என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகரில் சொக்கநாதர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது உண்டு. நேற்று இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் பணியாளர்கள் கோவிலை பூட்டி சென்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சொக்கநாதர் கோவில். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலின் நிர்வாக அதிகாரியாக தேவி செயல்பட்டு வருகிறார்.

    தினமும் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது உண்டு. நேற்று இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் பணியாளர்கள் கோவிலை பூட்டி சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கோவிலில் வழிபாடு நடத்த அர்ச்சகர் வந்தார். அவர் கோவிலின் முன்பக்க கதவு பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு உள்ள சி.சி.டி.வி. கேமரா சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து கோவிலுக்குள் சுற்றிப் பார்த்த போது பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பயணம் கொள்ளை போனது தெரிய வந்தது. ஆனால் கொள்ளை போன நகைகள், பணத்தின் மதிப்பு தெரியவில்லை.

    இதுகுறித்து பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    யாரோ மர்ம மனிதர்கள் நள்ளிரவு நேரம் கோவில் பூட்டை உடைக்காமல் காம்பவுண்டு சுவரை தாண்டி உள்ளே குதித்து வந்துள்ளனர். அவர்கள் சி.சி.டி.வி. கேமராவை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

    அதன் பிறகு தட்சிணா மூர்த்தி சன்னதி முன்பு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    நகரின் மைய பகுதியில் உள்ள கோவிலில் மர்ம மனிதர்கள் இரவில் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த கோவிலில் இரவு காவலர் பணியில் உள்ளார். ஆனால் அவருக்கு கொள்ளை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

    இது தொடர்பாக விருதுநகர் பஜார் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தட்சிணாமூர்த்தி சன்னதி உண்டியலை மட்டும் உடைத்து பணம்- நகை எடுத்துச் சென்றுள்ளனர்.

    மூல தெய்வமான சொக்கநாதர் சன்னதி உண்டியலில் அவர்கள் கைவைக்கவில்லை. இதற்கு காரணம் என்ன என்பது மர்மமாக உள்ளது.

    சிவன் உண்டியலை தொடுவதற்குள் ஏதாவது சத்தம் கேட்டு அவர்கள் வெளியேறி விட்டார்களா?அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் விருதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    அருப்புக்கோட்டையை அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள சாலியர் மகாஜன பரிபாலன சபை அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையை அடுத்த புளியம்பட்டி அருகே உள்ள சாலியர் மகாஜன பரிபாலன சபை அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் இந்த முகாமில் முதல் தவணையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் மருத்துவ அலுவலர் ராஜேஸ் கண்ணன், நகர் நல மருத்துவர் கோமதி ஆகியோரது மேற்பார்வை மற்றும் ஆலோசனையின்படி பொதுமக்களுக்கு செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர். முகாமிற்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ராஜபாண்டி, அய்யப்பன், சரத்பாபு, முத்துக்காமாட்சி, சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். இந்த முகாமில் மொத்தம் 233 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சிவகாசி அருகே டீக்கடையை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி கட்டளைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள்சாமி (வயது 37) என்பவர் இரட்டைபாலம்-கல்மண்டபம் ரோட்டில் தகர செட் அமைத்து அதில் டீக்கடை நடத்தி வந்தார். இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அடுத்த நாள் காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த பணம், சிகரெட், பிஸ்கட் மற்றும் பொருட்கள் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள் சாமி இதுகுறித்து சிவகாசி டவுன் குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சுழி அருகே கடப்பாரையால் தாக்கி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள வடக்கு நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 63). இவர் மைக்செட், சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.

    அதே ஊரைச் சேர்ந்தவர் வள்ளிமுத்து (45). இவரும் அதே தொழில் செய்து வந்ததால் இருவருக்குமிடையே அடிக்கடி மோதல் இருந்து வந்தது.

    தொழில் போட்டி காரணமாக அதே ஊரில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு இருவரும் பங்கு போட்டு தகராறு செய்து வந்தனர். இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுவது உண்டு.

    நேற்று பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு முன்பாக உள்ள தள்ளுவண்டியில் படுத்திருந்தார். சிறிது நேரம் கழித்து அந்த வழியே சென்றவர்கள் தள்ளுவண்டியில் பாலசுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பரளச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பாலசுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையாளி யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    இதில் முன் விரோதம் காரணமாக வள்ளிமுத்து தான் கடப்பாரையால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

    வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நித்திய கல்யாணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சுப்ரமணியபுரம், அன்பின் நகரம், பாறைப்பட்டி, பூசாரி நாயக்கன்பட்டி, சிப்பிபாறை, சத்திரம், குகன்பாறை, துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, அம்மையார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 4,500 ஏக்கர் பரப்பில் மானாவாரி பயிராகவும், 500 ஏக்கர் பரப்பில் நீர் பாசன முறையிலும் நித்தியகல்யாணியை இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

    எந்த விதமான தட்பவெப்ப நிலைகளிலும் வாடாமல் வளர்ந்து பூத்துக்குலுங்கும் தன்மையில் உள்ளதால் இதற்கு நித்தியகல்யாணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எல்லா தட்பவெப்பநிலையிலும் வளருவதால் இதனை விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.

    நித்தியகல்யாணியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்க இந்த செடியை பயன்படுத்துகின்றனர்.

    இந்த செடி நடப்பட்டு 3 மாதத்தில் பலன் தரக்கூடியது ஆகும். இந்த செடியின் இலை, பூ, தண்டு முதல் வேர் வரை அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. பராமரிப்பு செலவும் மிக குறைவானதாகும்.

    இதுகுறித்து விவசாயி செந்தாமரை கூறியதாவது:-

    வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நித்திய கல்யாணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இங்கு சாகுபடி செய்யப்படும் செடிகள் இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனாவுக்கு முன்பு வரை கிலோ ரூ.70-க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது ெகாரோனா காரணமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் நித்திய கல்யாணி செடிகள் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைந்துள்ளதாலும், ஏற்றுமதி இல்லாததாலும் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம்.


    காமராஜர் குறித்த சான்றுகளை ஆவணப்படுத்தி அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பதே தன்னுடைய நோக்கம் என கூறுகிறார் எஸ்.பி.கணேசன்.
    விருதுநகர்:

    அன்று பழைய ராமநாதபுரம் ஜில்லாவுடன் விருதுபட்டி இணைந்து இருந்தது. தற்போது விருதுநகராக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த பகுதி பெரும்பாலும் தீப்பெட்டித் தொழில் மற்றும் பட்டாசுத் தொழிலையே முதன்மையாக கொண்டுள்ளது. இந்த பகுதியில் பிறந்த கர்மவீரர் காமராஜர், தனது ஆட்சிக்காலத்தின்போது கொண்டு வந்த இலவச மதிய உணவு திட்டம், அப்போது அங்கிருந்த ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளின் பசியைப் போக்க வழிவகை செய்தது. இவர் கொண்டுவந்த நீர்ப்பாசனத் திட்டங்கள் இன்றளவும் தமிழகத்தின் நீராதாரம், விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்கு பேருதவியாக உள்ளன.

    தமிழக மக்களின் நலனுக்காகவும் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் காமராஜர் எவ்வளவோ அரும்பணிகளை செய்திருக்கிறார். தனக்கென வாழாமல், மக்கள் சேவைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் காமராஜர். அவரது பிறந்த நாளான இன்று, அவரது அருமை பெருமைகளை அனைத்து தரப்பினரும் நினைவுகூர்ந்தவண்ணம் உள்ளனர். 

    காமராஜரின் தொண்டர் எஸ்.பி.கணேசன்

    இந்த நன்னாளில், காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரைச் சேர்ந்த எஸ்.பி.கணேசன் என்பவர், காமராஜரின் சாதனைகளையும் அதன் விவரங்களையும் ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்துவதைப் பற்றி பார்ப்போம்...

    தலைவர்களுக்கு அரசு சார்பிலோ, சம்பந்தப்பட்ட அமைப்புகள் சார்பிலோ நினைவிடங்கள் அமைக்கப்பட்டு, பராமரித்து வருவதை குறித்து நாம் அறிந்திருப்போம். ஆனால், எஸ்.பி.கணேசன் தனது சொந்த முயற்சியில், காமராஜர் தொடர்பான சான்றுகளையும், அவரது சாதனைகளையும், நடைமுறைபடுத்திய திட்டங்களையும், அவரின் அரிய புகைப்படத் தொகுப்புகளையும் தேடித் தேடி கண்டுபிடித்து அவற்றைத் தொகுத்து வரலாற்று சின்னங்களாக பாதுகாக்கிறார். இதற்காக தனது சொந்த வீட்டையே ஒரு அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறார். காமராஜர் காட்சியகத்தை மக்கள் இலவசமாக பார்வையிடலாம். 

    ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாள் விழா நடத்தி பள்ளி, மாணவ மாணவிகளிடையே போட்டிகளை நடத்தி பரிசுகளையும் வழங்கிவருகிறார். இதன்மூலம் காமராஜரைப் பற்றி மாணவர்கள் அறியும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யலாம் என்று அவர் கூறுகிறார்.

    மாபெரும் பொருட்செலவில் தான் அமைத்திருக்கும் நினைவகத்தில் கோவில்களில் உள்ளதுபோன்று விமானம், தூண்கள், மேடையில் அமர்ந்த கோலத்தில் காமராஜர் சிலை மற்றும் அதைச்சுற்றிக் கீழே தண்ணீரில் வண்ண வண்ண மீன்கள் என்றெல்லாம் அமைத்து அசத்தியிருக்கிறார் எஸ்.பி.கணேசன். 

    சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், வ.உ.சிதம்பரம், கக்கன் போன்றவர்களின் குடும்பங்களிலிருந்து சிலரை, காமராஜர் காட்சியக திறப்பு விழாவின் போது மரியாதை செய்து கவுரவப்படுத்தியுள்ளார். இதன்மூலம், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பெருந்தலைவர் காமராஜரின் பெருந்தொண்டராக வாழ்கிறார் எஸ்.பி.கணேசன்.

    காமராஜர் குறித்த சான்றுகளை ஆவணப்படுத்தி அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பதே தன்னுடைய நோக்கம் என கூறுகிறார் எஸ்.பி.கணேசன். இது போன்ற சமூகத் தொண்டாற்றும் நபர்களை அரசு அடையாளம் கண்டு அவர்களுக்கான அங்கீகாரங்களை வழங்க வேண்டும்.
    சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலத்த காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    விருதுநகர்:

    சிவகாசி பழனியாண்டவர் தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 70). இவர் சாத்தூர் அருகே சிந்நபள்ளி கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு பேன்சி ரக பட்டாசு வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் இங்கு பணியாற்றிய சுந்தரகுடும்பன்பட்டியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் (25) பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக சிவகாசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகேஷ் கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாத்தூர் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி கூறியதாவது:-

    மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு 25 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் மூலம் கடனுதவி பெற விரும்புபவர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட அதிகபட்சம் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தகுதி உடையவர் ஆவர். சிறப்புப்பிரிவினரான ஆதிதிராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு வயது வரம்பு 45 வரைதளர்த்தப்பட்டுள்ளது.

    குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    திட்டத்தின் கீழ் உற்பத்தித்தொழில்களுக்கு அதிகபட்ச முதலீட்டு தொகை ரூ.15 லட்சமும் சேவை மற்றும் வியாபாரத்தொழில்களுக்குகளுக்கு அதிக பட்ச முதலீட்டுதொகை ரூ.5 லட்சமும் கடனுதவியாக வழங்கப்படுகிறது. இந்த கடனுக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 2.5 லட்சம் மானியமாக பெற்று பயனடையலாம். ஜவுளி வியாபாரம், பலசரக்கு மற்றும் அனைத்து வியாபாரம் சார்ந்த தொழில்கள் உள்பட சேவை சார்ந்த தொழில்கள் தொடங்கலாம். மேலும் கொரோனா காரணமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்து நேரடியாக வங்கிக்கு பரிந்துரைக்கப்படும். நடப்பு நிதியாண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டு வருவதால் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இதற்கான இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் விருதுநகர் (045 62 282 739,252 308) என்ற முகவரியில் அணுகி பயன் பெறலாம்.


    தாயில்பட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாயில்பட்டி:

    ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மஞ்சள்ஓடைபட்டியில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக ஏழாயிரம் பண்ணை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அழகுஜோதி சோதனை நடத்தியதில் ராமையா (வயது65) என்பவர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 40 கண்மாய்களும் நீர் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் பெரியகுளம் கண்மாய், விராகசமுத்திரம் கண்மாய், பூரிப்பாறை குளம், புங்கங்குளம், குணவந்த நேரி, பாதரங்குளம், வில்லவராயன்குளம் உள்பட 40 கண்மாய்கள் உள்ளன. இந்தநிலையில் கூமாப்பட்டி நெடுங்குளம் பகுதியில் உள்ள புங்கங்குளம் கண்மாயை நம்பி 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பெய்த தொடர்மழையினால் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள், ஆறுகளில் நீர்வரத்து தொடர்ச்சியாக வந்து கொண்டு இருக்கிறது.

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 40 கண்மாய்களும் நீர் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நெடுங்குளம் பகுதியில் உள்ள புங்கங்குளம் கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த கண்மாயில் ஓரளவிற்கு நீர் உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த கண்மாயை நம்பியுள்ள விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் இந்த கண்மாயில் உள்ள மதகின் ஷட்டர் பழுதாகி காணப்படுகிறது.

    இதனால் இந்த கண்மாயில் இருக்கிற நீர் தொடர்ச்சியாக வெளியேறி வீணாகி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து கண்மாயில் உள்ள மதகுகளை சீரமைத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருத்தங்கலைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மீது ரூ.12 கோடி மோசடி செய்ததாக சென்னை நிதி நிறுவன பெண் அதிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    விருதுநகர்: 

    சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி. இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் மூலம் பலருக்கும் கடன் வழங்கி உள்ளார்.

    இந்த நிலையில் அகிலாண்டேஸ்வரி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். 

    அதில், சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் என்னிடம் அடிக்கடி பணம் வாங்கி செலுத்துவது வழக்கம். தற்போது  ரூ.12 கோடி வரை பாக்கி வைத்துள்ளார். 

    இதனை திருப்பி கேட்ட போது பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், தி.மு.க. பிரமுகரை அழைத்து விசாரணை நடத்தினார். இன்று காலையும் அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    தி.மு.க. பிரமுகர் ஏற்கனவே அ.தி.மு.க.வில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதியாக இருந்தவர். சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விருதுநகர் மாவட்டத்தில் 495 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 30 கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45,112 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44,050 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 495 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

    நேற்று மாவட்டத்தில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட பட்டியலில் 7 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 30 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×