற தீர்ப்பு. நீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணைய தீர்ப்பு குறித்து நாங்கள் பேச மாட்டோம். சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து மட்டும் முடிவு செய்வேன்.

    ஜனநாயக ரீதியில் சட்டமன்றம் நடைபெற்று வருகிறது. எனவே ஜனநாயக ரீதியில் முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூவத்தூர் சொகுசு பங்களாவில் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம், தங்கம் கொடுக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க கோரி பாமக தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #MadrasHC #PMK #ADMKMLAs #KoovathurResort
    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு தமிழக சட்டசபையில் தன் அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார்.

    இதற்கு முன்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சென்னை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு பங்களாவில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-


    கூவத்தூர் சொசுகு பங்களாவில் இருந்து தப்பி வந்த எம்.எல்.ஏ., சரவணன், நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுப்போட எம்.எல்.ஏ.க்களுக்கு, எடப்பாடி பழனிசாமி பணம், தங்கம் ஆகியவை கொடுப்பதாக கூறினார். எனவே, இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    இந்த வழக்கு பல மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அரசு தரப்பில் ஆஜராகி, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது’ என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #MadrasHC #PMK #ADMKMLAs #KoovathurResort
    அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #TTVDhinakaran #ThangaTamilselvan
    மதுரை:

    மதுரை ஓட்டலில் முகாமிட்டுள்ள தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து கழக துணை பொதுச்செயலாளர் இன்று எங்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் எம்.எல்.ஏ.க்களான பிரபு, கலைச்செல்வன், ரத்தின சபாபதி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்து துணை பொதுச்செயலாளர் உரிய முடிவை அறிவிப்பார்.


    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பு குறித்து பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தெரிவிக்கப்படும். அ.தி.மு.க.வில் உள்ள மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பிறகு எங்கள் பக்கம் வருவார்கள். சிலிப்பர் செல்களும் வர வேண்டிய நேரத்துக்கு வருவார்கள்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ThangaTamilselvan
    அதிமுக எம்எல்ஏக்களை எந்தக் கட்சியினாலும், எந்தக் காலத்திலும் விலை கொடுத்து வாங்க முடியாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #ADMK #OPanneerselvam
    காஞ்சீபுரம்:

    வேலூரில் நேற்று இரவு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு காஞ்சீபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முக்கொம்பு அணை 176 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்த அணையையும், தமிழக அரசினையும் ஸ்டாலின் ஒப்பிடுவது தவறு.

    உடைந்த முக்கொம்பு அணை தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் விரைந்து சீர் செய்யப்பட்டது. அத்துடன் புதிய அணை கட்டுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    கரிகாலன் கட்டிய கல்லணை ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து உறுதியாக உள்ளது போல் அ.தி.மு.க. அரசும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும்.

    கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரினை தேக்கி வைப்பதற்கான திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது.



    அதிமுக எம்எல்ஏக்களை எந்தக் கட்சியினாலும், எந்தக் காலத்திலும் விலை கொடுத்து வாங்க முடியாது. அவர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என நினைப்பது பகல் கனவாகவே முடியும்.

    எம்.ஜி.ஆரால் அஸ்திவாரம் போடப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டப்பட்ட மாளிகை அ.தி.மு.க. எந்தக் காலத்திலும் எவராலும் தகர்க்க முடியாத மாளிகையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன், அமைப்புச் செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்ட பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், தும்பவனம் ஜீவானந்தம், அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜன், ராஜசிம்மன், பாலாஜி, ஜெயராஜ் கலந்து கொண்டனர். #ADMK #OPanneerselvam
    தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசி எம்.எல்.ஏ.க்கள் பயன்பெறுவதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டி வருமாறு:-

    சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகழ் பாடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களுடைய சொந்த தேவையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதைத்தான் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் பார்த்தேன்.

    அம்மாவை மறந்து விட்டு, பழனிசாமி ஏதோ பரம்பரையாக முதல்-அமைச்சராக இருப்பது போல புகழ்பாடுகிறார்கள். இதன் மூலம் எம்.எல்.ஏ.க்களின் சொந்த நலனுக்காக அரசு பணம் வாரி இறைக்கப்படுகிறது. மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இது தான் உண்மை.

    நிதியே இல்லை. 110-வது விதியின் கீழ் புதிதாக அறிவிக்கப்படும் எல்லாவற்றையும் பழனிசாமியால் நிறைவேற்ற முடியாது. இது அவருக்கு தெரியும்.

    இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. இருக்கிறவரை அறிவிப்போம் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி இப்படி செய்கிறார். வர இருக்கும் தேர்தலில் கூட்டணி அமைத்தாலும் அமைக்காவிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெறும்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran
    ×