என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுவை சட்டசபைக்கு 30 எம்.எல்.ஏ.க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின்பேரில் 3 எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமிக்கும். கடந்த 2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையில் புதுவையில் காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்றது. ஓராண்டு ஆன நிலையில் 3 எம்.எல்.ஏ.க்களை நியமிக்க வில்லை.
இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நேரடியாக 3 பேரை எம்.எல். ஏ.க்களாக நியமித்தது. பா.ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமித்தது.
இவர்களின் நியமனத்தை காங்கிரஸ் அரசு ஏற்க மறுத்து சட்டசபைக்குள் அனுமதிக்க மறுத்து வந்தது. மத்திய அரசின் நேரடி நியமனத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.
புதுவை சட்டசபைக்கு எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என கோர்ட்டு தெரிவித்தது. இதனையடுத்து 3 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்வில் பங்கேற்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரண மடைந்தார். இதனால் அந்த இடம் காலியானது.
புதுவை சட்டசபையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் வரையே உள்ளது. குறுகிய காலத்துக்கு புதிதாக எம்.எல்.ஏ.க்கள் நியமிக்க மாட்டார்கள் என கருத்து நிலவியது. ஆனால். மத்திய அரசு நேற்று பாகூரை சேர்ந்த பா.ஜனதா துணைத்தலைவர் தங்க.விக்ரமனை புதிய எம்.எல்.ஏ.வாக நியமித்தது.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எம்.எல்.ஏ.க்களை இழுத்து புதுவை காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா.ஜனதா திட்ட மிடுவதாக கூறப்படுகிறது. இதற்கு சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் பலத்தை உயர்த்தும் நோக்கில்தான் புதிதாக எம்.எல்.ஏ.வை மத்திய அரசு நியமித்துள்ளதாக தெரிகிறது.
புதுவை சட்டசபையில் ஆளும் கட்சியான காங்கிரசுக்கு சபாநாயகருடன் சேர்த்து 12 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. அரசை ஆதரிக்கும் தி.மு.க.வுக்கு 3, சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவர் ஆதரவோடு ஆளும் கட்சியான காங்கிரசுக்கு 16 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
தற்போது எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரசில் 7, அ.தி.மு.க. 4, பா.ஜனதா 3 (நியமனம்) என எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆக உயர்ந்துள்ளது. நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் பதவிகளை ராஜினமா செய்துள்ளனர்.
பாகூர் எம்.எல்.ஏ. தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதால் 3 தொகுதிகள் காலியாக உள்ளது. தற்போதைய சூழலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 2 பேர் பதவி விலகினால் ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் சமநிலை அடைந்துவிடும். இதனால் காங்கிரஸ் அரசு கவிழும் வாய்ப்பும் ஏற்படும். இது காங்கிரசாரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
பா.ஜனதாவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லியில் இருந்து நேற்று மாலை புதுவை வந்தார்.
மாநில எல்லையான கனகசெட்டிகுளத்தில் நமச்சிவாயத்திற்கு புதுவை மாநில பா.ஜனதா சார்பிலும், அவரது ஆதரவாளர்கள் தரப்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நமச்சிவாயம் காலாப்பட்டு விநாயகர் மற்றும் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அங்கிருந்து ஊர்வலமாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அங்கு இருந்து பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு முதல் முறையாக சென்றார்.
அங்கு மாநிலத்தலைவர் சாமிநாதன், மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் நிர்வாகிகள் நமச்சிவாயத்தை வரவேற்றனர். அதை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
பா.ஜனதாவில் இணைந்துள்ளது ஒரு தொடக்கம் தான். எங்களை போல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து பல பேர் பா.ஜனதாவில் இணைய தயாராக உள்ளனர்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி. இதுவே எங்களின் தாரக மந்திரம். மக்களை ஏமாற்றுவதே முதல்-அமைச்சரின் நாராயணசாமியின் தொழிலாக உள்ளது.
கிரண்பேடி அரசு திட்டங்களை தடுத்ததாகவும், மத்திய அரசு நிதி தரவில்லை என்றும் பொய் தகவல்களை பரப்பி மக்களை திசை திருப்புகிறார்.
பிரதமர் வீடு கட்டும் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்ததா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். சுற்றுலாத்துறைக்கு ரூ.250 கோடி மத்திய அரசு நிதி புதுவை மாநிலத்துக்கு வந்துள்ளது.
85 சதவீதம் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன் என கூறும் முதல்-அமைச்சர் ஏதாவது ஒன்றை விரல்விட்டு கூறமுடியுமா?
புதுவையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லாமல் தங்கள் சுய நலத்திற்காக போராட்டக் களமாக மாற்றியதும், புதுவையை 20 ஆண்டுகள் பின்நோக்கி தள்ளியதும் தான் நாராயணசாமியின் சாதனை.
வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தாமரை புதுவையில் மலரும். நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து நான் போட்டியிட தயார்
இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.
புதுவையில் ஆளும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. தனித்து போட்டியிட தயாரானது.
இதற்காக முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சனை புதுவை பொறுப்பாளராக நியமித்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க வியூகமும் வகுத்தனர். ஜெகத்ரட்சகனும் புதுவைக்கு வந்து தெற்கு, வடக்கு மாநில தி.மு.க. செயற்குழு கூட்டத்தை நடத்தினார்.
இதனிடையே தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் இல்லை. புதுவையில் தி.மு.க.வை வலுப்படுத்தவே ஜெகத்ரட்சகன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார். தமிழக முதல்-அமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின்தான் என ராகுல்காந்தியும் பிரசாரத்தில் தெரிவித்து வருகிறார்.
இதனால் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஓரணியாக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
புதுவையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகியவை தேர்தலுக்கு பிறகு கூட்டணியாகி விட்டனர். பாராளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களில் இந்த கூட்டணி நீடித்தது. தற்போதும் பா.ஜனதா கூட்டணியில்தான் என்.ஆர். காங்கிரஸ் நீடிக்கிறது என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
வருகிற 31-ந்தேதி புதுவைக்கு வரும் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதுவையை பொறுத்தவரை என்.ஆர். காங்கிரஸ் தான் பிரதான எதிர்க்கட்சி. கூட்டணிக்கு என்.ஆர். காங்கிரஸ்தான் தலைமையேற்க வேண்டும் என கட்சியின் நிறுவனர் ரங்கசாமி விரும்புகிறார்.
அதேநேரத்தில் பா.ஜனதாவில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் இணைந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மாநில தலைவராக இருந்த நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றது. அவர் பா.ஜனதாவில் இணைந்துள்ளதால் கூட்டணியில் எந்த கட்சி தலைமை வகிப்பது? முதல்-அமைச்சர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்ற குழப்பம் உருவாகியுள்ளது.
ஒருவேளை கூட்டணிக்கு என்.ஆர். காங்கிரசை தலைமை தாங்கவோ? முதல்-அமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்தவோ பா.ஜனதா முன்வராவிட்டால் கூட்டணியிலிருந்து ரங்கசாமி விலகி தனி அணியாக போட்டியிட வாய்ப்புள்ளது.
காங்கிரஸ் தி.மு.க. ஒரு அணியாகவும், பா.ஜனதா, அ.தி.மு.க. மற்றொரு அணியாகவும், என்.ஆர். காங்கிரஸ் தனி அணியாகவும் தேர்தலை சந்திக்கும். இதனால் மும்முனை போட்டி உருவாக வாய்ப்புள்ளது.







