என் மலர்
வழிபாடு
- சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது. 9-ம் திருவிழாவான நேற்று காலையில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையொட்டி ரிஷப வாகனத்தில் தாணுமாலய சாமியும், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவரான பெருமாளும் வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தனர். அதன் பிறகு மருங்கூர் முருகன், கோட்டார் வலம்புரி விநாயகர், வேளிமலை குமாரசுவாமி எதிரெதிரே காட்சியளித்தனர்.
பிறகு அனைத்து தெய்வங்களுக்கும் ஒன்றுபோல் தீபாராதனை நடந்தது. அப்போது தாணுமாலய சாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்து தனது மக்களை பிரிய மனமில்லாமல் கோவில் சன்னிதானத்தில் முன்னும் பின்னுமாக அசைந்து அசைந்து செல்வதும், திரும்புவதுமாக பலமுறை நடந்தது. இந்த காட்சியை காண நள்ளிரவு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
பெண்கள் குலவையிட்டு, மங்கல ஒலி எழுப்பிடவும், மேளதாளம் முழங்கவும் வாகனங்களில் இருந்து தாய்-தந்தையர் கோவிலை சென்றடைந்தனர். இந்த காட்சியை காண வந்த பக்தர்கள் பலரும் இரவு கோவிலிலேயே தங்கி தொடர்ந்து இன்று அதிகாலை நடந்த ஆருத்ரா தரிசனத்தை கண்டுகளித்தனர்.
இன்று (27-ந்தேதி) மாலை 5 மணிக்கு நடராஜர் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இதைத்தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
- புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
- மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கை கோவிலானது முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்த கோவிலில் சிவபெருமான் மங்களநாதராகவும், அம்மன் மங்களநாயகியாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்கு நடராஜருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த சன்னதியில் ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது.
மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையை காப்பதற்காக மரகத நடராஜர் மீது ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு பூசப்பட்டு இருக்கும். ஆண்டில் ஒருநாள், அதுவும் ஈசனுக்கு உகந்த நாளான திருவாதிரைக்கு முதல்நாள் இந்த சந்தனக்காப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவது வழக்கம்.
இதன்படி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக காலை 7.45 மணி அளவில் நடராஜர் சன்னதி நடைதிறக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்தனர்.
பின்னர் மரகத நடராஜருக்கு சந்தனம், நெய், பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், நெல்லிபொடி, பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபூர்வ மரகத நடராஜரின் திருமேனியில் ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் மிகுந்தது என கருதப்படுவதால் இந்த சந்தனத்தை பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.
தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, நான்கு ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்து சென்றனர்.
இன்று (புதன்கிழமை) ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் அருணோதய காலத்தில் அபூர்வ மரகத நடராஜர் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்பட்டு இதைத்தொடர்ந்து நடராஜருக்கு தீபாராதனை காண்பிக்கப்படும்.- மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சுமந்து வந்தனர்.
- பக்தர்கள் `சாமியே சரணம் ஐயப்பா’ என பக்தி கோஷம் முழங்கினர்.
சபரிமலை:
மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிப்பது வழக்கம்.
இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த தங்க அங்கி கடந்த 23-ந்தேதி சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் நேற்று பம்பை கணபதி கோவிலை வந்தடைந்தது. அங்கிருந்து தங்க அங்கியை மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சுமந்து வந்தனர். தங்க அங்கி மாலை 5.15 மணிக்கு சரம்குத்தி வந்தடைந்தது.
அப்போது திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர்கள் சார்பில் மேளதாளம் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு சன்னிதானம் வந்தடைந்த தங்க அங்கியை திருவிதாங்கூர் தேவஸ்தான மந்திரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டு தந்திரி மற்றும் மேல்சாந்தியிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து தங்க அங்கி 18-ம் படி வழியாக கருவறைக்குள் எடுத்து செல்லப்பட்டு அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.
பின்னர் மாலை 6.40 மணியளவில் மண்டல பூஜையின் முன் நிகழ்வாக சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது சன்னிதானத்தில் கூடி இருந்த திரளான பக்தர்கள் `சாமியே சரணம் ஐயப்பா' என பக்தி கோஷம் முழங்கினர். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகளுக்கு பின்னர் இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.
சபரிமலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் காலை 9.45 மணி வரை நெய்யபிஷேகம் போன்றவை நடைபெறும்.
தொடர்ந்து காலை 10.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலான முகூர்த்த வேளையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை நிறைவு பெறுகிறது.
- செல்வ குடும்பத்தில் பிறந்தவளே எழுந்து வா!
- சிவந்த மேனியில் வெண்மையான திருநீற்றை பூசிய சிவபெருமானே!
திருப்பாவை
பாடல்
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
இளம் கன்றுகளுடைய பசுக்களிடம் இருந்து பால் கறக்கும் ஆயர் குலத்தினர், வலிய வரும் பகைவர்களை எதிர்த்து அவர்கள் வீரத்தை அழியும்படி செய்வர். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த பொற்கொடியைப் போன்ற பெண்ணே! மயில் போன்றவளே! புற்றில் வாழும் நாகத்தின் படம் போன்ற பீடம் உடையவளே! செல்வ குடும்பத்தில் பிறந்தவளே எழுந்து வா! நாங்கள் அனைவரும் உனது வீட்டு முற்றத்தில் நின்று கார்மேக வண்ணன் கண்ணனின் பெயர் சொல்லிப் பாடுகிறோம். ஆனால் நீ எழாமலும், பேசாமலும் உறங்கிக் கொண்டே இருக்கிறாய். அதன் பொருள் என்ன? எழுந்து வா! இறைவன் புகழ் பாடுவோம்.
திருவெம்பாவை
பாடல்
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம்
உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
விளக்கம்
நெருப்பை போன்ற சிவந்த மேனியில் வெண்மையான திருநீற்றை பூசிய சிவபெருமானே! சிறிய இடுப்பையும், மை தீட்டப்பட்ட பெரிய கண்களையும் கொண்ட பராசக்தியின் கணவனே! எல்லா செல்வங்களையும் உடையவனே நீ எங்களை ஆட்கொள்வது உனக்கு ஒரு விளையாட்டு! உன் விளையாட்டினால் அடியார்கள் என்ன அருளைப் பெறுவார்களோ, அவற்றையெல்லாம் நாங்களும் பெற்றோம். வண்டுகள் நிறைந்துள்ள குளத்தில் அவை ஒலி எழுப்பி பறந்து செல்லும்படி நீரில்மூழ்கி எழுந்து உன்னை வாழ்த்திப்பாடினோம்! உன்னை நாடிவந்தோம்! இனியும் நாங்கள் வருந்தாமல் இருக்க எங்களை கைவிடாமல் காத்தருள வேண்டும்!
- 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
- நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும்.
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் உயர்வானது. திருவாதிரை நட்சத்திரத்தை யொட்டி, நடராஜப் பெருமானுக்கு மிகச்சிறந்த விழா, 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு `திருவாதிரை திருவிழா' என்று பெயர். இத்திருவிழாவை ஒட்டி பல சிவாலயங்களில் உள்ள நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகாஅபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் காண பக்தர்கள் குவிவார்கள்.
ஆருத்ரா தரிசனத்தை தரிசிப்பவர்களுக்கு எல்லா பாவங்களும் நீங்கி பெரும் புண்ணியம் சேரும். வியாக்கிரபாத முனிவரும் பதஞ்சலி முனிவரும் சிவபெருமானின் திருநடனத்தைக் காண விரும்பி அவரை துதிக்க, அவர் தன்னுடைய திருநடனத்தை, இந்த ஆதிரை நாளில் நிகழ்த்திக் காட்டியதாக புராண வரலாறு. நடராஜ மூர்த்திக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அதில் முக்கியமான அபிஷேகம் ஆருத்ரா அபிஷேகம் ஆகும். உத்தரகோசமங்கை எனும் தலத்தில் மகா அபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இதுதவிர மற்ற திருநடனம் ஆடிய பஞ்ச சபைகளிலும் இந்த சிறப்பு உண்டு.
திருஆலங்காடு, மதுரை, நெல்லை, குற்றாலம் முதலிய இடங்களில் உள்ள சிவாலயங்களிலும் அபிஷேகப் பெருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவின்போது திருவாதிரைக் களி படைப்பார்கள். பெருமானுக்கு விசேஷமான திருவாதிரைக் களியும், பல்வேறு காய்கறிகளை போட்டு கூட்டினை செய்வார்கள். களி என்பது ஆனந்தம் என்ற பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மாவானது ஆனந்தமாக இருக்கும்.
அந்த களியைத் தரும் பிரசாதம் திருவாதிரை நாளில் நிவேதனம் செய்யப்படும் திருவாதிரைக் களி ஆகும். மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து, சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல மாங்கல்ய பலம் பெருகும். பாவங்கள் நீங்கும். அறிவும் ஆற்றலும் கூடும்.
- ஸ்ரீ ஆருத்ரா தரிசனம், நடராஜர் திருநடனம் புரிந்த கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
- சிதம்பரம் ஆனந்தநடராஜ மூர்த்தி அம்பாள் சிவகாமசுந்தரி ரதோற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-11 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை (முழுவதும்)
நட்சத்திரம்: திருவாதிரை நள்ளிரவு 12 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று ஸ்ரீ ஆருத்ரா தரிசனம். நடராஜர் அபிஷேகம். நடராஜர் திருநடனம் புரிந்த சிதம்பரம் கனகசபை, மதுரை வெள்ளி சபை, திருநெல்வேலி தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபை, திருஆலங்காடு ரத்தின சபை ஆகிய 5 சபைகளில் அபிஷேகம், அலங்காரம். திருஉத்திரகோசமங்கை கூத்தபிரான், மரகத நடராஜர் ஆருத்ரா தரிசனம். சடைய நாயனார் குருபூஜை. ஸ்ரீவில்லிபுததூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் திருவாய்மொழி உற்சவ சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-போட்டி
மிதுனம்-நற்செயல்
கடகம்-ஆசை
சிம்மம்-பெருமை
கன்னி-நன்மை
துலாம்- இன்பம்
விருச்சிகம்-பரிசு
தனுசு- பரிவு
மகரம்-சிறப்பு
கும்பம்-சாந்தம்
மீனம்-களிப்பு
- ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
- பொது மற்றும் கட்டண தரிசனம் ரத்து
வேங்கிக்கால்:
அதிகாலை முதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் என்பதால், கடந்த 3 நாட்களாக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
அதன்படி, அதிகாலை கோவிலில் நடை திறக்கும்போதே, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து மாட வீதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அதேபோல், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்ததால் திருவண்ணாமலை நகருக்குள் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவிலுக்குள் பொது மற்றும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை.
- நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருவனந்தபுரம்:
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட்டு, பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
அதன்பேரில் தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. ஆனால் பக்தர்கள் வருகை குறையவில்லை. இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னிதானத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
பல மணிநேரம் காத்திருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. நேற்றுமுன்தினம் மொத்தம் ஒரு லட்சத்து 969 பக்தர்கள் படினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருந்தது.
இந்தநிலையில் சபரிமலையில் மண்டல பூஜை நாளை (27-ந்தேதி) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, இன்று மதியம் பம்பைக்கு வந்து சேரும். பின்பு அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை சென்றடைகிறது.
அதன் பிறகு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும். ஐயப்பன் நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு இன்று 64 ஆயிரமாக குறைக்கப் பட்டிருந்தது. மண்டல பூஜை நடைபெறக்கூடிய நாளைய (27-ந்தேதி) 70 ஆயிரம் பேருக்கே முன்பதிவு செய்யப்படும்.
மண்டல பூஜை விழா முடிந்து, நாளை இரவு 11 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
- இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
- அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் ரெட்டி தலைமையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று நடந்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று தங்க கருட வாகன சேவை நடந்து வருகிறது.
தற்போது ஆதித்தியாயன உற்சவம் நடைபெறுவதால் இன்று நடைபெற இருந்த கருட சேவை ரத்து செய்யப்பட்டது. இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் ரெட்டி தலைமையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் அதிகாரிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ரெயில் நிலையம் அருகே உள்ள மண்டபத்தை எடுத்துவிட்டு புதியதாக ரூ.600 கோடியில் கட்டிடங்கள் கட்டுவது வளர்ச்சி பணிகள் மற்றும் தேவஸ்தானத்திற்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- திருவாதிரை மற்றும் ஆருத்ரா விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
- நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும்.
ராமநாதபுரம்:
கடவுளுக்கு உகந்த மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை மற்றும் ஆருத்ரா விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக நடராஜரை இந்த நாளில் வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த மங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மரகத நடராஜர் சன்னதி தனியாக அமைந்திருக்கிறது. அங்குள்ள பச்சை மரகதக்கல்லால் ஆன 6 அடி உயரம் கொண்ட மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும்.
நடராஜப்பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு. மற்ற கோவில்களில் நடராஜரின் கற்சிலைகள், பஞ்சலோக சிலைகளையே காணமுடியும். இங்கு பச்சை மரகதக்கல்லால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை இருக்கிறது.
மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்ற முதுமொழிக்கு ஏற்ப மரகத நடராஜர் சிலை ஆண்டின் அனைத்து நாட்களிலும் சந்தனம் பூசி பாதுகாக்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனத்திற்காக மட்டும் சந்தனக்காப்பு களையப்பட்டு மரகத நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று ஒரு நாள் மட்டும் அந்த சன்னதி விழாக்கோலம் பூண்டிருக்கும்.
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் கடந்த 18-ந்தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அப்போது முதல் தினமும் சுவாமி-அம்பாள், நடராஜரும் மக்களுக்கு விஷேசமாய் அருள்பாலித்து வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் களைதல் வைபவம் இன்று நடை பெற்றது. இதற்காக மரகத நடராஜர் சன்னதி இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது நடராஜர் மீது பூசப்பட்ட சந்தனங்கள களையப்பட்டு ஜொலிக்கும் மரகதக்கல்லில் சுய உருவமாக நடராஜர் காட்சியளித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பெருக்குடன் நடராஜரை வழிபட்டனர்.
பின்னர் பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப்பொடி, தேன், இள நீர் உள்பட 32 வகையான பொருட்களால் நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் நடராஜரை வரிசையாக சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று நள்ளிரவில் மீண்டும் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும்.
நாளை அதிகாலையில் சூரிய உதயமாகும் நேரத்தில் நடராஜருக்கு மீண்டும் சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் பூஜை நடைபெறும். நாளை மாலை வரை மட்டுமே மரகத நடராஜர் சன்னதியில் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு நடராஜர் சன்னதி மூடப்படுகிறது.
இந்த கோவிலின் சிறப்பே இங்கு அருள்பாலிக்கும் மரகதக்கல் நடராஜர் மீது பூசிய சந்தனத்தை சூடான நீரில் கரைத்து அருந்தினால் எந்த நோயாக இருந்தாலும் குணமாகும் என்பது ஐதீகம். மருத்துவ குணம் நிறைந்த இந்த சந்தனத்தை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
இந்த விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (26-ந்தேதி) உள்ளூர் விடுமுறை அறி வித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பல்வேறு ஊர்களில் இருந்து உத்தரகோச மங்கைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
ஒரே ஆண்டில் நடைபெறும் இரண்டாவது ஆருத்ரா தரிசன விழா இதுவாகும். அதாவது இந்த ஆண்டின் (2023) ஜனவரி மாதம் 5-ந்தேதி ஒரு ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் கீழக்கரை டி.எஸ்.பி. சுதிர்லால் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- உங்களைப் பாதுகாக்கும் இயேசு உங்களோடே இருக்கிறார்.
- இயேசு உங்களுக்கு பாதுகாப்பைத் தருகிறார்.
அன்பானவர்களே, `உங்களைப் பாதுகாக்கும் இயேசு உங்களோடே இருக்கிறார்' என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். நீங்கள் இருக்கும் இடத்தில், உங்களது பயணங்களில், எனக்கென்று யாருமே இல்லை என்று நினைக்கும் நேரத்திலும் இயேசு உங்களுக்கு பாதுகாப்பைத்தருகிறார். உங்கள் வாழ்க்கையில் உங்களைக் குறித்து தேவன் வைத்துள்ள திட்டங்கள் நிறைவேறும் வரை இயேசு உங்களோடு இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்.
பவுல் என்பவரைப் பற்றி பைபிளில் கூறியுள்ளதைப் பார்க்கலாம். இவர் ஆரம்பத்தில் இயேசுவைப் பின்பற்று பவர்களை அடித்து துன்புறுத்தி கொலை செய்வதில் இன்பம் கண்டு வந்தார். ஒருநாள் இயேசு இவருக்கு தரிசனமாகி, `என்னை ஏன் துன்புறுத்துகிறாய்? நீ துன்பப்படுத்துகிற இயேசு நான் தான்' என்று கூறினார்.
இயேசுவின் அன்பினால் கவரப்பட்ட பவுல், எருசலேம் மற்றும் நகரங்கள் தோறும் சென்று இயேசுவின் மகிமை பற்றி கூறினார். இவர் மூலம் ஏராளமானவர்கள் இயேசுவை நம்பினார்கள். இதனால் கோபமடைந்தவர்கள் இவர் மீது பொய் குற்றம் சாட்டியதால், இவர் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.
அப்போது ஒரு நாள் இரவு கர்த்தர், பவுலின் அருகே நின்று, `பவுலே, திடன்கொள். நீ என்னைக் குறித்து எருசலேமிலே சாட்சி கொடுத்ததுபோல ரோமாபுரியிலும் சாட்சி கொடுக்க வேண்டும்" என்றார்.
இந்த நிலையில், சிறையில் இருந்த பவுல் மற்றும் பிற கைதிகளிடம் விசாரணை செய்து தீர்ப்பு வழங்க கப்பல் மூலம் ரோம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது கப்பல் புயல் மழையில் சிக்கிக்கொண்டது. பவுலின் எச்சரிக்கையை மீறிச்சென்ற கப்பல் பெருமழையில் சிக்கித்தடுமாறியது.
அப்போது பவுல் அவர்கள் நடுவிலே நின்று, `மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராமல் இருக்கத்தான் இப்போதைக்கு கப்பல் பிரயாணம் செய்ய வேண்டாம் என்று கூறினேன். ஆனாலும், மாலுமிகளின் பேச்சைக்கேட்டு வந்து விட்டோம். இனி பயப்படாமல் திடமனதாக இருங்கள் என்று உங்களுக்குத் தைரியம் சொல்லுகிறேன்.
நான் நம்புகிற இயேசு என்னைப் பார்த்து, 'பவுலே நீ பயப்படாதே, நீ ரோம சக்கரவர்த்திக்கு முன்பாக நின்று என்னைப்பற்றி சாட்சி கூறவேண்டும்' என்று கூறியுள்ளார். ஆகவே என்னுடன் உள்ள உங்கள் அனைவருக்கும் தேவன் என் நிமித்தம் தயவு பண்ணியுள்ளார். ஆகையால் சகல மனுஷரே, திடமனதாயிருங்கள், பயப்படாதீர்கள். ஆனாலும் இப்போது நாம் ஒரு தீவிலே விழ வேண்டியதாயிருக்கும்' என்றார்.
கப்பலில் இருந்த அனைவரும் கலக்கத்துடனே இருந்தார்கள். பொழுது விடிந்ததும் எல்லாரும் உணவு உண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி; "நீங்கள் நெடுநாட்களாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாய்இருக்கிறீர்கள். ஆகையால் உணவு உண்ணும்படி உங்களை வேண்டிக் கொள்கிறேன். நீங்கள் நீந்தித் தப்பிப் பிழைப்பதற்கு அது உங்களுக்கு உதவியாயிருக்கும்" என்றார்.
இப்படி அனைவரையும் ஆறுதல்படுத்தி, அப்பத்தை எடுத்து, எல்லோருக்கு முன்பாகவும் தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பங்கிட்டு வழங்கினார். அனைவரும் சாப்பிட்டார்கள். பொழுது விடிந்தபின்பு, இன்ன இடமென்று அறியாமல் சமமான கரையுள்ள ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தென்பட்டது. கரை நெருங்கியபோது கப்பல் உடைந்ததால் அனை வரும் நீந்தி பத்திரமாக கரைசேர்ந்தார்கள்.
கரையிலே குளிருக்காக நெருப்பு மூட்டினார்கள். பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடும் போது, ஒரு விரியன்பாம்பு அவருடைய கையைக் கடித்துவிட்டது. பவுல் அந்தப் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தார். தீவு மக்கள் இதைக்கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
அந்தத் தீவின் தலைவனின் தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தான். பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம் பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினார். இது நடந்தபின்பு, தீவில் இருந்த மற்ற வியாதிக்காரர்களும் வந்து, குணமாக்கப்பட்டார்கள். இதையடுத்து தீவு மக்களின் உதவியுடன் ரோம் நகருக்கு செல்லும் கப்பலைக் கண்டு, அதில் ஏறி ரோமாபுரிக்குச் சென்றடைந்தார்கள்.
பிரியமானவர்களே, இங்கு கப்பல் பயணத்தில் புயல் காற்று, அடைமழை, உயிருக்கு ஆபத்து, கொல்ல நினைக்கும் சதித்திட்டங்கள், விரியன் பாம்பினால் வந்த ஆபத்து, இவை எல்லாவற்றையும் தாண்டி பவுல் ரோமாபுரிக்கு சென்று ரோம சக்கரவர்த்திக்கு முன்பாக நின்றார்.
அதுபோலவே அன்பானவர்களே! நம்மை குறித்து தேவன் முன் குறித்த காரியங்கள் நிறைவேறும் வரை கர்த்தர் சமூகம் உங்களுக்கு முன்பாக சென்று கொண்டே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆகவே சூழ்நிலைகள் எதிராக இருந்தாலும் சரி, சூழ்ச்சிகள். பொறாமைகள், எரிச்சல்கள், கோபங்கள், மந்திர-தந்திரங்கள் என எது நமக்கு எதிராக இருந்தாலும் சரி, கர்த்தர் நமக்கு கூறியவைகளை எதுவும் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் வாழ்வில் எல்லாம் ஜெயமாக மாறும், நாம் நம்பும் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். நிச்சயமாகவே உங்கள் காரியங்கள் ஜெயமாக மாறும், ஆமேன்.
- தர்மங்கள் செய்வது குறித்து இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துகிறது.
- `ஜகாத்’ என்பதன் மூலம் கட்டாயமாக்கி உள்ளது.
தான தர்மங்கள் செய்வது குறித்து இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துகிறது. மேலும் ஒருவர் தன்னிடம் உள்ள செல்வத்தில் இருந்து தானம் செய்வதை `ஜகாத்' என்பதன் மூலம் கட்டாயமாக்கி உள்ளது. ஒவ்வொரு இஸ்லாமியரும் தனது வருமானம் மற்றும் சொத்துக்களை கணக்கிட்டு அதற்கு ஏற்ப பணமாகவோ, பொருளாகவோ, தானியமாகவோ ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது.
தர்மம் செய்வதன் அவசியம் குறித்து திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் வலியுறுத்திக் கூறுகிறது. பல்வேறு நபிமொழிகளும் தர்மத்தின் பலன்களை பட்டியல் இடுகின்றது. `தர்மம் செய்வது ஒரு மனிதனின் பாவத்தை அழித்து விடுகிறது' என்பது நபி மொழியாகும். இது போல, 'பேரிச்சம் பழத்தின் ஒரு பகுதியையாவது தர்மம் செய்து நரகத்தை விட்டு உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்' என்று தர்மத்தின் அவசியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். இதுபற்றி நபிகள் நாயகம் அவர்கள் கூறியதாவது:-
`தர்மம் பாவங்களை அழித்துவிடுகிறது, தண்ணீர் நெருப்பை அழிப்பது போல'. (அறிவிப்பாளர்: இப்னு மாஜா, நூல்: அஹ்மது, திர்மிதி) 'ஒரு பேரீத்தம் பழத்தின் ஒரு பகுதியை தர்மம் செய்தாயினும் நரகத்தைவிட்டு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், நல்ல வார்த்தைகளை பேசுவதின் மூலமாவது நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'. (நூல்: புகாரி)
தர்மம் கொடுப்பது வெளிப்படையாக இருக்க வேண்டுமா?, ரகசியமாக இருக்க வேண்டுமா? என்பது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு விளக்கி உள்ளது:
"தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே. ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்; எனினும் அவற்றை மறைத்து ஏழை-எளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 2:271).
இந்த நபிமொழியும் தானம் எவ்வாறு செய்வது நல்லது என்பதை இவ்வாறு கூறுகின்றது: ``இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்த (மறுமை) நாளில், அல்லாஹ் தன் நிழலில் ஏழு நபர்களுக்கு இடம் அளிப்பான். அவர்களில் ஒருவர் தன் வலக்கை செய்யும் தர்மத்தை தன் இடக்கை அறியாதவாறு ரகசியமாக தர்மம் செய்தவர்'' என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
மேலும் தர்மம் செய்வது என்பது நமக்கு தேவையற்ற, பழைய பொருட்களை கொடுப்பது அல்ல. நாம் நேசிக்கும் பொருட்களில் இருந்து கொடுப்பது தான் தர்மங்களில் சிறந்தது ஆகும். இது குறித்த நிகழ்வு வருமாறு:-
நபித்தோழர்களில் ஒருவரான அபூ தல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்கு பேரீச்ச மரத்தோட்டங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
'நீங்கள் நேசிக்கும் பொருட்களில் இருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்' என்ற (திருக்குர்ஆன் 3:92)
இறைவசனம் அருளப்பட்டதும், அபூ தல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, '`இறைத்தூதர் அவர்களே, 'நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்' என அல்லாஹ் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அதை அல்லாஹ்விற்காக தர்மம் செய்ய விரும்புகிறேன்'' எனக்கூறினார்.
நபிகள் நாயகம் அவர்கள், இதை அவரது உறவினர்களுக்கு கொடுக்குமாறு தெரிவித்தார். அபூ தல்ஹா (ரலி) இதை ஏற்றுக்கொண்டு தன் தோட்டத்தை தம் நெருங்கிய உறவினருக்கும், தம் தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.
இந்த தகவல்களை புகாரி நூலில் நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார். தர்மம் குறித்த மற்றொரு நபி மொழி வருமாறு:
`தர்மத்தில் சிறந்தது எது?' என மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினர். `குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது. நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள் (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), (நூல்கள்: அபூ தாவூத், அஹ்மத்).
``தர்மம் செய்வதால் செல்வத்தில் எதையும் குறைத்துவிடாது. அடியான் மன்னிப்புக் கோருவதால் அல்லாஹ் அவனுடைய மதிப்பை மேலும் அதிகப்படுத்தவே செய்கிறான். அல்லாஹ்வுக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொண்ட எந்த மனிதனையும் அல்லாஹ் உயர்த்தாமல் இருக்க மாட்டான்'' என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்). மனமகிழ்வுடன் தர்மம் செய்வோம், நாம் விரும்பிய பொருட்களில் இருந்து கொடுப்போம், இறையருள் பெறுவோம்.






