என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- திராவிட மாடல் ஆட்சி அமைந்த 5 வருடத்தில் சென்னையின் வளர்ச்சிக்காக நாம் செய்துள்ள திட்டங்களை எண்ணிப் பார்க்கிறேன்.
- நீர் நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், பூங்காக்கள், விளையாட்டு திடல் என நிறைய செய்து கொண்டே இருக்கிறோம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலையில் வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.21 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 'அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை' திறந்து வைத்தார். அங்கு 10 தம்பதிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
சென்னையின் கட்டமைப்பு வசதியை பெருக்கிட வேண்டும். அதை நல்ல வகையில் உருவாக்கிட வேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக் கொண்டு அந்த பணியை நிறைவேற்றி கொண்டிருப்பதில், நம்முடைய திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்படுவது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை. இங்கு ஏராளமான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உரிய வசதியை, நல்ல சுகாதாரத்தை உருவாக்கி தர வேண்டும் என்பதற்காக எத்தனையோ திட்டங்களை அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து பல்வேறு திட்டங்களை நம்முடைய அரசு உருவாக்கி கொண்டிருக்கிறது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்கிற நேரங்களில் எல்லாம் ஏராளமான திட்டங்களை தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக சென்னை மாநகரத்திற்கு, நாம் கொண்டு வந்திருக்கிறோம்.
இன்றைக்கு சென்னையில் உள்ள மேம்பாலங்களை பார்த்தால், உங்களுக்கு நன்றாக தெரியும். சுரங்கப் பாதைகளாக இருந்தாலும் சரி, பூங்காக்களாக இருந்தாலும், மெட்ரோ ரெயில் வசதியாக இருந்தாலும் எல்லாமே தி.மு.க. ஆட்சியில் தான் கொண்டு வந்திருக்கிறோம்.
இந்த வளர்ச்சிப் பணியில் ஏதாவது விட்டுவிடக்கூடாது என்று கவனமாக பார்த்து பார்த்து உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறோம்.
திராவிட மாடல் ஆட்சி அமைந்த 5 வருடத்தில் சென்னையின் வளர்ச்சிக்காக நாம் செய்துள்ள திட்டங்களை எண்ணிப் பார்க்கிறேன். வடசென்னை பகுதியில் மேயர் சிட்டிபாபு பாலம், தென் சென்னை பகுதியில் தியாகராயநகர் பகுதியில் ஆகாய நடை மேம்பாலம் ஜெ.அன்பழகன் மேம்பாலம், வடசென்னை யில் செங்கை சிவம் பெயரில் ரூ.500 கோடி மதிப்பீட் டில் பல்வேறு பாலங்களை அமைத்துள்ளோம்.
அதுமட்டுமின்றி 516 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்னும் 19 பாலங்கள், சென்னை மாநகருக்கு உருவாக்கி தர பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
சாலைப் பணிகளை எடுத்துக் கொண்டால், ரூ.2,359 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில், 3455 கி.மீ. நீளத்திற்கு 19 ஆயிரத்து 849 பஸ் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளை அமைத்து உள்ளோம்.
இன்னும் 196 கி.மீட்டருக்கான 1315 சாலைப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் மழை பெய்தால், என்ன நிலைமை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அது இப்போது எந்த அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதும் உங்களுக்கு நன்றாக புரியும்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், 2015-ல் செயற்கை வெள்ளம். அது சாதாரணமானதல்ல. செயற்கையாக உருவாக்கப்பட்ட வெள்ளம். அதனால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்த சென்னை மறந்திடாது.
ஆனால் இன்றைக்கு இயற்கையாகவே சாதாரண மழை அல்ல. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை சமாளிக்கிற ஆற்றல் சென்னை மாநகருக்கு கிடைத்துள்ளது என்றால், அது நாம் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றி இருக்கிற திட்டங்கள் தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ரூ.6495 கோடி மதிப்பீட்டில், 1422 கி.மீ. நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்க பணிகள் மேற்கொண்டு அதில், ரூ.4309 கோடிக்கு 1026 கி.மீ. நீளத்திற்கு பணிகள் முடித்து உள்ளோம். இது மட்டுமல்ல நீர் நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், பூங்காக்கள், விளையாட்டு திடல் என நிறைய செய்து கொண்டே இருக்கிறோம்.
அந்த வகையில் இன்று திரு.வி.க.நகர் தொகுதியில், திறந்து வைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை இதனால் இந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்ல, சுற்று வட்டார பகுதி மக்களுக்கும் நிச்சயமாக இந்த மண்டபம் பயன்பெற போகிறது.
இந்த திருமண மண்டபத்தில் 10 ஜோடிக்கு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தை காணும் மணமக்களுக்கு நான் சொல்லும் அறிவுரை, உங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர் களை சூட்டுங்கள். ஏனென்றால் யாரையும் விமர்சனம் செய்து பேசவில்லை. யாரையும் கொச்சைப்படுத்தி பேசுவதாக நினைக்க வேண்டாம்.
ஆங்கிலத்தில், வடமொழியில் பெயர் என்பதை பார்க்கிறோம். இதை சொல்கிறபோது என் பெயர் ஸ்டாலின் இது தமிழ் பெயர் இல்லை. இருந்தாலும் அந்த பெயர் வைத்ததற்கு காரணம் உண்டு. அது உங்களுக்கு தெரியும்.
ரஷியாவில் புரட்சி செய்த ஸ்டாலின் நினைவு கொண்டு கம்யூனிஸ்டு சித்தாந்தத்தின் மீது தலைவர் கலைஞர் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில், அந்த பெயரை எனக்கு சூட்டி தலைவர் கலைஞர் மகிழ்ந்தாரே தவிர வேறு எதுவும் கிடையாது. அதனால் உங்களை நான் கேட்டுக் கொள்வது அழகான தமிழ் பெயர்களை உங்களுக்கு பிறக்கும் குழந் தைகளுக்கு மணமக்களுக்கு மட்டுமல்ல, வரக்கூடிய காலக் கட்டத்திலே, பேரன், பேத்தி வரும்போது அந்த குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ., வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உறுப்பினர் செயலர் பிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கவுஷிக், மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.சின் பண்ணை வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- நான் 2-வது தர்மயுத்தம் நடத்தியதற்கு காரணமே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்குமார்தான் காரணம்.
பெரியகுளம்:
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் இணைந்துள்ள நிலையில் மேலும் சிலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வருகிறார். அவரது ஆதரவாளர்கள் பலரும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., த.வெ.க.வில் இணைந்து வந்த நிலையிலும் ஓ.பி.எஸ். மவுனமாகவே இருந்து வருகிறார்.
இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.சின் பண்ணை வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று 2வது நாளாக ஓ.பி.எஸ். தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் பலர் தமிழகம் முழுவதிலும் இருந்து இதில் கலந்து கொண்டனர்.
ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் இணைந்தாலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாது என்றும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வாய்ப்பு வழங்கப்படாது என்றும் தெரிவித்து வருவதால் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதில் தாமதப்படுத்தி வந்தார். அ.ம.மு.க. அணியில் குக்கர் சின்னத்தில் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேருக்கு சீட்டு வழங்கப்பட உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம், போடி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு இதுவரை தோல்வியே காணாத தலைவராக ஓ.பி.எஸ். உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பலாபழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
எனவே வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது தமிழக வெற்றிக்கழகம் ஆகிய அணிகளில் ஓ.பி.எஸ். இணைவார் என்று பரவலாக கருத்துகள் வெளியாகின. இன்று பெரியகுளம் பண்ணை வீட்டில் ஆதரவாளர்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது நிர்வாகிகள் அனைவரும் நாம் அடுத்து எந்த அணியில் இடம்பெற வேண்டும்? எவ்வாறு தேர்தலில் பங்காற்ற வேண்டும்? என்ற கருத்தை துண்டுச்சீட்டில் எழுதி தருமாறும், பெரும்பான்மையான நிர்வாகிகள் அளிக்கும் ஆலோசனைகளின் முடிவை வைத்து தான் முடிவு எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சுயமாக முடிவு எடுக்க வேண்டும் என்றும், எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வதாகவும், துண்டுச்சீட்டு மூலம் கருத்தை வைத்து முடிவு எடுக்க தங்களுக்கு விருப்பமில்லை என கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுவரை அ.தி.மு.க. தொண்டர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ராமநாதபுரம் தொகுதியில் நான் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டது தொண்டர்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க மட்டுமே.
ஆனால் அங்கும் என்னை தோற்கடிக்க 6 ஓ.பன்னீர்செல்வம் நிறுத்தப்பட்டனர். தற்போது வரை அ.தி.மு.க. வலிமையாகவே உள்ளது. பிரிந்து சென்ற அனைவரும் ஒன்று சேர்ந்தால் தி.மு.க.வை எளிதாக வீழ்த்த முடியும். இதைத்தான் நான் இன்றும் வலியுறுத்தி வருகிறேன். சமூக ஊடகங்கள் மற்றும் ஒரு சில யூடியூப் சேனல்களில் நான் வெவ்வேறு அணியில் இணையப்போவதாக அவர்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம். நான் 2-வது தர்மயுத்தம் நடத்தியதற்கு காரணமே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்குமார்தான் காரணம். மீண்டும் நான் இணைய வேண்டும் என டி.டி.வி. தினகரன் கோரிக்கை விடுத்திருந்தார். அது அவரது நல்லெண்ணைத்தை காட்டுகிறது. அதைத்தான் நானும் கூறி வருகிறேன். அவர் நினைத்தால் கண்டிப்பாக அ.தி.மு.க.வில் என்னை இணைக்க முடியும். அண்ணன் எடப்பாடி பழனிசாமி இதற்கு ரெடியாக உள்ளாரா? என்று கேட்டுச் சொல்ல வேண்டும். நான் இணைய தயாராகத்தான் உள்ளேன். எனவே ஒன்றிணைப்புகான முயற்சியில் டி.டி.வி. தினகரன் மேற்கொள்ள வேண்டும். ஒன்றிணைப்பு சாத்தியமானால் சட்டப்போராட்டம் முடிவுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயரை சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
- பிப்ரவரி 17-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 4-ந் தேதி இந்த பணி தொடங்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 19 -ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756-ஆக குறைந்தது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயரை சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் 18 வயது பூர்த்தி செய்தவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியல் பெயர்களை சேர்க்கவும் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி முதல் இந்த மாதம் 18-ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இடம் மாறி சென்றவர்கள், விடுபட்டவர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படிவங்கள் பெறப்படவில்லை. அதனால் ஜனவரி 30-ந்தேதி வரை பெயர் சேர்க்க அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதுவரையில் பெயர் சேர்க்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சட்டசபை தேர்தல் ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் நடைபெற இருப்பதால் அதில் வாக்களிக்கும் உரிமையை பெறுவதற்கான வாய்ப்பு இதுவாகும். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 40 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியலில் இந்த எண்ணிக்கை 25 லட்சமாக குறைந்தது. அதாவது 15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதில் இறந்தவர்கள் 1.50 லட்சம் பேர் எனவும் 2.50 லட்சம் பேர் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரையில் 2 லட்சத்து 11 ஆயிரம் பேர் மட்டுமே படிவங்களை பூர்த்தி செய்து பெயர்களை சேர்க்க கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேர் குறைய வாய்ப்புள்ளது. அதாவது 10 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
நாளையுடன் நிறைவடையும் இந்த பணியை தொடர்ந்து பெறப்பட்ட படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும். பிப்ரவரி 17-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
- வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 வரை விற்கப்பட்டது.
- இன்று 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது.
கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. பரவலாக அவ்வப்போது பெய்த மழை மற்றும் வெளி மாநில வியாபாரிகளின் கொள்முதல் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து தினசரி 30 லாரிகளாக குறைந்துபோனது.
இதனால் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 வரை விற்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இன்று 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது. இதையடுத்து மொத்த விற்பனையில் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.6-க்கு விற்கப்பட்டது.
கடந்த வாரம் வரை மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.40-வரை விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.15 ஆக குறைந்து உள்ளது. வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடந்த 3 மாதங்களுக்கு பிறகு வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
- ஜவுளி நிறுவனங்களுக்கு மானியம் வழங்க ஆண்டுதோறும் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- ஜவுளி தொழிலை மேம்படுத்த தி.மு.க. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச ஜவுளித்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்ய 20 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
* ஜவுளி நிறுவனங்களுக்கு மானியம் வழங்க ஆண்டுதோறும் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஜவுளி தொழிலை மேம்படுத்த தி.மு.க. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உணவகத்தில் வேலை செய்த 22 வயது பெண்ணை கல்லூரி வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- பாலியல் வன்கொடுமை செய்த மற்ற நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை:
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:-
சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆண், பெண் இருபாலரும் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் உள்ள உணவகத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த 56 வயது நபரான குணசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இதே உணவகத்தில் வேலை செய்த 22 வயது பெண்ணை குணசேகர் கல்லூரி வளாகத்திலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் 5 பேரும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் அழுதுகொண்டே கல்லூரியில் உள்ள காவலாளியிடம் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து உடனடியாக சைதாப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, குணசேகர் கைது செய்யப்பட்டார். உணவக உரிமையாளரான அரசியல் பிரமுகர் செல்வம், டீ மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே மாணவி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதேபோன்று நந்தனம் அரசு கலைக் கல்லூரியிலும் இளம்பெண் கல்லூரி வளாகத்தில் வைத்தே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வரும் நிலையில் இளம்பெண் வேறு யாருக்கும் இவர்களால் விருந்தாக்கப்பட்டாரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நந்தனம் கலைக்கல்லூரியில் இளம்பெண் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று மாணவர் அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சென்னையில் கல்விக் கூடங்களில் இதுபோன்று பாலியல் அத்துமீறல் நடைபெறுவது தொடர் கதையாகி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
இது போன்ற பாலியல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்தப் போராட்டம் காரணமாக நந்தனம் கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் பிரபலமான நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் அரங்கேறி இருக்கும் இந்த பாலியல் சம்பவம் கல்வியாளர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- ஜவுளித்துறையில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர்ந்து 5 ஆண்டாக இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது.
- அமெரிக்கா விதித்துள்ள 50 விழுக்காடு வரியால் தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை:
கோவை கொடிசியாவில் இன்று முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு தொடங்கியது.
இந்த மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோவையில் நடந்த இந்த மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தொழில் வளத்திற்கும், புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும் புகழ்பெற்ற கோவையில் சர்வதேச ஜவுளித்தொழில் மாநாடு முதல் முறையாக நடைபெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
தமிழகத்தில் சமூக நீதியும் காப்பாற்றப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியும் காட்டப்படுகிறது. இது தமிழகத்தின் தனி சிறப்பாகும். இந்த திராவிட மாடல் ஆட்சியில் ஆட்டோ மொபைல், ஐ.டி, காலணி உற்பத்தி, மின்னணு பொருட்கள் என அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது.
அதிலும் ஜவுளித்துறையில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர்ந்து 5 ஆண்டாக இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. இந்தியாவின் ஜவுளி வணிகத்தில் தமிழகத்தின் பங்கு மட்டும் 33 விழுக்காடு.
நேரடியாக 31 லட்சம் தொழிலாளர்களுக்கு தமிழக ஜவுளித்துறை வேலைவாய்ப்பு வழங்குகிறது. இதில் 61.12 விழுக்காடு பெண் தொழிலாளர்கள் என்பது கூடுதல் சிறப்பு. தி.முக. ஆட்சி அமைந்ததும் துணிகள் துறை என தனி துறை உருவாக்கினோம். தொழில்நுட்ப ஜவுளிதுறையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்னை, கோவையில் 2 கருத்தரங்குகளை நடத்தினோம்.
இப்படி பல முயற்சிகள் எடுத்து இந்த துறையின் வளர்ச்சிக்கு உழைக்கக்கூடிய அமைச்சர் காந்தி மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்துள்ளார்.
இந்த துறை வளர்ச்சிக்காக அரசு செய்துள்ள திட்டங்கள், சலுகைகள், சாதனைகள் பற்றி அவர் உங்களிடம் பேசுவார். இந்த மாநாடு மூலமாக தமிழ்நாட்டில் ஜவுளித்துறையின் கட்டமைப்பு உலக வாடிக்கையாளர்களை சேர வேண்டும். சர்வதேச முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
அமெரிக்கா விதித்துள்ள 50 விழுக்காடு வரியால் தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மீண்டு புதிய சந்தைகள் கண்டறிவது, வாங்குவோர், விற்போர் சந்திப்பு நடத்துவது, பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்குவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்துவது என பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம்
இந்திய-ஐரோப்பிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. கோவை, மதுரை, தூத்துக்குடியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலமாக ஜவுளித்துறைக்கு மட்டும் 9 ஆயிரத்து 264 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த மாநாட்டிலும் ரூ.915 கோடி மதிப்பில் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக்கொள்கை 2025-2026-ம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு வேலைப்பளு காரணமாக நேரில் வந்து உங்களை சந்திக்க முடியவில்லை என்று சொன்னாலும் உங்களுக்கான ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜவுளி நிறுவனங்களுக்கு அதி நவீன நெசவு மற்றும் பின்னலாடை எந்திரங்கள் கொள்முதல் செய்ய 20 சதவீதம் மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்தியா, வெளிநாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். மிகச்சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட தமிழ்நாட்டில் முதலீடு செய்து நீங்களும் வளர்ந்து, தமிழகத்திற்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் திராவிட மாடல் அரசின் பெருங்கனவில் ஜவுளித்தொழில் கணிசமான பங்கு வகிக்க வேண்டும். இந்த மாநாட்டின் வெற்றி இதற்கு பெரிதும் உதவும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவையில் நடந்த மாநாட்டை தொடங்கி வைத்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாடு இந்தியாவின் ஜவுளி பள்ளத்தாக்காக விளங்கி வருகிறது. கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் ஜவுளித்துறை மையமாக விளங்குகின்றன. 30 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் ஜவுளித்துறை மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
நாடு முழுவதும் ஜவுளித்துறையில் பணியாற்றும் பெண்களில் 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். திராவிட மாடல் அரசு ஜவுளித்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய ஜவுளித்துறை பங்களிப்பு வழங்கும் என நம்புகிறேன். தமிழ்நாடு அரசின் ஆதரவு ஜவுளித்துறைக்கு எப்போதும் இருக்கும். தமிழ்நாடு அரசு 6 சதவீத மானியத்தை மறுபரிசீலனை செய்து உயர்த்தும் என உறுதி அளிக்கிறேன். ஜவுளித்துறையில் அதிக முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்து வருகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து விழாவில் தொழில் தொடங்க ரூ.1,100 கோடிக்கும் அதிகமான நலத்திட்டங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் காந்தி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அரசு கைத்தறித்துறைத் செயலாளர் அமுதவல்லி, ஜவுளித்துறை இயக்குனர் லலிதா, கைத்தறி இயக்குனர் மகேஸ்வரி, நிர்வாக இயக்குனர் கவிதா, கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிலர் வடமொழி பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுகிறார்கள். யாரையும் நான் குறைகூறவில்லை.
- ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லை என சிலர் கூறும் நிலையில் அது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க. நகரில் ரூ.21.50 கோடியில் கட்டப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்துவைத்த முதலமைச்சர் 10 இணையருக்கு திருமணம் நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள்.
* சிலர் வடமொழி பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுகிறார்கள். யாரையும் நான் குறைகூறவில்லை.
* கம்யூனிச சித்தாந்தத்தின் பேரில் கலைஞர் வைத்திருந்த நம்பிக்கையில் தான் எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டப்பட்டது.
ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லை என சிலர் கூறும் நிலையில் அது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
- சென்னையில் கட்டமைப்பு வசதியை சிறந்த முறையில் உருவாக்கிட திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.
- சென்னையில் ரூ.516 கோடி மதிப்பீட்டில் மேலும் 19 பாலங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க. நகரில் ரூ.21.50 கோடியில் கட்டப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்துவைத்த முதலமைச்சர் 10 இணையருக்கு திருமணம் நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் கட்டமைப்பு வசதியை சிறந்த முறையில் உருவாக்கிட திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.
* சென்னையில் மேம்பாலங்கள், சுரங்கங்கள், மெட்ரோ ரெயில் என அனைத்தும் கொண்டுவரப்பட்டது தி.மு.க. ஆட்சியில் தான்.
* சென்னையில் ரூ.516 கோடி மதிப்பீட்டில் மேலும் 19 பாலங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* பார்த்து பார்த்து வடசென்னைப் பகுதியில் உட்கட்டமைப்புகளை செயல்படுத்தி வருகிறோம்.
* சென்னையில் 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டனர் என்பது நமக்கு தெரியும்.
* தற்போது எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
* மாநிலம் முழுவதும் தி.மு.க. ஆட்சியில் ரூ.2,359 கோடி மதிப்பில் 19,000-க்கும் மேற்பட்ட சாலைகள் போடப்பட்டுள்ளது.
* சென்னை வெள்ளத்தில் தத்தளிக்காமல் இருப்பதற்கு தி.மு.க. கொண்டுவந்த திட்டங்கள் தான் காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 12 நாட்களில் மட்டும் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் உயர்ந்துள்ளது.
- இனி வரும் நாட்களிலும் வெள்ளி விலை வேகமாக உ ச்சம் பெறும் என்று கூறப்படுகிறது.
சேலம்:
தமிழகத்தில் தங்கத்திற்கு அடுத்தபடியாக வெள்ளி கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி உள்பட வெள்ளி நகைகளை வாங்கி பொதுமக்கள் அதிக அளவில் அணிந்து வந்தனர். தற்போது வெள்ளியின் விலை தினசரி புதிய உச்சத்தை எட்டி வருவதால் ஏழை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
குறிப்பாக நேற்று வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ. 4 லட்சமாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு மேலும் 25 ஆயிரம் அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 4 லட்சத்து 25 ஆயிரமாக அதிகரித்தது. ஒரு கிராம் வெள்ளி விலை 425 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த 12 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளி ரூ. 3 லட்சமாக இருந்த நிலையில் மின்னல் வேகத்தில் உயர்ந்து 12 நாட்களில் ரூ.4 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் 12 நாட்களில் மட்டும் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டிற்காக தொழில் அதிபர்கள் வெள்ளியில் அதிக அளவில் தொடர்ந்து முதலீடு செய்வதால் வெள்ளி விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் வெள்ளி விலை வேகமாக உ ச்சம் பெறும் என்று கூறப்படுகிறது.
இந்த தொடர் விலை உயர்வால் சேலம் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் பட்டறைகளுக்கும் புதிய ஆர்டர்கள் வருவதில்லை. இதனால் வேலை இழந்த வெள்ளி பட்டறை தொழிலாளர்கள் வேறு வேலைக்கு சென்று விட்டனர். இதனால் வெள்ளி பட்டறைகள் களை இழந்துள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. வெள்ளி விலை உயர்வால் ஏழை மக்கள் வெள்ளி கொலுசுகள் உள்பட வெள்ளி நகைகளையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா, சென்னையில் நடைபெற உள்ளது.
- நம் வெற்றித் தலைவர் தலைமையில் மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம்.
தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழாவை ஒட்டி தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுளளார்.
அந்த அறிக்கையில், "கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழக அரசியல் களத்தில் மக்களுக்கான முதன்மைச் சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது. கழகத்தை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஆரம்பித்து, இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. தற்போது மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது. இந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழக மக்களுக்கான நம் தலைவர் அவர்களின் முன்னெடுப்புகள். மிக முக்கியமானவை. ஆனாலும் நாம் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தன் மீது பேரன்பு கொண்ட மக்களுக்காக, நம் தலைவர் அவர்கள் அத்தனைத் தடைகளையும் எதிர்கொண்டு இன்னும் தீவிரமாகக் களமாடி வருகிறார். நம் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் இலக்கை நோக்கிய வெற்றிப் பயணத்தில் மேலும் அதிக ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தைக் கொண்டாட உள்ளோம். நம் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் 'தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா, சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி, நமது கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், வரும் 2ஆம் தேதி (02.02.2026, திங்கள்கிழமை) காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது. இதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களுக்காக உழைத்து, மக்களுடன் மக்களாக இணைந்து நிற்போம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறிவோம். மாபெரும் வெற்றி பெற்று. நம் வெற்றித் தலைவர் தலைமையில் மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம்.
- தைப்பூச விழாவில் கலந்து கொள்ள தற்போது பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர்.
- ஜெர்மன் நாட்டில் இருந்து பக்தர்கள் குழுவினர் தைப்பூச விழாவை காண வடலூருக்கு வந்தனர்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் கடந்த 1867-ம் ஆண்டு சத்ய தர்மசாலையை நிறுவி அணையா அடுப்பை ஏற்றி வைத்தார்.
இந்த அணையா அடுப்பு இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது. இந்த அணையா அடுப்பு மூலம் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு இரவு பகலாக தொடர்ந்து அன்னதானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி வடலூரில் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்த தைப்பூச விழாவில் கலந்து கொள்ள தற்போது பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஜெர்மன் நாட்டில் இருந்து பக்தர்கள் குழுவினர் தைப்பூச விழாவை காண வடலூருக்கு வந்தனர்.
வள்ளலார் எடுத்துரைத்த ஜீவகாருண்ய ஒழுக்கம் என்று கூறப்படும் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்ற உணர்வால் அன்னதானம் வழங்குவதற்காக அரிசி மூட்டைகளை ஜெர்மன் நாட்டு பயணிகள் தங்கள் தோளில் சுமந்து வந்து கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்கள்.
வள்ளலார் அன்று அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்று கூறியது கடல் கடந்து ஜெர்மன் நாட்டு பயணிகள் அரிசி மூட்டைகளை தங்கள் தோளில் சுமந்து வந்து வழங்கிய சம்பவம் வள்ளலார் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






