search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் விளையாட்டு"

    • சாய்குமார் ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்ததால் சோகமாக இருந்துள்ளார்.
    • தற்கொலை குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கேட்டு தோட்டம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்தவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சாய்குமார் (வயது 32) என்பதும், இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    அவர் ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்ததால் சோகமாக இருந்துள்ளார். மேலும் சொந்த ஊரில் உள்ள தனது குடும்பத்தினரிடம் தனக்கு பண தேவை உள்ளது. அனுப்பி வைக்குமாறும் இல்லையென்றால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்வதாக செல்போனில் பேசி உள்ளார்.

    இந்தநிலையில் அவர் திருப்பூர் வந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும்.
    • ஆன்லைனில் விளையாடுபவர்கள் தாங்கள் வென்ற முழு தொகையையும் தாங்களே எடுத்து கொள்ள முடியாது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழ்நாடு அரசாங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் விவரங்கள்:

    இந்த விளையாட்டு பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு. ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். இந்த விளையாட்டை வடிவமைத்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர். விளையாடுவோரின் சுய அறிவிப்பு எப்படி சரி பார்க்கப்படுகிறது என இந்த நிறுவனங்கள் விளக்குவதில்லை. மேலும் விளையாடுபவர்கள் தாங்கள் வென்ற முழு தொகையையும் தாங்களே எடுத்து கொள்ள முடியாது. ஒரு பகுதியை ஆன்லைன் நிறுவனங்கள் எடுத்து கொள்ளும். நேரடியாக விளையாடும்போது முழு பணமும் கையில் கிடைக்கும். இவ்வாறு அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வழக்கில் அரசாங்கத்தின் சார்பாக அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரமும், மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் ஆஜராகிறார்கள்.

    இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இம்மாதம் 14ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

    • டெல்லியில் 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது.
    • இதில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடந்தது.

    காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில அரசுகளின் சார்பில் நிதி அமைச்சகத்தின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசின் தடையை பாதிக்காத வகையில் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படும். இது அமல்படுத்தப்பட்டு 6 மாதத்துக்குப் பிறகு இந்த முடிவு குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    • ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
    • தமிழக அரசின் பதில் வாதத்துக்காக விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    இன்று மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும், இதன்மூலம் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வாதத்தை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் பதில் வாதத்துக்காக விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டு, திறமைக்கான விளையாட்டு என உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில், அதற்கு தடை விதித்து சட்டம் இயற்ற முடியாது என ஆன்லைன் விளையாட்டு நிறுவன வழக்கறிஞர்கள் வாதாடியது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய மந்திரிகள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
    • புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களையும், ஜிஎஸ்டி திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

    இந்த கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் வருவாய்க்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மந்திரிகள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இவை ஜிஎஸ்டி வரம்புக்குள் வராத நிலையில் இனி 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.

    இதுதொடர்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள், குதிரை பந்தயம் மற்றும் கேசினோக்களின் மொத்த வருமானம் மீது 28 சதவீத வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்ததாக தெரிவித்தார்.

    'புற்றுநோய்க்கான மருந்துகள், அரிய வகை நோய்க்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்காக உணவு பொருட்கள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதள சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • 21-ந் தேதியில் இருந்து இந்த விதிகள் அமலுக்கு வருகின்றன.
    • ஒரு மாதத்தில் ஆணையத்தில் இந்த நிறுவனங்கள் தங்களை பதிவு செய்ய வேண்டும்.

    சென்னை :

    தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து, அதை நிறைவேற்றி, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தது. நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த அந்த மசோதா மீது சில விளக்கங்களைக் கேட்டு அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார்.

    எனவே அந்த சட்ட மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைத்தது. இதுவும் சில நாட்கள் கிடப்பில் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து மசோதாவை சட்டமாக்கி உடனடியாக அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. தற்போது அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அதை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    இந்த நிலையில் 21-ந் தேதியிட்ட தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டியின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இது, தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் மற்றும் ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தும் விதிகள்-2023 என்று அழைக்கப்படும். 21-ந் தேதியில் இருந்து இந்த விதிகள் அமலுக்கு வருகின்றன. தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை சட்டம்-2022-க்கான சட்ட விதியாக இது ஏற்கப்பட வேண்டும்.

    ஆன்லைன் விளையாட்டுகளை அளிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் வெளியூர் நிறுவனங்கள் தங்களின் பெயரை பதிவு செய்தல், இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது. ஒரு மாதத்தில் ஆணையத்தில் இந்த நிறுவனங்கள் தங்களை பதிவு செய்ய வேண்டும். சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் செயலாளரிடம் ஒரு லட்சம் கொடுத்து, பெயர் பதிவு சான்றிதழுக்கான விண்ணப்பத்தை பெறலாம்.

    இந்த விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு, அந்த நிறுவனத்தின் பெயரை பதிவு செய்வதையோ அல்லது விண்ணப்பத்தை நிராகரிக்கும் நடவடிக்கையையோ அதை கொடுத்த 15 நாட்களுக்குள் செயலாளர் மேற்கொள்ள வேண்டும். நிராகரிப்பதற்கு முன்பு, விண்ணப்பதாரருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

    தவறான தகவல்களை கொடுத்து சான்றிதழ் பெறப்பட்டால் அதற்கான விளக்க நோட்டீசை ஆணையம் அளிக்க வேண்டும். அந்த நோட்டீசுக்கு 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட ஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும்.

    ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அரசு நியமிக்கும். அவர்கள் 5 ஆண்டுகளோ அல்லது 70 வயது வரையிலோ, இதில் எது முதலாவது நேரிடுகிறதோ அதுவரை பதவியில் நீடிப்பார்கள். அவர்களுக்கு மறுபணி நியமனம் கிடையாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உண்மையான பணத்தை கையாளும் விளையாட்டுக்கு அனுமதி இல்லை.
    • பந்தயம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளும் அனுமதிக்கப்படாது.

    புதுடெல்லி

    ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த விதிமுறைகள் 2021-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பத்துறை விதிகளின் கீழ் அரசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த இறுதி வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப ராஜாங்க மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேற்று வெளியிட்டார். அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-

    ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக பல்வேறு சுய-ஒழுங்குமுறை அமைப்புகள் (எஸ்.ஆர்.ஓ.) இருக்கும். கட்டமைப்புகள் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான அனுமதியை அவை முடிவு செய்யும்.

    பல்வேறு தனியார் நிறுவனங்கள், சுய ஒழுங்குமுறை அமைப்புக்கான மாதிரியை அளித்துள்ளன. இது குறித்து அவற்றுடன் விவாதிக்கப்படும். சுய ஒழுங்குமுறை அமைப்பினை அரசு அறிவிக்கும். இது தன்னாட்சி அமைப்பாக இருக்கும். நாங்கள் 3 சுய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் தொடங்குவோம்.

    உண்மையான பணத்தை கையாள்கிற ஆன்லைன் விளையாட்டுகளும், பந்தயம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளும் அனுமதிக்கப்படாது.

    பணம் சேகரிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கே.ஒய்.சி. என்னும் வாடிக்கையாளர்கள் பற்றிய விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அரசுக்கு எதிராக ஆன்லைனில் அவ்வப்போது தவறான தகவல்கள் வெளியாகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

    இதுபற்றி மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் கூறும்போது, "ஆன்லைனில் மத்திய அரசு பற்றிய தவறான தகவல்களை வெளியிடும் பிரச்சினையில், மத்திய அரசு ஒரு நிறுவனத்தை எங்கள் அமைச்சகம் மூலம் அறிவிக்க முடிவு செய்துள்ளது. அந்த அமைப்பு, ஆன்லைனில் உள்ள அனைத்து உள்ளடக்க அம்சங்களையும் சரிபார்க்கும்" என தெரிவித்தார்.

    • வேலை காரணமாக காட்பாடிக்கு பணியிட மாறுதலாகி வந்த யோகேஸ்வர பாண்டியன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.
    • தனிமையில் இருந்த யோகேஸ்வர பாண்டியன் பொழுது போக்கிற்காக ஆரம்ப கட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கினார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கல்வி கடன் வழங்கும் கிளை இயங்கி வருகிறது. இங்கு விருதுநகரை சேர்ந்த மதிமுத்து என்பவரின் மகன் யோகேஸ்வர பாண்டியன் (வயது38). உதவி மேலாளராக பணியாற்றி வந்தார்.

    இவர் காட்பாடி வி.ஜிராவ் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். அதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். அதனை ஈடு கட்டுவதற்காக வங்கியில் கல்வி கடன் வாங்கிய மாணவ மாணவிகள் தவணை செலுத்திய இன்சூரன்ஸ் பிரீமியம் பணம் மற்றும் சிலரின் கல்விக் கடனை கையாடல் செய்து அந்த பணத்தை யோகேஸ்வர பாண்டியன் தனது 2 வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார்.

    இது பற்றிய தகவல் தெரியவந்ததும் வங்கி மேலாளர் சிவக்குமார் ஆய்வு செய்தார். அப்போது யோகேஸ்வரபாண்டியன் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 137 வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.34 லட்சத்து 10 ஆயிரத்து 622 கையாடல் செய்தது தெரிய வந்தது.

    புகாரின் பேரில் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து யோகேஸ்வர பாண்டியனை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    விருதுநகரை சேர்ந்த யோகேஸ்வர பாண்டியன் நல்ல குடும்பப் பின்னணியில் உள்ளவர். இவருடைய மனைவி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    வேலை காரணமாக காட்பாடிக்கு பணியிட மாறுதலாகி வந்த யோகேஸ்வர பாண்டியன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

    தனிமையில் இருந்த அவர் பொழுது போக்கிற்காக ஆரம்ப கட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடத் தொடங்கினார். முதலில் சிறிய அளவில் பணத்தை செலுத்தினார். பின்னர் விட்ட பணத்தை பிடித்தே ஆக வேண்டும் என்பதற்காக பெரிய தொகைகளை செலுத்த ஆரம்பித்தார்.

    ஆன்லைனில் மூழ்கி அடிமையான அவர் மீள முடியாமல் வேலை பார்த்த இடத்திலும் பணத்தை கையாடல் செய்ய துணிந்தார். அதன்படி வாங்கி வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து ரூ.34 லட்சம் கையாடல் செய்து ரம்மி விளையாடியுள்ளார்.

    அந்த பணத்தை அதில் இழந்தார். மேலும் அவர் தனது சொந்த பணம் ரூ.10 லட்சம் ரம்மி விளையாட்டில் இழந்ததாக தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் ரூ.45 லட்சம் வரை அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார்.

    தான் தவறு செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தவறுக்கு தண்டனை அனுபவித்து ஆக வேண்டும் என்ன செய்வது என அவர் மனம் வருந்தினார்.

    தற்போது அவரது வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டு விட்டது. நல்ல நிலையில் இருந்த அவர் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ரம்மி விளையாட்டு போன்றவற்றில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    • ஆன்லைன் சூதாட்டத்திற்கு இதுவரை 44 பேர் பலியாகி உள்ளனர் பலர் கடனாளியாகி உள்ளனர்.
    • தமிழக மக்களை பெரிதும் பாதிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

    சென்னை:

    40 பேரின் உயிரை பலி வாங்கிய ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடைவிதிக்க மறுக்கும் கவர்னர் ரவியை கண்டித்து சென்னை மிண்ட் மணிகூண்டு பகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

    போராட்டத்துக்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். வட சென்னை மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.

    மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி, தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர். தமிழக கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    அப்போது மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-

    40-க்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலி வாங்கிய ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடைவிதிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவை தமிழக கவர்னர் ரவி நிலுவையில் வைத்து சூதாட்ட முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆணவ போக்குடன் அந்த மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு இதுவரை 44 பேர் பலியாகி உள்ளனர் பலர் கடனாளியாகி உள்ளனர். தமிழக மக்களை பெரிதும் பாதிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். கடந்த நான்கு மாதங்களுக்குள் 12 பேர் இறந்து உள்ளனர்.

    பலர் லட்சாதிபதி ஆகும் என்ற கனவில் பல லட்சங்களை இழந்து உள்ளனர். இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதுகுறித்து நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு பொதுமக்களிடம் நடத்திய கருத்து கேட்பு ஆய்வு அறிக்கையில் ஆன்லைன் ரம்மிக்கு உடனடியாக தடை சட்டம் கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் அமலாகும் வரை கம்யூனிஸ்டு கட்சியினரின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஒப்புதல் தந்திருக்கிறார். அதைப் போல முந்தைய அரசாங்கம் இயற்றிய சட்டத்திற்கு அன்றைய கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார்.
    • ஒரு நீதிமன்றம், சட்டமன்றம் ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உண்டு

    சென்னை:

    ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி 2-வது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அடுத்தகட்டமாக தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு ரகுபதி கூறியதாவது:-

    தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ஒப்புதல் தந்திருக்கிறார். அதைப் போல முந்தைய அரசாங்கம் இயற்றிய சட்டத்திற்கு அன்றைய கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார். அது நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது நீதிமன்றம், சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி தள்ளுபடி செய்யவில்லை.

    வேறு சில காரணங்களை சொல்லி அதாவது இதில் கூறப்பட்டுள்ள காரணங்கள் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே நீங்கள் புதிய சட்டம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி சட்டமன்றத்துக்கு புதிய சட்டம் கொண்டு வருவதற்கு அதிகாரம் இருக்கிறது என்பதை நீதிமன்றமே தனது தீர்ப்பில் சொல்லி இருக்கிறது.

    அதன்படி இந்த புதிய சட்டம் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே ஒரு நீதிமன்றம், சட்டமன்றம் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு சட்டம் இயற்றுவதற்கு உரிமை உண்டு. நீங்கள் புதிய சட்டம் இயற்றுங்கள் இதில் உள்ள குறைபாடுகளை நீக்கிவிட்டு இயற்றுங்கள் என்று சொல்கிற போது அதை அதிகாரம் இல்லை என்று கூறி நீக்க எந்த அடிப்படையில் கவர்னர் நீக்கி இருக்கிறார் என்பது எங்களுக்கு புரியவில்லை.

    அதைப்பற்றி தெளிவாக அவர் என்ன அனுப்பி இருக்கிறார் என்பதை கோப்புகளை படித்து விட்டு தெளிவான விடையை நிச்சயமாக முதலமைச்சர் தருவார்.

    இந்த மசோதா 2-வது முறை அல்ல, முதல் முறையாக திருப்பி அனுப்பி உள்ளார்கள். இதற்கு முன்பு சில கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு பதில் சொல்லி இருந்தோம்.

    இதை திருப்பி சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதை மறுப்பதற்கு அவருக்கு வாய்ப்பே கிடையாது. அது தான் சட்டம்.

    கேள்வி: கவர்னர் திருப்பி அனுப்பி உள்ள மசோதாவுடன் ஒரு கடிதமும் சேர்த்து அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறாரே?

    பதில்: நான் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று தான் சென்னை வந்தேன். கவர்னர் கடிதம் அனுப்பி இருக்கிறாரா? என்பதெல்லாம் தெரியாது. அவர் அனுப்பியதை படித்து பார்த்த பிறகு தான் எதையும் தெளிவாக சொல்ல முடியும். நானாக எதுவும் சொல்ல முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் விசாரணையில் சுரேஷ் கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வருவதும் இதன் மூலம் ரூ.16 லட்சம் பணத்தை அவர் பறிகொடுத்து இருப்பதும் தெரிந்தது.
    • தனது நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கியும் சுரேஷ் ரம்மி விளையாடி பணத்தை இழந்து உள்ளார்.

    போரூர்:

    சென்னை கே.கே.நகர், 14-வது செக்டார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45). வடபழனியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்ற சுரேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ராதா, வீட்டில் இருந்த கணவரின் செல்போனை ஆய்வு செய்தார்.

    அப்போது அதில் "ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துவிட்டேன், நான் வாழ தகுதியற்றவன். எனவே தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என கடிதம் எழுதி அதை செல்போனில் படம் பிடித்து வைத்து இருப்பது தெரிந்தது.

    இதனை கண்டு ராதா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கே.கே நகர் போலீசில் புகார் செய்தார்.

    வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாயமான சுரேசை தேடி வந்தனர். விசாரணையில் சுரேஷ் கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வருவதும் இதன் மூலம் ரூ.16 லட்சம் பணத்தை அவர் பறிகொடுத்து இருப்பதும் தெரிந்தது.

    மேலும் தனது நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கியும் ரம்மி விளையாடி பணத்தை இழந்து உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் மனவேதனை அடைந்த சுரேஷ் கடிதம் எழுதி வைத்து விட்டு அதனை செல்போனில் பதிவு செய்து மாயமாகி இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதியான வினோத் குமார் என்பவர் நேற்று முன்தினம் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வினோத் குமாருக்கு ஆன்லைன் மூலம் சூதாட்டம் ஆடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
    • சூதாட்டத்துக்காகவும் மற்றும் குடும்ப செலவுக்காகவும் வினோத் குமார் இணையதளங்களில் உள்ள ஆப்கள் மூலம் சுமார் 20 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.

    தாம்பரம்:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் பணத்தை இழந்து வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதால் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வந்தனர்.

    இதையடுத்து தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்த மருத்துவ பிரதிநிதி ஒருவர் சென்னையில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை தாம்பரத்தை அடுத்த கணபதிபுரம் கோபால் தெரு மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 37). இவர் பி.பார்ம் படித்துவிட்டு மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி லதா என்ற மனைவியும், பிரணவ், தர்ஷன் என 2 மகன்களும் உள்ளனர். மேலும் வீட்டில் தாயார் தமிழ்செல்வியும் வசித்து வருகிறார். வினோத்குமாரின் மனைவி லதா தாம்பரத்தில் உள்ள தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    வினோத் குமாருக்கு ஆன்லைன் மூலம் சூதாட்டம் ஆடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சூதாட்டத்துக்காகவும் மற்றும் குடும்ப செலவுக்காகவும் இணைய தளங்களில் உள்ள ஆப்கள் மூலம் சுமார் 20 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் கடன் கொடுத்த தனியார் ஆப் நிறுவனங்கள் தொடர்ந்து கடனை திருப்பி செலுத்த வற்புறுத்தி நெருக்கடி கொடுத்து வந்தது.

    இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே வினோத்குமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று மாலை வீட்டில் இருந்த வினோத்குமார் தனது தாயார் தமிழ்செல்வியை அழைத்து தனக்கு தூக்கம் வருவதாகவும், அதனால் தான் தூங்கச் செல்வதாகவும் குழந்தைகளை கடைக்கு அழைத்து சென்று தின்பண்டம் வாங்கி கொடுக்கும்படி கூறினார்.

    குழந்தைகளுடன் தாயார் வெளியே சென்ற போது வினோத்குமார் அறைக்கு சென்று புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த லதா தனது கணவர் இருந்த அறைக்கு செல்வதற்காக திறந்த போது மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது

    இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்குமார் பிணத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×