search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "zakat"

    • தொழுகையையும் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள்.
    • ஜகாத்தை நிறைவேற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு.

    இஸ்லாம் ஐந்து தூண்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ். `ஜகாத்' என்ற வார்த்தைக்கு `வளர்ச்சி அடைதல்', `தூய்மைப் படுத்துதல்' போன்ற அர்த்தங்கள் உண்டு. இது இஸ்லாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும்.

    ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது. தொழுகையையும் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள். (திருக்குர்ஆன் 2:110)

    ஜகாத் கடமை?

    தங்கம், வெள்ளி, வியாபார சரக்குகள், கால்நடைகள் (ஆடு, மாடு, ஒட்டகம்) பூமியில் விளையும் தானியங்கள், பழங்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றில் ஜகாத் கடமையாகும்.

    தங்கம்-வெள்ளி

    நிஸாப் என்ற உச்சவரம்பு அளவு தங்கம், வெள்ளி யாரிடம் உள்ளதோ அவர் மீது ஜகாத் கடமையாகும். தங்கத்தில் நிஸாப் அளவு 87.48 கிராம், வெள்ளியின் நிஸாப் அளவு 612.36 கிராம். இந்த அளவு தங்கம், வெள்ளி ஒருவரிடம் இருந்தால் அவர் அதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

    ரொக்கப் பணமாக ஒருவர் ஜகாத் கொடுக்க விரும்பினால் எந்த நாளில் ஓராண்டு பூர்த்தியாகின்றதோ அந்த நாளில் ஒரு கிராம் தங்கம் அல்லது வெள்ளியின் விலை மதிப்பைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் மதிப்புக்கு நிகரான பணத்தை ஜகாத் கொடுக்க வேண்டும்.

    விளைபொருட்கள்

    சேமிக்கப்படக் கூடிய, நிறுக்கப்படக் கூடிய பேரீத்தம் பழம், திராட்சை போன்ற கனி வகைகளிலும் கோதுமை, அரிசி போன்ற தானியங்களிலும் ஜகாத் கடமையாகும். எனினும் பழங்களிலும், காய்கறிகளிலும் ஜகாத் கடமை இல்லை. விளைபொருட்கள் நிஸாப் எனும் உச்சவரம்பான 675 கிலோ அளவை அடைந்து விட்டால் ஜகாத் கட்டாயமாகும். கோதுமைக்குரிய நிஸாப் அளவு 552 கிலோவாகும்.

    கால்நடைகள்

    கால்நடைகள் என்றால் ஒட்டகம், மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, ஆகியவையாகும். இவற்றில் கீழ் காணும் நிபந்தனைகளுடன் ஜகாத் கடமையாகும். நிஸாப் எனும் உச்சவரம்பை எட்ட வேண்டும். ஒட்டகத்தின் நிஸாப் ஐந்து, செம்மறி ஆடு, வெள்ளாடு இவற்றின் நிஸாப் 40, மாட்டின் நிஸாப் 30. இதற்கு குறைவானதில் ஜகாத் கிடையாது.

    ஜகாத் கடமையாகுவதற்கு சில தகுதிகள்

    இறை விசுவாசியாகவும், சுதந்திரமானவராகவும், புத்தி சுவாதீனம் உள்ளவராகவும், பருவ வயதை அடைந்தவராகவும் இருக்க வேண்டும். 87 கிராம் தங்கம் அல்லது 612 கிராம் வெள்ளி இருக்க வேண்டும். பொருளின் மீது முழு அதிகாரம் படைத்திருக்க வேண்டும், இத்தகைய பொருளாதாரம் குறைவில்லாமல் ஒரு வருடம் முழுவதும் பரிபூரணமாக சேமிப்பில் இருக்க வேண்டும்.

    இத்தகைய பண்புகளும் ஒருவரிடம் பரிபூரணமாக அமைந்து விட்டால், அவர் ஆண்டுக்கு ஒருமுறை ரமலான் மாதமோ, அல்லது வேறு மாதங்களிலோ கடமையான ஜகாத்தை நூற்றுக்கு இரண்டரை சதவீதம் என்ற அளவில் இறைவன் சுட்டிக்காட்டும் எட்டு வகையினருக்கு வழங்கிட வேண்டும்.

    ஜகாத் பெற தகுதியானவர்கள்

    இறைவன் சுட்டிக்காட்டும் அந்த எட்டு வகையினர் வருமாறு:

    1) வறியவர்கள்

    2) ஏழைகள்

    3) நிதியை வசூலிக்கும் ஊழியர்கள்

    4) எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின் பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அத்தகைய (சகோதர சமுதாயத்த)வர்கள்

    5) அடிமைகள் விடுதலை செய்வதற்கு

    6) கடனாளிகள்

    7) இறை வனின் பாதையில் (அறப்போராட்டத்தில்) உள்ளவர்கள்

    8) வழிப்போக்கர்கள்

    ஆகியோருக்கு உரியவை. இது இறைவன் விதித்த கடமையாகும். இறைவன் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 9:60)

    எச்சரிக்கை

    கடமையான ஜகாத்தை நிறைவேற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என இஸ்லாம் எச்சரிக்கிறது. `இறைவன் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து, அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லை என்றால், மறுமை நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனது கழுத்தில் சுற்றிக்கொண்டு, தனது இரு விஷப்பற்களால் அவனது தாடையைக் கொத்திக்கொண்டே `நான் தான் உனது செல்வம்; நான் தான் உன் புதையல்' என்று கூறும் என்று நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிவிட்டு திருக்குர்ஆனிலுள்ள (3:180) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்". (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி), புகாரி)

    மேலும் சகோதர சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கும் ஜகாத் நிதியை பயன்படுத்தலாம் என்று சிபாரிசு செய்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இவ்வாறு கொடுப்பதினால் அங்கே சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த வாய்ப்பை ஜகாத்தின் மூலம் நனவாக்கும்படி இஸ்லாம் கண்ட கனவு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

    பொருளாதாரத்திலும் மனிதனிடம் ஏற்றத்தாழ்வு இருந்து விடக்கூடாது. பொருளாதாரம் செல்வந்தர்களிடம் மட்டுமே சுற்றிவராமல், ஏழைகளிடமும் செல்வச் சுழற்சி யும், மறு மலர்ச்சியும் ஏற்பட `ஜகாத்' எனும் ஏழைவரியான நலத்திட்டங்களையும், 'ஸதகா' எனும் தர்ம நிதியையும் இஸ்லாம் செயல்படுத்தி, செல்வத்தை பரவலாக்கியது.

    ஜாகாத் என்னும் கடமையை நிறைவேற்றுவோம், மனித நேயம் காப்போம்.

    • தர்மங்கள் செய்வது குறித்து இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துகிறது.
    • `ஜகாத்’ என்பதன் மூலம் கட்டாயமாக்கி உள்ளது.

    தான தர்மங்கள் செய்வது குறித்து இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துகிறது. மேலும் ஒருவர் தன்னிடம் உள்ள செல்வத்தில் இருந்து தானம் செய்வதை `ஜகாத்' என்பதன் மூலம் கட்டாயமாக்கி உள்ளது. ஒவ்வொரு இஸ்லாமியரும் தனது வருமானம் மற்றும் சொத்துக்களை கணக்கிட்டு அதற்கு ஏற்ப பணமாகவோ, பொருளாகவோ, தானியமாகவோ ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது.

    தர்மம் செய்வதன் அவசியம் குறித்து திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் வலியுறுத்திக் கூறுகிறது. பல்வேறு நபிமொழிகளும் தர்மத்தின் பலன்களை பட்டியல் இடுகின்றது. `தர்மம் செய்வது ஒரு மனிதனின் பாவத்தை அழித்து விடுகிறது' என்பது நபி மொழியாகும். இது போல, 'பேரிச்சம் பழத்தின் ஒரு பகுதியையாவது தர்மம் செய்து நரகத்தை விட்டு உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்' என்று தர்மத்தின் அவசியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். இதுபற்றி நபிகள் நாயகம் அவர்கள் கூறியதாவது:-

    `தர்மம் பாவங்களை அழித்துவிடுகிறது, தண்ணீர் நெருப்பை அழிப்பது போல'. (அறிவிப்பாளர்: இப்னு மாஜா, நூல்: அஹ்மது, திர்மிதி) 'ஒரு பேரீத்தம் பழத்தின் ஒரு பகுதியை தர்மம் செய்தாயினும் நரகத்தைவிட்டு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், நல்ல வார்த்தைகளை பேசுவதின் மூலமாவது நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'. (நூல்: புகாரி)

    தர்மம் கொடுப்பது வெளிப்படையாக இருக்க வேண்டுமா?, ரகசியமாக இருக்க வேண்டுமா? என்பது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு விளக்கி உள்ளது:

    "தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே. ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்; எனினும் அவற்றை மறைத்து ஏழை-எளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 2:271).

    இந்த நபிமொழியும் தானம் எவ்வாறு செய்வது நல்லது என்பதை இவ்வாறு கூறுகின்றது: ``இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்த (மறுமை) நாளில், அல்லாஹ் தன் நிழலில் ஏழு நபர்களுக்கு இடம் அளிப்பான். அவர்களில் ஒருவர் தன் வலக்கை செய்யும் தர்மத்தை தன் இடக்கை அறியாதவாறு ரகசியமாக தர்மம் செய்தவர்'' என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

    மேலும் தர்மம் செய்வது என்பது நமக்கு தேவையற்ற, பழைய பொருட்களை கொடுப்பது அல்ல. நாம் நேசிக்கும் பொருட்களில் இருந்து கொடுப்பது தான் தர்மங்களில் சிறந்தது ஆகும். இது குறித்த நிகழ்வு வருமாறு:-

    நபித்தோழர்களில் ஒருவரான அபூ தல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்கு பேரீச்ச மரத்தோட்டங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.

    'நீங்கள் நேசிக்கும் பொருட்களில் இருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்' என்ற (திருக்குர்ஆன் 3:92)

    இறைவசனம் அருளப்பட்டதும், அபூ தல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, '`இறைத்தூதர் அவர்களே, 'நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்' என அல்லாஹ் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அதை அல்லாஹ்விற்காக தர்மம் செய்ய விரும்புகிறேன்'' எனக்கூறினார்.

    நபிகள் நாயகம் அவர்கள், இதை அவரது உறவினர்களுக்கு கொடுக்குமாறு தெரிவித்தார். அபூ தல்ஹா (ரலி) இதை ஏற்றுக்கொண்டு தன் தோட்டத்தை தம் நெருங்கிய உறவினருக்கும், தம் தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.

    இந்த தகவல்களை புகாரி நூலில் நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார். தர்மம் குறித்த மற்றொரு நபி மொழி வருமாறு:

    `தர்மத்தில் சிறந்தது எது?' என மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினர். `குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது. நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள் (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), (நூல்கள்: அபூ தாவூத், அஹ்மத்).

    ``தர்மம் செய்வதால் செல்வத்தில் எதையும் குறைத்துவிடாது. அடியான் மன்னிப்புக் கோருவதால் அல்லாஹ் அவனுடைய மதிப்பை மேலும் அதிகப்படுத்தவே செய்கிறான். அல்லாஹ்வுக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொண்ட எந்த மனிதனையும் அல்லாஹ் உயர்த்தாமல் இருக்க மாட்டான்'' என்று இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்). மனமகிழ்வுடன் தர்மம் செய்வோம், நாம் விரும்பிய பொருட்களில் இருந்து கொடுப்போம், இறையருள் பெறுவோம்.

    ×