என் மலர்
நீங்கள் தேடியது "ADMK"
- இன்ஜின் இல்லாத கார்தான் அதிமுக
- வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கவேண்டும்.
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு இன்று நடைப்பெற்றது. அதில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
"மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நமக்கெல்லாம் ஒரு சவால் விடுத்துள்ளார். அடுத்த இலக்கு தமிழ்நாடுதான் என்று. நான் அமித்ஷாவிற்கும், அவரது அடிமைக் கூட்டத்திற்கும் ஒன்று சொல்கிறேன். நீங்கள் எவ்வளவு மிரட்டினாலும் அதை எதிர்கொள்வதற்கு எங்களது கருப்பு, சிவப்பு படை, இளைஞரணி படை களத்தில் இருக்கும். டெல்லியின் ஆதிக்கத்தை எதிர்க்கத்தான் நாங்கள் வருகிறோம் என்று சொல்லித்தான் கருப்பு, சிவப்பு கொடியை ஏற்றினார் அண்ணா. அன்றிலிருந்து தமிழ்நாட்டை காப்பதற்கான போர்வரிசையில் என்றுமே திமுக முன் நின்றுள்ளது. இந்த போர்களத்தில் எதிரிகள்தான் மாறியுள்ளனர். திமுக அப்படியேத்தான் இருக்கிறது.
ஏனெனில் முதலமைச்சர் சொன்னவாறு 'தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்'. அப்படிப்பட்ட நம்மை பார்த்து தயாராக இருங்கள், தமிழ்நாட்டிற்கு வருகிறோம் என மிரட்டப் பார்க்கிறார்கள். ஆட்சி, அதிகாரத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல திமுக. தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. மிசா என்ற நெறிபாட்டில் நீந்தி வந்த இயக்கம். உலக வரலாற்றிலேயே ஈடு, இணை இல்லாத மொழிப்போரை நடத்தி அதிலும் வெற்றிப் பெற்ற இயக்கம். தமிழ்மொழிக்காக தண்டவாளத்தில் தலை வைத்த இயக்கம் திராவிட இயக்கம். பல துரோகங்களை, அடக்குமுறைகளை வீழ்த்தியது. இப்படிப்பட்ட எங்களை குஜராத்தில் இருந்து மிரட்டி, அடிபணிய வைக்க நினைத்தால், நிச்சயம் அது உங்கள் கனவில் கூட நடக்காது. கடைசி உடன்பிறப்பு இருக்கும்வரையில் தமிழ்நாட்டை சங்கி கூட்டத்தால் தொட்டுக்கூட பார்க்கமுடியாது. வடமாநிலங்களில் நீங்கள் எளிதாக நுழைந்துவிடலாம். ஆனால் தமிழ்நாட்டில் நுழைந்துவிடலாம் என தப்பு கணக்கு போடூகிறீர்கள். ஏனெனில் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தனித்துவம் உள்ளது.

நிகழ்ச்சியில்
பெரியார் எனும் கொள்கை நெருப்பு தமிழ்நாட்டை சுற்றிநின்று காப்பாற்றி கொண்டிருக்கிறது. 23 வயதிலேயே மிசா கொடுமையை கண்ட கட்சித் தலைவர் இன்று நம்மை வழிநடத்த இங்கு உள்ளார். பாஜக மதம்பிடித்து ஓடும் யானை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அந்த யானையை அடக்கக்கூடிய அங்குசம் இங்கு இருக்கக்கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இது மோடிக்கும் தெரியும், அமித்ஷாவுக்கும் தெரியும். அதனால்தான் நேராக வந்தால் ஜெயிக்க முடியாது என, பழைய அடிமைகளையும், புது புதுசா புது அடிமைகளையும் அழைச்சிக்கிட்டு நம்மோடு மோத பார்க்கிறார்கள்.
இன்று சிபிஐ, அமலாக்கத்துறை, வருவாய் துறை, தேர்தல் ஆணையம் என எல்லோருடனும் கூட்டு வைத்து தமிழ்நாட்டில் நுழையப் பார்க்கிறது பாஜக. இப்படிப்பட்ட பாஜகவை நம்பிதான் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் களத்திற்கு வந்துள்ளார். ஆனால் நாம் தொண்டர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் நம்பி களத்திற்கு வந்துள்ளோம். நாம் தொடர்ந்து மக்களோடு உள்ளோம். அவர்களும் தொடர்ந்து நம்முடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். 2026-ல் எடப்பாடியை முதலமைச்சராக்குவோம் என அடிமைகள் தீர்மானம் போட்டுள்ளனர். காரில் பேட்டரி போனால் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாம். காரில் இன்ஜினே இல்லை என்றால் எவ்வளவு தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது. இன்ஜின் இல்லாத கார்தான் அதிமுக. எடப்பாடி எதை எதையோ காப்பாற்ற வேண்டும் எனக்கூறுகிறார். முதலில் அவர் அதிமுகவை பாஜகவிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
அதிமுகவிலிருந்து நிறைய பேர் வெளியேறுகிறார்கள். ஆனால் அவர், யார் வேண்டுமானாலும் போகலாம், யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நான்தான் நிரந்தர பொதுச்செயலாளர் என சொல்கிறார். அது அவருக்கும் மட்டும் தேவை இல்லை. நமக்கும் அதுதான் தேவை என்பதை நீங்கள் உணரவேண்டும். அடிமையாய் இருந்து சுகமாய் வாழ்வதைவிட, சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழவேண்டும். பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கும் சக்தி திமுகவிற்கும் மட்டும்தான் உண்டு என தமிழ்நாட்டு மக்கள் நம்புகின்றனர். வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கவேண்டும். யார் வேண்டுமானாலும் இடையில் வரட்டும், போகட்டும். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. வானவில்லை பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால் அது நிரந்தரம் கிடையாது. உதய சூரியன் மட்டும்தான் நிரந்தரம்." எனப் பேசினார்.
- குடும்பத்தில் ஒருவர் குடிக்கு அடிமையாகும் நிலையில் தான் தமிழ்நாடு உள்ளது.
- தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் உள்ளிட்டவை மாறி விடிவு காலம் பிறக்க 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
* போதை கலாச்சாரத்தால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள். இதை தடுக்க முதல்வர் முன்வரவில்லை.
* குடும்பத்தில் ஒருவர் குடிக்கு அடிமையாகும் நிலையில் தான் தமிழ்நாடு உள்ளது.
* தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்ற செய்தி வேதனைக்கு ஆளாக்குகிறது.
* பள்ளியின் அருகிலேயே போதைப்பொருள் விற்பனை அதிகரித்த நிலையில் போதை கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது.
* போதை கலாச்சாரம் தலைவிரித்தாடும் நிலையில் சாதிய எண்ணங்களால் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர்.
* தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் உள்ளிட்டவை மாறி விடிவு காலம் பிறக்க 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வேலைக்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது.
- ஊழல் 1,020 கோடி ரூபாய் வரை நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு 1,020 கோடி ரூபாய் வரை நகராட்சி துறையில் ஊழல் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை தமிழக தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.
அமலாக்கத்துறையின் அக்கடிதத்தில், கே.என்.நேரு அமைச்சராக இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கட்டட நிர்மாணம், கழிப்பறைகள் அமைத்தல், அவுட்சோர்சிங், NABARD (வேளாண்மை வங்கி மற்றும் கிராம வளர்ச்சி வங்கி) திட்டங்கள், தூய்மைப்பணியாளர்கள் பணிக்கான அவுட்சோர்சிங் ஒப்பந்தங்கள், தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புத் திட்டங்கள், நீர்/குளம் வேலைக்கான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் முன்பே யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு டெண்டர்களுக்கும் 7.5% முதல் 10% வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஊழல் 1,020 கோடி ரூபாய் வரை நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை வேலைக்கு பணம் பெற்றதாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின்படி அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை கடிதம் அனுப்பி உள்ளார்.
நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை அனுப்பி உள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி அவர் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிந்து செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
- ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் இந்த அரசு பணிமாற்றம் செய்தது.
- மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான நிதியை விடுவிக்காததால் விடுதி காப்பாளர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தத்தங்குடியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய மகேந்திரன் என்பவரை மணல்மேடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் இந்த அரசு பணிமாற்றம் செய்தது.
வயதான தாய், தந்தை மற்றும் கைக் குழந்தையுடன் உள்ள தனது குடும்பத்திற்கு, தனது நேரடி உதவி அவசியம் என்பதால், தன்னை மீண்டும் ஆசிரியர் பணிக்கு பணி மாறுதல் செய்து தருமாறு ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும், விடுதி மாணவர்களுக்கு உணவுப்படி கடந்த 4 மாதங்களாக வழங்காததால், தனது கைப்பணத்தையும், கடன் வாங்கியும் செலவு செய்ததாகவும், இதனால் தனது குடும்பத்தையும்
பராமரிக்க முடியாமல், மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளார்.
இவற்றையெல்லாம் குறிப்பிட்டு உடனடியாக தனக்கு பழைய பணிக்கே மாறுதல் வழங்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில் அவரது கடிதத்திற்கு எந்தவிதமான பதிலும் வராததாலும், பணக் கஷ்டத்தினாலும், குடும்பத்தைவிட்டு பிரிந்து இருந்ததினாலும் மன அழுத்தம் ஏற்பட்டு, மூன்று நாட்களுக்கு முன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா அரசின் ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு தொடரவில்லை.
மேலும், ஸ்டாலினின் திமுக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல் ஆதிதிராவிடர் நலத் துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது என்று, எனது பல
அறிக்கைகளிலும், பேட்டிகளிலும், சட்டமன்றத்திலும் எடுத்து வைத்துள்ளேன்.
எனினும், தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று வானளாவிய விளம்பரம்
செய்கிறதே தவிர, உண்மையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுப் படியைக்கூட பல மாதங்களாக முழுமையாக
வழங்காததால், ஆதிதிராவிட நல மாணவர் விடுதிக் காப்பாளர்களே சொந்தப் பணத்தை செலவு செய்து, மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.
எனது முந்தைய அறிக்கைகளில், சென்னையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் வெளியாட்கள் தங்குவதையும், தங்கியுள்ள மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத நிலையையும்; தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழக ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் 5.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், குடிநீர் வழங்காமல் காலம் தாழ்த்தியதையும்; புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் குறித்து, இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும்; ஒவ்வொரு வருடமும் மத்திய அரசிடமிருந்து ஆதிதிராவிடர் மக்களுக்கு வரும் மத்திய நிதியை
முழுமையாக செலவிடாமல், பெரும்பாலான நிதியை திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில், ஸ்டாலினின் திமுக அரசு ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக செயல்படுவதை எனது
முந்தைய அறிக்கைகளில் ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.
விடியா திமுக அரசின் ஆதிதிராவிட நலத்துறை தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கு உணவுப் படிகளை முழுமையாக வழங்காததால், விடுதிக் காப்பாளர்களே பல மாதங்களாக தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டு ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவு வழங்கி வருவதாகவும், இதன் காரணமாக, விடுதிப் காப்பாளர்கள் மிகந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசு, திமுக அரசு என்று எப்போதும் கூறிக்கொள்ளும் மு.க. ஸ்டாலினின் 55 மாதகால விடியா திமுக ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத் திட்டங்களைச் செய்வதாக விளம்பரம் மட்டும் வருகிறதே தவிர, எந்தவித புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
விடியா திமுக ஆட்சியில், ஆதிதிராவிட மக்களுக்கான நலத் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைவதில்லை. குறிப்பாக, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு உரிய காலதில் நிதியை விடுவிக்காத விடியா திமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனியாவது ஆதிதிராவிட மாணவர் விடுதிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்குமாறும், விடுதிக் காப்பாளர் மகேந்திரன் தற்கொலை செய்துகொள்ளக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமாறும், பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது.
- அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது. இந்த பட்டியல் தமிழகத்தில் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அ.தி.மு.க. தலைமையிடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது. அந்த தொகுதிகளில் 20 முதல் 40 சதவீதம் வரையில் பா.ஜ.க. கட்சிக்கு வாக்குகள் கிடைத்து உள்ளன.
அதனை மையமாக வைத்தே சென்னை முதல் குமரி வரை 50 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கட்சி அடையாளம் கண்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோளிங்கர், மத்திய சென்னையில் எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, வடசென்னையில் கொளத்தூர், தென்சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் முதன்மையானவையாக இடம் பெற்றுள்ளன.
கோவை பாராளுமன்ற தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டன்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், தர்மபுரி தொகுதியில் பாலக்கோடு, திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம், ஈரோட்டில் பவானி, கள்ளக்குறிச்சியில் சங்கராபுரம், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் குளச்சல், கன்னியாகுமரி, கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளும் இதில் அடங்கி உள்ளன.
கரூரில் குளித்தலை, கிருஷ்ணகிரியில் ஓசூர், தளி, மதுரையில் மதுரை தெற்கு, நாமக்கல்லில் ராசிபுரம், நீலகிரியில் குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி சட்டமன்ற தொகுதிகளும் பெரம்பலூர் தொகுதியில் பெரம்பலூர், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கிணத்துகடவு, தொண்டா முத்தூர், வால்பாறை, ராமநாதபுரம் தொகுதியில் பரமக்குடி, தென்காசி எம்.பி. தொகுதியில் தென்காசி, தேனி பாராளுமன்ற தொகுதியில் போடி, தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட ஒட்டபிடாரம், திருச்சி தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளும் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், வேலூரில் ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இது தவிர கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெற்று இருப்பதாகவும் அது தொடர்பான பட்டியலை தனியாகவும் பா.ஜ.க. கட்சி தயாரித்து வைத்துள்ளது.
மொத்தமாக அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. மீதம் உள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதற்கும் அந்த கட்சி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி 50 தொகுதிகளில் களம் இறங்கும் பா.ஜ.க. கட்சி நிச்சயம் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற அமித்ஷா வியூகம் வகுத்து இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
வருகிற 15-ந்தேதி முதல் அ.தி.மு.க.வினர் விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் அளிக்கலாம் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ள நிலையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் வெளியாகி இருப்பது அ.தி.மு.க.வை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
- அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதலமைச்சருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது.
- தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க.வின் அடிமைகளாக செயல்படுகிறது.
மதுரை:
மதுரையில் நடந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் ஊழல் நடைபெற்றுள்ளது, நகரமைப்பு பிரிவின் ஊழலுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி போராட்டம் நடத்த உள்ளோம். அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்க உள்ளோம். அனுமதி பெற்று குடியிருப்புகள் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் கட்டப்படுகிறது.
மதுரை மாநகராட்சி நிர்வாகம் மிக மோசமாக நடைபெறுகிறது. மக்களின் பிரச்சனைகளை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை, மாநகராட்சிக்கு மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் நியமிக்க வேண்டும். தி.மு.க. தங்கத்தை அள்ளி கொடுத்தாலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
தி.மு.க. அரசு நான்கே முக்கால் வருடத்தில் மதுரை மக்களுக்கு என்ன செய்தது?, அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. திறந்து வைக்கிறது. தி.மு.க. ஆட்சி வந்தவுடன் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 2 மாதங்களில் முடிவடையும் என சொன்னார்கள்.
ஆனால், கனிமொழி எம்.பி.யாக இருப்பதால் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்துடன் செயல்பட தொடங்கி உள்ளது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என யார் என்ன பேசினாலும் அடுத்து ஆளப்போவது அ.தி.மு.க. மட்டுமே, அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை என்றால் முதலமைச்சருக்கு நேரம் போகாது, தூக்கம் வராது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தி.மு.க.வின் அடிமைகளாக செயல்படுகிறது. ஆனால் அ.தி.மு.க.வை அடிமை கட்சி என விமர்சனம் செய்கிறது. ஒரு அடிமை தான் இன்னொரு வரை அடிமை என சொல்லுவார்கள். அதனால் தான் தி.மு.க. கூட்டணி கட்சிகள் எங்களை அடிமை என விமர்சனம் செய்கிறது. அரிதாரம் பூசியவனால் ஆட்சி நடத்த முடியுமா? என எம்.ஜி.ஆரை தி.மு.க. விமர்சனம் செய்தது.
ஆனால், தி.மு.க.வை 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல செய்தவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் மறைந்தும் தி.மு.க.விற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். எம்.ஜி.ஆரின் புகழை பாடாதோர் எவருமுண்டா?, முதலமைச்சர் கூட எம்.ஜி.ஆரை பெரியப்பா என கூறினார். முதலமைச்சரின் பெரியப்பாவை கேலி, கிண்டல் செய்யும் தி.மு.க.வினரை முதல்வர் கண்டிக்க வேண்டாமா? என்றார்.
- தமிழக அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவது அரசியல்.
- அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து அரசு கவலைப்படுவதில்லை.
ஈரோடு:
ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே வாசன் தலைமை தாங்கினார்.
பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டிசம்பர் 20-ம் தேதி காமராஜர் மக்கள் கட்சி த.மா.கா.வுடன் இணைகிறது. காமராஜர் மக்கள் கட்சியில் மரியாதைக்குரியவர்கள் உள்ளனர். அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தமிழருவி மணியன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பது என்ற முடிவை எடுத்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
20-ம் தேதி காலை திண்டலில் உள்ள லட்சுமி துரைசாமி திருமண மண்டபத்தில் இணைப்பு விழா நடைபெற உள்ளது. 3000 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறவுள்ளது.
த.மா.கா மாவட்ட மாநில மற்றும் கொங்கு மண்டல நிர்வாகிகள் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதனை குடும்ப விழாவாக தேர்தலில் த.மா.கா.வுக்கு பலத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக அமையும்.
திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. சிறுபான்மை மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது. நீதிமன்றத்தை தி.மு.க. அரசியல் களமாக்க நினைக்கிறது. தி.மு.க கூட்டணி கட்சிகள் பேசி வைத்து கொண்டு செய்கிறது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது.
தமிழக அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவது அரசியல்.
தேர்தலுக்கான அரசியல் ஆதாயத்திற்காக மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது வாக்கு வங்கி அரசியல்.
ஜி.ஆர். சாமிநாதன் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் நிறைவேற்றியது குறித்த கேள்விக்கு "சட்டத்திற்கு உட்பட்ட நாடு. தி.மு.க நீதிமன்றத்தை அரசியல் களமாக்க நினைக்கிறது. இது தவறான செய்கையை காட்டுகிறது.
தி.மு.க. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது. மக்களுக்கான திட்டங்களுக்கு தி.மு.க அரசு தடையாக உள்ளது.
அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து அரசு கவலைப்படுவதில்லை.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் எதிர்மறை வாக்குகளை தடுப்பதற்கான சூழ்ச்சி வாக்கு வங்கியை வாங்கிக்கொண்டு 5 ஆண்டுகள் மக்களின் பணத்தை சுரண்டுவது வழக்கமாகிவிட்டது. பெண்கள் விழித்துக் கொள்ளவேண்டும்.
தோல்வி பயத்தால் மக்களை ஏமாற்ற நினைக்கும் தமிழக அரசு மீது வாக்காளர் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அ.தி.மு.க தலைமையில் வலுவாக உள்ளது.
தேசிய ஜனநாயகக்கூட்டணி வெல்வதற்காக காலம் கனிந்து கொண்டிருக்கிறது.
கூட்டணி கட்சிகள் கூட்டுவதற்காக நேரம் காலம் உள்ளது. ஆளும்கடசியினர் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது.
நல்ல அறிவிப்புகள் வரும் எதிர்பார்க்கிறோம்.
கூட்டணியில் இருப்பதால் எங்களின் வெற்றி பிரகாசமாக உள்ளது. பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கைது செய்ததை கண்டிக்கிறது என்றார்.
பேட்டியின் போது பொதுச்செயலாளர் யுவராஜா, மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசிய நிலையில் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
- தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசிய நிலையில் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லிக்கு செல்லும் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. மேலிட தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அஞ்சலை தலை வெளியீட்டு விழாவிலும் நயினார் நாகேந்திரன் பங்கேற்கிறார்.
- 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
- "ஏனோ தானோ" என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு கர்நாடகா அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவது தொடர்கதையாக உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து வரும் கர்நாடக அரசு, இன்றைய தினம் அணையை கட்டுவது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பொம்மை முதல்வர் மு.க.ஸடாலின்-ன் தலைமையிலான விடியா திமுக அரசு தமிழகத்தின் சார்பில் வலிமையான வாதங்களை வழக்கறிஞர்கள் மூலம் எடுத்து வைக்காமல், "ஏனோ தானோ" என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுப்பதே வாடிக்கையாகி விட்டது. திமுக தலைமை தங்களுடைய சுயநலத்திற்காக, தங்களின் குடும்பத் தொழிலை பாதுகாக்க கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு லாலி பாடும் போக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திமுக-வின் இந்த துரோகச் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
இனியாவது தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் நினைப்பை கைவிட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக ஆட்சி இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இரண்டாம் கட்ட உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்.
- எஞ்சிய மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை தருவது மக்கள் மீதான அக்களையால் இல்லை தேர்தல் நாடகம்.
சட்டமன்ற தேர்தலை குறிவைத்தே எஞ்சிய மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை தரப்படுவதாக அதிமுக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக சார்பில் வௌியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம் என அடிக்கடி முழங்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!
எப்போது கொடுத்தீர்கள்.?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி 28 மாதம் கழித்துதான் உரிமைத்தொகை கொடுத்தீர்கள்.
இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு என அறிவித்துவிட்டு அதிலும் 13 லட்சம் பேரை தவிர்த்துவிட்டு 17 லட்சம் பேருக்கு மட்டும் விதிகளைத் தளர்த்தி உரிமைத்தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளீர்கள்.
இது இன்னும் எவ்வளவு மாதம் கொடுக்க முடியும்? வெறும் நான்கு மாதங்கள் மட்டும்தான், அப்படியென்றால் மீதமுள்ள 56 மாதங்களுக்கான உரிமைத்தொகை?
தற்போதும் விடியா திமுக அரசு குடும்பத்தலைவிகளின் கஷ்டத்தைப் பார்த்து கொடுக்கவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் விதியைத் தளர்த்தி ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.
அனைத்தும் தேர்தலை மனதில் வைத்து தான்,மக்கள் மீதுள்ள அக்கறையினால் அல்ல. உங்கள் நாடகம் மக்கள் அறியாமல் இல்லை. உங்களுக்கான முடிவுரையை மக்கள் எழுதாமல் இருக்கப் போவதும் இல்லை.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- எம்.எஸ்.யோக விக்னேஷ்வரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
- யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்டுப்பாட்டை மீறி அ.தி.மு.க.விற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ்.யோக விக்னேஷ்வரன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.வினோத்குமார் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாகவே ஈடுபட்டு வருகிறார்.
- ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களின் எதிர்காலம் என்ன? என்கிற கேள்வியும் உருவாகி இருக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு அ.தி.மு.க.வும் தயாராகி உள்ளது. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயலாற்றி வருகிறார்.
இதற்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க. மேலும் சில கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பதற்கு திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.
ஆனால் அ.தி.மு.க. தரப்பிலோ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என்பதில் மும்முரமாகவே ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய மந்திரி அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. டெல்லி சென்று திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இணைவது பற்றிய கேள்விக்கு விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புவதாக தெரிவித்திருந்தார். இது போன்ற பரபரப்பான சூழலில் தான் சென்னை வானகரத்தில் நேற்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. அது பற்றி யாரும் பேசவும் இல்லை.
அதே நேரத்தில பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் சிலர் வருகிற சட்டமன்றத் தேர்தலில் துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். தமிழகத்தில் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்க்க வேண்டும் என்பது பற்றிய முடிவை எடுப்பதற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பது போன்ற நிலை உருவாகி இருக்கிறது.
இவர்களில் டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனி கட்சி நடத்தி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் புதிதாக கட்சியை தொடங்காமலேயே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு என்பதையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்கிற தனி அமைப்பை அவர் நடத்தி வருகிறார். இது அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத அமைப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த உரிமை மீட்பு குழுவை உரிமை மீட்பு கழகம் என ஓபிஎஸ் மாற்றியுள்ளார்.
அ.தி.மு.க.வில் அவரை சேர்ப்பதற்கு முட்டுக்கட்டை போட்டு பொதுக்குழுவில் கதவடைக்கும் சூழலை ஏற்படுத்தி இருப்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களின் எதிர்காலம் என்ன? என்கிற கேள்வியும் உருவாகி இருக்கிறது. ஒருவேளை அ.தி.மு.க.வில் இணையவே முடியாத சூழல் ஏற்பட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை புதுக்கட்சியாக மாற்றலாமா? என்பது பற்றியும் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதுபோன்ற நிலை ஏற்பட்டால் புதுக்கட்சியை தொடங்கி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க ஓ. பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் திரை மறைவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிச்சயம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு நடைபெறும் எனவும் தெரிவித்தார். ஒருவேளை அது போன்ற சூழல் ஏற்படாவிட்டால் மட்டுமே அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றிய முடிவை பன்னீர்செல்வம் எடுப்பார் எனவும் அவர் கூறினார்.






