என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி பசும்பொன் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்.
இவர் தனது தந்தை இறந்த நிலையில் அவரின் பெயரில் உள்ள காலி இடத்தை தனது பெயரில் மாற்றுவதற்காக பட்டா கோரி வ.புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் பட்டா வழங்காமல் அவரை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலரான சிவராமலிங்கம் (வயது 51) பட்டா வழங்குவதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அனைத்து சான்றிதழ்களும் சரியாக இருந்தும் பட்டா வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்டதால் மகேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத அவர் இது தொடர்பாக விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள் 3 ஆயிரத்தை வ.புதுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சிவராமலிங்கத்திடம், மகேந்திரன் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரம், ராமலிங்கபுரம் அருப்புக்கோட்டை அருகே குருந்தமடம் ஆகிய கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்து அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொது சுகாதாரத்திற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வறுமையில் இருப்பவர்கள் எந்த அளவிற்கு வாழ்வாதாரம் இழந்து சிரமப்படுவார்கள் என்பதை எண்ணி அதற்கான திட்டங்களை வழங்கி வருகிறார்.
கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வருகிறார். இம்மாவட்டத்தில் முதல் கட்டமாக 20 இடங்களில் அம்மா கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போது சங்கரலிங்கபுரம், ராமலிங்கபுரம், குறும்படம், செட்டிகுறிச்சி, அருப்புக்கோட்டையில் 3-வது வார்டு, திருச்சுழியில் வெள்ளையாபுரம் என 6 இடங்களில் மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள இடங்களிலும் படிப்படியாக இந்த வசதி செய்து தரப்படும். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசு தொகை ரூ.2500 வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழக மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் வாழ வேண்டுமென்பதே ஜெயலலிதாவின் எண்ணமாகும். அதே வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து சிகிச்சை முறைகளை பார்வையிட்ட அமைச்சர் 7 கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகங்களையும், 12 கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவியையும் வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் விஜயகுமரன், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சருக்கு கிராம மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள செல்லையாபுரம், ரெங்கையன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் திருச்சுழி, அருப்புக்கோட்டை, பந்தல் குடி பகுதிகளில் உள்ள நூற்பாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களை தினமும் அழைத்துச் செல்ல நூற்பாலைகளில் இருந்து மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று காலை திருச்சுழி பகுதியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கெண்டு மினி பஸ் புறப்பட்டது. மாயூர்நாதம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி பஸ்சை ஓட்டினார்.
திருச்சுழி-கமுதி ரோட்டில் உள்ள பனையூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் மினி பஸ் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மினி பஸ்சில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் செல்லையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மில் தொழிலாளிகள் பூசையா (வயது 29), ஸ்ரீகாந்த் (18) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பஸ்சில் பயணம் செய்த வினிதா (21), பாக்கியசெல்வி (25), காந்திமதி (50), சூரம்மாள் (25), விஜயகாந்த் (30), சத்தியராஜ் (35), மாதவன் (18), சின்னக்காள் (30) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இவர்கள் திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி பகுதிகளில் உள்ள நூற் பாலைகளில் இருந்து இயக்கப்படும் மினி பஸ்கள் சாலை விதிகளை பின்பற்றுவதில்லை என்றும், அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து நூற்பாலை மினி பஸ்களை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், அக்கட்சி நாடாளுமன்ற குழு துணை தலைவருமான கனிமொழி எம்.பி. நேற்று சிவகாசியில் நடந்த ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையொட்டி சிவகாசி பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் பட்டாசு உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பட்டாசு தொழில் அதிபர்கள் ராஜசேகர், ஆசைத்தம்பி, அரசன் கணேஷ்குமார், ராஜேஷ், விநாயக மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பட்டாசு தொழிலை காக்கவும், பட்டாசுகளை வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யவும், நீரி அமைப்பை கலைக்க மத்திய அரசை வலியுறுத்தவும் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதில் அளித்து கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முடிவில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. நாடு முழுவதும் 1 கோடி பேர் பட்டாசு தொழிலை நம்பி இருக்கிறார்கள். சிலர் அவசரமாக எடுத்த முடிவுகளால் இந்த தொழில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சீனபட்டாசு கள்ளத்தனமாக விற்பனை செய்தபோது அதை தடுக்க நானும் கையெழுத்திட்டேன். பட்டாசு தொழிலுக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் அதற்கு தீர்வு காண நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுத்துள்ளது. பசுமை பட்டாசு குறித்து இன்னும் தெளிவான முடிவுகளை நீரி அமைப்பு அறிவிக்கவில்லை.
பட்டாசு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவேன். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பட்டாசு கொண்டு செல்ல ஏற்பாடு செய்வேன். இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது. தி.மு.க. ஆட்சி அமைக்கும். அப்போது பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் ஸ்டாலின் தீர்த்து வைப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். திருத்தங்கலில் உள்ள ஒரு மண்டபத்தில் பட்டாசு தொழிலாளர்களுடன் கனிமொழி கலந்துரையாடினார்.
அப்போது, “கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் அப்போது மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் இப்போது பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுப்போம் என அறிவித்து இருக்கிறார்கள். இவர்கள் ரூ.20 ஆயிரம் கொடுத்தாலும் இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது” என்று கூறினார்.
பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
பட்டாசு தொழில் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் கூட தமிழக அரசு பேசவில்லை. பட்டாசு தொழிலை பாதுகாக்க மு.க.ஸ்டாலின் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எனது சுற்றுப்பயணத்தின்போது நான் அதிக அளவில் மக்களை சந்தித்து வருகிறேன். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இந்தியா ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டும் என்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. யார் கட்சி ஆரம்பித்தாலும் தி.மு.க.வுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. இந்த பகுதியில் ஒரு ரெயில்வே பாலம் அமைக்க 10 வருடமாக இப்பகுதி மக்கள் போராடுகிறார்கள். முதல்-அமைச்சர் அடிக்கல் நாயகனாகத்தான் இருக்கிறார். அவரால் எந்த திட்டமும் கொண்டுவரமுடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






