என் மலர்
புதுச்சேரி
- எனக்கு வாக்களித்த புதுச்சேரியின் 4 பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
- புதுச்சேரியில் வாக்களர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுத்ததாக கூறும் புகாரை அ.தி.மு.க. ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுத்ததாக கூறுவதை அ.தி.மு.க. நிரூபிக்க வேண்டும் என மாநில உள்துறை அமைச்சரும், புதுச்சேரி தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான நமச்சிவாயம் கூறியுள்ளார்.
காரைக்காலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மக்களவைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். தேர்தல் நடந்து முடிந்த நிலையில் காரைக்காலில் உள்ள பா.ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளேன்.
எனக்கு வாக்களித்த புதுச்சேரியின் 4 பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடக்கத்தில் இருந்தே சொன்னதுபோல வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.
வெற்றி பெற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படுவது உடனடியாக அமல்படுத்தப்படும். காரைக்காலில் மருத்துவமனை மேம்பாடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய வெற்றி பெற்ற பின்னர் எம்.பி. என்ற முறையில் பாடுபடுவேன். அனைத்து பிராந்தியங்களையும் உள்ளடக்கிய புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பாடுபடுவேன்.
புதுச்சேரியில் வாக்களர்களுக்கு பா.ஜனதா பணம் கொடுத்ததாக கூறும் புகாரை அ.தி.மு.க. ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது குறித்து நான் ஏற்கனவே கூறியுள்ளது போல மத்திய அரசுடன் பேசி அனைத்து கட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
- வெளியூர்களில் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் அன்றைய தினம் புதுச்சேரி வந்தனர்.
- புஸ்சிவீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. அதற்காக வெளியூர்களில் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் குடியிருப்பவர்கள் அன்றைய தினம் புதுச்சேரி வந்தனர்.
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு ஆயத்தமானார்கள். அத்துடன் வார இறுதி நாளான நேற்று வெளி மாநிலசுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகரித்து இருந்தது.
அவர்கள் புதுவையில் கடற்கரை, பாரதி பூங்கா, படகு குழாம், மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றனர்.
புதுச்சேரி கடற்கரைசாலை, பாண்டி மெரினா பீச்சில் பகலில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. ஆனால் மாலையில் கூட்டம் அலை மோதியது.
அங்கு அவர்கள் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை எச்சரித்து கடலில் இருந்து வெளியேற்றினர்.
புஸ்சிவீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒயிட்டவுன் பகுதிகளில் நாகரீக உடை அணிந்த பெண்கள் ஒய்யாரமாக நடந்தது வந்ததை காண முடிந்தது. அங்குள்ள கட்டிடங்களில் வரைந்திருக்கும் ஒவியங்களின் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் சுற்றுலா பயணிகள், மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.
தொடர் விடுமுறை முடிவடைந்த நிலையில் வாக்களிக்க வந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பினர்.
இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
- நகரங்களில் உள்ள படித்தவர்கள் ஓட்டு சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றுவதில்லை.
- ஜனநாயக திருவிழாவில் அனைவரும் கூடி பங்கேற்றால் தான் ஓட்டு பதிவு அதிகரிக்கும்.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் 78.90 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இது, கடந்த தேர்தலை காட்டிலும் 2.35 சதவீதம் குறைவாகும்.
மொத்தமுள்ள 10,23,699 களில் 8,07,724 பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள 2,19,422 வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை.
வாக்கு பதிவு குறைந்தது குறித்து புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
ஓட்டு பதிவு குறைவிற்கு வெயிலை ஒரு காரணமாக சொன்னாலும், மேலும் பல காரணங்கள் உள்ளன. சட்டசபை தேர்தல் என்றாலும், பாராளுமன்ற தேர்தல் என்றாலும் படிப்பறிவு இல்லாத மக்கள் திரண்டு வந்து ஓட்டளிக்கின்றனர். ஆனால் நகரங்களில் உள்ள படித்தவர்கள் ஓட்டு சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றுவதில்லை.
மாநிலத்தின் கல்வியறிவு 85.8 சதவீதம் உள்ளது. அப்படி இருந்தாலும் நகர பகுதியில் வசிப்பவர்கள் ஓட்டுச்சாவடியில் வரிசையில் நின்று ஓட்டளிக்க தயக்கம் காட்டுகின்றனர். இது ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு பதிவில் சரிவை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக பிரான்ஸ், சிங்கப்பூர், அரபு நாடுகளில் பலரும் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றாலும் எந்த ஒரு தேர்தலிலும் புதுச்சேரிக்கு வந்து ஓட்டளிப்பதில்லை. இப்போது இவர்கள் கோடை விடுமுறைக்காக தங்களது குடும்பத்தினரையும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து சென்று விட்டனர். இதனால் அவர்களது குடும்பத்தினரும் ஓட்டளிக்கவில்லை. இதன் காரணமாக ஓட்டு பதிவு சரிந்து விட்டது. அதுபோல, 40 ஆயிரம் மாணவ-மாணவிகள் உயர் கல்வி பயில பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். ஓட்டு போட ஒருநாள் மட்டுமே விடுமுறை என்பதாலும் இவர்களில் பலர் ஓட்டளிக்க வில்லை.
தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் ஐ.டி., உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஓட்டுப்பதிவுக்கு வர நினைத்தாலும், அவர்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை கிடைப்பதில்லை. டெல்லியில் உள்ள ஒருவர் ஓட்டளித்துவிட்டு மறுநாளே எப்படி டெல்லி செல்ல முடியும்? இதுபோல ஒவ்வொருவருக்கும் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அதை ஏற்க முடியாது. ஜனநாயக திருவிழாவில் அனைவரும் கூடி பங்கேற்றால் தான் ஓட்டு பதிவு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- ஒவ்வொரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலரும், நமச்சிவாயம் மூலம் தொழில் ரீதியாக பலன் பெற்றுள்ளனர்.
- ஓட்டுப் பதிவு முடிந்து விட்ட நிலையில் ‘கருப்பு ஆடுகள்’ மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
நடந்து முடிந்த புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கும், பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்திற்கும் நேருக்கு நேராக கடும் போட்டி நிலவியது.
பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம், புதுச்சேரி காங்கிரஸ் மாநில தலைவராக பொறுப்பு வகித்தவர். மேலும் அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். இதனால் 30 தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அவருக்கு பரிச்சயமானவர்களாக உள்ளனர்.
ஒவ்வொரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் பலரும், நமச்சிவாயம் மூலம் தொழில் ரீதியாக பலன் பெற்றுள்ளனர். இதனால் பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
'நீங்கள் பா.ஜனதாவுக்கு நேரடியாக ஓட்டு சேகரிக்க வேண்டாம். ஆனால் காங்கிரஸ் பிரசாரத்துக்கு செல்லாமல் ஒதுங்கி இருந் தால்போதும் என நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடல்நிலை சரியில்லை என கூறி பிரசாரத்தில் பங்கேற்காமல் 'எஸ்கேப்' ஆகிவிட்டனர். இதுதவிர வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் வேகம் காட்டவில்லை.
இதுகுறித்த தகவல் காங்கிரஸ் தலைவர்களுக்கு கிடைத்துள்ளது. அதிர்ச்சி அடைந்துள்ள அவர்கள், ஓட்டுப் பதிவு முடிந்து விட்ட நிலையில் 'கருப்பு ஆடுகள்' மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
தேர்தல் பணிகளில் பங்கேற்காமல் புறக்கணித்த காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- சொந்த தொகுதியான மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் அதிக ஓட்டு களை பெற்று முன்னிலை வகிப்பார் என பலரும் பந்தயம் கட்டி வருகின்றனர்.
- அரசியல் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பந்தயமாக கட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற பா.ஜனதா வேட்பாளராக நமச்சிவாயம், காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம், அ.தி.மு.க. வேட்பாளராக தமிழ்வேந்தன் போட்டியிட்டனர். அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
ஓட்டுப் பதிவு நேற்று முன்தினம் நடந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்பது குறித்து டீ கடை, ரியல் எஸ்டேட் அலுவலகம், வணிக நிறுவனங்கள், நண்பர்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சியினரிடையே கடும் விவாதம் ஏற்பட்டு வருகிறது. இது ஒரு கட்டத்தில் சூதாட்டமாக உருமாறியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என ஒரு தரப்பினரும், பா.ஜனதா வேட்பாளர் வெற்றிக் கனியை பறிப்பார் என இன்னொரு தரப்பினரும் பந்தயம் கட்டி வருகின்றனர். இதற்காக, லட்சக்கணக்கில் பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்லாமல், வில்லியனுார் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., பெற்ற ஓட்டுகளை விட ஒரு ஓட்டாவது கூடுதலாக காங்கிரஸ் வேட்பாளருக்கு கிடைக்கும் என ஒரு தரப்பினரும், வாய்பே இல்லை. இம்முறை வில்லி யார் தொகுதியில் நமச்சிவாயம் அதிக ஓட்டுகளை பெற்று தொகுதியில் முதலாவதாக வருவார் என எதிர்தரப்பினரும் ஆயிரக்கணக்கான ரூபாயை பந்தயம் கட்டி வருகின்றனர். இதுபோன்ற சூதாட்டம், மண்ணாடிப்பட்டிலும் களை கட்டி உள்ளது. சொந்த தொகுதியான மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் அதிக ஓட்டு களை பெற்று முன்னிலை வகிப்பார் என பலரும் பந்தயம் கட்டி வருகின்றனர்.
இன்னொரு பக்கம், இந்த முறை சரித்திரம் மாறும் மண்ணாடிப்பட்டில் வைத்திலிங்கமே அதிக ஓட்டுகளை பெற்று சாதிப்பார் என எதிர்தரப்பினரும் பணத்தை பந்தயமாக கட்டி வருகின்றனர். அரசியல் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பந்தயமாக கட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் தீர்வு ஜூன் 4-ந் தேதி தெரிந்து விடும்.
- முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வந்து, ஜிப்மரில் சிகிச்சை பெறும் வெளிமாநிலத்தினர் உதவி கேட்பது வழக்கம்.
- சம்காஷி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு சென்று தனது நிலைமையை எடுத்து கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் வீடு, கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவில் அருகில் அமைந்துள்ளது. கோவிலில் தினசரி அன்னதானமும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று வாழையிலை போட்டு அறுசுவை உணவும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம், சுற்றுவட்டார பகுதி ஆதரவற்றவர்கள், ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வரும் வெளிமாநிலத்தினர் பயன்பெறுகின்றனர்.
மேலும், தினமும் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வந்து, ஜிப்மரில் சிகிச்சை பெறும் வெளிமாநிலத்தினர் உதவி கேட்பது வழக்கம். அவர்களுக்கு தேவையான பண உதவிகள் செய்வதை முதலமைச்சர் ரங்கசாமி வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சம்காஷி என்ற பெண் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற புதுச்சேரிக்கு வந்திருந்தார். அவர் கோரிமேடு பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமும் அவர் அப்பா பைத்தியம் சாமி கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதம் வீட்டு வாடகை கொடுத்து வந்த இவர் 3-வது மாதத்துக்கு வீட்டு வாடகை கொடுக்க பணம் இல்லாமல் தவித்து வந்தார்.
முதலமைச்சர் ரங்கசாமி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வெளிமாநில நோயாளிகளுக்கு பண உதவி செய்வதை மேற்கு வங்க பெண் சம்காஷி கேள்விப்பட்டார். இதையடுத்து சம்காஷி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு சென்று தனது நிலைமையை எடுத்து கூறினார்.
உடனே முதலமைச்சர் ரங்கசாமி அந்த பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து உதவி செய்து உடல் நலம் பெற ஆசி வழங்கினார். இதனை அந்த பெண் வீடியோவில் பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
- முதியவர் ஒருவரை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் உதவி செய்வது போல் அழைத்து வந்துள்ளார்.
- முதியவரிடம் எதுவும் கேட்காமலேயே வாக்கை பதிவு செய்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குபதிவு நேற்று நடந்தது.
வாக்குப்பதிவிற்காக வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட வி.மணவெளி தனியார் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு முதியவர் ஒருவரை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் உதவி செய்வது போல் அழைத்து வந்துள்ளார்.
அங்குள்ள வாக்குச்சாவடி பணியாளர்களிடம் முதியவருக்கு பார்வை தெரியவில்லை என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து முதியவரின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டது, பின் முதியவரிடம் கையெழுத்தை பெற்ற பணியாளர்கள் உதவிக்கு வந்த நபருடன் வாக்களிக்க முதியவரை திரை மறைவிற்கு அனுப்பி வைத்தனர்.
அந்த முதியவருடன் சென்றவர் முதியவரிடம் எதுவும் கேட்காமலேயே வாக்கை பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த முதியவரை அழைத்து சென்று வெளியில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
தன்னை கேட்காமலே அரசியல் பிரமுகர் தனது விருப்பத்திற்கு வாக்கு பதிவு செய்ததை அந்த முதியவர் வீடியோவில் புலம்பியுள்ளார். இந்த புலம்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- குறைந்த வாக்கு சதவீதம் பதிவான மாகி தொகுதி முதல் அதிக அளவில் வாக்குப்பதிவான பாகூர் தொகுதி வரை பெண்களே அதிக அளவில் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
- வெற்றி, தோல்வியை பெண் வாக்காளர்களின் கூடுதல் வாக்குகள் நிர்ணயிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவில் வழக்கம் போல் அதிக அளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர்.
இது புதிதல்ல என்றாலும் பெண்களை மையமாக வைத்து பிரதான அரசியல் கட்சிகளான ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர் அணியான காங்கிரஸ், தி.மு.க. இந்தியா கூட்டணியும் பிரசாரம் செய்ததால் இந்த தேர்தலில் பெண்களின் வாக்கு யாருக்கு? என கேள்வி எழுந்துள்ளது.
புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் மாதந்தோறும் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ, மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. தரமான வெள்ளை அரிசி வழங்கப்பட்டதால் பெண்களிடையே அதிக அளவில் வரவேற்பும் இருந்தது.
ஆனால் இந்த திட்டம் கைவிடப்பட்டு இலவச அரிசிக்கு பதிலாக வங்கி கணக்கில் பயனாளிகளுக்கு பணம் செலுத்தப்பட்டு வருகிறது. பணத்திற்கு பதிலாக மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் தரமான இலவச அரிசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை புதுவை பெண்கள் எழுப்பி வருகின்றனர்.
இதனால் ரேஷன் அரிசி மீண்டும் வழங்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனாலும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் இதுவரை அரிசி வழங்கப்படவில்லை. ரேஷன் அரிசி விவகாரம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் முக்கிய அம்சமாக இடம் பெற்றது.
முதலமைச்சர் ரங்கசாமி பிரசாரத்தை தொடங்கியபோது பெண்கள் ரேஷன் கடைகளில் எப்போது இலவச அரிசி வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலாக பணம் வங்கியில் செலுத்தப்படுவதை ரங்கசாமி சுட்டி காட்டியபோது அதனை தங்கள் கணவர்கள் பறித்து செல்வதால் அரிசிதான் வேண்டும் என பெண்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனை காங்கிரஸ் தனது பிரசாரத்தில் மையமாக பயன்படுத்தியது. காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தனது பிரசாரத்தில் பல பகுதிகளில் கூடியிருந்த பெண்களிடம் ரேஷன் அரிசி கிடைக்கிறதா? என கேள்வி எழுப்பினார். அதோடு கை சின்னத்திற்கு வாக்களித்தால் ரேஷன் கடைகளை திறந்து தரமான வெள்ளை அரிசி வழங்குவோம் என்றும் அவர் கூறினார்.
மேலும், 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி புதுவையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை அரசு தடுக்க தவறியதே இதற்கு காரணம் என்றும் வைத்திலிங்கம் பிரசாரத்தில் தொடர்ந்து கூறி வந்தார்.
இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ரேஷன் கடைகளை மூடி இலவச அரிசி வழங்குவதை நிறுத்தியதே காங்கிரஸ் அரசுதான் என்று பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
மேலும், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு தரமான இலவச அரிசியோடு உணவு பொருட்களும் வழங்கப்படும் என்றும் ரங்கசாமி உறுதி அளித்தார்.
அதோடு பெண்களை பாதுகாப்பதில் மட்டுமல்ல அக்கறையோடு பெண்களுக்கான நலத்திட்டங்களையும் தனது அரசு செய்து வருவதாக கூறி முதலமைச்சர் ரங்கசாமி திட்டங்களை பட்டியலிட்டார். முதியோர் உதவித்தொகையை கடந்த காங்கிரஸ் அரசு ஒரு ரூபாய் கூட உயர்த்தவில்லை என்றும் தனது அரசு பதவியேற்றவுடன் 500 ரூபாய் உயர்த்தியுள்ளதை குறிப்பிட்டு தேர்தலுக்கு பிறகு மீண்டும் முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
இதுமட்டுமல்லாமல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி வழங்கும் திட்டத்தையும் புதிதாக தொடங்கி உள்ளதையும் ரங்கசாமி பிரசாரத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறைந்த வாக்கு சதவீதம் பதிவானமாகி தொகுதி முதல் அதிக அளவில் வாக்குப்பதிவான பாகூர் தொகுதி வரை பெண்களே அதிக அளவில் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொகுதிக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையிலான வாக்கு வித்தியாசத்தில் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான பெண் வாக்காளர் வாக்குகள் பதிவாகியுள்ளது.
வெற்றி, தோல்வியை பெண் வாக்காளர்களின் கூடுதல் வாக்குகள் நிர்ணயிக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இது தேர்தலில் மோதிய பிரதான அரசியல் கூட்டணிகளான ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி மற்றும் எதிர் அணியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும்.
- இந்தியா கூட்டணி மக்கள் பலமுள்ள கூட்டணி.
புதுச்சேரி:
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை மிஷன் வீதியில் உள்ள பசுமை வாக்குச்சாவடியான வ.உ.சி. அரசு பள்ளி மையத்தில் தனது வாக்கை செலுத்தினார்.
சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று தனது மகளுடன் அவர் வாக்கை செலுத்தினார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும். இந்த தேர்தல் பணநாயகத்திற்கும், மக்கள் சக்திக்கும் இடையில் நடைபெறும் தேர்தல். மோடியின் பணபலமும், ராகுல் காந்தியின் மக்கள் சக்தியும் களத்தில் இருக்கின்றன. எப்போதும் மக்கள் சக்திதான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும்.
பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளாக அனைவருக்கும் வேலைவாய்ப்பு, நாட்டின் அமைதி, பொதுசொத்தை பாதுகாப்பது, எல்லை பாதுகாப்பு போன்ற வாக்குறுதிகளை கொடுத்தார். 10 ஆண்டுகளாக அவர் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதை பற்றி பேசுவதும் இல்லை.
காங்கிரஸ் கட்சியை வசைப்பாடி, வாரிசு அரசியல் என பேசி வாக்கு சேகரித்தார். மோடியின் ஆட்சி ஒட்டுமொத்த ஊழல் ஆட்சி, வருமான வரித்துறை வழக்கு போன்ற வழக்குகளில் உள்ளவர்கள் தேர்தல் பத்திரங்களை கொடுத்துள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமி 3 ஆண்டுகளில் எந்த சாதனையையும் செய்யவில்லை. புதுவையில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா போதை பொருட்கள் அதிகரித்துள்ளன.
தேர்தல் அறிக்கையில் கூறிய எதனையும் அவர் நிறைவேற்றவில்லை. வேட்பாளர் நமச்சிவாயம் அவரது துறையில் எதையும் செய்யவில்லை. வெளிநாட்டிலேயே அவர் இருக்கிறார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
மின்சார துறையை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளார். சொத்து குவித்து வைத்துள்ளார். பா.ஜனதா பணத்தை வாரி இறைத்து வருகிறது. இந்தியா கூட்டணி மக்கள் பலமுள்ள கூட்டணி. புதுவை மக்கள் பணத்திற்கு அடிபணியமாட்டார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.
- எனது தந்தை படித்த பள்ளியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருப்பதால் எனக்கு மேலும் ஆர்வமாக இருந்தது.
- எனது தந்தை படித்த பள்ளியை பார்த்துவிட்டு அங்கேயே எனது முதல் வாக்கை பதிவு செய்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.
பாகூர்:
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் நின்று ஓட்டு போட்டு வருகின்றனர்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் வாக்குச்சாவடியில் சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய குடியுரிமை பெற்ற இளம் வாக்காளர் ஆறுமுகம் புவியரசி (வயது18) தனது தாய் ஆறுமுகம் மாலதியுடன் வந்து தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.
இதற்காக அவர் ரூ.50 ஆயிரம் செலவு செய்து சிங்கப்பூரிலிருந்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்து, பின்னர் அங்கிருந்து கார் மூலமாக புதுச்சேரி கிருமாம்பாக்கம் ஓட்டு சாவடிக்கு வந்து தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்:-
நான் சிங்கப்பூரில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்து வருகிறேன். இந்தியாவில் நடைபெறும் தேர்தலை ஆர்வமாக கண்காணித்து வந்தேன். தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பது எனது ஆசை. இதற்காக காத்திருந்தேன்.
எனது தந்தை படித்த பள்ளியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருப்பதால் எனக்கு மேலும் ஆர்வமாக இருந்தது.
எனது தந்தை படித்த பள்ளியை பார்த்துவிட்டு அங்கேயே எனது முதல் வாக்கை பதிவு செய்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.
- புதுச்சேரி மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக தகவல் கிடைத்தது.
- கடந்த தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு புதுச்சேரியில் இன்று நடைபெற்று வருகிறது.
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிமேட்டில் அப்பா பைத்தியம் சாமி கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தார். அங்கிருந்து கார் மூலம் திலாசுப்பேட்டையில் உள்ள பழைய வீட்டுக்கு வந்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் அதே தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.
அங்கு காலை 8.45 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்றார்.

வி.மணவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம், தனது மனைவி வசந்தியுடன் வந்து வாக்களித்தார். பின்னர் அங்கிருந்து காரில் கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு வந்தார்.
அங்கு முதல்-அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறிது நேரத்துக்குள் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் அப்பா பைத்தியம் சாமிக்கு ரங்கசாமி தீபாராதனை காண்பித்து பூஜை செய்தார்.
தொடர்ந்து வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். அவர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். தொடர்ந்து பக்தர்களுக்கு ரங்கசாமி திருநீறு வழங்கினார்.
பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காலை 8.45 மணிக்கு எனது வாக்கை பதிவு செய்தேன். புதுச்சேரி மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருவதாக தகவல் கிடைத்தது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும், புதுச்சேரியில் ஆளும் எங்கள் அரசும் செய்துள்ள வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
அமைச்சர் நமச்சிவாயம் வெற்றி பெறுவது உறுதி. மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். கடந்த தேர்தலைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மடுகரை கம்பத்தம் வீதியில் உள்ள அரசு பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன் வீராம்பட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
- வாக்குச்சாடிகளில் வெயிலில் வாக்காளர்கள் நிற்பதை தடுக்க நிழல் பந்தல், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர்.
- சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நிற்பதை தவிர்க்க பெஞ்சு, நாற்காலி போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
புதுச்சேரி:
தமிழகம், புதுவை உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.
புதுவை மாநிலத்தில் வாக்குப்பதிவுக்காக 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. புதுவை பிராந்தியத்தில் 739 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 6.30 மணிக்கு வாக்குச்சாவடிகளில் வேட்பாளரின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. காலை 6.30 மணி முதல் வாக்காளர்கள் தேர்தல் துறை வழங்கிய பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை உட்பட ஆவணங்களோடு தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்திருந்தனர்.
காலை 7 மணிக்கு முறையான வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரு சில இடங்களில் எந்திர கோளாறு காரணமாக சற்று காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் வாக்காளர்கள் வாக்கு செலுத்தி வெளியில் வர காலதாமதம் ஆனது. இதனால் வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
இதன்பின் வாக்குப்பதிவு வேகமெடுத்தது. புதுச்சேரியில் கோடை வெயில் தகித்து வருவதால் வெயிலுக்கு முன்பாக வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காலையிலேயே மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு படையெடுத்தனர். இதனால் நகரம் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
வாக்குச்சாடிகளில் வெயிலில் வாக்காளர்கள் நிற்பதை தடுக்க நிழல் பந்தல், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நிற்பதை தவிர்க்க பெஞ்சு, நாற்காலி போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
காலை 7 மணி முதல் 8 மணிவரை 8 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இதன்பின் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாற்றுத்திறனாளிகள், முதியோரை அழைத்துச்செல்ல மாணவ தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அழைத்துச் செல்ல வீல் சேர், சாய்தளம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. முதியோரை காத்திருக்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில் வாக்குகளை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு சில இடங்களில் எந்திரம் பழுது, கால தாமதத்தில் சில நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கினாலும் பெரியளவில் பாதிப்பு ஏதுமின்றி அமைதியான முறையில் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.






