என் மலர்
உலகம்
- வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் நைரோபியில் உள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் சேதமடைந்தது.
- வெள்ளப்பெருக்கால் அங்கு சுமார் 1½ லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
நைரோபி:
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல நகரங்கள் அங்கு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன. எனவே லட்சக்கணக்கான மக்கள் அங்கு இருளில் மூழ்கி தவிக்கின்றனர்.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் நைரோபியில் உள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் சேதமடைந்தது. இதனால் அந்த அணையின் தடுப்புச்சுவர் இடிந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு பல வீடுகள் சேதமடைந்தன. மேலும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி நடைபெற்றது.
எனினும் கட்டிட இடிபாடுகள் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி அங்கு இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 170-ஐ தாண்டியது. மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு சுமார் 1½ லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். எனினும் இந்த கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.
- பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது.
- துறைமுகம் மற்றும் பூங்காக்களை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
துபாய்:
ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை கொட்டியது. இதனால் துபாய், அபுதாபி, சார்ஜா போன்ற நகரங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் துபாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள், நடைமேடைகள், சுரங்க பாதைகள் என அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முடங்கி போய் உள்ளது.
தேங்கி கிடக்கும் மழைநீரில் வாகனங்கள் தத்தளித்த படி சென்றன. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் தண்ணீர் ஆறு போல ஓடியதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து துபாய் வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
துபாயில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதன் காரணமாக விமான நிலையத்தில் பயணிகள் கடும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இன்று 2-வது நாளாக தொடர்ந்து துபாயில் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இரவு நேரம் சூறாவளி காற்று வீசுகிறது. இடைவிடாத மழையால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது.
துறைமுகம் மற்றும் பூங்காக்களை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
சார்ஜாவில் மழையால் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் போன்ற நகரங்களில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் வெள்ளம் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவும் பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி இருக்கிறது.
இதுவரை கடும் வறட்சியால் செயற்கை மழையை உருவாக்கி வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்போது இயற்கை மழையால் தத்தளித்து வருகிறது. கடந்த 75 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது வரலாறு காணாத வகையில் பேய் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கால நிலை மாற்றத்தால் வருங்காலங்களில் வளைகுடா நாடுகளில் வெப்பம் மேலும் அதிகரித்து வெப்ப சலனம் காரணமாக கன மழை பெய்யும் என்றும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- டோமிசோடா நகரில் உள்ள கோழிப்பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
- ஏவியன் இன்புளூயன்சா வைரசால் ஏற்படும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு அந்த கோழிகளுக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
டோக்கியோ:
ஜப்பானின் சிகா மாகாணம் டோமிசோடா நகரில் ஒரு கோழிப்பண்ணை செயல்படுகிறது. இங்கு ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த பண்ணையில் சில கோழிகள் மர்மமான முறையில் இறந்தன. இதனையடுத்து அங்குள்ள கோழிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏவியன் இன்புளூயன்சா வைரசால் ஏற்படும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு அந்த கோழிகளுக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே அந்த பண்ணையை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மற்ற கோழிகளுக்கு இந்த பறவைக்காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த அங்கு சுமார் 57 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டு உள்ளன. அதேபோல் இந்த பண்ணையை சுற்றி 3 கிலோ மீட்டர் தொலைவில் கோழிகள் மற்றும் முட்டைகளைக் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- கோளின் ஒரு பாதி நிரந்தரமாக ஒளிரும் (பகலாகவே இருக்கும்).
- மற்றொரு பாதி நிரந்தரமாக இருள் சூழ்ந்ததாகவும், மிகவும் குளிர்ந்த நிலையிலும் உள்ளது.
அபுதாபி:
பூமியில் இருந்து சுமார் 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அரிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அரசு செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளதாவது:-
அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜாஸ்மினா பிலெசிக், பேராசிரியர் இயன் டாப்ஸ் டிக்சன் மற்றும் குழுவினர் இணைந்து நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ஆராய்ச்சி செய்துவந்தனர். இதில் பூமியில் இருந்து சுமார் 86 ஒளி ஆண்டுகள் (ஒளி 1 ஆண்டில் பயணம் செய்யும் தூரம்) தொலைவில் உள்ள டபள்யூ.ஏ.எஸ்.பி- 43பி என்ற புதிய கோள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கோள் சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கிரகத்தை போன்று அதே நிறையுடையதாக உள்ளது. இந்த கோள் சூரியன் போல் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. மிக நெருக்கமாக அந்த நட்சத்திரத்தை சுற்றி வருவதால் அந்த கோளுக்கு ஒரு ஆண்டு என்பது 19 ½ மணி நேரம் மட்டுமே ஆகும். பூமி சூரியனை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. நெருக்கமாக அந்த கோள் தனது நட்சத்திரத்தை சுற்றி வரும்போது அதன் சுழற்சியானது அதன் சுற்றுப்பாதையுடன் இணைந்து செல்கிறது. அதாவது நமது பூமியை நிலவு சுற்றி வருவதுபோல அந்த கோள் தனது நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இதன் காரணமாக கோளின் ஒரு பாதி நிரந்தரமாக ஒளிரும் (பகலாகவே இருக்கும்). மற்றொரு பாதி நிரந்தரமாக இருள் சூழ்ந்ததாகவும், மிகவும் குளிர்ந்த நிலையிலும் உள்ளது.
இந்த கோளில் அடர்த்தியான மேகங்கள் காணப்படுகிறது. மேலும் அதன் இருள் சூழ்ந்த பகுதியின் ஆச்சர்யபடத்தக்க வகையில் வளிமண்டலத்தில் மீத்தேன் கிடையாது. அதற்கு பதிலாக எங்கு பார்த்தாலும் தண்ணீர் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பூமியில் உள்ள மேகங்களை விட அதிக உயரத்தில் இந்த கோளில் மேகங்கள் காணப்படுகிறது. இந்த டபள்யூ.ஏ.எஸ்.பி- 43பி கோளின் நிரந்தரமாக ஒளிரும் பகுதியின் வெப்பநிலை 1,250 டிகிரி செல்சியசாக உள்ளது.
அதேபோல இருள் சூழ்ந்த பகுதியில் 600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இருள் சூழ்ந்த பகுதியில் நேரடி சூரிய ஒளி இல்லாத காரணத்தால் இரவு மற்றும் பகல் நிலவும் பகுதிகளுக்கு இடையே வெப்பநிலை வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக வலுவான காற்று அங்கு உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நடுவானில் பறந்த போது விமானத்தின் என்ஜின் செயல்படாமல் போனது.
- சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
அமெரிக்காவின் நியூ யார்க் பகுதியில் உள்ள செடார் கடற்கரையில் ஒற்றை என்ஜின் கொண்ட செஸ்னா 152 எனும் சிறிய விமானம் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமானம் கடற்கரையில் தரையிறங்கிய நிலையில், விமானி மற்றும் பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. கடற்கரையில் தரையிறங்கியதால் விமானத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டது. விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கியதாக விமானி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
"ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று செடார் கடற்கரையில் அவசரமாக தரையிறங்கியது. நடுவானில் பறந்த போது விமானத்தின் என்ஜின் செயல்படாமல் போனது. இதன் காரணமாக விமானத்தை இயக்கிய 60 வயது விமானி, கடற்கரையில் தரையிறக்கினார்," என்று அமெரிக்க வான்வழி கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
- ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு விட்டால், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.
- இந்த பரிசோதனை அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? என்பதை உறுதி செய்வதற்காக.
உலகில் மர்மமான நாடு என்றால் அது வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு அந்நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வருகிறார். வடகொரியாவின் முக்கியமான வேலை ஏவுகணை சோதனை நடத்துவதுதான்.
உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்த போதிலும், சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். அவரது உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வந்தன. உயிரோடு இருக்கிறாரா? என்ற கேள்வி கூட எழுந்தன.
கிம் ஜாங் உன் குறித்து பல்வேறு தகவல் வெளியாகுவது சகஜம்தான். ஆனால் தற்போது வடகொரியாவில் இருந்து தப்பி வெளிநாட்டிற்கு வசித்து வரும் இளம் பெண் ஒருவர், ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிம் ஜாங் உன் தனக்காக இன்ப குழு வைத்துள்ளதாகவும், அந்த குழுவிற்கு வருடந்தோறும் 25 கன்னிப் பெண்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுவார்கள் என்றும் அந்த பெண் கூறியதாக மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது.
தப்பி வந்த அந்த பெண் கூறியதாக மிர்ரர் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:-
அழகான பெண் கிடைக்கவில்லை என்றால், பள்ளிக்கூடத்திற்குக் கூட சென்று ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிடுவார்கள்.
ஒரு வழியாக அவர்கள் அழகான பெண்களை கண்டுபிடித்து விட்டால், அவர்களுடைய முதல் விசயம் அவர்களுடைய குடும்பம் குறித்து விசாரிப்பதுதான். அந்த பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வடகொரியாவில் இருந்து வெளியேறி இருந்தால் அல்லது சொந்தக்காரர்கள் தென்கொரியா அல்லது மற்ற நாடுகளில் வசித்து வந்தால் அவர்களை நிராகரித்து விடுவார்கள்.
ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு விட்டால், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். இந்த பரிசோதனை அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? என்பதை உறுதி செய்வதற்காக. இந்த பரிசோதனையின் போது சிறிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்கள் தேர்வாகாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இந்த கொடூரமான பரிசோதனைக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில பெண்கள் பியாங்யாங் அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்களுடைய ஒரே நோக்கம் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன்-ஐ மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதுதான்.
இன்ப குழு மூன்று தனித்தனி குழுவாக பிரிக்கப்படும். ஒரு குழுவிற்கு மசாஜ் பயிற்சி அளிக்கப்படும். மற்றொரு குழு பாட்டுப் பாட வேண்டும். நடனமாட வேண்டும்.
3-வது குரூப் சர்வாதிகாரி மற்றும் மற்ற நபர்களுடன் பாலியல் நெருக்கத்துடன் இருக்க வேண்டும். இவர்களை எப்படி மகிழ்விப்பது என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் அவர்களின் ஒரே குறிக்கோள்.
மிகவும் கவரக்கூடிய வகையிலான கவர்ச்சிகரமான பெண்கள் சர்வாதிகாரிக்கு சேவை செய்ய தேர்வு செய்யப்படுவார்கள். மற்றவர்கள் குறைந்த ரேங்க் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை திருப்பிப்படுத்த ஒதுக்கப்படுவார்கள்.
இந்த குழுவில் உள்ள பெண்கள் சுமார் 25 வயதை தொடும்போது, அவர்களின் பணிவிடை காலம் முடிவடைந்துவிடும். அந்த பெண்களில் சிலர் தலைவர்களின் பாதுகாவலர்களை திருமணம் செய்து கொள்வது உண்டு.
இவ்வாறு அந்த பெண் தெரிவித்துள்ளதாக மிர்ரர் தெரிவித்துள்ளது.
- காசாவின் வடக்குப்பதியில் உள்ள இடங்களை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி சீர்குலைத்துள்ளது.
- இஸ்ரேல் தாக்குதல் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா முனையின் வடக்குப் பகுதியை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளது. தெற்கு காசாவிலும் வான் தாக்குதல் நடத்தி வருகிறது. தரை தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது.
காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர்.
தற்போது முகாம்களில் வசித்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க ஐ.நா. முயற்சி மேற்கொண்டு வருகிறது. மனிதாபிமான உதவிகள் கிடைக்க இஸ்ரேல் உதவ வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா, ஐ.நா. உள்ளிட்டவைகளின் வலியுறுத்தலின்படி நேற்று, இஸ்ரேல் வடக்கு காசாவிற்கான ஒரு எல்லையை திறந்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் சீர்குலைந்துள்ள வீடுகளை சீரமைப்பதற்கு 2040 வரை ஆகும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
அதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியது. ஏழு மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ரஃபா நகரைத் தவிர மற்ற நகரங்கள் ஏறக்குறைய சீர்குலைக்கப்பட்டுள்ளனர். இதில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன பொதுமக்கள கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மழை காரணமாக பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
துபாயில் கடந்த மாதம் உருவாகிய புயல் காரணமாக வரலாறு காணாத பலத்த மழை பெய்தது. இதனால், துபாய் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து ஸ்தம்பித்தது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இடியுடன் கூடிய பெய்த பலத்த மழை காரணமாக பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், நிலைமையைச் சமாளிக்க தயார் நிலையில் உள்ளது.
துபாயில் பெய்த மழையைவிட இது குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் விமான நிறுவனம், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சேவை குறைக்கப்பட்டதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் மோசமான வானிலை காரணமாக இன்று பல விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்தது.
"மே 2 ஆம் தேதி துபாய் விமான நிலையத்திலிருந்து வரும் அல்லது புறப்படும் வாடிக்கையாளர்கள் விமான சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சில தாமதங்கள் ஏற்படலாம்" என அமீரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
லாஸ்ஏஞ்செல்ஸ்:
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராகவும், காசா போரை உடனே நிறுத்த வேண்டும் எனக்கோரியும் அமெரிக்காவின் நியூயார்க், கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கொலம்பியா, ஹார்வர்ட், டெக்சாஸ் பல்கலைக்கழகங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி அவர்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் கூடாரம் அமைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் நகர கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் கூடாரங்களை அகற்றி மாணவர்களை அங்கிருந்து ஒரே இரவில் போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல்கலைக்கழகத்தில் திடீரென புகுந்த இஸ்ரேல் ஆதரவாளர்கள் மாணவர்கள் அமைத்திருந்த கூடாரங்களை அகற்றி அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளால் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பல்கலைக்கழகம் கலவர பூமியாக மாறியது. இதையடுத்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதன்பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. மோதலில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது அந்நாட்டு போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
- உடற்பயிற்சி செய்ய கிரெகர் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
- கோரெ டிரெட்மில்லில் இருந்து கீழே விழுந்தார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை பகுதியை சேர்ந்தவர் கிரெகர். இவருக்கும் பிரெ மிக்கோலியோ என்பவருக்கும் திருமணமாகி ஆறு வயதில் மகன் கோரெ இருந்து வந்தார். தனது மகன் கோரெ உடல் பருமனாக இருப்பதாக கூறி, அவனை உடற்பயிற்சி செய்ய கிரெகர் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
அந்த வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிரெகர் தனது மகனை உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்து சென்று டிரெட்மில்லில் ஓட செய்துள்ளார். அதன்படி கோரெ டிரெட்மில்லில் ஓட துவங்கியுள்ளார். சிறிது நேரத்தில் டிரெட்மில்லின் வேகத்தை கிரெகர் கூட்டியுள்ளார். இதனால் நிலைதடுமாறிய கோரெ டிரெட்மில்லில் இருந்து கீழே விழுந்தார்.
இதை பார்த்து ஆத்திரமடைந்த கிரெகர் தனது மகன் கோரெவை வலுக்கட்டாயமாக தூக்கி மீண்டும் டிரெட்மில்லில் ஓட செய்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தியதில் கோரெ உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையை வைத்து போலீசார் கிரெகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சிறுவன் உயிரிழக்கும் முன்பு உடற்பயிற்சி கூடத்தில் என்ன நடந்தது என்பதை காட்டும் சி.சி.டி.வி. வீடியோ நீதிபதி முன் சமர்பிக்கப்பட்டது. வீடியோ காட்சியை நீதிமன்றத்தில் வைத்து ஒளிபரப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
வீடியோவில், கிரெகர் தனது மகன் கோரெவை உடற்பயிற்சி கூடத்திற்குள் அழைத்து வருவது, மகனை டிரெட்மில்லில் ஓட செய்தது. கிரெகர் டிரெட்மில் வேகத்தை கூட்டியது, டிரெட்மில் வேகம் கூடியதால் கோரெ நிலை தடுமாறி கீழே விழுந்தது என பதைபதைக்க வைக்கும் பகீர் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
மேலும், நிலை தடுமாறி கீழே விழுந்த மகனை சட்டென தூக்கிய கிரெகர் மீண்டும் அவனை டிரெட்மில்லில் ஓட செய்து, மீண்டும் டிரெட்மில் வேகத்தை கூட்டியுள்ளார். ஓருகட்டத்தில் உடலில் வலிமையில்லாத காரணத்தால் கோரெ டிரெட்மில்லில் ஓட முடியாதவராக காணப்படுகிறார்.
இருந்தும், கிரெகர் கட்டாயப்படுத்திய காரணத்தால், கோரெ டிரெட்மில்லில் மீண்டும் ஓட துவங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பார்த்த தாய் மிக்கோலியோ நீதிமன்றத்தில் தனது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் நின்றார்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கிரெகர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
- சிறுமி சமீபகாலமாக தனது படுக்கை அறையில் பேய் போன்ற உருவம் காணப்படுவதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.
- அடுத்தடுத்த நாட்களிலும் அந்த சிறுமி தனது படுக்கை அறையில் உள்ள அலமாரியில் ஏதோ இருப்பதாக கூறிக்கொண்டே இருந்தார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள சார்லோட் பகுதியில் பண்ணை வீட்டில் வசித்து வரும் ஆஸ்லே மாசிஸ் கிளாஸ் என்ற பெண்ணுக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி சமீபகாலமாக தனது படுக்கை அறையில் பேய் போன்ற உருவம் காணப்படுவதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.
முதலில் பெற்றோர் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. திரைப்படங்களை பார்ப்பதால் சிறுமி கற்பனையாக கருதி இருக்கலாம் என நினைத்தனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களிலும் அந்த சிறுமி தனது படுக்கை அறையில் உள்ள அலமாரியில் ஏதோ இருப்பதாக கூறிக்கொண்டே இருந்தார்.
இதனால் சிறுமியின் பெற்றோர் அந்த வீட்டில் வெப் கேமரா பொருத்தி ஆய்வு செய்தனர். அப்போது தான் சிறுமியின் படுக்கை அறையில் ஒரு பெரிய தேன் கூடு இருப்பதை கண்டனர். இதுகுறித்து பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு தெரிவித்தனர். அதன்படி வீட்டிற்கு வந்த தேனீ வளர்ப்பாளர், சிறுமியின் படுக்கை அறையில் இருந்து சுமார் 55 ஆயிரம் முதல் 65 ஆயிரம் தேனீக்கள் கொண்ட 45 கிலோ எடை உடைய தேன் கூட்டை அகற்றி உள்ளார்.
- வீட்டின் சமையல் அறையின் தரைப்பகுதியை மண்வெட்டியால் கொத்தி கொண்டிருந்த போது அவர்களது கண்களில் ஒரு பானை தென்பட்டது.
- புதையல் கிடைத்த மகிழ்ச்சியை தம்பதியினர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.
இங்கிலாந்தில் உள்ள தெற்கு போர்டான் பகுதியை சேர்ந்த பெக்கி- ராபர்ட் தம்பதி பழைய வீடு ஒன்றை வாங்கினர். அதை புதுப்பிக்கும் வேலைகளை தம்பதி செய்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் சமையல் அறையின் தரைப்பகுதியை மண்வெட்டியால் கொத்தி கொண்டிருந்த போது அவர்களது கண்களில் ஒரு பானை தென்பட்டது. அதில் மேல் பகுதி முழுவதும் மண் நிரப்பப்பட்டிருந்த நிலையில், அவற்றை விலக்கி பார்த்தபோது பானை முழுவதும் தங்க காசுகளும், வெள்ளி காசுகளும் இருந்தன.
ராபர்ட் அவற்றை எண்ணினார். மொத்தம் 1,029 நாணயங்கள் இருந்தன. அவை 1642-ம் ஆண்டுக்கும், 1644-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த முதலாம் ஜேம்ஸ் மற்றும் முதலாம் சார்லஸ் மன்னர்களின் உருவம் பதித்த நாணயங்கள் ஆகும். புதையல் கிடைத்த மகிழ்ச்சியை அந்த தம்பதியினர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.
பின்னர் அவை அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஏலம் விடப்பட்டது. அதன் மூலம் தம்பதிகளுக்கு 60 ஆயிரம் பவுன்ட் பணமும் கிடைத்தது. அந்த பணத்தை தனது மகனின் படிப்புக்கும், வீட்டை புதுப்பிக்கவும் பயன்படுத்த உள்ளதாக தம்பதியினர் தெரிவித்தனர்.






