என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    திமுகவின் மக்களவை குழு தலைவராக டிஆர் பாலு எம்பியும், மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா எம்பியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு செய்யப்பட்டார். திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டார்.

    திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.



    இதேபோல் திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டார்.
    ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், நவீன் பட்நாயக் 29-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், காங்கிரசை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக உருவாகி உள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளை கைப்பற்றியது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புதிய அரசு வரும் 29-ம் தேதி பதவியேற்கும் என்றும், தொடர்ந்து 5வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் பிஜு ஜனதா தளம் தலைமை இன்று தெரிவித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்படுகிறார்.



    இந்த தேர்தலில் நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதியில் பாஜக வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஒடிசா முதல்வராக 2000ல் முதல் முறையாக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்றத் தேர்தலைப் பொருத்தவரை, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், கட்சியின் பாராளுமன்ற குழு தலைவராக மோடி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோடி வருகிற 30-ந்தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  

    இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்ற கட்சி தலைவராக மோடியின் பெயரை அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோர் முன்மொழிந்தனர்.



    இதன்மூலம் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட மோடி, அத்வானியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

    இதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கூட்டத்தில் பேசிய கூட்டணி கட்சி தலைவர்கள், மோடி பிரதமர் ஆவதற்கு ஆதரவு அளிப்பதாக கூறினர். மேலும் மோடிக்கு அனைத்து தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். 
    தமிழகத்தில் நடந்து முடிந்த 38 பாராளுமன்ற தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீதம் குறித்து பார்ப்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் பாராளுமன்றத்தில் பா.ஜனதா, காங்கிரசை தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்தது. அந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 1 கோடியே 79 லட்சத்து 83 ஆயிரத்து 168 ஓட்டுகள் கிடைத்தன. இது 44.34 சதவீதம் ஆகும்.

    கடந்த தேர்தலில் தி.மு.க. 34 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்தது. தி.மு.க.வுக்கு அப்போது 95 லட்சத்து 75 ஆயிரத்து 850 ஓட்டுகள் கிடைத்தன. இது 23.61 சதவீதம் ஆகும்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து அ.தி.மு.க. போட்டியிட்டது. அ.தி.மு.க. 20 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன.



    தி.மு.க. இந்த தேர்தலில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அ.திமு.க. 78 லட்சத்து 30 ஆயிரத்து 520 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது 18.5 சதவீதம் ஆகும். கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட இந்த தேர்தலில் அ.தி.மு.க. 1 கோடியே 1 லட்சத்து 52 ஆயிரத்து 648 வாக்குகளை இழந்துள்ளது.

    அதே நேரத்தில் தி.மு.க. தனது வாக்கு வங்கியை 23.61 சதவீதத்தில் இருந்து 32.78 சதவீதமாக உயர்த்தியுள்ளது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
    தேர்தல் முடிவுகள் மூலம் தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்து உள்ளதாக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்றுச் சிறப்புமிக்க, நாடும் ஏடும் போற்றும் நல்ல மகத்தான வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மனமுவந்து வழங்கியிருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அணுகுமுறைக்கு மக்கள் மத்தியில் சீரிய இடம் உருவாக்கப்பட்டிருப்பது இந்திய அளவில் போற்றுதலுக்கு உரிய பொருள் ஆகியிருக்கிறது.

    ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் தி.மு.க. கூட்டணி ஈர்த்திருக்கிறது. அத்தகைய மாபெரும் வெற்றியை அடைந்ததற்கு, தொடர்ந்து நல்லிதயங்களின் வாழ்த்துகள் பொழிந்த வண்ணம் உள்ளன.

    22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் 13 இடங்களை கழகம் கைப்பற்றி உள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் தி.மு.க பெறுகிறது. 1971, 2004 பாராளுமன்றத் தேர்தல்களில் கழகம் பெற்ற வெற்றிக்கு இணையான வெற்றி இது.

    சட்டமன்றத்தில் நம்முடைய பலம் 101ஆக உயர்கிறது. அ.தி.மு.க.வசம் இருந்த 12 தொகுதிகளை இடைத்தேர்தலில் தி.மு.க. கைப்பற்றியிருப்பது தமிழ்நாட்டின் இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.

    இவற்றை செரிமானம் செய்துகொள்ள முடியாத ஆட்சியாளர்களும் அரசியல் எதிரிகளும், ‘தி.மு.க.வின் நோக்கம் நிறைவேறவில்லை’ என தங்கள் புண்ணுக்குத் தாங்களே புணுகு தடவி புளகாங்கிதம் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் மிகவும் தற்காலிக இன்பத்திற்குத் தடையாக இருக்க நான் விரும்பவில்லை. நமக்கான பெரும்பணிகள் நிறைய காத்துக் கொண்டு இருக்கின்றன.


    தலைவர் கலைஞர் இல்லாத நிலையில், கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சுமக்க வேண்டிய கடுமையான பணியுடன், தலைவர் இல்லாத காரணத்தால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாகவும் கழகத்திற்கு இனி எதிர்காலம் இல்லை என்றும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக அவர் வருவார் இவர் வருவார் என்றும் சூழ்ச்சி எண்ணத்துடன் திட்டமிட்டு தி.மு.க.வை அழிக்க நினைத்த திரிபுவாத சக்திகளுக்கு ஜனநாயக ரீதியாக கொடுக்கப்பட்ட தக்க பதிலடிதான் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களங்களில் நமக்கு மக்கள் அளித்துள்ள இந்த அருமையான வெற்றி.

    மத்திய - மாநில ஆட்சியாளர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு துன்பத்தில் உழலும் தமிழ்நாட்டு மக்கள் நம்மை நம்பினர். பொதுக்கூட்டங்களில், நடைப்பயணங்களில், திண்ணைப் பிரசாரத்தில், தேநீர்க்கடை உரையாடலில் என நான் சென்ற இடமெல்லாம் தங்கள் வீட்டுப் பிள்ளையாக சகோதரனாக, குடும்பத்தில் ஒருவனாகக் கருதி ஓடோடி வந்து அரவணைத்து அன்பைப் பொழிந்தனர். ஆதரவை உறுதி செய்தனர். தமிழ்நாட்டு மக்களின் வற்றாத அன்பும் வாஞ்சைமிகு ஆதரவுமே வாக்குகளாக மாறி இந்த வெற்றியைத் தந்துள்ளது.

    மகத்தான இந்த வெற்றிக்கு நிச்சயமாக நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் வகுத்தளித்த வழியில், தேர்தல் களப்பணியில் தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்புடன் ஓயாமல் உழைத்த கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களாம் அன்பு உடன்பிறப்புகளும் இல்லாமல், இந்த வெற்றி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, வாக்கு எண்ணிக்கை முடியும்வரை உண்ணாமல் உறங்காமல் ஓய்வு கொள்ளாமல் உழைத்த உடன் பிறப்புகள் அனைவரின் முயற்சியாலும் கிடைத்த இந்த வெற்றியை உச்சி மோந்து மெச்சிப் பாராட்டிட தலைவர் கலைஞர் நம்மிடம் இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டதே என்ற ஏக்கத்துடன், அவரது நினைவிடத்தில், இந்த மகத்தான வெற்றியைக் காணிக்கையாக்குவதே எனது கடமை!

    எதற்காக இந்த வெற்றியைத் தமிழக மக்கள் நமக்கு வழங்கினார்களோ, என்ன வாக்குறுதிகளை நாம் மக்களிடம் அளித்தோமோ, அவர்களின் உத்தரவினைப் பெற்று நம் கடன் தொண்டூழியம் செய்வதே எனக் கொண்டு, நிறைவேற்றுகிற பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

    பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மக்கள் நலன் காக்கும் உரிமைக் குரலாக தி.மு.க. ஓங்கி ஒலிக்கும். மக்களுக்கெதிரான பிளவு சக்திகள் தமிழ்நாட்டில் தலையெடுக்காதவாறு விழிப்புடன் காவல்காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட கொள்கை தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். மாநில நலன்களும் உரிமைகளும் பறிபோகாமல் தடுக்கவும், பறிபோனவற்றை மீட்டெடுக்கவும் ஜனநாயகம் காக்கவும் அமைதியான அறவழியிலான போராட்டம் அயராமல் தொடரும்.

    மதநல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைக்கும் ‘தமிழ்நாடு வியூகத்தை’ பிற மாநிலங்களிலும் செயல்படுத்திட தி.மு.க. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

    தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோரின் அடிச்சுவட்டில், மக்களின் நலன் காக்கும் தி.மு.க.வின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும்!

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    தொடர்ந்து 2 தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பெற்றிருக்கும் தே.மு.தி.க.வுக்கு அதன் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் தேர்தலில் அக்கட்சிக்கு முரசு சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க. போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

    கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சுதீஷ் 3 லட்சத்து 21, 794 ஓட்டுகளும், விருதுநகரில் போட்டியிட்ட அழகர்சாமிக்கு 3 லட்சத்து 16,329 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.

    அதே நேரத்தில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட மோகன்ராஜ் ஒரு லட்சத்து 29,468 ஓட்டுகளும், திருச்சியில் போட்டியிட்ட இளங்கோவன் ஒரு லட்சத்து 61,999 ஓட்டுகளும் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளனர். அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா என வலுவான கூட்டணியில் இருந்தும் தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2011 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.மு.க. 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் சில மாதங்களிலேயே அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது.

    2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, பா.ம.க. கூட்டணியில் சேர்ந்து 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து 104 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. படுதோல்வியை சந்தித்தது. கட்சி தலைவர் விஜயகாந்தும் தோற்றுப் போனார்.

    தற்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 4 இடங்களிலும் தோல்வி என தொடர்ச்சியாக 3 தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. 2009-ல் தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் 10.1 ஆக இருந்தது. தற்போது 2.19 சதவீதமாக சரிந்துவிட்டது. இதனால் அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கவலை அடைந்துள்ளனர்.


    2005-ம் ஆண்டு மதுரையில் பிரமாண்ட மாநாட்டை நடத்தி கட்சி தொடங்கிய விஜயகாந்த் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக தே.மு.தி.க. இருக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்தே தேர்தலை சந்திக்கும் என்றார். அதன்படி 2006 சட்டமன்ற தேர்தலில் 232 தொகுதிகளில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டு 27 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகளை பெற்று அசத்தியது.

    விஜயகாந்தும் விருத்தாசலத்தில் வெற்றி பெற்றார். கட்சி தொடங்கிய ஒரு ஆண்டிலேயே தேர்தலை சந்தித்து 8.38 சதவீத வாக்குகளை பெற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    2009 பாராளுமன்ற தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 10.3 சதவீதமாக அதிகரித்தது. அதன்பின் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து 29 இடங்களை அக்கட்சி கைப்பற்றியது. ஆனால் இந்த தேர்தலில் கட்சியின் ஓட்டு சதவிகிதம் 7.9 ஆக குறைந்தது. 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியதோடு, வாக்கு சதவீதமும் 5.1 ஆக சரிந்தது. 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்று 104 தொகுதிகளில் போட்டியிட்டது.

    ஆனால் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததோடு, ஓட்டு சதவீதமும் 2.39 ஆக சரிந்தது. அக்கட்சி வெறும் 16 லட்சத்து34 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றது.

    தற்போது பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 4 தொகுதியிலும் தோற்றதோடு, வாக்கு சதவீதமும் 2.19 ஆக குறைந்துவிட்டது.

    மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெறுவதற்கு மாநிலத்தில் பதிவான வாக்குகள் 6 சதவீத ஓட்டுகளை ஒரு கட்சி பெற வேண்டும். ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும், அல்லது 6 சதவீத வாக்குகளையும் அல்லது 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒட்டு மொத்த சட்டசபை உறுப்பினர் இடங்களில் 3 சதவீத உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி ஆகும்.

    ஆனால் தொடர்ந்து 2 தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பெற்றிருக்கும் தே.மு.தி.க.வுக்கு அதன் அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் தேர்தலில் அக்கட்சிக்கு முரசு சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை.
    அ.தி.மு.க.வுடன் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் தமிழக பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவர் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி 5 தொகுதிகளில் போட்டியிட்டது.

    ஆனால் ஒரு இடத்தில் கூட பா.ஜனதா வெற்றி பெறவில்லை.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய மந்திரிசபையில் மோடி இடம் அளித்தார். இந்த தடவை தமிழகத்தில் இருந்து பா.ஜனதா எம்.பி.க்கள் ஒருவர் கூட இல்லை என்பதால் மத்திய மந்திரி சபையில் தமிழர்கள் இடம் பெறுவார்களா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

    ஆனால் தமிழகத்தின் முக்கியத்துவத்தை கருதி தமிழக பா.ஜனதா தலைவர்களில் யாராவது ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி அளிக்கலாமா? என்று மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் தமிழக பா.ஜனதா தலைவர்களை தொடர்பு கொண்டு பேசியதாக தெரிய வந்துள்ளது.

    அவரது அழைப்பின் பேரில் தமிழக பா.ஜனதா மூத்த தலைவர்கள் சிலர் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

    தமிழக பா.ஜனதா தலைவர்களில் யாருக்கு மத்திய மந்திரியாகும் வாய்ப்பு கிடைக்கும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து இல.கணேசன் கூறுகையில், “அதுபற்றி மோடிக்குதான் தெரியும். தமிழக பா.ஜனதா தலைவர்கள் ஒவ்வொருரையும் மோடி அறிந்து வைத்துள்ளார். எனவே அவர் சரியான முடிவு எடுப்பார்” என்றார்.


    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “பா.ஜனதா கட்டுக்கோப்பான அமைப்பாகும். மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என்றார்.

    தமிழிசை சவுந்தரராஜன் மேலும் கூறுகையில், “அ.தி.மு.க.வுக்கு மேல்-சபையில் 13 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். எனவே அதற்கேற்ப முடிவு எடுப்பார்கள். தமிழ்நாட்டில் உள்ள பா.ஜனதாவைச் சேர்ந்தவர்களை மத்திய மந்திரியாக்கினால் அவர்களை எம்.பி.யாக்க வேண்டிய தேவையாகும். இதுகுறித்தும் மேலிட தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்” என்றார்.

    பாராளுமன்ற மேல்-சபையில் எம்.பி.க்களாக இருக்கும் கனிமொழி (திமு.க.), லட்சுமணன், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்தினவேல் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு) ஆகிய 6 பேரின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24-ந்தேதியுடன் முடிகிறது. விரைவில் அவர்களுக்கு பதில் புதிய 6 எம்.பி.க்களை தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்ய உள்ளனர்.

    தற்போது சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். தி.மு.க. கூட்டணியில் வைகோ மற்றும் காங்கிரசுக்கு (மன்மோகன்சிங்) தலா ஒரு இடம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

    அதுபோல அ.தி.மு.க.வில் ஒரு மேல்-சபை எம்.பி. இடத்தை கேட்க பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் தமிழக பா.ஜனதா தலைவர்களில் ஒருவர் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளது.
    குஜராத்தை சேர்ந்த பாஜக வேட்பாளர் சி.ஆர்.பாட்டீல், பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

    இந்த தேர்தலில் நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை குஜராத் மாநில பாஜக வேட்பாளருக்கு கிடைத்துள்ளது. 

    குஜராத் மாநிலத்தின் நவ்சாரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.ஆர். பாட்டீல், 9,69,430 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தர்மேஷ்பாய் பீம்பாய் பட்டேல் 2,81,663 வாக்குகள் பெற்றார்.



    இதன்மூலம் சி.ஆர். பாட்டீல் 6 லட்சத்து 87 ஆயிரத்து 767 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதேபோல், மேலும் 2 பா.ஜ.க. வேட்பாளர்கள் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 

    அரியானாவின் கர்னால் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சஞ்சய் பாட்டியா 6,54,269 வாக்குகள் வித்தியாசத்திலும், ராஜஸ்தானின் பில்வாரா தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சுபாஷ் சந்திர பகேரியா 6,10,920 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் வாரிசுகள் பலர் வெற்றிபெற்றுள்ளனர். அவர்கள் யார் என்பதை பார்ப்போம்...
    சென்னை:

    தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் வாரிசுகள் பலர் வெற்றிபெற்றுள்ளனர்.

    தூத்துக்குடி தொகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி வெற்றிபெற்றார். அவர் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    மத்திய சென்னை தொகுதியில் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் பா.ம.க. வேட்பாளர் சாம்பாலை விட 3 லட்சத்து 1520 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

    தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெயவர்தனைவிட 2 லட்சத்து 62 ஆயிரத்து 223 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

    வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை விட 4 லட்சத்து 60 ஆயிரத்து 691 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


    தேனி தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத் குமார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை விட 76 ஆயிரத்து 693 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

    ஆரணி தொகுதியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் அ.தி.மு.க. வேட்பாளர் ஏழுமலையை 2 லட்சத்து 30 ஆயிரத்து 806 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை விட 3 லட்சத்து 32 ஆயிரத்து 142 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி, தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை விட 3 லட்சத்து 99 ஆயிரத்து 919 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    தர்மபுரி தொகுதியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி தி.மு.க. வேட்பாளர் செந்தில் குமாரை விட 63 ஆயிரத்து 460 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.

    மதுரை தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசனை விட 1 லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.

    திருநெல்வேலி தொகுதியில் சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பண்டியன் தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியத்தை விட 1 லட்சத்து 85 ஆயிரத்து 457 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் யார்? என்பதை தெரிந்து கொள்வோம்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இதில் பல தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேலுசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவைவிட கூடுதலாக 5 லட்சத்து 38 ஆயிரத்து 972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    வேலுசாமி பெற்ற வாக்குகள் 7 லட்சத்து 46,523 ஆகும். ஜோதிமுத்துவுக்கு கிடைத்தது 2 லட்சத்து 7 ஆயிரத்து 551 ஆகும்.

    இதற்கு அடுத்தபடியாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 5 லட்சத்து 7 ஆயிரத்து 955 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    டி.ஆர்.பாலுவுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 281 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வைத்திலிங்கத்துக்கு 2 லட்சத்து 85 ஆயிரத்து 326 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.

    வடசென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட டாக்டர் கலாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் மோகன்ராஜாவை 4 லட்சத்து 61 ஆயிரத்து 518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    டாக்டர் கலாநிதிக்கு 5 லட்சத்து 90 ஆயிரத்து 986 ஓட்டுகளும், மோகன்ராஜிக்கு ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 468 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.

    திருச்சி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 4 லட்சத்து 59 ஆயிரத்து 286 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    திருநாவுக்கரசுவுக்கு மொத்தம் 6 லட்சத்து 21 ஆயிரத்து 285 ஓட்டுகளும், அவரை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட இளங்கோவனுக்கு ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 999 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.

    கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 4 லட்சத்து 20,546 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    ஜோதிமணிக்கு மொத்தம் 6 லட்சத்து 95,697 ஓட்டுகளும் அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தம்பிதுரைக்கு 2 லட்சத்து 75,151 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.


    பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தர் 4 லட்சத்து 3,518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

    பாரிவேந்தருக்கு 6 லட்சத்து 83,697 ஓட்டுகளும் அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிவபதிக்கு 2 லட்சத்து 80,179 ஓட்டுகளும் கிடைத்துள்ளது.

    தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்து 47,209 ஓட்டுகள் வித்தியாசத்திலும், கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கவுதமசிகாமணி 3 லட்சத்து 99,919 ஓட்டுகள் வித்தியாசத்திலும், அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 3 லட்சத்து 28,956 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் 3 லட்சத்து 1,520, திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் 3 லட்சத்து 56,955, திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை 3 லட்சத்து 4,187 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

    அவருக்கு 5 லட்சத்து 229 ஓட்டுகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகருக்கு 4 லட்சத்து 97,010 ஓட்டுகளும் கிடைத்துள்ளது. வித்தியாசம் 3,219 ஓட்டுகள் ஆகும்.
    காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வென்றது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் போபால் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் சாத்வி பிரக்யா சிங் தாக்குரும், காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும் போட்டியிட்டனர்.

    இதில் சாத்வி பிரக்யா சிங் 8,66,482 வாக்குகளும், திக்விஜய் சிங் 5,01,660 வாக்குகளும் பெற்றனர். சாத்வி பிரக்யா சிங் 3,64,822 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



    இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வென்றது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நாட்டின் தற்போதைய நிலையில் காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வெல்வதா? இது எனக்கு வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
    அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. ஆட்சியில் தொடர வேண்டும் என்பதை வெளிக்காட்டியுள்ளன. நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் வாக்களித்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. பெற்றுள்ள வெற்றி தற்காலிகமானதுதான்.

    தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை. 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமரும்.


    மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது. ஜூன் 3-ந்தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று துரைமுருகன் கூறி இருந்தார். ஆனால் அதுபோல் எதுவும் நடக்காது. அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்று நான் கூறி இருந்தேன்.

    துரைமுருகன் சொல்வது போல் நடக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என்று நான் கேள்வி எழுப்பி இருந்தேன்.

    அவர் சொன்னது போல் எதுவும் நடக்கவில்லை. எனவே, துரைமுருகன் தனது பதவியில் இருந்து விலகுவாரா?

    தினகரனை பொறுத்தவரை மக்கள் அவரை நிராகரித்து விட்டனர். உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் தமிழக திட்டங்கள் பற்றி மேற்கொண்ட தவறான பிரசாரமும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம்.

    எதிர் காலத்தில் இந்த தேர்தல் கூட்டணி தொடருமா என்பது பற்றி நான் எதுவும் கூற முடியாது. அது கட்சியின் கொள்கை சார்ந்த முடிவாகும்.

    பா.ஜனதாவுடன் சேர்ந்ததால் அ.தி.மு.க. தோற்றதா? என்பது போன்ற யூகமான கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×