என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வில்லியனூர் அருகே வாலிபர்களை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே உள்ள அம்மணங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் எழிலரசன் (வயது 20). இவர் கடந்த 26-ந் தேதி தனது நண்பர் சசிதரனுடன் சங்கராபரணி ஆற்று பாலத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் 2 பேரையும் சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த எழிலரசன், சசிதரன் ஆகியோர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து எழிலரசன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் செல்லிப்பட்டு பகுதியை சேர்ந்த சஞ்சய், மருதுபாண்டி, ராஜேஷ், பிரசாந்த் ஆகிய 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி அருகே தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கோவிந்தசாலை முடக்குமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 69). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், சகாயராஜ் என்ற மகனும் உள்ளனர். அந்தோணிராஜ் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோயின் தாக்கம் குறையவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி ஊழல் இல்லாத மாநிலமாக மாறும் என்றும் தாமரை மலரும் என்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:-

    கடந்த 35 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், 52 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பதுச்சேரிக்கு 70 சதவீத மானிய உதவி வழங்கப்பட்டது. தற்போது முதல்வராக இருக்கும் நாராயணசாமி மத்திய மந்திரியாக இருந்தபோது, அந்த மானிய உதவியானது 30 சதவீதமாக குறைந்தது.

    நாராயணசாமி மத்திய மந்திரியாக இருந்தபோது, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 5000 கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தார். ஆனால், புதுச்சேரிக்கு அவர் எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. இந்த மாதிரியான நீதியைத் தான் அவர் புதுவைக்கு வழங்கியிருக்கிறார். இப்போது முதல்வராக இருக்கிறார்.

    இங்கே கூடியிருக்கிற உங்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது,  23க்கும் அதிகமான தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவதற்கான தெளிவான அறிகுறி தென்படுகிறது. புதுச்சேரியில் வளர்ச்சியை காண்பீர்கள். புதுச்சேரி ஊழல் இல்லாத மாநிலமாக இருக்கும். புதுச்சேரி மாறும், தாமரை மலரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    சட்டமன்றத்தை கூட்டி நாராயணசாமி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு நினைவிடம் அமைத்ததுடன் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். புதுவையிலும் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்குமாறு கோரிக்கை வைத்தோம். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இடத்துக்கு இடம் மாற்றி பேசுவதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வல்லமை பெற்றவர். தேர்தல் அறிக்கையில் சொல்லியவற்றில் 85 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் என்னுடன் நேரடியாக விவாதிக்க தயாரா?

    அவரது கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்கிறார்கள். அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தார். அதன் நிலை என்ன? இப்போது நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் விலகி உள்ளனர். எனவே முதல்-அமைச்சர் நாராயணசாமி தானாக பதவி விலகவேண்டும். சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.

    ஆளும் கட்சியில் இருந்து யார் விலகி எங்கள் கூட்டணி கட்சிகளில் இணைந்தாலும் வரவேற்போம். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. இதுதொடர்பாக தலைமையை கேட்டு முடிவு எடுப்போம்.

    இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

    புதுவை மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக தரத்தில் பீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதாவுக்கு நினைவகம், போயஸ்கார்டன் நினைவு இல்லமாக மாற்றம் போன்றவற்றால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இவை அனைத்துக்கும் மணிமகுடம் வைத்தாற்போல் ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதன்மூலம் வருகிற சட்டமன்ற தேர்தலில் 3வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி. மறைந்த தலைவர்களுக்கு சிலை வைக்க புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு அரசியல் செய்து வருகிறது. ஜெயலலிதாவின் சிலையை புதுவையில் வைக்க நடவடிக்கை எடுக்காத தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பாகூரை சேர்ந்த பா.ஜனதா துணைத்தலைவர் தங்க.விக்ரமனை புதிய எம்.எல்.ஏ.வாக மத்திய அரசு நியமித்ததால் புதுவை சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பலம் உயர்ந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு 30 எம்.எல்.ஏ.க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின்பேரில் 3 எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமிக்கும். கடந்த 2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையில் புதுவையில் காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்றது. ஓராண்டு ஆன நிலையில் 3 எம்.எல்.ஏ.க்களை நியமிக்க வில்லை.

    இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக 3 பேரை எம்.எல். ஏ.க்களாக நியமித்தது. பா.ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமித்தது.

    இவர்களின் நியமனத்தை காங்கிரஸ் அரசு ஏற்க மறுத்து சட்டசபைக்குள் அனுமதிக்க மறுத்து வந்தது. மத்திய அரசின் நேரடி நியமனத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.

    புதுவை சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என கோர்ட்டு தெரிவித்தது. இதனையடுத்து 3 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்வில் பங்கேற்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரண மடைந்தார். இதனால் அந்த இடம் காலியானது.

    புதுவை சட்டசபையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் வரையே உள்ளது. குறுகிய காலத்துக்கு புதிதாக எம்.எல்.ஏ.க்கள் நியமிக்க மாட்டார்கள் என கருத்து நிலவியது. ஆனால். மத்திய அரசு நேற்று பாகூரை சேர்ந்த பா.ஜனதா துணைத்தலைவர் தங்க.விக்ரமனை புதிய எம்.எல்.ஏ.வாக நியமித்தது.

    சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எம்.எல்.ஏ.க்களை இழுத்து புதுவை காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா.ஜனதா திட்ட மிடுவதாக கூறப்படுகிறது. இதற்கு சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் பலத்தை உயர்த்தும் நோக்கில்தான் புதிதாக எம்.எல்.ஏ.வை மத்திய அரசு நியமித்துள்ளதாக தெரிகிறது.

    புதுவை சட்டசபையில் ஆளும் கட்சியான காங்கிரசுக்கு சபாநாயகருடன் சேர்த்து 12 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. அரசை ஆதரிக்கும் தி.மு.க.வுக்கு 3, சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவர் ஆதரவோடு ஆளும் கட்சியான காங்கிரசுக்கு 16 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    தற்போது எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரசில் 7, அ.தி.மு.க. 4, பா.ஜனதா 3 (நியமனம்) என எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆக உயர்ந்துள்ளது. நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் பதவிகளை ராஜினமா செய்துள்ளனர்.

    பாகூர் எம்.எல்.ஏ. தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதால் 3 தொகுதிகள் காலியாக உள்ளது. தற்போதைய சூழலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 2 பேர் பதவி விலகினால் ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் சமநிலை அடைந்துவிடும். இதனால் காங்கிரஸ் அரசு கவிழும் வாய்ப்பும் ஏற்படும். இது காங்கிரசாரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாராயணசாமியை எதிர்த்து போட்டியிட தயார் என்று பா.ஜனதாவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    பா.ஜனதாவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லியில் இருந்து நேற்று மாலை புதுவை வந்தார்.

    மாநில எல்லையான கனகசெட்டிகுளத்தில் நமச்சிவாயத்திற்கு புதுவை மாநில பா.ஜனதா சார்பிலும், அவரது ஆதரவாளர்கள் தரப்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நமச்சிவாயம் காலாப்பட்டு விநாயகர் மற்றும் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அங்கிருந்து ஊர்வலமாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அங்கு இருந்து பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு முதல் முறையாக சென்றார்.

    அங்கு மாநிலத்தலைவர் சாமிநாதன், மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் நிர்வாகிகள் நமச்சிவாயத்தை வரவேற்றனர். அதை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

    பா.ஜனதாவில் இணைந்துள்ளது ஒரு தொடக்கம் தான். எங்களை போல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பல பேர் பா.ஜனதாவில் இணைய தயாராக உள்ளனர்.

    மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி. இதுவே எங்களின் தாரக மந்திரம். மக்களை ஏமாற்றுவதே முதல்-அமைச்சரின் நாராயணசாமியின் தொழிலாக உள்ளது.

    கிரண்பேடி அரசு திட்டங்களை தடுத்ததாகவும், மத்திய அரசு நிதி தரவில்லை என்றும் பொய் தகவல்களை பரப்பி மக்களை திசை திருப்புகிறார்.

    பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்ததா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். சுற்றுலாத்துறைக்கு ரூ.250 கோடி மத்திய அரசு நிதி புதுவை மாநிலத்துக்கு வந்துள்ளது.

    85 சதவீதம் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன் என கூறும் முதல்-அமைச்சர் ஏதாவது ஒன்றை விரல்விட்டு கூறமுடியுமா?

    புதுவையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லாமல் தங்கள் சுய நலத்திற்காக போராட்டக் களமாக மாற்றியதும், புதுவையை 20 ஆண்டுகள் பின்நோக்கி தள்ளியதும் தான் நாராயணசாமியின் சாதனை.

    வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தாமரை புதுவையில் மலரும். நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து நான் போட்டியிட தயார்

    இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

    புதுவை மாநில பா.ஜனதா துணைத்தலைவர் தங்க.விக்ரமனை நியமன எம்.எல்.ஏ.வாக நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 30 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபைக்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம்.

    அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜ.க.வை சேர்ந்த மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி ஆகியோரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.

    இதை எதிர்த்து முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது மாநில அரசின் பரிந்துரைகளின் பேரில் தான் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

    ஆனால் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் சட்டசபை நடவடிக்கையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

    இந்தநிலையில் பா.ஜ.க. பொருளாளராக இருந்த சங்கர் எம்.எல்.ஏ. கடந்த 17-ந் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் அவர் வகித்த நியமன எம்.எல்.ஏ. பதவியிடம் காலியானது.

    அந்த இடத்துக்கு புதுவை மாநில பா.ஜ.க. துணைத்தலைவரான பாகூரை சேர்ந்த தங்க.விக்ரமனை நியமித்து மத்திய உள்துறை கூடுதல் செயலர் கோவிந்த் மோகன் ஆணை பிறப்பித்துள்ளார்.

    இந்த ஆட்சிகாலம் முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நியமன எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலகி பா.ஜ.க.வில் இணைந்த பரபரப்பு அடங்குவதற்குள் நியமன எம்.எல்.ஏ. அறிவிக்கப்பட்டு இருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தொழில் தொடங்கலாம் என்று கூறி ஆந்திராவை சேர்ந்தவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த புதுவை சாமியாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கண்டமங்கலம்:

    புதுச்சேரியை சேர்ந்தவர் சர்வமுத்து ரமே‌‌ஷ். சாமியாரான இவர், ஆந்திராவில் கோவில் நடத்தி வருகிறார். அப்போது இவருக்கு ஆந்திரா கண்டவாணிபள்ளி பகுதியை சேர்ந்த ரவீந்திரநாத் (வயது 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் அவர், ரவீந்திரநாத்திடம் புதுவையில் தொழில் தொடங்கலாம். அதற்காக ரூ.10 லட்சம் தயார் செய்யுமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    இதை உண்மை என்று நம்பிய ரவீந்திரநாத்தும், ரூ.10 லட்சத்தை புரட்டினார். இதையடுத்து கடந்த 25-ந்தேதி 2 பேரும், காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டனர். வரும் வழியில் விழுப்புரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 2 பேரும் அறை எடுத்து தங்கினர். பின்னர் மறுநாள் காலையில் பார்த்தபோது, சர்வமுத்துரமேசை காணவில்லை. ரூ.10 லட்சமும் மாயமாகி இருந்தது. பணத்துடன் அவர் தப்பியோடியது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரவீந்திரநாத், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த ரவீந்திரநாத், இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியார் சர்வமுத்துரமேசை வலைவீசி தேடி வருகின்றனர்.
    கூட்டணிக்கு என்.ஆர். காங்கிரசை தலைமை தாங்கவோ, முதல்-அமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்தவோ பா.ஜனதா முன்வராவிட்டால் கூட்டணியிலிருந்து ரங்கசாமி விலகி தனி அணியாக போட்டியிட வாய்ப்புள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் ஆளும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. தனித்து போட்டியிட தயாரானது.

    இதற்காக முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சனை புதுவை பொறுப்பாளராக நியமித்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க வியூகமும் வகுத்தனர். ஜெகத்ரட்சகனும் புதுவைக்கு வந்து தெற்கு, வடக்கு மாநில தி.மு.க. செயற்குழு கூட்டத்தை நடத்தினார்.

    இதனிடையே தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் இல்லை. புதுவையில் தி.மு.க.வை வலுப்படுத்தவே ஜெகத்ரட்சகன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார். தமிழக முதல்-அமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின்தான் என ராகுல்காந்தியும் பிரசாரத்தில் தெரிவித்து வருகிறார்.

    இதனால் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஓரணியாக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

    புதுவையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகியவை தேர்தலுக்கு பிறகு கூட்டணியாகி விட்டனர். பாராளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களில் இந்த கூட்டணி நீடித்தது. தற்போதும் பா.ஜனதா கூட்டணியில்தான் என்.ஆர். காங்கிரஸ் நீடிக்கிறது என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    வருகிற 31-ந்தேதி புதுவைக்கு வரும் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    புதுவையை பொறுத்தவரை என்.ஆர். காங்கிரஸ் தான் பிரதான எதிர்க்கட்சி. கூட்டணிக்கு என்.ஆர். காங்கிரஸ்தான் தலைமையேற்க வேண்டும் என கட்சியின் நிறுவனர் ரங்கசாமி விரும்புகிறார்.

    அதேநேரத்தில் பா.ஜனதாவில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் இணைந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மாநில தலைவராக இருந்த நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றது. அவர் பா.ஜனதாவில் இணைந்துள்ளதால் கூட்டணியில் எந்த கட்சி தலைமை வகிப்பது? முதல்-அமைச்சர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்ற குழப்பம் உருவாகியுள்ளது.

    ஒருவேளை கூட்டணிக்கு என்.ஆர். காங்கிரசை தலைமை தாங்கவோ? முதல்-அமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்தவோ பா.ஜனதா முன்வராவிட்டால் கூட்டணியிலிருந்து ரங்கசாமி விலகி தனி அணியாக போட்டியிட வாய்ப்புள்ளது.

    காங்கிரஸ் தி.மு.க. ஒரு அணியாகவும், பா.ஜனதா, அ.தி.மு.க. மற்றொரு அணியாகவும், என்.ஆர். காங்கிரஸ் தனி அணியாகவும் தேர்தலை சந்திக்கும். இதனால் மும்முனை போட்டி உருவாக வாய்ப்புள்ளது.

    புதுச்சேரியில் பா.ஜ.க.வுக்கு செல்பவர்களின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என்று முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள சேத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மறைந்த எம்.எல்.ஏ.வும், முன்னாள் மேயருமான சவுந்தரரங்கன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் பெயர்ப் பலகை திறப்பு விழா நேற்று  நடைபெற்றது.

    விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு, பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். இதில் அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ், முதன்மை கல்வி அதிகாரி அல்லி, துணை இயக்குனர் கோவிந்தராஜன் மற்றும் சவுந்தரரங்கனின் குடும்பத்தினர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    முன்னதாக, திரு-பட்டினம் காந்தி மார்க்கெட் வளாகத்தில் வைத்திலிங்கம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.18 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணியை நாராயணசாமி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சமுதாயக்கூடம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களை நாராயணசாமி திறந்து வைத்தார். 

    விழாவின்போது முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    புதுச்சேரியில் கடந்த 4½ ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளது. கடும் நிதி நெருக்கடியில் மக்கள் பணியை செம்மையாக செய்து வருகிறோம்.

    புதுச்சேரிக்கு கொரோனா தடுப்பூசி மத்திய அரசு கொடுத்தால் மக்களுக்கு செலுத்த தயாராக உள்ளோம். இல்லாவிட்டால் மாநில அரசு மூலம் இலவசமாக மக்களுக்கு செலுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்போம்.

    புதுச்சேரி ஆட்சியில் யார் எப்படி செயல்பட்டார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே காங்கிரஸ் கட்சியை விட்டு சென்றுள்ளனர். அதற்காக அவர்கள் சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல. 

    நமச்சிவாயம் மட்டுமல்ல, எந்த அமைச்சர் பணியிலும் நான் தலையிட்டது கிடையாது. கட்சியில் இருந்தவரை கவர்னரை எதிர்த்துவிட்டு, தற்போது, கவர்னருடன் இணக்கமாக சென்றிருக்க வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது. 

    இன்னும் சொல்லப்போனால், கவர்னர் நடவடிக்கைகளை கண்டித்து அவரே பல போராட்டங்கள் நடத்தியுள்ளார். மேடைகளில் பேசியுள்ளார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் தற்போது, கட்சியை விட்டு வெளியில் செல்லவேண்டும் என்பதற்காக ஏதேதோ காரணங்களை கூறி வருகிறார்.

    புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி இப்போதும் உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, கட்சி தலைவர்கள் உரிய முடிவு எடுப்பார்கள். அதன்படி நாங்கள் செயல்படுவோம். முக்கியமாக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் இனி கட்சியிலிருந்து விலக மாட்டார்கள். புதுச்சேரியில் யார் பா.ஜ.க.விற்கு சென்றாலும், அவர்கள் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்எல்ஏ, தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் பாஜகவில் இணைந்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தவர் நமச்சிவாயம். ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான். இவர்கள் இருவரும் 26-ந் தேதி சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் சிவக்கொழுந்துவை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தனர்.

    தற்போது அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் இருவரும் பாஜக கட்சியில் இணைந்தனர்.
    முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து ரங்கசாமி பேட்டி அளித்தார்.
    புதுச்சேரி:

    என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை, அடையாள அட்டையை இணையதளம் வழியாக பெறுவதற்கான நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

    புதிய இணையதளத்தை என்.ஆர்.காங்கிரஸ் நிறுவன தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தொடங்கி வைத்தார். முதலாவதாக அவரது பெயர் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டையை பெற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதன்பின் நிருபர்களிடம் ரங்கசாமி கூறுகையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. புதுவையில் தற்போது சாலைகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி உள்ளன.

    எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இதை அரசின் கவனத்துக்கு பத்திரிகைகள் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், பா.ஜ.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தொடருகிறதா? கூட்டணிக்கு தலைமை யார்? முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? பா.ஜ.க.வில் நமச்சிவாயம் சேருகிறாரே? என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த ரங்கசாமி, நாங்கள் பா.ஜ.க. கூட்டணியில் தொடருகிறோம். வருகிற 31-ந்தேதி புதுச்சேரிக்கு வரும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசுவேன்.

    முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் முதலில் பா.ஜ.க.வில் சேரட்டும். யார் கூட்டணிக்கு தலைமை என்பதெல்லாம் பேச்சுவார்த்தையின்போது தெரியவரும் என்று குறிப்பிட்டார்.

    காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நமச்சிவாயம் பா.ஜ.க.வில் இணைய டெல்லி சென்ற நிலையில், கூட்டணி தலைமை குறித்து ரங்கசாமி தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 3 முறை முதல்-அமைச்சர் பதவி வகித்துள்ள ரங்கசாமி முதல்-அமைச்சர் பதவியை விட்டுத் தரமாட்டார் என்று அவரது கட்சியினர் தெரிவித்தனர்.
    அமைச்சர் நமச்சிவாயம்.
    அதேநேரத்தில் நமச்சிவாயத்தையே முதல்-அமைச்சர் வேட்பாளராக பா.ஜ.க. தலைமை அறிவிக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இத்தகைய சூழலில் தன்னை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்காவிட்டால் ரங்கசாமி கூட்டணி குறித்த முடிவினை மறுபரிசீலனை செய்ய தயங்கமாட்டார் என்று கூறப்படுகிறது.
    ×