என் மலர்
செய்திகள்

திருச்சுழி அருகே விபத்து: மினி பஸ் கவிழ்ந்து மில் தொழிலாளர்கள் 2 பேர் பலி
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள செல்லையாபுரம், ரெங்கையன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் திருச்சுழி, அருப்புக்கோட்டை, பந்தல் குடி பகுதிகளில் உள்ள நூற்பாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களை தினமும் அழைத்துச் செல்ல நூற்பாலைகளில் இருந்து மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று காலை திருச்சுழி பகுதியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கெண்டு மினி பஸ் புறப்பட்டது. மாயூர்நாதம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி பஸ்சை ஓட்டினார்.
திருச்சுழி-கமுதி ரோட்டில் உள்ள பனையூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் மினி பஸ் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மினி பஸ்சில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் செல்லையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மில் தொழிலாளிகள் பூசையா (வயது 29), ஸ்ரீகாந்த் (18) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பஸ்சில் பயணம் செய்த வினிதா (21), பாக்கியசெல்வி (25), காந்திமதி (50), சூரம்மாள் (25), விஜயகாந்த் (30), சத்தியராஜ் (35), மாதவன் (18), சின்னக்காள் (30) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இவர்கள் திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி பகுதிகளில் உள்ள நூற் பாலைகளில் இருந்து இயக்கப்படும் மினி பஸ்கள் சாலை விதிகளை பின்பற்றுவதில்லை என்றும், அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து நூற்பாலை மினி பஸ்களை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






