என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பாரதிய ஜனதா மேலிடம் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. கன்னியாகுமரி உள்பட 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தியது. கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.



    அதேபோல பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினார்கள். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார்.

    பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சி அமைக்கும்போது தமிழகத்தில் அந்த கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை தற்போது நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பாரதிய ஜனதா கட்சியினரிடம் ஏற்பட்டு உள்ளது.

    அதற்கேற்ப டெல்லி வரும்படி பொன்.ராதா கிருஷ்ணனுக்கு பாரதிய ஜனதா மேலிடம் அழைப்பு விடுத்தது. அதைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

    ஏற்கனவே 1999-ல் மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய மந்திரியாக பதவி வகித்து உள்ளார். அதேபோல கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றிபெற்று மத்திய மந்திரியானது குறிப்பிடத்தக்கது.
    தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள எம்.பி.க்கள் தமிழர் நலனுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்று வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வசந்தகுமார் 6 லட்சத்து 27 ஆயிரத்து 235 வாக்குகள் பெற்றார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை காட்டிலும் 2 லட்சத்து 59 ஆயிரத்து 933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இதையடுத்து வசந்தகுமாருக்கு தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரசாந்த் வடநேரே வெற்றி சான்றிதழை வழங்கினார். பின்னர் வசந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னை கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக அறிவித்த ராகுல்காந்திக்கும், என்னை வெற்றிபெற வைத்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி வாக்காளர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பக்கத்து தொகுதியான நாங்குநேரியில் எம்.எல்.ஏ. ஆக இருந்து செய்த சேவைகளை சமுதாய பணிகளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.

    எனது முதல் பணி குமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது தான். தேனி ஆராய்ச்சி, ரப்பர் ஆராய்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருவேன். இது தொடர்பாக ஏற்கனவே சில நிறுவனங்களிடம் நான் பேசி உள்ளேன். மத்தியில் காங்கிரஸ் அரசு அமையவில்லை என்ற போதும் அது எனது மக்கள் பணியை பாதிக்காது.

    குமரி மாவட்ட வளர்ச்சிக்காக மத்திய அமைச்சர்களை எந்த நேரத்திலும் சந்தித்து பேசுவேன். மத்திய அமைச்சராக இருந்தவர் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அதே சமயத்தில் மக்கள் விரும்பாத திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் எனக்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பது இல்லை. கடந்த ஐந்தாண்டு கால மோடி அரசின் பண மதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


    இது தமிழகத்தில் எதிரொலித்திருக்கிறது. காங்கிரஸ் பின்னடைவிற்கு என்ன காரணம் என்பதை அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி ஆலோசனை நடத்தி இனி என்ன செய்ய வேண்டும் என்று அறிவிப்பார்கள். பாரதிய ஜனதா கட்சியிலும் தற்போது மோதல் வெடித்துள்ளது. பிரதமர் பதவிக்கு நிதின் கட்கரி தயாராக இருந்து வருகிறார். அவர் ஆர்.எஸ்.எஸ்.க்கு மிகவும் நெருக்கமானவர். அந்த வகையில் பா.ஜ.க. இரண்டாக உடையலாம் என்று கருத்து உள்ளது. நீட் தேர்வு உள்ளிட்ட தமிழக விரோத போக்கை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளாது என்ற நம்பிக்கை உள்ளது. மோடி, பா.ஜ.க.வுக்கு மட்டும் அல்ல நாட்டுக்கும் பிரதமர், தமிழக நலன் கருதி மத்திய அரசு செயல்படும் என்று கருதுகிறோம். தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள எம்.பி.க்கள் தமிழர் நலனுக்காக ஒட்டு மொத்தமாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமரான மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ வாழ்த்துச் செய்தி கூறியுள்ளார்.
    ஒட்டாவா:

    பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில்,  பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 343 இடங்களில் முன்னிலை வகித்தது.

    மேலும் பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றியை உறுதி செய்தது.  இதனால், மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.



    இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், உலக தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ, பிரதமர் மோடிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.  

    கனடா பிரதமர் ஜஸ்டீன் கூறுகையில், 'மீண்டும் வெற்றி பெற்று இந்தியாவில் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா அரசின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கனடா வாழ் இந்தியர்களின் வாழ்க்கை மேம்பாடு, கல்வி, வர்த்தகம், முதலீடு, வாழ்க்கை சூழலியல் மாற்றம் போன்ற துறைகளில் மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்' என கூறினார். 
    தமிழகத்தில் பா.ஜ.க. தோல்வியடைய காரணம் என்ன? என்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்தார்.
    தூத்துக்குடி:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி பெரியநாயகபுரத்தில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டுகளாக நல்ல திட்டங்களையும் தவறான திட்டங்களாக முன்னிறுத்தி அது மிக அதிகளவில் பிரசாரங்களாக முன்னெடுத்து செல்லப்பட்டு, இன்று தமிழக மக்கள் அதற்கு செவிசாய்த்து வாக்குகளை கொடுத்து இருக்கிறார்கள். தூத்துக்குடியில் இந்த பகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தான் வேட்பாளராக இங்கு வந்தேன். இந்த பகுதி மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன்.

    எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களும் பயன்பெறும் வகையில் தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும். கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்த கால அரசியலை கொண்டு பார்க்கும்போது, மக்கள் தேர்ந்தெடுத்தவர் ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர் என்பதை மறந்து விடக் கூடாது. எது எப்படி இருந்தாலும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை வாழ்த்துகிறேன். மக்கள் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழகம், கேரளாவில் தோல்விக்கான காரணம் தொடர் எதிர் பிரசாரம்தான். பிரதமர் மோடிக்கு பாரத தேசம் முழுவதும் வரவேற்பு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பை காண்பிக்க வேண்டும் என்று எதிர்ப்பை காண்பித்தனர். நல்ல திட்டங்களை மற்ற மாநில மக்கள் ஏற்றுக்கொண்டனர். அதே நல்ல திட்டங்கள் தமிழகத்தில் தவறான திட்டங்களாக முன்னெடுத்து செல்லப்பட்டது.

    நாங்கள் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்று ஆதங்கம் இல்லை. ஆனால் உரிமையுடன் தமிழகத்தில் பல திட்டங்களை கொண்டு வரலாம் என நினைத்து இருந்து தற்போது அது முடியாமல் போனது தான் எங்களுக்கு கவலை. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் எங்களின் கூட்டணி கட்சி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.



    தற்போது மு.க.ஸ்டாலின் பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றி இல்லை. தமிழகத்தில் பா.ஜனதா-அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்தால் தமிழகம் இன்னும் அதிகம் பலனடைந்து இருக்கும். மு.க.ஸ்டாலின் வெற்றி தமிழகத்திற்கு எந்தவிதத்திலும் பலன் இல்லாத வெற்றி. வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். வரும் காலத்தில் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தொடர முடியுமா என்ற சூழ்நிலை உருவாகும். பின்னால் அது மு.க.ஸ்டாலினுக்கு தலைவலியாக மாறும். மு.க.ஸ்டாலினால் வெளிநடப்பை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

    தமிழக மக்கள் நிச்சயம் வருந்துவார்கள். தமிழக மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் காலம் மிக விரைவில் வரும். அதற்காக நாங்கள் இன்னும் கடுமையாக உழைப்போம். நாங்கள் தமிழக மக்களால் புறக்கணிக்கப்படவில்லை. இன்னும் அதிக கவனம் பெற வேண்டும் என்ற எச்சரிக்கையை பெற்றுள்ளோம். கர்நாடகா, மத்தியபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. எனினும் எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை தொடர்வேன் என்று பிரகாஷ்ராஜ் கூறி உள்ளார்.
    பெங்களூரு:

    தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக எதிர்த்து வந்தார். பணமதிப்பிழப்பையும், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்துத்துவா அமைப்புகளை தொடர்புபடுத்தியும் விமர்சித்தார்.



    கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்தார். பிரகாஷ்ராஜை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசத்தை தொடங்கிய நிலையில் பிரகாஷ்ராஜும் அரசியலில் குதித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் களம் இறங்கினார். வீதிவீதியாக தீவிர பிரசாரமும் செய்தார். ஆனாலும் சினிமா நட்சத்திர அந்தஸ்து அவருக்கு கைகொடுக்கவில்லை. தோல்வி அடைந்துள்ளார்.

    இதுகுறித்து பிரகாஷ்ராஜ் டுவிட்டரில், “என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. மேலும் கேலி, இழிவான சொற்கள், அவமானங்கள் எனது பாதையில் வருகின்றன. எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை தொடர்வேன். இப்போதுதான் கடுமையான பயணம் ஆரம்பித்து உள்ளது. பயணத்தில் என்னோடு இருந்தவர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ள நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
    புதுடெல்லி:

    ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 343 இடங்களில் ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்துள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றியை உறுதி செய்கிறது. இதனால், மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.



    பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. தற்போதைய மக்களவையின் பதவிகாலம் முடிந்து, புதிய மக்களவை தொடங்குவதோடு, பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளதால் அதையொட்டி, இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைக்க பரிந்துரை விடுக்கப்படும். கேபினட் பரிந்துரையை தொடர்ந்து, தீர்மானமாக ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். இதையடுத்து, ஜனாதிபதி 16-வது மக்களவையை கலைத்து உத்தரவு பிறப்பிப்பார்.

    17-வது மக்களவை அதாவது புதிய அரசு அடுத்த மாதம் 3 ஆம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும். தேர்தல் ஆணையர்கள் ஜனாதிபதியை சந்தித்து, புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அளித்த பிறகு புதிய அரசை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் துவங்கும். 
    பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவுக்கும், நரேந்திர மோடிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மாபெரும் வெற்றியை தன் வசப்படுத்திய பா.ஜ.க.வுக்கும், நரேந்திரமோடிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    டாக்டர் ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்):-

    வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாக 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவேண்டும். நரேந்திர மோடி தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்திய உருவெடுக்கும் என்று நம்புகிறேன்.

    விஜயகாந்த் (தே.மு.தி.க. தலைவர்):-

    பாராளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையோடு 2-ம் முறை பாரத பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு தே.மு.தி.க. சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



    ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்):-

    பா.ஜ.க. அரசில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சியில் அமரப்போவது, ஒட்டுமொத்த இந்தியாவின் வருங்கால வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உறுதி ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியும், பா.ஜ.க.வின் பெரும்பான்மையும் நரேந்திர மோடி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.

    ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி தலைவர்):-

    நரேந்திரமோடியின் உழைப்புக்கு மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது. மக்கள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். 5 ஆண்டு கால சாதனைகள் மூலம் மக்களின் இதயங்களை வென்று, 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்):-

    பா.ஜ.க.வின் அமோக வெற்றி இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. மக்களின் பேராதரவோடு மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க இருக்கும் நரேந்திர மோடியின் பொற்கால ஆட்சியில் நாடு வல்லரசாக மாறி சாதனை படைக்க வேண்டும்.

    நிலையான அரசு அமைய தெளிவான தீர்ப்பு வழங்கிய மக்களுக்கு வாழ்த்துகள் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    நிலையான அரசு அமைவதற்காக தெளிவான தீர்ப்பை வழங்கிய மக்களை வாழ்த்துவதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நிலையான அரசு அமைவதற்கு தெளிவான, திட்டவட்டமான தீர்ப்பை தேர்தலில் வழங்கிய இந்திய மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். அதேபோல, இந்த தேர்தலை திறம்படவும், சுமுகமாகவும் நடத்தியமைக்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் நம்பிக்கையை பெற்று இந்த தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



    எந்த கட்சியை சார்ந்திருந்தாலும் செழுமைமிக்க ஜனநாயக பாரம்பரியத்தின் அடிப்படையை மேலும் ஆழமாக்கி வளர்ச்சி, சீர்திருத்தம் மக்களின் வாழ்வில் மேம்பாடு ஆகிய லட்சியங்களை நிறைவேற்ற ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் ‘மோடி வெற்றி பெற்றிருக்கிறார், இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்து உள்ளார்.
    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்று இருக்கிறது. 40-க்கு 40 வெற்றி என்றோம், ஏறக்குறைய அதை செய்திருக்கிறோம். இந்த தேர்தல் 2 சித்தாந்தங்களுக்கு இடையேயான தேர்தல். மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற ஒரு சித்தாந்தமும், மக்களை பிரித்து வைத்து ஆளும் ஒரு சித்தாந்தமும் போட்டியிட்டது.

    விந்திய மலைக்கு தெற்கே உள்ள மக்கள் ஒற்றுமையாக தேசத்தை பாதுகாக்க வாக்களித்து உள்ளனர். ஆனால் அந்த உணர்வு விந்திய மலைக்கு மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இல்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த தேர்தலில், ‘மோடி வெற்றி பெற்றிருக்கிறார், இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது’, இதைத்தவிர சொல்வதற்கு எதுவும் இல்லை.



    ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி இயல்பானது. ஆனாலும் தவறான கொள்கை வெற்றி பெற்றுள்ளதே என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள் கிறோம். அ.தி.மு.க. தவறான சித்தாந்தத்தின் அடிப்படையில் பா.ஜ.க.வுடன் சென்றார்கள். பா.ம.க. உள்பட அவர்களுடன் கூட்டு சேர்ந்த அனைவருமே தவறான முடிவு எடுத்தார்கள். அதற்கான தண்டனையை பெற்றிருக்கிறார்கள். தென்னிந்திய மக்கள் பா.ஜ.க.வை ஏற்கமாட்டார்கள் என்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமல் அவர்கள் ஏற்றுக்கொண்ட கூட்டணி தலைமை, அவர்களை படுகுழியில் தள்ளியிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத், ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    முன்னதாக தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.
    தமிழ்நாட்டை ஆளும் தகுதி அ.தி.மு.க.வுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தேர்தல் முடிவு குறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதா அமைத்த நல்லரசு தொடரவும், அ.தி.மு.க. வின் அடிப்படை வாக்கு வங்கியை நிலைநாட்டியும், தமிழக சட்டமன்றப் பேரவையில் அ.தி.மு.க.வின் பெரும்பான்மையை உறுதி செய்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு முதற்கண் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



    பாராளுமன்ற பொதுத்தேர்தலில், எம்.ஜி.ஆர். தந்த வெற்றிச் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னமே தங்கள் இதயம் கவர்ந்த சின்னம் என்பதை எடுத்துக் கூறும் வகையிலும், ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அசைக்க முடியாத இரும்புக் கோட்டை என்பதை நிலைநாட்டும் வகையிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களுக்கும் வாக்களித்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு எங்கள் இதயமார்ந்த நன்றி.

    அகில இந்திய அளவில் பா.ஜ.க.வும் கூட்டணி கட்சிகளும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளாக தேச பக்தியும், மக்கள் தொண்டும் தனது இரு கண்களாகக்கொண்டு எழுச்சிமிகு நல்லாட்சியை நடத்திய பிரதமர் நரேந்திரமோடியின் உழைப்புக்குக் கிடைத்த சிறப்பான வெற்றி இது.

    இந்திய வாக்காளப் பெருமக்கள் உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் இந்தத் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகத்தை வலுப்படுத்தி இருக்கின்றார்கள். நம் தேசத்தின் குடிமக்கள் அனைவருமே பாராட்டுக்கும், வணக்கத்திற்கும் உரியவர்களே.

    தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டை ஆளும் தகுதி அ.தி.மு.க.வுக்கே உண்டு என்பதைக் காட்டுகின்றன. இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகளில், அ.தி.மு.க.வின் வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

    வாக்காளப் பெருமக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியை தொடர்ந்து வழங்குவோம் என்று உறுதி கூறுகிறோம். இன்னும் சிறப்புடன் பணியாற்றி, அனைத்துத் தொகுதி மக்களின் அன்பையும், நல்லாதரவையும் பெறுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    வெற்றி வாய்ப்பை பாராளுமன்றத் தேர்தலில் நாம் இழந்திருந்தாலும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வுக்கு எதிர்காலமே இல்லை என்று ஆரூடம் சொன்னவர்களின் கூற்றை அடியோடு புறக்கணிக்கும் வகையில், அ.தி.மு.க. வாக்கு வங்கி பத்திரமாக உள்ளது என்ற உண்மை நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

    அ.தி.மு.க.வினர் அனைவரும் ஓரணியில் திரண்டு, ஒற்றுமையாய் உழைக்க வேண்டிய நேரம் இது. தவறான வழிகாட்டுதல்களாலும், சுயநலம் கொண்டு தனி மனிதர்கள் சிலர் உருவாக்கிய தோற்றப் பிழைகளாலும் திசை மாறிய அ.தி.மு.க.வினர் அனைவரும் ஜெயலலிதாவின் உழைப்பையும், ‘எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் அ.தி.மு.க. மக்கள் தொண்டாற்றும் ’என்று அவர் சூளுரைத்ததையும் நினைவில்கொண்டு ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அ.தி.மு.க.வை காத்திட தொடர்ந்து உழைப்போம். வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெற்றுள்ளதையொட்டி பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றிப் பெற்றுள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ‘டுவிட்டரில்’ ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-



    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி பெற்ற வெற்றிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர், ஜனநாயகம் மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய கொள்கையின் அடிப்படையில் ஒரு முற்போக்கான அரசாங்கத்தை வழங்குவார் என்று நம்புகிறோம். விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ‘எடுத்த உறுதியை நிறைவேற்றி உள்ளோம்’ என்றும், ‘தி.மு.க.வின் மகத்தான வெற்றியை பார்க்க கருணாநிதி நம்முடன் இல்லையே...’ என்றும் தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மாபெறும் வெற்றி பெற்றதை அடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

    தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு மாலையில் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களது வரவேற்பை மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.



    பின்னர் அண்ணா அறிவாலய வளாகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    நாம் என்ன எதிர்பார்த்தோமோ அந்த வெற்றியை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய வாக்காளர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. அதேபோல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து பணியாற்றிய கூட்டணி கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றியைப் பற்றி நான் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நாம் களத்தில் இறங்குகின்ற நேரத்திலேயே ஒரு உறுதி எடுத்துக்கொண்டோம். கருணாநிதி இல்லாமல் நடைபெறுகின்ற தேர்தல் இந்த தேர்தல். எனவே, எப்படி இந்த தேர்தல் களத்தில் இறங்கப்போகின்றோம்?, எப்படி இந்த களத்தை சந்திக்கப்போகின்றோம்? என்ற தவிப்பு இருந்தது.

    கருணாநிதி நம்முடன் இருந்திருந்தால் என்னென்ன பயிற்சியை, என்னென்ன தேர்தல் பணி முறைகளை, என்னென்ன பாடங்களை நமக்கு கற்றுத்தந்திருப்பாரோ, அவற்றையெல்லாம் நாம் ஏற்கனவே அவரிடத்தில் இருந்து கற்றுக்கொண்ட காரணத்தினால், அவர் வழியில் நாம் பாடுபட்டு பணியாற்றி வெற்றி பெற்று இருக்கிறோம். அது மட்டுமல்ல இந்த வெற்றியை அவருடைய நினைவிடத்துக்கு சென்று அவருக்கு நாம் வெற்றி மாலையை சமர்ப்பிப்போம் என்று உறுதி எடுத்துக்கொண்டிருந்தோம். அதை நிறைவேற்றி உள்ளோம்.

    அந்த உறுதியை நிறைவேற்றக்கூடிய ஒரு நிலையை மக்கள் ஏற்படுத்தி தந்துள்ளனர். சட்டமன்ற இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் இன்னும் சில தொகுதிகளில் வாக்கு வித்தியாசத்தை பொறுத்தவரையில் இழுபறி நிலை இருந்து கொண்டிருக்கின்றது. இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் தங்களுடைய ஆட்சிக்கு ஆபத்து வந்து விடும் என்று கருதி, ஏதேனும் அதில் சூழ்ச்சி செய்யலாமா? சதி வலை பின்னலாமா? என்றெல்லாம் திட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

    எனவே அதை அறிந்து, புரிந்து அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்று தேர்தல் கமிஷனில் முறையிட்டு இருக்கிறோம். நிச்சயமாக அது நடக்காது என்று கருதுகிறோம்.

    எனவே, ஒரு மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கின்றோம். ஒரே ஒரு கவலை, கருணாநிதி இருந்து இதனை பார்க்கவில்லையே என்ற அந்த கவலை தான் என்னை ஆட்டி கொண்டிருக்கின்றது.

    இருந்தாலும் கருணாநிதி சிலைக்கு முன்பும், அவரை உருவாக்கிய அறிஞர் அண்ணாவின் சிலைக்கு முன்பும் வெற்றி பெற்றிருக்கக்கூடிய நம்முடைய வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தி.மு.க. சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா மற்றும் குடும்பத்தினருடன் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்றார். அங்கு கருணாநிதி நினைவிடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடத்தை சுற்றி வலம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றனர். இதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று இரவு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 
    ×