என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அமைச்சரவையில் எடுத்த முடிவின் படி புறவழிச்சாலைக்கு டாக்டர் கலைஞர் புறவழி சாலைஎன ஏன் பெயர் சூட்டவில்லை என நாராயணசாமியுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒரு நாள் சுற்று பயணமாக காரைக்காலுக்கு சென்றார்.

    காரைக்கால் மாவட்டத்தில் அவர் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றார். இதில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள காரைக்கால் மேற்கு புறவழிசாலை திறப்பு விழாவில் அவர் பங்கேற்று புறவழி சாலையை திறந்து வைத்தார்.

    அப்போது காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். அவர்கள் மேடையில் இருந்த முதல்- அமைச்சர் நாராயணசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சரவையில் எடுத்த முடிவின் படி புறவழிச்சாலைக்கு டாக்டர் கலைஞர் புறவழி சாலைஎன ஏன் பெயர் சூட்டவில்லை என கேள்வி எழுப்பினர்.

    திறப்பு விழா அழைப்பிதழில் கூட மேற்கு புறவழி சாலை என்று மட்டும் தான் இடம்பெற்றுள்ளது என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் சாலைக்கு அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் கூட கலைஞர் பெயர் இடம் பெறவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதனையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி அவர்களை சமாதானம் செய்தார். காரைக்கால் மாவட்ட கலெக்டரை (பொறுப்பு) அழைத்து 2 நாட்களுக்குள் சாலையின் பெயர் பலகையில் டாக்டர் கலைஞர் மேற்கு புறவழிசாலை என்ற பெயரை எழுதும்படி முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டுக் கொண்டார். இதனையடுத்து தி.மு.க.வினர் அங்கிருந்து வெளியேறினர்.

    வில்லியனூரை அடுத்த உறுவையாறு பகுதியில் தண்ணீர் தொட்டியில் பதுங்கியிருந்த 6 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது.
    வில்லியனூர்:

    வில்லியனூரை அடுத்த உறுவையாறு பகுதியில் தனியார் கம்பெனி ஒன்று உள்ளது. அங்குள்ள தண்ணீர் தொட்டியில் பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். 

    இதுகுறித்து அவர், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். வனத்துறை ஊழியர் கண்ணதாசன் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தண்ணீர் தொட்டியில் பதுங்கியிருந்த நல்ல பாம்பை பிடித்தனர். அது 6 அடி நீளம் இருந்தது. பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.
    நெட்டப்பாக்கம் அருகே அரசு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெட்டப்பாக்கம்:

    நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லுார் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 51), அரசு ஊழியர். இவர் நேற்று முன்தினம் மாலை மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார்.

    இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே ஏகாம்பரம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது மகன் அருள்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஏகாம்பரத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. திமுக இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. வரும் சட்டமன்ற தேர்தலை அந்த கூட்டணியில் நீடித்து சந்திக்க விரும்பவில்லை.

    காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி தனித்தோ, மாற்று கூட்டணி அமைத்தோ போட்டியிட விரும்புகின்றனர். இதனால் காங்கிரஸ் கூட்டணி கவர்னருக்கு எதிராக நடத்திய ஆலோசனைக்கூட்டம், தர்ணா போராட்டம், கையெழுத்து இயக்கம் உள்ளிட்டவற்றை புறக்கணித்தனர்.

    மேலும் தங்கள் கருத்தை கட்சி தலைமையிடமும் தெரிவித்தனர்.

    இதற்கேற்ப கடந்த மாதம் முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் புதுவை மாநில தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு செயல் வீரர்கள் கூட்டமும் நடத்தினார். இதனிடையே கூட்டணியில் குழப்பம் இல்லை, கட்சியை வலுப்படுத்தவே ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டுள்ளார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

    இதனால் மீண்டும் காங்கிரசோடு இணைந்து புதுவை தி.மு.க.வினர் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் தொடர்ந்து தனித்து செயல்படுகின்றனர்.

    சமீபத்தில், கூட்டணி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்து விட்டார். இந்நிலையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால் தி.மு.க. இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தொடர்ந்து புதுவை தி.மு.க.வினர் காங்கிரசை புறக்கணித்து வருகின்றனர்.

    அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு காலியாக உள்ள அமைச்சர் பதவிகளை வழங்கி கட்சியில் இருந்து வெளியேறுவதை தடுக்க முதலமைச்சர் நாராயணசாமி முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மீதான அதிருப்தியால் அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து நமச்சிவாயம் பா.ஜனதாவில் இணைந்தார்.

    அவருடன் ஊசுடு தனி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த தீப்பாய்ந்தானும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்தார். ஏற்கனவே புதுவை அரசியலில் இருந்து விலக முடிவெடுத்துள்ள மல்லாடிகிருஷ்ணராவ், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி இந்த கடிதத்தை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர் அலுவலகம், வீடு, கார் ஆகியவற்றை அரசிடம் திரும்ப ஒப்படைத்து விட்டார். தனது துறைகள் தொடர்பான எதனையும் அவர் கவனிப்பதில்லை.

    இதனால் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் துறைகளை முதல்-அமைச்சர் நாராயணசாமியே கூடுதலாக கவனித்து வருகிறார்.

    அமைச்சர்கள் பதவி விலகல், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. விலகல், பா.ஜனதாவில் இணைந்தது ஆகியவை புதுவை காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. இதனை தடுக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்.

    சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர்கள் தினேஷ் குண்டுராவ், வீரப்பமொய்லி, பல்லம்ராஜூ, சஞ்சய்தத், ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அவர்களை தனியாக சந்தித்த எம்.எல்.ஏ.க்கள், காலியாக உள்ள அமைச்சர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் சுழற்சி அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    இதனையடுத்து அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு காலியாக உள்ள அமைச்சர் பதவிகளை வழங்கி கட்சியில் இருந்து வெளியேறுவதை தடுக்க நாராயணசாமி முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது.

    கட்சி மேலிடத்திடம் இதுதொடர்பாக பேசி வருகிறார். யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது? என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. புதிதாக அமைச்சர் பதவி வழங்கினால் மற்ற எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்து கட்சியை விட்டு வெளியேறக்கூடாது என்றும் நாராயணசாமி ஆலோசித்து வருகிறார்.

    இதில் முடிவெடுக்கும் பட்சத்தில் ஓரிரு நாளில் புதிய அமைச்சர் பதவி நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்ப பெற கோரி வருகிற 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தடையாக இருந்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில் கவர்னரை திரும்ப பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், ரா‌‌ஷ்ட்ரீய ஜனதாதள மாநில தலைவர் சஞ்சீவி உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்ப பெற கோரி கடந்த 26-ந் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஆனால் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவர்னர் கிரண்பெடியும் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

    எனவே கவர்னரை கண்டித்து நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) அண்ணாசிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம். அவர் வருகிற 10-ந் தேதி நேரம் ஒதுக்கி உள்ளார்.

    அன்றைய தினம் டெல்லி சென்று அவரை சந்தித்து கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட கையெழுத்துகளை அவரிடம் ஒப்படைக்க உள்ளோம். மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை மனுவும் அளிக்க உள்ளோம்.

    மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு புதுவையை வஞ்சித்து வரும் நிலை, கவர்னர் கிரண்பெடி மாநில அரசுக்கு எந்தெந்த வழிகளில் தொல்லை கொடுத்து வருகிறார் என்பது குறித்தும், முழு அடைப்பு போராட்டம் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூற வருகிற 14, 15-ந் தேதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் தெருமுனை பிரசாரம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவை வில்லியனூர் அருகே செல்போனில் 4 மணி நேரம் ஆன்லைன் கேம் விளையாடிய பிளஸ்-2 மாணவன் மயங்கி விழுந்து இறந்து போனார்.
    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் வி.மணவெளி அன்னைதெரேசா நகர் தண்டுகரை வீதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் கறவை மாடு வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது இளைய மகன் தர்‌ஷன் (வயது16). இவர் சுல்தான்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்து 3 மணிக்கு தர்‌ஷன் வீட்டுக்கு வந்தார். அதுமுதல் வீட்டின் தனி அறையில் கட்டிலில் படுத்துக்கொண்டே தர்‌ஷன் காதில் ஹெட்போன் வைத்துக்கொண்டு செல்போனில் ஆன்லைனில் (பையர்வால்) விளையாடிக் கொண்டிருந்தார். இரவு 7.30 மணிக்கு சாப்பிட அழைப்பதற்காக அவரது தாய் ஜெய்சித்ரா தர்‌ஷனை எழுப்ப வந்தார். அப்போது வாயில் நுரை தள்ளியபடி சுயநினைவு இன்றி மகன் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தர்‌ஷனை மீட்டு அரும்பார்த்தபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தர்‌ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முதலியார்பேட்டையில் ரோட்டில் நடந்து சென்ற ஆசிரியையிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் செல்போனை பறித்து சென்றனர்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லூசியா(வயது 31). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கடந்த 26-ந் தேதி கடலூர் மெயின்ரோட்டில் மரப்பாலம் அருகே செல்போனில் பேசிய படி நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென லூசியாவின் கையில் இருந்த செல்போனை பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். அதற்குள் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். 

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    காரைக்கால்:

    காரைக்கால் வள்ளலார் நகர் பிள்ளைதோட்டத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் விஜயபாஸ்கர் (வயது 19). இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்தனர்.

    இதனால் மனமுடைந்த விஜயபாஸ்கர், நேற்று முன்தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

    இதுகுறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முதல்-அமைச்சர் வேட்பாளர் பின்னர் முடிவு செய்யப்படும் என்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    அரசியல் பயணமாக புதுவை வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று மதியம் அக்கார்டு ஓட்டலில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மதிய உணவு சாப்பிட்டார். இதில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி, என்.எஸ்.ஜெ. ஜெயபால் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. ராதாகிரு‌‌ஷ்ணன், அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ, மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர், கோகுலகிரு‌‌ஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மதிய உணவுக்கு பின்னர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஜே.பி. நட்டா ஆலோசனை நடத்தினார். அப்போது புதுவை மாநில அரசியல் நிலவரம் குறித்தும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த கூட்டம் சுமார் 20 நிமிடம் நீடித்தது.

    கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது, பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாவை நாங்கள் மரியாதையின் நிமித்தமாக சந்தித்து பேசினோம் என்றார். கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என கேட்டபோது, ‘அது குறித்து பின்னர் பேசி முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.
    காங்கிரஸ் இல்லாத புதுச்சேரியை உருவாக்குவோம் என்று மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ கூறினார்.
    புதுச்சேரி:

    பாரதீய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் ரோடியர் மில் திடலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    காங்கிரஸ் இல்லாத புதுச்சேரியை உருவாக்குவதே நமது கோ‌‌ஷம். அதற்காக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் நம்மிடையே வந்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 200 பேர் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளை ராஜினாமா செய்ய அந்த கட்சியின் அலுவலகத்துக்கு சென்றார்கள். ஆனால் அந்த அலுவலகம் பூட்டப்பட்டு கிடந்தது.

    புதுவையில் தாமரை மலர்ந்தால் புதுச்சேரி ஒளிரும். புதுவையில் இனிமேல் காங்கிரசுக்கு ஓட்டு இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் சங்கு ஊதிவிட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தந்து வருகிறார். நாடு முழுவதும் அவரது கீழ் வரும். புதுவையில் தாமரை மலரும்போது மக்களுக்கான திட்டங்கள் நிறைவேறும்.

    இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசினார்.
    வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.விடம் வேட்பாளர்கள் இல்லை. பா.ஜ.க.வினர் வேட்பாளர்களை பிடித்து வருகின்றனர் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி வீரப்ப மொய்லி தலைமை தாங்கி பேசினார். மாநில பொறுப்பாளர் தினே‌‌ஷ் குண்டுராவ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறவேண்டும். அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மாநிலத்தில் பா.ஜ.க.வால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற அனுமதி வழங்குவது இல்லை. தேவையில்லாத கேள்விகள் கேட்டு கோப்புகளை திரும்பி அனுப்புகிறார்.

    இதனால் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஒருபுறம் கவர்னர் தொல்லை, மற்றொரு புறம் பிரதமர் மோடி தொல்லை. புதுவைக்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அனுமதி வழங்குவது இல்லை. தேவையான நிதியை ஒதுக்குவது இல்லை. அதையும் தாண்டி நமது அரசின் செயல்பாடு மூலம் புதுவை மாநிலம் 10 சதவீதம் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது.

    புதுவை மாநிலத்தில் ஒரு அதிகாரிகளை கூட மாற்ற விடுவது இல்லை. காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப அனுமதி மறுக்கப்படுகிறது. தற்போது மின்துறையில் காலியாக உள்ள என்ஜினீயர் பணியிடங்கள், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவலர் பணிக்கான தகுதித்தேர்வு விரைவில் நடத்தப்படும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.விடம் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை. பா.ஜ.க.வினர் தற்போது தான் வேட்பாளர்களை பிடிக்கின்றனர். நம்மிடம் பலமான வேட்பாளர்கள் உள்ளனர். நம்மிடம் இருந்தவர்கள் சிலர் தற்போது நம்மை விட்டு சென்று விட்டனர். அவர்களை பற்றி நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை சமூக வலைத்தளங்களில் பொதுமக்களே விமர்சனம் செய்யத்தொடங்கி விட்டனர். நாம் ஒற்றுமையாக இருந்தால் புதுவையில் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. கட்சியில் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி வீரப்ப மொய்லி கூறியதாவது:-

    நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் புதுவை மாநிலத்தில் கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது புதுவை மாநிலத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் பா.ஜ.க ஆட்சியில் இதுவரை புதுவைக்கு கொண்டுவந்த திட்டம் என்ன?, மத்தியில் நேரு ஆட்சியில் இருந்த போது புதுவை மீது தனி கவனம் செலுத்தப்பட்டது. தற்போது மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

    அரசின் நடவடிக்கைகளில் கவர்னர் தொடர்ந்து தலையிடுகிறார். எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிப்பதில்லை. எனவே அவர் மீது புதுவை அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெறுவது உறுதி. இது நமக்கு மிகவும் முக்கியமான தேர்தல். நாம் வெற்றி பெற்றால் இந்த கவர்னர் புதுவையில் இருக்கமாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி., கட்சியின் மாநில பொறுப்பாளர் சஞ்சய் தத், முன்னாள் அமைச்சர் வல்சராஜ், கட்சியின் துணைத்தலைவர் பி.கே.தேவதாஸ், பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×