என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுவை ஆம்பூர் சாலையை சேர்ந்தவர் முகமதுயாகூப் (வயது66) இவருக்கு நுர்ஜகான் (55) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
மகளுக்கு திருமணமாகி அவரது கணவர் வெளி நாட்டில் வேலை செய்து வருவதால் முகமதுயாகூப் வீட்டிலேயே அவரது மகள் வசித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீர் பிரச்சினையால் முகமதுயாகூப் அவதி அடைந்து வந்தார். இதற்காக மருந்து மாத்திரையும் சாப்பிட்டு வந்தார்.
சம்பவத்தன்று அதிகாலை முகமதுயாகூப்புக்கு சிறுநீர் கழிக்கும் போது அதிக வலி ஏற்பட்டதால் அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
பின்னர் வீட்டுக்கு வந்த அவர் திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் மாடியில் கட்டில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார். இதனை கண்ட அவரது மனைவி நுர்ஜகான் சத்தம் போட்டு அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து முகமதுயாகூப்பை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை முகமதுயாகூப் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 2049 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் இதுவரை 75 ஆயிரத்து 024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,018 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புதுவையில் கொரோனா 2-வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.
முதல் அலையின் தாக்கத்துக்கு பிறகு தொற்று பரவலே இல்லாத நிலையில் புதுவை இருந்தது. நாடு முழுவதும் 2-வது அலை பரவ தொடங்கிய காலகட்டத்தில் புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
இரட்டை இலக்க எண்ணில் இருந்து மாறி 3 இலக்க எண்ணை அடைந்து தற்போது 4 இலக்கு எண்ணிக்கையை தொற்று எட்டியுள்ளது. நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையால் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவ கனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் படுக்கைகள், சிகிச்சை பெறும் படுக்கைகளை உயர்த்தியும் தட்டுப்பாடு நிலவுகிறது.
12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நோயாளிகள் வெளியே நடமாடுவதை தடுக்க கட்டுப்பாட்டு மண்டலம், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புதுவையில் நாள்தோறும் மரணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மத்திய அரசின் சுகாதாரத்துறை நாடு முழுவதும் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் குறித்து நேற்று ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டது. இதில் மக்கள் தொகையின் அடிப்படையில் இறப்பு விகிதம் கணக்கிடப்பட்டு மாநிலங்களை வரிசைபடுத்தி உள்ளனர்.
இதில் புதுவை 3-வது இடத்தை பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுவையில் இதுவரை 965 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஒரு லட்சம் பேருக்கு 80 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவைக்கு முன்பாக டெல்லி முதலிடத்தையும், கோவா 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. சிறிய மாநிலமான புதுவையில் இறப்பு விகிதம் அதிகரித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தொடர்ந்து பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது. தெருவுக்கு தலா 4 வீடுகளை சேர்ந்தோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரிப்பு, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு பீதியால் புதுவையில் பொதுமக்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கோடைவெயில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. எனவே புதுவையில் கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதன்படி நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் கொடுமை கூடியது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே முடங்கினர்.
நண்பகல் வேளையில் நகரின் பிரதான சாலைகள் வெறிச்சோடியே காணப்பட்டன. வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள சாலையில் நடந்து சென்றோர் குடை பிடித்தபடியும், தலையில் துணி போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டு சென்றதையும் காணமுடிந்தது. கடுமையான வெயில் கொளுத்தியதோடு அனல்காற்றும் வீசியது. சாலைகளில் பல இடங்களில் கானல்நீரும் தென்பட்டன.
வெப்ப காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். வெயிலில் சுற்றியவர்களுக்கு தாகம் அதிகமாக இருந்ததால் குளிர்ந்த பானங்களை பருகுவதற்கு அதிகமாக விரும்பினார்கள். இதனால் சாலையோரங்களில் உள்ள இளநீர், கரும்புச்சாறு, தர்ப்பூசணி, குளிர்பானங்கள், முலாம் பழம் ஜூஸ் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுதவிர வெள்ளரி, நுங்கு விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 96.62 டிகிரியும், காரைக்காலில் 95.18 டிகிரியும் வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று மேலும் 19 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே அவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது. காவல்துறையிலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே போலீசாருக்கு கொரோனா பரவி வருவதை தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார் மனு வாங்க சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையம் முன்பு பந்தல் அமைத்து போலீஸ்காரர்கள் புகார் மனு பெறுகின்றனர்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுவை சட்டமன்ற தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முன்னதாக கடந்த 5-ந் தேதி அவர் சேலத்தில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கிருந்து புதுச்சேரிக்கு திரும்பியதும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதற்கிடையே புதுச்சேரியின் முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த 7-ந் தேதி கவர்னர் மாளிகையில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு விழா முடிந்ததும் சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்ட அவர் நேராக வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தார். டாக்டர்களின் ஆலோசனைப்படி அவர் சில மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டார்.
இந்தநிலையில் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் மிகவும் நெருக்கமாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜவகருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ரங்கசாமி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். இதனால் அவரை யாரும் சந்திக்க அனுமதி அளிக்கவில்லை.
இதற்கிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தார். அப்போது அவருடன் காரில் யாரும் வரவில்லை. அவர் மட்டும் தனியாக வந்தார். சிறிது நேரம் அலுவலகத்தில் இருந்த அவர் அதிகாரிகள், ஊழியர்கள் யாரையும் சந்திக்கவில்லை. மிகவும் சோர்வாக அவர் காணப்பட்டார். சுமார் 30 நிமிடங்கள் மட்டும் தனது அலுவலகத்தில் இருந்த அவர் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டு சென்று ஓய்வெடுத்தார்.
இதற்கிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு மருத்துவக்குழுவினர் கொரோனா தொற்று பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு தொற்று இருப்பது நேற்று இரவு உறுதிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் (எம்.ஜி.எம்.) அனுமதிக்கப்பட்டார். முதல்-அமைச்சராக ரங்கசாமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.






