என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோவையில் சர்வதேச ஜவுளித்தொழில் மாநாடு தொடங்கியது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    கோவையில் சர்வதேச ஜவுளித்தொழில் மாநாடு தொடங்கியது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • ஜவுளித்துறையில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர்ந்து 5 ஆண்டாக இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது.
    • அமெரிக்கா விதித்துள்ள 50 விழுக்காடு வரியால் தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை கொடிசியாவில் இன்று முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு தொடங்கியது.

    இந்த மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோவையில் நடந்த இந்த மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    தொழில் வளத்திற்கும், புதுமையான கண்டுபிடிப்புகளுக்கும் புகழ்பெற்ற கோவையில் சர்வதேச ஜவுளித்தொழில் மாநாடு முதல் முறையாக நடைபெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

    தமிழகத்தில் சமூக நீதியும் காப்பாற்றப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சியும் காட்டப்படுகிறது. இது தமிழகத்தின் தனி சிறப்பாகும். இந்த திராவிட மாடல் ஆட்சியில் ஆட்டோ மொபைல், ஐ.டி, காலணி உற்பத்தி, மின்னணு பொருட்கள் என அனைத்து துறையிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது.

    அதிலும் ஜவுளித்துறையில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடர்ந்து 5 ஆண்டாக இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. இந்தியாவின் ஜவுளி வணிகத்தில் தமிழகத்தின் பங்கு மட்டும் 33 விழுக்காடு.

    நேரடியாக 31 லட்சம் தொழிலாளர்களுக்கு தமிழக ஜவுளித்துறை வேலைவாய்ப்பு வழங்குகிறது. இதில் 61.12 விழுக்காடு பெண் தொழிலாளர்கள் என்பது கூடுதல் சிறப்பு. தி.முக. ஆட்சி அமைந்ததும் துணிகள் துறை என தனி துறை உருவாக்கினோம். தொழில்நுட்ப ஜவுளிதுறையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்னை, கோவையில் 2 கருத்தரங்குகளை நடத்தினோம்.

    இப்படி பல முயற்சிகள் எடுத்து இந்த துறையின் வளர்ச்சிக்கு உழைக்கக்கூடிய அமைச்சர் காந்தி மற்றும் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்துள்ளார்.

    இந்த துறை வளர்ச்சிக்காக அரசு செய்துள்ள திட்டங்கள், சலுகைகள், சாதனைகள் பற்றி அவர் உங்களிடம் பேசுவார். இந்த மாநாடு மூலமாக தமிழ்நாட்டில் ஜவுளித்துறையின் கட்டமைப்பு உலக வாடிக்கையாளர்களை சேர வேண்டும். சர்வதேச முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

    அமெரிக்கா விதித்துள்ள 50 விழுக்காடு வரியால் தமிழ்நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மீண்டு புதிய சந்தைகள் கண்டறிவது, வாங்குவோர், விற்போர் சந்திப்பு நடத்துவது, பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்குவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்துவது என பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம்

    இந்திய-ஐரோப்பிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. கோவை, மதுரை, தூத்துக்குடியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலமாக ஜவுளித்துறைக்கு மட்டும் 9 ஆயிரத்து 264 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த மாநாட்டிலும் ரூ.915 கோடி மதிப்பில் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக்கொள்கை 2025-2026-ம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு வேலைப்பளு காரணமாக நேரில் வந்து உங்களை சந்திக்க முடியவில்லை என்று சொன்னாலும் உங்களுக்கான ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

    பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜவுளி நிறுவனங்களுக்கு அதி நவீன நெசவு மற்றும் பின்னலாடை எந்திரங்கள் கொள்முதல் செய்ய 20 சதவீதம் மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்தியா, வெளிநாடுகளை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். மிகச்சிறந்த உள்கட்டமைப்பு கொண்ட தமிழ்நாட்டில் முதலீடு செய்து நீங்களும் வளர்ந்து, தமிழகத்திற்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் திராவிட மாடல் அரசின் பெருங்கனவில் ஜவுளித்தொழில் கணிசமான பங்கு வகிக்க வேண்டும். இந்த மாநாட்டின் வெற்றி இதற்கு பெரிதும் உதவும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கோவையில் நடந்த மாநாட்டை தொடங்கி வைத்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழ்நாடு இந்தியாவின் ஜவுளி பள்ளத்தாக்காக விளங்கி வருகிறது. கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் ஜவுளித்துறை மையமாக விளங்குகின்றன. 30 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் ஜவுளித்துறை மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

    நாடு முழுவதும் ஜவுளித்துறையில் பணியாற்றும் பெண்களில் 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். திராவிட மாடல் அரசு ஜவுளித்துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய ஜவுளித்துறை பங்களிப்பு வழங்கும் என நம்புகிறேன். தமிழ்நாடு அரசின் ஆதரவு ஜவுளித்துறைக்கு எப்போதும் இருக்கும். தமிழ்நாடு அரசு 6 சதவீத மானியத்தை மறுபரிசீலனை செய்து உயர்த்தும் என உறுதி அளிக்கிறேன். ஜவுளித்துறையில் அதிக முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்து வருகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து விழாவில் தொழில் தொடங்க ரூ.1,100 கோடிக்கும் அதிகமான நலத்திட்டங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் காந்தி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அரசு கைத்தறித்துறைத் செயலாளர் அமுதவல்லி, ஜவுளித்துறை இயக்குனர் லலிதா, கைத்தறி இயக்குனர் மகேஸ்வரி, நிர்வாக இயக்குனர் கவிதா, கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×